search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • சோழர்களின் நிதி சேமிப்புக் கிடங்காக ஊர் திகழ்ந்தது.
    • கருட பகவானால் இத்தலம் தோற்றுவிக்கப்பட்டு வழிபடப்பட்டது என்பது புராணத்தின் சாராம்சமாகும்.

    கும்பகோணத்தில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குடவாசல். கடந்த வாரம் இந்த ஊரில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் ஆலயம் பற்றி பார்த்தோம். இந்த குடவாசலில் மற்றொரு பகுதியில் சிறப்பான சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது.

    பல்வேறு தனித்துவமான சிறப்புகள் அந்த சிவாலயத்துக்கு உண்டு. இந்த சின்னஞ்சிறிய ஊரில் அந்த கோவில் அற்புதமான மாடக் கோவிலாக அமைந்துள்ளது. இங்கே உள்ள இறைவியின் பெயர் ஸ்ரீபெரிய நாயகி. சிவனாரின் பெயர் ஸ்ரீகோணேஸ்வரர்.

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலச் சோழ மன்னர்களின் மனம் கவர்ந்த இடமாக குடவாசல் விளங்கியது. குறிப்பாக சோழர்களின் நிதி சேமிப்புக் கிடங்காக ஊர் திகழ்ந்தது. குடவாயிற் கீர்த்தனார் என்ற சங்கப்புலவர் இவ்வூரின் சிறப்புகள் பற்றி நற்றிணை, அகநானூறு போன்ற சங்கப் பாடல்களில் சிறப்பித்துக் கூறியுள்ளார்.

    பழம் பெருமை பல பெற்ற இவ்வூரின் நான்கு ராஜ வீதிகளின் நடுவே அமுத தீர்த்தம் என்ற குளக்கரையின் கீழ்பகுதியில் மேற்கு நோக்கிய ஆலயமாகக் கோணேச்சரம் என்ற சிவாலயம் காட்சி தருகின்றது.

    இந்த ஆலயத்துக் கோபுரவாயில் கடந்து உள்ளே நுழையும்போது கொடி மரம் பலிபீடம், இடபம் ஆகியவற்றைக் கடக்கும் போது நம் முன் காட்சி அளிப்பது பெரியநாயகி என்னும் அம்பிகையின் அருள் காட்சி ஆகும். இந்த ஆலயத்தில் தனித்த துர்க்கை வடிவம் இடம் பெறவில்லை.

    பெரிய நாயகியே இங்கு துர்க்கையாகவும் அருள்பாலிக்கின்றாள். இரண்டாம் கோபுரம் கடந்து உள்திருச்சுற்றில் வலம் வரும்போது ஆலயத்துக் கணபதியார், தேவாரமூவர், லட்சுமி, கந்தவேள், சண்டீசர், நவ கிரகங்கள், அட்ட மாதர்கள், தட்சிணா மூர்த்தி என்று அந்தந்த தெய்வங்களின் சிலைகளை அவரவருக்குரிய சிற்றாலயங்களில் தரிசிக்கலாம்.

    முன்பு மலைக்கோவிலில் மேலே இருந்த நடராசர், சிவகாமி அம்மை சிலைகள் கட்டுமலையின் அடிவாரத்தில் தற்போது காசி விஸ்வநாதரோடு தனிச்சந்நதியில் காட்சி தருகின்றனர்.

    கட்டுமலை மீது முதலாம் திருச்சுற்று விளங்குகின்றது. அங்கு கோணேசபெருமானின் பெரிய லிங்க உருவம் மூலவராக இடம் பெற்றுள்ளது. சதுர பீடத்தின் நடுவில் கோணேசலிங்கம் கம்பீரமாகக் காட்சி தருகின்றது.

    கருட பகவானால் இத்தலம் தோற்றுவிக்கப்பட்டு வழிபடப்பட்டது என்பது புராணத்தின் சாராம்சமாகும்.

    காச்யப முனிவரின் மனைவிகளாக விநதை, கத்ருதேவி இருந்தனர். இந்த இரு பெண்களுக்கு முறையே கருடனும், கார்க்கோடகன் என்ற பாம்பும் மகன்களாகப் பிறந்தனர். இளைய மனைவி சூழ்ச்சியால் விநதை பல துன்பங்களுக்கு ஆளானாள். விநதையின் துன்பத்தைப் போக்க, முன்பு பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட அமிர்தம் இருந்த கலசத்தை தேவர் உலகம் சென்று முயன்று பெற்று வந்தான் கருடன்.

    பூலோகத்தில் அமிர்த கலசத்துடன் குடவாயில் அருகே பறந்து வந்தபோது மகாபயங்கரன் எனும் அசுரன் கருடனுடன் போரிட அழைத்தான். அவனுடன் போரிட முடிவு செய்த கருடபகவான் தான் எடுத்து வந்த அமிர்த கலசத்தை தரையில் தர்பையின் மீது வைத்தான். பிறகு அசுரனுடன் போர் புரிந்தான்.


    அசுரனை வென்ற கருடன் தான் தர்ப்பையின் மீது வைத்த அமுத கலசத்தை மீண்டும் எடுக்க முயன்ற போது அது அங்கிருந்த புற்றினுள்ளே அழுந்தி புதைந்து கொண்டிருந்தது. கோபமுற்ற கருடன் தன் அலகினாலும் கால்களாலும் புற்றினைப் பிளக்க முற்பட்ட போது உள்ளிருந்து அமிர்த கலசத்துடன் சிவன் வெளிப்பட்டார்.

    கருடனைப் பார்த்து 'உன் மூலம் இத்தலத்தில் நான் வெளிப்பட விரும்பியதால் இவ்வாறு செய்தேன்' என்று கூறி அருள்பாலித்தார். இறைவனின் ஆணைப்படி கருடன் அந்த இடத்திலேயே திருக்கோவில் எடுத்து வழிபட்டான். அவ்வாலயமே குடவாயில் திருக்கோவிலாகும்.

    இங்குள்ள தலதீர்த்தத்தின் சிறப்பாக தலபுராணத்தில் கூறும்பொழுது, அமிர்த தீர்த்தத்தைத் தொட்டவருக்கு முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். இத்தீர்த்தத்தை அருந்தியவர்கள் புன்ணியவான் ஆகிறார்கள்.

    இதில் நீராடல் செய்ய விரும்பி இது இருக்கும் திசையில் ஓரடி எடுத்து வைத்தாலே கங்கா நீராடல் செய்த பலனும், சிவலோக வாழ்வும் பெற்றவர்கள் ஆகிறார்கள். சிவராத்திரியில் பக்தியுடன் இத்தீர்த்தத்தில் மூழ்கினால், பதினாயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

    மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் மூழ்கி ஈசனை தரிசிப்பவர் தேவர் ஆகிறார்கள். இதில் நீராடல் செய்பவர் அனைவரும் அமிர்தமயமான சரீரம் உடையவர்கள் ஆகிறார்கள்.

    ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கோவிலின் இடது புறத்தில் அனுமதி விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. வலது புறம் அம்மன் சன்னதி உள்ளது.

    அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் இடும்பன், தண்டபாணி, கலைமகள், கஜலட்சுமி, குடவாயிற்குமரன், பைரவர், சந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், சூத முனிவர், சனி பகவான் சப்தமாதர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பரவை நாச்சியார் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இடது புறம் நடராஜர் சன்னதி உள்ளது.

    மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, உள்ளார். மாடக்கோவில் அமைப்பில் உள்ள இக்கோவிலின் மேல் தளத்தில் மூலவர் சன்னதிக்கு முன்பாக பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.

    மூலவர் லிங்கத் திருமேனியாக உள்ளார். மூலவர் சன்னதியில் இடது புறம் தான்தோன்றி நாதர் உள்ளார். கோவிலின் முன்பு குளம் உள்ளது.

    கருடன், சூரியன், தாலப்பிய முனிவர், பிருகு முனிவர் ஆகியோர் இத்தலத்தை வழிபட்டவர்கள் ஆவர்.

    இத்தலத்து சிவபெருமானை தரிசிக்க 24 படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும்.

    இங்கே முருகப்பெருமானை அருணகிரிநாதர் உருகி உருகி திருப்புகழ் பாடியிருக்கிறார் எனும் பெருமை கொண்ட தலம். அம்பாளே துர்கையாக, சக்தியாக, எதிரிகளை அழிப்பவளாகத் திகழும் அற்புதத் தலம் என்று தல புராணம் விவரிக்கிறது.

    இங்கே நடராஜர் சபை அற்புதமாக அமைந்து உள்ளது. நடராஜர் அழகு ததும்பக் காட்சி தருகிறார். மேற்கு நோக்கிய சிவாலயம் அரிது. குடவாசல் கோவில், மேற்கு பார்த்த சிவன் கோவிலாக அமைந்து உள்ளது. அதே போல், கோவிலில் காசி விஸ்வநாதருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது. அவரும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார்.

    கோவிலின் தென்மேற்குப் பிரகாரத்தில், மாலை வழிபாட்டு விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் சக்தி வாய்ந்த விநாயகர் என்கிறார்கள் பக்தர்கள். இவரை வணங்கிவிட்டு, கோணேஸ்வரரையும் அம்பாள் பெரியநாயகியையும் வழிபட்டால், தடைப்பட்ட திருமணங்கள் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும் என்கிறார்கள். இந்த விநாயகருக்கு முன்னதாக, மூஷிக வாகனம் இருக்கிறது. இதற்குக் கீழேயும் சின்னஞ்சிறு விநாயகப் பெருமானை தரிசிக்கமுடிகிறது.

    கோச்செங்கட் சோழன் எழுப்பிய இந்த மாடக்கோவிலில். 24 படிகள் இருக்கின்றன. இந்தப் படிகளைக் கடந்து சென்றால், நம் வாழ்க்கையை உயர்த்தக் காத்திருக்கும் கோணேஸ்வரரை தரிசிக்கலாம்.

    குடந்தையின் மகாமக விழாவுடன் தொடர்பு கொண்டது இந்த குடவாசல் என்கிறது தல புராணம்.

    பிரளயகாலம் வந்து உயிர்கள் அழிவுறும்போது, பிரம்மதேவர் படைப்புக்கு உரிய உயிர்கலன்களை ஒரு அமுதக் குடத்தில் இட்டார். அந்தக் குடம் வெள்ளப்பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது. அப்போது, சிவபெருமான் வேடுவ வடிவில் வந்தார். குடத்தின் மீது அம்பெய்தினார். அந்த அமிர்தக் குடம் உடைந்தது.

    அமிர்தக் குடத்தின் அடிபாகம் விழுந்த இடம் குடமூக்கு என அழைக்கப்பட்டது. பின்னர் இது கும்பகோணம் என்றானது. அமிர்தக் குடத்தின் நடுப்பாகம் விழுந்த இடம், கலயநல்லூர் எனும் சாக்கோட்டை என்றானது. மேல்பாகம் விழுந்த இடம் அதாவது குடத்தின் வாசல் பகுதி விழுந்த இடம் குடவாயில் என்றும் குடவாசல் என்றும் அழைக்கப்படுகிறது.

    தலம், தீர்த்தம், மூர்த்தம் மூன்றுமே போற்றப்படுகிற அற்புதத் தலம் இது. இந்தக் கோவிலின் தீர்த்தம் அமிர்த தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.

    எந்தக் கோவிலிலும் இல்லாத ஆச்சரியம்... கோவிலின் பிரமாண்டமான மதிலில் நந்தியுடன் கருடாழ்வாரும் தரிசனம் தருகிறார். கருடன் , சூரியன், சூத முனிவர், தாலப்பிய முனிவர் முதலானோர் வணங்கி வழிபட்டு, வரம் பெற்றுள்ளனர். திருஞான சம்பந்தர் பாடிப் பரவசம் அடைந்த திருத்தலம் இது.

    திருணபிந்து எனும் முனிவர் கோவிலின் அமிர்தக் குளத்தில் நீராடி, சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். அதில் மகிழ்ந்த சிவபெருமான், முனிவருக்கு அருட்காட்சி தந்தார். இதனால், முனிவர், குஷ்ட நோய் நீங்கப் பெற்றார்.

    எனவே, சருமத்தில் ஏதேனும் நோய் இருப்பவர்கள், குடவாசல் கோணேஸ்வரரை மனதார வேண்டிக் கொண்டு, ஒவ்வொரு சோமவாரத்திலும் (திங்கட்கிழமை), பிரதோஷ நாளிலும் வீட்டிலிருந்தே வேண்டிக் கொள்ளுங்கள். விரைவில் நோய் நீங்கப்பெறு வீர்கள். பின்னர், இங்கு வந்து, சிவனாரை தரிசியுங்கள்.

    கோணேஸ்வரர் பதிகம் பாடினால், கோளாறுகள் அனைத்தும் நீங்கும் என்பது சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கை.

    ஞானசம்பந்தர் இந்த தலத்தில் பாடி அருளிய இரண்டு பதிகத்தைப் பாடி, வீட்டில் விளக்கேற்றி, குடவாசல் கோணேஸ்வரரை மனதார வழிபடுங்கள். 5 பேருக்கு தயிர்சாதம் தானம் வழங்குங்கள். எவ்வளவு பெரிய தீராத நோயையும் தீர்த்தருள்வார் கோணேஸ்வரர் என்பது ஐதீகம். எனவே கும்பகோணம் யாத்திரையில் இங்கு செல்லும் போது நோய் தீர வேண்டிக்கொள்ளுங்கள்.

    • மகான்களை தியானிப்பதன் மூலம் நம் சித்தம் சுத்தமாகிறது.
    • ஜீவ சமாதி என்பது உயிரை உடலுக்குள்ளேயே நிலைபெறச் செய்து அதன் இயக்கத்தை நிறுத்தி விடுவது.

    சித்த புருஷர்களாகிய மகான்கள் சித்தி அடையும் விதங்கள் பலவகைப்பட்டவை. அவர்கள் உடலை விட்டு மறைந்தாலும் உலகை விட்டு மறைவதில்லை. தங்களை வழிபடும் அடியவர்களுக்கு அருளை வாரி வழங்குகிறார்கள் அவர்கள்.

    மகான்களை தியானிப்பதன் மூலம் நம் சித்தம் சுத்தமாகிறது. மனத்துக்கண் மாசில்லாத நிலை தோன்றுகிறது. அதனால் மனத்தில் சாந்தியும் வாழ்வில் நிம்மதியும் ஏற்படுகின்றன.

    கடவுளை வழிபடுவதை விட கடவுளின் அடியவர்களை வழிபடுவதன் மூலம் கூடுதலாகவும் விரைவாகவும் அருளைப் பெறமுடியும் என்கிறார் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

    நேரடியாக சூரிய ஒளி தலையைத் தாக்குகிறது. ஆனால் தலைக்கு அதிகப் பாதுகாப்பு தேவைப்படுவதில்லை. நாம் பொறுத்துக் கொண்டு வெயிலில் நடக்கிறோம்.

    ஆனால் சாலையில் சூரிய ஒளி பட்டுச் சாலை சூடாகி அந்த வெயிலைப் பிரதிபலிக்கிறது. தலையில் தொப்பி இல்லாமலே நடக்க முடிந்த நாம் காலில் செருப்பில்லாமல் நடக்க முடியாது தடுமாறுகிறோம்.

    நேரடி சூரிய ஒளி கடவுளைப் போல. சாலையில் பட்டு வெளிப்படும் சூரிய ஒளி அடியவர்களைப் போல. எனவே அடியவர்களால் வெளிப்படும் அருளுக்கு வலிமை அதிகம் என்பது வாரியார் சுவாமிகளின் விளக்கம்.

    அருளை வாரி வழங்கும் மகான்கள் பல விதங்களில் உடலை உகுத்துப் பரிபூரணம் அடைகிறார்கள். அவர்களின் சமாதிகள் பாரத தேசமெங்கும் பல இடங்களில் இருக்கின்றன.

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், தில்லைக்குச் சென்றார். தில்லை மூவாயிரவரான அந்தணர் கனவிலும் நந்தனார் கனவிலும் சிவபெருமான் தோன்றினார். நந்தனார் அக்கினிப் பிரவேசம் செய்துவிட்டுத் தன்னை தரிசிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார் சிவபெருமான்.

    அவ்விதமே தில்லை மூவாயிரவரைத் தீ மூட்டச் சொல்லி நந்தனார் அந்தத் தீயில் மூழ்கி எழுந்தார். பின் கடவுள் இட்ட கட்டளைப்படி நடராஜர் சன்னதிக்குச் சென்று அவரைத் தரிசித்துப் பரவச நிலையில் மூழ்கி நடராஜருடனேயே ஐக்கியமாகி விட்டார் என்ற செய்தியைச் சொல்கிறது சேக்கிழார் எழுதிய பெரிய புராணம்.

    திருப்பாவை என்ற உன்னதமான பக்திப் பாசுரத்தை எழுதிய ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ரங்கநாதரையே மணப்பேன் என உறுதி பூண்டிருந்தாள். அவள் திருவரங்கத்திற்கு அழைத்துவரப்பட்டாள். பக்தியின் உச்ச நிலையில் இருந்த அவள், ரங்கநாத விக்கிரகத்துடன் கலந்து மறைந்தாள் என்கிறது புனிதமே வடிவான ஆண்டாளின் தூய திருச்சரிதம்.

    இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட மகான் கபீர்தாசர் சித்தி அடைந்தபோது, அவரின் இந்து அடியவர்களும் முகம்மதிய அடியவர்களும் அவர் உடலை வைத்துக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டார்கள். அவர் உடலை இந்து முறைப்படி எரிப்பதா, முகமதிய முறைப்படி மண்ணில் புதைப்பதா என்பதே சண்டைக்கான காரணம்.

    இதைச் சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சடலம் திடீரென எழுந்து நின்றதாம். உங்கள் ஒற்றுமைக்காகத் தானே பாடுபட்டேன்? என் உடலை வைத்துக்கொண்டு சண்டை போடுகிறீர்களே? வெட்கமாக இல்லையா? எனக் கேட்டுவிட்டு அந்தச் சடலம் மீண்டும் போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டதாம்.

    சற்றுநேரம் காத்திருந்த அடியவர்கள் பின்னர் போர்வையைத் திறந்து பார்த்தார்கள். அங்கே சடலமெதுவும் இல்லை. பதிலாக ரோஜாக் குவியல்தான் இருந்ததாம்.

    அந்த ரோஜாக் குவியலில் பாதி எரிக்கப்பட்டதாகவும் பாதி புதைக்கப்பட்டதாகவும் சொல்கிறது கபீர்தாசரின் கதை!

    ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டுப் பின்னர் சித்தி அடைந்தார். அவர் சித்தி அடைந்த நேரத்தில் அவர் மனைவியான தூய அன்னை சாரதா தேவி அவர் அருகில் இல்லை.

    பரமஹம்சர் சித்தி அடைந்த விவரம், சாரதா தேவியிடம் உடனே தெரிவிக்கப்பட்டது. ஓடோடி வந்தார் சாரதா தேவி. பரமஹம்சரின் உடலைப் பார்த்து காளீ இனி நீ எங்கு போவாய் எனக் கதறினார் என்கிறது பரமஹம்சரின் திருச்சரிதம்.

    பரமஹம்சரின் உடலையே கோவிலாகக் கொண்டு காளியின் அருட்சக்தி அதில் குடியிருந்தது என்ற உண்மையை சாரதாதேவி உணர்ந்திருந்தார் என்பதே இதன் விளக்கம்.

    ஜீவ சமாதி என்பது உயிரை உடலுக்குள்ளேயே நிலைபெறச் செய்து அதன் இயக்கத்தை நிறுத்தி விடுவது. ஜீவ சமாதி அடையும் சித்தர்கள் தாமே விரும்பித் தம் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வார்கள்.

    மகான் ராகவேந்திரர் குழிக்குள் இறங்கி தியானத்தில் அமர்ந்து தம்மை சமாதி செய்விக்கச் சொல்லி விட்டார். இன்றும் மந்திராலயத்தில் உள்ள சமாதியில் அவர் உயிரோடும் உணர்வோடும் இருப்பதாக ராகவேந்திரர் அடியவர்கள் நம்புகிறார்கள்.

    சுதந்திரப் போராட்ட காலத்தில் வரிவசூல் செய்யும் அதிகாரியாக இயங்கிய தாமஸ் மன்றோவுக்கு ராகவேந்திரர் நேரில் தோன்றிக் காட்சி தந்தார் என்ற செய்தியை மன்றோ பதிவு செய்திருக்கிறார்.

    திருச்சி கரூர் அருகே நெரூரில் காவிரிக் கரையில் அமைந்துள்ள சதாசிவப் பிரம்மேந்திரர் சமாதி ஜீவ சமாதிதான். தமிழகத்திலும் பாரதத்தின் பல இடங்களிலும் இப்படிப்பட்ட ஜீவசமாதிகள் பல உள்ளன.

    ஒரு யோகியின் சுயசரிதை என்ற புகழ்பெற்ற தன்வரலாற்றுப் புத்தகத்தை எழுதிய பரமஹம்ச யோகானந்தர், தான் உடலை உகுப்பதாகச் சொல்லிவிட்டே ஏராளமான அடியவர்கள் முன்னிலையில் அமர்ந்த நிலையில் அமரராகி விட்டார்.

    அவர் தன் உடலை விட்டு விலகும்போது அவர் முன்னிலையில் சுமார் எழுநூறு பேர் அமர்ந்திருந்தார்கள். அமெரிக்காவில் போஸ்டன் நகரில்தான் அவர் மகாசமாதி அடைந்தார்.

    தான் உடலை விட்டுவிடப் போவதாக அவர் அறிவித்திருந்ததால் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் அந்த அதிசயத்தைக் காண அங்கே வந்து கூடியிருந்தார்கள். வந்தவர்களிடம் சிறிதுநேரம் உரையாடினார் யோகானந்தர். பின்னர் இப்போது என் உடலை விடப் போகிறேன் என அறிவித்தார். பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்தவாறே உடலை நீத்தார். இந்த நிகழ்வைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள்.

    பரமஹம்ச யோகானந்தரின் குருவான மகான் யுக்தேஸ்வர கிரியும் தான் உடலைத் துறக்கப் போவதை முன்கூட்டியே அறிவித்து அதன் பின்னரே உடலைத் துறந்தார். அதுமட்டுமல்ல, தாம் உடலைத் துறந்த மறுநாளே தன் சீடரான பரமஹம்ச யோகானந்தருக்கு தன் உடலோடு காட்சி கொடுத்தார். 

    பாண்டிச்சேரியில் மகான் ஸ்ரீஅரவிந்தர் சித்தி அடைந்தபோது அவர் உடலைச் சுற்றி ஒரு பொன்னொளி பரவியிருந்தது. ஏராளமான அடியவர்கள் அந்தப் பொன்னொளியை தரிசிக்கும் பேறு பெற்றார்கள். நூற்றுப் பதினோரு மணிநேரம் அந்தப் பொன்னொளி அவர் உடலைச் சூழ்ந்திருந்தது.

    அவர் இதயத்துடிப்பு நின்று அவர் சித்தி அடைந்து விட்டாலும் அவர் உடலில் காலமானதற்கான வேறு எந்தப்புற அறிகுறியும் தென்படவில்லை. இந்த அதிசயத்தை வியந்து மருத்துவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

    பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னை ஸ்ரீஅரவிந்தர் உடலின் அருகே அமர்ந்து அரவிந்தரின் உடலை சமாதி செய்விப்பதற்கான உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

    அந்தப் பொன்னொளி மெல்ல மெல்ல விலகி, அரவிந்தர் ஸ்ரீஅன்னையின் மனத்தில் தோன்றி தன் உடலை சமாதி செய்விக்கலாம் என உத்தரவளித்த பின்னரே அவர் உடல் சமாதி செய்விக்கப்பட்டது.

    ரமண மகரிஷியும் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போலவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத்தான் சித்தி அடைந்தார். அவர் உயிரை உகுத்த அதே கணத்தில் ஒரு வால் நட்சத்திரம் விண்ணில் தோன்றி மேலே சென்று மறைந்தது.

    இந்த சம்பவத்தை கல்கி கிருஷ்ணமூர்த்தி ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார். பிரபல நடனமணி பத்மா சுப்பிரமணியம் தான் சிறுமியாக இருந்தபோது அந்த வால் நட்சத்திரம் தோன்றி விண்ணில் சென்றதைப் பார்த்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

    சென்னை அருகே திருவொற்றியூரில் பட்டினத்தார் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுவர்கள் அவரைக் கூடையால் மூடுவார்கள். அவர் சிரித்துக்கொண்டே வேறோர் இடத்தில் இருந்து வெளிப்படுவார்.

    வியப்படைந்த சிறுவர்கள் மறுபடி அவரைக் கூடையால் மூடுவார்கள். மீண்டும் அவர் வேறோர் இடத்தில் இருந்து தோன்றுவார். இந்த விந்தையான விளையாட்டு கொஞ்ச நேரம் நடந்தது. இறுதியில் ஒருமுறை சிறுவர்கள் அவரைக் கூடையால் மூடியபோது அவர் எங்கிருந்தும் வெளிப்படவில்லை. காத்திருந்த சிறுவர்கள் பிறகு மெல்லக் கூடையைத் திறந்து பார்த்தார்கள்.

    அங்கும் அவர் இல்லை. ஆனால் உள்ளே புதிதாய் ஒரு சிவலிங்கம் முளைத்திருந்தது. அவர் சித்தி அடைந்து சிவலிங்கமாக மாறியிருந்தார். திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் சமாதிக் கோயில் அப்படி அமைந்ததுதான்.

    மகான் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் சித்தி அடைந்த விதம் ஆச்சரியகரமானது. பூட்டிய அறையின் உள்ளே தியானத்தில் அமர்ந்து, பஞ்ச பூதங்களால் ஆன தன் உடலைப் பஞ்ச பூதங்களிலேயே பிரித்துக் கரைத்து ஜோதியில் கலந்துவிட்டார் அவர். பின்னர் அறையைத் திறந்து பார்த்தபோது அவர் இருந்ததற்கான எந்தச் சுவடுமே அந்த அறையில் காணப்படவில்லை.

     

    மகான்கள் பல விதங்களில் சித்தி அடைகிறார்கள். அவர்களின் பொன்னுடல் மறைந்தாலும் அருளுடல் மறைவதில்லை. அடியவர்கள் வேண்டும் போதெல்லாம் அருளை வாரி வாரி வழங்குகிறார்கள் அவர்கள்.

    மகான்களைப் பிரார்த்திப்பதன் மூலமும் மகான்கள் காட்டிய வழியில் நடப்பதன் மூலமும் நாம் நம் வாழ்வில் மேலான நிலையை அடைய முடியும். சாந்தியும் நிம்மதியும் கொண்ட மனநிலையை அடைவதற்கு மகான்களைப் பிரார்த்திப்பதே சிறந்த வழி.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • முதுமையின் உடலில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிதை மாற்றங்கள் அதற்கு முக்கிய காரணமாக உள்ளன.
    • பித்தம் தணிக்கும் உணவும், மருந்தும் முதுமையில் சிறுநீரகக் கற்களை உண்டாக்காமல் தடுக்க உதவும்.

    முதுமையில் 7 ஆண்களில் ஒருவருக்கும், 13 பெண்களில் ஒருவருக்கும் சிறுநீரகக் கல்லடைப்பு நோய் தோன்றுவதாக உள்ளது. சிறுநீரகக் கல்லடைப்புக்கு எளிமையான பல மருத்துவ முறைகள் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டு இருப்பினும், முதுமையில் பலருக்கு இது சவாலாக உள்ளது.

    சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் பல்வேறு வகையாக உள்ளன. கற்கள் உருவாக பல்வேறு காரணங்களும் உள்ளன. அதில் கால்சியம் ஆக்சலேட் கற்களும், யூரிக் அமில கற்களும், கிருமித் தொற்றால் உருவாகும் கற்களும் முக்கிய இடம் பிடிக்கின்றன. குறிப்பாக யூரிக் அமில கற்களே முதுமையில் அதிகம் பேருக்கு உண்டாவதாக ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன. முதுமையின் உடலில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிதை மாற்றங்கள் அதற்கு முக்கிய காரணமாக உள்ளன.

    கால்சியம் வகை சிறுநீரகக் கற்கள் பொதுவாக 20-30 வயதுகளில் உண்டாகக்கூடும். சிறுநீரில் உள்ள கால்சியம் (சுண்ணாம்பு) படிமங்கள், பாஸ்பேட், கார்பனேட் அல்லது ஆக்சாலேட் ஆகியவற்றுடன் ஒன்றுகூடி கற்களை உண்டாக்குவதாக உள்ளது. யூரிக் அமில வகை கற்கள் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிகம் உண்டாவதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கூடுதலாக சில வகை மருந்துகளும் சீறுநீரகக் கற்களை உண்டாக்க காரணமாக உள்ளன.

    மாபெரும் பாரம்பரிய அறிவை மையமாகக் கொண்ட சித்த மருத்துவம் சிறுநீரகக் கல் உண்டாவதற்கு, உடலில் அதிகமாகும் பித்தமே முக்கிய காரணமாகின்றது. எனவே பித்தம் தணிக்கும் உணவும், மருந்தும் முதுமையில் சிறுநீரகக் கற்களை உண்டாக்காமல் தடுக்க உதவும்.

    சிறுநீரகக் கற்கள் என்றாலே சித்த மருத்துவத்தை நாட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இயற்கையிலே உண்டு. ஏனெனில் சித்த மருந்துகள் சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும் என்பது தான். உண்மையில் சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மையுள்ள பல மூலிகைகளும், பற்ப செந்தூர மருந்துகளும் சித்த மருத்துவத்தில் உள்ளன என்பது சிறப்புமிக்கது.


    சித்த மருத்துவ மூலிகைகளில் மூக்கிரட்டை, நெருஞ்சில், யானை நெருஞ்சில், நன்னாரி, மாவிலங்கப்பட்டை, சிறுகண்பீளை, வாழைத்தண்டு, அருகம்புல், கொள்ளு, நாயுருவி ஆகியன சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்ற பலன் தருவதாக உள்ளன. அஞ்சறைப்பெட்டி சரக்குகளில் புளி, வெந்தயம், சீரகம், சோம்பு ஆகியனவும் சிறுநீரகக் கற்களை கரைக்கும் தன்மை உடையன.

    மேலும் சிறப்பாக தாதுக் கலப்புள்ள மருந்துகளான சிலாசத்து பற்பம், நண்டுக்கல் பற்பம், வெங்கார பற்பம் ஆகிய பல மருந்துகள் கற்களை உடைத்து, சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றுவதாக உள்ளன. கீழாநெல்லி, நெல்லி ஆகிய மூலிகைகள் கற்கள் உருவாவதை தடுப்பதாகவும் உள்ளன.

    பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் சிறுநீரக கற்களைக் கரைக்க பயன்படுத்தப்படும் மூலிகையாக உள்ளது சிறுகண்பீளை தான். இதில் உள்ள முக்கிய தாவர வேதிப்பொருட்களான 'குர்செடின்' மற்றும் 'பெட்யூலின்' ஆகியவை அதன் சிறுநீர்பெருக்கி செய்கைக்கும், சிறுநீரகத்தில் உள்ள கற்களின் அளவைக் குறைக்கும் செய்கைக்கும் காரணமாக உள்ளன.

    மேலும் சிறுகண்பீளை சிறுநீரில் உள்ள கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட் ஆகிய படிமங்களின் வெளியேற்றத்தை அதிகரிப்பதன் மூலமும், மெக்னீசியத்தின் அளவைப் பராமரிப்பதன் மூலமும் சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுப்பதாக உள்ளதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    சிறுபீளையை தனி கசாயமிட்டு குடித்து வந்தாலும் அல்லது சிறுபீளையுடன் கற்களை கரைக்கும் பிற மூலிகைகளான நெருஞ்சில்முள், மூக்கிரட்டை, மாவிலங்கப்பட்டை ஆகியவற்றை யும் சேர்த்து கசாயமிட்டு குடித்து வந்தாலும் சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும். மேலும் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவும். 'சிறுபீளைக் குடிநீர்' எனும் சித்த மருந்தும் நல்ல பலன் தரும்.

    அதே போல் சிறுநீரகக் கற்களை கரைக்க பயன்படும் எளிய மூலிகை கீழாநெல்லி. இதன் இலைப்பகுதியில் உள்ள 'பில்லாந்தின்' எனும் வேதிப்பொருள் சிறுநீரகக்கல் உருவாக்கத்தின் பல நிலைகளில் தலையிட்டு கற்கள் உருவாவதைத் தடுப்பதோடு, கற்களை கரைக்கவும் உதவுவதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


    தொடர்ந்து 45 நாட்கள் வரை கீழாநெல்லியை எடுத்துக்கொள்ள சிறுநீரகக் கற்கள் கரைவதுடன் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். சிறுநீரகக் கல் நோய்நிலையில் உள்ள முக்கிய பிரச்சனை என்னவெனில் 50% பேருக்கு மீண்டும் கல் உருவாக வாய்ப்புள்ளதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய நிலையில் கீழாநெல்லி மீண்டும் கல் உருவாவதை தடுக்க உதவும்.

    எளிமையாகக் கிடைக்கும் சித்த மருத்துவ மூலிகையான நெருஞ்சில் முள்ளினை கசாயமாக வைத்துக் குடித்து வருவதும் சிறுநீரகக் கற்களை கரைக்க உதவும். இதன் சிறப்பு என்னவெனில் சிறுநீரகக் கற்களை கரைப்பதோடு மட்டுமின்றி, இரத்தத்தில் அதிகமாகும் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் இவற்றையும் குறைத்து சிறுநீரகத்தை காக்க உதவுவதாக எலிகளில் நடத்திய சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. சிறுநீரைப் பெருக்கும் தன்மையும் இதற்குண்டு

    வளர்ச்சிதை மாற்றக் கோளாறால் உண்டாகும் மற்றொரு வகையான கற்கள் ஆக்சலேட் வகை கற்கள் தான். அத்தகைய கற்களைக் கரைக்க உதவும் எளிய மூலிகையாக மூக்கிரட்டை கீரை உள்ளது. இதனை அவ்வப்போது சூப் அல்லது கசாயம் வைத்து குடித்து வருவது ஆக்சலேட் கற்களைக் கரைக்க உதவுவதோடு சிறுநீரக செயல்திறனை அதிகரிக்க உதவும்.

    அதேபோல் மீண்டும் மீண்டும் சிறுநீரகக் கற்கள் உருவாக்கத்தைத் தடுக்க வெந்தயம் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெந்தயம் உட்கொள்வதால் கால்சியம் ஆக்சலேட் வகை கற்கள் மீண்டும் உருவாகாமல் தடுக்கப்படும் என்கின்றன மொரோக்கோ நாட்டில் நடைபெற்ற ஆய்வின் முடிவுகள்.

    சீரகம் மற்றும் கருஞ்சீரகம் இரண்டுமே சிறுநீரகக் கல் உற்பத்தியைத் தடுத்து சிறுநீரக செல்களை காக்க உதவுவதாக பல்வேறு ஆய்வுமுடிகள் தெரிவிக்கின்றன. ஆகவே முதுமையில் சீரகம், கருஞ்சீரகம் ஆகிய அஞ்சறைப்பெட்டி சரக்குகளை அவ்வப்போது கசாயமிட்டு குடித்து வருவதும் நல்லது. அஞ்சறைப்பெட்டி சரக்கான சோம்பு கசாயமும் சிறுநீரகக் கற்களை கரைக்கும் இயற்கை பானமாக உள்ளது.

    சீரகத்தில் உள்ள 'குமினால்டிஹைடு' மற்றும் கருஞ்சீரகத்தில் உள்ள 'தைமோகுயினோன்' வேதிப்பொருட்கள் அதன் மருத்துவ தன்மைக்கு காரணமாகின்றன. உடலில் உண்டாகும் பல்வேறு படிமங்களை சிறுநீரகத்தில் படியாமல் தடுத்து சிறுநீரில் வெளியேற்றுவதாக வாழைத்தண்டு உள்ளது. அவ்வப்போது அருகம்புல் கசாயமாக்கி குடித்து வருவதும் நன்மை பயக்கும்.

    சிறுநீரகக்கற்கள் உருவாக்கத்திற்கு உணவு முறையும், குடிதண்ணீரும் முக்கிய பங்காற்றுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகளும், காற்றேட்டப்பட்ட பானங்களும் கல் உருவாவதில் கூடுதல் பங்களிப்பை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே இயற்கையான பானங்களை நாடுவதும், இயற்கையான உணவை உண்பதும் கற்கள் உருவாக்கத்தை தடுக்க உதவும்.

    நாட்பட்டு சிறுநீரகத்தில் இருக்கும் சிறுநீரகக்கல் முதுமையில் நாட்பட்ட சிறுநீரக நோய் உண்டாவதற்கு வழிவகுக்கும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையோடு மருத்துவ ஆலோசனைப்படி மருத்துவம் மேற்கொள்ளுதல் அவசியம்.

    முதுமையில் சர்க்கரை நோயுள்ள பலருக்கு சிறுநீரகக்கல் உண்டாக வாய்ப்புள்ளதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் பருமன் உள்ள நபர்களுக்கும் யூரிக் அமில கற்கள் உண்டாக வாய்ப்பு அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனுக்கு காரணமாகும் இன்சுலின் தடையே யூரிக் அமில கற்களை உண்டாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆகவே சரியான உணவு முறையை பின்பற்றுவது அவசியமாகிறது.

    டேஷ் உணவு முறையானது (Dash Diet) சிறுநீரகக்கல் உருவாவதை தடுக்கும் வல்லமை படைத்தது. இது அதிகரித்த இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு, சிறுநீரகக்கல் உருவாகும் வாய்ப்பினையும் தடுக்க உதவும் என்கின்றன ஆய்வு முடிவுகள். உணவில் அதிக அளவு பழங்களும், காய்கறிகளும் சேர்த்துக்கொள்வதும், கொழுப்புச் சத்துள்ள உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை குறைந்த அளவு உண்பதும் டேஷ் உணவுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.


    பொதுவாகவே புளிப்பான பழங்களை எடுத்துக்கொள்வது சிறுநீரகக்கற்களை கரைக்க உதவும். இருப்பினும் முதுமையில் வயிற்றில் அமில சுரப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் வாதம் அதிகரித்த நிலையில் உள்ளவர்கள் அவற்றை குறைவாக எடுப்பது நல்லது. ஏனெனில் "புளி துவர் விஞ்சு கறியால் வாதம் பூரிக்கும்" என்கிறது சித்த மருத்துவம்.

    சிறுநீரகக்கல் நோய்நிலையில் முள்ளங்கி, புடலங்காய், வெண்பூசணிக்காய், வெள்ளரிக்காய் ஆகிய நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. தேநீர், காபி குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கேரட், பப்பாளி ஆகியவற்றை அடிக்கடி சாறாக எடுத்துக்கொள்வது சிறுநீரகக்கல் நோயில் நல்ல பலன் அளிக்கும். இதில் உள்ள வைட்டமின்-ஏ சத்து கல் உருவாவதை தடுக்கும் தன்மையை பெற்றுள்ளது.

    சாதாரணமாக 5 மில்லிமீட்டர் அளவுள்ள கற்கள் வரை போதுமான தண்ணீர் குடித்தாலே வெளியே வந்துவிடக்கூடும். கற்கள் அளவு அதை விட கூடுதலாக இருப்பின் முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகின்றது.

    முதுமை என்பதே பல்வேறு நோய்களுக்கு ஆதாரமான நிலை தான். மருந்து சீட்டு பரிந்துரைப்படி எத்தனை எத்தனை மருந்துகள் எடுத்துக்கொள்வது என்பது முதுமையின் மனதை உடைக்கும். இருப்பினும் முதுமைக்கு தேவை அறம் சார்ந்த மருத்துவமும், கூடவே கொஞ்சம் அக்கறையும் தான். இவ்விரண்டால் ஆயுள் நீளும், ஆரோக்கியமும் செழிக்கும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • மலைக்கோவிலுக்கு செல்வதற்கு அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
    • கொரோனா காலக்கட்டத்தில் கூட இந்த ஆலயத்தில் தடையில்லாமல் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தோரணமலை முருகன் கோவில் தென்றல் வீசும் தென்காசி மாவட்டத்தில் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

    இது ஆதிமுனி அகத்தியரும் தேரையரும் தவமிருந்து மாந்தர்களின் நல்வாழ்வுக்காக சித்த மூலிகை ஆராய்ச்சி செய்த தெய்வீக மலை.

    காசிவர்மன் என்ற மன்னனின் தலைவலியைப் போக்க அகத்தியர் கபால அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரது சீடர் ராமதேவர் கலசத்தில் தண்ணீரை வைத்து அலம்ப, தலையில் இருந்த தேரை துள்ளிக்குதித்து தண்ணீருக்குள் விழுந்தது. தக்க சமயத்தில் சமயோசிதமாக செயல்பட்டதால் ராம தேவருக்கு தேரையர் என்ற பெயர் ஏற்பட்டது. அவரது ஜீவசமாதி இத்தலத்தில் தான் உள்ளது. இதனால் மருத்துவ படிப்புக்கு முயற்சி செய்பவர்கள் இங்கு வந்து வழிப்பட்டு பயன்பெறுகிறார்கள்.

    இத்தகைய சிறப்புபெற்ற இம்மலையெங்கும் மூலிகைகள், ஆங்காங்கே நீர் சுரக்கும் சுனைகள்... இவற்றுக்கு மத்தியில் முருகப்பெருமான் இயற்கையாக அமைந்த குகைக்குள் கிழக்கு நோக்கி தோரணையோடு வீற்றிருக்கிறார்.

    இவ்வுலக வாழ்வில் நலமும் வளமும் தானே மனிதனுக்கு அடிப்படை தேவை. அதனை இத்தலத்து முருகன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வள்ளல் போல் அள்ளி அள்ளி வழங்குகிறார். நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைக்கிறார்.

    சுமார் 800 அடி உயரம் கொண்ட தோரணமலை உச்சியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க 1193 படிகள் ஏற வேண்டும். பக்தர்கள் இளைப்பாறி செல்வதற்காக மலைப்பாதையில் 6 இடங்களில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முருகன் சன்னிதிக்கு அருகில் அவன் கருணை போல் வற்றாத ஊற்றெடுக்கும் தீர்த்தம் உள்ளது. அதிலிருந்து நீர் கொண்டு வந்து தான் முருகனுக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    மகனுக்கு அருகில் அன்னை இருப்பது போல் இங்கு முருகன் சன்னதிக்கு எதிரே பத்திரகாளியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். மலையேறி வரும் பக்தர்கள் அன்னையை வழிபட்ட பின்னரே முருகனை தரிசிக்க வேண்டும். மலையடி வாரத்தில் வல்லப விநாயகர், பாலமுருகன் சன்னதிகள் உள்ளன. உற்சவ மூர்த்தியும் இங்கேதான் உள்ளது. மலையேற முடியாதவர்கள் உற்சவ மூர்த்தியை வழிபட்டு செல்வார்கள்.

    சிவன், கிருஷ்ணன், லட்சுமி, சரஸ்வதி மற்றும் நாகர், சப்த கன்னியர், கன்னிமாரம்மன், நவகிரக சன்னதிகளும் இங்கு உள்ளன.

    மலைக்கோவிலுக்கு செல்வதற்கு அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இங்கு திருவண்ணாமலை போல் பவுர்ணமி தோறும் கிரிவலமும் நடைபெறுகிறது. கிரிவல பாதை 6 1/2 கி.மீட்டர் சுற்றளவு கொண்டது. கிரிவலத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கோவிலில் நடக்கும் வருண கலச பூஜை சிறப்புடையது. தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைதோறும் இந்த கலச பூஜை வழிபாடு நடத்தப்படுகிறது. உலகுக்கே உணவூட்டும் விவசாயம் செழிக்கவும் உழவர்களின் வாழ்வு ஏற்றம் பெறவும் இந்த வருண கலச பூஜை நடத்தப்படுகிறது.

    அது சமயம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் தாங்கள் சாகுபடி செய்ய வைத்திருக்கும் விதை, நாற்று உள்ளிட்ட இடுபொருள்களை கொண்டு வந்து பூஜையில் வைப்பர். மலையில் இருந்து 21 கலசங்களில் தீர்த்தம் எடுத்து வரப்படும். அதைக் கொண்டு உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்து பூஜை நடத்தப்படும்.

    தமிழ்ப்புத்தாண்டு அன்று இந்த வழிபாடு மிகவும் விசேஷமாக நடத்தப்படும். இதில் ஏராளமான விவசாய பெருமக்கள் கலந்து கொள்வார்கள். அன்றைய பூஜையில் விவசாய இடு பொருட்களுடன் ஏர்கலப்பை, பரம்பு அடிக்கும் மரம், நீர் இறைக்கும் கூனை உள்ளிட்ட பல்வேறு வேளாண்மை கருவிகளையும் வைத்து வழிபடுவார்கள்.

    இந்த நிகழ்வில் விவசாயிகள் கவுரவிக்கப்படுவார்கள். மேலும் அவர்கள் கையால் சமூக சேவையாளர்களுக்கு தோரணமலையான் விருதும் வழங்கப்படும். அன்று நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும். 

    இதற்கு அடுத்து தைப்பூசத் திருவிழா இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகனின் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வழிபடுவார்கள். காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். காண்பதற்கு பக்தி பரவசமாக இருக்கும்.

    இதுவரை நாம் பார்த்தவையெல்லாம் பொதுவாக எல்லா கோவில்களிலும் நடைபெறுவது போன்ற பூஜை, வழிபாடு, திருவிழா பற்றிய செய்திகள் தான்..

    இனி சொல்லப் போகும் விசயங்கள் தான் புதுமையானது, தனித்துவமானது. "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு" என்பார்களே... அது போன்று இந்த ஆலய நிர்வாகம் சார்பில் பல்வேறு சமூக சேவைகள் அருள் பணியாக செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் கூறுவதை பார்ப்போம்... 

    தொடக்கத்தில் அறங்காவலராக இருந்த எனது தந்தையார் கே.ஆதிநாராயணன் அவர்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளால் இக்கோவில் புகழ்பெற தொடங்கியது. அவர் விட்டு சென்ற பணிகளை பக்தர்களின் உதவிகளோடு நான் செய்து வருகிறன்.

    இப்பகுதி இளைஞர்களின் நலனுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் மலையடிவாரத்தில் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டு உள்ளது. இளைஞர்கள் இந்த விளையாட்டுத் திடலை பயன்படுத்தி வருகிறார்கள். போலீஸ், ராணுவம் போன்ற சீருடை பணியாளர் தேர்வுக்கு ஆயத்தமாகும் இளைஞர்கள் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற பயிற்சிகளை பெறுகிறார்கள்.

    இங்கு அவர்கள் குளிக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு சாப்பாடும் வழங்கப்படுகிறது. சாப்பிட்ட பின்னர் அவர்கள் படிப்பதற்கு நூலக வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நூலகத்தில் சுமார் 2,500 புத்தகங்கள் உள்ளன. ஆன்மிகம், இலக்கியம், அறிவியல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் உள்ளன. இதன் மூலம் சுற்று வட்டார கிராமப்புற மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

    மாணவர்களின் வாசிப்பு மற்றும் மனப்பாடத்திறனை மேம்படுத்துவதற்காக ஞாயிறுதோறும் திருக்குறள், திருவாசகம், தேவாரம் மற்றும் பக்தி பாடல்களை ஒப்பிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுகிறோம். 

    கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது ஆங்கிலம் தான். எனவே ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேசுவதற்கும் பயிற்சி அளிக்கிறோம். இதற்காக நூலகத்துடன் அமைந்த டிஜிட்டல் படிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து சேவைகளும் முற்றிலும் இலவசமாகவே வழங்குகிறோம்.

    மேலும் பக்தர்கள் உதவியுடன் ஏழை பெண்களுக்கு சீர்கொடுத்து திருமணமும் நடத்தி வைக்கிறோம், அதுமட்டுமல்ல அவர்களுக்கு பேறுகால உதவியும் செய்யப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு பெட்டகம் வழங்குகிறோம்.

    அது மட்டுமல்ல முதியோர் காப்பகமும் இங்கு செயல்படுத்தப்படுகிறது. தற்போது ஆதரவற்ற ஐந்து தம்பதியர் வரை தங்கும் வசதி உள்ளது. அவர்களுக்கு வேண்டிய உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.

    கொரோனா காலக்கட்டத்தில் கூட இந்த ஆலயத்தில் தடையில்லாமல் அன்னதானம் வழங்கப்பட்டது. பார்சல் செய்து ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

    தோரணமலை முருகன் வேண்டுபவர்களுக்கு வேண்டியதை அருளுகிறான். இதனால் பயனடைந்த பக்தர்கள் தங்களால் இயன்ற வகையில் மேற்கண்ட சமூக சேவைகளுக்கு உதவி செய்து வருகின்றனர். இதில் பங்குகொண்டு இறையருள் பெற விரும்புவோர் 9965762002 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

    • சுக்கிரனுக்கு உரிய திசை என்று கிழக்கு திசையை சொல்வார்கள்.
    • ஒவ்வொருவர் ஜாதக அமைப்பிலும் சுக்கிரனின் தன்மை மாறுபடும்.

    ஒருவர் செல்வ செழிப்புடனும், மகிழ்ச்சியுடனும் ஆடம்பரமாக சொகுசாக வாழ்கிறார் என்றால் அவரது ஜாதகத்தில் சுக்கிர பகவான் மிக மிக நல்ல இடத்தில் அனுகூலமான அம்சங்களுடன் இருக்கிறார் என்று அர்த்தம். அதனால்தான் புதிய வசதி வாய்ப்புகளுடன் வாழ்பவர்களை பார்த்ததும் சிலர், "உனக்கென்னப்பா.... சுக்கிர திசை...." என்று சொல்வதை பார்த்து இருக்கலாம்.

    சுக்கிர பகவான் பெரும்பாலும் கெடுதல் செய்யவே மாட்டார். 64 கலைகளுக்கும் அதிபதியான இவர் ஒவ்வொருவர் வாழ்விலும் நல்ல விசயங்களை செய்யக்கூடியவர். இதனால் இவரை களத்திரகாரகன் என்றும் சொல்வார்கள்.

    அசுர குருவாக இருந்தாலும் உலக இன்பங்களுக்கும் வசதியான வாழ்க்கைக்கும் அடிப்படை அமைத்து கொடுப்பது சுக்கிரன்தான். பொதுவாக ஒருவரது இல்வாழ்க்கை, வாகன வசதி, உடல் அமைப்பு, கல்வி, அழகு, வியாபாரம் போன்றவற்றுக்கு சிறப்பு சேர்ப்பது சுக்கிர பகவான்தான்.

    சுக்கிரனுக்கு உரிய திசை என்று கிழக்கு திசையை சொல்வார்கள். இந்திராணியை இவரது அதிதேவதை என்று குறிப்பிடுவார்கள். அதுபோல சுக்கிரனுக்குரிய ரத்தினமாக வைரத்தை சொல்கிறார்கள். அதனால்தான் சுக்கிர பகவான் நன்றாக இருந்தால் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நகைகள் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பார்கள்.

    ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சரியான இடத்தில் வலிமையாக இருந்தால் அவரது இல்வாழ்க்கை நினைத்தபடி அமையும். குறிப்பாக காதலிப்பவர்கள் சுக்கிரன் உதவியுடன் தாங்கள் நினைத்தவர்களையே திருமணம் செய்து கொள்ள முடியும்.

    மொத்தத்தில் சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவரது வாழ்க்கையில் செல்வ செழிப்புகளுக்கும், சுகபோகங்களுக்கும் எந்த குறையும் வரவே வராது. அதே சமயத்தில் சுக்கிரன் ஜாதகத்தில் தோஷமான நிலையில் இருந்தால் சில பாதிப்புகளை நிச்சயம் ஏற்படுத்துவார்.


    முதல் பாதிப்பு செல்வசெழிப்பில் சற்று சறுக்கல் உண்டாகும். 2-வது முயற்சிகளில் வெற்றி கிடைக்க காலதாமதம் ஏற்படும். 3-வது திருமண பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடந்தாலும் ஏதாவது ஒரு காரணத்தால் தள்ளி போய்க் கொண்டே இருக்கும். சுக்கிரன் சரியில்லை என்றால் இந்த மூன்றும் ஏதாவது ஒரு ரூபத்தில் தோஷமாக இருப்பதை காண்பித்து விடும்.

    சிலருக்கு தொழில் ரீதியாகவும் தடை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பொதுவாக சுக்கிரன் தோஷத்துடன் அமர்ந்து இருந்தாலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். ஆனால் சிறிய பாதிப்பாக இருந்தாலும் அது ஒருவரது வாழ்வின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடும்.

    எனவே சுக்கிர தோஷம் இருக்கிறதா? என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த சுக்கிர தோஷம் பலமாக உள்ளதா? பலவீனமாக உள்ளதா? என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ப பரிகாரம் செய்தால் போதுமானது.

    ஒருவரின் ஜாதகத்தில் கன்னி வீட்டில் சுக்கிரன் தனித்து அமர்ந்து இருந்தால் அது சுக்கிர தோஷமாக கருதப்படும். கன்னி வீட்டில் சுக்கிரன் நீச்சம் அடைந்து செவ்வாயுடன் சேர்ந்து இருந்தாலும் அது தோஷம்தான். லக்னத்துக்கு 8-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தாலும் தோஷம் என்று குறிப்பிடுவார்கள்.

    லக்னத்தில் இருந்து 3 மற்றும் 12-ம் இடத்தில் சுக்கிரன் மறைந்திருந்தால் அதையும் சுக்கிர தோஷம் என்று அழைப்பார்கள். ஒவ்வொருவர் ஜாதக அமைப்பிலும் சுக்கிரனின் தன்மை மாறுபடும். ஏதாவது ஒரு கெடுதலான கிரகத்துடன் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் அது சுக்கிர தோஷத்துக்கு வழி வகுத்து விடும்.

    ஜோதிடர்களை பொறுத்தவரை சுக்கிர தோஷத்தை அதற்குரிய சரியான தசாபுத்தி வரும்வரை காத்திருந்து பிறகு பரிகாரம் செய்வது நல்லது என்று சொல்வார்கள். இல்லையெனில் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பயம் காட்டுவார்கள். ஆனால் சுக்கிர தோஷத்துக்காக யாரும் பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது.

    மிக மிக எளிய, நம்மால் செய்ய முடிந்த சாதாரண பரிகாரம் மூலமாகவே சுக்கிர பகவானை திருப்திப்படுத்தி விட முடியும். சிவாலயங்களுக்கு செல்லும்போது நவக்கிரக சன்னதிகளை பார்த்து இருப்பீர்கள். அங்கு இருக்கும் சுக்கிர பகவானை மனமுருகி வழிபட்டு வந்தாலே போதும்.


    சில ஆலயங்களில் சுக்கிர பகவான் தனித்து இருப்பார். அத்தகைய ஆலயங்கள் மிக மிக சிறப்பு வாய்ந்தவை. தனித்து சுக்கிர பகவானை வழிபட்டால் சுக்கிர தோஷத்தின் மிகப்பெரிய கெடுதல்களை கணிசமான அளவுக்கு குறைக்க முடியும்.

    வீட்டில் இருந்தபடியே பரிகாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு கைபிடி அளவு வெள்ளை மொச்சையை எடுத்து வெள்ளை துணியில் முடிச்சாக போட்டு கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இரவில் தூங்கும்போது அதை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

    மறுநாள் அதை எடுத்து பத்திரமாக பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் இரவும் தூங்க செல்லும் போது அதை எடுத்து மீண்டும் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். இப்படி அதை 9 நாட்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

    10-வது நாள் அதை எடுத்து நன்றாக வேக வைத்து காக்கைக்கு உணவாக வைத்து விடவேண்டும். சுக்கிரனுக்கு உரிய பரிகாரங்களில் இந்த பரிகாரத்தை பெரும்பாலான ஜோதிடர்கள் பரிந்துரை செய்வது உண்டு.

    வைணவர்கள் சுக்கிர தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. வசதி வாய்ப்பு இருப்பவர்கள் பெருமாளுக்கு அனைத்து விதமான வஸ்திரங்கள், நைவேத்தியங்கள் கொடுத்து அர்ச்சனை செய்து வழிபடலாம். இதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருப்பவர்கள் வீட்டில் இருக்கும் பெருமாள் படத்துக்கு முன்பு விளக்கேற்றி வைத்து வழிபட்டாலே போதுமானவை.

    தானம் செய்வதன் மூலமாகவும் சுக்கிரனை மகிழ்ச்சிப்படுத்த முடியும். ஏழை எளியவர்களுக்கு தயிர் சாதம் கொடுக்கலாம். உடை இல்லாமல் தவிப்பவர்களுக்கு வெள்ளை நிறம் கலந்த உடைகளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தலாம். வெள்ளை நிறத்தை தொடர்பு படுத்தி என்ன தானம் செய்தாலும் அது சுக்கிர தோஷத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் என்பார்கள்.

    நவக்கிரக தலங்களில் சுக்கிரனுக்குரிய தலத்துக்கு சென்று வழிபடுவது மிகப்பெரிய பரிகாரம் ஆகும். தஞ்சை மாவட்டம் கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் ஆலயம் சுக்கிர தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கு தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் முதன்மையான ஆலயம் ஆகும். கும்பகோணத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுக்கிர தோஷ நிவர்த்திக்காக வந்து செல்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் மூலவராக சிவபெருமான் இருந்தாலும் அவரது வயிற்று பகுதியில் சுக்கிரன் இருப்பதாக ஐதீகம். இதன் காரணமாகவே இந்த ஆலயம் நவக்கிரக தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்த ஆலயத்தை சுக்கிரனின் பிரதான ஆலயமாக கருதி மக்கள் வழிபட்டனர்.

    மற்ற நவக்கிரக தலங்களில் அந்தந்த கிரகங்களுக்கு உரிய தனி சன்னதி இருக்கும். ஆனால் கஞ்சனூரில் சிவ பெருமானே சுக்கிரனுக்காகவும் அருள் பாலிக்கிறார். எனவே இந்த ஆலயத்தில் சுக்கிரனுக்கு என்று தனி வழிபாடு எதுவும் கிடையாது. சிவபெருமானை வழிபட்டாலே சுக்கிரனையும் சேர்த்து வழி பட்டதாக கருதப்படும்.

    ஒரு தடவை சுக்கிராச்சாரி யாரால் மகாவிஷ்ணுவுக்கு பாதிப்பு ஏற்பட்ட போது விஷ்ணுவை சுக்கிர தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ள அவர் இந்த தலத்துக்கு வந்துதான் வழிபட்டார். எனவே சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இந்த தலத்துக்கு வந்து சென்றாலே தோஷம் நீங்கி விடுவதாக நம்பிக்கை உள்ளது.

    மிக நல்ல நிலையில் இருந்து சுக்கிரனால் செல்வத்தை இழந்தவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து அக்னீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தாலே போது மானது. இந்த செல்வங்களை மீண்டும் பெற முடியும். பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கஞ்சனூரில் வழிபடுவது உடனடியாக பலன் பெற வழிவகுக்கும்.

    அதுபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி ஆலயமும் சுக்கிரனின் பலத்தை கணிசமான அளவுக்கு ஆற்றலை அதிகரிக்க செய்யும் சிறப்பு கொண்டது. வெள்ளிக்கிழமை இந்த ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். வெண் தாமரை மலர் கொடுத்து வழிபடுவதும் மிகவும் நல்லது.

    வெள்ளிக்கிழமை வீட்டில் மகாலட்சுமி படத்தை அலங்கரித்து நெய் தீபம் ஏற்றி பால் பாயாசம் நைவேத்தியம் படைத்து மகாலட்சுமியை போற்றி பாடி வந்தால் சுக்கிர தோஷம் விலகுவதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

    ஹோமம் செய்வதில் நம்பிக்கை உள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை சுக்கிர ஓரை நேரத்தில் சுக்கிர பரிகார மகாஹோமம் நடத்தலாம். அப்போது உரிய முறையில் சங்கல்பம் செய்து கொண்டால் சுக்கிரன் மூலம் எப்போதும் நல்ல பலன்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

    • ராகு, கேதுவின் நல்லாசி பெற்றவர்கள். எதிரிகளை வெல்லும் வலிமை பெற்றவர்கள்.
    • குரு பகவானின் 5, 9 எனும் சிறப்புப் பார்வை பெறும் போது மட்டும் ராகு கேதுக்கள் சுபத்தன்மை பெற முடியும்.

    சாயா கிரகங்களான ராகு கேதுக்களே சர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேதுக்கள் அமர்ந்த இடமே ஜாதகரின் யோகம் மற்றும் அவயோகத்தை நிர்ணயிக்கின்றன. ஏனெனில் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கர்ம வினைப் பதிவை சுய ஜாதகத்தில் உள்ள ராகு கேதுக்களே வெளிப்படுத்துகின்றன. அதனால் தான் மீள முடியாத வினைப்பதிவில் இருந்து விடுபட சர்ப்ப வழிபாட்டை ஜோதிட முன்னோடிகள் வலியுறுத்தி வந்தனர்.

    யார் இந்த ராகு/கேதுக்கள்?

    விஞ்ஞான ரீதியான விளக்கம்

    பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு குரியனையும் சுற்றுகிறது. ஏனைய கிரகங்களும் அவ்வாறே சூரியனை சுற்றி வருகிறது. பூமியின் துணைகிரகமான சந்திரன் பூமியைச் சுற்றிக் கொண்டே சூரியனையும் சுற்றுகிறது. அவ்வாறு சுற்றி வரும் போது பூமியும் சந்திரனும் ஓரே நேர்கோட்டில் வரும் போது ஓன்றையொன்று இரண்டு இடங்களில் வெட்டிக் கொள்ளும் வெட்டுப்புள்ளியானது ஒன்றுக்கொன்று நேர் எதிரே அமைந்து இருக்கும். அந்த வெட்டுப்புள்ளியே ராகு, கேதுக்கள்.

    சந்திரனின் வடக்கு நோக்கிய பயணத்தின் போது ஏற்படும் வெட்டுப்புள்ளி ராகுவாகவும் தெற்கு நோக்கிய பயணத்தின் போது ஏற்படும் வெட்டுப்புள்ளி கேதுவாகும். இந்த இரு புள்ளிகளாகிய ராகுவும் கேதுவும் ஒளியில் ஏற்படும் நிழல் கிரகம் என்பதால் இவற்றை சாயா கிரகங்கள் என்கிறோம். நிழல் எவ்வாறு எதிர் திசையில் நகர்கிறதோ அவ்வாறே ராகு கேதுக்கள் மற்ற கிரகங்கள் சுற்றும் திசைக்கு எதிரில் சுற்றுகிது. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றின் ஈர்ப்பு சக்தி ஒருங்கிணைப்பால் பிறக்கின்ற விசை சக்தியான ராகு, கேதுக்கள் மனிதர்களின் வாழ்க்கை ஓட்டத்தை மாற்றும் அளவிற்கு பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    புராண விளக்கம்

    தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடைந்து பெற்ற அதத்தை மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்து தேவர்களுக்கு மட்டுமே அதிகமாக பரிமாறிக் கொண்டு இருந்ததை கண்ட "ஸ்வர்பானு" எனும் அசுரன் தன் உருவத்தை தேவர் போல் மாற்றிக் கொண்டு தேவர்களுடன் அமர்ந்து அமுதத்தை உண்டார். இதனை பார்த்த சூரியனும், சந்திரனும் மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணு விடம் கூற தன்னிடம் இருந்த சட்டுவத்தால் தலையை துண்டித்தார். தலையும் உடலும் பிரிந்தாலும் அமுதம் உண்ட காரணத்தால் அவன் இறக்கவில்லை. பின்பு மனம் இரங்கிய மகாவிஷ்ணு உடலை ஒருங்கிணைத்த போது அவசரத்தால் மனித தலை பாம்பு உடல், பாம்பு தலை மனித உடல் என்று இணைத்து விட்டார். மனித தலை, பாம்பு உடல் ராகு என்ற தன்மையும், பாம்பு தலை, மனித உடல் கேது என்ற தன்மையும் பெற்று அழியா தன்மை அடைந்தனர். பூஜை பலத்தால் நிழல் கிரகங்களாக நவகிரக அந்தஸ்து பெற்றனர்.

    சர்ப்ப தோஷத்தை கண்டறியும் எளிய வழி முறைகள்

    சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சந்தேக புத்தி இருக்கும். எதையும் திருட்டுத்தனமாக செய்வார்கள். அதீத தாம்பத்ய உணர்வு, ரகசிய உறவு, நாக்கை நீட்டிக் கொண்டே இருப்பவர், நாக்கை நீட்டி உண்பவர் , வஞ்சம் தீர்ப்பவர்களாக இருப்பார்கள். மிகச் சுருக்கமாக பிள்ளைகளால் பிரச்சினைகளை, மன உளைச்சலை அனுபவிப்பவர்களுக்கு சூட்சம முறையான சர்ப்ப தோஷம் நிச்சயம் இருக்கும்.


    சர்ப்பங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள்

    ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் ஏழாமிடம், இரண்டு எட்டா மிடம் ஆகிய இடங்களில் அமர்வதால் ஏற்படும் தோஷம் சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் அல்லது ராகு கேது தோஷம்.

    3-ல் இருந்தால் சகோதர வழி தோஷம்

    4-ல் இருப்பதால் ஏற்படுவது மாதூர் தோஷம், சொத்து பிரச்சினை

    5-ல் இருப்பதால் ஏற்படுவது புத்திர தோஷம்

    9-ல் இருந்தால் பிதுர் தோஷம்

    ராகு கேது தங்களுடன் சேர்ந்த கிரகங்களின் காரகத்துவங்களையும், அதன் ஆதி பத்திய காரகத்துவங்களையும் பாதிப்படைய செய்வதனால் ஏற்படுத்தும் சர்ப்ப தோஷங்கள். ராகு கேது தங்களின் நட்சத்திரங்களை மற்ற கிரகங்களுக்கு கொடுப்பதன் மூலம் ஏற்படும் தோஷங்கள். ராகு கேதுக்கள் அசுப கிரகங்களின் ராசி யில் உள்ள போது ஏற்படுத்தும் தோஷங்கள்.

    ராகு கேது உச்சம் பெற்று அதன்மூலம் ஏற்படும் தோஷங்கள். இங்கே கூறப்படாத இடங்களான 6, 10, 11, 12 ஆகிய இடங்களில் இருந்தால் தோஷங் களை ஏற்படுத்துவதில்லை. என்றாலும் அவர்களின் காரகத்துவம் சார்ந்த அவர் பெற்ற சுப அசுப தன்மையின் அடிப்படையில் அந்த பாவக காரகத்துவங்கள் பாதிப்படையும். ராகு, கேதுக்கள் சுபத் தன்மை அல்லது பலம் இழக்கும் அமைப்புகள் ராகு, கேது பகை நீசமாக இருந்தால் மட்டுமே உடன் இணையும் கிரகங்கள் பாதிப்படையாது. ஆனாலும் நீசமான சர்ப்ப கிரகங்கள் ஏதாவது நீசபங்க விதிகளின் படி நீசபங்கம் ஆனால் ராகு கேதுக்கள் பலம்பெற்று விடும்.

    குரு பகவானின் 5, 9 எனும் சிறப்புப் பார்வை பெறும் போது மட்டும் ராகு கேதுக்கள் சுபத்தன்மை பெற முடியும். அதாவது குருவோடு ராகு/கேதுக்கள் இணையும் போது அவர்கள் குரு சண்டாள யோகம் ஏற்படுத்தி குருவைப் பார்க்கிறார்கள்.

    குரு ராகுவையோ கேதுவையோ சமசப்த மமாக பார்த்தால் குருவின் பாதி பலத்தை ராகு-கேதுக்கள் எடுத்துக்கொண்டு குருவை பலமிழக்கச் செய்து விடுகிறார்கள். ஆக குரு பகவானின் ஐந்து, ஒன்பதாம் பார்வைகள் ராகு கேதுக்களுக்கு கிடைக்கும் போது மட்டுமே ராகு/கேதுக்கள் சுபத்தன்மை பெறுகிறார்கள்.

    ராகு கேதுகள் எந்த கிரகத்துடனும் சேராத போதும், ராகு கேதுவின் நட்சத்திரத்தில் வேறு கிரகங்கள் இல்லாதபோதும் பலம் இழக்கிறார்கள்.

    லக்ன சுபர்களின் சாரம் பெரும் போதும் சுபர்களால் பார்க்கப்படும் போதும் சுபர்கள் உடன் இணையும் போதும் திதி சூனியம் அடைந்த கிரகத்தின் சாரம் பெறும்போதும் தோஷமுள்ள இடத்தில் இருந்து தோஷ மில்லாத இடத்திற்கு பாவகமாற்றம் அடையும் போது பலம் இழக்கும்.

    6 12-ல் உச்சம் பெறாமல் அமரும்போதும் 5, 9-ல் பலம் இன்றி அமரும்போதும் 10, 11 பாவகத்தில் அமரும் போதும் முழு தீய பலன்களையும் தருவதில்லை.

    நன்மை மட்டுமே செய்யும் ராகு-கேது அமைப்புகள்.

    ராசி அதிபதியோடு சேர்ந்தாலும் பார்த்தாலும், ஆட்சி உச்சம் பெற்றாலும் ராகு, கேது நின்ற நட்சத்திர அதிபதிகள் ஆட்சி ,உச்சம் பெற்றாலோ லக்னத்திற்கு திரிகோண, கேந்திரத்தில் அமைந்தாலோ ராகு/கேதுக்கள் சுப பலனை அதிகமாகவும், அசுப பலன்களை குறைவாகவும் செய்கிறது.


    ராகு, கேதுவின் நல்லாசி பெற்றவர்கள். எதிரிகளை வெல்லும் வலிமை பெற்றவர்கள்.சர்ப்ப தோஷத்தை 4 வகையாக பிரிக்கலாம்

    உத்தம சர்ப்ப தோஷம்

    இந்த அமைப்பு உள்ள ஜாதகருக்கு வெளிப்பார்வையில் தோஷம் உள்ள ஜாதகம் போல் இருந்தாலும் எந்த தீங்கும் செய்யாது. இவர்களின் வம்சாவளியினர் சர்ப்பங்களை ஆராதனை செய்பவர்கள். இவர்களின் குல தெய்வம் கூட புற்றுடன் கூடிய அம்மனாக இருக்கும்.

    அதம சர்ப்ப தோஷம்

    இந்த வகை சர்ப்ப தோஷம் குழந்தை பிறப்பிற்கு முன்பும் பின்பும் சொல்ல முடியாத வகையில் பிரச்சினை தரும். இவை முழுக்க முழுக்க முன் ஜென்மத்தின் கரும வினைப் பதிவே.

    கால சர்ப்ப யோகம்:

    கால சர்ப்ப யோகம் என்பது லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும் ராகு, கேதுவின் பிடியில் அமைந்து இருக்கும். எல்லா கிரகங்களும் ராகுவை நோக்கியே செல்லும். தனித்த ராகு, கேதுவாகவோ, வேறு கிரகங்கள் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் இல்லாத போதும் சுப பலனை நடத்திக் கொண்டே இருக்கும் இதை விபரீத ராஜ யோகம் என்றும் கூறலாம்.

    இவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும். அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சம்பாதிப்பவர்கள். இந்த அமைப்பு பெற்ற ஜாதகத்தில் ராகு, கேதுவிற்கு லக்ன சுபர்களின் தொடர்பு இருக்கும். ராகு, கேதுவின் தசை புத்தி காலத்தில் மிகவும் சிறப்பான பலனை அடைகிறார்கள். உரிய வயதில் கல்வி, திருமணம், குழந்தை பேறு, தொழில் வாய்ப்பு அமையும். இவர்கள் ராகு, கேதுவின் நல்லாசி பெற்ற வர்கள். எதிரிகளை வெல்லும் வலிமை பெற்றவர்கள்.

    காலசர்ப்ப தோஷம்:

    லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும் ராகு, கேதுவின் பிடியில் இருக்கும். அனைத்து கிரகங்களும் கேதுவை நோக்கி செல்லும். தோஷம் 33 வயது வரை மட்டுமே அதன் பிறகே திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் போன்ற அனைத்து சுப நிகழ்வும் ஏற்படும். நாள்பட்ட திருமணம் அமைந்த போதும் வாழ்க்கை நிம்மதிக் குறைவாகவே உள்ளது. இவர்கள் 4 அடி ஏறினால் 10 அடி சறுக்கும்.

    பரிகாரம் சர்ப்ப கிரகங்களால் சுப பலன்களை அனுப விப்பவர்கள் மேலும் சுபத்தை அதிகரிக்க துன்பங்களை அனுபவிப்பவர்கள் இன்னல்களில் இருந்து விடுபட புற்று வழிபாடே சிறப்பானது. ஒவ்வொரு புற்றில் இருக்கும் சர்ப்பத்திற்கும் ஒவ்வொரு வித சக்தி உண்டு. 10 ஆண்டுகளைக் கடந்த சர்பங்கள் தெய்வத்தன்மை பெறுகின்றன. அந்த சர்பங்களின் உடலில் சித்தர்கள் வாசம் செய்கிறார்கள். அந்த புற்றுக்களில் செய்யும் வழிபாடுகள் காரியசித்தி தரும். மேலும் புற்றுக்குள் பால் ஊற்றாமல் மண் பாத்திரத்தில் ஊற்றுங்கள். புற்றுக்குள் இருக்கும் சர்பத்திற்கு எந்த இடையூறும் இல்லா வகையில் வழிபாடு செய்ய வேண்டும்.முறையான புற்று வழிபாடுக்கு பல தலைமுறை சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்யும் வலிமை உண்டு.

    • பல ஆண்டுகள் வேதாளம் சுடுகாட்டில் முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கிய படி இருந்தது.
    • இசையால் ஈர்க்கப்பட்ட விக்கிரமாதித்தன் தேவதத்தை இருக்கும் இடத்திற்கு வந்தான்.

    நம் வீட்டில் பெரியவர்கள் அதிகமாக அடம் பிடிப்பவர்களைப் பார்த்து 'வேதாளம்' என்றும் 'வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டது' என்றும் கூறுவார்கள். யார் அந்த வேதாளம்? எதற்கு அவர் முருங்கை மரத்தில் தொங்குகிறார்?

    புட்பதத்தன் என்பவரும் அவரது மனைவி தேவதத்தையும் தேவ லோகத்தில் தேவர்களுக்கு ஆடை தைத்துக் கொடுக்கும் பணியில் இருந்தனர். புட்பதத்தனுக்கு ஒரு ஆசை இருந்தது. ஒரு அழகான ஆடையினை சிவபிரானுக்கும் பார்வதி தேவிக்கும் தன் கையால் தைத்து கொடுக்க வேண்டும் என்று ஆசை பட்டான். புட்பதத்தன் அது போலவே ஒரு அழகிய ஆடையை தைத்து கைலாயம் சென்றான். அங்கு சென்றவுடன் ஈசனைப் பார்த்த மகிழ்ச்சி. அப்படியே பார்த்தபடி இருந்து விட்டு ஆடையை கொடுக்க மறந்து விட்டான். திரும்பி வரும் வழியில் ஆடையை கொடுக்க மறந்து விட்டோமே என்று சொல்லி திரும்பி கைலாயம் சென்றான். அதற்குள் மிகவும் இருட்டி விடவே கைலாய வாயிலேயே தூங்கி விட்டான்.

    அன்று இரவு சிவபிரான், பார்வதி தேவியிடம் ஒரு முக்கியமான தேவ ரகசியம் ஒன்றினைச் சொன்னார். அதனை வாயிலில் படுத்திருந்த புட்பதத்தன் கேட்டு விட்டான். மறுநாள் காலையில் ஆடையினை சிவபிரானிடம் கொடுத்துவிட்டு தான் தவறுதலாக அந்த ரகசியத்தை கேட்டதற்காக மன்னிப்பு கேட்டான். சிவபிரான் கோபப்பட்டார். இருப்பினும் புட்பதத்தன் உண்மையை கூறி விட்டான் என்பதற்காக அவனை மன்னித்து இந்த ரகசியத்தினை யாரிடமும் கூறக்கூடாது என்று கூறி அனுப்பி வைத்தார்.

    திரும்பி வந்த நாளில் இருந்து புட்பதத்தன் மன நிம்மதி இல்லாதது போல உணர்ந்தான். தவித்தான். கவலை கொண்ட அவனை மனைவி தேவதத்தை தன் கணவனிடம் அவனது மன அழுத்தத்திற்கு காரணம் என்ன என்று கேட்டாள். பல நாள் அவளது கேள்வியினை தவிர்த்த புட்பதத்தன் ஒருநாள் தான் கேட்ட தேவ ரகசியத்தினை கூறி விட்டான். இதனை உணர்ந்த சிவபிரான் புட்பதத்தனை வேதாளமாக மாறி முருங்கை மரத்தில் தொங்கி கேள்விகள் கேட்டபடி இருக்கவும் அவன் மனைவி தேவதத்தை இரவில் வனத்தில் வீணை வாசித்து பிறரை தொந்தரவு செய்தபடியும் இருக்க சபித்தார். பல ஆண்டுகள் வேதாளம் சுடுகாட்டில் முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கிய படி இருந்தது. அங்கு ஒரு முனிவன் வந்தான். முனிவர் என்று கூறாமல் முனிவன் ஒருவன் என்று கூறுவதன் காரணம் அவர் தீய எண்ணம் கொண்டு தவம் புரிபவதால்தான். முனிவன் வேதாளத்தினை தன் அடிமையாக்கிக் கொள்ள நினைக்கிறான். அதன் மூலம் உலகை ஆள வேண்டும் என்று நினைக்கிறான்.

    வேதாளத்தின் சக்திகளை தான் பெற வேண்டும் என்ற தீய ஆசை முனிவனுக்கு எழுகின்றது. அதற்காக தவமும் செய்கிறான். 1000 தலைகளை காணிக்கையாக தனக்கு கொடுத்தால் வேண்டிய வரத்தினை அளிப்பதாக காளிதேவியும் கூறினாள். கேட்ட முனிவனும் 999 மன்னர்களை ஏமாற்றி காளிக்கு அவர்களது தலையை பலி கொடுத்தான்.


    விக்கிரமாதித்தன் என்ற அரசனின் தலையை ஆயிரமாவது எண்ணிக்கையாக பலி கொடுக்க எண்ணினான் முனிவன். விக்கிரமாதித்தனிடம் சென்று காட்டில் உள்ள காளி கோவிலை வணங்கினால் உன் நாடு வளம் பெறும் என்று கூறினான். விக்கிரமாதித்தனும் தன் நாடு வளம் பெறும் என நம்பி முனிவனுடன் சென்றான். இருட்டிவிடவே கோவில் மண்டபத்தில் ஓய்வெடுத்தான். முனிவனும் படுத்து உறங்கிவிட்டான். இரவில் புட்பதத்தனின் மனைவி வீணை வாசித்து கொண்டிருந்தாள். இசையால் ஈர்க்கப்பட்ட விக்கிரமாதித்தன் தேவதத்தை இருக்கும் இடத்திற்கு வந்தான். தேவதத்தையிடம் நீ யார் ஏன் இரவில் வீணை வாசிக்கிறாய் எனக் கேட்டான்.

    தேவதத்தையும் அனைத்தையும் விவரமாகக் கூறினாள். இதனை கேட்ட விக்கிரமாதித்தன் இதிலிருந்து நீங்கள் விடுபட பிராயசித்தம் என்ன? என்று கேட்டான். தேவதத்தை தானும் முருங்கை மரத்தில் தொங்கும் தன் வேதாள கணவனும் காளி கோவில் சென்று வழிபட்டால் இந்த சாபம் நீங்கும் என்றும் ஆனால் வேதாளத்தினை முருங்கை மரத்தில் இருந்து இறக்கி செல்வது கடினம் என்றும் கூறினாள். அவர்களுக்கு கண்டிப்பாய் உதவ விக்கிரமாதித்தன் முடிவு செய்தான். முருங்கை மரத்தில் உள்ள வேதாளத்தினை முதுகில் சுமந்து நடக்க ஆரம்பித்தான். ஆனால் வேதாளமோ விக்கிரமாதித்தனிடம் ஒரு கட்டளை வைத்தது. நான் உன்னை கேள்விகள் கேட்பேன். நீ சரியான பதில் சொன்னால் நான் மீண்டும் முருங்கை மரம் ஏறி விடுவேன். தெரிந்தும் நீ பதில் சொல்லாவிட்டால் உன் தலை வெடித்து விடும் என்றது. விக்கிரமாதித்தன் தலை வெடித்து விடுமோ என்ற பயத்தில் பதில் சொல்ல. வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும். இப்படியே 24 முறை நடந்தது. கடைசியில் எப்படியோ விக்கிரமாதித்தன் சமாளித்து காளி கோவிலை அடைந்து விட்டான். ஆயிரமாவது தலையினை முனிவனால் கொண்டு வர முடியாததால் காளி முனிவனின் தலையை வெட்டினாள். புட்பதத்தனும், தேவதத்தையும் சாப விமோசனம் பெற்றனர். காளி தேவி விக்கிரமாதித்தனை பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்க விக்கிரமாதித்தன் முனிவரால் மரணமடைந்த 999 மன்னர்களும் மீண்டும் உயிர்பெற வேண்டும் என வேண்டினான். காளிதேவியும் அப்படியே அருள 999 மன்னர்களும் உயிர் பெற்றனர்.

    கேரள வழிபாட்டு முறையில் காளி வேதாளத்தின் மீது அமர்ந்து இருப்பது போல ரங்கோலி கோலங்கள் இருக்கும். பொதுவில் மோதிரம், மந்திரம் போன்ற பிரிவுகளின் தலைவர் கந்தர் எனப்படும் முருகர்தான். முருக ஜபம் செய்த ஒருவருக்கு தீய சக்திகளின் தாக்குதல் நீங்கும்.

    உங்களுடன் ஓர் அரிய கோவிலைப் பற்றி நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சிலர் அறிந்து இருக்கும் தகவலாக கூட இருக்கலாம். இருப்பினும் விருப்பமுடைவோர் அனைவரும் அறிந்து கொள்வதற்காக எழுதப்படுகின்றது.

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    தமிழகத்தில் செய்யூர் கந்தசாமி கோவில் என்ற ஒரு கோவில் இருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 82.85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    இங்கு பிரதான தெய்வம் முருகபிரான். இதன் வரலாறு என்று பார்க்கும்பொழுது சூரனை அழிக்க முருகபிரான் சிக்கல் ஊரில் பார்வதி தேவியிடம் வேல் பெறுகின்றார். திருச்செந்தூரில் சூரனை சம்காரம் செய்கின்றார். இதில் சிவபெருமானின் பூத கணங்கள் முருக பிரானுக்கு உதவியாய் இருந்தன. முருகபிரான் சூரனையும் அவனது மகன் ஹிரண்யனையும் அழித்த தோஷம் நீங்க சிவ பெருமானுக்கு பூஜை செய்யத் தொடங்கினார். சிவபிரானை போல சுந்தரர் ரூபத்தில் பூஜை செய்தார். மகனே தந்தைக்கு சேவை செய்ததால் இந்த இடம் செய்யூர் என்றாயிற்று.

    இக்கோவிலில் பிரம்மா சாஸ்தா, விஷ்ணு என பல சந்நதிகள் உள்ளன. இதுவே இந்த கோவிலின் சிறப்பினை கூட்டுவதாக அமைந்துள்ளது. இதனினும் கூடுதலாக பெருமை சேர்க்க இந்த கோவிலுக்கு ஒரு தனி சிறப்பு உள்ளது. இந்த சிறப்பு உலகில் வேறு எந்த கோவிலிலும் இல்லை எனலாம். இந்த கோவில் பிரகாரத்தில் 27 நட்சத்திரங்களுக்கான 27 வேதாளங்கள் உள்ளன. இந்த வேதாளங்கள் முருக பிரானுக்கு யுத்தத்தில் உதவியுள்ளது.

    இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி அன்று சிலர் 4 மணிக்கு மேல் வருவதனை விரும்புகின்றனர். சிவபிரான், மீனாட்சி அம்மனை வணங்கி, முருக பிரானை வணங்கி மேலும் அங்கு எழுந்தருளி உள்ள தெய்வங்களை வணங்கி, கால பைரவரை பூசித்து, பின் அவரவர் நட்சத்திரத்திற்குரிய வேதாளத்திற்கு பூ சாற்றி அர்ச்சனை செய்து, விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்யும் பொழுது அவரவரின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக கூறப்படுகின்றது. தேய்பிறை அஷ்டமி அன்று கோவில் அர்ச்சகர், விநாயகர் பூஜையில் ஆராதித்துபின் வேதாளங்களுக்கு அர்ச்சனை செய்கின்றார். மற்ற நாட்களில் செல்பவர்கள், தானே தீபம் ஏற்றி வழிபடலாம். இந்த வேண்டுதலை முருக பிரான் நிறை வேற்றி வைக்கின்றார் என்பது ஐதீகம். நம்பிக்கை உடையவர்களுக்கான கட்டுரையாக இந்த செய்திகள் எழுதப்பட்டுள்ளது.

    ஒருவருடைய நேரத்தையும், சக்தியையும் டி.வி.யை அதிக நேரம் பார்ப்பதிலும், மிக அதிகமாக யோசிப்பதிலும், உபயோகமற்ற தவறான உறவுகளுடன் செலவழிக்காமலும் இருந்தாலே அவர்கள் முன்னேற்றம் அடைவர்.

    • சினிமா படப்பிடிப்பு என்றதால் அந்த கிராமத்து ஜனங்களும் எங்களை பார்க்க வருவார்கள்.
    • கோபுரத்தின் உச்சியில்தான் காட்சிகளை படமாக்கப் போகிறோம் என்றார்கள். கோபுரத்தை அண்ணாந்து பார்த்தேன். தலை சுற்றாத குறை தான்.

    தஞ்சாவூரு மண்ணு எடுத்து

    தாமிரபரணி தண்ணிய விட்டு

    சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை

    எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா

    அடி அத்தனையும் உன்னைப் போல மின்னுமா?

    தந்தானே தந்தானே

    தந்தானக்குயிலே....

    -இந்த பாடலை இன்று கேட்டாலும் கைகள் தாளம் போடும். இது வெறும் பாடல் அல்ல. இந்த மண்ணின்-பெண்ணின் மகத்துவத்தை வைரமுத்து சார் வார்த்தைகளால் பொம்மை போல் வடித்து கேட்பவர் கண்களின் முன்பு ஆடவும் விட்டிருப்பார்.

    தஞ்சாவூர் பொம்மை தலையாட்டும்தான். அதற்காக என்னையும் ஒரு பொம்மையாக்கி தரையில் நின்று ஆட சொன்னால் பரவாயில்லை. கோபுரத்தின் உச்சி மீது ஏற்றி விட்டு ஆடும்மா என்றால் எப்படி ஆடுவது...?

    அப்படியும் ஆடினேன்... ஆட வைத்துவிட்டார் சேரன். பாரதி கண்ணம்மாவுக்கு பிறகு மீண்டும் சேரனின் 'பொற்காலம்' படத்தில் ஹீரோயினாக நடித்தேன்.

    படத்தில் 'மரகதம்' என்பது என் பெயர் படப்பிடிப்புக்காக மைசூரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சிறு கிராமத்தை தேர்வு செய்திருந்தார்கள். மொத்தமே சுமார் 50 வீடுகள்தான் அந்த கிராமத்தில் இருந்தது.

    அங்கேயே செட் போட்டு படப்பிடிப்பு நடந்தது. சினிமா படப்பிடிப்பு என்றதால் அந்த கிராமத்து ஜனங்களும் எங்களை பார்க்க வருவார்கள்.

    அந்த கிராமத்தில் பழமையான கோவிலும், அதன் பிரமாண்ட கோபுரமும் அழகாக இருந்தது. அதை பார்த்தால் படமாக்காமல் இருப்பாரா சேரன்...?

    'சிங்குச்சா சிங்குச்சா…

    செகப்பு கலரு சிங்குச்சா…

    பச்சை கலரு சிங்குச்சா…

    மஞ்சள் கலரு சிங்குச்சா… இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஆட வைத்த பாடல். ஆனால் அந்த பாடலுக்கு ஆடுவதற்கு நான் பட்டபாடு இருக்கிறதே.. அப்பப்பா..,

    அந்த கோவில் கோபுரத்தில் படமாக்க முடிவு செய்துவிட்டார். படக்குழுவினருடன் கோவில் கோபுரம் அருகே சென்றேன்.


    இந்த கோபுரத்தின் உச்சியில்தான் காட்சிகளை படமாக்கப் போகிறோம் என்றார்கள். கோபுரத்தை அண்ணாந்து பார்த்தேன். தலை சுற்றாத குறை தான்.

    பொதுவாக காட்சி களில் பின்னணியில் தான் கோபுரங்களை காட்டுவார்கள். சேரன் இப்படி கோபு ரத்தின் மீது நின்று ஆட வைத்து காட்சியாக்க நினைக்கிறாரே என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன். எனது தயக்கத்தை புரிந்து கொண்டு 'இதுவரை யாரும் இப்படி காட்சி வைத்ததில்லை. நன்றாக இருக்கும் பாருங்கள்' என்று என்னையும் உசுப்பேற்றினார். சரி. இந்த ரிஸ்க்கையும் எடுப்போமே என்று நானும் தயாரானேன்.

    கோபுரத்தின் மீது ஏறணுமே..? எப்படி ஏறுவது...? கோபு ரத்தின் சிற்பங்களை பிடித்து பிடித்து ஏற முடியாது. கடை சியில் கிரேன் கொண்டு வந்தார்கள். அதன் தொட் டிக்குள் ஏறிக்கொண்டேன்.

    கோபுர உச்சியை நோக்கி கிரேன் உயர் ந்தது. அந்த ரத்தில் நான் தனியாக நின்றது போல் இருந்தது. கோபுரத்தில் ஏறியதும் கீழே பார்த்தால் பயம்... ஆட வேண்டிய இடமோ ஒரு அடி அகலம் தான் இருக் கும்.... லேசாககால் தவறினால் அவ்வளவுதான்! தவறி விழுந்தால் பாதுகாக்க எந்த ஏற்பாடும் கூட கிடையாது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிங்குச்சா சிங்குச்சா என்று ஆட வேண்டுமென்றால் எப்படி இருக்கும்? அவருக்கும் ஆர்வ கோளாறு. எனக்கும் அந்த வயதில் ஆர்வக் கோளாறு. மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு ஆடினேன்.

    படம் வெளி வந்த போது சேரன் சொன்னது போலவே அந்த காட்சி நன்றாக இருந்தது. எல்லோராலும் பாராட்டப்பட்டது. காட்சி மட்டுமல்ல இந்த படத்தின் பல காட்சிகள் எனக்கு புதுப் புது அனுபவத்தை கொடுத்தன. படத்தில் நான் தறி நெசவு செய்பவள்.

    நகர வாசியான எனக்கு இந்த தொழில்கள் தெரியாது. பெண்கள் தறி நெய்வதை பார்க்கும் போதே ஆச்சரியமாக இருந்தது. அந்த காட்சியில் நடிக்க வேண்டு மென்றால் நெசவு பற்றி தெரிந்து கொள்ள வேண் டும் என்ப தற்காக அந்த கிரா மத்து பெண்க ளிடம் சென்று தறி நெய்யும் இடத்தில் அமர்ந்து பார்த்தேன். அவர்களின் கையும், காலும் ஒரே நேரத்தில் மின்னல் வேகத்தில் செயல் பட்டதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தறி குழிக்குள் என்னை நிற்க வைத்து கற்று தந்தார்கள். காரின் ஆக்சி லேட்டர் போல் இரண்டு மிதி கட்டைகள்... ஒரே நேரத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுப்பது போல் மேல் பகுதியில் உள்ள இழுவையை வலது கையால் இழுத்த படியே மிதிக்கும் கட்டையையும் மிதிக்க வேண்டும்.


    ஒவ்வொரு பக்கம் மிதிக்கும் போதும் நூலுடன் ஓடம் அங்கும் இங்கும் ஓடும். அதில் இருந்து வெளிவரும் நூல் தறியில் துணியாகி கொண்டிருக்கும். ஓடம் ஒவ்வொரு பக்கம் செல்லும் போது விழுதை பிடித்து முன்பக்கம் இழுத்து அடிக்க வேண்டும். அப்போதுதான் நூல் நன்றாக நெருங்கும், துணி நன்றாக இருக்கும். மிகவும் வித்தியாசமான தொழில். உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயிற்சியும் கிடைக்கும்.

    நான் அந்த காட்சியில் நடித்ததை பார்த்து உண்மையாகவே நெசவு தொழிலில் ஈடுபடும் பெ ண்களை போலவே இருந்ததாக எனக்கு கற்றுத் தந்த பெண்கள் பாராட்டி னார்கள். இந்த படத்தில் ஹீரோவாக வரும் முரளி மண் பாண்டம் செய்யக் கூடியவர்.

    அவர் என்னை நினைத்தபடி ஒரு பானையை செய்வார். அது கோணல் மாணலாக இருக்கும். ரொம்பவே வெயிட்டாகவும் இருந்தது. மண் பானையை இடுப்பில் வைத்து நடந்து செல்வதே கஷ்டம். அதிலும் இந்த மாதிரி குடத்தை தண்ணீருடன் இடுப்பில் எடுத்து செல்ல வேண்டும். கோணல் மாணலாக அந்த குடம் இடுப்பில் நிற்கவில்லை. இடுப்பில் வைத்திருக்கும் தண்ணீர் பானை நழுவி விழுந்து விட கூடாது. நடக்கும் போது நளினமும் இருக்க வேண்டும். அதற்கேற்ற முக பாவனையும் இருக்க வேண்டும்.

    மொத்தத்தில் இடுப்பில் தண்ணீர் பானையும் இருக்க வேண்டும். அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் நடிப்பில் கவனம் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சவால்களை சந்தித்ததால் தான் சாதிக்க முடிந்தது. மீனா சூப்பரா நடித்து இருக்கிறாள் என்ற பாராட்டையும் பெற முடிந்தது. (உங்கள் மீனாவின் அடுத்த அனுபவம் என்ன....? காத்திருங்கள் அடுத்த வாரம் வரை... பை... பை...) -தொட ரும்.

    • விட்டுக்கொடுப்பது என்பது வீட்டில் தொடங்க வேண்டும்.
    • உறங்கும்போதுகூட விழிப்புணர்வோடு வாழவேண்டும்தான்; அதற்காக எப்போதும் நாம் மட்டுமே வாழவேண்டும்; மற்றவர்கள் எக்கேடோ கெட்டுப்போகட்டும் என வாழக்கூடாது.

    விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை எனும் பழமொழிப்படி வாழ விரும்பும் பண்பாளர்களே! வணக்கம்!

    நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம், விட்டுக்கொடுப்பது என்பது இயலாதவர்களின் கோழைக்குணம் என்று. ஆனால் விட்டுக் கொடுப்பது என்பது வெற்றியாளர்களின் தயாள குணம் என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

    புதுச்சேரியை ஒட்டிய ஒரு தமிழக கிராமத்தில் ('நல்லூர்-1' என வைத்துக் கொள்வோம்) ஓர் அரசுப்பள்ளி; அதே பகுதியில் மற்றுமொரு கிராமத்தில் ('நல்லூர்-2' என வைத்துக் கொள்வோம்) மற்றோர் அரசுப்பள்ளி. இரண்டு பள்ளிகளுக்கும் எப்போதும் போட்டி மனப்பான்மை தான்; கட்டுரை, கவிதை, பேச்சு எனும் இலக்கியப் போட்டிகளா? கபடி, கால்பந்து, கைப்பந்து, மட்டைப்பந்து எனும் விளையாட்டுப் போட்டிகளா? அனைத்துப் பள்ளிகளுக்கு இடையில் எப்போது நடந்தாலும் இந்த இரண்டு பள்ளிகளுக்கிடையில்தான் யார் முதல்? யார் இரண்டாவது? எனும் போட்டி.

    முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த ஓர் நிகழ்வு; பசுமை மாறாமல் விவரித்தார் பசுமை சுந்தரம். அன்று ஆரோவில்லில் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி. அது சுழற்கோப்பைக்கான போட்டி; அந்தப் பேச்சுப் போட்டியில் எந்தப் பள்ளி மூன்றுமுறை தொடர்ந்து வெற்றி வாகை சூடுகிறதோ அந்தப்பள்ளிக்கு அந்தக்கோப்பை நிரந்தரமாகச் சென்றுவிடும்.

    குறிப்பிட்ட அந்தச் சுழற்கோப்பைக்கான போட்டியில் ஏற்கனவே நல்லூர்1 பள்ளி இரண்டுமுறை தொடர்ந்து வென்றிருக்கிறது; அந்த வெற்றியைத் தற்போது போட்டியில் பங்கெடுக்கப் போகும் பத்தாம் வகுப்பு மாணவனே இரண்டு முறையும் பெற்றுத் தந்திருக்கிறான்; இம்முறையும் அவனே முதலில் வந்துவிட்டால் நல்லூர்1 பள்ளிக்குச் சுழற் கோப்பை நிரந்தரமாகச் சென்றுவிடும். அப்படிச் சென்றுவிட்டால் அந்த இடத்தில் பெரும் கைகலப்பை ஏற்படுத்த நல்லூர் 2 பள்ளி மாணவர்கள் ஆயத்தமாக இருந்தனர். அதனை உரியவாறு எதிர் கொள்ள நல்லூர்1 பள்ளி மாணவர்களும் தயாராகவே இருந்தனர்.

    போட்டிகள் நிறைவு பெற்றன. முடிவுகள், பரிசளிக்கும் சமயத்தில் அறிவிக்கப்படும். பரிசளிப்புக்குச் சிறப்பு விருந்தினராக அந்தப் பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழும் ஒரு பெருமகனார் அழைக்கப்பட்டிருந்தார். மேடையில் வள்ளலோடு விழாக் குழுவினர். கீழே பரிசுகள் பெறும் ஆவலோடு பல பள்ளி மாணவர்கள். ஆயினும் நல்லூர்2 பள்ளி மாணவர்களுக்கும், நல்லூர்1 பள்ளி மாணவர்களுக்கும் எதிர்பார்ப்பெல்லாம் அந்தப் பேச்சுப் போட்டிக்கான சுழற்கோப்பை க்கான அறிவிப்பை நோக்கியே இருந்தது.

    நல்லூர்1 பள்ளி சார்பில் கலந்துகொண்டு பேசிய மாணவன் மனத்தில் இப்போது ஒரு வித்தியாச எண்ணம் ஓடத் தொடங்கியிருந்தது. தன்னுடைய கட்டுரை நோட்டிலிருந்து ஒரு தாளைக்கிழித்து, மள மளவென்று நாலைந்து வரிகள் எழுதத் தொடங்கினான்; எழுதியவுடன் அந்தத் தாளை மடித்துச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த வள்ளலிடம் பணிவோடு தந்துவிட்டு வந்தமர்ந்து கொண்டான்.

    முடிவுகளைச் சிறப்பு விருந்தினரே அறிவிக்கத் தொடங்கினார்; சுழற்கோப்பைக்கான பேச்சுப்போட்டி முடிவு என்று சொல்லிவிட்டு நல்லூர்1 பள்ளி மாணவனை அழைத்து அருகில் நிற்கச் சொன்னார்; நமக்குப் பரிசில்லையோ? என நல்லூர்2 பள்ளி மாணவர்கள் அதிர்ந்தனர். சிறப்பு விருந்தினர் பேசத் தொடங்கினார், "மாணவக் கண்மணிகளே இந்தச் சுழற்கோப்பைக்கான பரிசை அறிவிப்பதற்கு முன், நல்லூர்1 பள்ளி மாணவன் எனக்குத் தனிப்படத் தந்த கடிதத்தை நீங்கள் எல்லோரும் கேட்கும்படி வாசிக்கிறேன்" என வாசித்தார்.

    ஐயா வணக்கம்! நான் மாணவன் யுவராசன். இந்தப் பேச்சுப் போட்டியிலும் நான் தான் வெல்வேன், சுழற்கோப்பை நிச்சயம் எங்கள் பள்ளிக்குத்தான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு. ஆயினும் இந்த நாட்டின் எதிர்காலத் தலைமுறையாகிய மாணவர்கள் நாங்கள் தற்போது இரு பிரிவுகளாக நிற்கிறோம். முடிவு எனக்குச் சார்பாக வந்தால், ஒருபிரிவு மாணவர்கள் ஏற்றுக்கொள்ள இயலாமல் மனம் கோண நேரிடும். எனவே அருள்கூர்ந்து முடிவை நல்லூர்2 பள்ளியின் மாணவனாகிய எனது நண்பனுக்கு அறிவிக்கவும்.

    மாணவர்களின் எதிர்கால ஒற்றுமையை மனத்தில் கொண்டு, இப்போட்டியிலிருந்து நான் விட்டுக்கொடுத்து விலகிக் கொள்கிறேன்!". மாணவனின் கடிதத்தை வாசித்தவுடன் வள்ளல், "எனவே பரிசும் சுழற்கோப்பையும் யுவராசன் வேண்டுகோள்படி நல்லூர்2 பள்ளிக்குச் செல்கிறது. அந்த மாணவனின் விட்டுக் கொடுத்தலுக்காக ஒரு பரிசு கொடுக்க வேண்டுமென்றால், அதற்கான பரிசு இன்னும் இந்த உலகத்தில் உருவாகவில்லை !" என்று அறிவித்தார். அங்கிருந்த மாணவர்கள் எல்லாருமே மனமகிழ்ச்சியோடு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    இந்த நிகழ்வில் அந்த மாணவன் யுவராசன் செய்த விட்டுக்கொடுத்தல் என்பது, கலந்துகொள்ளாமலேயே பயந்து விலகிக் கொள்வதல்ல; போட்டியிலும் கலந்து கொண்டு, தனது திறமையையும் நிரூபித்து விட்டு, பிறகு ஒரு துறவியைப் போல வேண்டாமென்று விலகி நிற்பது சமூக அக்கறை சார்ந்த வெற்றிச் செயல்.

    வாழ்க்கையே போட்டிமயம்தான். எந்நேரமும் போட்டிகள்தாம். ஆயினும் விட்டுக்கொடுக்காமல் போட்டியிட்டுக்கொண்டே இருப்பதன்மூலம் என்னத்தைக் கட்டிக்கொண்டு எடுத்துச் செல்லப்போகிறோம்?.

    பேருந்துக்கும் ரேசனுக்கும் சினிமாவுக்கும் வரிசையில் நிற்பது தொடங்கி, பேருந்து ரயில்களில் இருக்கை பிடிப்பது, திருமண விருந்துகளில் உணவிருக்கை தேடுவது என எங்கெங்கு பார்த்தாலும் கண்களுக்குத் தெரியாத போட்டிமயம்தான். இதில் யாருக்கும் விட்டுத்தர யாருக்கும் மனம் கிடையாது. பேருந்துகளில், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தை வைத்திருப்போர் என எவர் வந்தாலும் எழமறுக்கிற குணமுடையவர்தாம் உண்டு. கேட்டால், இப்படி ஒவ்வொருவருக்காக நான் என் இடத்தை விட்டுத்தர வேண்டுமென்றால் எனக்கான இருக்கையை நான் எப்போது அனுபவிப்பது? என்று கேட்கிறார்கள்.

    எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ரயில் பயணத்திற்கான படுக்கை வசதிப் பயணச்சீட்டைப் பதிவு செய்யும்போது, கீழ்ப் படுக்கை வந்தால் சலித்துக்கொள்வார். ஏனென்று கேட்டால், "ஏறியவுடனேயே என்னுடைய கீழ்ப்படுக்கையைக் கேட்டு யாராவது ஒருகிழமோ அல்லது கர்ப்பிணியோ வந்து விடுவர். அவர்களுக்கு அதை வழங்கிவிட்டு, வழக்கம் போல நான் மேல்படுக்கையில்தான் பயணிக்க வேண்டும்; என் ராசி அப்படி!" என்பார். இந்தப் பயணத்தின்மூலம் முடியாத ஒருவருக்காக நமது வசதியை விட்டுக் கொடுத்திருக்கிறோமே என்று பெருமைப்பட்டுக் கொள்ளாமல் நொந்துகொள்வது எந்த வகையில் நியாயம்?.

    சாலைகளில் வாகனம் ஓட்டிக்கொண்டு பயணிக்கும்போது, யார் யாருடன் போட்டிபோடுவது என்கிற தராதரமின்றி, ஒரு சைக்கிள்காரர் ஒரு பேருந்தோடு போட்டிபோட்டுக்கொண்டு வழிதராமல் செல்வதைப் பார்க்கலாம். சாலை என்பது பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் உரிமையுடையது என்றாலும் அதைத் தமக்கே தமக்கான சொந்தப் பாதைபோல விட்டுக் கொடுக்காமல் வழியடைத்துச் சென்றால் பாதை எங்கே வசப்படும்? பயணம் எங்கே ருசிப்படும்?.

    விட்டுக்கொடுப்பது என்பது வீட்டில் தொடங்க வேண்டும். முன்பெல்லாம் வீட்டுக்கு ஐந்தாறு குழந்தைகள் இருந்தனர். அண்ணன் தம்பி அக்கா தங்கைகளுக்கிடையே அன்பையும் பொருள்களையும் பகிர்தலும், விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையும் அவர்களுடனேயே வளரும் குணங்களாக இருந்தன. இப்போது ஒருகுழந்தை உலகமாகிப்போன சமூகத்தில், உறவுகள் சுருங்கிப்போனதால், எல்லாரும் எல்லாருக்கும் போட்டியாளர்கள் எனும் நிலையே மிதமிஞ்சிக் காணப்படுகிறது. விட்டுக்கொடுக்காமல் வென்றெடுப்பதே வாழ்நிலைப் போக்காகவும் ஆகிப்போனது.

    ஆணும் பெண்ணுமாகத் தனித்தனியே இருக்கும் இருபால் மனிதர்களைத் திருமணத்தில் இணைத்து, கணவன் மனைவி எனவாக்கி, அவர்களைக் குடும்ப அமைப்புக்குள் கொண்டு வருவதே மனிதர்கள் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் எனும் மாபெரும் தத்துவத்தை உணர்த்துவதற்கே ஆகும். கணவன்-மனைவி என்போர் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது என்பதையும் தாண்டி இருவருக்கும் அப்பால் சமூக நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும்.அதற்காக தத்தமது சொந்த சுக துக்கங்களை விட்டுக கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

    ரயில் தண்டவாளங்களைப் பாருங்கள் எங்கும் இணைபிரியாமல், இணைந்தும் விடாமல் சமமான இடைவெளியோடு நீண்டு இருப்பதா லேயே அவை பயணத்திற்குப் பயன்படுபவையாக இருக்கின்றன. அவற்றின்மேல் பெட்டிகளும் அவற்றை இழுத்துச் செல்லும் எஞ்சினும் பயணிப்பதால் மக்கள் ஊர்விட்டு ஊர்செல்லும் பயணம் எளிதாக நடைபெறுகிறது. இம்முறை மாறுபட்டால் என்ன ஆகும்?

    நானும் பயணம் போவேன் எனத் தண்டவாளங்கள் புறப்பட்டால் பெட்டிகள் எப்படி ஊர்போய்ச் சேரும்? பெட்டிகளின்றி நான் மட்டுமே செல்வேன் என்று எஞ்சின் அடம்பிடித்தால் மக்கள் எப்படிப் பயணிக்க முடியும். வாழ்க்கையும் அப்படித்தான். மக்கள் ஒவ்வொருவரும் அவரவரின் தகுதிக் குணங்களுக்கேற்ப விட்டுக்கொடுத்து வாழக் கற்றுக்கொண்டால்தான் உலகம் சரியான திசையில் சுழலும்.

    போட்டி உலகம்தான்; உறங்கும்போதுகூட விழிப்புணர்வோடு வாழவேண்டும்தான்; அதற்காக எப்போதும் நாம் மட்டுமே வாழவேண்டும்; மற்றவர்கள் எக்கேடோ கெட்டுப்போகட்டும் என வாழக்கூடாது. அப்படி வாழ்வது தன்னல வாழ்வு. தானும் வாழ்ந்து மற்றவர்களும் வாழவேண்டும் எனக் கருதுவதே சமூக நலம்கருதும் பொதுநலவாழ்வு. அதற்கு முக்கியமாக விட்டுக்கொடுத்துப் பழகவேண்டும்.

    ஆக்குகின்ற எல்லாவற்றையும் அனுபவித்து விடுவோம் என்று நினைப்பது அறியாமை; அடுத்தவருக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பது கோழைத்தனமோ அஞ்சும் தன்மையோ கிடையாது. சமூகத்தில் நம்மைப்போலப் பிறரும் வரவேண்டும் என்று நினைப்பது வெற்றிமேல் வெற்றி தரும்.

    திருக்கோயிலூரில், மழைபெய்து கொண்டிரு க்கும் போது ஓர் குடிசையில் ஒருவர் படுத்திரு க்கிறார்; அப்போது மற்றொருவர் அங்கு வந்து மழைக்கு ஒதுங்க இடமுண்டா? எனக் கேட்க, படுத்திருந்தவர் எழுந்து இடம்தர இருவர் அமர்ந்து கொள்கின்றனர். மேலும் மூன்றாவதாக ஒருவர் வந்து மழைக்கொதுங்க இடமுண்டா? என் வினவ, அமர்ந்திருந்த இருவரும் எழுந்து நிற்க மூன்றாவது நபரும் உள்ளே அவர்களோடு நின்று கொள்கிறார்.

    ஒருவர் கிடக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம் எனும்படியான நெருக்கடி மிகுந்த இடத்தில், முதலாவது நபராகிய பொய்கையாழ்வார், தான் படுத்திருந்த இடத்தைப் பூதத்தாழ்வாருக்கு விட்டுக் கொடுத்ததால் இருவர் அமர்ந்து கொள்கின்றனர். பிறகு பேயாழ்வாருக்காக இருவரும் எழுந்து நின்று மேலும் இடத்தை விட்டுக்கொடுத்ததால் மூவர் நின்று கொள்கின்றனர். அந்த முதல் ஆழ்வார்கள் மூவருக்குமிடைடையே விட்டு க்கொடுக்கும் மனப்பான்மை செழித்திருந்ததால், இப்போது அவர்களோடு நெருக்கமாக நாலாவது நபர் ஒருவரும் வந்து நின்றுகொண்டு ஆசி வழங்கினாராம். அந்த நாலாது நபர் அவர்கள் வணங்கும் அந்தப் பெருமாளைத் தவிர வேறு யார்?.

    விட்டுக்கொடுத்தலே தெய்வீகம்! விட்டுக்கொடுத்தலே ஆனந்தம்!

    தொடர்புக்கு 9443190098

    • நம் இரத்தத்தில் கொழுப்பு பல்வேறு கூறுகளாகக் கணிக்கப்படுகிறது.
    • ஒரு முறை சூடு செய்து பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

    மனிதன் உயிர்வாழ உடலில் கொழுப்புச்சத்து மிகவும் அவசியமானது. மூளையின் செயல்பாட்டுக்கும், உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களுக்கும், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் "டி" உற்பத்திக்கும் இந்தக் கொழுப்புச் சத்துதான் ஆதாரம். ஆனால் அந்தக் கொழுப்பு உடலில் அளவாக இருக்க வேண்டும்.

    நம் இரத்தத்தில் கொழுப்பு பல்வேறு கூறுகளாகக் கணிக்கப்படுகிறது. உடலுக்குக் கொழுப்புச் சத்து எங்கிருந்து கிடைக்கிறது? என்று கேட்டால் "உணவில் இருந்துதான்" எனப் பட்டென்று பதில் கிடைக்கும். ஆனால் நம் உடலில் உள்ள 80% கொழுப்பை நம் கல்லீரல் தான் உற்பத்தி செய்கிறது. இதற்கான மூலப்பொருள்களை அது நம் உணவில் இருந்து தான் எடுத்துக்கொள்கிறது.

    கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவை அதிகமாக எடுத்துக் கொள்வதால் மட்டும் நமக்குக் கொழுப்புச் சத்து அதிகம் வரும் என்று கூறிவிட முடியாது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் இரத்தக் கொழுப்பு அதிகமாக இருக்கும், ஒல்லியாக இருப்பவர்களுக்குக் குறைவாக இருக்கும் என்பது முற்றிலும் உண்மை இல்லை.

    கொழுப்புச் சத்து உடலில் அதிகரிக்கக் காரணம்:

    கொழுப்பைச் செரிக்கும் நொதிகளில் குறைபாடு ஏற்படும் போதும், தேவைக்கு அதிகமான கலோரிகள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போதும், மற்ற உணவுக் கூறுகளான மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) மற்றும் புரதங்கள் கொழுப்பாக மாறி உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் படியத் தொடங்குகிறது.

    அதிகப்படியான மதுப்பழக்கம் மற்றும் புகைபழக்கம் உள்ளவர்களுக்கு ட்ரைகிளிசரைடு எனப்படும் கொழுப்பு அதிகரிக்கிறது. துரித உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது, போதுமான உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உள்ளிட்ட காரணங்களால் கொழுப்பு சத்து நம் உடலினுள் தேங்குகிறது.

    மீண்டும் மீண்டும் அதிக உணவை தொடர்ந்து எடுக்கும்போது கொழுப்பானது, உடலின் உறுப்புகளைச் சுற்றியும், தோலுக்கு அடியிலும் படிந்து, உடல் பருமன் ஏற்படுகிறது.

    இவ்வாறு படியும் கொழுப்பு பல நோய்களுக்குக் குறிப்பாக வளர்சிதை மாற்ற நோய்களுக்குக் (Metabolic Syndrome) காரணமாகிறது. இதில் அதிக இரத்தச் சர்க்கரையும், அதிக இரத்த அழுத்தமும் அடங்கும்.

    இதில் குறைந்த அடர்வுத் தன்மையுடைய கொழுப்பைக் கெட்ட கொழுப்பு என்றும், அதிக அடர்வுத் தன்மையுடைய கொழுப்பை நல்ல கொழுப்பு என்றும் கூறுகிறோம்.

    நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என்றால் என்ன?

    Low Density Lipoprotein (LDL) என்பதைக் கெட்ட கொழுப்பு என்கிறோம், ஏனென்றால் இது கொழுப்புச் சத்து இரத்தக்குழாயில் படிவதற்குத் துணைபுரிந்து, அத்திரோஸ்கிளிரோசிஸ் எனப்படும் இரத்தக்குழாய் அடைப்பு நோயை அதிகப்படுத்துகிறது. இது நம் உடலில் 100 மிகி/டெசிலி-க்குக் குறைவாக இருக்க வேண்டும். நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இதை 70மிகி/டெசிலி-க்குக் குறைவாக வைத்திருப்பது நல்லது.

    மரு.அ.வேணி

    மரு.அ.வேணி

    High Density Lipoprotein (HDL) இதை நல்ல கொழுப்பு என்று கூறுகிறோம். ஏனென்றால் இது கொழுப்பைச் சிறுகுடலில் இருந்து கல்லீரலுக்கு எடுத்துச் சென்று, அதனைச் செரிக்கச் செய்து உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த நல்ல கொழுப்பு ஆண்களுக்கு 45மிகி/டெசிலி-க்கு அதிகமாகவும், பெண்களுக்கு 55மிகி/டெசிலிக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். இது அதிகமாக இருந்தால் வாழ்வியல் மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாப்புத் தருகிறது.

    அதிகக் கொழுப்பினால் ஏற்படும் சிக்கல்கள்:

    உடலில் நல்ல கொழுப்பின் அளவு குறையும்போதும், கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போதும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனுடன் மன அழுத்தம், போதுமான உடல் உழைப்பு இல்லாமை போன்றவைகள் சேரும்போது இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம், மறதி போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.

    அதிகக் கொழுப்பினால் ஏற்படும் அறிகுறிகள்:

    இதற்கென்று தனியான அறிகுறிகள் கிடையாது. யாருக்கெல்லாம் தொப்பை உள்ளதோ அவர்களுக்கெல்லாம் உடல் உறுப்புகளைச் சுற்றிக் கொழுப்புப் படிந்திருக்கும். ஒரு சிலருக்குக் கண் இமை மீது மஞ்சள் நிறப் படிவம் பார்க்க முடியும். இது அதிரோஸ்கிளிரோஸிஸ் எனப்படும் நோயின் வெளித்தோற்றமாகும். இவ்வாறு இருப்பவர்களுக்கு இரத்தக்குழாய்கள் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    நல்ல கொழுப்பு அதிகரிக்க என்ன செய்யவேண்டும்?

    1.பழங்கள், காய்கறிகள் அதிகம் உட்கொள்வது.

    2.தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது.

    3.மீன் உட்கொள்வது.

    4.உலர் கொட்டைகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது

    5.உடற்பயிற்சி செய்வது.

    6.பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது.

    கெட்ட கொழுப்பைக் குறைக்க என்ன செய்யவேண்டும்?

    1.ஒரு முறை சூடு செய்து பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

    2.மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

    3.அதிக நார்ச்சத்து உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    4.பாலின் மூலம் கிடைக்கும் புரத சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    5.உணவில் பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    6.உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    முன் கூறிய வழிமுறைகளை நமது வாழ்கையில் நடைமுறைப் படுத்தினால், நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பைக் குறைத்து நலத்துடன் வாழ முடியும். "அதிகக்கொழுப்பு ஆளைச் சாய்க்கும்" என்பதை நினைவில் கொண்டு அளவான கொழுப்புச் சத்துள்ள உணவை உண்டு நீடூழி வாழ்வோமாக.

    தொடர்புக்கு: 75980-01010, 80564-01010.

    • மனம் இதமாக இருக்க உடல் மனதை கடக்க வேண்டும். இதற்கு உடல் தகுதி மிகவும் அவசியம்.
    • மர்க்கட நீதி, மார்ஜார நீதி என்று இரண்டு வழிகள் உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை நாம் பிடித்து கொள்ள வேண்டும்.

    மனவளக்கலை பேராசிரியர்கள் சி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்அன்பார்ந்த வாசகர்களே, கடந்த வாரம், கர்மாவை பற்றி பார்த்தோம். இந்த கர்மா என்பது இரண்டு வகைகளாக கூறப்படுகிறது. ஒன்று கர்ம பரிபாலனம் மற்றொன்று கர்ம பரிவர்தனம் ஆகும். கர்ம பரிபாலனம் என்பது என் விதிப்படி வருகின்ற விளைவுகளை நானே அனுபவிப்பது ஆகும். ஏனென்றால் நானே அனுபவித்து விட்டால் அதன் தாக்குதல்கள் குறைந்து தான் இருக்கும். கர்ம பரிவர்தனம் என்பது, என் கர்மாவை நான் அனுபவிப்பதற்கு விருப்பம் இல்லாமல், இறைவனிடம் வாக்குவாதம் செய்வது. அல்லது கர்மாவை அனுபவிக்கும் முன்பாகவே நமது ஆயுள் முடிந்துவிட்டால் அந்த கர்மாவை நம் அடுத்த தலைமுறைகளுக்கு பரிவர்தனம் என்கின்ற மாற்றம் செய்வது ஆகும்.

    இதை தான், இன்றைய விஞ்ஞானம் செய்கிறது. நேற்று வரை ஒருவர் நன்றாக இருக்கிறார். திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் மயக்கம் போட்டு விழுகிறார். உடனே மருத்துவமனைக்கு சென்று அவரை பரிசோதனை செய்யும்போது உடலில் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது. நேற்று வரை நன்றாக, ஆரோக்கியமாக இருந்த உடல் செல்கள், திடீரென்று மாறி எப்படி நோய் ஏற்படுத்துகிறது. இந்த உடல் செல்களுக்கு இப்படி மாற சொல்லி எங்கிருந்து உத்தரவு வருகிறது என்பதை விஞ்ஞானம் ஆராய்ச்சி செய்கிறது. இதை தான் யோகத்திலே கர்மா என்று சொல்கிறோம். இந்த கர்மாவை 3 பிரிவுகளாக பிரிக்கலாம்.

    1. சஞ்சித கர்மா - என்பது முன்னோர்கள் மூலமாக தலைமுறை பதிவுகளாக வருவது ஆகும். இது ஒரு தலைமுறையை விட்டு பிறகு அடுத்த தலைமுறையை கூட தாக்கும். இதை தான் இன்றைய விஞ்ஞானம் அழுத்தம் பெற்ற ஜீன்கள் என்று கூறுகிறது. பொதுவாக மருத்துவர்கள், நமக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், குடும்பத்தில் வேறு யாருக்காவது இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.

    2. பிராப்த கர்மா - என்பது நமது நினைவு தெரிந்த நாளில் இருந்து (நமது 3 வயது முதல்) இந்த நிமிடம் வரை, நம் வாழ்வில், நாம் சொல்கின்ற செய்கின்ற செயல்கள் மூலமாக பதிவுகளை சேர்த்துகொண்டு அதன்மூலமாக வரும் விளைவுகளை அனுபவிப்பது ஆகும். இதை தான் இன்றைய விஞ்ஞானம் எழுச்சி பெற்ற ஜீன்கள் என்று கூறுகிறது. உதாரணத்திற்கு ஒரு உணவே என் செயல் மூலமாக அதிகமாக உட்கொள்ளும்போது, அதன் விளைவாக உடனே ஒரு உபாதை உடலுக்கு ஏற்பதுவது ஆகும்.

    3. ஆகாமிய கர்மா - என்பது முன்னோர்கள் நல்வினை + தீவினை, நம் வாழ்நாளில் நாம் செய்த நல்வினை + தீவினை இரண்டையும் கூட்டி வரும் விளைவு தான் இன்று நாம் வாழ்கின்ற வாழ்க்கை ஆகும். எனவே தான் நம் முன்னோர்கள் செய்த கர்ம வினை பதிவுகளை கழித்து, நாம் தினமும் செய்கின்ற செயல்களிலே தவறு எதுவும் செய்யாமல், விழிப்பு நிலையில் இருந்தால், நாம், புதியதாக எந்த பதிவுகளையும் சேர்த்துக்கொள்ள மாட்டோம். இந்த நிலையிலே, நாம் இருக்கின்ற பதிவுகளை கழித்து, வாழும் காலத்திலேயே முக்தி நிலை வாழ்க்கை வாழ்தலே சாகாகலை ஆகும்.

    மனம் என்றால் இதம் என்று பொருள். மனம் இதமாக இருப்பவரே மனிதர் என்கிறோம், ஆனால் நாம் இதமாக இல்லை. இதற்கு காரணம் நம்முடைய வினை பதிவுகளே. எனவே மனதை அறிய முற்பட வேண்டும். இதற்கு நாடி சுத்தி பிராணாயாமமும், தியானமும் உதவி செய்யும்.

    மனதின் சுபாவம் எப்போதும் சுகத்தை நாடும். அப்படி சுகமாக இருக்கும்போது மனம் ஆனது அதன் எஜமானராகிய ஆத்மாவோடு தொடர்பில் இருக்கும். ஆனால் புலன்கள் புற உலகோடு தொடர்பு கொள்ள நம்மை வெளியே இழுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனம் ஒன்றாக இருந்தாலும் அது மூன்று நிலைகளில் நம்மை இயக்கும்.

    முதலாவது சவுக்கிய சுகம். இது உடல் சார்ந்தது. இன்று நன்றாக இருக்கும், நாளை நன்றாக இருக்காது. நம் உடலிலே ஒவ்வொறு நொடியும் இரசாயனம் மாற்றம் ஏற்பட்டு கொண்டு இருக்குகிறது. எனவே சவுக்கிய சுகம் என்பது மாறிக்கொண்டே இருக்கும், இது நிரந்தரமான சுகம் இல்லை.

    இரண்டாவதாக சந்தோஷ சுகம் ஆகும். இது இந்த நிமிடம் மனம் சந்தோசமாக இருக்கும். அடுத்த நிமிடமே கவலையாக மாறி விடுகிறது. இதுவும் நிரந்தரம் அல்ல.

    மூன்றவதுவாக ஆனந்த சுகம். இது ஆத்மா சார்ந்தது. இது அழிவு இல்லாதது. நிரந்தரம் ஆனது. இதற்கு எதன் மீதும் பற்று இல்லை. என்றும் ஆனந்தமாக இருக்கும். இதனை அடைய நம் மனமானது, உடல் சுகம், மனம் சுகம் கடந்து ஆனந்த சுகத்தை பிடிக்க வேண்டும். இதற்கு மூச்சினுடைய எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதற்கு சாதாரணமாகவே, நாம் மூச்சை உள் இழுக்கும் போதும் சரி, வெளியிடும் போதும் சரி நம் உடல் தகுதிக்கு முடிந்த அளவில் அதிக நேரம் எடுத்து கொள்ள வேண்டும்.

    இந்த நிலையில் மனம் இருக்கும்போது நாம் எல்லோரிடமும் அன்பாக இருப்போம். இதை தான் வேதத்திலே "மனம் பிரீதிகரம் சொர்க்கம்" என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது எப்போதும் உன் மனம் இதமாக இருக்கும் நிலை தான் சொர்கம். மனம் துன்பப்படும்போது அது நரகம் ஆகும்.

    எனவே மனம் இதமாக இருக்க உடல் மனதை கடக்க வேண்டும். இதற்கு உடல் தகுதி மிகவும் அவசியம். உடல் தகுதி இல்லை என்றால், தியானதில் மனதிற்கு உடல் ஒத்துழைப்பு கொடுக்காது. எனவே முதலில் உடல் தகுதியை வளர்த்து கொள்ள நமக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் ஆகிறது.

    எப்போது உடல் பலம் மேம்படுகிறதோ, மனதின் இருப்பிடத்திற்கு செல்லும் தகுதி நமக்கு கிடைக்கும். இதற்கு வேதாத்திரி மகரிஷி அவர்களின் எளியமுறை குண்டலினி யோக உடற்பயிற்சி நமக்கு மிகவும் உதவி புரியும். ஏனென்றால் மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட உடற்பயிற்சியே ஒரு தவம் ஆகும். 

    மனவளக்கலை பேராசிரியர்கள் சி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன், போன்: 9444234348

    மனவளக்கலை பேராசிரியர்கள் சி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன், போன்: 9444234348

    இந்த மனம் ஆனது உதிக்கின்ற இடத்திலே நிற்கும் போது பிராண ஓட்டம் ஒழுங்கு பெறுகிறது. ஏனெனில் சித்தர்கள் சொல்வது என்னவென்றால், மனம் உதிக்கின்ற இடமும், பிராணன் பிறக்கின்ற இடமும் ஒன்றே ஆகும். எனவே எண்ணங்கள் உதிக்கின்ற இடத்திலே நிற்கும் போது, பிராணன் சீரடைந்து, மூச்சினுடைய எண்ணிக்கை முறைபடுத்தபடுகிறது. இந்த நிலையில் நம்முடைய, ஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு என்கின்ற கணக்கு மாறுபட்டு, எண்ணிக்கை குறைகிறது. எப்போது எண்ணிக்கை குறைகிறதோ ஆயுள் அதிகரிக்கிறது. இதன் மூலம், மனதில் இருந்து உதிக்கின்ற எண்ணங்களின் எண்ணிக்கையும் குறைகிறது. இதனால் நமக்கு அமைதி நிலை ஏற்படுகிறது. எந்த செயலையும் விளைவு அறிந்து விழிப்பு நிலையோடு, நிதானமாக எதிர்கொண்டு, அதன் விளைவுகளை ஆராய்ந்து பார்க்கும் தன்மை நமக்கு ஏற்படும். இதன் மூலமாக நம் வாழ்க்கை புனிதம் அடைகிறது. இந்த நிலையில் வாழும் மனிதர்கள் / மகான்களை தான் "பிரம்ம பூதோ மஹாயோகி" என்கிறோம். அதாவது சர்வத்திலும் இருப்பது இறைவனே என்கின்ற தத்துவதை உணர்ந்துக்கொண்டு வாழ்பவர்கள் ஆவார்கள்.

    இந்த நிலைக்கு நம் எல்லோராலும் வர முடியும். அதற்கு பூர்வ ஜென்ம புண்ணியம் அமைய வேண்டும். அதே நேரம், குருவின் உடைய உதவி இல்லாமல் இதை நம்மால் செய்ய முடியாது. எனவே குருவை நாம் கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும். குருவை பிடிப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளது. மர்க்கட நீதி, மார்ஜார நீதி என்று இரண்டு வழிகள் உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை நாம் பிடித்து கொள்ள வேண்டும்.

    மர்க்கட நீதி குரு தத்துவம் என்பது உதாரணத்திற்கு தாய் குரங்கு, குட்டி குரங்கை பிடித்து கொள்ளாது. குட்டி தான் தாயின் வயிற்று பகுதியில் அமர்ந்து தாயை பிடித்து கொண்டு இருக்கும். இதனை கண்டு கொள்ளாமல், அது கிளைக்கு கிளை தாவி கொண்டு இருக்கும். ஒரு சில நேரம் அந்த கிளையில் அடிபட்டு குட்டி குரங்கு தாய் குரங்கோடு பிடித்து இருக்கின்ற பிடியை விட்டு விடும். உடனே கீழே விழும். தாய் குரங்கு இதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாது. ஆனால் குட்டி குரங்கு உடனே ஓடி சென்று மறுபடியும் தாயை கட்டிப் பிடித்து கொள்ளும்.

    குட்டி குரங்கை ஒரு கிளை தடுத்து எப்படி தாயிடம் இருந்து விலக்கியதோ, அதுபோல நம்மையும் நம் கர்ம வினை பதிவாகிய கிளைகள் போல, ஒரு குருவை பிடித்தும் கூட தொடர்பை துண்டிக்க வைக்கும். நாம் விழிப்பு நிலையோடு இருந்து எத்தனை தடைகள் வந்தாலும் குருவை குரங்கு பிடி போல பிடித்து கொள்ள வேண்டும்.

    மார்ஜார நீதி குரு தத்துவம் என்பது, உதாரணத்திற்க்கு பூனையானது, குட்டி போட்டவுடன் அந்த குட்டி பூனைகளை விட்டுவிட்டு தாய் பூனை சென்றுவிடும். இந்த குட்டி பூனைகள் உடனே தாயை நினைத்து அழுது கொண்டே சப்தம் போட்டு கொண்டு இருக்கும். ஒரு நிலையில் இந்த புலம்பலை தாய் பூனை பொறுத்து கொள்ளாமல், குட்டிகளை தன் வாயால் லாவகமாக பற்றி தூக்கிச் செல்லும். இது போல நாமும், வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும், குருவின் கொள்கைகள் மீது ஆழ்ந்த ஈடுபாடும், குருவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்து நம் செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போது நமக்கு எந்த துன்பங்கள் வந்தாலும் குரு நம்மை காப்பாற்றுவார்.

    எனவே ஒரு குருவை பிடித்து அதன்படி பயிற்சிகள் மேற்கொண்டால் என்ன நிகழும் என்கின்ற ஆராய்ச்சியை தொடர்வோம். 

    • கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடியது.
    • தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடர் 12 முதல் 28 ஆகஸ்ட் 1974 வரை நடந்தது.

    இந்தியா விடுதலை அடையும்போது சிலோன் பிரிட்டிஷ் வசம் இருந்தது. அவ்வளவு சிறிய நிலப்பரப்பை எப்படி "ரிமோட் நிர்வாகம்" செய்வது என்று கருதியது லண்டன். "நாளை முதல் நீங்க ப்ரீ!" என்று கூறி விட்டுப் பிரிட்டிஷார் டாட்டா காட்டினார்கள். இன்றைய ஸ்ரீலங்காவான அன்றைய சிலோன் சுதந்திரம் கேட்டுப் போராடவே இல்லை,

    உபகண்ட நிலப்பரப்பு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என்று மூன்று நாடுகள் ஆனது. விடுதலைக்கு 10 ஆண்டுகள் முன்னதாகப் பர்மா உதயமாகி இருந்தது. 1971-ல் வங்க தேசம் பிறந்தது. இந்திய எல்லையில் மொத்தம் 7 நாடுகள்!

    ஆகையால் எல்லைப் பிரச்சினைகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருந்தன. ஊடுருவல் எக்கச்சக்கம். எனவே நமது எல்லைப் பகுதிகள் சர்வதேசக் கடத்தல்காரர்களின் சொர்க்கமாக மாறின. பிரச்சனைகளைத் தீர்க்க இந்திய அரசு பல முயற்சிகள் எடுத்தது.

    பிரிவினையின் போது எல்லைப் பகுதிகளை அளவிட ராட்கிளிப் என்ற பிரிட்டிஷ் சர்வேயர் நியமிக்கப்பட்டார். அப்போது மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் பெருபாரி இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. அங்கு இந்துக்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர்.

    ஆவணங்களில் பெருபாரியைக் குறிப்பிட ராட்கிளிப் குழு மறந்து விட்டது. எனவே பாகிஸ்தான் தன் வரைபடத்தில் அதைச் சேர்த்துக் கொண்டது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது.

    நேருவுக்கும், பாகிஸ்தான் பிரதமர் பெரோஸ்கான் நூனுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி பெருபாரி கிராமத்தை இரண்டு நாட்டு அரசுகளும் பிரித்துக் கொண்டன. தாவாவுக்குச் சர்வதேசத் தீர்வு எட்டப்பட்டது.

    ஆனால் மேற்கு வங்க அரசின் இசைவின்றி பெருபாரி கிராமத்தின் பகுதிகளைப் பாகிஸ்தானுக்கு வழங்கிய விதம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.

    அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 3 (சி)-ன் கீழ் பாராளுமன்றத்திற்கு மாநிலத்தின் எல்லையை மாற்றியமைக்க மட்டுமே அதிகாரம் உண்டு என்றும் இந்திய நாட்டின் பரப்பைக் குறைக்க அதிகாரம் இல்லை என்றும் 14.3.1960-ல் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    அதனால் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 3 (சி)-ல் தேவையான திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. 1960-ல் பெரும் பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட 9-வது அரசியலமைப்புச் திருத்தம் பெருபாரி மற்றும் இந்திய மாநிலங்களின் இசைவுச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    தராசு ஷ்யாம்

    தராசு ஷ்யாம்

    கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடியது. ஆனால் கச்சத்தீவு நீண்ட நெடுங்காலமாக ராமநாதபுரம் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது. இது குறித்த ஆவணங்கள் இன்றும் ராமநாதபுரம் கலெக்டர் ஆபீசில் உள்ளன.

    இது மாதிரியே கன்னியாகுமரிக்கு 80 கி.மீ. தொலைவில் "வாட்ஜ் பேங்க்" என்ற 25 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள பிரம்மாண்ட கண்டத்திட்டிலும் இரு நாட்டு மீனவர்கள் தொழில் செய்து வந்தனர். ஏன் என்றால் 1947-க்கு முன் கிட்டத்தட்ட உபகண்டம் முழுவதும் ஒரே பிரிட்டிஷ் இந்தியா.

    இந்திரா காந்தி காலத்தில் 18.5.1974-ல் பொக்ரான்-1 (ராஜஸ்தான்) அணு வெடிப்புச் சோதனை நடத்தப்பட்டது. அதற்குப் பாகிஸ்தான் பலத்த கண்டனம் தெரிவித்தது. அது குறித்த ஐநா தீர்மானத்தில் இலங்கை நமக்கு ஆதரவு கொடுத்தது.

    அப்போதும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி. அன்றைய பிரதமர் ஸ்ரீமதி பண்டாரநாயகா இந்திரா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து உதவி கேட்டார். 1974 ஒப்பந்தப்படி (26-28.6.1974) கச்சத்தீவும் அதற்கடுத்த 1976 கடல் எல்லை ஒப்பந்தப்படி வாட்ஜ் பேங்க் பகுதியும் (23.3.1976) பரஸ்பர தாவா நீக்கம் செய்யப்பட்டன. தொகுதி மறுவரையறை போல இது எல்லைச் சீரமைப்பு.

    அன்றைய தமிழக முதல்வர் கலைஞரிடம் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண் சிங் மற்றும் செயலாளர் கேவல் சிங் ஆகியோர் இது பற்றிக் கூறினார்கள். தமிழ்நாடு பா.ஜ. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ. ஆவணங்கள் மூலம் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இசைவின்மை இருப்பினும் இருநாட்டில் எல்லை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் என்பதால் மத்திய அரசின் முடிவு இறுதியானது.

    அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடர் 12 முதல் 28 ஆகஸ்ட் 1974 வரை நடந்தது. கச்சத்தீவை இலங்கைக்கு தந்தது தொடர்பான தீர்மானம் அதில் நிறைவேற்றப்பட்டது.

    கச்சத்தீவின் மீது இந்திய இறையாண் மையை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் ஒப்பந்தத்தைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. அது நிறைவேற்றப்பட்ட நாள் 21.8.1974. இவை எல்லாம் சட்டமன்ற அவைக் குறிப்புகளில் உள்ளது.

    கச்சத்தீவு குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அன்றைய முதலமைச்சர் கலைஞர் தலைமையில் நடந்தது. அ.தி.மு.க. சார்பாக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் குழுவினர் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் தமிழ்நாட்டில் கண்டனக் கூட்டங்களும் நடத்தின.

    இதே காலகட்டத்தில் வங்கதேச அரசுடன் எல்லைப் பிரச்சனை குறித்த தீர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவே 16.5.1974-ல் ஏற்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான்-இந்திரா காந்தி ஒப்பந்தம். அதன்படி இந்திய வங்கதேசக் குடியிருப்புகளைப் பரஸ்பர பரிமாற்றம் செய்து கொள்ள முடிவு எட்டப்பட்டது.

    ஆனால் எல்லைகளை அளந்து 111 இந்தியக் குடியிருப்புப் பகுதிகளைப் பரிமாற்றம் செய்தது 7.5.2015 மோடி ஆட்சிக் காலத்தில். இது குறித்த தீர்மானம் இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் வரைவு மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.

    அதாவது மத்திய மாநில அரசுகளில் எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கலாம். ஆனால் சர்வதேச ஒப்பந்தங்களை யாராலும் மீற முடியாது. இந்திராவின் ஒப்பந்தம் தவறு என்று மோடி கருதி இருந்தால் வங்கதேசத்துக்கு இந்தியக் குடியிருப்புகளை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது. ஆனால் சர்வதேச உறவுகளில் அது சாத்தியம் இல்லை.

    எல்லைப் பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பது ஐ.நா. சபையின் விதிகளுக்கு உட்பட்டு நடக்கின்றன. இதை தேர்தல் பிரச்சனையாக்கிப் பொது மேடைகளில் சவால் விடுவது மிகவும் தவறு. ஏனென்றால் இதே போல் ஏராளமான ஒப்பந்தங்கள் நாம் அண்டை நாடுகளோடு செய்திருப்போம். இந்திய எல்லைப் பகுதியே 1947-ல் வரையறை செய்யப்பட்டது தான். இன்னமும் பிணக்குகள் உள்ளன.

    பஞ்சாப், அரியானா மாநிலங்களில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த போது கண்கூடாகப் பார்த்த விஷயம் இது! பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் 19.9.1960-ல் செய்யப்பட்ட நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் குறித்த கசப்புணர்வு பஞ்சாப் விவசாயிகள் மத்தியில் இருந்தது.

    பஞ்சாப் விவசாயிகளுக்கு டெல்லி துரோகம் இழைத்து விட்டது என்று அந்த மாநிலத் தேர்தலில் இப்போது பரப்புரை செய்தால் அது எவ்வளவு பெரிய தீங்கு தரும்?

    அண்ணாமலை போன்ற அரசியல்வாதி பேசுவது தேர்தல் அழுத்தம் என்று கொள்ளலாம். ஆனால் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரே கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரசும் தி.மு.க.வும் தாரை வார்த்து விட்டன என்று கூறுகிறார்கள். அது நாட்டின் அரசியல் சாசனப் பதவிகளுக்கு அழகல்ல.

    இது குறித்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. மேலும் பாராளுமன்றத்தில் விவாதம் வரும்போதெல்லாம் நடப்பு பா.ஜனதா அரசு இந்திரா காந்தியின் நிலைப்பாட்டைத் தான் தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளது. 2015 தகவல் அறியும் உரிமைச் சட்டக் கேள்விகளின் போது கூட இதே பதில் தான் தரப்பட்டுள்ளது

    கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டின் விருப்பம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 15.8.1991 அன்று கோட்டையில் கொடியேற்றி வைக்கும் போது கூட இது பற்றி பேசியிருக்கிறார். சட்டமன்றத்தில் 2011-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

    சமீபத்தில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கச்சத்தீவு மீட்பு பற்றிக் கூறப்பட்டுள்ளது. இலங்கை மீது படையெடுப்போம் என்று கூறுவதெல்லாம் காரிய சாத்தியமற்றது. கை தட்டலுக்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் சர்வதேச சட்டப்படி அது சாத்தியம் இல்லை

    கச்சத்தீவு கடற் பகுதியில் நமது மீனவர்கள் தொழில் செய்யும் உரிமைக்கான குத்தகை பெற்றுத் தருவது சாத்தியமானது அதேபோன்ற ஒரு குத்தகை உரிமை குஜராத் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லையோரக் கடல் பகுதியில் பெறப்பட்டுள்ளது.

    இருப்பினும எல்லை தாண்டுகிற இருநாட்டு மீனவர்களும் கைது செய்யப்படுவதும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

    இன்றைய குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியின் கடல் மற்றும் நில எல்லை பாகிஸ்தான் பார்டரில் வருகிறது. அது குறித்த தாவா சர்வ தேசத் தீர்ப்பாயத்தின் 19-2-1968 ஆணையின்படித் தீர்க்கப்பட்டுள்ளது.

    அதில் தங்கள் உரிமை பாதிக்கப்படுவதாக அப் பகுதி மீனவர்கள் இடையே மனவருத்தம் உண்டு. இப்போது இதை குஜராத் தேர்தலுக்குப் பயன்படுத்தினால் எவ்வளவு பெரிய அபத்தம்?

    இலங்கைக்கு நாம் ஏராளமான பொருள் உதவி செய்து வருகிறோம். கச்சத்தீவில் நமக்கு மீன்பிடி உரிமை வேண்டுமென்றால் குத்தகை பெற்றுத் தர மத்திய அரசுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. 10 வருட ஆட்சியில் பாரதிய ஜனதா அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை.

    இத்தனைக்கும் ஸ்ரீலங்கா சீனாவுக்குப் பல குத்தகை உரிமைகள் தந்திருக்கிறது. தமிழக மீனவர் நலனுக்கு முற்றிலும் விரோதமான இலங்கையின் திருத்தப்பட்ட "அந்நிய மீன்பிடி படகுகள் தடைச் சட்டத்தின்" விதிகள் கொடூரமானவை. அதன்படி கோடிக்கணக்கில் அபராதம் விதிக்க முடியும். அதைத் தளர்த்த நடப்பு பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தமிழ்நாட்டு மீனவர்கள் மீது உண்மையில் டெல்லிக்கு அக்கறை இருந்தால் நேர்மறை நடவடிக்கைகளே பலன் தரும். மாறாகக் கச்சத்தீவு பிரச்சினையைத் தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தினால் ரிசல்ட் ஜீரோ தான்.

    ×