என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • ரஜினியுடன் லட்சுமி, ஸ்ரீபிரியா, சுருளிராஜன், டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர்.
    • படத்தில் ரஜினிக்கு முரட்டு இளைஞன் வேடம்.

    ரஜினி-லதா 1980-ம் ஆண்டு மத்தியில் காதல் ஜோடியாக சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தனர். தினமும் அவர்கள் போனில் பேசிக் கொள்வார்கள். நேரம் கிடைக்கும் போது சேர்ந்து விழாக்களுக்கு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தனர். 3.7.1980-ல் வெளியான "காளி" படத்தின் முதல் காட்சியை அவர்கள் இருவரும் சேர்ந்து பார்த்தனர்.

    இப்படி காதலில் ரஜினி தீவிரமாக இருந்தாலும் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தினார். அந்த சமயத்தில் அவரிடம் முக்தா சீனிவாசன் இயக்கிய "பொல்லாதவன்" படமும், ஏ.வி.எம். நிறுவனத்தின் "முரட்டுக் காளை" படமும் கைவசம் இருந்தன. அதில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பொல்லாதவன் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், சிம்லா நகரங்களில் படமாக்கப்பட்டது.

    முதலில் இந்த படத்துக்கு எரிமலை என்று பெயர் வைத்திருந்தனர். பிறகு சென்டிமெண்ட் காரணமாக அந்த படத்தின் பெயரை பொல்லாதவன் என்று மாற்றி இருந்தனர். அந்த படத்தில் ரஜினியுடன் லட்சுமி, ஸ்ரீபிரியா, சுருளிராஜன், டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தில் ரஜினிக்கு முரட்டு இளைஞன் வேடம்.

    எஸ்டேட் ஒன்றில் வேலைக்கு செல்லும் லட்சுமி, ரெயிலில் வரும்போது பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் ஒரு மர்ம மனிதனை பார்த்து விடுவார். அவர் பற்றிய தகவல்களை பின்னணியாகக் கொண்டு பொல்லாதவன் படம் தயாரிக்கப்பட்டு இருந்தது.

    பொல்லாதவன் படத்தின் பெரும்பாலான காட்சிகள் மைசூர் பகுதிகளில் படமாக்கப் பட்டன. இதற்காக ரஜினி, ஸ்ரீபிரியா, லட்சுமி ஆகியோர் பெங்களூரில் தங்கியிருந்து படப்பிடிப்புக்கு சென்று வந்தனர். பெங்களூரில் இருந்து காரில் புறப்படும்போது லட்சுமியிடம் ரஜினி ஒவ்வொரு பகுதியாக காட்டி அங்கெல்லாம் தான் சிறுவயதில் சுற்றி அலைந்ததை தெரிவித்தார்.

    ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அங்கு கூலி வேலை செய்ததை நினைவுப்படுத்தினார். அந்த கூலி வேலைக்கு தினமும் 3 ரூபாய் கிடைத்ததையும் ரஜினி சொன்ன போது லட்சுமிக்கும், ஸ்ரீபிரியாவுக்கும் பிரமிப்பாக இருந்தது. ஒரு தடவை பெங்களூரில் லட்சுமி நடித்து வெளியான படத்தை பார்க்க கூலி வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் 15 ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு சென்றதை கூறினார்.

    ரஜினி சிறுவயதில் கஷ்டப்பட்டதை எதையும் மறைக்காமல் சொன்னதை பார்த்து லட்சுமிக்கு மேலும் வியப்பாக இருந்தது. இந்த படத்தின் "அதோ வாரான்டி வாரான்டி.... வில் ஏந்தி ஒருத்தன்...." பாடல் காட்சி காஷ்மீரில் படமாக்கப்பட்டது. அங்குள்ள ஏரியில் படமாக்கப்பட்டபோது ஒளிப்பதிவாளர் கர்ணனின் மோதிரம் தண்ணீருக்குள் தவறி விழுந்து தொலைந்து போனதை அறிந்து ரஜினி வருத்தப்பட்டார்.

    தமிழ்நாட்டுக்கு திரும்ப டெல்லிக்கு வந்ததும் அவர் கர்ணனை அழைத்துச் சென்று அதே போன்று ஒரு மோதிரம் வாங்கிக் கொடுத்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினார். இதைப் பார்த்து முக்தா சீனிவாசனும், அவரது குடும்பத்தினரும் ரஜினியின் பெருந்தன்மையை நினைத்து ஆச்சரியப்பட்டனர்.

    1980-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியான பொல்லாதவன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற "நான் பொல்லாதவன்... பொய் சொல்லாதவன்..." என்ற பாடல் அவரது ரசிகர்களிடம் அமோக ஆதரவை பெற்றது. இந்த பாடலை ரஜினிக்காகவே சிறப்பான வரிகளை அமைத்து கண்ணதாசன் எழுதி இருந்தார். அந்த பாடல் வரிகளை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும்....

    நான் பொல்லாதவன்....

    பொய் சொல்லாதவன்...

    என் நெஞ்சத்தில்

    வஞ்சங்கள் இல்லாதவன்...

    வீண் வம்புக்கும்

    சண்டைக்கும் செல்லாதவன்

    கை கட்டி, வாய்மூடி, யார் முன்னும்

    நான் நின்று ஆதாயம் தேடாதவன்,

    அந்த ஆகாயம் போல் வாழ்பவன்…

    வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும்

    வீரத்தை கண்டேனடி…

    ஞானத்தை பாதிக்கும்

    மானத்தை சோதித்தால்

    நான் என்ன செய்வேனடி…

    நானுண்டு வீடுண்டு வாழ்வுண்டு நாடுண்டு

    என்றேதான் வாழ்ந்தேனடி

    நாளாக நாளாக தாளாத கோபத்தில்

    நான் வேங்கை ஆனேனடி...

    இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக

    இதுபோல ஆனேனடி…- என்ற அந்த பாடலில் ரஜினியின் ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது.

    இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி நடித்து வந்த "முரட்டுக்காளை" படமும் தமிழக ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. முரட்டுக்காளை படத்தில் நடிப்பதற்காக ரஜினிக்கு ஏ.வி.எம். நிறுவனத்தின் அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் 3 மடங்கு அதிக சம்பளம் கொடுத்தார். அது மட்டுமின்றி 9453 என்ற எண் கொண்ட வெளிநாட்டு கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

    முள்ளும் மலரும் படத்துக்கு ரூ.35 ஆயிரம், பைரவி படத்துக்கு ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்கிய ரஜினிக்கு முரட்டுக்காளை படத்தில் நடித்ததற்கு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைத்தது. பஞ்சு அருணாசலம் கதை, வசனம், பாடல்கள் எழுதிய அந்த படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார்.

    கிராமத்து கதை கொண்ட இந்த படத்தில் ரஜினி ஏழை இளைஞனாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக ரதி நடித்திருந்தார்.

    கிராமத்தில் வாழும் பண்ணையார் தனது முரட்டுக் காளையை யார் அடக்குகிறார்களோ அவர்களுக்கு தனது தங்கையை திருமணம் செய்து கொடுப்பதாக அறிவிப்பார். ரஜினி அந்த காளையை அடக்கி விடுவார். ஆனால் பண்ணையார் தங்கையை திருமணம் செய்ய மறுப்பார். அதன் பிறகு நடப்பதுதான் கதை.

    175-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனி இடம் பெற்று இருந்த ஜெய்சங்கர் முதல் முதலாக இந்த படத்தில் பண்ணையாராக வில்லன் வேடத்தில் நடித்தார். இந்த படத்தின் பணிகள் தொடங்கிய போது ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் மரணம் அடைந்தார். என்றாலும் படஅதிபர் ஏ.வி.எம்.சரவணன் பொறுப்பேற்று இந்த படத்தின் பணிகளை சிறப்பாக மேற்கொண்டார்.

    இதனால் உற்சாகம் அடைந்த ரஜினி இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். பஞ்சு அருணாசலமும், எஸ்.பி.முத்துராமனும் ரஜினியை நன்கு உணர்ந்தவர்களாக இருந்த தால் முரட்டுக்காளை படத்தில் அவரை எந்த அளவுக்கு வித்தியாசப்படுத்தி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டினார்கள்.

    அதனால்தான் ஓடும் ரெயில் மீது ஜெய்சங்கரும், ரஜினியும் சண்டை போடும் காட்சிகளில் கூட ரஜினி டூப் போடாமல் தானே நடித்து முடித்தார். இந்த படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதி இளையராஜா இசையமைத்த பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக "பொதுவாக என் மனசு தங்கம்..." பாடல் பட்டிதொட்டிகளில் எல்லாம் அனல் பறக்கும் வகையில் இருந்த தோடு ரசிகர்களின் விருப்பப் பாடலாகவும் அமைந்தது.

    அந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ரஜினிக்காகவே பஞ்சுஅருணாசலம் எழுதியதாகும். ரஜினியுடன் பழகி அவரது வாழ்க்கையை முழுமையாக அறிந்து வைத்திருந்த பஞ்சு அருணாசலம் அதையெல்லாம் அந்த பாடலில் கொட்டி இருந்தார். அந்த பாடலை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியவரும்....

    அண்ணனுக்கு ஜே…

    காளையனுக்கு ஜே…

    பொதுவாக என் மனசு தங்கம்…

    ஒரு போட்டியின்னு

    வந்து விட்டா சிங்கம்…

    பொதுவாக என் மனசு தங்கம்…

    ஒரு போட்டியின்னு

    வந்து விட்டா சிங்கம்…

    உண்மைய சொல்வேன்…

    நல்லத செய்வேன்…

    வெற்றிமேல் வெற்றி வரும்…

    ஆடுவோம் பாடுவோம்

    கொண்டாடுவோம்…

    ஆ… ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

    முன்னால சீறுது மயிலக்காளை…

    பின்னால பாயுது மச்சக்காளை…

    முன்னால சீறுது மயிலக்காளை… ஆ…

    பின்னால பாயுது மச்சக்காளை…

    அடக்கி ஆளுது முரட்டுக்காளை…

    முரட்டுக்காளை… முரட்டுக்காளை…

    நெஞ்சுக்குள் பயமும் இல்ல…

    யாருக்கும் அச்சம் இல்ல…

    வாராதோ வெற்றி என்னிடம்…

    விளையாடுங்க உடல் பலமாகுங்க…

    பொறந்த ஊருக்கு புகழை சேறு…

    வளந்த நாட்டுக்கு பெருமை தேடு…

    பொறந்த ஊருக்கு புகழை சேறு…

    வளந்த நாட்டுக்கு பெருமை தேடு…

    நாலுபேருக்கு நன்மைசெய்தா…

    கொண்டாடுவார் பண்பாடுவார்…

    என்னாலும் உழைச்சதுக்கு…

    பொன்னான பலன் இருக்கு…

    ஊரோட சேர்ந்து வாழுங்க…

    அம்மன் அருள் சேரும்…

    இனி நம்ம துணையாகும்…

    ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்… ஹே…

    ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

    இந்த பாடலால் முரட்டுக்காளை படம் வெள்ளி விழா படமாக மாறியது. அதன் பிறகு தீ, கழுகு ஆகிய படங்களில் ரஜினி கவனம் செலுத்தினார். அப்போது லதாவை திருமணம் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாக நினைத்தார். உடனடியாக ரஜினி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதுபற்றிய ருசிகர தகவல்களை நாளை காணலாம்.

    • ரஜினியை பொருத்தவரை சில விஷயங்கள் மனதுக்குள் தோன்றும்போது மிகச் சரியாக இருக்கும் என்று நம்புவார்.
    • லதாவுக்கும் ரஜினியை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்து இருந்தது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு லதா மீது முதல் பார்வையில் ஏற்பட்ட காதல் புனிதமாக மாறியது. லதாவை பார்த்து அவர் மெய்மறந்து போய் இருந்தார். அவரையே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ரஜினி மனதுக்குள் ஆழமாக உருவானது.

    சினிமா உலகில் அவர் எத்தனையோ நடிகைகளை பார்த்து இருக்கிறார். அவர்களில் சில நடிகைகள் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பி இருக்கிறார்கள். அதுபோல பொதுவாழ்வில் எத்தனையோ பெண்களை அவர் கடந்து வந்து இருக்கிறார். அவர்களிலும் சிலர் ரஜினியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தது உண்டு.

    ஆனால் யாரும் அவர் மனதில் முழுமையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கல்லூரி மாணவி லதா மட்டுமே ரஜினி மனதில் அந்த அரிய தாக்கத்தை அன்று ஏற்படுத்தினார். தனக்கு மனைவியாக வரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று ரஜினி ஏற்கனவே கனவு கண்டு கொண்டு இருந்தார்.

    அவரது அந்த கனவை நூறு சதவீதம் பூர்த்தி செய்யும் வகையில் லதா பொருத்தமாக இருந்தார். எனவேதான் லதா தனக்கு மனைவியாக வந்தால் தனது வாழ்வு இனிமையாக இருக்கும் என்று ரஜினிக்கு மனதில் தோன்றியது.

    ரஜினியை பொருத்தவரை சில விஷயங்கள் மனதுக்குள் தோன்றும்போது மிகச் சரியாக இருக்கும் என்று நம்புவார். லதா மீதான காதலும் அவருக்கு அப்படித்தான் அடித்தளம் அமைத்து இருந்தது. ஆனால் மாணவி லதாவிடம் தனது காதலை எப்படி சொல்வது என்ற தவிப்பு ரஜினியிடம் ஏற்பட்டது.

    தனது மனதுக்குள் உருவாகி இருக்கும் காதலை லதா உணரும் வகையில் சொல்ல வேண்டும். ஆனால் நேரடியாக சொல்ல முடியாது. எப்படி சொல்வது என்று யோசித்தார். லதா தன்னிடம் அடுத்து ஏதாவது ஒரு கேள்வி கேட்கும்போது அதையே தனக்கு சாதகமாக மாற்றி காதலை சொல்லி விட வேண்டியதுதான் என்று மனதுக்குள் முடிவு செய்துக்கொண்டார்.

    அந்த சமயத்தில் சொல்லி வைத்தது போல லதா ஒரு கேள்வியை ரஜினியை பார்த்து கேட்டார். "மிஸ்டர் ரஜினிகாந்த் நான் முன்பு கேட்ட கேள்விக்கு குடும்பப்பாங்கான பெண் கிடைத்தால் திருமணம் செய்துக் கொள்வேன் என்று சொன்னீர்கள். குடும்பப் பாங்கான பெண் என்றால் என்ன அர்த்தம்? எங்களுக்கு அதுபற்றி புரியவில்லை. நீங்களே அதை கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?" என்று லதா யதார்த்தமாக கேட்டார்.

    இதை கேட்டதும் ரஜினிக்கு வானத்தில் மிதப்பது போல் இருந்தது. லதாவிடம் இருந்து தனக்கு சாதகமாக இப்படி ஒரு கேள்வி வரும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. இந்த வாய்ப்பை தவற விட்டுவிடக் கூடாது என்று நினைத்தார். லதா கேட்ட லட்டு மாதிரியான அந்த கேள்வியை "லபக்" என்று பிடித்துக் கொண்டார்.

    ரஜினி சிரித்துக்கொண்டே லதாவை பார்த்து, "குடும்பப் பாங்கான பெண் என்றால் அழகாக இருக்க வேண்டும். கம்பீரமாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் மென்மையானவராகவும் இருக்க வேண்டும். அதோடு புத்திகூர்மை கொண்டவராகவும் செயல்பட வேண்டும். அதாவது உன்னை மாதிரி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நான் உடனே திருமணம் செய்து கொள்வேன்" என்றார்.

    ரஜினி சொன்ன இந்த பதிலால் லதா உள்பட 4 மாணவிகளும் அரண்டுப் போனார்கள். அந்த அறை அப்படியே நிசப்தமாக மாறியது. மாணவிகள் 4 பேருக்கும் வார்த்தை வெளியில் வரவில்லை. லதாவுக்கு வெட்கத்தால் முகம் சிவந்தது. அவர் முகம் லேசாக புன்னகைக்கு மாறி கண்களில் குறு...குறுப்பு தோன்றியது.

    ஆனால் பதில் சொல்ல முடியாமல் அவரது பார்வை தரைக்கு சென்றது. அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ரஜினியை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்த லதா அடுத்த நிமிடம் அந்த அறையில் இருந்து எழுந்து வெளியே சென்று விட்டார். அவரை தொடர்ந்து மற்ற மாணவிகளும் எழுந்து சென்று விட்டனர்.

    லதா கம்பீரமாக நடந்து செல்வதை ரஜினி ரசித்துப் பார்த்தார். இந்த பெண் யார்? என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று யோசித்தபடியே தனது ஓய்வு அறைக்கு செல்வதற்காக நடந்தார். அப்போது அங்கே நடிகை சவுகார்ஜானகி வந்து கொண்டு இருந்தார். அவரிடம், "அம்மா இப்போது 4 பெண்கள் வந்தார்கள் அல்லவா? அதில் சிவப்பாக, சுறுசுறுப்பாக இருந்த பெண் யார் என்று உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டார்.

    அதற்கு சவுகார்ஜானகி, "எந்த பெண்?" என்று கேள்வி எழுப்பினார். உடனே ரஜினி தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த லதாவை சுட்டிக்காட்டினார். லதாவைப் பார்த்ததும் சவுகார்ஜானகி, "இந்தப் பெண்ணா.... எனக்கு நன்றாக தெரியும். அவள் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மனைவியின் தங்கை" என்றார்.

    இதைக் கேட்டதும் ரஜினிக்கு உற்சாகம் ஆகி விட்டது. ஒய்.ஜி.மகேந்திரன் மூலம் தனது காதலை தெரிவித்து திருமணம் பற்றி பேசலாம் என்று தீர்மானித்தார். அதன்படி ஒய்.ஜி.மகேந்திரனை நேரில் சென்று சந்தித்தார். வழக்கமான நலம் விசாரிப்பு முடிந்த பிறகு சினிமா பற்றி இருவரும் சில விஷயங்கள் பேசினார்கள். அதன்பிறகு ரஜினி ஒய்.ஜி.மகேந்திரனிடம், "நான் லதாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும். நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

    அதைக் கேட்டதும் ஒய்.ஜி.மகேந்திரன் விழுந்து.... விழுந்து... சிரித்தார். "என்னப்பா நீ.... லதாவையா திருமணம் செய்யப் போகிறாய். அவர் உன்னைவிட ரொம்ப மூத்தவர் ஆயிற்றே" என்றார். அதற்கு ரஜினி, "நீங்கள் புரிந்து கொண்டுதான் பேசுகிறீர்களா? நான் எந்த லதாவை சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா?" என்றார்.

    ஒய்.ஜி.மகேந்திரனுக்கு குழப்பமாகி விட்டது. "எந்த லதா? எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்து இருக்கிறாரே. அவரைத்தானே சொல்கிறீர்கள்" என்றார். அதற்கு ரஜினி, "இல்லை. நான் சொல்வது உங்கள் மனைவியின் தங்கை லதா" என்று பளிச்சென கூறினார். இதை கேட்டதும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது.

    குடும்பத்தில் அனைவரிடமும் பேசி விட்டு சொல்வதாக தெரிவித்தார். அன்று மாலை வீட்டுக்கு சென்றதும் ஒய்.ஜி.மகேந்திரன் தனது மனைவி சுதாவிடம் அனைத்தையும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடலூரில் இருந்த லதாவின் பெற்றோர் ரங்காச்சாரி-அலமேலுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னைக்கு விரைந்து வந்தனர்.

    முதலில் ரங்காச்சாரிக்கு இந்த திருமணத்தில் தயக்கமாக இருந்தது. நிறைய கேள்விகளை அவர் கேட்டார். ரஜினிகாந்த் அய்யங்காரா? அவர் என்ன படித்து இருக்கிறார்? நடிகராக இருக்கிறாரே சரியாக வருமா? என்று கேள்வி எழுப்பினார். பிறகு லதாவிடம் பேசி மனதை மாற்றலாம் என்று நினைத்தார்.

    ஆனால் லதாவுக்கும் ரஜினியை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்து இருந்தது. ரஜினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மன உறுதி அவரிடமும் காணப்பட்டது. அவர் தனது தந்தையிடம், "நான் ரஜினியை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். அதே அளவுக்கு அவரும் என்னை நேசிக்கிறார். அவரிடம் சில கெட்டப் பழக்கங்கள் இருக்கலாம். சென்னையில் தனிமையாக இருப்பதால் அந்த சூழ்நிலை அப்படி உருவாக்கி இருக்கிறது. எல்லாம் சரியாகி விடும்" என்றார்.

    அதன் பிறகு லதாவை யாரும் சமரசம் செய்யவில்லை. இதையடுத்து ரங்காச்சாரி குடும்பத்தினர் ரஜினியை சந்தித்து பேசினார்கள். ரஜினி பற்றி ரங்காச்சாரி சில விஷயங்களை விசாரித்து அறிந்து இருந்தார். எனவே அவர் லதாவை திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த ரஜினி பெங்களூருக்கு சென்று தனது அண்ணன் சத்தியநாராயண ராவிடம் லதா பற்றி கூறினார். இதைக் கேட்டதும் சத்திய நாராயண ராவுக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. மராத்தி வம்சத்தில் கிடைக்காத பெண்ணா மதராசில் கிடைத்து விடப்போகிறார் என்றார்.

    ஆனால் ரஜினி தனது காதலில் உறுதியாக இருந்தார். இதனால் சத்திய நாராயணராவ் சென்னை வந்து லதாவையும், அவரது குடும்பத்தினரையும் நேரில் பார்த்தார். பிறகு அவரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இவையெல்லாம் 1980-ம் ஆண்டு ஜூன், ஜூலையில் மிகமிக ரகசியமாக நடந்தன.

    ஆனால் ரஜினிக்கும், எத்திராஜ் கல்லூரி மாணவி லதாவுக்கும் காதல் மலர்ந்து இருப்பதை தினத்தந்தி நிருபர் கண்டுபிடித்து விட்டார். லதா பற்றிய தகவல்களை தினத்தந்தி நிருபர் சேகரித்தார். அப்போது இரு குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதித்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து ரஜினிகாந்துக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தி தினத்தந்தியில் ஆகஸ்டு மாதம் வெளியானது. மணமகள் கல்லூரி மாணவி லதா என்றும் மற்ற தகவல்களும் விரிவாக எழுதப்பட்டு இருந்தன. தினத்தந்தியில் இந்த செய்தி வெளியான தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திரையுலக பிரமுகர்களும் ஆச்சரியம் அடைந்தனர். தினத்தந்தியில் வந்து இருக்கும் செய்தி உண்மையா? என்று ரஜினிக்கு போன் செய்து விசாரித்தனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் கடிதம் எழுதி லதா பற்றி கேட்டனர். ஆனால் ரஜினி யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்தார். அவர் தன் கைவசம் இருந்த பொல்லாதவன், முரட்டுக்காளை படப்பிடிப்புகளில் தீவிரம் காட்டினார். அந்த 2 படங்களும் ரஜினிக்கு சில படிப்பினைகளை கொடுத்தன. அதுபற்றி நாளை பார்க்கலாம்.

    • கல்லூரி மலருக்கான கட்டுரை என்பதால் ஒய்.ஜி.மகேந்திரனும் ரஜினியிடம் பேசி பேட்டி கொடுக்க கேட்டுக் கொண்டார்.
    • பங்களாவின் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

    சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும்-லதாவுக்கும் இடையே மலர்ந்த காதல் தெய்வீகமானது. இப்படி ஒரு காதல் தங்களுக்குள் உருவாகும் என்று நிச்சயமாக அவர்கள் இருவருமே நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு தெய்வீக சங்கல்பம்தான் அவர்களை இணைத்தது.

    ரஜினி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக மாறி இருந்த அந்தக் கால கட்டத்தில் லதா சென்னை எத்திராஜ் கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தார். அவரது தந்தை ரங்காச்சாரி, தாய் அலமேலு.

    ரங்காச்சாரியின் பூர்வீகம் கடலூர். அவர் சென்னை நுங்கம்பாக்கம் லேக்வியூ அவென்யூவில் அலமேலுவுடன் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். அவருக்கு ஒரு மகன். 2 மகள்கள் பிறந்தனர்.

    மகன் பெயர் ரவி ராகவேந்திரா, மூத்த மகள் சுதா, இளைய மகள் லதா. மகன்-மகள்கள் மூவரையும் சென்னையில் உள்ள பிரபலமான பள்ளியில் படிக்க வைத்தனர். படித்துக் கொண்டே சுதாவும், லதாவும் பாட்டு கற்றுக் கொண்டனர். பள்ளிகள் அளவில் நடக்கும் பாட்டு போட்டிகளில் அவர்கள் வெற்றி பெற்று பெருமை சேர்த்தனர்.

    சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் இசைக்குழு நடத்திய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் இசைக்குழுவுக்கு ஒரு தடவை பாடகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ரங்காச்சாரியின் மூத்த மகள் சுதா தேர்வானார். அவரது குரல் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு மிகவும் பிடித்துப் ேபானது.

    ஒரு கட்டத்தில் சுதாவுக்கும், ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் இடையே நட்பு காதலாக மாறியது. இருவர் வீட்டிலும் பெரியவர்கள் பேசி திருமணத்தை முடித்தனர். இந்த காலக் கட்டத்தில் பணி நிறைவு பெற்று ரங்காச்சாரியும், அலமேலுவும் சென்னையை காலி செய்து விட்டு கடலூர் சென்று விட்டனர்.

    மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்டதால் ரவி ராகவேந்திராவையும், லதாவையும் மூத்த மகள் சுதா கண்காணிப்பில் ரங்காச்சாரி விட்டு சென்று இருந்தார். சுதா வீடு அருகிலேயே ரவி ராகவேந்திராவும், லதாவும் தனியாக இருந்தனர். லதா அங்கிருந்த படியே எத்திராஜ் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    கல்லூரியில் பாட்டு போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி என்று அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு புகழ் பெற்றார். அவருக்கு தோழி வட்டாரம் உருவாகி இருந்தது. அதில் உமா, சந்திரா, சுனிதா ஆகிய 3 பேர் இருந்தனர்.

    தோழிகள் 4 பேரும் கல்லூரியில் தனித்துவத்துடன் வலம் வந்தனர். எந்த போட்டியாக இருந்தாலும் இந்த 4 தோழிகளும் சேர்ந்து கலக்குவதை வழக்கத்தில் வைத்து இருந்தனர். இதனால் 4 தோழிகள் பற்றிய பேச்சு கல்லூரியில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த 4 பேரும் அடிக்கடி நிறைய விஷயங்களை மனம் விட்டு பேசுவது உண்டு. அப்போது அவர்களுக்குள் ஒருநாள் ஒரு முடிவு எடுத்துக் கொண்டனர். வாழ்க்கையில் திருமணம் செய்துக் கொள்ள கூடாது. சமூக சேவைக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து இருந்தனர்.

    இந்த நிலையில் கல்லூரி இறுதி ஆண்டு என்பதால் அவர்களுக்கு கல்லூரி மலருக்காக சிறப்பு கட்டுரைகள் தயாரிக்கும் பணி ஒதுக்கி கொடுக்கப்பட்டது. அதன்படி லதாவுக்கும், அவரது தோழிகளுக்கும் சினிமா நட்சத்திரம் யாரையாவது பேட்டி கண்டு கட்டுரை எழுதி தரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

    எந்த நடிகரிடம் பேட்டி எடுக்கலாம் என்று 4 தோழிகளும் தங்களுக்குள் விவாதித்த போது ரஜினியிடம் பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று ஒருமித்த கருத்து உருவானது. லதாவின் அக்கா சுதாவின் கணவர் ஒய்.ஜி.மகேந்திரன் நடிகர் என்பதாலும், அவர் ரஜினியுடன் சேர்ந்து படங்களில் நடித்து இருப்பதாலும் அவர் மூலம் ரஜினியை தொடர்பு கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

    கல்லூரி மலருக்கான கட்டுரை என்பதால் ஒய்.ஜி.மகேந்திரனும் ரஜினியிடம் பேசி பேட்டி கொடுக்க கேட்டுக் கொண்டார். இதையடுத்து 1980-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாளில் 4 மாணவிகளையும் வரச்சொல்லுமாறு ரஜினி கூறி இருந்தார். முதல் நாள் லதாவும் அவரது தோழிகளும் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற போது ரஜினியை சந்தித்து பேட்டி காண இயலவில்லை.

    இதையடுத்து சென்னை செனடாப் சாலையில் உள்ள பிரபல நடிகை சவுகார்ஜானகியின் வீட்டில் நடக்கும் படப்பிடிப்பு சமயத்தில் சந்திக்கலாம் என்று ரஜினி உறுதியளித்து இருந்தார். அந்த சமயத்தில் சவுகார்ஜானகி வீட்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் தில்லுமுல்லு படம் தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த படத்துக்கான படப்பிடிப்பு மும்முரமாக அன்று நடந்துக் கொண்டிருந்தது.

    பங்களாவின் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த அந்த படத்தின் குறிப்பிட்ட காட்சியில் ஒரே டேக்கில் ரஜினி நடித்து முடித்தார். அடுத்த காட்சிக்கான படப்பிடிப்புக்கு கருவிகள் வேறு இடத்துக்கு மாற்றும் பணிகள் நடந்த சமயத்தில் ரஜினி ஓய்வெடுக்க தனது அறைக்கு புறப்பட்டார்.

    அப்போது அவரது உதவியாளர் வந்து, "எத்திராஜ் கல்லூரி மாணவிகள் உங்களை பேட்டிக்காண வந்து இருக்கிறார்கள். கீழ் தளத்தில் அவர்களை உட்கார வைத்து இருக்கிறேன்" என்றார். அதை கேட்டதும் ரஜினி, சரி 10 நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று கூறி சென்றார். அடுத்த சில நிமிடங்களில் ஓய்வு அறையில் இருந்து வெளிேய வந்த அவர் கீழ் தளத்தில் மாணவிகள் இருக்கும் இடத்துக்கு வந்தார்.

    அவர் வருவதை லதாவும், அவரது தோழிகளும் பார்த்தனர். ரஜினியை கண்டதும் 4 பேரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். ரஜினியும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு 4 பேரையும் ஒவ்வொருவராக பார்த்தார். லதாவை பார்த்ததும் அவரது கண்கள் அப்படியே நிலைக்கொண்டது போல ஆகி விட்டது.

    லதாவின் அழகிய கண்கள், மனதை கொள்ளைக் கொள்ளும் அழகு, மென்மையான பேச்சு, இனிமையான பார்வை, புன்னகை முகம் ஆகியவற்றை கண்டு ரஜினி தன்னையே மெய்மறந்துப் போனார். ஸ்டைலாக தலையை முன்பக்கம் சாய்த்து அதே வேகத்தில் பின் பக்கமாக ஒரு வெட்டுவெட்டி தலைமுடியை தள்ளி விட்டபடி சிரித்துக் கொண்டே "சொல்லுங்க" என்றார்.

    மாணவிகள் 4 பேரும் தங்களை அறிமுகம் செய்தனர். ஒரு மாணவி லதாவை சுட்டிக் காட்டி, "இவள் பெயர் லதா" என்று கூறினார். அதை கேட்டதும் ரஜினிக்கு மனதுக்குள் இன்ப அலை வீசியது. அவரது பார்வை லதா மீது மட்டுமேதான் இருந்தது. இது லதாவுக்கு முதலில் என்னவோ போல் இருந்தது. அவருக்குப் பேச்சு வரவில்லை.

    எப்போதும் அதிரடியாக கலகலப்பாகப் பேசும் லதா வாய்மூடி மவுனமாக இருந்தார். அவரது முகம் வெட்கத்தில் மூழ்கி இருந்தது. அவருக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    அப்போது ரஜினி கேள்விகளை கேளுங்கள் என்றார். லதாவின் தோழிகள் கேள்விகளை கேட்கத் தொடங்கினார்கள். ரஜினியும் அதற்கான பதிலை சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் அவரது கண்கள் மட்டும் லதாவையே சுற்றி... சுற்றி... வந்தன.

    சில கேள்விகளுக்கு பிறகு லதா ஒரு கேள்வியை எடுத்து வீசினார். "உங்களுக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணிடம் எத்தகைய குணங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்" என்று லதா கேள்வி எழுப்பினார்.

    லதாவின் குரலை கேட்டதும் ரஜினிக்கு உடம்பே ஜில்லென்று குளிர்ந்தது போல் ஆகி விட்டது. என்னவோ தெரியவில்லை. அந்த குரலை கேட்டதுமே ரஜினி சொக்கிப் போனார். அவர் மனது அவரிடம் இல்லை. லதா மீது இருந்தது. இந்த பெண் நமக்கு மனைவியாக வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ரஜினியின் உள்மனம் மின்னல் வேகத்தில் சொல்லிக் கொண்டே இருந்தது.

    அந்த சமயத்தில்தான் லதா இப்படி ஒரு கேள்வியை கேட்டு இருந்தார். நாம் மனதுக்குள் நினைத்தது போலவே இந்த பெண் கேள்வி கேட்கிறாரே? என்று ரஜினிக்குள் இன்ப அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது. ஆனால் அவர் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஸ்டைலாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

    அவர் சிரித்துக் கொண்டே, "எனக்கு மனைவியாக வருபவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் மனதுக்குள் முடிவு செய்து விட்டேன். என்னிடம் அன்பாக இருக்க வேண்டும். என்னை அக்கறையோடு கவனித்துக் கொள்ள வேண்டும். குடும்பப்பாங்கான பெண்ணாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

    ரஜினியின் இந்த பதில் லதாவுக்கு திருப்தியாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். அவர் தலையை அசைத்துக் கொண்டே புன்னகைப் பூத்தார். அதை கண்டதும் ரஜினிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் லதாவை தொடர்ந்து ஊடுருவி ஆழமாக பார்த்தார்.

    அவர் கண்களை அகற்றவே இல்லை. அப்படி ஒரு ஆழமான பார்வையை அவர் லதா மீது பாய்த்துக் கொண்டிருந்தார். ஒரு பெண்ணை நாம் இப்படி வைத்தக் கண் வாங்காமல் பார்க்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி ரஜினியிடம் கொஞ்சமும் இல்லை. ஏனெனில் அவர் அந்த நிமிடத்தில் இருந்தே லதாவை மனதார காதலிக்க தொடங்கி இருந்தார்.

    அவரது கூர்மையான பார்வை லதாவை நிலைகுலைய செய்தது. என்ன இவர் இப்படி நம்மை குறு...குறு...வென பார்த்துக் கொண்டே இருக்கிறாரே என்று படபடப்பு ஏற்பட்டது. லதாவின் தோழிகளும் இதை கவனிக்க தவறவில்லை. அவர்கள் ரஜினியிடம் வேறு சில கேள்விகளை கேட்கத் தொடங்கினார்கள். அந்த சூழலை பயன்படுத்தி தனது காதலை தெரிவிக்க ரஜினி முடிவு செய்தார். ராகவேந்தரின் வழிகாட்டுதலோ, என்னவோ லதா கேட்ட ஒரு கேள்வி ரஜினி எதிர்பார்த்தது போல அமைந்து இருந்தது. அதற்கு ரஜினி அளித்த பதிலை நாளை பார்க்கலாம்.

    • ஒரு ஜாதகத்தின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பல்வேறு விதமான நல்ல தீய பலன்களின் தொகுப்பு இருக்கும்.
    • ஒரே நேரத்தில் பிறந்த அனைவரின் வாழ்க்கையும் ஒன்று போல் இருக்காது.

    "எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும் என்பது பழமொழி" அதாவது ஒரு செயலை எப்படி திட்டமிட்டாலும், அதற்கான வாய்ப்புகள் அமைய வேண்டும். அதாவது ஒரு செயலைச் செய்ய முயற்சிப்பது மட்டுமே போதாது, அது நிறைவேறச் சரியான நேரமும், காலமும் இருந்தால் மட்டுமே செயலாக்கம் பெறும். எப்படி திட்டமிட்டுச் செயல்பட்டாலும், சில சூழ்நிலைகளில் வெற்றி என்பது ஜாதகரின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. செயலைச் செய்வதற்கான முயற்சியை எடுப்பதுடன், அதற்கான விதி அமைப்பு இருந்தால் மட்டுமே அந்த முயற்சி வெற்றி பெறும். இதை ஜோதிட ரீதியாக விதி கொடுப்பினை என்று சொல்லலாம். ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் விதிப்படி அதாவது கொடுப்பினை, படித்தான் இருக்கும். இதுதான் நிதர்சனமான அனுபவப் பூர்வமான உண்மையாகும். இதைத் தான் ஜோதிடம் ராசி, லக்னம் விதி, மதி என்று கூறுகிறது. இதை விதி, தலையெழுத்து, கொடுப்பினை, புண்ணியம் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

    ஜோதிடம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் தலைவிதி என்று கூறுகிறார்கள். ஒருவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரக நிலையை கொண்டு விதி கொடுப்பினையை தெளிவாக அறிய முடியும்.

    ஒரு ஜாதகத்தின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பல்வேறு விதமான நல்ல தீய பலன்களின் தொகுப்பு இருக்கும். அந்தத் தொகுப்பின்படி இந்த பிறவியில் ஜாதகர் என்ன அனுபவிக்கப் போகிறார் என்பதை கூறுவது ஒன்பதாமிடமாகும்.

    ஒருவர் என்ன பலனை அனுபவிக்க வேண்டும் என்ற விதி ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திலேயே உள்ளது. பாக்கிய ஸ்தானத்தில் இல்லாத ஒரு பலனை இந்த ஜென்மத்தில் ஜாதகர் அனுபவிக்க முடியாது. ஒருவர் குறிப்பிட்ட வருமானம் பெற வேண்டும் என்ற விதி அவருடைய ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்த முடியும். இதை மேலும் புரியும் படி கூறினால் ஒரு நாளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜனனம் நிகழ்கிறது. ஒரே நேரத்தில் பிறந்த அனைவரின் வாழ்க்கையும் ஒன்று போல் இருக்காது. இது அவரவரின் தாத்தா பாட்டி முன்னோர்கள் பெற்றோர்கள், ஜாதகர் செய்த பாவ புண்ணிய செயல்களுக்கு ஏற்பவே இருக்கும்.

    கடந்து வந்த ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே இந்த ஜென்மம் இருக்கும். ஒருவர் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறந்து அனைத்து விதமான யோகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற அமைப்பு இருந்தால் அதை கடவுளே நினைத்தால் கூட மாற்றி அமைக்க முடியாது. கொடுப்பினையில் பதிவாகாத ஒரு சம்பவம் இந்த ஜென்மத்தில் நடக்காது. கடந்த ஜென்மத்தில் ஒருவர் புண்ணிய பலன்கள் அதிகம் சேர்த்து வைத்திருந்தால் இந்த ஜென்மத்தில் பொருளாதார சிரமம் கடன், வறுமை இருக்காது. நல்ல வீடு வாகன யோகம் உண்டு. பெற்றோர்களின் அன்பும் ஆசிர்வாதமும் நிரம்பி இருக்கும்.

    எத்தகைய சூழ்நிலையிலும் பிறரை எதிர்பாராமல் தனது மற்றும் தன்னை சார்ந்தவர்களின் தேவையை நிறைவு செய்யும் வலிமை பெற்றவர்கள். நிலையான நிரந்தரமான வருமானம் தரக்கூடிய தொழில் உத்தியோகம் உண்டு. தொட்டது துலங்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஜாதகரைத் தேடி வந்து கொண்டே இருக்கும்.

    ஐ.ஆனந்தி

     

    குல தெய்வ அருள் கடாட்சம், தெய்வ அனுகிரகம் முன்னோர்களின் நல்லாசிகள் நிரம்ப பெற்றவர்கள். கவுரவப் பதவி, பூர்வீகச் சொத்தால் ஆதாயம், நிச்சயம் உண்டு. ஜாதகர் புத்தி சாதுர்யம் நிரம்பியவராக இருப்பார். ஜோதிட ரீதியாக விதி மற்றும் கொடுப்பினையை அறிய லக்னம் எனும் லக்னாதிபதி, 5ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம், 9ம்மிடம் எனும் பாக்கிய ஸ்தானத்தின் மூலமே அறிய முற்படுவார்கள். இதன் மூலம் 10 முதல் 20 சதவீதம் வரையான பிராப்தம் எனும் விதி மற்றும் கொடுப்பினையை அறிய முடியும்.

    ஆனால் ஒரு ஜாதகத்தில் நவகிரகங்கள் அமர்ந்துள்ள நட்சத்திர பாதாச்சாரத்தின் மூலமே ஒரு ஜாதகரின் கொடுப்பினையை தெள்ளத் தெளிவாக கூற முடியும். இந்த முறைகளை தான் இன்றளவும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஜோதிடர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் நட்சத்திரச் சாரத்தில் ஏதாவது ஒரு கிரகமாவது நின்றால் அந்தக் குறிப்பிட்ட கிரகம் நின்ற பாவக, காரக பலன்களையும் மற்றும் அந்த குறிப்பிட்ட கிரகம் எந்தெந்த பாவகங்களுக்கு ஆதிபத்தியம் பெறுகிறதோ அந்த பாவக, காரக பலன்களையும் ஜாதகர் தன் வாழ்வில் நிச்சயமாக அனுபவிக்க விதி, கொடுப்பினை உதவும்.

    ஒரு கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் எந்த ஒரு கிரகமும் இல்லை என்றால் அந்தக் குறிப்பிட்ட கிரகத்தின் பாவக, காரக பலன்களையும் மற்றும் அந்த குறிப்பிட்ட கிரகம் எந்த பாவங்களுக்கு ஆதிபத்தியம் பெறுகிறதோ அந்த பாவக, காரக பலன்களையும் ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிப்பதற்கு வாய்ப்பில்லை. விதி, கொடுப்பினை இல்லை எனலாம். ஒரு குறிப்பிட்ட கிரகம் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறதோ அந்த நட்சத்திர நாதன் ராசி கட்டத்தில் எந்த பாவத்தில் நிற்கிறதோ அந்த பாவக, காரக பலன்களையும் அந்த நட்சத்திரநாதன் எந்தெந்த பாவகங்களுக்கு ஆதிபத்தியம் வகிக்கிறாரோ, அந்த பாவக பலன்களையும் ஜாதகர் அந்த குறிப்பிட்ட கிரகத்தின் தசா புத்தி காலங்களில் அனுபவிப்பார்

    ஒரு ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம்மிடம் மூலமே ஒரு மனிதன் உயர்வானதை அடைய முடியும். பூர்வ புண்ணிய ஸ்தானப் படி அனுபவிக்க வேண்டிய அனைத்து பாக்கிய பலன்களும் இந்த பாவகத்தில் பதிவாகி இருக்கும். மனிதர்களாய் வாழும் காலத்தில் தனது விருப்பங்களை ஆசைகளை அடைய உதவும் ஸ்தானமாகும். அந்த ஒன்பதாம் இடத்தில் சுய ஜாதகத்தில் நல்ல அமைப்பு இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார். எண்ணியதை அடைந்து விடுகிறார். ஒன்பதில் அசுப கிரகங்களின் சம்பந்தம் இருக்கப் பிறந்தவர்கள் தடுமாறுகிறார், போராடுகிறார், அந்த இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார்.

    இதுதான் "ஜோதிட ரகசியம். அத்துடன் உன்னைப் பெற்ற தந்தையார்? உன் உடம்பில் உள்ள டி.என்.ஏ.வை யாரிடம் இருந்து நீ கிடைக்கப்பெற்றாய்? உன் குலம், ஜாதி, மதம் எது? புண்ணிய பலத்தால் உன்னைப் பெற்றாரா? பாவ பலத்தால் உன்னைப் பெற்றரா? உன்னால் உன் தந்தை கவுரவம் கிடைக்கப் பெறுவாரா? அல்லது உன் தந்தையால் நீ கவுரவம் கிடைக்கப் போகிறாயா? முன்னோர்களின் சொத்துக்கள் உழைப்பால் வந்ததா? அல்லது அநீதியாக வந்ததா? அந்த சொத்து, சுகத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவனா? உன் பிறப்பின் நோக்கம் என்ன? நான் ஏன் பிறந்தேன் போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை தரும் பாவகம்.

    ஒரு ஜாதகத்தில் 9-ம் அதிபதி நட்சத்திர சாரத்தில் அதிக கிரகங்கள் இருப்பது மிக மிக நன்மை தரும் அமைப்பாகும். 9ம் அதிபதி நட்சத்திர சாரத்தில் கிரகம் இருப்பவர்களுக்கு பாக்கிய பலன்கள் மிகுதியாக நடக்கும். நல்ல ஒழுக்கமும், சமயோசித புத்தியும் உள்ளவராக இருப்பார்.நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உள்ளவராக இருப்பார். தந்தைவழி யோகத்தை முழுமையாக அனுபவிப்பார்கள். தான் வசிக்கும் ஊரில் மதிப்பும், மரியாதையும் மிக்கவராகவும் குலத் தொழில் புரிபவர்களாக இருப்பார்கள். சிறிய உழைப்பில் பெரிய வருமானம் உண்டு. குரு தீட்சை பெற்றவர்கள். தந்தை, தந்தை வழி முன்னோர்கள் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார்கள் கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்தவர்கள், செய்பவர்கள். கோவில் சார்ந்த திருப்பணி வேலைகளுக்கு தான தர்மம் வழங்கி முன்னின்று செயல்படுவார்கள். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். உயர்கல்வி வெளியூர் அல்லது வெளிநாட்டில் படிப்பார்கள்.

    லவுகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் உண்டாகும். 9-ம் அதிபதிக்கு 1, 5 சம்பந்தம் பெற்றால் வம்சாவளியாக தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வாழும் குடும்பம். இவர்களும் இவர்களுடைய வம்சாவளியும் குடும்ப கவுரவத்தை கட்டி காப்பார்கள்.

    லக்கினாதிபதியும், ஒன்பதாம் இடத்து அதிபதியும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் ஜாதகன் எல்லா விதத்திலும் அதிர்ஷ்டம் உள்ளவனாக இருப்பான். 9ம் அதிபதி 5ல் இருந்தால் குழந்தைகளால் முன்னேற்றம். உயிர்கல்வி, தந்தை வழி சொத்தை அனுபவித்தல், அரசு பதவி, குலதெய்வ கடாட்சம், அரசு பதவி, ஆலயங்களை உருவாக்குதல் போன்ற பாக்கியங்கள் கிடைக்கப் பெறும்.

    9ம் அதிபதி 9ல் இருந்தால் அதிகமான அதிர்ஷ்டம், ஒழுக்கம், அழகு, தந்தைக்கு தீர்க்கமான ஆயுள், உடன் பிறப்புகளால் இன்பம், தான தர்மம் செய்யும் பாக்கியம், மங்காத புகழ் கிடைக்கும். புண்ணிய பலத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்கள். 9ம் அதிபதி 6,8,12ல் மறையாமல் ஆட்சியோ, உச்சமோ, நட்போ பெற்றிருந்தால் ஜாதகரின் வாழ்நாள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். 9ம் அதிபதி 6ல் இருந்தால் முன்னோர் சொத்தினால் கடன், முன்னோர் சொத்து இழப்பு, எதிரி தொல்லை, புகழுக்கு பங்கம், முன்னேற்ற குறைவு, புத்திர தோஷம் ஏற்படும். 9ம் அதிபதி 8,12ல் இருந்தால் அதிர்ஷ்ட குறைவு, விரையச் செலவு, ஏழ்மை, சொத்து பறி போதல், துரதிர்ஷ்டம் அதிக மாகும். தந்தை மகன் ஒற்றுமை இருக்காது. பலவிதமான துன்பங்களை அனுபவிக்க நேரும்.

    9-ம் அதிபதி நட்சத்திர சாரத்தில் எந்த கிரகமும் இல்லை எனில் ஜாதகருக்கு தான தர்ம குணங்கள் இருக்காது. ஜாதகர் தந்தை மற்றும் தந்தை வழி தந்தை சம்பாதித்த சொத்துக்களை விரையம் செய்வார். சேமிப்பும் சிக்கனமும் இருக்காது. ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருப்பார். கடினமாக உழைத்தாலும் வாழ்வில் பெரிய வெற்றி, முன்னேற்றம் இருக்காது. வாழ்க்கையில் விரக்தியும், வெறுப்பும் உள்ளவராக இருப்பார். பூர்வீகத்தில் வசித்தால் மேன்மை இருக்காது. வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை நன்மை தரும். ஜாதகருக்கு தந்தையின் அன்பு கிடைக்காது. நிம்மதியான உறக்கம் இருக்காது. பெற்றோர்களுக்கு அவப்பெயரை தேடி வைப்பவர். குல கவுரவத்திற்கு பங்கம் ஏற்படுத்துவர். ஜாதகரின் பெற்றோர்கள் தங்கள் இறுதிக் காலம் வரை பெற்ற பாவத்திற்காக படியளப்பார்கள்.

    பெற்றவர்களுக்கு அவரால் எந்த பயனும் இருக்காது. பாரம்பரியத்தை கடைபிடிக்க தவறுவார்கள். முன்னோர்களின் நல்லாசி குறைவுபடும். தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களுடன் சண்டை சச்சரவு மிகுதியாக இருக்கும். இரண்டு திருமணம் உண்டு. சிலர் குடும்பத்தை விட்டு குறுகிய காலம் பிரிந்து வாழ்வார்கள். தலையெழுத்தை மாற்றக்கூடிய ஒன்றா? நிச்சயமாக மாற்றலாம் ஆனால் அதற்குரிய வழி முறையினை உணர்ந்து கடக்க வேண்டும். ஒரு ஜீவனில் உள்ள ஆசைகளே தலையெழுத்திற்கு காரணமாக அமைகிறது. ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானம் பலம் குறைந்து 8-ம் பாவகம் பலம் பெற்றால் இறை பக்தியில் சுயநலம் மிகுதியாக இருக்கும். ஜீவன் தனது ஆசைகளை மறந்து, துறந்து ஞானத்தை அடைவதற்கு பதிலாக இறைவனை சுய நலமாக வழிபடும். இறை ஞானத்தை அடைய முடியாமல் லவுகீக மாயையில் ஆன்மா சிக்கி தலையெழுத்தை அதிகப்படுத்தும்.

    ஆகவே இந்தப் பெரும் பிரச்சினைக்கு தீர்வு தூய பக்தியுடன் தொண்டு, சேவை செய்து பகவானின் திருநாமத்தை உச்சரிக்க தலையெழுத்து மாறும். இந்து தர்ம கோட்பாடுகளை நன்கு பயின்று தலையெழுத்தினை மாற்றிக் கொள்ள முடியும். ஒருவரின் செயல்களே தலையெழுத்தை நிர்ணயிப்பதால் செயல்களைப் பற்றி தெளிவாக அறிதல் தலையெழுத்தை வெல்வதற்கு உதவியாக அமையும்.

    பரிகாரம்

    ஒன்பதாம் பாவகம் என்பது, ஏற்கனவே சேர்த்த கர்மாவின் பலன்களை பாக்கியமாக அனுபவிக்கிறோம் என்பதால் ஒன்பதாமிடம் சுபத் தன்மை பெற்று இருக்க வேண்டும். ஒன்பதாமிடம் அசுபத்தன்மை, பகை, நீசம், அஸ்தங்கம், வக்ரம் பெற்றவர்கள் முன்னோர்களை முறையாக வழிபட வேண்டும்.

    செல்: 98652 20406

    • ரஜினி அரசு வேலையில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டதும் நிறைய மணப்பெண்ணின் ஜாதகங்கள் வந்தன.
    • ரஜினி சில படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினி பெங்களூரில் சிவாஜி ராவ் என்ற பெயரில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தபோது நடந்த சம்பவம் இது....

    ரஜினிக்கு அந்த கண்டக்டர் வேலையை அவரது 2-வது அண்ணன் நாகேஸ்வரராவ் தனது உறவினர் மூலம் பெற்றுக் கொடுத்து இருந்தார். ரஜினிக்கு அரசு வேலை கிடைத்ததும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

    கண்டக்டர் பணியில் அவருக்கு மாதம் 300 ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. தினமும் 1 ரூபாய் பேட்டா வழங்கப்படும் என்றும் பெங்களூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சொன்ன போது ரஜினி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    தனது எதிர்கால வாழ்க்கைக்கு இந்த சம்பளம் போதும் என்று ரஜினி நினைத்தார். அதனால்தான் அவரால் கண்டக்டர் பணியை மிக மிக ஜாலியான மனநிலையில் செய்ய முடிந்தது. 10ஏ பஸ்சில் அவரது கண்டக்டர் பணி புது, புது ஸ்டைல்களுடன் புகழ் பெற்றதாக மாறியது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த ரஜினியின் தந்தை ரனோஜிராவ் தனது மகனுக்கு உரிய வயதில் திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்று நினைத்தார். இதுபற்றி அவர் ரஜினியிடம் சொன்ன போது ரஜினிக்கு சற்று தயக்கம் ஏற்பட்டது. இப்போது என்ன அவசரம் என்று கேட்டார்.

    முதலில் அதை யதார்த்தமாக எடுத்துக் கொண்ட ரனோஜிராவ் அடுத்த சில வாரங்களில் ரஜினிக்கு உடனே பெண் பார்த்து திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ரஜினி தயங்கியபோது, "டேய் இப்போதுதான் அரசாங்க வேலைக்கு போக ஆரம்பித்து விட்டாயே? மாதம் தோறும் உனக்கு பணம் வருகிறது. எனவே தைரியமாக திருமணம் செய்து கொள்" என்றார்.

    அதன் பிறகுதான் ரஜினிக்கு சரி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மனநிலை லேசாக உருவானது. மணப்பெண் தேடட்டுமா? என்று ரனோஜிராவ் கேட்டபோது ரஜினியால் உறுதியான பதிலை சொல்ல முடியவில்லை. இப்போது என்ன அவசரம் என்று மீண்டும் கேட்டார்.

    அதற்கு ரனோஜிராவ் திருமணத்தை எந்த காலத்திலும் தள்ளிப்போடக் கூடாது. அதை உரிய பருவத்தில் செய்து விட வேண்டும். நான் உனக்கு மணப்பெண் தேட ஆரம்பித்து விட்டேன் என்றார்.

    தந்தையிடம் காணப்பட்ட உறுதியை பார்த்த ரஜினி அதன் பிறகு திருமணத்துக்கு மறுப்பு சொல்லவில்லை. இதையடுத்து ரனோஜிராவ், மூத்த அண்ணன் சத்தியநாராயணராவ், இளைய அண்ணன் நாகேஸ்வரராவ் உள்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் ரஜினிக்கு மணப்பெண் தேட ஆரம்பித்து விட்டனர்.

    நிறைய உறவினர்கள், ஜோதிடர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரங்களில் ரனோஜிராவ் தாமாக முன் சென்று ரஜினியின் ஜாதகத்தை கொடுத்து மணமகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார். ரஜினி அரசு வேலையில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டதும் நிறைய மணப்பெண்ணின் ஜாதகங்கள் வந்தன.

    அதில் பெரும்பாலானவற்றை ரனோஜிராவ் கழித்து விட்டார். பல ஜாதகங்கள் இருவருக்கும் பொருத்தம் இல்லை என்று கழிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு பெங்களூர் அருகே ஒரு சிறிய கிராமத்தில் உள்ள பெண்ணின் ஜாதகம் ரஜினி ஜாதகத்துடன் பொருத்தமாக இருந்தது.

    ரனோஜிராவ் அந்த குடும்பம் பற்றி தீவிரமாக விசாரித்தார். அந்த குடும்பத்தினர் தங்களை போலவே கெயிக்வாட் பரம்பரையில் மிக சிறப்பாக வாழ்ந்து இருந்தது தெரிய வந்தது. இதனால் அந்த குடும்பத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம் என்று ரஜினியின் தந்தை ரனோஜிராவுக்கு விருப்பமாக இருந்தது.

    ஆனால் பெங்களூருக்கு அருகே கிராமத்தில் உள்ள பெண்ணை நேரில் திருமணம் செய்வதா? என்று ரஜினிக்கு தீவிர யோசனையாக இருந்தது. அந்த பெண்ணை அவரால் ஏற்கவும் இயலவில்லை. அதே சமயத்தில் புறக்கணிக்கவும் இயலவில்லை. எந்த முடிவும் எடுக்க முடியாமல் மனதுக்குள் தவித்தப்படி மவுனமாக இருந்தார்.

    ஆனால் ரனோஜிராவும், சத்திய நாராயணராவும் விடவில்லை. ரஜினியை வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை பார்க்க அழைத்து சென்றனர். பெண் உனக்கு பிடித்து இருந்தால் திருமணம் ஏற்பாடு செய்யலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம் என்று கூறினார்கள்.

    இதனால் அவர்களுடன் ரஜினி பெண் பார்க்க சென்றார். வழக்கம் போல பெண் பார்க்கும் படலம் நடந்தது. அந்த பெண்ணைப் பார்த்ததும் ரஜினி மனம் பல்டி அடித்து விட்டது. அவர் மனதில் மாற்றம் ஏற்பட்டது. அவருக்கு அந்தப் பெண்ணை உண்மையிலேயே மிகவும் பிடித்து போய் விட்டது.

    அந்த பெண் ரொம்ப குண்டாகவும் இல்லை ஒல்லியாகவும் இல்லை. இளம் வயதுக்குரிய சரியான உடல் அமைப்புடன் இருந்தார். தங்க நிறமாக காணப்பட்டார். முகத்தில் லட்சுமி கடாட்சம் தாண்டவம் ஆடியது. மராத்தியை பூர்வீகமாக கொண்ட கெயிக்வாட் இன பெண்கள் எப்படி இருப்பார்களோ அதே முக களையுடன் காணப்பட்டார்.

    அந்த பெண்ணை பார்த்ததும் ரஜினி அப்படியே சரண்டர் ஆகி விட்டார். பெண்ணின் பெயர் என்ன என்று கேட்கச் சொன்னார். அந்த பெயரை கேட்டதும் ரஜினிக்கு "ஆயிரம் தாமரை மொட்டுக்களே... வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே, இங்கிரண்டு ஜாதி மல்லிகை..." என்ற உணர்வுடன் மனம் குதூகல மானது. அதற்குப் பிறகு அவருக்கு வார்த்தைகள் வரவில்லை. பஸ் புறப்பட டபுள் விசில் கொடுப்பது போல எனக்கு பெண் பிடித்து விட்டது என்று இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.

    இந்த பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என்று ரஜினியால் நேரடியாக தந்தையிடம் சொல்ல இயலவில்லை. வெட்கம் அவரைத் தடுத்தது. எனவே மணப்பெண் வீட்டு முன் அறையில் சகஜமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த தனது 2 அண்ணன்களிடமும் ரஜினி ஜாடைமாடையாக தனது விருப்பத்தை சொன்னார். அவரது மூத்த அண்ணன் சத்திய நாராயணராவிடம் இந்த பெண்ணையே பேசி முடித்து விடலாம் என்றார்.

    அதற்கு சத்தியநாராயண ராவ் சிரித்துக் கொண்டே "சரி அப்பாவிடம் சொல்கிறேன்" என்றார். ரனோஜிராவுக்கு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது. அந்த குடும்பத்திேலயே பெண்ணை பேசி முடித்து விடவேண்டியதுதான் என்று தீர்மானித்தார்.

    என்றாலும் நாகரீகம் கருதி உடனடியாக தனது முடிவை சொல்லாமல் பெங்களூருக்கு சென்றதும் எங்களது முடிவை சொல்லி அனுப்புகிறோம் என்று கூறி விட்டு புறப்பட்டார். ரஜினி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.

    அடுத்த நாளே பெண் பார்க்க சென்ற விஷயத்தை போக்குவரத்து கழக நண்பர்களிடம் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார். அன்றைய தினம் முழுக்க அவர் மனதில் அந்த பெண்தான் ஆக்கிரமித்து இருந்தார். மறுநாளும் அந்த பெண் பற்றிய கனவிலேயே அன்றைய நாள் கழிந்தது.

    3-வது நாள் தங்கள் குடும்பத்து சம்மதத்தை தெரிவிக்க ஏற்பாடு செய்வார்கள் என்று ரஜினி ஆவலோடு இருந்தார். அந்த சமயத்தில் அந்த பெண்ணின் வீட்டில் இருந்து ஒரு மூத்த உறவினர் ஒருவர் வந்தார். அவர் ரனோஜிராவிடம் ரொம்ப தயங்கி... தயங்கி... பேச்சை ஆரம்பித்தார்.

    "பையனை (ரஜினியை) எங்களுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. பெரியவர்கள் எல்லோருக்கும் சம்மதம்தான். ஆனால் பெண் கொஞ்சம் தயங்குகிறாள். அவளுக்கு உங்களையும் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் மிகவும் பிடித்து இருக்கிறது. நீங்கள் நடந்து கொண்ட விதம் அவளுக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது.

    ஆனால் பையனைதான் அவள் வேண்டாம் என்கிறாள். பையன் கறுப்பாக இருப்பதாக சொல்கிறாள், குண்டாக இருப்பதாகவும் நினைக்கிறாள். எனவே வேறு பையனை பாருங்கள் என்று சொல்லி விட்டாள். எங்களால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்" என்றார்.

    அந்த பெரியவர் சொன்னதை பக்கத்து அறையில் இருந்து ரஜினி கேட்டுக் கொண்டிருந்தார். அவரது மனது சுக்குநூறாக உடைந்தது. அந்த சமயத்திலேயே அவர் மனதுக்குள் ஒருவித வைராக்கியம் எழுந்தது.

    திருமணம் செய்தால் நல்ல கலரான, சிவப்பான பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் சபதமே எடுத்துக் கொண்டார். அது அவருக்குள் ஒரு உறுதியான மனநிலையை உருவாக்கி இருந்தது. சில நாட்களிலேயே அவர் மனதை தேற்றிக்கொண்டார்.

    பிறகு கண்டக்டர் பணியில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆனால் இறை அருளால் அவரது வாழ்க்கை பயணம் கண்டக்டர் பணியில் இருந்து கலையுலக பயணத்துக்கு மாறியது. அவர் நினைத்தது போலவே திருமண வாழ்க்கையும் அமைந்தது. அவர் ஆசைப்பட்டது போலவே நல்ல நிறம் கொண்ட லதா அவருக்கு மனைவியாக வாய்த்தார்.

    ஆனால் லதா அவருக்கு மனைவியாக அமைந்தது எல்லாமே தெய்வ செயலால் நடந்தது போலவே இருந்தது. 1980-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு ரஜினி சில படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு படம் தில்லுமுல்லு.

    அந்த படத்துக்கான படப்பிடிப்பு சென்னையில் பிரபல நடிகை சவுகார் ஜானகி வீட்டில் நடந்தது. அங்குதான் ரஜினியும், லதாவும் சந்தித்தனர். ராமனும், சீதையும் முதன் முதலில் ஒருவரை ஒருவர் கண்டபோது ஏற்பட்ட காதல் பார்வையை, "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" என்று கம்பர் மிகச் சிறப்பாக எழுதி இருப்பார். அதே போன்றுதான் ரஜினியும் லதாவும் இருந்தனர். இருவரும் நோக்கினார்கள். உடனே காதல் மலர்ந்தது. அந்த ருசிகரத்தை நாளை பார்க்கலாம்.

    • ஊரு முருங்கைக் காய் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
    • மருத்துவர் அறிவுரை பெற்றே நடைமுறைப்படுத்த வேண்டும்.

    மனித உடலானது பல்வேறு பணிகளை செய்து நமது அன்றாட வாழ்வை நடத்தி வருகிறது. இந்த உடலை இயக்குவதற்கு பல்வேறு உடல் பாகங்கள் பயன்பட்டு வருகின்றன. இந்த உடல் பழுதில்லாமல் சீராக செயல்பட சில உணவுமுறைகள் அவசியமாகும்...

    இதெல்லாம் சாப்பிடுகிறீர்களா...?

    கீரை, தயிர், புரோக்கலி, பூண்டு, பாதாம், இஞ்சி, எலுமிச்சை, காலிபிளவர், குடை மிளகாய், கேரட், தக்காளி, பட்டை இவையெல்லாம் அன்றாட உணவில் சேர்த்தால் தொப்பை குறைய வழி வகுக்கும்.

    சில பழக்கங்கள் உங்கள் குடல் ஆரோக்கியத்தினை அமைதியாகக் கொன்றுவிடும்.

    கருப்பு காபி நல்லதுதான். அதற்காக காலை உணவினைத் தவிர்த்து வெறும் வயிற்றில் கருப்பு காபி குடிப்பது வயிற்றில் ஆசிட் உருவாக்கும். வயிற்றின் உள்ளே அரித்து விடும்.

    கலோரி சத்து குறைந்த, புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டு அதன் பின்னர் கருப்பு காபி குடிக்கலாம்.

    எல்லா எண்ணைகளும் அநேகமாக விதைகளில் எடுக்கப்பட்டது தான். இவை குடலை பாதித்து உடலில் வீக்கத்தினை ஏற்படுத்தும்.

    நெய், ஆலிவ் எண்ணை, தேங்காய் எண்ணையினை அளவாக சேர்த்து கொள்வது நல்லது.

    சர்க்கரை தவிர்க்கப்படலாம். பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். தூக்கம் போதுமான அளவு இல்லாவிட்டால் பாதிப்பிற்கு குறைவே இருக்காது.

    அதிக சுறுசுறுப்பற்ற வாழ்க்கை தற்கொலைக்கு சமம்.

    பப்பாயா: சற்று நகர்புறத்தினைத் தாண்டினால் வீட்டுக்கு வீடு பப்பாயா மரம் பார்க்க முடிகின்றது. பழங்கள் தரையில் கொட்டி கிடக்கின்றன. இதன் அருமையினை இன்னமும் உணராது இருக்கின்றனர்.

    மலச்சிக்கல் நீக்கும். நோய் எதிர்ப்பு சக்திக் கூடும். முகம் பொலிவு பெறும். ஒரு சிறு கப் அளவு அன்றாடம் எடுத்துக் கொள்ளலாமே.

    புரோகலி, கேரட், தக்காளி, வெள்ளரி, அன்னாச்சி நம் ஊரில் கிடைக்கும். இவைகளை அடிக்கடி உணவில் சேர்த்தாலே குடல் நன்கு இருக்கும்.

    நம்ம ஊரு முருங்கைக் காய் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முருங்கை கீரையினை வாங்காத நாடே இல்லை எனலாம். இந்தியாவிற்கு முருங்கை ஒரு பொக்கிஷம். உலக அளவில் 25 சதவீதம் நம் நாட்டில் இருந்துதான் ஏற்றுமதி ஆகிறது என குறிப்பிடப்படுகிறது. இதில் பாலை விட கூடுதலாக நான்கு மடங்கு கால்சியம், 3 மடங்கு அதிக பொட்டாசியம், 2 மடங்கு புரதம் என்று உள்ளது. தினம் இரண்டு கைப்பிடி கீரையினை ஏதாவது பதார்த்தத்தில் சேர்த்தால் போதும். அநேக குறைபாடுகள் நீங்கும்.

    இயற்கை நமக்கு உதவிக் கொண்டேதான் இருக்கிறது

    * மூட்டுகள் பலம் பெற அடிக்கடி சிலதுண்டுகள் அன்னாச்சி பழம் எடுத்துக் கொள்ளலாம்.

    * கண் என்றாலே கேரட் என்று குழந்தை கூட சொல்லிவிடும்.

    * ரத்த சோகைக்கு மாதுளை பழம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * கணையம் பலம் பெற சில வேக வைத்த சர்க்கரை வள்ளி துண்டுகளை எடுத்து வரலாம்.

    * இருதய பலம் பெற மருத்துவர் அறிவுரை பெற்று தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வயிற்றில், அஜீரணமா? உப்பிசமா? நமக்குதான் இஞ்சி இருக்கே.

    * மூளை சிறப்பாய் இயங்க 3.4 வால்நட் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.

    * கல்லீரல் சீர்பட-100 மில்லி பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

    * நுரையீரல் உறுதிக்கு கருப்பு திராட்சை உதவும்.

    சில உறுப்புகளுக்கு பிடிக்காத உணவுகள்

    கல்லீரல்: மது, புகை கூடவே கூடாது.

    இருதயம்: உடல் பருமன், கெட்ட கொழுப்புகளை நீக்கிவிட வேண்டும்.

    சிறுநீரகம்: உப்பு அதிகம் கூடாது. ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், நொறுக்குத் தீனி இவைகளை தவிர்த்து விடுங்கள்.

    குடல்: பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துவிடலாம். சர்க்கரை உணவுகள் வேண்டாம்.

    கணையம்: சர்க்கரை உணவுகளுக்கு 'நோ'

    நுரையீரல்: வறுத்த, பொரித்த உணவுகள் வேண்டாம்.

    கமலி ஸ்ரீபால்


     

    எதை தவிர்ப்பது, எதை எடுத்துக் கொள்வது? விகிதாசார உணவு என்று சொல்லப்படுகின்றது. பல உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தும் எல்லோருக்கும் ஒத்துக் கொள்கின்றது என்ற கூற முடியாது. குறிப்பாக சில உடல்நல, குடல் நல கோளாறுகள் இருக்கும்போது சில உணவுகள் வயிறு உப்பிசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, காற்று, ஒவ்வாமை, பசியின்மை, வயிற்று வலி என பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதில் சில உணவுகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

    பால்-பால் சார்ந்த உணவுகள்

    சிலருக்கு ஒவ்வாமையினை ஏற்படுத்தலாம். உணவை செரிக்க இயலாதபோது மேற்கூறிய அறிகுறிகள் ஏற்படலாம். ஆராக்கியமான உணவுப் பாதையில் சிறு குடல் லக்டேஸ் என்ற என்சைமை உருவாக்கி லக்டோஸ் சர்க்கரையினை உடைத்து செரிமானத்திற்கு உதவுகின்றது. சிலருக்கு இந்த லக்டோஸ் உடலில் உறிஞ்சப்படாமல் பெருங்குடலுக்கு செல்கின்றது. அங்குள்ள பாக்டீரியாவால் இது உடைபட்டு காற்று உருவாகின்றது. பிறகு காற்று, உப்பிசம், வலி, வயிற்றுப் போக்கு என வெளியேறுகின்றது.

    பால்-பால் சார்ந்த உணவுகள் எலும்பின் பலத்திற்கு கால்சியம், வைட்டமின் டி என தந்து உதவுபவை. புரதச்சத்து கொண்டவை. எனவே டாக்டர் அவரவர் உடல்நிலைக்கேற்ப இதன் அளவை குறைத்து கொடுக்க முயற்சிப்பார். சிலருக்கு தயிர் ஒத்துக் கொள்ளும். இருப்பினும் மருத்துவர் ஆலோசனை பெற்று செயல்படுவது ஆரோக்கியம் அளிக்கும்.

    பொரித்த உணவுகள், அதிக கொழுப்பு உள்ள உணவுகள்

    * கொழுப்பு உணவு அதிக நேரம் வயிற்றில் தங்கி ஆசிட்டை அதிகப்படுத்தி வலி, எரிச்சல், எதிர்ப்பு போன்ற பிரச்சினைகளை உருவாக்கும். வயிறு உப்பிசம், காற்று உருவாகும். கடும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம்.

    * இவ்வகை உணவுகளுக்குப் பதிலாக குறைந்த கொழுப்புடைய அசைவ உணவுகள், கிரில், பேக்கிங் முறையில் சமைக்கலாம். கொட்டை வகை, விதை வகை, ஆலிவ் எண்ணை இவற்றினை அளவாக சேர்க்கலாம். மீன் உணவு எடுத்துக் கொள்ளலாம்.

    * சிலருக்கு முட்டைகோஸ், புரோகலி, முள்ளங்கி போன்றவை ஒத்துக்கொள்ளாது. இவை நல்ல நார்சத்து, வைட்டமின்கள் கொண்டவை. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை.

    * பொதுவில் இதனை அடியோடு நீக்காமல் அளவு குறைத்து நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம்.

    * சிலருக்கு உப்பு சேர்த்த ஸ்நாக்ஸ், சிப்ஸ் போன்றவையும் கேக், குக்கிஸ், துரித உணவுகள், குளிர் பானங்கள் இவை ஒத்துக் கொள்ளாது. பல பிரச்சினைகளை தரும். உண்மையில் இவைகளை அடியோடு நீக்கி விடுவது நல்லது.

    * பழங்கள், காய்கறிகள், முழு தானிய உணவுகள், நார்சத்து உணவுகளே நல்லது. தீர்வும் ஆகும்.

    பருப்பு வகைகள்

    சிலருக்கு பருப்பு கலந்த உணவு உடனடியாக வயிறு உப்பிசம் கொடுக்கும். செரிக்காது. அவைகளின் அதிக நார்சத்து, ஒலிகோ சாக்கரைட் என்ற ஒருவித கார்போஹைடிரேட் செரிமானத்தை கடினமாக்குகின்றது. அதிலும் ஏற்கனவே ெசரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு கூடுதல் படுத்துகின்றது. ஆகவே தான் நம் முன்னோர்கள் சரியான அளவிலேயே பருப்பினை சேர்த்த உணவினைத் தயாரித்தார்கள்.

    சோயா, கடலைப் பருப்பு வகைகளை குறைத்துக் கொள்ளலாம். அல்லது தவிர்க்கலாம். பயத்தம் பருப்பு பயன்படுத்தலாம். இட்லி அநேகருக்கு நன்கு ஒத்துக் கொள்கின்றது.

    * காபி, டீ போன்றவை பலருக்கு அசிடிடி பிரச்சினையை ஏற்படுத்தும். இவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று புரதசத்து, திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

    * காரசாரமான மசாலா உணவு ஏற்படுத்தும் பிரச்சினைகளை அநேகர் அறிவர். புதினா, கொத்தமல்லி, சீரகம், சோம்பு, அன்னாசி பூ, பட்டை, ஏலக்காய், இஞ்சி இைவ குடல் ஆரோக் கியத்திற்கு நன்கு உதவும்.

    மது, புகை இவை ஒத்துக் கொள்ளவில்லை என்று கவலைப்பட வேண்டாம். அடியோடு ஒதுக்கி விடலாமே. எதனையும் மருத்துவர் அறிவுரை பெற்றே நடைமுறைப்படுத்த வேண்டும்.

    வாழ்க்கை கற்று தரும் பாடங்கள்

    வாழ்க்கையே பாடம்தான். இதனை மற்றவர் அனுபவங்கள் மூலமும் நம் அனுபவம் மூலமும் கற்றுக் கொண்டுதான் இருக்கின்றோம். நான் படித்த சிலரின் அனுபவ பாடங்களை உங்கள் முன் பகிர்ந்து கொள்கிறேன்.

    * வாழ்க்கை ஒன்றும் ஆஹா, ஓஹோ என்று இல்லை. இருப்பினும் அநேகர் சொல்வது பரவாயில்லை. ஓடுது என்பதுதான்.

    * சந்தேகமா இருக்கா! அடுத்த நகர்வை சற்று கம்மியா நிதானமா செய்யுங்க.

    * முதுமை வரும் பொழுதுதான் தெரியும். வாழ்க்கை எவ்வளவு சிறியது என்று. இதில் மற்றவரை வெறுப்பதிலேயே காலத்தினை வீணடிக்க வேண்டாம்.

    * உலகில் யாருக்கும் உங்களைப் பற்றி மட்டுமே பேசவும், நினைக்கவும் நேரம் கிடையாது. ஆகவே வாழ்வினை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    * எல்லா வாக்குவாதங்களிலும் நீங்களே ஜெயித்தவராக இருக்க முடியாது. உங்கள் ஒப்புதல் இன்மையைக் கூறினாலே போதும்.

    * அந்தந்த மாத செலவுகளை அந்த மாதமே முடித்து விட வேண்டும்.

    * ஓய்வு கால தேவைக்காக சம்பாதிக்க ஆரம்பித்த முதல் மாதத்தில் இருந்து ஆரம்பித்து விடுவீர்கள்.

    * கடந்த கால வலிகளோடு அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதை வைத்து நிகழ் காலத்தினை குழப்பிக் கொள்ள வேண்டாமே.

    * பிறரோடு உங்களை ஒப்பிட வேண்டாம். அவர்கள் என்னவெல்லாம் கஷ்டப்படுகின்றார்கள் என்பது யாருக்குத் தெரியும்.

    * வாழுவதற்காக பிசியாகுங்கள்.

    * உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.

    * அதிகம் மனதில், வாழ்க்கையில் வலி ஏற்படுத்தியவர்களைக் கூட மனதார மன்னிக்க முயற்சி செய்யுங்கள்.

    * அதிசயங்கள் நடக்கலாம். நம்புங்கள். மூழ்கி விடாதீர்கள்.

    * காலம் எல்லாவற்றினையும் ஆற்றும்.

    * முதுமை வரும் பொழுது நாமே நம் வேலைகளை செய்து கொள்ள ஆசைப்படுகின்றனர்.

    * கேட்டால் மட்டுமே கிடைக்கின்றன.

    • தமிழகத்தில் உள்ள பெரிய பட நிறுவனங்கள் மட்டுமே ரஜினி அருகில் செல்ல முடிந்தது.
    • ரஜினியின் இந்த முடிவு தமிழ் திரை உலகையே மிரள வைத்தது.

    எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், முடிவு எடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு 3 அம்சங்கள் முக்கியமாக இருக்க வேண்டும். ஒன்று தெளிந்த மனம். மற்றொன்று நிதானம். மூன்றாவது ஆழ்ந்த நம்பிக்கை.

    இந்த மூன்று குணமும் ஒருமித்த நிலைக்கு வரும்போது அதிரடி முடிவுகளை கூட அனாசயமாக அரை நொடியில் எடுத்து விட முடியும். நமது வேத நூல்களும், புராணங்களும் இதுபற்றி ஏராளம் கூறி உள்ளன.

    மகாபாரதத்தை யார் ஒருவர் ஆழ்ந்து படித்து, சிந்தித்துப் பார்த்து இருக்கிறாரோ, அவருக்கு அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றியும், அந்த கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகள் பற்றியும் நிச்சயமாக தெரிந்து இருக்கும். ஒரு வரியில் சொல்வது என்றால் பற்றும், பாசமும் முடிவு எடுக்கும் திறனுக்கு எதிரானது என்பது மகாபாரதத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும்.

    அதோடு எந்த இடத்தில் எப்படி முடிவு எடுக்க வேண்டும்? எந்த இடத்தில் எப்படி முடிவு எடுக்கக் கூடாது என்பதையும் மகா பாரதம் நமக்கு காட்டுகிறது. துரியோதனன் செய்த தவறுகளை தடுக்க அவனது தந்தை திரிதராஷ்டிரன் முடிவு எடுக்காமல் பாசத்தில் கிடந்தான். அதுவே அவனது வம்சம் அழிய அடிப்படையாக இருந்தது.

    குந்திக்கு குழந்தை பிறந்ததை கேட்டதும் காந்தாரி ஆத்திரத்தில் முடிவுகள் எடுத்தாள். இதனால் அவளுக்கு பிறந்த கவுரவர்களான 100 குழந்தைகளும் வெறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்ந்தனர்.

    பீஷ்மர் பதட்டத்தில் முடிவுகள் எடுத்து அவஸ்தைப்பட்டார். சகுனி எடுத்த முடிவுகள் துரியோதனனை வீழ்ச்சிக்கு கொண்டு சென்றது.

    நல்ல முடிவு என்பது மற்றவர்கள் தலையீடு இல்லாமல், குழப்பமான மனநிலையில் இல்லாமல் இருக்கும் போது தான் கிடைக்கும். எனவே எந்த ஒரு விஷயத்திலும் நாம் உணர்வுப்பூர்வமாக முடிவு எடுக்கறோமா, அறிவுப்பூர்வமாக முடிவு எடுக்கிறோமா என்பதுதான் முக்கியமானது.

    சூப்பர் ஸ்டார் ரஜினி இதெல்லாம் தெரியாதவரா? சிறு வயதிலேயே அவர் தாயாரிடம் அதிகம் கேட்டது மகாபாரத கதைகள்தான். ராமகிருஷ்ணா மடம் பள்ளியில் படித்த போதும் அவருக்குள் மகாபாரத நிகழ்வுகள் ஆழமாக பதியவைக்கப்பட்டன.

    அதன் பலனாகத்தான் 1979-ம் ஆண்டு கமலுடன் சேர்ந்து நடிக்காமல் இனி தனியாக நடிக்க வேண்டும் என்ற முடிவை அவரால் முழு மனதுடன் எடுக்க முடிந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டு மற்றவர்களை திடீரென தாக்கிய பிறகு அடுத்த சில நிமிடங்களில் அமைதி பெற்று இயல்பு நிலைக்கு திரும்பியதும் சில நல்ல முடிவுகளை அவரால் தன்னிச்சையாக எடுக்க முடிந்தது.

    1980-ம் ஆண்டு மனநல பாதிப்பு சுவடே இல்லாமல் புது மனிதனாக அவர் இயங்கத் தொடங்கிய போது அதிரடியாக மற்றொரு முடிவை எடுத்தார். அது.... தன்னை நாடி வந்த நூற்றுக்கணக்கான படத் தயாரிப்பாளர்களை சிறப்பாக கையாண்ட விதம்தான். பெரும்பாலான படத் தயாரிப்பாளர்கள், ரஜினி எவ்வளவு பணம் கேட்டாலும் கொட்டி கொடுக்கத் தயாராக இருந்தனர்.

    "நீங்கள் நடிப்பதாக தேதி கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும், மற்ற விஷயங்கள் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்றனர். அத்தகைய படத் தயாரிப்பாளர்களை ரஜினி கண்ணை மூடிக் கொண்டு நிராகரித்தார்.

    தன்னையும், தனது பெயரையும் மூலதனமாக வைத்துக் கொண்டு லட்சம், லட்சமாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் தன்னைச் சுற்றி வருகிறார்கள் என்பதை ரஜினி புரிந்து கொண்டார். அதோடு புதிய தயாரிப்பாளர்கள் எவ்வளவு வசதியுடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு படத்தை குறித்த காலத்தில் வெளியிட செய்யும் திறன் இருக்குமா? என்ற சந்தேகமும் ரஜினிக்குள் எழுந்தது.

    இதையடுத்து அவர் புதிய பட அதிபர்களை ஒட்டு மொத்தமாக நிராகரித்து அதிரடி முடிவு எடுத்தார். ரஜினி எடுத்த இந்த முடிவை அறிந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், நாகேஷ், சிவக்குமார் உள்பட திரையுலக பிரமுகர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதோடு தமிழ் திரை உலகிலும் பரபரப்பு ஏற்பட்டது.

    அடுத்து ரஜினி இன்னொரு முடிவு எடுத்தார். இனி கைவசம் 10 படங்கள், 12 படங்கள் என்று வைத்திருக்கக் கூடாது. நிம்மதி இல்லாமல் போய் விடும். எனவே மூன்று அல்லது நான்கு படங்களை மட்டுமே கைவசம் வைத்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

    இதைத் தொடர்ந்து ரஜினி எடுத்த அடுத்த முடிவு மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்தது. அதாவது தனக்கான சம்பளத்தை தானே நிர்ணயிக்க வேண்டும் என்ற முடிவாகும். படங்களில் நடிக்க தனக்குரிய சம்பளத்தை வேறு ஒருவர் முடிவு செய்யக்கூடாது என்பதில் அவர் உறுதியான மன நிலைக்கு வந்தார்.

    ரஜினி எடுத்த இந்த புதிய முடிவுகளால் அவரைத் தேடி வரும் படத் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை சல்லடை போட்டு சலித்து எடுத்து விட்டது போல குறைந்தது. தன்னை கதாநாயகனாக முன் நிறுத்தி, படம் எடுத்து, அந்த படத்தை வெற்றி பெற செய்கிற தகுதியும், திறமையும் யாருக்கு உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுப்பது என்று முடிவு செய்தார்.

    1980-ல் அவரது செயல்பாடுகள் அனைத்தும் அத்தகைய படத் தயாரிப்பாளர்கள் யார்-யார் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்வதிலேயே இருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரிய பட நிறுவனங்கள் மட்டுமே ரஜினி அருகில் செல்ல முடிந்தது.

    ரஜினியும் அதைத்தான் எதிர் பார்த்து காத்திருந்தார். தனக்கு எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்காத கோடீஸ்வர முதலாளிகளுக்கே இனி தன் கால்ஷீட் தரப்படும் என்று துணிச்சலாக வெளிப்படையாக அறிவித்தார்.

    ரஜினியின் இந்த முடிவு தமிழ் திரை உலகையே மிரள வைத்தது. இந்த முடிவால் ரஜினியிடம் இருந்து வந்த மன அழுத்தம் கணிசமான அளவுக்குக் குறைந்தது. பில்லாவின் இமாலய வெற்றிக்குப் பிறகு வந்த தேவர் பிலிம்சின் அன்புக்கு நான் அடிமை படம் சுமாராக ஓடியது.

    அதன் பிறகு மகேந்திரன் இயக்கத்தில் "ஜானி" என்ற படத்தில் ரஜினி நடித்தார். இந்த படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். கதாநாயகியாக ஸ்ரீதேவி நடித்தார். ரஜினியும், ஸ்ரீதேவியும் போட்டி போட்டு நடித்தனர். இந்த படம் தயாரிப்பில் இருந்த போது, ரஜினியும் ஸ்ரீதேவியும் காதலிப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றெல்லாம் கிசுகிசுக்கள் பரவியது.

    இதுகுறித்து டைரக்டர் மகேந்திரன் தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் அழகாக குறிப்பிட்டிருந்தார். அந்த பேட்டி வருமாறு:-

    ரஜினி புகழின் உச்சத்துக்கு வந்து கொண்டிருந்தபோது ஒரு நடிகையை விரும்பினார். அதுபற்றி என்னிடம் கருத்து கேட்டார். நானும் அந்த நடிகை உங்கள் மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். ஆனால் அந்த நடிகை வீட்டின் கிரகபிரவேசத்துக்கு சென்று இருந்த நேரத்தில் திருமண பேச்சை தொடங்கலாம் என்று நினைத்தபோது மின்சாரம் போய் விட்டது. இதனால் அவர் அந்த நடிகையை திருமணம் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்வுக்கு பிறகு தனது தத்து தாய் ரெஜினாவிடமும் ரஜினி கருத்து கேட்டார். ஆனால் அவரோ "உன் விருப்பப்படி செய்" என்று சொன்னார். இதனால் திரையுலகில் தன்னை விரும்பிய நடிகையை ரஜினி திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்து மாறினார். இந்தக்கால கட்டத்தில் அவர் நடித்து வெளியான "எல்லாம் உன் கைராசி" படம் வெற்றி பெறவில்லை.

    ஆனால் அதற்கு பிறகு வந்த "பொல்லாதவன்" 100 நாட்கள் ஓடியது. அதன் பிறகு ஏ.வி.எம். தயாரிப்பில் வெளிவந்த "முரட்டுக் காளை" 150 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அந்த படத்தில் ரஜினி கதாநாயகனாகவும், ஜெய்சங்கர் வில்லனாகவும் நடித்து இருந்தனர். முரட்டுக்காளை படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் ஜெய்சங்கர் காலில் விழுந்து ரஜினி ஆசி பெற்றது பரபரப்பாக பேசப்பட்டது.

    ரஜினிக்கு ஜோடிக்கு ரதி நடித்தார். இந்த படத்தில்தான் ரஜினியுடன் ஒய்.ஜி.மகேந்திரனும் சேர்ந்து நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றி ஏ.வி.எம். நிறுவனத்துக்கு மிகப்பெரிய பலனை கொடுத்தது. இதனால் பட அதிபர் ஏ.வி.எம். சரவணன் ரஜினியை புகழ்ந்து பேசினார்.

    அவர் கூறுகையில், "ரஜினி எதையும் வெளிப்படையாக பேசுபவர். கஷ்டப்பட்ட காலத்தில் சிறு பொய் கூட அவர் சொன்னது கிடையாது. வசதி வந்த பிறகும் அவர் பொய் பேசாமல் வாழ்ந்தார். அடுத்தவர் மனம் நோகும்படி நடக்கக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார்.

    முரட்டுக்காளை படத்தில் ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்ட போது ரஜினி அவரிடம் மிக மிக பணிவாக நடந்து கொண்டார். 150 படங்களில் கதாநாயனாக நடித்த ஜெய்சங்கருக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். படத்தின் விளம்பரங்களில் அவருக்குரிய முக்கியத்துவத்தை கொஞ்சமும் குறைத்து விடாதீர்கள் என்று பல தடவை கூறினார். இது ஒன்றே ரஜினியின் சிறந்த குணத்துக்கு உதாரணம்" என்றார்.

    முரட்டுகாளை படம் வெற்றி ரஜினிக்கு புதிய அந்தஸ்தை கொடுத்து இருந்தது. அப்போது அவருக்கு வயது 30. அவருக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கஷ்டப்பட்ட காலத்தில் தன்னை ஒரு பெண், "இவர் கறுப்பாக இருக்கிறார். இந்த மாப்பிள்ளை வேண்டாம்" என்று சொன்னது அவர் மனதுக்குள் மீண்டும் மீண்டும் வந்து போனது.

    எனவே நல்ல சிவப்பான பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். ரஜினியை நிராகரித்த பெண் பற்றிய ருசிகர தகவல்களை நாளை பார்க்கலாம்.

    • பில்லா படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் அவரது யதார்த்தமான நிலையையும் ரசிகர்களுக்கு காட்டியது.
    • சில கன்னட புத்தகங்களை இன்றும் கூட அவர் மனம் திறந்து பேசுவது உண்டு.

    சூப்பர் ஸ்டார் ரஜினி மீது கவிஞர் கண்ணதாசனுக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது. ரஜினியின் வாழ்க்கையையும், குணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அவர் பாடல்கள் எழுதினார். இதனால் அவர் மீது ரஜினியும் மிகுந்த பாசம் வைத்து இருந்தார்.

    1975-ம் ஆண்டு ரஜினி நடித்த முதல் படமான "அபூர்வ ராகங்கள்" படத்தில் கண்ணதாசன் எழுதிய "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துக்குள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்-வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்" என்ற பாடலில் அந்த படத்தின் மொத்த கதையையும் சொல்லி இருந்தார்.

    இந்த பாடலை கேட்டு அர்த்தத்தை தெரிந்துக் கொண்ட ரஜினி பிரமித்துப் போனார். கவிஞர் கண்ணதாசனை பிரமிப்பாக பார்த்தார். அதன் பிறகு கண்ணதாசனின் ஒவ்வொரு வரிகளையும் ரஜினி கூர்மையாக கவனித்து அதை தன் மனதுக்குள் வாங்கிக் கொண்டார். கண்ணதாசனையும் அடிக்கடி சந்தித்து பேச தொடங்கினார்.

    அந்தக் காலகட்டத்தில் கண்ணதாசன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டே "ராணி" வார இதழ் உள்பட 7 வார இதழ்களுக்கு 7 நாட்களுக்கு 7 விதமான தொடர்கதைகளையும் எழுதி வந்தார். இதை அறிந்த ரஜினி ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போனார்.

    கண்ணதாசனின் எழுத்துக்களை தேடி தேடி படித்தார். அர்த்தமுள்ள இந்து மதம் அவரை மிகவும் உருக வைத்தது. இந்த சமயத்தில் பஞ்சு அருணாசலமும் ரஜினிக்கு நிறைய பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரும் ரஜினிக்கு ஏற்ப வரிகளை தனது பாடல்களில் கொண்டு வந்தார்.

    1977-ம் ஆண்டு வெளியான "புவனா ஒரு கேள்விக்குறி" படத்தில் இடம் பெற்ற "ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுகிறேன் நாளும்" பாடல் ரஜினிக்காகவே பஞ்சு அருணாசலம் எழுதியது போல் இருந்தது.

    1978-ம் ஆண்டு வெளியான "முள்ளும் மலரும்" படத்தில் "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்" பாடல் தேசிய விருது பெற்றது. அந்த படத்தில் கங்கைஅமரன் எழுதிய "ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை" என்ற பாடல் ரஜினியின் குணத்தை நூறு சதவீதம் பிரதிபலித்தது. இந்த பாடல் அந்தக்கால கட்டத்தில் அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    "தப்பு தாளங்கள்" படத்தில் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல், "அட என்னடா பொல்லாத வாழ்க்கை இதுக்குப்போய் அலட்டிக்கலாமா" என்று தொடங்கும். இந்த பாடலை ரஜினி வரிக்கு வரி ரசித்தார். அந்த பாடலின் கடைசி சரணத்தில் "நான் செய்தேன் தப்புத்தண்டா வேற வழி ஏதும் உண்டா ஊருக்குள்ளே யோக்கியனை கண்டா ஓடிப் போயி என்னிடம் கொண்டா" என்று எழுதி இருப்பார். இந்த வரிகள் ரஜினியே மனம் திறந்து சொன்னது போல அவரது ரசிகர்கள் ரசித்தனர்.

    1979-ம் ஆண்டு வெளியான "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் கண்ணதாசன் எழுதிய "சம்போ சிவ சம்போ" என்று தொடங்கும் பாடலை இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனே ரஜினிக்காக பாடி இருந்தார். அந்த பாடலில் "அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள். போனார்கள். தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு. அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே" என்ற வரிகள் வரும்.

    இந்த வரிகளை ரஜினி திரும்ப... திரும்ப... பல தடவை சொல்லிக் கொண்டே இருந்தார். கண்ணதாசனிடமே அவர், "இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுசார். இதுதான் நான். இதுதான் என் வாழ்க்கை என்பது போல இந்த பாட்டு இருக்கிறது" என்று கூறினார். எந்த அளவுக்கு அவர் மனதுக்குள் ஆன்மீகத்தை வைத்து இருந்தாரோ அதே அளவுக்கு மனதை சுதந்திரமாக சமநிலையில் வைத்து இருந்தார். அதனால்தான் அவருக்கு இந்த பாட்டு பிடித்து இருந்ததாக அந்தக் காலகட்டத்தில் பலரும் கூறினார்கள்.

    இதற்கு பிறகுதான் ரஜினியின் உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டு இருந்தது. அவரை மேம்படுத்தும் வகையில் பில்லா படம் அமைந்தது. அந்த படத்தில் இடம் பெற்ற 2 பாடல்கள் ரஜினியின் வாழ்க்கையை பிரதிபலிப்பது போல கவிஞர் கண்ணதாசன் வரிகளை அமைத்து இருந்தார்.

    அதில் ஒரு பாடல் வருமாறு:-

    நாட்டுக்குள்ள எனக்கொரு ஊருண்டு

    ஊருக்குள்ள எனக்கொரு பேருண்டு

    என்னைப் பத்தி ஆயிரம் பேரு

    என்னென்ன சொன்னாங்க

    இப்பென்ன செய்வாங்க

    நாலு படி மேலே போனா

    நல்லவனை விடமாட்டாங்க

    பாடுபட்டு பேரை சேர்த்தா

    பல கதைகள் சொல்லுவாங்க

    யாரு சொல்லி என்ன பண்ண

    நானும் இப்ப நல்லாயிருக்கேன்

    உங்களுக்கும் இப்ப சொன்னேன்

    பின்னால பார்க்காத

    முன்னேறு முன்னேறு

    ஆளுக்கொரு நேரமுண்டு

    அவுகவுக காலமுண்டு

    ஆயிரம்தான் செஞ்சாக்கூட

    ஆகும்போது ஆகுமண்ணே

    மூடனுக்கும் யோகம் வந்தா

    மூணுலகம் வணக்கம் போடும்

    நம்பிக்கையை மனசுல வச்சு

    பின்னால பார்க்காத முன்னேறு முன்னேறு

    -இந்த பாடல் ரஜினி குணமாகி மீண்டு விட்டதை உறுதிப்படுத்தியது போல் அமைந்தது.

    பில்லா படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் அவரது யதார்த்தமான நிலையையும் ரசிகர்களுக்கு காட்டியது. அந்த பாடல்....

    மை நேம் இஸ் பில்லா...

    வாழ்க்கை எல்லாம்...

    மை நேம் இஸ் பில்லா

    வாழ்க்கை எல்லாம்

    நானும் பாக்காத ஆளில்லே

    போகாத ஊரில்லே அய்யா

    நல்ல நண்பன் இல்லை என்றால்

    எங்கு போனாலும் விட மாட்டேன்

    நானாகத் தொட மாட்டேன்

    அய்யா... ஹா... ஹோ

    ஆ... பூப் போன்ற பெண்ணோடு ஆட்டம்

    ஆனாலும் சிலர் மீது நோட்டம்

    என் வாழ்க்கை அழகான தோட்டம்

    இன்பங்கள் என்றாலே நாட்டம்

    பொன்னோடும் பொருளோடும்

    எப்போதும் நண்பர்கள் கூட்டம்

    என் மீது பாய்வோர்கள்

    யாராக இருந்தாலும் ஓட்டம்

    பொன்னோடும் பொருளோடும்

    எப்போதும் நண்பர்கள் கூட்டம்

    என் மீது பாய்வோர்கள்

    யாராக இருந்தாலும் ஓட்டம்

    நீரோட்டம் போல் எந்தன் ஆசை

    தேரோட்டம் போல் எந்தன் வாழ்க்கை

    ஹா... போராட்டம் இல்லாத பாதை

    எல்லாமே சுகமான போதை

    நான் கொண்டு வந்தேனா

    நீ கொண்டு வந்தாயா செல்வம்

    ஹ ஹ ஹ

    நாளென்ன பொழுதென்ன

    நாள்தோறும் விளையாடி வாழ்வோம்

    நான் கொண்டு வந்தேனா

    நீ கொண்டு வந்தாயா செல்வம்

    நாளென்ன பொழுதென்ன

    நாள்தோறும் விளையாடி வாழ்வோம்

    மை நேம் இஸ் பில்லா

    வாழ்க்கை எல்லாம்

    நானும் பாக்காத ஆளில்லே

    போகாத ஊரில்லே அய்யா

    நல்ல நண்பன் இல்லை என்றால்

    எங்கு போனாலும் விட மாட்டேன்

    நானாகத் தொட மாட்டேன் அய்யா...

    -இந்த பாடல் பட்டித்தொட்டி எங்கும் முழங்கி ரஜினியின் அந்தஸ்தை மேலும் உயர்த்தியது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக "ஆறிலிருந்து அறுபதுவரை" பட வெற்றி விழாவில் கண்ணதாசனின் கால்களில் விழுந்து ரஜினி ஆசி பெற்றுக் கொண்டார்.

    1981-ம் ஆண்டு கண்ணதாசன் மறையும் வரை ரஜினிக்காக அவர் மேலும் சில பாடல்கள் தனித்துவமாக எழுதியது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் சினிமா வாழ்க்கை முடிந்துப் போனது என்று கூறப்பட்ட சூழலில் அவர் மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததற்கு கண்ணதாசனின் பாடல்கள்தான் அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.

    கண்ணதாசனின் எழுத்துக்களை வரிக்குவரி ரசித்த ரஜினி அவர் கொடுத்த உற்சாகம் காரணமாக தமிழில் வெளியாகி உள்ள பல புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தார். ரஜினிக்கு ஏற்கனவே புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதற்கு காரணம் சிறு வயதில் பெங்களூர் ராமகிருஷ்ணா மடம் பள்ளியில் அவருக்குள் விதைக்கப்பட்ட விதை என்றே சொல்லலாம்.

    அவர் இளைஞராகி கண்டக்டராக பணிக்கு சேர்ந்த பிறகும் சினிமாவுக்கு வந்த பிறகும் அவரது படிக்கும் ஆர்வம் கொஞ்சமும் குறையவில்லை. பெங்களூரில் இருந்தவரை அவர் கன்னடத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கி படிக்க தவறியது இல்லை. சில கன்னட புத்தகங்களை இன்றும் கூட அவர் மனம் திறந்து பேசுவது உண்டு.

    சென்னைக்கு வந்து தமிழில் பேசவும், படிக்கவும் கற்றுக்கொண்ட பிறகு ரஜினி நிறைய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்க தொடங்கினார். ஜெயகாந்தன், ரா.கி. ரங்கராஜன், கண்ணதாசன், அகிலன் எழுதிய கதைகளை விரும்பி படித்தார். கல்கியை தனது குரு என்றே அவர் சொல்வார். அந்த அளவுக்கு தமிழ் நாவல்களை விரும்பி படித்துள்ளார்.

    ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகம் எழுதினால் அது தெளிந்த நீரோடையாக வாசகர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் சிறப்பாக அமைய வேண்டும் என்று ரஜினி பல மேடைகளில் பேசியது உண்டு. அவரது அந்த எதிர்பார்ப்பு தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் மூலம் அவருக்கு நிறையவே கிடைத்தது.

    இதன் காரணமாக ரஜினிக்குள் முடிவு எடுக்கும் திறமை உருவானது. அந்த திறமை ரஜினியின் வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு போகும் வகையில் அதிரடியாக மாற்றியது. அதுபற்றி நாளை பார்க்கலாம்.

    • டெல்லியில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி இருந்தது.
    • எல்லா தியேட்டர்களிலும் நல்ல லாபம் கிடைத்தது.

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கையில் 1979-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரையிலான 5 மாதம் அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக மாறியது. டைரக்டர் பாலச்சந்தர் குறிப்பிட்டது போல அதை ரஜினியின் இருண்ட காலம் என்றே இப்போதும் சொல்கிறார்கள். ஆனால் அந்த இருண்ட நாட்களில் வாழ்க்கையின் யதார்த்தங்கள் அனைத்தையும் ரஜினி முழுமையாக உணர்ந்தார்.

    அதனால்தான் ஜூன் மாதம் அவர் முழுமையாக குணம் அடைந்ததும் ஜூலையில் இருந்து அவரது செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் சிறப்பான மாற்றங்கள் ஏற்பட தொடங்கின. இதன் காரணமாக 1980-ம் ஆண்டு ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.

    அந்த ஆண்டு அவர் பில்லா (26.1.1980), ராம் ராபர்ட் ரகீம் (தெலுங்கு 31.5.1980), அன்புக்கு நான் அடிமை (4.6.1980), காளி (3.7.1980), மாயதாரி கிருஷ்ணடு (தெலுங்கு 19.7.1980), நான் போட்ட சவால் (7.8.1980), ஜானி (15.8.1980), காளி (தெலுங்கு 19.9.1980), எல்லாம் உன் கைராசி (9.10.1980), பொல்லாதவன் (6.11.1980), முரட்டுக்காளை (20.12.1980) ஆகிய 11 படங்களில் நடித்தார். 1979-ல் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரஜினி தனக்கு ஏற்பட்ட பக்குவம் காரணமாக படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கி இருந்தார்.

    இதனால் 1980-ல் அவர் நடித்த படங்கள் எல்லாம் அனைத்து தியேட்டர்களிலும் ஓகோ... ஓகோ என்று ஓடியது. அந்த ஆண்டின் தொடக்கமே ரஜினிக்கு பூத்து குலுங்குவதாக அமைந்தது.

    அதற்கு காரணம் நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜி. அவருக்கு ரஜினியை வைத்து ஒரு உண்மை கதையை படமாக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அந்தக் கால கட்டத்தில் டெல்லியில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி இருந்தது.

    டெல்லியில் 1978-ம் ஆண்டு பில்லா-ரங்கா என்ற 2 ரவுடிகள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல் போன்ற அட்டகாசங்களில் ஈடுபட்டு வந்தனர். அந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி சனிக்கிழமை அவர்கள் இருவரும் இந்திய கடற்படை கேப்டன் சோப்ராவின் மகள் 17 வயது கீதா, மகன் 15 வயது சஞ்சய் ஆகிய இருவரையும் காரில் கடத்தி சென்றனர்.

    கீதாவும், சஞ்சய்யும் நன்றாக பாடக்கூடியவர்கள். அவர்கள் இருவரும் டெல்லி வானொலி நிலையத்தில் அடிக்கடி பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உண்டு. அப்படி அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தபோதுதான் பில்லா- ரங்காவால் கடத்தப்பட்டனர்.

    சிறுமி கீதாவை பாலியல் பலாத்காரம் செய்த இருவரும் மிக கொடூரமாக கொலையும் செய்தனர். அதுபோல அவளது தம்பி சஞ்சய்யையும் துடிக்க துடிக்க கொலை செய்தனர். ஓடும் காரில் இந்த கொடூரக் கொலைகள் நடந்தன. இந்த கொலை இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி பில்லா-ரங்கா இருவரையும் கைது செய்தனர்.

    விசாரணைக்கு பிறகு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1982-ம் ஆண்டு அவர்கள் இருவரும் டெல்லி திகார் ஜெயிலில் தூக்கில் போடப்பட்டனர். அவர்கள் செய்த இரட்டை கொலை 1979-ல் தினமும் அனல் பறக்க பரபரப்பான தகவல்க ளுடன் பேசப்பட்டது.

    இதனால் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஆனால் நிறைய மாற்றங்கள் செய்து ேதவைக்கும் அதிகமாக மசாலாக்கள் சேர்த்து "பில்லா" என்ற பெயரிலேயே படத்தை தயாரிக்க நடிகர் பாலாஜி முடிவு செய்தார். இதற்காக அவர் ரஜினியை சந்தித்து பேசினார். அப்போது அவர் பில்லா வேடத்தில் நடித்தால் உங்களது முழுமையான ஆக்ஷன் திறமையை வெளியில் காட்ட முடியும் என்றார்.

    இதைக் கேட்டதும் ரஜினிக்கு ஆர்வம் வந்தது. எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்று கூறி உடனடியாக அவர் பில்லா படத்தில் நடிக்க சம்மதித்தார். மிகப்பெரிய கொலைக்காரரான பில்லா பெயரில் நடிப்பதற்கு ரஜினி கொஞ்சமும் தயக்கம் காட்டவில்லை.

    ஆனால் பாலாஜியை பலரும் பயம் காட்டினார்கள். உண்மை கதையை மாற்றி படம் எடுக்கிறாய். கவனமாக இரு என்றனர். சிலர் அவரிடம், "ரஜினியை வைத்து படம் தயாரிக்கிறாய். அவர் கடைசி வரை நடித்து தருவாரா? அவருக்கு மனநலம் பாதிப்பு மீண்டும் வந்து விட்டால் உன்னால் படத்தை முடிக்க முடியுமா? அந்த இழப்பில் இருந்து உன்னால் மீண்டு வரமுடியுமா? என்றெல்லாம் கேட்டனர்.

    இதை கேட்ட பாலாஜிக்கு உண்மையிலேயே பயம் வந்து விட்டது. ரஜினியை வைத்து படம் தயாரிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் ஏற்பட்டது. அந்த குழப்பத்தை தீர்த்துக் கொள்ள கவிஞர் கண்ணதாசன் வீட்டுக்கு சென்றார். கண்ணதாசனிடம் தனது மனதில் உள்ளதை எல்லாம் நடிகர் பாலாஜி கொட்டினார். இதைக் கேட்டதும் கண்ணதாசன் அனைத்தையும் புரிந்து கொண்டார். அவர் பாலாஜியிடம், "நீ எதற்கும் கவலைப்படாதே? ரஜினியை வைத்து படம் தயாரிப்பதில் பின் வாங்க வேண்டாம். நான் இந்த படத்துக்காக வித்தியாசமான முறையில் பாடல் எழுதி தருகிறேன். கவலை வேண்டாம்" என்றார்.

    கண்ணதாசன் உற்சாகம் கொடுத்ததும் பாலாஜியிடம் இருந்த குழப்பமும், தவிப்பும் நீங்கியது. தைரியமாக அவர் பில்லா படத்தை தயாரிக்க தொடங்கினார்.

    பில்லா படத்தின் கதைப்படி ரஜினி (வில்லன்) சர்வதேச கடத்தல்காரனாக இருக்கிறார். அவரை எப்படியும் கைது செய்தே தீர வேண்டும் என்று சென்னை போலீஸ் அதிகாரி பாலாஜி (அலெக்சாண்டர்)சபதம் எடுக்கிறார். ஒருநாள் சர்வதேச போலீஸ் அதிகாரி மேஜர் சுந்தரராஜன் சென்னை வருகிறார்.

    சென்னையில் உலகம் முழுக்க உள்ள பிரபலமான கடத்தல்காரர்கள் ஒன்று கூடி பேசுகிறார்கள். அவர்களை சுற்றி வளைத்து கைது செய்யலாம் என்று அவர் அங்கு செல்கிறார். இந்த நிலையில் பில்லாவின் கூட்டாளியாக இருந்த ஜானி என்பவன் தனது காதலி பிரவீனாவுடன் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சி செய்கிறான்.

    அவனை பில்லா சுட்டுக் கொல்கிறான். இதனால் பில்லாவை பழிவாங்க பிரவீனா கொள்ளைக்காரியாக மாறி பில்லாவின் கூட்டத்துக்குள் நுழைகிறாள். பில்லாவை சிக்க வைக்க அவள் செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அவளையும் பில்லா கொல்கிறான். இதற்கிடையே பில்லாவால் கொல்லப்பட்ட ஜானியின் தங்கையும் (ஸ்ரீபிரியா) பில்லாவை பழிவாங்க அந்த கூட்டத்துக்குள் வருகிறாள்.

    அவளிடம் பில்லா மனதை பறிகொடுக்கிறார். அதை பயன்படுத்தி அவள் பில்லாவை போலீசில் சிக்க வைக்கிறாள். போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் பில்லா செத்துப் ேபாகிறான். இதைப் பார்த்த போலீஸ் அதிகாரி பாலாஜி புதிய திட்டம் போடுகிறார். சர்வதேச கும்பலை பிடிப்பதற்காக பில்லா கொலையை மறைக்கிறார்.

    பில்லா போன்றே இருக்கும் கழைக்கூத்தாடி ராஜப்பாவை உருவ மாற்றம் செய்து பில்லாவாக நடிக்க வைக்கிறார். அப்போதுதான் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் தலைவராக இருப்பது தெரிகிறது. அந்த அதிகாரியை ராஜப்பா பிடித்து கொடுத்து விட்டு ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொள்வதுடன் படம் முடிகிறது. பில்லா படம் தமிழகத்தில் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் சக்கைப்போடு போட்டு வசூலை வாரிக் குவித்தது. எல்லா தியேட்டர்களிலும் நல்ல லாபம் கிடைத்தது. அது மட்டுமின்றி சில தியேட்டர்களில் 260 நாட்களுக்கு மேல் ஓடி புதிய சாதனைையயும் படைத்தது.

    ரஜினி நடிக்க வந்த 5 ஆண்டுகளில் பில்லா படம் போல எந்த படமும் ஓடியது இல்லை. இது ரஜினியின் வாழ்க்கையிலும் ஒருபுதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ரஜினியை மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்துக்கு இந்த படம் கொண்டு சென்றது. அது மட்டுமின்றி ரஜினி நடித்தால் நிச்சயம் அதிக லாபம் கிடைக்கும் என்ற புதிய பாதையையும் இந்த படம் உருவாக்கியது.

    ரஜினிக்கே இது ஆச்சரியமாக இருந்தது. இதுபற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில், "ரஜினி அவ்வளவுதான் என்று எல்லோரும் சொன்னார்கள். ரஜினியின் இமேஜ் போய் விட்டது என்றெல்லாம் வதந்தி பரப்பினார்கள். ஆனால் அதையே நான் எனது பலமாக மாற்ற முடிவு செய்தேன். என்னைப் பற்றி என்னென்ன குறைகள் சொன்னார்களோ அந்த மாதிரி வேடங்களாக பார்த்து நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

    குடிகாரனாக.... ரவுடியாக.... கொலைகாரனாக... பைத்தியக்காரனாக.... நடித்தேன். கதாநாயகன் வேடம் கிடைக்காவிட்டாலும் மாற்று வேடங்களில் நடிக்க நினைத்தேன். ஆனால் பில்லா படத்தில் எனது நடிப்பை மக்கள் ஒத்துக் கொண்டார்கள். பில்லா நல்லா ஓடுகிறது என்றதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த படம் எதனால் ஓடுகிறது என்பதை தெரிந்துக் கொள்ள தியேட்டருக்கு சென்றேன்.

    ஆனால் எனக்கு எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை. மக்களை புரிந்துக் கொள்ள முடியவில்லை. என் மீது அவர்கள் காட்டும் பாசம் பிரமிக்க வைத்தது" என்றார்.

    ஆனால் பில்லா படத்தில் ரஜினிக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது என்பதே உண்மை. அது மட்டுமல்ல ரஜினியின் சிறப்பையும், அந்தஸ்தையும் கண்ணதாசன் பாடல்கள் மேம்படுத்தியது. அதற்கு காரணம் ரஜினி மீது கவிஞர் கண்ணதாசன் வைத்திருந்த தனி அன்புதான். கண்ணதாசனுக்கும், ரஜினிக்கும் இருந்த அந்த நட்பு பற்றி நாளை பார்க்கலாம்.

    • ‘அவர்கள்’ படத்தில் ரஜினியின் நெகடிவ் நடிப்பு மிக வித்தியாசமாக அமைந்திருந்தது.
    • ரஜினி தயாரிக்கும் படத்தில் நானும், நான் தயாரிக்கும் படத்தில் ரஜினியும் நடிப்போம்.

    ரஜினியை பல தடவை கமல் பாராட்டி பேசி உள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டி.....

    'கமலுக்கும் ரஜினிக்கும் ஆகாது. ஒருவரை ஒருவர் விழுங்கப் பார்க்கிறார்கள் என்று எங்களது எதிரிகள் சிலர், எங்களுக்குள் கோள் மூட்டி விடப்பார்த்தனர். ஆனால் எங்களது நட்பு சினிமா அந்தஸ்தை மீறி நிற்பதாகும். அந்த உயரத்திற்கு வந்து எங்களை, எங்கள் நட்பை யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

    'அபூர்வ ராகங்கள்' தொடங்கி எங்கள் நட்பு வளர்ந்தது. 'அவர்கள்' படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் ரஜினியிடம், "தொடர்ந்து ஸ்டைல் நடிப்பையே தந்து கொண்டிருக்கிறீர்களே, கொஞ்சம் கேரக்டர் நடிப்பிலும் கவனம் செலுத்தினால் என்ன?" என்று கேட்டேன்.

    ரஜினி அமைதியாக என்னிடம், "கமல், நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள். எனக்கு 'ஸ்டைல்' நடிப்புத்தான் சரி" என்றார். இப்படி அவரது பதில் எதுவும் நேரிடையாகத்தான் வரும். 'சுற்றி வளைத்து' பேசுவது என்பதே அவரிடம் கிடையாது.

    'அவர்கள்' படத்தில் ரஜினியின் நெகடிவ் நடிப்பு மிக வித்தியாசமாக அமைந்திருந்தது. அவரும் அதைச் சிறப்பாகச் செய்திருந்தார். அப்போதுதான் அவரிடம் 'அவர்கள்' நடிப்பைச் சுட்டிக் காட்டி மேற்கண்ட கேள்வியைக் கேட்டேன்.

    'நினைத்தாலே இனிக்கும்' படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்தபின் ரஜினி ஊர் சுற்றக் கிளம்பி விடுவார். தான் சுற்றுவது போதாதென்று என்னையும் துணைக்கு அழைப்பார். எனக்கு மறுநாள் படப்பிடிப்புக்காக காலையிலேயே எழுந்தாக வேண்டும் என்பதற்காக தயங்கு வேன். 'அட, சும்மா வாங்க, சிங்கப்பூருக்கு எதுக்கு வந்திருக்கோம்' என்று அழைத்து செல்வார்.

    சுற்றிவிட்டு எங்கள் இருப்பிடம் திரும்ப நள்ளிரவு 2 மணிக்கு மேல் ஆகிவிடும். ரஜினியுடன் நீண்ட நேரம் இரவில் சுற்றுவது எனக்கு சரிப்பட்டு வரவில்லை.

    அதனால் ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து விடுவேன். அவர் நள்ளிரவு தாண்டி அதிகாலை 3 மணிக்கும், 4 மணிக்கும் வருவார். மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் படப் பிடிப்புக்குத் தயாராக வேண்டும் என்ற கவலையே இருக்காது.

    மறுநாள் காலையில் முந்தய இரவு விழித்திருந்த அசதியும் ரஜினியிடம் தெரியாது. பாலச்சந்தர் சார் இரவு 9 மணிக்கு தூங்கி, காலை 5 மணிக்கே தயாராகி விடுவார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாரென்றால் காட்சியைத் தயார் செய்ய அரை மணி நேரமாகும். இந்த இடைவெளியை நானும், ரஜினியும் வீணாக்குவதில்லை.

    சிங்கப்பூரிலுள்ள பூங்கா, சாலைப் பகுதிகளில் சிமெண்ட் சாய்மானங்கள் இருக்கும். நான் ஒரு பக்கம் ரஜினி வேறொரு பக்கம் இருக்க சாத்தியப்படாது. டைரக்டர் அழைக்கும்போது எழுந்து ஓட வேண்டுமே.

    அதற்காக ஓரே இடத்தில் இருவரும் ஒருவரது தோள்மீது ஒருவர் தலை சாய்த்தபடி தூங்குவோம். ஓரே காரில் பயணம் செய்யும்போதும் விமான நிலையத்திலும்.... என்று கிடைத்த இடங்களில் இப்படித் தூங்கித்தான் ஓய்வெடுப்போம். இதை எத்தனை பேர் நம்புவீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் உண்மை.

    நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும்போது தயாரிப்பாளர்கள் எங்கள் இருவருக்குமே ஒரு குறிப்பிட்ட சம்பளத்தைக் கொடுத்து விடுவதை எண்ணிப் பார்த்தோம்.

    தனித்தனியாக படம் செய்தால் அதைவிட அதிகமாகவே சம்பளம் பெற முடியும் என்று உணர்ந்தோம். அதனால் சேர்ந்து நடிப்பதற்கு தற்காலிகமாக முடிவு கட்டுவது என்று சோபா ஒன்றில் அமர்ந்து பேசி தீர்மானித்தோம். எங்கள் தீர்மானம் சரியாகவே இருந்தது.

    இருவரும் மீண்டும் சேர்ந்து நடிப்பது எப்போது என்ற கேள்விகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ரஜினி தயாரிக்கும் படத்தில் நானும், நான் தயாரிக்கும் படத்தில் ரஜினியும் நடிப்போம்.

    எங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது. வலிமை இருக்கிறது. எங்கள் சினிமா அந்தஸ்து உச்சத்தில் இருக்கும்போது இருவரும் நிச்சயம் இணைந்து நடிப்போம்.

    ஒரு விருந்தில் நானும் ரஜினியும் கலந்து கொண்டோம். அதில் எங்களுக்குள் கைகலப்பு வருமளவில் சிறு மோதல் ஏற்பட்டது. ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலக்கி இருவரையும் சமாதானம் செய்தார். அதனாலேயே ஜெய் சாரை எங்கள் இருவருக்கும் பிடிக்கும்.

    இந்த சம்பவம் நடந்த மறுநாள் நான் வாகினி ஸ்டூடியோவில் இருந்தேன். என்னைப் பார்க்க ரஜினி வந்தார். என் கையை அழுத்தமாகப் பிடித்தார். சாரி.... நேத்து நடந்ததை மறந்துடுங்க..." என்றார். எனக்கு வெட்கமாகிவிட்டது. அவரது பெருந்தன்மை என்னைச் சுட்டது.

    சினிமாவைப் பொறுத்தவரை நாங்கள் கடுமையாகப் போட்டி போட்டு மோதுவோம். ஒரு சமயம் நான் பெரிய வெற்றியாக வெடித்தால், அவர் அடுத்து அதைவிடப் பெரிய வெற்றியாக வெடித்து சிதறுவார். அதைப் பார்த்து அதைவிட வெற்றி பெற வேண்டும் என்று நான் முயலுவேன். எங்கள் போட்டி எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், நட்பில் எங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை.

    ஒருவரை ஒருவர் விமர்சிப்பதிலும் நாங்கள் பின் வாங்கியதில்லை. அது மட்டுமின்றி எங்கள் தவறுகளையும் நாங்கள் விமர்சிக்க பயந்ததில்லை. அந்த தைரியம் எங்களுக்கு மட்டுமே உண்டு. இந்த மனப்பாங்கு வேறு எந்த இந்திய நடிகர்களிடமும் காண முடியாதது என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன்.

    ஒரு சமயம் ரஜினியிடம் உள்ள பழக்கம் ஒன்றைச் சுட்டிக் காட்டி திருத்திக் கொள்ளும்படி சொன்னேன். அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு "பொறுத்துப் பாருங்கள்" என்றவர் சில நாட்களிலேயே அந்தப் பழக்கத்தை நிறுத்திக் கொண்டார். அதுதான் ரஜினி.

    இவ்வாறு கமல் கூறினார்.

    ரஜினிகாந்த் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டிருந்த காலக் கட்டத்தை 'இருண்ட காலம்' என்று டைரக்டர் கே.பாலச்சந்தர் குறிப்பிட்டார்.

    ரஜினிகாந்தின் திரை உலகப் பிரம்மாவான டைரக்டர் பாலச்சந்தர், ரஜினிக்கு அந்த கறுப்பு நாட்களில் ஏற்பட்ட குழப்பத்தைப் பற்றியும், நரம்புத் தளர்ச்சி பற்றியும் அப்போது கூறியவை வருமாறு:-

    நினைத்தாலே இனிக்கும் படத்தின் டப்பிங் ஏ.பி.என் தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது. ரஜினிகாந்த் டப்பிங் பேச மறுப்பதாக என் உதவி டைரக்டர் கண்மணிசுப்பு, எனக்கு போன் செய்தார். நான் உடனே அங்கு சென்று ரஜினியை தனியே அழைத்து, "ஏன் டப்பிங் பேச மறுக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

    'கால் முடமானவனை ஓடச்சொல்லி வேடிக்கை பார்ப்பது ஆறறிவு படைத்த மனிதன் செய்கிற வேலையா? உடல் நலம் குன்றி இருக்கும் ஒரு மனிதனிடம் வேலை வாங்குவது நியாயமா?' என்று சொன்னார்.

    இப்படியெல்லாம் ரஜினி என்னிடம் பேச மாட்டார். மனநிலை சரியில்லாமல்தான், இப்படியெல்லாம் பேசுகிறார் என்று புரிந்து கொண்டேன். உடனே டப்பிங்கை கேன்சல் செய்துவிட்டு, டாக்டர் ஆர்.எஸ். ராஜகோபால் அவர்களிடம் ரஜினியை அழைத்துச் சென்றேன்.

    இடைவிடாத உழைப்பால் ரஜினிக்கு அதிக அளவில் ரத்த அழுத்தம் இருப்பதாக டாக்டர் கூறினார். ஓய்வெடுத்துக் கொள்ளும்படி டாக்டர் அறிவுறுத்தினார். வெலிங்டன் மருத்துவமனையில் சேர்த்து கண்டிப்பாக ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொன்னதால், ரஜினியை அங்கு உடனே அட்மிட் செய்தேன். தினம் காலையிலும் மாலையிலும் சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். அவர் அங்கே இருப்பது யாருக்கும் தெரியாமல் வைக்கப்பட்டது.

    ஐ.வி.சசி அவர்கள் கமல்ஹாசனையும், ரஜினியையும் வைத்து 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். ஷாட் ரெடியானதும் ரஜினியை உடை மாற்றிக்கொள்ளச் சொல்லி இருக்கிறார்கள். ரஜினி மறுத்துவிட்டார். எல்லோரும் போய் கேட்டிருக்கிறார்கள். யார் சொல்லியும் அவர் கேட்கவில்லை. கமல்ஹாசனும், நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்டிஸ்ட்களும் காத்திருக்கிறார்கள்.

    டைரக்டர் ஐ.வி. சசிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எனக்கு போன் செய்தார். நானும் உடனே போனேன். ரஜினியை மேக்கப் அறையில் சந்தித்தேன். 'ஏன் ரஜினி. டிரஸ் போட்டுக்க வேண்டாமா? ஷாட் ரெடியா இருக்குல்ல' என்று நான் சற்று அதட்டிச் சொல்வது போல் சொன்னதும், டிரஸ் போட ஆரம்பித்தார்.

    இந்தக் காலகட்டத்தில்தான் நடிகை ஸ்ரீபிரியா என் வீட்டிற்கு வந்தார். 'சார், உங்கள் ஒருவரால்தான் ரஜினிகாந்தைச் சரியான பாதைக்குத் திருப்ப முடியும். ஒரு நல்ல நடிகரை தமிழ்த் திரைக்கு அளித்தீர்கள். ரஜினி காந்தின் இழப்பைத் தடுக்க நீங்கள்தான் முயற்சி எடுக்கவேண்டும்" என்று மனம் விட்டுப் பேசினார்.

    'கதை முடிந்தது' என்று பலர் முடிவுரை எழுதிக்கொண்டிருந்த போது, அது தொடர் கதை ஆகவேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல உள்ளமும் இருக்கிறதே என்று அறிந்ததும் என் கண்களில் நீர் திரையிட்டது.

    மேஜர் சுந்தரராஜன், பாலாஜி, நாகேஷ் ஆகியோரோடு கலந்தாலோசித்து, விஜயா நர்சிங் ஹோமில் ரஜினியை சேர்த்தோம். டாக்டர் செரியனின் கண்காணிப்பில் 15 நாள் பரிபூரணமாக ஓய்வெடுத்துக் கொண்டதால் நலம் பெற்றார், ரஜினிகாந்த்.

    ரஜினிகாந்த் போன்ற கலைஞர்களை 20, 25 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் காண முடியும். கைநழுவ இருந்த ஒரு கலைஞனை, திரைப்பட உலகம் திரும்பப் பெற்றதில் நான் பூரிப்பும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.'

    இவ்வாறு பாலச்சந்தர் கூறினார்.

    இதைப் பார்த்த படத் தயாரிப்பாளரும், நடிகருமான பாலாஜிக்கு ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவர் ரஜினியை சந்தித்துப் பேசினார். நாட்டையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தின் பெயரில் படமாக்கப் போவதாக கூறினார். அதைக் கேட்டதும் ரஜினி கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் பாலாஜி சொன்ன படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாரா என்பதை நாளைப் பார்க்கலாம்.

    • எல்லா கர்ப்பிணி பெண்களுக்குமே 4-வது மாதத்தில் சிறுநீர் தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும்.
    • சிறுநீர் பரிசோதனை நெகட்டிவ் ஆக வந்தால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

    பெண்களை பொருத்தவரை கர்ப்ப காலங்களில் அவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் ஏற்படும். அவர்களில் பலரும் தங்களின் சந்தேகங்களை அவர்களது மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். அதேபோல் பெண்கள் பலருக்கும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் சிறுநீர்க்குழாய் தொற்று தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. என்னிடம் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணி பெண்கள் பலரும் சிறுநீர்க்குழாய் தொற்று பிரச்சனை தொடர்பான பலவித சந்தேகங்களை கேட்டுள்ளனர்.

    கர்ப்பிணி பெண்களுக்கு சிறுநீர்க்குழாய் தொற்று எப்படி ஏற்படுகிறது?

    அந்த வகையில் சிறுநீர்க்குழாய் தொற்று என்பது கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதை பல பெண்களும் எதிர்கொள்கிறார்கள். சிறுநீர்க்குழாய் தொற்று பாதிப்புகள் எப்படி ஏற்படுகிறது? அதற்கான தீர்வுகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

    பெண்களின் கர்ப்பகாலத்தில் முதல் 3 மாதங்கள், நடுவில் உள்ள 3 மாதங்கள் மற்றும் கடைசியில் உள்ள 3 மாதங்கள் ஆகிய காலகட்டங்களை எடுத்துக் கொண்டால், கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களில் சிறுநீர்க்குழாய் தொற்று என்பது மிகவும் பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்றாகும்.

    ஏனென்றால் ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கும் காலகட்டத்தில் கரு உருவான பிறகு அது வளரத் தொடங்கும். அந்த கருவானது பெரிதாக வளர வளர கர்ப்பப்பையும் பெரிதாகி விரிவடையும். சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் ஒன்றுக்கொன்று மிகவும் பக்கத்தில் இருக்கும். கர்ப்பப்பை விரிவடையும்போது சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக காணப்படும்.

    எனவே அதுபோன்ற கால கட்டத்தில் சிறுநீர்க்குழாய் தொற்றானது, கர்ப்பப்பையில் மிகவும் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதோடு அந்த கர்ப்பப்பை வளர்ந்து பெரிதாகும்போது, சிறுநீர்க்குழாயில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்த்தேக்கம் என்பது அதிகம் இருக்கும்.

    இந்த காலகட்டத்தில் பல பெண்களுக்கு கர்ப்பப்பை பின்னோக்கி சாய்ந்த நிலையில் காணப்படும். அப்படி சாய்ந்த நிலையில் கர்ப்பப்பை இருக்கும்போது, அது சிறுநீர்க்குழாய்க்கு அழுத்தத்தை கொடுக்கும். இதன் காரணமாக சிறுநீரானது திரும்பி செல்லும் நிலை ஏற்படும். இதனால் சிறுநீர்க்குழாயில் தொற்று உருவாகும்.

    சிறுநீர்க்குழாய் தொற்று உருவாவதற்கான முக்கிய காரணங்கள்:

    மேலும் இதற்கு முக்கிய காரணமே சிறுநீர்க்குழாய் மற்றும் யோனிப்பகுதி ஆகியவை கர்ப்பப்பையின் பக்கத்தில் இருப்பதுதான். அதனால் தான் கர்ப்பிணிகளுக்கு பல நேரங்களில் அறிகுறி எதுவுமே இல்லாமல் சிறுநீர்க்குழாய் தொற்று ஏற்படும். அறிகுறி இல்லாமல் சிறுநீர்க்குழாய் தொற்று எப்படி வரும் என்றால், பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு காய்ச்சல் வரும், குளிர் ஜுரம் வரும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போல் தோன்றும். மேலும் அவர்கள் சிறுநீரை அடக்கமுடியாமல் சிரமப்படுவார்கள்.

    இந்த அறிகுறிகளானது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகள் என்பதால் கர்ப்பிணிகள் பலரும் இதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் சிறுநீர்க்குழாய் தொற்றுக்கும் இதே அறிகுறிகள் தான் என்பதை பெண்கள் கவனிக்க தவறி, தவறு செய்து விடுவார்கள். அதனால் தான் அவர்கள் சிறுநீர்க்குழாய் தொற்று பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

    ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு முதல் 3 மாதங்களில் சிறுநீர்க்குழாய் தொற்று அதிகரித்து காணப்படுவது மிகவும் பொதுவான விஷயம். ஆனால் சிலருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கர்ப்பகாலத்தில் சிறுநீர்க்குழாய் தொற்று ஏற்படும். பொதுவாகவே சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் மிகவும் பக்கத்தில் இருப்பதால், கர்ப்பப்பை வளரும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக சிறுநீர் தேங்குவது என்பது அதிகம் இருக்கும். பல நேரங்களில் அதனால் சிறுநீர்க்குழாய் தொற்றானது அறிகுறி இல்லாமல் இருக்கும்.

    எனவே தான் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற சிறுநீர்க்குழாய் தொற்று பாதிப்பை அறிகுறியற்ற பாக்டீரியூரியா (ஏசிம்டமேட்டிக் பாக்டீரியூரியா) என்று சொல்கிறோம். அறிகுறியற்ற பாக்டீரியூரியா என்றால் இந்த காலகட்டத்தில் அறிகுறியே இல்லாமல் சிறுநீரில் தொற்றுக்கள் இருக்கும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    சிறுநீர்க்குழாய் தொற்றுக்களை கண்டறிவதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை:

    அதனால் தான் எல்லா கர்ப்பிணி பெண்களுக்குமே 4-வது மாதத்தில் சிறுநீர் தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் கூடவே ஒரு யோனி ஸ்வாப் பரிசோதனையும் செய்ய வேண்டும். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை கண்டறியும் பரிசோதனை ஆகும். ஏனென்றால் அறிகுறியே இல்லாமல் தொற்றுக்கள் பரவும் நிலையில், இந்த தொற்றுக்களானது கர்ப்பப்பையில் இருக்கும் கருவையும் பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

    அதனால்தான் அறிகுறியற்ற பாக்டீரியூரியாவினால் நிறைய பெண்களுக்கு குறை மாதத்தில் குழந்தை பிறப்பது, குறை மாதத்தில் பனிக்குட நீர் உடைவது, குழந்தையின் எடை குறைவாக இருப்பது போன்ற பல்வேறு வகை பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்ட ஒரு விஷயம் ஆகும்.

    அதற்காகத்தான் எல்லா கர்ப்பிணிகளுக்கும் 4-வது மாதத்தில் ஒரு சிறுநீர் பரிசோதனை செய்வது அவசியமானதாகும். இந்த பரிசோதனையின்போது தொற்றுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு குறிப்பிட்ட ஆன்டிபயாடிக் மருந்து கொடுத்து முழுமையாக சரிசெய்து விடுவோம். இதில் ஒரு லட்சம் தொற்றுக்கள் இருந்து, ஆனால் அதற்குரிய அறிகுறி இல்லாவிட்டால் கூட கண்டிப்பாக இவர்களுக்கு சிகிச்சை முறைகள் தேவைப்படும்.

    கர்ப்பகாலத்தில் இந்த சிறுநீர்க்குழாய் தொற்றுக்கள் என்பது மிகவும் பொதுவானது. இதற்கு குறிப்பிட்ட மற்றும் பாதுகாப்பான ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் பொதுவாக சிறுநீரை கட்டுப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக நீர்ச்சத்து உள்ள நீராகாரங்களை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுநீரை எளிதாக கழிப்பது போன்ற சூழல்களை உருவாக்கி்க கொள்ள வேண்டும். இதெல்லாம் ரொம்பவும் முக்கியமான விஷயம். இவை அனைத்தும் ஒவ்வொரு பெண்ணும் கர்ப்ப காலத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.

    எனவே கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக சிறுநீர்க்குழாய் தொற்று இருந்தால் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுநீர்க்குழாய் தொற்றுக்கான மருந்துகள் மாத்திரைகள் எடுத்து முடித்த பிறகு, மீண்டும் ஒருமுறை சிறுநீர் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களின் சிறு நீர்க்குழாய் தொற்று பிரச்சனை முழுமையாக சரியாவதை உறுதி செய்ய முடியும். அதன்பிறகு பின்நாட்களில் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் வராமல் தடுக்க முடியும்.

    பெண்கள் கர்ப்பத்தை உறுதி செய்ய சிறுநீர் பரிசோதனை எப்போது செய்ய வேண்டும்?

    பெண்கள் பலரும் தாங்கள் கர்ப்பமாக இருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ள சிறுநீர் பரிசோதனை எப்போது செய்ய வேண்டும் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இருக்கும். ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு மாதாமாதம் சரியான நேரத்தில் வந்தால், மாதவிலக்கு தள்ளிப்போன ஒரே நாளில், அதாவது 31-வது நாளில் சிறுநீர் பரிசோதனை செய்யலாம்.

    ஆனால் சில பெண்களுக்கு மாதவிலக்கு வருவது 35 நாட்கள் அல்லது 45 நாட்கள் என தள்ளித் தள்ளிப்போகும். ஆனால் எதுவாக இருந்தாலும் முதலில் அவர்கள் ஒரு சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிறுநீர் பரிசோதனை நெகட்டிவ் ஆக வந்தால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

    ஒரு வாரம் கழித்தும் மாதவிலக்கு வரவில்லை, ஆனால் நீங்கள் கருத்தரிப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக மீண்டும் ஒரு வாரம் கழித்து சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    தேவைப்பட்டால் சில நேரங்களில் ரத்த பரிசோதனையில், பீட்டா எச்.சி.ஜி. என்ற ரத்த பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த பீட்டா எச்.சி.ஜி. பரிசோதனை மூலமாக, கருவின் ஆரம்ப நிலையிலேயே அதனுடைய வளர்ச்சியை தெரிந்து கொள்ள முடியும். இது ஒரு முக்கியமான பரிசோதனை ஆகும்.

    மாதவிலக்கு குறிப்பிட்ட காலத்தில் வராத பெண்கள் எப்போது கருமுட்டைகள் வெளியானதோ, அதில் இருந்து 17-வது நாள் சிறுநீர் பரிசோதனை செய்தால் பாசிட்டிவ் ஆக வர வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் நாங்கள் எங்களிடம் வரும் பெண்களுக்கு, எந்த நாளில் முட்டை வெளியானதோ, அந்த நாளில் இருந்து 17-வது நாளில் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்.

    பொதுவாக ஐ.வி.எப். முறையில் செயற்கை கருத்தரிப்பு செய்கிற பெண்களுக்கு, கருவை கர்ப்பப்பையில் எடுத்து வைத்த பிறகு 15-வது நாள் பரிசோதனை செய்து பார்க்க சொல்கிறோம். இந்த காலகட்டத்தில் அந்த கருவின் டிரோபோபிளாஸ்ட் பார்மேஷன் (கருவை சுற்றியுள்ள வெளிப்புற அடுக்கு) சரியாக இருக்கும். அதுதான் பீட்டா எச்.சி.ஜி. வருவதற்கான அடிப்படையான செல்களாக அமையும். இந்த செல்களில் இருந்து வெளியேறும் ஹார்மோன்களை வைத்து தான் கர்ப்பம் உறுதியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ள முடியும்.

    • அனைத்தும் தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக மாறியது.
    • பாரதிராஜாவும், ரஜினியும் அந்த உரையாடலில் பல தகவல்களை வெளியிட்டனர்.

    1979-ம் ஆண்டு ஜூன் மாதம் ரஜினி நன்கு குணமாகி இயல்பு நிலைக்கு திரும்பியதும் அவரை மையப்படுத்தி அனைத்துப் பத்திரிகைகளும் போட்டி போட்டு செய்திகள் வெளியிட்டன. சினிமா இதழ்களில் ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்து பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    அவை அனைத்தும் தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக மாறியது. குறிப்பாக ரஜினி ஒவ்வொரு பேட்டியிலும் தன்னைப் பற்றி யதார்த்தமாக பேசியதை தமிழக ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். போலியாக நடிக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்கிறார் என்று புகழ்ந்தனர்.

    நாளடைவில் இதுவே ரஜினிக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது. இதனால் சினிமா இதழ்களில் ரஜினி பற்றிய தகவல்கள் தவறாமல் இடம் பிடித்தன. ஒரு பிரபல சினிமா இதழ் டைரக்டர் பாரதிராஜாவையும், ரஜினியையும் சந்தித்து உரையாட வைத்து சிறப்பு இதழே வெளியிட்டது.

    பாரதிராஜாவும், ரஜினியும் அந்த உரையாடலில் பல தகவல்களை வெளியிட்டனர். அவர்களது உரையாடல் வருமாறு:-

    பாரதிராஜா: வில்லனை மக்கள் ரசித்தது உங்களை பார்த்துதான். ஆனால் கடந்த சில மாதங்களாக உங்களது செயல்பாடுகளால் பலவிதமாக பேசப்பட்டது. என்றாலும் மக்கள் மத்தியில் அது சின்ன சலனத்தைக் கூட ஏற்படுத்த–வில்லை. அதற்கு முக்கிய காரணம் உங்களிடம் அது மாதிரியான தவறான போக்கு இல்லை என்பதை தமிழக மக்கள் முழுவதுமாக உணர்ந்திருந்ததுதான்.

    இன்னும் சொல்வதென்றால் உங்களுடைய புகழ் இப்போது மேலும் அதிகமாகி விட்டது. அது தவிர பட உலகில் இருக்கிறவர்களுக்கும் உங்களிடம் ஒரு மென்மையான போக்கு இருந்தது. அதுதான் உங்களை காப்பாற்றியது என்று நினைக்கிறேன்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    ரஜினி: ஆமாம். உண்மைதான். அந்த சமயத்தில் என்கூட நடிச்சவங்க மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். என் சூழ்நிலை தெரியாமல் நான் என்னையும் அறியாமல் என்னென்னவோ செய்து இருக்கிறேன். சில பேர் முகத்தில் துப்பி இருக்கிறேன். அதையெல்லாம் அவர்கள் பொறுத்துக் கொண்டது நான் வணங்கிய தெய்வங்களின் அனுக்கிரகம் என்றுதான் சொல்வேன். நான் செய்த தவறுகளை நினைத்துப் பார்த்தால் எனக்கு என்னவோ போல் இருக்கிறது.

    எனக்கு என்னையும் மீறி என்னவோ நடந்து விட்டது. எனக்கு சில பேர் சூனியம் வைத்து விட்டார்கள் என்று சொன்னார்கள். எப்படியோ மீண்டு விட்டேன்.

    பாரதிராஜா: நீங்கள் ஒரு தடவை ஜப்பானோ, சிங்கப்பூரோ போய் விட்டு வந்தீங்களாமே... அதற்குப்பிறகுதான்....

    ரஜினி: ஜப்பான் இல்லை. அய்யப்ப சாமிக்கு மாலை போட்டு சபரிமலைக்கு போய் விட்டு வந்த பிறகு பாம்பே போனேன். அங்கேயே என்னிடம் சில மாறுதல்கள் இருந்தன. அதை நான் அப்போதே உணர ஆரம்பித்தேன். சென்னைக்கு திரும்பியதும் அந்த பாதிப்பு அதிகமானது.

    அப்போதெல்லாம் ஒரு மணி வரைக்கும் குடிப்பேன். அப்புறம் தூக்கம் வராது. ஸ்கூட்டரில் மெரினா கடற்கரை... அங்க இங்கன்னு சுத்துவேன். அதன் பிறகு அதிகாலை 3 மணி, 4 மணிக்கு வீட்டுக்கு வருவேன். மீண்டும் மது குடிப்பேன். 5 மணிக்கு ஒரு மாதிரி இருக்கும். தூங்கப் போவேன்.

    காலை 6 மணிக்கு ஷூட்டிங்கிற்கு கார் வந்து விடும். உடனே குளிச்சிட்டு புறப்பட்டு விடுவேன். தூக்கமே கிடையாது. அதுக்கு மேல ஜரிதா பீடா வேற போடுவேன். இந்த நிலையில் சிங்கப்பூருக்கு நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்புக்கு சென்றேன். அங்கே 6 மாசம் இருந்ததில் எல்லாம் ஓவரா போய் விட்டது.

    அதன் பிறகு 40 நாள் விரதம். அது முடிந்ததும் திரும்பியும் வெறி வந்த மாதிரி சாப்பிட ஆரம்பித்தேன். அது மட்டுமில்லே... இரவு பகலாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். பிப்ரவரியில் என் உடல்நிலை கெட ஆரம்பித்தது. மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலையில் ரொம்ப மோசமாகி விட்டது.

    நான் மதுரையில் ஐதராபாத்தில் எல்லாம் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியாது. மதுரையில் சிவாஜி சாருக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு மேடைக்கு எப்படி போனேன் ... என்ன பேசினேன்... ஒன்றும் ஞாபகம் இல்லை.

    நான் பெல்ட்டால் எல்லாம் அடித்தேன் என்று சொன்னார்கள். அதுமாதிரி சோழா ஓட்டலில் கலாட்டா, சபையர் தியேட்டர்லே கலாட்டா செய்ததாக சொன்னார்கள். அப்போதெல்லாம் யாரையாவது அடித்து விட்டால் அதுக்காக வருத்தப்பட மாட்டேன். 'அடிச்சிட்டேன்'னு பெருமைபட்டுக் கொள்வேன்.

    பாரதிராஜா: உங்க இடத்தில் வேறு ஒரு நடிகர் இருந்து இருந்தால் காணாமல் போய் இருப்பார். அவர்களுடைய மார்க்கெட் சிதறி போய் இருக்கும். பொதுவாக தமிழக ரசிகர்கள் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் நன்கு உற்றுப்பார்ப்பார்கள். இந்த விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.

    ரஜினி: ஆமாம் சார்... இதை நான் அப்போதே நினைத்து பார்ப்பது உண்டு. எனது செயல்பாடுகளால் என்னுடைய சினிமா வாய்ப்புகள் பாதிக்கும் என்றே நினைத்தேன். ஆனால் தமிழக மக்கள் என்னை புரிந்துக் கொண்டார்கள். என்னை அவர்கள் நம்பினார்கள்.

    என்றாலும் கதாநாயகனாக நடிப்பதை விட்டு விட்டு முழுக்க முழுக்க வில்லன் மாதிரி இருக்கிற படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். ராமரை விட்டு விட்டு ராவணன் கதையை ஆரம்பிக்க வேண்டியதுதானே!

    பாரதிராஜா: ஆனால் எப்போதும் பஞ்சு அருணாசலம் உங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். பலர் உங்களைப் பற்றி தப்பாக பேசிக்கிட்டு இருந்த சமயங்களில் நான் பஞ்சுவை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அவர் உங்கள் பக்கம்தான் பேசுவார்.

    ஒரு தடவை அவர் என்னிடம் 'நான் ரஜினியோட ரொம்ப பழகி இருக்கிறேன். அவரது குணம் இது அல்ல' என்றார். உங்களுக்கும் பஞ்சுவுக்கும் ஒரு நல்ல நட்புணர்வு இருக்கிறது.

    பஞ்சுவினுடைய புவனா ஒரு கேள்விக்குறி-யில் உங்களை திரையுலகில் புதிய பாதையில் அவர் மாற்றி விட்டு விட்டார். அதன் பிறகு காயத்ரி, பிரியா, ஆறிலிருந்து அறுபது வரை எல்லாமே பெரிய சக்சஸ் என்பது மட்டுமில்லை. உங்களுக்கும் பெரிய பெயரும் வாங்கிக் கொடுத்து இருக்கிறது.

    எம்.ஆர்.ராதாவுக்கு பிறகு வில்லனை மக்கள் ரசித்தது உங்கள் ரூபத்தில்தான். 16 வயதினிலே படத்துக்காக நாம் சேர்ந்து இருந்த போது எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்க வேலையைத் தவிர வேறு எதிலும் நீங்கள் தலையிட்டது இல்லை. அதன் பிறகு நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

    ஒரு தடவை ஒரு விருந்தில் நமக்குள் லேசான உரசல் ஏற்பட்டது. அது ஏன் என்று தெரியவில்லை. நீங்கள் அதிக மது குடித்து இருந்ததால் அப்படி ஆகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    ரஜினி: அன்று விருந்தில் நான் இருந்த சூழ்நிலை அப்படி. அன்று சிலரால் நான் ஏதேதோ பேசி விட்டேன். எனக்கு நன்றாகத் தெரியும். தப்பு என் மேல்தான். இதுபற்றி பேச உங்களுக்கு நான் 3, 4 தடவை போனில் தொடர்பு கொண்டேன். நீங்கள் கிடைக்கவில்லை.

    பாரதிராஜா: அந்த விஷயத்தை அன்றே நான் மறந்து விட்டேன். அதான் என் குணம். நான் முதல் முறையாக எங்கே உங்களை சந்தித்தேன் என்று தெரியுமா?

    ரஜினி: 'அவர்கள்' பட ஷூட்டிங்கின்போது ஒரு மாடியில் தானே...

    பாரதிராஜா: இல்லை. அதுக்கு முன்னாடி சிவசுப்ரமணியம் பூஜையில் உங்களைப் பார்த்தேன். பூஜை நடந்துகிட்டிருக்கு. ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்து இருந்தீங்க. படத்தில் பார்ப்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது.

    ரஜினி: ஆமாம். அப்போது நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். இப்போது கொஞ்சம் மாறி இருக்கிறேன்.

    பாரதிராஜா: '16 வயதினிலே' படம் முடிந்து ஒரு நாள் நாம் பேசிக்கொண்டிருந்த போது உங்க திறமையை நீங்க காட்டணும்னு நீங்களே சொல்லி இருக்கீங்க. நடிகர்கள் நடிச்சி 5 படங்கள் வந்து 3 படம் ஓடினால் கூடப் போதும். ஆனால் எங்க நிலை அப்படி இல்லை. படம் ஓடாவிட்டால் விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் ஒரே நேரத்துல 4, 5 படம் பண்ண முடியவில்லை.

    ரஜினி: 'இமேஜ்' வந்தாலே பிரச்சினைதான். இமேஜ் வரவேண்டும் என்று கஷ்டப்படுகிறோம். வந்த பிறகு அதைக் காப்பாற்றி கொள்ள போராடுகிறோம். சினிமாவை நாம் தொழிலாக நினைத்தால் ரொம்ப சிரமப்படுவோம். சினிமாவை அனுப வித்து வாழ்க்கையை கொண்டு போனால் போதும். அதற்கு பிறகு நாம் சாதித்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் உரையாடல் நடந்தது.

    டைரக்டர் பாலச்சந்தர், கமல் இருவரும் ரஜினி முழுமையாக குணம் அடைந்து மீண்டதை வரவேற்று பேட்டியளித்தனர். அவர்கள் இருவரும் என்ன சொன்னார்கள் என்பதை நாளைக் காணலாம்.

    ×