search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • குடியுரிமை என்பது அவரது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள நாடு.
    • ஒரு நாட்டின் மைய அரசால் தேசியக் குடியுரிமை விதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

    "நேஷனாலிட்டி" (தேசியம்) மற்றும் "சிட்டிசன்ஷிப்" (குடியுரிமை) ஆகிய இரண்டுக்கும் இடையே நுணுக்க வேறுபாடே உள்ளது.

    தனிநபரின் பிறந்த இடம் அல்லது வம்சாவளியைக் குறிப்பது தேசியம். குடியுரிமை என்பது அவரது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள நாடு. சில நாடுகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமை கொண்டவராக இருக்க முடியும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட "நேஷனாலிட்டி" கொண்டவராக இருக்க முடியாது அல்லவா?

    எனவே குடியுரிமைச் சட்டம் உலகெங்கிலும் "கொடுக்கும் சட்டம்" என்று கருதப்படுகிறது. உரிமையைப் பறிப்பவை முடக்கும் சட்டங்கள். எடுத்துக்காட்டாக பொது அமைதி காரணங்களுக்காகப் பிறப்பிக்கப்படும் சில சட்டங்கள் ஆகும்.

    ஒரே சட்டம் இரண்டுமாக இருக்க முடியாது. ஆனால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் குடியுரிமைச் சட்டம் 2019 மற்றும் அதன் திருத்த விதிகள் பல்வேறு பாகு பாடுகள் காரணமாக அப்படி இருப்பதாகச் சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    ஒரு நாட்டின் மைய அரசால் தேசியக் குடியுரிமை விதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால் சட்ட விதிகள் ஒரே சீராக இல்லாத காரணத்தால் எந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றிருக்காத நிலை, இரட்டைக் குடியுரிமை போன்ற சிக்கல்கள் எழுந்தன. அவற்றை முடிவுக்கு கொண்டு வர நெதர்லாந்தின் ஹேக் நகரில் ஒரு மாநாடு 1930ல் நடந்தது.

    அதில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை பல நாடுகள் ஏற்றுக் கொண்டன. திருமணமான பெண்களின் தேசியக் குடியுரிமை சார்ந்த உடன்படிக்கை 1957ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எந்த நாட்டின் தேசியக் குடியுரிமையையும் பெற்றிராத நிலைக்குத் தீர்வு காணக் கூடிய வேறு சில உடன்படிக்கைகள் 60களுக்குப் பிறகே ஏற்றுக் கொள்ளப்பட்டன.

    சர்வதேசச் சட்டப்படி ஒரு நாட்டின் அரசு தன் தேசியக் குடியுரிமையைக் காப்பதற்காக ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தலையிடலாம். எனவே குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவர இந்திய அரசுக்கு உரிமை இருக்கிறது. தடுக்கும் உரிமை மாநிலங்களுக்கு இல்லை.

    இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 11 குடியுரிமை குறித்த சட்டம் இயற்றுவதற்கு வகை செய்தது. அதன் அடிப்படையில் "இந்தியக் குடியுரிமைச் சட்டம்-1955" இயற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்பு இந்தியாவில் குடியிருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு அதன் மூலம் வழி செய்யப்பட்டது.

    இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கான விதிகள் பின் வருமாறு:-

    1. பிறப்பால் அடைதல்: இந்தியக் குடியுரிமைச் சட்டம்-1955-ன் பிரிவு 3-ன் படி, அரசியல் அமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட தேதிக்கு முன் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.

    2. மரபுவழிக் குடியுரிமை: இந்தியக் குடியுரிமைச் சட்டம் பிரிவு 4 இதற்கு வகை செய்கிறது. ஒருநபர் 26.01.1950 க்குப் பின்போ அல்லது 1992-ம் ஆண்டு திருத்தப்பட்ட இந்தியக் குடியுரிமைச் சட்டத்திற்கு முன்போ வெளிநாட்டில் பிறந்திருந்து அவருடைய தந்தை இந்தியக் குடிமகனாக இருந்தால், அவர் மரபுவழிக் குடியுரிமை பெறத் தகுதி உள்ளவர்.

    3. பதிவு செய்தல்: குறிப்பிட்ட வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்திருந்தால் உரிய அனுமதிகளுடன் இந்தியக் குடிமகன் என்ற பதிவைப் பெறலாம். இது அனைத்து நாட்டினருக்கும் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது.

    இதில் இப்போது ஒரு முக்கிய திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மட்டும் விலக்குத் தரப்படுள்ளது. இவற்றிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர்கள் சில குறிப்பிட்ட நிபந்தனைகள் அடிப்படையில் குடியுரிமைக் பெறலாம்.

    வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். அல்லது முகாம் மற்றும் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

    ஆனால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சட்டத் திருத்தம் மூலம் அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்யப்படுகிறது. ஆனால் அந்தப் பட்டியலில் இஸ்லாமியர்கள் இல்லை. இந்துக்களான இலங்கைத் தமிழர்களும் இல்லை. அவர்களும் பவுத்தமதவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தான் என்ற வாதததை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு மறுத்து விட்டது.

    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியர்கள், பவுத்தர், சமணர், பார்சி, கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு மட்டும் சலுகை தரப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே திருத்தம். கெடு தேதி நீட்டிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு டிசம்பர் 31- ந் தேதிக்கு முன் குடியேறிய மேற்கண்ட பிரிவினர் (அதாவது பா.ஜனதா ஆட்சிக்கு வந்த வருடம்) இந்தியக் குடியுரிமை பெற வழி செய்யப்பட்டுள்ளது.

    குடியுரிமைச் சட்டத்திருத்த விதிகள் அமலுக்கு வந்ததை வடகிழக்கு மாநிலங்கள் பெரிய அளவுக்கு எதிர்க்கின்றன. ஏன்?

    வங்கதேசத்திலிருந்து வந்த இரண்டு லட்சம் வங்காள இந்து அகதிகள் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தங்கி உள்ளனர். புதிய சட்டத் திருத்தம் மூலம் வங்கதேச அகதிகள் மேலும் அதிகரிப்பார்கள்.

    அது அஸ்ஸாமின் பூர்வகுடி ஜனத்தொகை விகிதாச்சாரத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். அவர்கள் சொந்த பூமியில் சிறுபான்மை ஆகும் அபாயம் உள்ளது.

    அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிய தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) நடவடிக்கை முன்பு மேற்கொள்ளப்பட்டது. அதற்கான காலக்கெடு 1971-ம் ஆண்டு மார்ச் 24 என்று நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் 2014 டிசம்பர் 31 வரை வங்கதேச இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்க வழி செய்கிறது. அவர்கள் இதற்கு முன் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி.) விலக்கப்பட்டிருந்தவர்கள்.

    அதே நேரத்தில் காலங்ககாலமாய் வட கிழக்கின் வனப் பகுதிகளில் வாழந்துவரும் ஆதிவாசிகள் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற முடியவில்லை. அவர்கள் மேல்முறையீடு செய்துவிட்டு கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வங்கதேச இந்துக்களுக்கு சுலப விலக்கு கிடைத்துள்ளது.

    தராசு ஷ்யாம்

    தராசு ஷ்யாம்

    தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) மதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆனால், குடியுரிமை சட்டத் திருத்தம் மதத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பல அமைப்புகள் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை எதிர்க்கின்றன.

    நுழைவு அனுமதிப் படிவம் (இன்னர்-லைன் பர்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப்பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய பகுதிகளுக்குச் சட்டத் திருத்தத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    அதாவது குடியுரிமை சட்டத்திருத்தம் இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானது அல்ல. எனவே தமிழ்நாடு மாதிரி லட்சக்கணக்கான இலங்கை அகதிகள் இருக்கும் மாநிலத்திற்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்பதே நியாயமானது.

    குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பாளர்கள் கூறுவது என்ன?

    1. மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தை இது சிதைக்கிறது.

    2. மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கப்படக் கூடாது. ஏன் என்றால் மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். ஆனால் சட்டத்திருத்தம் மதப்பாகு பாட்டிற்கு அப்பட்டமான அங்கீகாரம் தருகிறது.

    3. குடியுரிமை சட்டத் திருத்தம் "சட்டத்தின் முன் அனைவரும் சமம்!" என்ற கோட்பாட்டைப் செல்லாததாக்குகிறது.

    4. மதப்பாகுபாட்டால் அகதிகளான சிறு பான்மையினரின் பாதுகாப்புக்காகத்தான் சட்டத் திருத்தம் என்றால் இஸ்லாமியர்களைச் சேர்த்து இருக்க வேண்டும். பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோகிஞ்சாக்களையும் (அந்தந்த நாடுகளில் பெரும்பான்மை மதப் பிரிவினரின் அடக்குமுறைக்கு உள்ளான இஸ்லாமியர்கள்) ஏன் சேர்க்கவில்லை?

    5. இலங்கையில் இன்னல்களையும், பவுத்த பேரின வாதத்தையும் சந்தித்து வரலாறு காணாத மானுட சோகத்திற்கு உள்ளான ஈழத்தமிழர்களை ஏன் விட்டுவிட்டார்கள்?

    சட்டத்திருத்தத்தை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

    1. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகள். ஒன்று அரசே இஸ்லாமிய அரசாக இருக்கிறது, அல்லது அங்கு இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

    2. அவர்கள் அங்குள்ள சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை.

    3. அதற்காகத்தான் குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியுரிமை பெற அவர்கள் அனுபவிக்கும் துயரங்களைப் போக்குவதற்குப் புதிய சட்டத் திருத்தம் வழி வகுக்கும்.

    4. சட்டத்திருத்தம் குடியுரிமை வழங்குவதற்காகத்தானே தவிர பறிப்பதற்காக அல்ல.

    வங்கதேசப்பிரிவினையின் (1970-71) போதும், இடி அமீன் காலத்தில் (1972) உகாண்டாவில் இந்தியர்கள் தாக்கப்பட்டபோதும் வேறு சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி சிறப்புச் சலுகைக் குடியுரிமை ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே புதிய சட்டத் திருத்தமே தேவை இல்லை என்பதே உண்மை.

    ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வியூகங்களுக்காக குடியுரிமைச் சட்ட திருத்தத்தைப் பயன்படுத்துகிறது பாரதிய ஜனதா.

    மேற்குவங்கத்தில் வங்கதேச எல்லையில் அடர்த்தியாக வாழும் "நாம சூத்திரா" வகைப் பிரிவினர் இந்துக்கள். கங்கை நன்னீர் மற்றும் கழிமுகப்பகுதிகளில் மீன் பிடித்தல் மற்றும் சதுப்பு நிலச் சாகுபடி செய்தல் ஆகியவை அவர்களது வாழ்வியல்.

    மாநில எல்லைகள் இல்லாத காலத்தில் இன்றைய மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலங்களிலும் நாமசூத்திரர்கள் குடியேறி உள்ளனர். வரலாற்றால் மறக்கடிக்கப்பட்ட அவர்களுக்குக் குடியுரிமை என்ற ஒன்று இருப்பதே தெரியாது. 2019 தேர்தல் காலத்தில் அவர்கள் வாக்குகளைக் கவர பாரதிய ஜனதா முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றது.

    மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில் அது 40 சதவீத வாக்குகளைப் பெற்று 18 இடங்களைக் கைப்பற்றியது. 2024ல் நாமசூத்திர வாக்கு வங்கியால் மொத்தம் உள்ள அத்தனை இடங்களையும் அள்ளிவிடலாம் என்று நினைக்கிறது பாரதிய ஜனதா. அதற்குக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் உதவும் என்பது அதன் கணக்கு.

    இந்துக்களான நாமசூத்திரர்கள் மத்தியில் இப்போது குடியுரிமைக் கனவு ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் அண்டை மாநில விழிப்புணர்வு இயக்கங்கள் எதிர்க்கின்றன. தேசவிரோத முத்திரை குத்தப்பட்டு அவை அடக்கி ஒடுக்கப்படுகின்றன.

    சுருக்கமாகச்சொன்னால், குடியுரிமைச் சட்டதிருத்தம் வாக்கரசியலுக்காக இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை முன்னெடுக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள காலகட்டத்தில் பா. ஜ. ஆதரவு அதிகம் உள்ள வட மாநிலங்களில் இந்து ஓட்டு வங்கியை மேலும் ஒருமுனைப்படுத்த முனைகிறது பாரதிய ஜனதா என்பது தான் உண்மை.

    ஓட்டுக்காக நாட்டைப் பிளவுபடுத்துவது பேராபத்து.

    • நமது உடலில் ஏதாவது ஒரு நோய் வருவதற்கு முன்பே அதனை கண்டறிந்து நமது உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளலாம்.
    • முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்தால் அன்றைய தினம் காலையில் டீ, காபி உள்பட எதுவுமே சாப்பிடாமல் செல்லுங்கள்.

    'லேசாகத் தலைவலிக்கிறது' என்று சொன்னால் கூட, அனைவரும் சொல்லும் முதல் வார்த்தை ஆஸ்பத்திரிக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்து பார் என்பது தான்.

    அந்த அளவுக்கு படித்தவர்கள் முதல் படிக்காத பாமரர்கள் வரை அனைவரது மனதிலும் பதிவாகி விட்ட ஒரு வார்த்தையாகி விட்டது முழு உடல் பரிசோதனை.

    இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் நமது உடல் நலனை நன்றாக கவனித்து கொள்கிறோமா என்று நம்மை நாமே முதலில் கேட்டு பார்த்தால், இல்லை என்று தான் சொல்ல தோன்றும். அந்தளவுக்கு உடல் நலனை பற்றி அக்கறைப்படுவதற்கோ அல்லது கவலைப்படுவதற்கோ நமக்கு அதற்கான நேரம் இருப்பதே இல்லை.

    உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதைப் பொறுத்தவரை பலரும் நோய் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றே நினைக்கின்றனர்.

    நோய் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும் வரை காத்திருக்கின்றனர். உதாரணத்துக்குத் தலைச்சுற்றல், மயக்கம் வந்தால் உயர் ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது. அதிகமாகச் சிறுநீர் கழிப்பது, புண் ஆறத் தாமதம் ஆகிறது என்றால் நீரிழிவு நோய் வந்துவிட்டது என்று அர்த்தம். இப்படி நோய் வந்த பிறகு உடலை போட்டு சிரமப்படுத்துவதைவிட, அந்த நோய் தலையெடுக்கும் முன்பே அதனை கண்டுபிடித்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து சிகிச்சை மேற்கொள்வது தான் புத்திசாலித்தனமானது. உடல் வலி மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றையும் தவிர்த்து விடலாம். இதற்கு முழு உடல் பரிசோதனை முக்கியம்.

    எல்லோரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள் என்று சொல்கிறார்களே உண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்? என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

    நமது உடலில் ஏதாவது ஒரு நோய் வருவதற்கு முன்பே அதனை கண்டறிந்து நமது உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளலாம். அந்த வகையில் முழு உடல் பரிசோதனையானது அதற்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இன்றை இளம் தலைமுறையினரிடம் 'நோய் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்ற மனநிலையே மேலோங்கி நிற்கிறது. நோய் முற்றிய பின்னரே ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். முன்னதாகவே பார்த்து விட்டால் நன்றாக இருக்கும்.

    இருந்தாலும், எல்லோரும் இந்த பரிசோதனை செய்து கொண்டு தான் ஆக வேண்டும் என்பதில்லை. பொதுவாக, 35 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தப் புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற ஏதாவது மரபு வழி நோய்கள் இருந்தால் அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 35 வயதுக்கு முன்பாக இந்தப் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. பல்வேறு நோய் அறிகுறிகள் உள்ளவர்களும் இந்த சோதனையை மேற்கொள்ளலாம். இதுமட்டுமின்றி தங்கள் உடம்பில் நோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை பார்க்க விரும்புபவர்களும் முழு உடல் பரிசோதனை செய்து பார்த்து கொள்ளலாம்.

    புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் போன்றோர் வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அதிக டென்ஷன் உள்ள வேலைகளை செய்வோர், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களும் செய்ய வேண்டும். உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் எந்த நோய் இல்லாவிட்டாலும் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தொடக்க நிலை மற்றும் முற்றிய நிலையில் உள்ள நோய்களை நாம் கண்டறிய முடியும். அப்படி கண்டறிந்தால் அதற்கான சிகிச்சைகளை அப்போதே தொடங்கி அதனை செய்து கொள்ள முடியும். இதற்கு முழு உடல் பரிசோதனை மிகவும் அவசியமானது.

    முழு உடல் பரிசோதனை செய்து விட்டோம் பல நாட்கள் கழித்து தான் முடிவுகள் வரும் என எண்ண வேண்டாம். ஒரே நாளிலேயே அதன் முடிவுகளும் உடனே தெரிவிக்கப்பட்டு விடுகிறது.

    என்னென்ன பரிசோதனைகள்?

    பொதுவாக ரத்தம், சிறுநீர், மலம் தொடர்பான பரிசோதனைகள், மார்பக எக்ஸ்ரே, காது, மூக்கு, தொண்டை, பல், கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஈசிஜி, டிஎம்டி, எக்கோ, கார்டியோ கிராம், பெண்களுக்கு மேமோகிராம், ஆஞ்சியோ கிராம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இந்த முழு உடல் பரிசோதனையில் உள்ளது. இதுமட்டுமின்றி முழு உடல் பரிசோதனை செய்ய வருபவர்களிடம் அவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும் கேட்டு அறியப்படும். அப்போது அவர்களுக்கு இந்த சிகிச்சை முறையிலோ அல்லது வேறு ஏதாவது சந்தேகங்கள் இருந்து எங்களிடம் கேட்பவர்களுக்கு அதற்கான விளக்கத்தையும் கொடுக்கிறோம்.

    இந்த முழு உடல் பரிசோதனையில், நோய் அறிகுறிகளுக்கு ஏற்பவும் பரிசோதனைகள் விரிவடைந்து கொண்டே செல்கின்றது. முழு உடல் பரிசோதனையின்போது ஏதேனும் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால், அதை உறுதி செய்வதற்காக கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படும். முழு உடல் பரிசோதனையின்போது அந்த நபருக்கு கூடுதல் பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையானது சலுகை கட்டணத்திலேயே செய்யப்பட்டு வருகின்றன.

    முழு உடல் பரிசோதனை செய்யும்போது, நமது உடலில் உள்ள பல், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பல உறுப்புகளில் ஏற்படும் நோய்களை முன்கூட்டியே நாம் தெரிந்துகொள்ள முடியும். ரத்த பரிசோதனையில் ரத்த சோகை, ரத்தப் புற்றுநோய், நீரிழிவு நோய் பாதிப்பு தெரியவரும். நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு, அளவைக் கண்டறிவதன் மூலம் இதயத்தின் இயங்கும் தன்மையை அறியலாம்.

    இந்த சோதனையின் மூலம் மாரடைப்பு அபாயத்தையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் அதனை தடுப்பதற்கான மருத்துவ சிகிச்சையையும் நாம் எடுத்து கொள்ளலாம்.

    இ.சி.ஜி., டி.எம்.டி.(ட்ரெட் மில் டெஸ்ட்) மற்றும் ஆன்ஜியோகிராம் மூலம் மாரடைப்பு நோயை கண்டுபிடிக்கலாம். ரத்த அழுத்த அளவு பரிசோதனையில் ரத்தக் கொதிப்பு வாய்ப்புகளைக் கண்டறியலாம். எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் புராங்கைட்டிஸ் பரிசோதனை மூலம் நுரையீரல் பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய் மற்றும் நிமோனியா பாதிப்புகளை கண்டறியலாம். இதன் மூலம் ஏற்பட வாய்ப்புள்ள மாரடைப்பு, பக்கவாதத்தையும் கண்டுபிடிக்கலாம். மேமோகிராம் பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயைக் கண்டறியலாம்.

    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கல்லீரல் இயக்கம், கொழுப்பு படிந்த கல்லீரல், கல்லீரலில் ஹெபடைடீஸ் பாதிப்பு, கல்லீரலில் சிரோசிஸ் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறியலாம்.

    இத்தகைய பரிசோதனைகள் மூலம் பித்தப்பைக் கற்கள், குடல் மற்றும் குடலுக்கு வெளியே உள்ள பாகங்களில் ஏற்படும் பாதிப்புகள், சிறுநீரக செயல்பாடு, புராஸ்டேட் புற்றுநோய் அபாயம், பெண்களுக்கு கர்ப்பப்பை ஆகியவற்றில் தோன்றும் சாதாரணக் கட்டிகள் முதல் புற்றுநோய் வரை இந்த சிகிச்சை முறையின் மூலம் கண்டறிந்து விட முடியும்.

     

    டாக்டர்கள் ஜோசப், ஸ்மித்தா அசோக் கே.எம்.சி.எச். மருத்துவமனை, கோவை.

    டாக்டர்கள் ஜோசப், ஸ்மித்தா அசோக் கே.எம்.சி.எச். மருத்துவமனை, கோவை.

    முழு உடல் பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு பரிசோதனையின்போது ஏதாவது பாதிப்புகள் கண்டறியப்பட்டால், எந்த நோய் இருக்கிறதோ, அந்தந்த நோய்களுக்கு ஏற்ப துறை ரீதியான மருத்துவர்களிடம் அழைத்து செல்லப்படுவார்கள்.

    அந்த மருத்துவர்கள், அவர்களுக்கு அந்த நோயின் தன்மை குறித்தும், எந்த நிலைமையில் உள்ளது, அதனை எப்படி சரி செய்ய வேண்டும், அதற்கான சிகிச்சை முறை என்பதையும் விரிவாக விளக்கி கூறுவார்கள். மேலும் அவர்களுக்கு தேவையான ஆலோசனையை வழங்குவதுடன், அந்த நோய்க்கான உரிய சிகிச்சைகளையும் மேற்கொண்டு அவர்களை அந்த நோயில் இருந்து முற்றிலும் குணப்படுத்தி விடுவார்கள்.

    முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்தால் அன்றைய தினம் காலையில் டீ, காபி உள்பட எதுவுமே சாப்பிடாமல் செல்லுங்கள். ஏதாவது நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்களாக நீங்கள் இருந்தால், அது தொடர்பான மருத்துவ அறிக்கையை கையுடன் எடுத்து சென்று டாக்டர்களிடம் காண்பித்து விட்டு, முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    எங்களது ஆஸ்பத்திரியில், முழு உடல் பரிசோதனை செய்ய நீங்கள் விரும்பினால் எங்களது மையத்துக்கு முன்கூட்டியே போன் செய்து பதிவு செய்து வைத்து கொள்ளுங்கள். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து தினங்களிலும் இந்த மையமானது செயல்பட்டு வருகிறது.

    வருமுன் காப்பதே சிறந்தது என்ற வாக்கியத்திற்கு ஏற்ப நாம் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருப்பதற்கு நாம் ஆண்டிற்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியமானது. அப்படி செய்து கொண்டோமேயானால் நாம் இந்த பூமியில் இருக்கும் வரை சந்தோஷத்துடனும், உற்சாகத்துடனும் நமது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கலாம்.

    தொடர்புக்கு:

    73393 33485

    • தாயாருக்கு 9 வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, பாசிப்பயறு சுண்டல் வைத்து பிரார்த்தித்து வர நினைத்த காரியம் கைகூடும்
    • தலத்தில் ஏழு தீர்த்தங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சோழர்கள் தலைநகராக விளங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

    கும்பகோணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது நாதன்கோவில். இந்த ஊரில் ராஜராஜசோழன் எழுப்பிய மிகப்பழமையான ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவிலில் இருந்தபடி இன்றைக்கும் அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் பெருமாள். இங்கு, மூலவரின் திருநாமம் - ஸ்ரீவிண்ணகரப் பெருமாள்: ஸ்ரீநாகநாதர் என்றும் அழைப்பர்.

    கருவறையில் இவருக்கு முன்னே, ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீபூதேவியுடன் ஸ்ரீஜெகந்நாதபெருமாள் எனும் திருநாமத்துடன் உற்சவரும் காட்சி தருகிறார்.

    ஸ்ரீபிரம்மா, திருமாலின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அற்புதத் தலம் இது! இத்தகைய சிறப்புடைய நாதன்கோவிலை, திருநந்திபுர விண்ணகரம் எனப் போற்றுகிறது தல புராணம். நந்தி, சிவபெருமானின் வாகனம். அந்த நந்தி பெயரில் பெருமாளுக்கு உரிய இடம் அழைக்கப்படுகிறது. அந்த பெருமாள் குடிகொண்டிருக்கும் தலத்துக்கு சிவனாரின் வாகனமான நந்தியின் பெயர் வந்தது எப்படி தெரியுமா?

    ஒருமுறை, மகாவிஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டத்துக்கு நந்திதேவர் சென்றார். ஆனால், துவாரபாலகர்களான ஜயனும் விஜயனும் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள். அதையும் மீறி நந்திதேவர் உள்ளே செல்ல முயன்றார். இதனால் கோபம் கொண்ட இருவரும், "உஷ்ண நோயால் உன் தேகம் பாதிக்கப் பட்டு. அவதிப்படுவாயாக!" எனச் சாபமிட்டனர்.

    இந்த நோயால் அவதிப்பட்ட நந்திதேவர், சிவபெருமானிடம் முறையிட்டார். அப்போது, "திருமகள் கடும் தவம் இருந்து, திருமாலின் இதயத்தில் இடம் பிடித்த தலமான நாதன்கோவி லுக்குச் சென்று தவம் செய்தால், சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கப் பெறுவாய்" என்று அருளினார் சிவபெருமான்.

    அதன்படி, இந்தத் தலத்துக்கு நந்திதேவர் வந்தார். திருமாலை எண்ணிக் கடும் தவம் மேற்கொண்டார். இதில் மகிழ்ந்த பெருமாள் அவருக்கு காட்சி கொடுத்து ஆசிர்வதித்தார். அதோடு நந்தியின் சாபத்தையும் போக்கியருளினார். அப்போது திருமாலிடம் நந்திதேவர். "என்னைப் போலவே தோல் நோயால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து தங்களைத் தரிசித்தால், அந்த நோயைத் தாங்கள் தீர்த்தருள வேண்டும். இதன் நினைவாக, இந்தத் திருத்தலம் அடியேனின் பெயரால் அழைக்கப்படவேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார். அைத ஏற்றுக்கொண்ட மகாவிஷ்ணு, 'அப்படியே ஆகட்டும்' என அருளினார். அதன்படி, இன்றளவும் தோல் நோய்களைத் தீர்த்து அருளி வருகிறார் பெருமாள். இங்கே, மனித உருவில் காட்சி தரும் நந்திதேவரை கருவறையிலேயே தரிசிக்கலாம்.

    திருமாலின் இதயத்தில் இடம்பிடிக்க, செண்பக மரத்தடியில் ஸ்ரீமகாலட்சுமி தவம் செய்த தலம் என்பதால், இங்கு மரத்தடியில் ஸ்ரீசெண்பகவல்லித் தாயாராக, கிழக்குப் பார்த்தபடி, தவம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறாள்.

    சுக்லபட்ச அஷ்டமி நாளில், இங்கு ஸ்ரீசூக்த ஹோமம் சிறப்புற நடைபெறுகிறது. தொடர்ந்து எட்டு சுக்லபட்ச அஷ்டமி நாட்களில் இந்தத் தலத்துக்கு வந்து,ஸ்ரீசூக்த ஹோமத்தில் பங்கேற்று,ஸ்ரீசெண்பகவல்லித் தாயாரை தரிசித்து வணங்கினால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம். மேலும் திருமணத் தடை அகலும்; கஷ்டங்கள் யாவும் விலகும். சந்திர மற்றும் பித்ரு தோஷங்கள் நீங்கும்; லட்சுமி கடாட்சமாக வாழலாம் என்பது ஐதீகம்!

    மனித உருவில் காட்சி தரும் நந்திதேவரை வணங்கி வழிபட, நோய்கள் நீங்கப் பெறலாம்; இழந்த பதவியை அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த ஆலய மூலஸ்தான கோபுரத்தில் நந்தியும், பிரம்மாவும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர். இது இக்கோவிலின் சிறப்புக்களில் ஒன்று. இக்கோவிலில் இறைவன் மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

    பெருமாளின் 108 திவ்ய தேச தலங்களில் இந்த தலமும் ஒன்றாகும். இது 21 வது திவ்ய தேச கோவிலாக போற்றப்படுகிறது. இக்கோவில் நந்திபுரம், நாதன் கோவில், திருதந்திபுர விண்ணகரம் ஆகிய மற்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோவில் தட்சிண ஜகந்நாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

    கோவில் தனிச்சிறப்பு :

    * பெருமாளுக்கு முன் நந்தி காட்சி தரும் தலம்

    * திருமாலின் திருமார்பில் திருமகள் உறையும் பாக்கியம் பெற்ற தலம்

    * திருமண தடை நீக்கும் தலம்

    சந்திர தோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் உள்ளது. இத்தல பெருமாள் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார். நந்தி சாப விமோசனம் பெற்ற தலம் என்பதால் சன்னதி, ஊர், தீர்த்தம் என அனைத்தும் நந்தியை முதன்மைப்படுத்தியே காணப்படும்.

    வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனி மாத பவித்ரோற்சவம், அட்சய திருதியை போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

    தாயாருக்கு பிரார்த்தனை:

    திருமணப் பிரார்த்தனைக்கு இது உகந்த தலமாகும். தாயாருக்கு 9 வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, பாசிப்பயறு சுண்டல் வைத்து பிரார்த்தித்து வர நினைத்த காரியம் கைகூடும்.

    திருமணத்தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர, குழந்தை பாக்கியம் பெற, வழக்குகளில் சாதகமான தீர்ப்பு பெற, நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் சிறந்த பலன் கிடைக்கும். வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் வழிபடுகின்றனர்.

    கோவில் விபரங்கள் :

    மூலவர் - நாதநாதன், விண்ணகரப் பெருமாள் யோக ஸ்ரீனிவாசன், தாயார் செண்பகவல்லி, உற்சவர் - ஜெகந்நாதன்

    தல விருட்சம் - செண்பக மரம்

    தீர்த்தம் - நந்தி தீர்த்த புஷ்கரணி

    கோலம் - வீற்றிருந்த திருக்கோலம்

    நந்திக்கே முதன்மை

    மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் அமைந்த இந்த தலத்தின் குளம் நந்தி தீர்த்தம் என்றும், விமானம் நந்தி விமானம் என்றும் அழைக்கப்படுகின்றன. மூலஸ்தானத்தில் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேர்ந்து காட்சி தருகிறார்.

    சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் நந்தி, இத்தலத்தில் மூலஸ்தானத்தின் முன் காட்சி தருகிறார். செண்பகவல்லி தாயாருக்கு தனி சந்நிதி உண்டு. இந்த தலத்தில் ஏழு தீர்த்தங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சோழர்கள் தலைநகராக விளங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

    காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த கோவில் நடை திறந்திருக்கும்.

    • தர்மர் துயரத்தோடு கலியுகம் பிறக்கப் போகிறது, அதற்கான நாள் நெருங்கிவிட்டது என்று சொல்லிவிட்டு மேலும் பேசத் தொடங்கினார்.
    • மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் எல்லோரும் செழிப்பாகத்தான் இருப்பார்கள்.

    மிகக் கடுமையான மகாபாரதப் போர் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது. தீயவனான துரியோதனன் பீமனால் தொடையைப் பிளந்து கொல்லப்பட்டான்.

    பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப் பாழ்த் துரியோதனன் யாக்கை ரத்தம் இரண்டையும் கலந்து கூந்தலில் தடவி நீராடிச் சீவிக் குழல் முடித்தாள் பாஞ்சாலி. அவள் கவுரவர் சபையில் துச்சாதனன் தன்னைத் துகிலுரிய முனைந்தபோது செய்த சபதம் நிறைவேறியது.

    இப்போது பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமபுத்திரர் மன்னராகி விட்டார். தன் பெயருக்கேற்ற வகையில் அவர் தருமநெறி தவறாமல் ஆட்சி செய்துகொண்டிருந்தார். அவரது செங்கோல் அரசாட்சியில் மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மாதம் மும்மாரி பொழிந்து நாடே செழிப்பாக இருந்தது.

    அந்தத் தருணத்தில்தான் துவாரகையின் மன்னனும் பஞ்ச பாண்டவர்களின் வழிகாட்டியுமான கண்ணன் ஒரு வேடனால் தற்செயலாகக் கொல்லப்பட்டான்.

    மரத்தின் கிளையில் உயரே அமர்ந்திருந்த கண்ணனின் அழகிய வெள்ளை நிறப் பாதங்களைப் புறா என நினைத்த வேடனின் புத்தியை என்ன சொல்வது? வேடனின் அம்பால் கண்ணன் மாண்டுபோனதை விதி என்று சொல்லாமல் அதற்கு வேறென்ன விளக்கம்?

    கண்ணன் வைகுந்தம் செல்லும்முன், `விரைவில் துவாபர யுகம் முடிந்து கலியுகம் தோன்றும், கலிபுருஷன் தன் வேலைகளைக் காண்பிக்கத் தொடங்குவான்` என்று தருமபுத்திரரை எச்சரித்துவிட்டே சென்றான்.

    தர்மபுத்திரர் கண்ணன் சொன்னபடி, கலியுகம் தோன்றினால் உலகம் என்னென்ன வகையில் மாறுமோ, மக்களின் மனப்போக்கு எவ்விதமெல்லாம் உருக்கொள்ளத் தொடங்குமோ எனக் கவலையுடனும் அச்சத்துடனும் காத்திருந்தார்.

    கண்ணனின் எச்சரிக்கையை எண்ணி அடிக்கடி அவரிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

    அப்படியான காலகட்டத்தில் ஒருநாள்...

    பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த வணிகச் சந்தை. சிலர் பொருட்களைக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். பலர் பொருட்களைத் தேடித் தேடி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

    அங்கு காய்கறி தொடங்கி வீட்டுக்கு உபயோகமான எல்லா வகையான பொருட்களும் விலைக்கு வாங்கக் கிடைத்தன. நியாயமான முறையில் வணிகம் நடந்து கொண்டிருந்தது.

    சூரியாஸ்தமனம் நிகழத் தொடங்கி மெல்லிய இருள் பரவும் நேரம். அப்போது, பரவிக் கொண்டிருந்த இருளைத் திரட்டிச் செய்தது மாதிரியான கறுத்த நிறத்தோடு ஒருவர் ஒரு குதிரையுடன் சந்தையில் அதை விற்பதற்காக வந்தார்.

    அவர் எங்கிருந்து வந்தார் எனத் தெரியவில்லை. அவர் உடலின் கருமை நிறம் வித்தியாசமானதாய் இருந்தது. ஆனால் அவர் விற்பதற்காகக் கொண்டு வந்த குதிரையின் எழில் எல்லோரையும் சுண்டி இழுத்தது.

    மினுமினுப்பான உடல். கம்பீரமான நடை. அந்தக் குதிரையிடம் தென்பட்ட மிடுக்கு அதற்கு ஒரு தனி கவர்ச்சியைக் கொடுத்தது. பார்த்த யாராலும் அதனிடமிருந்து கண்ணைத் திருப்ப முடியவில்லை.

    அந்நேரம் பார்த்து, பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் அந்தச் சந்தைக்குள் நுழைந்தான். எல்லோரையும் கவர்ந்த குதிரை அவனையும் கவரத் தவறவில்லை.

    குதிரையின் சேணத்தைப் பிடித்துக்கொண்டு நின்ற குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "இந்த அழகிய குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

    அவரோ குதிரையின் விலையைச் சொல்லாமல் அவன் கேட்ட கேள்விக்கு விந்தையான ஒரு பதிலைச் சொன்னார்.

    "ஐயா! இந்தக் குதிரையை நான் விற்பனைக்காகக் கொண்டு வரவில்லை. நீங்கள் இதை வாங்க விரும்பினால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதும். அப்படி பதில் சொல்பவர்களுக்குக் குதிரையை எந்தப் பணமும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாகவே தருவேன் " என்றார் அவர்.

    சற்றே திகைப்படைந்த சகாதேவன், "சரி உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்" என்றான்.

    குதிரையின் உரிமையாளர், "ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள நீரை எடுத்து ஏழு சிறிய கிணறுகளை நிரப்ப முடியும். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் நீரை எடுத்து, மறுபடியும் அந்தப் பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பாது. எதிர்காலத்தில் இப்படி நிகழும். இது ஏன்?" என்று கேட்டார்.

    இதென்ன விசித்திரமான கேள்வி? சகாதேவனுக்குப் பதில் தெரியவில்லை. அங்கேயே பதிலை யோசித்தவாறு உட்கார்ந்து விட்டான்.

    சிறிது நேரத்தில், எங்கே சகாதேவனைக் காணோம் எனத் தேடிக்கொண்டு அவன் சகோதரன் நகுலன் சந்தைக்கு வந்தான். குதிரையையும் அதன் உரிமையாளரையும் அருகே சோர்வோடு அமர்ந்திருந்த சகாதேவனையும் பார்த்தான். குதிரையின் அழகு நகுலனையும் மயக்கியது. அவனும் அதை வாங்கும் எண்ணத்தில் விலை கேட்டான்.

    இப்போது குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் வேறு ஒரு கேள்வியைக் கேட்டார். "துணி தைக்கும் ஊசியின் துவாரம் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த துவாரத்தின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்று கேட்டு இதற்கான பதிலைச் சொல்லிவிட்டு பணமே தராமல் குதிரையை அழைத்துச் செல்லலாம் என்றார்.

    நகுலன் எவ்வளவோ யோசித்தும் அவனுக்கு பதில் தெரியவில்லை. அவனும் ஏற்கெனவே சந்தையில் உட்கார்ந்திருந்த சகாதேவனுடன் தானும் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

    சில நிமிடங்கள் கழிந்தன. அர்ஜுனன் அங்கு வந்தான். அவனும், அழகிய குதிரையைப் பார்த்து, அதன் விலையைக் கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

    "ஒரு வயலில் பயிர் நன்றாக விளைந்திருந்தது. வேலியெல்லாம் போட்டு பயிரை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயலில் விளைந்த பயிர் எதையும் காணவில்லை. வேலியெல்லாம் இருந்தும் விளைந்த தானியம் எங்கு போயிற்று? யார் எடுத்தார்கள்? பதில் சொல்லிவிட்டு, குதிரையை அழைத்துச் செல்லுங்கள்" என்றார்.

    கண்ணனிடம் மகாபாரதப் போர் நடந்தபோது கீதோபதேசம் கேட்டவன் அர்ச்சுனன். அப்போது எத்தனையோ நுணுக்கமான கேள்விகளை எழுப்பி கண்ணன் மூலம் விளக்கம் பெற்ற அர்ஜுனனால் இப்போது இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவனும் யோசனையோடு அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

    அரண்மனையில் சகோதரர்கள் மூவரையும் காணாமல், தர்ம புத்திரர் திகைப்படைந்தார். பீமனைக் கூப்பிட்டு, "நீ போய், அவர்கள் எங்கே என்று தேடி அழைத்து வா!" என்றார்.

    பீமன் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அரண்மனைக்கு அழைத்து வந்தான். திரெளபதியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் எங்கு போனீர்கள்?" என விசாரித்தார்.

    அர்ஜுனன், நடந்ததை விவரித்தான். குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று வினாக்களையும் ஒவ்வொன்றாகச் சொன்னான். அந்தக் கேள்விகளைக் கேட்ட தர்மபுத்திரர் நடுநடுங்கினார்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

     

    தம்பிகள் திகைத்தார்கள். "அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக இந்தக் கேள்விகளில் என்ன இருக்கிறது?" எனக் கேட்டார்கள்.

    தர்மர் துயரத்தோடு கலியுகம் பிறக்கப் போகிறது, அதற்கான நாள் நெருங்கிவிட்டது என்று சொல்லிவிட்டு மேலும் பேசத் தொடங்கினார்...

    "என் அன்புச் சகோதரர்களே! விரைவில் கலியுகத்தில் நிகழப்போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் தெரிவிக்கின்றன. அதை எண்ணித்தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்....." என்று விரிவாகக் கூறலானார்.

    "உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர். ஏழு சிறிய கிணறுகள் என்பவை அந்தப் பெற்றோரின் பிள்ளைகள். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எண்ணிக்கையில் எத்தனை பேராக இருந்தாலும் சரி! காப்பாற்றுவார்கள்.

    இதைத்தான் பெரிய கிணற்றின் நீரைக் கொண்டு சிறிய கிணறுகளை நிரப்பினார்கள் என்றது குறிக்கிறது. ஆனால் அந்தப் பிள்ளைகளோ, அவ்வளவு பேரும் சேர்ந்து கூட, தங்கள் பெற்றோரைக் காப்பாற்ற மாட்டார்கள்.

    இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள அத்தனை தண்ணீரையும் கொண்டு, அந்த ஒரே ஒரு பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறிக்கிறது.

    அடுத்த இரண்டாவது கேள்வி என்ன சொல்கிறது தெரியுமா? இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினம். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார் அந்தக் குதிரை உரிமையாளர்.

    மூன்றாவது கேள்வியில் பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே விளைச்சல் முழுவதையும் அனுபவிப்பார்கள்.

    அவர்கள் மக்களின் நலன்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் எல்லோரும் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது!

    இவையாவும் கலியுகத்தில் நடக்கும். அரசாட்சியில் உள்ளோர் நம்மைப் போல் அரசாள மாட்டார்கள். மக்களைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் தங்கள் நலனைப் பெருக்கிக் கொள்வதையே அவர்கள் நோக்கமாகக் கொள்வார்கள்` என்று சொல்லி முடித்தார் தர்மர்.

    பஞ்ச பாண்டவர்களும் பாஞ்சாலியும் கலியுகம் தோன்றப் போவதை எண்ணிக் கவலையில் ஆழ்ந்தார்கள்.


    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    • சணலால் ஆன சாக்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது.
    • இந்துஸ்தான் அலுமினியம் நிறுவனத்தின் சேர்மனாக அவர் இறுதி வரை இருந்தார்.

    சாதாரண சின்ன பெட்டிக் கடையில் பதினாறாம் வயதில் வணிகத்தைத் தொடங்கி பிரம்மாண்டமான அளவு அதை வளரச் செய்த ஒரு சாதனையை நிகழ்த்தியவர் யார் தெரியுமா? அவர் தான் கணஷ்யாம் தாஸ் பிர்லா.

    ஜி.டி. பிர்லா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். பெரிய தொழில் அதிபர், தேசபக்தர், ஆகப் பெரும் பணக்காரர்.

    அனைவருக்கும் கொடுத்துக் கொடுத்துக் கைகள் சிவந்தவர், தேசத்தை தொழில்மயமாக்க உதவியவர், காந்திஜிக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவர், தடைகள் பலவற்றை வென்றவர், கல்வி அறிவு பரப்புவதில் ஆர்வம் கொண்டவர் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இவரைப் பற்றி!

    பிறப்பும் இளமையும்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜுன் ஜுனு என்ற மாவட்டத்தில் பிலானி என்னும் சிறு நகரில் ஒரு மார்வாடி குடும்பத்தில் பல்தேவ்தாஸ் பிர்லாவுக்கு மூன்றாவது மகனாக 1894ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் நாள் கணஷ்யாம் தாஸ் பிர்லா பிறந்தார். அன்று ராம நவமி தினம்.

    இளமையில் உள்ளூரிலேயே ஆரம்பக் கல்வியை முடித்துக் கொண்ட இவர் தந்தையுடன் கல்கத்தா சென்று சணல் வியாபாரத்தைக் கற்றுக் கொண்டார். பின்னர் சணல் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினார்.

    1914 முதல் ஆரம்பித்த முதலாம் உலகப் போர் பிரிட்டிஷாரைத் திணற அடித்துக் கொண்டிருந்தது. சணலால் ஆன சாக்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. நிலைமையை நன்கு கவனித்த பிர்லா அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு நன்கு உழைத்து முன்னேறலானார். உலகப் போர் முடிந்த 1919ஆம் ஆண்டில் குவாலியரில் ஜவுளி ஆலை ஒன்றைத் தொடங்கினார்.

    பிரிட்டிஷாரின் எதிர்ப்பு: பிர்லா தனியாகத் தொழில் தொடங்குவதைக் கண்ட பிரிட்டிஷார் எரிச்சல் அடைந்தனர். ஏராளமான இடையூறுகளைத் தந்தனர். அவர்கள் உபயோகிக்கும் லிப்டில் ஏறக் கூடாது. ஒரு சந்திப்பில் காத்திருக்கும் போது அங்குள்ள பெஞ்சுகளில் பிரிட்டிஷாருக்குச் சமமாக உட்காரக் கூடாது. இப்படி ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அவர் படாதபாடு பட்டார். பிரிட்டிஷாருக்கு எதிராக சுயமாக சுதேசி ஜவுளியைத் தயாரித்து அவர்களுக்கு ஈடு கொடுத்தார் அவர்.

    எப்படியும் தேச பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் விதையூன்றியது. எந்த பிரிட்டிஷ் அரசு அவரை அவமதித்ததோ அதே அரசால் லண்டனில் 10, டவுனிங் சாலையில் அவரது 40வது வயதில் அவர் வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சியானது.

    மகாத்மாவின் எழுச்சி: இந்த நிலையில் தான் "இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா" மக்களை எழுச்சியுறச் செய்ய ஆரம்பித்தார். பிர்லாவையும் கவர்ந்தார்.

    முதலில் ஐயாயிரம் ரூபாயை நன்கொடையாக அவர் காந்திஜிக்கு அனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்ட காந்திஜி ஒரு கடிதத்தை அனுப்பினார்.

    "நீங்கள் நலமுற இருக்க வேண்டும். எனக்கு உங்களால் ஆக வேண்டிய காரியம் நிறைய இருக்கிறது" என்று எழுதினார் காந்திஜி.

    உண்மையும் அப்படித்தான் ஆனது. காந்திஜியின் திட்டங்களுக்கெல்லாம் அவர் உதவினார்.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    இத்தனைக்கும் அவர் காந்திஜியின் அனைத்துக் கொள்கைகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. பல விஷயங்களில் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தாலும் அடிப்படைக் கொள்கைகளில் அவர் காந்திஜியை அப்படியே பின்பற்றினார்.

    காந்திஜியை அவர் எவ்வளவு மதித்தார் என்பதற்கு ஒரு சிறிய சம்பவம் உண்டு. 1931-ல் இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் லார்ட் சாலிஸ்பரி, பிர்லாவிடம், "நல்ல குணாதிசயத்துடன் கூடிய அனுபவத்தைக் கொண்ட ஒருவரை மகானாக ஆக்கி விடும் பெரும் தவறை நீங்கள் உங்களது குழப்பத்தினால் செய்கிறீர்கள். இங்கிலாந்து ஆயிரம் ஆண்டுகளின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, உங்களுக்கோ ஒன்றும் இல்லை" என்று காந்தியடிகளை மகானாக ஆக்கும் இந்தியரை ஏளனம் செய்தார். உடனே பிர்லா, "எங்களது பாரம்பரியம் உங்களுடையதை விடப் பழமையானது. அது அனைவராலும் மதிக்கப்படுவதும் கூட" என்று பளீரென்று பதிலைக் கூறிவிட்டு அவரிடமிருந்து அகன்றார்.

    காந்திஜியுடன் கடிதங்கள்: நூற்றுக் கணக்கான கடிதங்கள் காந்திஜிக்கும் அவருக்கும் இடையே பரிமாறப்பட்டன.

    ஒரு கடிதத்தில், பிர்லா என்னென்ன சாப்பிட வேண்டும், எப்படி, எப்போது சாப்பிட வேண்டும் என்று அன்புடன் அறிவுரை கூறி இருந்தார் காந்திஜி. இன்னொரு கடிதத்தில் தன்னிடமிருந்து உடனடியாக பதில் வரவில்லை என்றால் தான் மிக முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்ததாகவே எப்போதும் கொள்ள வேண்டும் என்றும் அன்புரை கூறி இருந்தார்.

    நான் ஒரு காந்தியவாதி: மகாத்மா என்ன சொன்னாலும் அதைச் செய்ய என்னால் மறுக்க முடியாது என்று கூறினார் பிர்லா. "நான் காங்கிரஸ்காரன் இல்லை; ஆனால் காந்தியவாதி" என்று இங்கிலாந்தில் அவர் முழங்கினார்.

    1916-ல் முதன் முதலாக மகாத்மாவை சந்தித்த அவர் ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட முக்கிய போராட்டங்களில் பங்கேற்றார்.

    டில்லியில் இருந்த 12 அறைகளுடன் கூடிய அவரது பெரிய வீடு இந்தியாவின் தலைநகர் வீடாக கருதப்பட்டது. தேசியத் தலைவர்கள் அங்கே குழுமுவது வழக்கம். மகாத்மா தனது கடைசி நான்கு மாதங்கள் இங்கு தான் தங்கி இருந்தார்.

    லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி உறுப்பினர்:

    பிரிட்டிஷ் இந்தியாவில் 1926ஆம் ஆண்டு அவர் லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பிர்லாவின் வணிக சாம்ராஜ்யம்: சர்க்கரை ஆலை, பேப்பர் ஆலை என ஒவ்வொன்றாக அவர் தொழில் சாம்ராஜ்யம் விரிவை அடைந்தது.

    1925-ல் பல தொழில் அதிபர்களை இணைத்து இந்தியன் சேம்பர் ஆப் காமர்சை அமைத்தார்.

    சிமெண்ட், அலுமினியம், கெமிக்கல்கள், ரேயான், இரும்பு பைப்கள், டெலிகாம் என்று எந்தத் துறையையும் விட்டு வைக்காமல் ஒவ்வொன்றாக ஆரம்பித்தார்.

    1940-களில் அவர் கவனம் கார் தயாரிப்பில் திரும்பியது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கார்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்.

    இந்துஸ்தான் அலுமினியம் நிறுவனத்தின் சேர்மனாக அவர் இறுதி வரை இருந்தார். பிர்லா குழுமத்தில் மூன்று லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர் என்றும் 2,50,000 பங்குதாரர்களுக்கு லாபத்தில் பங்கு அளிக்கப்படுகிறதென்றும் அவர் பெருமையுடன் கூறினார்.

    வெள்ளையனே வெளியேறு இயக்கம் முடிந்த பின்னர் அவருக்கு வங்கி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்கவே யுனைடெட் கமர்ஷியல் வங்கியை 1942ல் அவர் ஆரம்பித்தார். (பின்னால் இது யூகோ வங்கி என்று ஆனது)

    கல்வித் துறையில் தன் கவனத்தைச் செலுத்திய அவர் பிலானியில் பிர்லா என்ஜினீயரிங் காலேஜ் என்று பொறியியல் கல்லூரியை ஆரம்பித்தார். இன்று பிட்ஸ் பிலானி (Birla Institute of Technology and Science) என்று அனைவராலும் வியந்து அழைக்கப்படும் பெரிய கல்வி நிறுவனத்தை அவர் வளர்த்ததோடு, கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் என பலவற்றிற்கும் ஆதாரமாகத் திகழ்ந்தார்.

    பிர்லா நாட்டிற்காகச் செய்த சேவையை கவுரவிக்க 1957-ல் அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. தபால்தலையும் வெளியிடப்பட்டது.

    குடும்பமும் வணிகமும்: துர்கா தேவி என்ற முதல் மனைவி மூலம் அவருக்கு ஒரு மகனும் இரண்டாம் மனைவி மகாதேவி மூலம் இரு மகன்களும் அவருக்கு உண்டு. மகாதேவி மறைந்தவுடன் தனது மகன்களை கூட்டுக் குடும்பத்தின் பரிபாலிப்பில் அவர் விட்டார். தனது மகன்களை தனது சமூகத்தில் உள்ள இதர நல்ல வணிகர்களிடம் அனுப்பி வணிக முறைகளைக் கற்றுக் கொள்ளச் சொன்னார்.

    அவர் வணிகத்தை நடத்திய விதமே தனி.' நான் ஒரு பிசினஸ்மேன் இல்லை' என்று அவர் ஒரு முறை கூறிய போது அனைவரும் வியந்தனர்.

    'ஆம், எனது வணிகம், தொழில்கள் தானியங்கி பைலட்டாக செயல்படும், முக்கியமான பெரிய முடிவு எடுக்க வேண்டும் என்றால் தான் என்னை அழைப்பார்கள்' என்றார் அவர். அப்படி ஒரு நிர்வாகத் திறமை அவருக்கு இருந்தது.

    பம்பாய் அலுவலகத்தில் நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலும் உள்ள அவரது நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி, விற்பனை உள்ளிட்ட விவரங்கள் காலையில் அவருக்கு வந்து குவியும். அதில் சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்களில் கேள்விக் குறி, ஆச்சரியக் குறி, க்ராஸ் X குறி போடப்பட்டு உரியவர்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு விடும். தனது மேலாளர்களிடமும் குடும்பத்தினரிடமும் அவர் கறாராகவே இருந்தார்.

    காந்திஜி நினைவு இல்லம்: புது டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் சலவைக் கற்களால் ஆன பிரம்மாண்டமான கோவில்களை பிர்லா குடும்பத்தினர் கட்டியுள்ளனர்.

    காந்திஜி தங்கி இருந்த பிர்லா மாளிகையை அரசு தன் கைவசத்தில் 1971-ம் ஆண்டு எடுத்தது, அதை பொதுமக்களின் பார்வைக்காக காந்திஜியின் நினைவு இல்லமாகத் திறந்து வைத்தது.

    மறைவு: இந்தியாவின் பொருளாதாரத்தையும் கல்வித் துறையையும் தொழில் துறையையும் பெரிதும் மேம்படுத்திய ஜி.டி.பிர்லா 1983-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் நாள் தனது 89-ம் வயதில் மறைந்தார்.

    சம்பாதித்ததை சந்தோஷமாக அறவழியில் நன்கொடையாக அளி என்பது அவர் காட்டிய வழி!

    உலகில் உள்ள எல்லா பொக்கிஷமும் மதிப்பே இல்லாதவையாகி விடும், அவற்றை நீங்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை எனில்! என்பது அவரது பொன்மொழி!

    ஆகவே கோடி கோடியாக அவர் நன்கொடையை தகுதி உள்ளோருக்குத் தந்து வந்தார். அவரது வழி வந்த அவரது குடும்பத்தினர் தவறாது அவர் வழியை இன்றும் பின்பற்றி வருகின்றனர். ஆதித்ய பிர்லா குழுமம் கடந்த ஆண்டுகளில் ரூ.50 கோடி, ரூ.276 கோடி, ரூ.400 கோடி என்று அளித்து வரும் நன்கொடை விவரங்களை அவ்வப்பொழுது செய்திகளாக நாம் பார்த்து வருகிறோம்.

    அனைவருடனும் ஒத்து வாழ் என்பதே அவர் அனைவருக்கும் கூறிய அன்புரை.

    'அழகிய ரோஜா மலரும் வலியைத் தரும் முள்ளும் இணைந்து ஒன்றோடொன்று ஒத்துழைத்து இருப்பதைப் பார்த்தால் நம்மால் அப்படி இருக்க முடியாதா என்ன?' என்றார் அவர்.

    இந்தியாவை சுதந்திரத்துடன் பொருளாதாரத்தில் வலிமை உள்ள நாடாக ஆக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்த அவரது தாரக மந்திரம்: அனைவருக்கும் உதவுங்கள் என்பதே!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • நரம்பு சார்ந்த நோய்நிலைகள் ஒருபுறமிருக்க, மன அழுத்தத்தாலும் சிறுநீர் அடக்க முடியாத நிலை உண்டாகிறது.
    • எளிமையாக கடுக்காய் கபத்தைக் குறைத்து புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தைக் குறைத்து நற்பலன் தரும்.

    உலகம் முழுவதிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஆயுட்காலம் கொஞ்சம் அதிகம் தான். ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 62.7 ஆண்டுகள் என்றும், பெண்களின் சராசரி ஆயுள் காலம் 66 ஆண்டுகள் என்றும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு வாழ்நாள் அதிகம் உள்ளது. இதனால் முதுமையில் ஆண்களை விட பெண்கள் கூடுதலாகவே முதுமையில் உடல்நல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும், அவசியமும் உள்ளது.

    முதுமையில் அதிகம் பேர் தூக்கத்தை தொலைப்பதற்கு முக்கிய காரணமாய் இருப்பது சிறுநீர் அடங்காமை நிலை (Urine Incontinence) தான். சொட்ட சொட்ட சிறுநீர் விழுதலும், சிறுநீர் கழிக்கும் முன்னமே காலோடு விழுதலும், அதனை அடக்க முடியாமல் போதலும், முக்கியமாக இரவில் அதிக முறை சிறுநீர் கழித்து தூக்கம் கெட்டு உடலும், மனமும் குன்றுதலும் முதுமைக்கு மிகப்பெரும் சிரமங்கள் தான்.

    இந்த நிலைமை 65 வயதை தொடும் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு மேலாக காணப்படுவதாக உள்ளது. முக்கியமாக 55 சதவீதம் பெண்களுக்கு சிறுநீர் அடக்க முடியாமை தொந்தரவு வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பதாக உள்ளது.

    பொதுவாகவே முதுமையில் ஏற்படும் நரம்புத் தளர்ச்சியால் சிறுநீரை சேமித்து வைக்கும் சிறுநீர்ப்பையானது, சிறுநீரை அடக்க முடியாமல் அடிக்கடி வெளியேற்றும் சூழல் உண்டாகிவிடுகிறது. மேலும் முதுமையில் ஏற்படும் நீரிழிவு, பார்கின்சன் எனும் நடுக்கு வாதம், பிற நரம்பு மண்டல நோய்நிலைகளிலும் சிறுநீர்ப்பை தனது இயல்பான தன்மையை இழந்து, சிறுநீர் அடக்க முடியாத நிலைக்கு பாதை அமைக்கிறது.

    நரம்பு சார்ந்த நோய்நிலைகள் ஒருபுறமிருக்க, மன அழுத்தத்தாலும் சிறுநீர் அடக்க முடியாத நிலை உண்டாகிறது. இதனால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல் உண்டாகி தூக்கம் கெட்டு துக்கம் சேருவது தான் அதிகம். இந்த சிறுநீர் அடக்கமுடியாத நிலையால் சிறுநீர்ப்பாதை தொற்றுக்களும் அடிக்கடி உண்டாகும் அபாயம் உள்ளது.

    மேலும் முதுமையில் நாட்பட்ட நோய்நிலைகளுக்கு எடுத்துக்கொள்ளும் சிறுநீர்பெருக்கி மருந்துகளும், மிகை ரத்த அழுத்தம் குறைக்கும் மருந்துகளும், மன அழுத்தம் போக்கும் மருந்துகளும், இதய நோய்க்காக வழங்கப்படும் மருந்துகளும், சிறுநீர் அடக்க முடியாத நோய்நிலைக்கு துணை போவதாக உள்ளன. ஆகவே மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்துகளை எடுப்பது நலம்.

    சித்த மருத்துவக் கூற்றுப்படி முக்குற்றங்களில் வாதக்குற்றம் பாதிப்படைவது சிறுநீர் அடக்க முடியாத நிலைக்கு காரணமாக உள்ளது. எனவே வாதம் தணித்து நரம்புகளை வன்மைப்படுத்தும் மருந்துகளும், வாதம் அதிகரிக்காத உணவு முறையும் பின்பற்ற இந்நோய்நிலையில் நற்பலன் காண முடியும்.

    சித்த மருத்துவ மூலிகைகளான அமுக்கரா கிழங்கு, தொட்டாற்சிணுங்கி, பூனைக்காலி விதை, சிற்றாமுட்டி, வல்லாரை, நீர்பிரமி, எட்டி, சாதிக்காய், சாதிபத்திரி போன்ற நரம்புக்கு வன்மை தரும் மூலிகைகளும், நெருஞ்சில், மூக்கிரட்டை, மஞ்சள், மாவிலங்கு ஆகிய சிறுநீர்ப்பாதை தொற்றுக்களைத் தடுக்கும் மூலிகைகளும் பயன்படுத்த நல்ல பலன் தருவதாக உள்ளன.

    மேற்கூறிய மூலிகைகள் மட்டுமின்றி, நரம்புக்கு வன்மைத் தரக்கூடிய கருப்பு உளுந்தினை கஞ்சியாக்கி குடித்து வருவதும் மூத்திரப்பை பலவீனத்தைக் குறைத்து, சிறுநீர் அடங்காத நிலையில் பலன் தரும். சித்த மருந்தான உளுந்து தைலத்தை தினமும் அடிவயிற்றில் பூசி வருவதும் நன்மை பயக்கும்.

    முதுமையில் பெண்களுக்கு நரம்பு தளர்ச்சியால் உண்டாகும் சொட்டு மூத்திரமும், சிறுநீர் அடக்கமுடியாத நிலையையும் போன்று ஆண்களுக்கு முதுமையில் உண்டாகும் புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தால் (BPH/Prostatomegaly) உண்டாகும் மூத்திரப்பையின் வாய்ப்பகுதி நெருக்கப்பட்டு சிறுநீர் கழிப்பதில் பல்வேறு தொந்தரவுகளை உண்டாக்கும். 40 வயதிலேயே சிலருக்கு புராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் உண்டாகிவிடுகிறது. 80 வயதைத் தொடும் 90 சதவீதம் ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பு வீக்கமடைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் சிறுநீர் அடக்க முடியாத நிலை, இரவில் அதிகம் சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழித்து வந்த சில நிமிடங்களில் மீண்டும் சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றுவது ஆகிய பல குறிகுணங்கள் உண்டாகி முதுமையில் ஆண்களைத் துன்புறுத்தும்.

    நாட்பட்ட புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தில் முழுவதும் சிறுநீர் அடைப்பு உண்டானால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழலும் உருவாகும். அதுமட்டுமின்றி சிலருக்கு பின்னாளில் புராஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பும் உள்ளதால் மேற்கூறிய அறிகுறிகளுக்கு மருத்துவர் ஆலோசனை எப்போதும் அவசியம்.

    சித்த மருத்துவத்தின் அடிப்படையான 96 தத்துவத்தின்படி தசவாயுக்களும், தசநாடிகளும் உடல் இயங்கியலில் முக்கிய பங்காற்றுகின்றன. அதன்படி சிறுநீர் கழித்தல், மலம் கழிப்பது ஆகிய உடல் இயக்க செயல்பாடுகள் பத்து வாயுக்களில் அபானன் வாயுவின் செயல்பாடாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இந்நோய் நிலையில் உடலில் அதிகமாகும் கபத்தின் வளர்ச்சியால் அபானன் வாயுவின் செயல்பாடு தடை ஏற்பட்டு சிறுநீர் கழிக்க சிரமத்தை உண்டாக்குவதாக உள்ளது.

    உடலில் சேரும் கபமே, புராஸ்டேட் வீக்கத்தை உண்டாக்கி நோயினை உண்டாக்குவதாக உள்ளதால் அத்தகைய கபம் போக்கி, வீக்கம் குறைக்கும் மூலிகை மருந்துகளை சித்த மருத்துவர் ஆலோசனைப்படி நாடுவது நலம் பயக்கும்.

    நெருஞ்சில், சதாவேரி, மாவிலங்கப்பட்டை, மூக்கிரட்டை, மஞ்சள், கழற்சிக்காய், கடுக்காய், வல்லாரை, முருங்கை ஆகிய மூலிகைகள் புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தைக் குறைத்து குறிகுணங்களைக் குறைப்பதாக உள்ளன. இதுமட்டுமின்றி இன்னும் பல பற்பம், மெழுகு போன்ற சித்த மருந்துகளும் இந்நோய்நிலையில் உதவக்கூடும்.

    நெருஞ்சில் முள்ளினைப் பொடித்து பாலில் கலந்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்வது இந்நோய்நிலையில் நற்பலன் தரும். நெருஞ்சில் இலை மற்றும் கருவேப்பிலை கொண்டு நடந்த ஆய்வில் இந்த மூலிகைகளின் கூட்டு புராஸ்டேட் சுரப்பியால் வீக்கம் கொண்ட நோயாளிகளின் குறிகுணங்கள் வெகுவாக குறைவதாக ஆய்வுகள் கூறுவது சிறப்புமிக்கது.

    டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார்மோன் சுரப்பு புராஸ்டேட் சுரப்பியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகிறது. இந்த ஹார்மோன் 5-ஹைட்ராக்ஸி டெஸ்டோஸ்டீரோன் எனும் கூடுதல் செயல் விளைவுள்ள ஹார்மோனாக நமது உடலில் மாறுகிறது. இதற்கு 5-ஆல்பா-ரிடெக்டேஸ் எனும் நொதி முக்கிய காரணமாக உள்ளது.

    எனவே மேற்கூறிய நொதியின் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் செயலைக் குறைத்து புராஸ்டேட் சுரப்பியின் வளர்ச்சியைத் தடுக்க முடியும். சித்த மருத்துவ மூலிகைகளில் உள்ள பீட்டா சைட்டோஸ்டீரால், ஸ்டிக்மா ஸ்டீரால், லூபியோல், குர்சிட்டின், கடிச்சின், கெம்ப்பெரோல், மிரிஸ்டிக் அமிலம், லினோலெயிக் அமிலம், லாரிக் அமிலம், இ.ஜி.சி.ஜி. ஆகிய பல்வேறு தாவர வேதிப்பொருட்கள் மேற்கூறிய நொதியின் செயல்பாட்டைத் தடுத்து புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தைக் குறைப்பதாக உள்ளதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

    எளிமையாக கடுக்காய் கபத்தைக் குறைத்து புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தைக் குறைத்து நற்பலன் தரும். ஒரு தேக்கரண்டி அளவுக்கு கடுக்காய் சூரணத்தை வெந்நீரில் கலந்து இரவில் எடுத்துக்கொள்வதும் அல்லது கடுக்காய் லேகியம் எனும் சித்த மருந்தை எடுத்துக்கொள்வதும் இந்நோய் நிலையில் பெரும்பயன் அளிக்கும். கடுக்காயில் உள்ள இஜிசிஜி எனும் வேதிப்பொருள் மருத்துவ தன்மைக்கு காரணமாகிறது.

    அதே போல் மற்றொரு எளிய மூலிகையான முருங்கை கீரையை முதுமையில் அவ்வப்போது சூப் வைத்து குடித்து வருவதும் புராஸ்டேட் நோயின் தாக்கத்தைக் குறைக்க உதவும். கபத்தைக் குறைக்கும் மற்றொரு மூலிகையான கொள்ளு கொண்டு செய்யப்படும் கொள்ளு ரசமும் அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள இந்நோய் நிலையில் பலனைத் தரும். 

    முளை கட்டிய தானியங்கள்

    முளை கட்டிய தானியங்கள்

    துத்தநாகச் சத்து குறைபாட்டினால் புராஸ்டேட் சுரப்பியின் உருப்பெருக்கம் (hypertrophy) உண்டாவதாக சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே துத்தநாக சத்துள்ள இறைச்சி, கடல் மீன்கள், முளை கட்டிய தானியங்கள், கொட்டை வகைகள் இவற்றை நாடுவது புராஸ்டேட் சுரப்பின் வளர்ச்சியைத் தடுக்க உதவும். பாரம்பரிய அரிசியான மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் இயற்கையாகவே இச்சத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நோய் நிலையில் அதிமுக்கியமாக மாலை நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவைக் குறைப்பது நல்லது. இது இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைக் குறைக்க உதவும். அதே போல் நீர்பெருக்கி காய்கறிகளை தவிர்ப்பதும் நல்லது.

    உணவு முறைக்கும், வாழ்வியல் முறைக்கும், புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நல்ல உடல் பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதியவர்களுக்கு புராஸ்டேட் நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுவது சிறப்பு.

     

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    அதே போல் அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு சார்ந்த உணவுகளைக் குறைத்து, நார்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்ப்பது புராஸ்டேட் நோய்நிலையில் பலன் தருவதாக உள்ளதை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டுகின்றது. இன்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கூறுவதைத் தான் ஆதி மருத்துவமாம் சித்த மருத்துவமும் கூறியுள்ளது. அத்தகைய வழிமுறைகளை பின்பற்றி வாழ்வது முதுமையில் நோய்களை துரத்தி நலத்தை வரவழைக்கும்.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    8056040768

    • ஒருவரின் ஜாதக ரீதியான ஜீவன அமைப்பை தேர்வு செய்வதில் பல விதமான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
    • அனைவருக்கும் சவால் விடும் வகையில் தொழில் வளர்ச்சி உலகில் பெருகி வருகிறது.

    ஒரு தனி மனிதனின் வாழ்வாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பொருளாதாரத்தின் பங்கு அளப்பரியது. ஆள்பாதி, ஆடை பாதி என்பது போல் ஒரு மனிதனின் கர்ம வினைப்படி அமையும் தொழிலே சமுதாய அங்கீகாரத்தையும் பொருளாதாரத்தையும் நிர்ணயம் செய்கிறது. நவீன யுகத்தில் லேட்டஸ்ட் டிரெண்டிங்கான தொழில்கள் பல உள்ளது.

    ஆனால் ஒருவரின் ஜாதக ரீதியான ஜீவன அமைப்பை தேர்வு செய்வதில் பல விதமான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. ஒருவரின் ஜாதகரீதியான தொழிலை 10ம்மிடமான தொழில் ஸ்தானமும், சனி மற்றும் புத பகவானுமே நிர்ணயம் செய்கிறார்கள்.

    தொழில் ஸ்தானம்

    ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் தொழில் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. அனைவருக்கும் சவால் விடும் வகையில் தொழில் வளர்ச்சி உலகில் பெருகி வருகிறது.

    ஒருவருக்கு தொழிலை வழங்கக்கூடிய பத்தாம் பாவகத்தின் மூலம் தொழிலால் உண்டாக கூடிய கவுரவம், அந்தஸ்து, தொழில் செய்யும் திறன், தொழிலில் ஜாதகருக்கு இருக்கும் ஆர்வம், தொழில் சம்மந்தப்பட்ட நுணுக்கங்கள், நுட்பங்களை வெளிபடுத்தும் திறன் ஆகியவற்றை அறிய முடியும். அனைவரது ஜாதகத்திலும் 10ம் பாவகம் உள்ளது. ஆனால் அனைவரும் தொழில் செய்வது கிடையாது. அதே போல தொழில் செய்யும் அனைவரும் அதில் பெரும் முன்னேற்றம் பெறுவதும் கிடையாது.

    சிறிய பெட்டி கடை முதல் பன்னாட்டு வணிகம் செய்பவர்கள் வரை அனைவரும் தொழிலில் சாதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடனே தொழில் தொடங்குகிறார்கள். ஆனால் சிலருக்கு பெரிய வளர்ச்சியை கொடுக்கும் சொந்த தொழில் பலருக்கு தளர்ச்சியை கொடுத்து கொடுத்து ஒருவருக்கு சொந்த தொழில் கை கொடுக்குமா? என்பதை ஜாதகத்தின் மூலம் எளிதில் கண்டறிய முடியும்.

    அதன்படி 10-ம்மிடம், 10-ம் அதிபதி 10-ம் அதிபதி நின்ற சாரநாதன், 10-ல் நின்ற கிரகங்கள், நவாம்சத்தில் 10 க்குடையவன் நின்ற ராசி, சனிக்கு 10-ம் இடம், சனிக்கு திரிகோணத்தில் நின்ற கிரகங்கள், சனி முதலில் தொடும் கிரகம், சனி நின்ற நட்சத்திர சார அதிபதி ஆகிய காரணிகளே ஒருவரின் தொழிலை தீர்மானிக்கிறது. ஜென்ம லக்னத்திற்கு 10-ம் அதிபதி ஆதிபத்தியம் சார்ந்த தொழில், உத்தியோகத்தை ஒருவர் செய்வது சாலச் சிறந்தது. ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான், 10-ம் அதிபதி நின்ற நிலைக்கு ஏற்பவே தொழில், உத்தியோகம் அமையும்.

    சனி

    கால புருஷ 10-ம் இடமான மகர ராசியின் அதிபதி சனியே ஒருவரின் தொழில், வியாபாரம், உத்தியோகம், வேலை, பதவியை நிர்ணயம் செய்கிறார். சனிக்கு கர்ம காரகன் என்ற பெயரும் உண்டு. ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. ஒருவருக்கு யோக பலன்கள் அனுபவிக்க வேண்டிய அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு.

    ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து விடும்.

    ஜனன கால ஜாதகத்தில் சனி நின்ற நிலைக்கு ஏற்பவே ஒருவருக்கு தொழில், உத்தியோக அனுகூலம் உண்டு. ஒரு ஜாதகத்தில் சனி பலமாக இருந்தால் மட்டுமே தொழில், உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். சனி நல்ல நிலையில் இருந்தால் அடி தட்டில் இருந்து உழைத்து உயர்ந்தவர்களாக இருப்பார்கள். உழைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்கள். தேவைப்படும் இடத்தில் உழைப்பையும், புத்தி சாதுர்யத்தையும் ஒருங்கே பயன்படுத்துவார்கள்.

    முதலாளியாக இருந்தால் கூட தொழிலாளி போல் உழைப்பவர்கள். சனி குறைந்த பாகையில் இருந்தால் சிறிய உழைப்பில் பெருத்த வரும்படியும் அதிக பாகையில் இருந்தால் கடின உழைப்பில் சிறிய வருவாயும் இருக்கும். சனி பலம் குறைந்தால் அடிமைத் தொழில், கவுரவம் இல்லாத, நீசத் தொழில் அல்லது வேலை வாய்ப்புகளில் நிரந்தரமற்ற தன்மை, நோய் நொடிகள் கஷ்ட ஜீவனம் நிரம்பி இருக்கும்.

    புதன்

    வாழ்க்கையில் வெற்றி பெற தொழில் காரகன் சனிக்கு அடுத்தபடியாக புத்திக்காரகன் புதனின் தயவு வேண்டும். புத்தியுள்ள மனிதனே பலவான். ஒரு மனிதனுக்கு உழைப்பு மட்டும் போதாது. புத்தியும், உழைப்பும் சேர்ந்தால் மட்டுமே காரியசித்தி உண்டு. வெற்றி மழையில் நனைய, நினைத்தது நடக்க புத்திக்காரகன் புதனின் தயவு வேண்டும்.

    நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்துள்ள முதல் கிரகம் புதனாகும். கிரகங்களில் மிகச் சிறிய கிரகமாக இருப்பதால் சந்திரனுக்கு அடுத்து வேகமாக சுற்றக்கூடிய கிரகம் புதனாகும். சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன் என்பதால் புதனுக்கு வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கும். புத்தி, அறிவு, ஞானம் ஆகியவற்றை வழங்குவதால் புத்திகாரகன் என்று பெயர். ஒரு மனிதனின் ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரணமான கிரகம் என்பதால் வித்யாகாரகன் என்ற பெயரும் உண்டு. புதன் வலிமை பெற்றவர்கள் மட்டுமே புத்திசாலியாக இருப்பார்கள்.

    ஜனன ஜாதகத்தில் புதன் பலம் பெற்றவர்கள் இளமைப் பொழிவுடன் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். கணக்கியல், மறைமுகமான, நுணுக்கமான பிரச்சினைகளை தீர்ப்பதில் நிபுணராக இருப்பார்கள். வியாபார தந்திரம் மிக்கவராகவும், மதிநுட்பத்தை பயன்படுத்தி இருந்த இடத்திலேயே தொழில் செய்து வருமானம் செய்பவராக இருப்பர். ஒயிட் காலர் ஜாப் செய்பவர் என்றும் கூறலாம்.

    பாவ கிரகங்களுடன் சேராமல் இருந்தால் புதன் தனித்தன்மையுள்ள சுபகிரகம். வேறு எந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும் அதன் பார்வைக்கும் குருவிற்கு நிகரான சக்தி உண்டு.

    அதே நேரத்தில் புதன் இரட்டை தன்மையுள்ள கிரகம். தான் சேரும் கிரகத்திற்கு, இடத்திற்க்கு தக்கவாறு பார்க்கும் கிரகத்திற்க்கு தக்கவாறு ஜாதகரை மாற்றிவிடுவார்.

    இந்த கட்டுரையில் 12 ராசியினருக்கும் பயன்படும் தொழில், உத்தியோகம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    மேஷம்

    (அசுவினி, பரணி, கிருத்திகை 1)

    மேஷ ராசியில் பிறந்தவர்கள் உணவு விடுதி, உணவுப் பொருட்கள் வியாபாரம். உர வியாபாரம், எண்ணை வியாபாரம், சுரங்கத் தொழில், சிறு பொருட்கள் விற்பனை, திரவப் பொருட்கள் விற்பனை, கழிவு பொருட்கள் விற்பனை, தோல் வியாபாரம், இரும்பு வியாபாரம், விவசாயம், கட்டிட வேலை, மர வியாபாரம், கல், மண் வியாபாரம், கடினமான வேலைகள் கீழ்மட்ட ஊழியம் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

    ரிஷபம்

    (கிருத்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிஷம் 1 ,2)

    ரிஷப ராசியினர் மனவியல் கலை, ஜோதிடம், ஆன்மீகம், ஆசிரியர் பணி, ஆராய்ச்சி துறை, நிர்வாகப் பொறுப்பு, ஆலோசனை வழங்குதல், வாயு பொருட்கள் விற்பனை, விமானத்துறை, விண்வெளி துறை, தீயணைப்புத்துறை, சிறைச்சாலை பணி, தொல்பொருள் ஆராய்ச்சி, பொறியியல் துறை, சுரங்கப்பாதை அமைத்தல், வெடிகுண்டு தயாரிப்பு, பொதுஜன வழிகாட்டி, சுங்க இலாகா பணி, இறைச்சி கடை உளவுத்துறை போன்ற தொழில், உத்தியோகத்தில் பணி செய்யலாம்.

    மிதுனம்

    மிதுன ராசியினர் கல்வித்துறை, ஆன்மீகம், மருத்துவம், நிதித்துறை, நீதித்துறை, தூதரகம், கடற்படை, நீர் நிலைகளில் வேலை செய்தல், ஆலயப் பணி, மத போதனை செய்தல், வங்கியில் பணி செய்தல், ஜோதிடம், பேச்சாற்றல், கணிதம், கணினித் துறை, கவிதை எழுதுதல், சிற்பம் வடித்தல், சித்திரம் வரைதல், நடிப்பு, நாடகம், சாஸ்திரம் , நுண்கலைகள், எழுத்தாளர், கவிஞர்கள், நகைச் சுவை நடிகர்கள், பேச்சாளர்கள், பத்திரிக்கை துறை, அரசியலை அலசுபவர்கள், விமர்சிப்பவர்கள், கல்வித்துறை, ஓவியர்கள் போன்ற தொழிலில் ஈடுபடலாம்.

    கடகம்

    கடக ராசியில் பிறந்தவர்கள் அரசு உத்தியோகம், காவல்துறை ராணுவம், தீயணைப் புத்துறை, விளையாட்டுத்துறை, பொறியியல் துறை, தொழிற்சாலைகளில் பணி செய்தல், இரும்பு சம்பந்தமான தொழில், உழைக்கூடம் தொடர்பான தொழில், செங்கல் சூளை வைத்தல், மட்பாண்டங்கள் செய்தல், சுரங்கத் தொழில், அறுவை சிகிச்சை மருத்துவம், ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல், சமையல் கலை, பூமித்தொழில் விவசாயம் போன்றவற்றில் ஈடுபடலாம்.

    சிம்மம்

    சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம், கால்நடை வளர்ப்பது, வட்டி தொழில், தரகுத்தொழில், நிதி நிறுவனங்களில் பணி செய்தல், கலைப் பொருட்கள், அழகு, பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், சுவையான உணவுப் பொருட்கள், சொகுசு பொருட்கள், மற்றும் இனிப்பான பானங்கள் விற்பனை செய்தல், இயல், இசை நாடகம், திரைப்படம், கவிதை, எழுதுதல், மற்றும் பாட்டு பாடுதல் போன்ற கலைத் தொழில்கள், தங்கும் விடுதி, மற்றும் கேளிக்கை விடுதிகள் நடத்துதல் கருவூலத்துறை போன்ற பணியில் ஈடுபடலாம்.

    கன்னி

    கன்னி ராசியை சார்ந்தவர்கள் செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை, விண்வெளி துறை, கல்வித்துறை, தபால் துறை, தொலைபேசித் துறை, தந்தி துறை, புத்தகத் தொழில், கணிதத்துறை, கணக்கர், தணிக்கையாளர், போன்ற தொழில்கள் சட்டம் மற்றும் நீதித்துறை, ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், நவீன பொறியியல் துறை, எழுத்து துறை, மேடைப்பேச்சு, ஜோதிடம், பலவிதமான வியாபாரம் செய்தல் தூதரகம் போன்ற பணிகளில் ஈடுபடலாம்.

    துலாம்

    துலாம் ராசியினர் திரவப் பொருட்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்தல், ஏற்றுமதி இறக்குமதி செய்தல், கடல் கடந்து சென்று வியாபாரம் செய்தல், வேளாண்மை தொழில், மருத்துவம், ஜோதிடம், ஆன்மீகம், போக்குவரத்து, கலைத்துறை, கல்வித்துறை போன்றவற்றில் ஆர்வம் செலுத்தலாம்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு அரசு உத்தியோகம், அரசியல், பிரதம மந்திரி, முதலமைச்சர், நிர்வாகப் பொறுப்பு, இரும்பு மற்றும் நெருப்பு சம்பந்தமான தொழில், Extension துறை, அறுவை சிகிச்சை மருத்துவர், சமூக சேவை செய்தல், தர்ம ஸ்தாபனம் நடத்துதல் சிறப்பான பலன் தரும்.

    தனுசு

    தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு கணக்கர் தொழில், தணிக்கையாளர், பலவிதமான வியாபாரம் செய்தல், ஆசிரியர், எழுத்தர், மளிகை கடை வைத்தல், சில்லரை வியாபாரம் ஆகியன பயன் தரும்.

    மகரம்

    மகர ராசியைச் சார்ந்தவர்கள் பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம், அழகு பொருட்கள், கலைப் பொருட்கள், சொகுசுப் பொருட்கள், வாசனை திரவியங்கள், மற்றும் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்தல், வட்டி தொழில், தரகு தொழில், வங்கிப் பணி, நிதி நிறுவனங்களில் பணி செய்தல், நிதித்துறை, நீதித்துறை, தங்கும் விடுதி, கேளிக்கை விடுதி, மற்றும் அழகு நிலையங்கள் நடத்துதல் இயல், இசை, நாடகம், பாட்டு மற்றும் கலைத் தொழில்கள் பயன்தரும்.

    கும்பம்

    கும்ப ராசியினருக்கு நெருப்பு சம்பந்தமான தொழில், பொறியியல் துறை, சுரங்கத் தொழில், விவசாயம், மின்னியல் துறை, மாந்திரீகம், ஜோதிடம், ஆன்மீகம், பூமித்தொழில், தாதுப் பொருட்கள் சம்பந்தமான தொழில், ஆராய்ச்சி செய்தல், உலோகங்கள் மற்றும் கருவிகள் சம்பந்தமான தொழில் பலன் தரும்.

    மீனம்

    மீன ராசியினர் மர வியாபாரம், ஆன்மீகத்துறை, வங்கித் தொழில் சட்டம், மற்றும் நீதித்துறை, அறநிலையத்துறை, நிதித்துறை, கல்வித்துறை, ஆயுத சாலை, போற்பயிற்சி சமூக சேவை தர்ம ஸ்தாபனங்கள் நடத்தலாம். பெரும்பான்மையாக ஒருவரின் விதிப்படி அவரவரின் தொழில், உத்தியோகத்தை பிரபஞ்சமே நிர்ணயித்துவிடும். தொழில் சார்ந்த குழப்பம் இருப்பவர்களுக்கு இந்த கட்டுரை நல்ல பயன் தரும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி செல்: 98652 20406

    • சனாதனம் என்பது சாதிய தீண்டாமையை குறிப்பிடுவதாக இருந்தால் காந்தி தன்னை சனாதனவாதி என சொல்லியிருப்பாரா?.
    • இந்து சமயத்தின் புனித நூல்கள் எதிலும் சாதிய வேறுபாடுகளுக்கு பெயர் தான் “சனாதன தர்மம்” என கூறவில்லை.

    'அனைத்து சாதியினரும் ஒருமித்து அன்போடு வாழ வேண்டும்'

    அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்தைக் காத்தாரா? அல்லது எதிர்த்தாரா?

    இந்த கேள்விக்கான விடையை அறிய வேண்டும் என்றால் அய்யா வைகுண்டர் யார்? என்பதையும், சனாதன தர்மம் என்றால் என்ன? என்பதற்கான சரியான புரிதலும் இருந்தால் மட்டுமே அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு எதிரானவரா அல்லது அதனைக் காப்பதற்காக அவதரித்தவரா என்கின்ற உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

    அய்யா வைகுண்டர் யார்?

    அய்யா வைகுண்டர் யார் என்று சொல்ல வேண்டும் என்றால் அவரின் அவதாரக் காலத்தில் அவர் அருளிய "அகிலத்திரட்டு அம்மானை" என்னும் புனித நூலை ஆதாரமாகக் கொண்டு மட்டுமே சொல்ல வேண்டும்.

     

    அதுபோல் வைகுண்டர் போதிக்கின்ற தர்மத்துக்கும் அகிலத்திரட்டு அம்மானையே ஆதாரம். ஆனால் இங்கு மிகப் பெரிய துரதிஷ்டம் அய்யா அருளிய நூலை முழுமையாக கற்று உணராமல் தாங்கள் கேள்விப்பட்டதையும், பிறர் எழுதியதையுமே ஆதாரமாக்குகின்றனர். அய்யா யார் என்பதை அறியாமல், தவறான புரிதலுடன் கருத்துக்களை பதிவிடும் நிலையே இங்கு அதிகமாக காணப்படுகின்றது. எனவே புனித அகிலத்திரட்டு அம்மானை நூலின் அடிப்படையில் அய்யா யார் என்பதைக் காண்போம்.

    "ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசு பண்ணி.." என்கிற வாசகத்துடனே அகிலத்திரட்டு அம்மானை தொடங்குகிறது. முதல் வரியிலேயே மிக தெளிவாக மாயோனாகிய திருமாலே வைகுண்டராக வந்தவர் என்பதை உணர்த்துகிறது. மேலும்

    "பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைத்தனை முடித்து மாயோன் வீன்றிய கலியன் வந்த விசளத்தால் கயிலை யேகி சான்றவர் தமக்காய் யிந்த தரணியில் வந்த ஞாயம்............"

    என்கின்ற அகில வாசகம் அன்று பாண்டவர்களுக்காக வந்த கண்ணனே இன்று சான்றவர்களுக்காக அய்யா வைகுண்டராக அவதரித்துள்ளார் என மிகத் தெளிவாக பறை சாற்றுகின்றது.

    "சனாதன தர்மம்" என்பதின் பொருள் என்ன?

    "அழிவில்லாது என்றென்றும் நிலைத்திருக்கும் தருமம்" "வாழ்வியல் ஒழுக்க நெறி" என்பதே சனாதன தர்மம் என்பதின் பொருள் என இந்து மதத்தில் இருக்கும் ஆன்மிக அன்பர்கள் கூறிப்பிடுகின்றனர். ஆனால் இதனை ஏற்காதவர்கள் சாதிய வேறுப்பாடே சனாதன தர்மம் என்கின்றனர். இதற்கான விடையை ஆராயும்போது கீழ் கண்ட தகவல் கிடைக்கிறது.

    * தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் "இந்து சமயம் சனாதன தர்மம் என அழைக்கப்படுகிறது" என்றும், "அழிவில்லாத நிலையான அறம்" என்றும் பொருள் சொல்லப்பட்டுள்ளது.

    * சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான கழக தமிழ் அகராதியில் "தொன்றுத் தொட்ட அற ஒழுக்கம்" என பொருள் சொல்லப்பட்டுள்ளது.

    * சனாதன தர்மத்துக்கு விக்கிபீடியா நித்திய தர்மம்" அல்லது "நித்திய ஒழுங்கு" என்றும், "இந்து மதத்தின் மாற்று பெயர்" என்றும் பொருள் கொடுக்கிறது.

    * ராமாயணத்தில் ராமர் வாலியிடம் பேசும்போது தம்பியின் மனைவியை அபகரிப்பது தான் நீ கடைப்பிடிக்கின்ற சனாதன தர்மமா? என்று கேட்கின்றார். இதிலிருந்து "சனாதன தர்மம்" என்பது வாழ்வியல் ஒழுக்க நெறியை மட்டுமே குறிக்கின்றதை அறிய முடிகின்றது.

    இந்து சமயத்தின் புனித நூல்கள் எதிலும் சாதிய வேறுபாடுகளுக்கு பெயர் தான் "சனாதன தர்மம்" என கூறவில்லை. அதுபோல் இந்து சமய ஞானிகளும் எந்த இடத்திலும் சாதிய வேறுபாடுகளுக்கு பெயர் தான் "சனாதன தர்மம்" என குறிப்பிடவில்லை. இந்திய அளவில் இந்து மதமே சனாதன தர்மமாக பார்க்கப்படுகிறது. அப்படியிருக்க எங்கிருந்து சனாதன தர்மம் என்பது சாதிய வேறுபாடுகளை குறிக்கும் என பொருள் எடுக்கின்றனர் என தெரியவில்லை?

    சாதிய தீண்டாமையை எதிர்த்து, அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்று கூறிய நேசத் தந்தையான மகாத்மா காந்தி தன்னை ஒரு "சனாதனவாதி" என பிரகடனப்படுத்துக்கின்றார். சனாதனம் என்பது சாதிய தீண்டாமையை குறிப்பிடுவதாக இருந்தால் காந்தி தன்னை சனாதனவாதி என சொல்லியிருப்பாரா?.

    எனவே வாழ்வியல் ஒழுக்க நெறியை போதிக்கின்ற இந்து தர்மமே சனாதன தர்மம் என்று அழைக்கப்படுகின்றது என்கின்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

    சனாதன தர்ம நூல்களை அருளியது யார்?

    அய்யா வைகுண்டப் பரம்பொருள் அருளித் தந்த அருள் நூலான சிவகாண் அதிகாரப் பத்திரத்தில் "வேதாந்தம் சித்தாந்தம் விளம்பி வைத்தேன் வையகத்தில்" என்கின்றார். மேலும் அகிலத்திரட்டு அம்மானையில் "நாலு வேதம் அதிலும் நான் வருவேன் கண்டாயே" என்கின்றார். இதன் மூலம் அய்யா வைகுண்டர் இந்த உலகிற்கு உணர்த்துவது இந்து தர்மத்தின் புனித நூல்களாக இருக்கின்ற நான்கு வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்கள், சைவ சித்தாந்தம் என அனைத்துமே பரம் பொருளால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இறை அருளாளர்கள் மூலம் அருளப்பட்டது என்பது அய்யா தந்த அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள்நூல் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த புனித நூல்கள் போதிக்கின்ற தர்மமே "சனாதன தர்மம்" ஆகும்.

    அய்யா வைகுண்டர் எதற்காக அவதரித்தார்?

    அய்யா வைகுண்டர் தனது அவதார நோக்கத்தை தான் அருளிய புனித நூலில் தெளிவாக "சாஸ்திரவேத நூலுக்குச் சரியொத்த பேர்களுக்கு உபகாரங்கள் செய்யவும்" என்கிறார். ஆம் "சனார்த்தனன்" என அழைக்கப்படுகின்ற திருமால் கலியுகத்தில் வைகுண்டமாக அவதரிக்கும்போது அவன் தந்த சனாதன தர்மத்தை காத்து அதைத்தானே போதிப்பான். இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுமே அவனுடைய பிள்ளைகளே எந்த உயிர்களிடமும் இறைவன் எவ்விதப் பாகுபாடு பாப்பதில்லை என்பதே உண்மையான சனாதன தர்மம் ஆகும். அதைத்தான் அய்யா வைகுண்டர்

    "எல்லோருக்கும் ஒருப் போலே ஈசன் நான் இருக்கிறேன்"

    என சொல்கின்றார். மேலும் சாதியை பேய்க்கு ஒப்பாக சொல்லி அதனை அழிக்க உத்தரவிடுகிறார்.

    "சாதி பதினெட்டும் தலையாட்டிப் பேய்களையும்

    வாரி மலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு"

    "தலைப்பாகை" தந்து அனைவரையும் மன்னராக்கி தலை நிமிர்ந்து வாழச் செய்து

    சமத்துவத்தை மலர செய்ய அய்யாவின் பிள்ளைகள் சாதிய தீண்டாமையை எதிர்ப்பதில் முதல் ஆளாக இருக்க வேண்டும். அதுவே நாம் அய்யாவின் பிள்ளை என்பதற்கு அடையாளம் ஆகும்.

    வாரிமூன்று கோதி வளைந்திருக்கு மோர்தீவை

    சாதியொரு நிரப்பாய்த் தானாள்வா யென்மகனே

    சாதிய தீண்டாமையை எதிர்ப்பவர்களும், அதற்காக போராடுகின்றவர்களும் சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொல்லாமல் "சாதிய தீண்டாமையை அழிப்பேன்" என அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லலாமே. அப்படி சொல்லும்போது அதற்கு எந்த விதமான எதிர்ப்பும் வரப்போவது இல்லை.

    யார் மனமும் புண்படப்போவதில்லை. மாறாக அனைவரின் ஆதரவையும் பெறலாம். அதைவிடுத்து "சனாதன தர்மத்தை" அழிக்க வேண்டும் என்று சொல்லும்போது தான் அங்கு பிரச்சனையும், தேவையில்லாத குழப்பமும் ஏற்படுகிறது. நமது நோக்கம் சாதி வேறுபாட்டை அழிப்பதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர ஒரு மதத்தை அழிப்பதாக இருக்கக் கூடாது. சனாதன தர்மத்தின் காவலனான இறைவன் கலியுகத்தில் அய்யா வைகுண்டராக அவதரித்து அனைத்து சாதியினரும் ஒருமித்து அன்போடு வாழ வேண்டும் என்பதை மனதில் நிலைநிறுத்தி வாழ்ந்தால் எந்த பிரிவினையும் நமக்குள் இல்லை.

    - பா.கிருஷ்ணமணி அப்புக்குட்டி,

    வடலிவிளை, நெல்லை மாவட்டம்.

    • கமல் சாரோடு நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லையே என்ற எண்ணம் அவ்வை சண்முகியில் நிறைவேறியது.
    • கதை சொல்லும் போது கமல் சாருக்கு இரண்டு வேடம்.

    இஞ்சி இடுப்பழகி...

    மஞ்ச சிவப்பழகி...

    தேவர் மகனில் கேட்ட இந்த பாடல் இன்றும் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் பாடல். இந்த பாடல் எனக்காகவே எழுதப்பட்டது. ஒன்றிரண்டு காட்சிகளில் நடித்தும் முடித்தேன். ஆனால் சில பல காரணங்களால் அந்த படத்தை தயாரிப்பது தள்ளிப்போனது.

    நானும் ரொம்ப பிசியாக இருந்ததால் அதன் பிறகு அந்த படத்தில் நடிக்க முடியாமல் ஆகிவிட்டது. சிவாஜி சார், கமல் சாரோடு நடிக்க கிடைத்த வாய்ப்பு கை நழுவிவிட்டது. அந்த வருத்தம் இன்றும் என்னிடம் இருக்கிறது.

    கமல் சாரோடு நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லையே என்ற எண்ணம் அவ்வை சண்முகியில் நிறைவேறியது.

    1995-ல் அவ்வை சண்முகியில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. நடிக்க ஒப்பந்தம் ஆனதும் ரொம்ப சந்தோசமாக இருந்தது. ஏனெனில் பல முன்னணி நடிகர்களுடன் அப்போது நடித்திருந்தேன். ஆனால் கமல் சாரோடுதான் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.


    கதை சொல்லும் போது கமல் சாருக்கு இரண்டு வேடம். பாண்டியன் என்ற ஆண்வேடம். அவ்வை சண்முகி என்ற அய்யர்மாமி வேடம் என்றார்கள். கமல் சார் பெண் வேடத்தில் எப்படி இருப்பார்...?

    கற்பனையில் நினைத்ததை நேரில் பார்க்கும் நாளும் வந்தது. படப்பிடிப்புக்கு ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

    செட்டில் நான் உள்பட சக கலைஞர்களும் தயாராக இருந்தோம். 'கமல் சார் எங்கே? என்றேன்.

    மேலே மாடியில் மேக்அப் போட்டு கொண்டிருக்கிறார் என்றார்கள். அவரது வருகைக்காக எல்லோரும் காத்திருந்தோம்.

    பெண் வேடம் என்றால் சாரி கட்டி, தலையில் விக் வைத்து கொண்டு வருவார் என்றுதான் நினைத்தேன்.

    அதுவரை கமல் சாரை முதல் முதலாக பார்த்ததும் அவருடன் நடித்ததும் இந்த படத்தில் தான். அதிலும் புது விதமான கெட்- அப்பில் அன்றுதான் முதல்முறையாக பார்க்கிறேன். அதுவும் ஒரிஜினல் அடையாளத்தோடு அல்ல. பெண் வேடத்தில் என நினைத்ததும் எனக்கே சிரிப்பாக இருந்தது.

    சற்று நேரத்தில் மாடிப்படிகள் வழியாக ஒரு மாமி வந்து கொண்டிருந்தார். பச்சை நிறத்தில் மடிசார் புடவை கட்டிக் கொண்டு, தோள் சேலையை கச்சிதமாக இடுப்பில் சொருகியபடி பெண்களுக்கே உரித்தான நளினத்துடன் இறங்கி கொண்டிருந்தார்.

    எல்லோரது பார்வையும் அவர் மீது விழுந்தது.

    அது கமலா?

    என்னால் நம்பவே முடியவில்லை. என் அருகில் வந்ததும் 'எப்படி இருக்கு...? என்றார்.


    நான் அவரையே விழிமூடாமல் பார்த்து கொண்டிருந்தேன்...

    கால் முதல் தலை வரை கெட்-அப் என்று சொல்ல முடியாதபடி அந்த கெட்-அப் இருந்தது.

    என்ன பார்த்துக்கிட்டே இருக்கீங்க? எப்படி இருக்குன்னு கேட்டேன் என்று மறுபடியும் கேட்டார்.

    அப்புறம்தான் 'சார்... சூப்பர் சார்...' என்று ஆச்சரியத்துடன் கூறினேன். உடனேஅவர் அங்கிருந்து ஸ்டுடியோவுக்குள் சென்றுவிட்டார்.

    அந்த வேடத்துக்காக அவர் எடுத்துக்கொண்ட சிரத்தையும், தாங்கி கொண்ட சிரமமும் கொஞ்ச நஞ்சமல்ல.

    அதிகாலையிலேயே வந்து விடுவார். மேக்-அப் போட்டு முடிக்க 5 மணி நேரம் ஆகும். அதுவும் சரியாக வாய் திறந்து எதுவும் பேச முடியாது. நீண்ட நேரம் அந்த மேக்-அப்புடன் இருக்கவும் முடியாது.

    எனவே அவருக்கு மேக்-அப் முடிந்ததும் அவர் தொடர்பான காட்சிகளை வேகமாக படமாக்குவார்கள். ஷூட்டிங் முடிந்து மேக்-அப்பை கலைக்கும் வரை அவரால் எதுவும் சாப்பிட முடியாது. திரவ உணவுகளை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பார். அந்த அளவு கஷ்டப்பட்டுதான் அந்த பாத்திரத்தில் நடித்து முடித்தார். அவருக்கு இப்படி கஷ்டம் என்றால் எனக்கு வேற மாதிரியான கஷ்டம். அந்த படத்தில் நடித்த டெல்லிகணேஷ் சார், ஜெமினி சார், நாகேஷ் சார்... எல்லோருமே ஜாம்பவான்கள்.

    அவர்களை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நடிப்பது போலவே தெரியாது. யதார்த்தமாகத்தான் கேமரா முன் நிற்பார்கள். நடிப்பார்கள். அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது.

    ஜெமினி சார் அந்த வயதில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே வந்து மேக்-அப் போட்டு ரெடியாகி வந்து விடுவார்.

    டெல்லி கணேஷ் சார், ஜெமினி சார், நாகேஷ் சார், மணிவண்ணன் சார் எல்லோரும் ஒன்றாக இருக்கும்போது அவர்கள் பக்கத்தில் சின்ன பெண்ணாக நின்று கொண்டிருப்பேன்.

    எல்லோருமே ரொம்ப பெரியவர்கள் என்பதால் அவர்கள் பக்கத்தில் நிற்கும்போது, பயம், டென்ஷனாக இருக்கும். ரிலாக்சாகவே இருக்க முடியாது. சத்தம்போட்டு விடுவார்களோ? ஏதாவது சொல்லி விடுவார்களோ? என்று பயந்து பயந்தே ஒவ்வொன்றையும் செய்வேன்.

    ஆனால் அவர்கள் அடிக்கும் லூட்டி இருக்கே...? அப்பப்பா... விழுந்து விழுந்து சிரிக்க வைத்து விடுவார்கள்.

    சிரிப்பு, கோபம், எரிச்சல், சலிப்பு, சந்தோசம் என்று பல வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும்.

    'மீனா சின்ன பொண்ணாச்சே... அவளால் முடியுமா...? என்றுதான் நினைத்து இருக்கிறார்கள். உண்மையும் அதுதான்.

    காமெடி காட்சியாக தெரியும். ஆனால் அதில் ஒரு டயலாக் கோபப்படும்படி இருக்கும். இன்னொரு டயலாக் எரிச்சலடைய வைக்கும். மற்றொரு டயலாக் சிரிக்க வைக்கும். இவை ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து முகத்தில் வெளிப்படுத்த வேண்டும்.

    படத்தில் ஒன்றியும், ரிஸ்க் எடுத்தும் நடித்தேன். ஜெமினி சார், சுற்றி நிற்பவர்களிடம் எதார்த்தமாக பேச வேண்டும். அடுத்த விநாடியே கோபப்பட வேண்டும். எதுவாக இருந்தாலும் சும்மா பின்னுவார்.

    பார்த்து கொண்டிருக்கும் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அந்த ஜாம்பவான்களிடம் இருந்து நிறைய செயல்கள் கற்றுக் கொள்ள முடிந்தது. என்னைப்பற்றி பெரியவர்களின் சந்தேகத்தையும் தாண்டி நடித்து இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.

    ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது நாசர் சார் இதை குறிப்பிட்டு சொல்லி பாராட்டினார். இப்படி மற்றவர்கள் பாராட்டும் அளவுக்கு நடித்து இருக்கிறேன் என்பது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய சந்தோசம்.

    காட்சி திரில்லிங்காக இருப்பது மட்டுமல்ல உண்மையிலேயே கண்ணுக்கு தெரியாத இடத்தில் சில திரில்லிங்கான அனுபவங்களை சந்தித்ததும் உண்டு. அந்த அனுபவங்களோடு அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    தொடரும்....

    • காலையில் விளக்கேற்றி பழமோ அல்லது பாதாம், திராட்சை, முந்திரி வைத்து மதியத்தில் ஏதேனும் அன்னம், பாயாசம் போன்றவை வைக்கலாம்.
    • ஸ்ரீ முருக பிரானுக்கு துவரம் பருப்பு சேர்த்து கதம்ப சாதம், சாம்பார் சாதம் என பூஜைக்கு வைப்பர்.

    கமலி ஸ்ரீபால்நம்மிடையே பல நல்ல பண்புகள் உள்ளன. வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் வரவேற்று உபசரிப்போம். நேரம், காலம், நம் சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு தேவையானதைக் கொடுப்போம். குறைந்தபட்சம் டீ, காபி, மோர் போன்றவை கொடுப்போம். இதுவே திருமணம், வரவேற்பு, விழாக் காலங்களில் தடபுடலாக விருந்து அளிப்போம். நம் வீட்டில் அம்மா கூட அவரவருக்கு பிடித்த உணவு என ஸ்பெஷலாக செய்வார்.

    உணவு என்பது வாழ்வின் அவசியம். பிடித்த உணவு என்பது மனதிற்கு மகிழ்ச்சி தருவது. அது போலத்தான் நம் முன்னோர்கள் அன்றாட பூஜை, வழிபாட்டின் முக்கிய கட்டமாக அந்தந்த தெய்வத்திற்கேற்ப உணவினை படைத்து வந்தனர். பின்னர் அதனை பிரசாதம் என உண்டனர். இறைவனுக்கு படைக்கப்படும் உணவு என்பதால் அதனை சமைக்க அதிக கவனம் செலுத்தினர். இதனை மக்கள் உண்ணும்போது சுத்தமான, சத்தான உணவு மக்களுக்கு கிடைத்தது.

    இறைவனுக்கு உணவு அளிக்கும் வரை விரதம் இருந்து, பேசாது மனதினை ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து செய்ததால் மனக்கட்டுப்பாடு இயற்கையாகவே அமைந்தது.

    பொதுவாக இறைவனுக்கு உணவு படைப்பது என்பது நம் நாட்டில் இடத்திற்கு இடம் மாறுபடும். தென் இந்தியாவில் வீடு, கோவில், இரண்டிலும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் என நைவேத்தியம் செய்வர். ஆனால் கடவுளின் விக்கிரகங்கள் மிக பெரிதாக இருக்கும்போது அதற்கேற்ற அளவில் வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், எலுமிச்சை சாதம், வடை என பல விதங்களில் செய்வர். பொதுவில் விக்ரகங்களின் தோற்றத்திற்கேற்ற அளவில் உணவு கொடுக்க வேண்டும். பொதுவாக வீட்டில் படங்களை வைத்து வழிபடுவது சிறப்பு. அன்றாடம் வேலை வேலை என்று 7 மணிக்குள் ஓடும்போது படங்கள் இருந்தால் பால், முந்திரி, திராட்சை, பாதாம், கற்கண்டு என வைத்து விளக்கேற்றி வணங்கலாம். நல்ல நாள், கிழமைகளில் சிறப்பான உணவுகளை தயாரித்து வணங்கலாம். பொதுவில் 11 மற்றும் 12 மணிக்கு இறைவனுக்கு அன்னம் படைத்து வணங்கலாம். இன்றைய கால சூழ்நிலையில் இது சற்று கடினமான நிலையாகவே வேலைக்குச் செல்பவர்களுக்கு இருக்கின்றது.

    காலையில் விளக்கேற்றி பழமோ அல்லது பாதாம், திராட்சை, முந்திரி வைத்து மதியத்தில் ஏதேனும் அன்னம், பாயாசம் போன்றவை வைக்கலாம்.

    கோவில்களில் அபிஷேகம், ஆறு கால பூஜை செய்து தினம் தோறும் சிறப்பான உணவுகளை வைத்து வழிபடுபவர்.

    பிள்ளையாருக்கு இட்லி, கொழுக்கட்டை, சுண்டல் போன்றவை வைத்து வழிபடுவது தென்னகத்தில் வழிபடும் முறை.

    மோதி லட்டு எனப்படும் லட்டு வைத்து கணேஷ் பகவானை வழிபடுவது வடஇந்திய முறை.

    தென்னகத்தில் அநேக கோவில்களில் சிவபிரானுக்கு வெண் பொங்கல் அளித்து வழிபடும் முறை உள்ளது. நெய், மிளகு, சீரகம், முந்திரி, கருவேப்பிலை என நல்ல நறுமணத்தோடு இறைவனுக்கு அளிப்பது வழக்கம்.

    இதே வழக்கம் பெருமாள் கோவிலிலும் இருக்கும். வட இந்தியாவில் சிவபிரானுக்கு 'கீர்' எனப்படும் பால் பாயாசம் செய்வார்கள்.

    பொதுவாக சிவபிரான் யோக நிலையில் இருப்பதாக பேசப்படுவதால் அவரது உணவு எளிதாகக் கூட இருக்கும்.

    ஆனால் பெருமாளுக்கோ தடபுடலான உணவுகள் இடம் பெறும்.

    அம்பாளுக்கு கேரள முறைப்படி செய்யப்படும் பாயாசம் மிக சிறப்பானதாக கூறப்படுகின்றது. தேங்காய் பால், தேங்காய் துண்டுகள் சேர்த்து செய்யப்படும் இந்த பாயாசம் செய்யவே கூடுதல் நேரம் பிடிக்கும்.

    ஸ்ரீ ராம பிரானுக்கு பானகம், நீர் மோர் போன்றவை என்றால் ஸ்ரீ கிருஷ்ண பிரானுக்கு நெய், அப்பம், வெண்ணை முக்கிய பங்கு வகிக்கும்.

    ஸ்ரீ முருக பிரானுக்கு துவரம் பருப்பு சேர்த்து கதம்ப சாதம், சாம்பார் சாதம் என பூஜைக்கு வைப்பர்.

    மகா விஷ்ணுவுக்கு லட்டு, சர்க்கரை பொங்கல் என மஞ்சள் நிறமான உணவுகளை படைப்பர்.

    சரஸ்வதி அம்பாளுக்கு வெண்மையான வெண்பொங்கல் சிறப்பு ஆகும்.

    பிள்ளையாருக்கு கொழுக்கட்டை, லட்டு, இனிப்பு வகைகள் சேரும்.

    முருக பிரானுக்கு பழங்கள், கற்கண்டு, தேன், ஏலக்காய் சேர்த்த பஞ்சாமிர்தம் தனி சிறப்பு ஆகும்.

    துர்க்கை, காளி இவர்களுக்கு வெல்லம் சேர்த்த உணவு, காய்கறிகள் சேர்த்த உணவு செய்வார்கள்.

     

    காளிக்கு- எலுமிச்சை சாதம், மசால் வடையும் மிகச் சிறப்பு என்பர்.

    வாராகி அம்மனுக்கு மாதுளை, வேக வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கு பிடித்த உணவாகும்.

    மகாலட்சுமி என்றாலே குங்குமப்பூ, ஏலக்காய் பச்சை கற்பூரம் சேர்த்த பாயாசங்கள் சிறப்பு.

    பொதுவில் அம்மன் வழிபாட்டில் பாயாசம் என்பது அவசியமான ஒன்று.

    ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை, தயிர் சாதம், சிறப்பு. கால பைரவருக்கு உப்பில்லாத தயிர் சாதம் விசேஷம். சனி, ராகு, கேது இவர்களுக்கு கறுப்பு உளுந்து, கறுப்பு எள், கொள்ளு, நல்ல எண்ணெய் சேர்த்த உணவு வகைகளை வைத்து வழிபடலாம்.

    இப்படி உணவு வகைகளாக கூறப்பட்டுள்ளதே என்று நினைக்கலாம்.

     

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    பக்தி மார்க்கத்தில் ஒரு வழிதான் கடவுளை நறுமணம் கொண்ட பூக்களால் அலங்கரித்து, விளக்கேற்றி, தூப, தீப வழிபாடுகள் செய்து பிரத்யேகமான உணவுகள் படைத்து வழிபடுவது என்பதாகும். நாம் எந்த முறையினை தேர்ந்தெடுக்கின்றோமோ அதனை முழுமையாய் அறிந்து முடிந்தவரை அதன்படி செயல்பட முனைவோமே.

    கடவுளுக்கு எந்த உணவும் தேவை என்பது கிடையாது.

    அவர் சர்வ வல்லமை படைத்தவர்.

    நாம் உண்ணும் அனைத்தும் அவர் வாங்கி கொடுத்ததே. நம் நன்றியினை காட்டும் விதமாகத்தான் இவ்வாறு செய்கின்றோம்.

    இது பக்தி மார்க்க இறைவழிபாடு, இல்லறத்தில் இருந்து இறை வழிபாடு செய்வோரின் கூற்று. இதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. அவருக்கு படைத்து நாம் அதனை எடுத்துக் கொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி.

    தயிரில் தேன் கலந்து அளிப்பது என்பது முந்தைய காலத்தில் இருந்தது. பின்னர் தேன், தயிர், நெய், பால், நாட்டு சர்க்கரை என கலந்து கொடுத்தனர். பெண் தெய்வங்களுக்கு நெல்லிக்காய், எலுமிச்சை, மிளகாய் என கூட அளிக்கப்பட்டுள்ளது.

    மேலை நாடுகளில் சாக்லேட்களை அவர்கள் வணங்கும் தெய்வத்தின் முன்பு வைத்து வணங்குவர். கிராமங்களில் வெறும் வெல்லம் கூட வைத்து வழிபட்டு இருக்கின்றனர்.

    உக்கிர தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள், இவர்களுக்கு அசைவ உணவினை படைக்கும் வழக்கமும் உண்டு.

    மனித வாழ்க்கை என்றாலும் அல்லது உலகில் எந்த ஜீவராசியாக இருந்தாலும் உயிர் வாழ உணவு என்பது மிக முக்கியமானது.

    அதனால்தான் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இந்த மூன்றும் மிக அவசியம் என்கின்றோம்.

    ஆதிகால மனிதன் உணவிற்கும் இன்று நாம் உண்ணும் உணவிற்கும் உள்ள வித்தியாசங்கள் எவ்வளவு?

    'பசி வந்தால் பத்தும் பறந்திடும்' என்பர். இந்த பத்து என்ன? மானம், தான் பிறந்து வளர்ந்த பரம்பரை, படித்த படிப்பு, திறமை, அறிவு, தானம், தவம், முயற்சி, ஆளுமை, அன்பு இவை அனைத்தினையும் மனிதன் இழப்பான். எத்தனை கொடுமையானது பசி. பசிக்கு பணக்காரன், ஏழை என கிடையாது.

    சரி. உணவு என்று சொல்லி மூன்று வேளை கஞ்சி என்பதும், சரியானதே அதுவும் பசியின் பிரிவில் தான் வரும்.

    அறுசுவை கொண்ட உணவே மனிதனை மனிதனாக உருவாக்கும் பசி. பசியோடு ருசி எனப்படும் சுவையும் மிக அவசியம்.

    அனைவரும் நினைத்துப் பாருங்கள். ஒரு வேளை உணவில் சிறிது சுவை குன்றினாலும் வீட்டில் பேயாட்டம் ஆடுபவர்கள் எத்தனை பேர் உள்ளனர். நாக்குக்கு என்றும் அடிமை ஆகக் கூடாது என்றாலும் பதமான, இதமான உணவு என்பது அனைவருக்கும் அவசியம்.

    உங்களின் ஒளி சக்தியினை அறிய ஐம்புலன்களின் கட்டுப்பாடும் அவசியமே.

    • மூட்டுத் தேய்மானம் மற்றும் மூட்டுவாதம் என்பது 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 20 சதவீதம் முதல் 40 சதவீத மக்களை பாதிக்கிறது.
    • மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது “ஆர்த்ரோபிளாஸ்டி என்றழைக்கப்படும் எலும்பியல் சிகிச்சை ஆகும்.

    மூட்டு வலி என்பது பொதுவாக எலும்புகளின் தேய்மானத்தாலேயே உருவாகிறது. ஒரு காலத்தில் முதியவர்களை மட்டுமே பாதித்த மூட்டுவலி, இன்றைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி அனைவரும் சந்திக்கும் பிரச்சினையாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம்பெண்கள் மத்தியிலும் இந்த மூட்டுவலியானது தற்போது காணப்படுகிறது.

    மூட்டுத் தேய்மானம் மற்றும் மூட்டுவாதம் என்பது 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 20 சதவீதம் முதல் 40 சதவீத மக்களை பாதிக்கிறது.

    நோயின் ஆரம்பத்தில் சிறுமூட்டுகளில் வலியும், வீக்கமும், இறுக்கமும் நமக்கு தொல்லை கொடுக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் காலையில் எழும்போது ஒரு மணிநேரத்துக்கு மேல் கை, கால்களை அசைக்க முடியாத அளவுக்கு மூட்டுவலி கடுமையாக இருக்கும். நாட்கள் செல்ல, செல்ல நம்மால் நடக்க முடியாது. அவ்வளவு ஏன் நாம் தினந்தோறும் செய்யக்கூடிய சின்ன சின்ன வேலைகளை கூட நம்மால் செய்ய முடியாமல் அவதிப்படும் நிலைக்கு ஆளாக்கி விடுகிறது மூட்டுவலி.

    மூட்டு வலி கடுமையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் உடனே ஆபரேஷன் தான் செய்ய வேண்டும் என நினைத்து விடக்கூடாது. மூட்டுவலிக்கான மூட்டு மாற்று ஆபரேஷன் என்பது கடைசி கட்டத்தில் பண்ணக்கூடிய சிகிச்சை. அதற்கு முன்பாக சில எளிய சிகிச்சை முறைகளும் உள்ளன. அதன் மூலமும் மூட்டு வலியை நாம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மூட்டுத் தேய்மானம் ஆரம்ப கட்டத்தில் இருந்தால் நாம் நம்முடைய வாழ்க்கை முறையில் சில எளிய மாற்றங்களையும், சில வைத்திய முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இதுமட்டுமின்றி உடற்பயிற்சி, உடல் எடை குறைப்பு, யோகாசனம் போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும். இதன் மூலம் மூட்டு தேய்மானத்தை சிறிது நாட்கள் தள்ளிபோடலாம் அல்லது தடை படுத்தலாம்.

    இந்த பயிற்சிகளை தவிர மருத்துவ ரீதியாகவும் சில எளிய சிகிச்சை முறைகள் உள்ளன. ஆரம்ப கட்ட மூட்டு தேய்மானத்தை குளுக்கோசமான் மூட்டு டானிக் மருந்தாலும், நோயாளியின் உடம்பில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ரத்த அணுக்களை(பி.ஆர்.பி இன்ஜக்ஷன்) மூட்டினுள் செலுத்துவதாலும், நோயாளியின் வயிற்று பகுதி அல்லது இடுப்பு எலும்பில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மூலச் செல்களை மூட்டினுள் செலுத்துவதன் மூலமும், மூட்டு தேய்மானத்தையும், அதனால் வரக் கூடிய வலியில் இருந்தும் நமக்கு நிவாரணம் கிடைக்கும்.முழங்கால் மூட்டில் ஆரம்ப கட்ட வலி இருக்கும் நோயாளிகள் பலரை நாங்கள் பார்க்கிறோம். இதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் 30 முதல் 40 வயதுடையவர்கள் தான்.

    இவர்களுக்கு கால் லேசாக வளைந்து இருக்கும். அந்த மாதிரியான நோயாளிகளுக்கு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இல்லாமலே, வேறு சில அறுவை சிகிச்சைகள் உள்ளன. மூட்டின் வளைவு தன்மையை நேர்படுத்தி, உள்ளே ஒரு உலோகத்தகடு பொருத்துவது தான் இந்த சிகிச்சை முறை.

    அதாவது மூட்டின் ஒரு பகுதி தேய்ந்திருந்தால், அந்த பகுதியின் வளைவை மட்டும் தேர்ந்தெடுத்து, சரி செய்து, நேராக்குவது. அப்படி காலை நேராக்கும் போது, மூட்டு தேய்மானம் அதிகமாவதில்லை. வலியும் போய்விடும். இந்த சிகிச்சை முறையும் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

    ஆனால் மூட்டு மிகவும் தேய்ந்து வளைந்து போனால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான் நிரந்தரத் தீர்வு ஆகும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது "ஆர்த்ரோபிளாஸ்டி என்றழைக்கப்படும் எலும்பியல் சிகிச்சை ஆகும்.

    இது செயல்படாத, சேதமடைந்த அல்லது செயலற்ற மூட்டுகளை பிளாஸ்டிக், உலோகம் அல்லது பீங்கான் ஆகியவற்றால் செய்யப்பட்ட செயற்கை இணைப்பு மூலம் மாற்றுவதுதான் இந்த நடைமுறையாகும். இப்படிப்பட்ட மூட்டு அறுவை சிகிச்சையானது கோவையில் உள்ள எங்கள் ஆஸ்பத்திரியில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

    உலக அளவில் இந்த அறுவை சிகிச்சையானது மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ள பல கோடி நோயாளிகளுக்கு மிகப் பெரிய நிவாரணியாக இருந்து வருகிறது.கடந்த 30 ஆண்டுகளில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையானது பல முன்னேற்றங்களை கண்டுவிட்டது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமின்றி, அறுவை சிகிச்சை செய்யும் முறை, அதில் உபயோகப்படுத்தப்படும் உலோக செயற்கை மூட்டுக்கள், அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்படும் மயக்க மருந்து போன்றவற்றிலும் மிகப்பெரிய மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளது.

    இதில் மிக முக்கியமானது கம்ப்யூட்டர் கொண்டு செயல்படுத்தப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான். கோவை கே.எம்.சி.ஹெச் ஆஸ்பத்திரியில் இந்த சிகிச்சை முறையானது கடந்த 2004-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பலரும் பயன் அடைந்துள்ளனர்.

    இருந்த போதிலும் அறிவியல் வளர்ச்சி அதிகமுள்ள இந்த காலகட்டத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் மிக துல்லியமான சிகிச்சை முறைகள் இருக்கிறதா என ஆய்வு செய்தோம். அப்போது, மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் கருவி உதவியுடன் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இருப்பதை அறிந்து கொண்டோம்.

    இந்த ரோபோட்டிக் கருவி உதவியுடன் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையானது மிகவும் துல்லியமாக இருப்பதால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை களில் முன்னோடியாக இது திகழ்ந்து வருகிறது.

    இப்பொழுது இந்த சிகிச்சை முறை எங்கள் ஆஸ்பத்திரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட அதிநவீன செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் ரோபோட்(கோரி ரோபோட்) மேம்படுத்தப்பட்ட கருவி ஆகும்.

    மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது மூட்டின் தேய்ந்து போன சில மில்லி மீட்டர் எலும்பின் நுனிப்பகுதியை அகற்றி விட்டு செயற்கை மூட்டை பொருத்துவதாகும்.

    புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள ரோபோட்டிக் எந்திரம் மிக துல்லியமான மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவும். இந்த சிகிச்சையானது மற்ற சிகிச்சை முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

    சாதாரண மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் சில மில்லி மீட்டர் எலும்பின் நுனிப்பகுதியை எடுக்கிறோம். இந்த சிகிச்சை முறையில் எலும்பின் பாகங்கள் சிறிதே அகற்றப்படும்.

    அதுமட்டுமின்றி அறுவை சிகிச்சையின் போது மிகச் சிறிய அளவிலேயே தசைகள் ஒதுக்கப்படும். மற்ற சிகிச்சைகளில் இருந்து ரத்த போக்கும் குறைவாகவே இருக்கும். இதனால் நோயாளிகளுக்கு ஆபரேஷனால் உண்டான வலியும் குறைவாகவே இருக்கும்.

    நமது உடம்பில் உள்ள மென்மையான திசுக்களை பாதுகாத்து நோயாளி விரைவில் குணம் அடையவும் இந்த சிகிச்சை முறையானது உதவிகரமாக இருக்கிறது. இந்த ரோபோட்டிக் கருவி அறுவை சிகிச்சையை சுலபமாகவும், விரைவாகவும் செய்து முடித்து விடுகிறது.

    மேம்பட்ட துல்லியம், எலும்புகள் மீது மிகவும் கச்சிதமாக இம்பிளாண்டுகள் பொருத்துதல், நோயாளியின் மூட்டு அமைப்புக்கு ஏற்றவாறு பிரத்யேக சிகிச்சை, அறுவை சிகிச்சைக்கு பின்பு குறைவான வலி மற்றும் வீக்கம் ஆகியவையும் இந்த ரோபோடிக் தொழில்நுட்பத்தினால் கிடைக்கிறது.

    இதன் மூலம் நோயாளி மிக விரைவிலேயே குணம் அடைந்து, வீடு திரும்ப முடியும். இதனால் மருத்துவமனையில் தங்கும் காலம் குறைவாகிறது. ஒரே நேரத்தில் 2 மூட்டுக்களையும் மாற்றும் போது இந்த ரோபோடிக் கருவி மிக உதவிகரமாக இருக்கிறது. இந்த சிகிச்சை முறையால் எங்கள் ஆஸ்பத்திரியில் பல நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர்.

    இந்த சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வீடு திரும்புகிறார்கள். இந்த சிகிச்சை முறையானது மிக துல்லியமாக செயல்படுத்தப்படுவதால், இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நீண்ட நாட்களுக்கு செயல்படும் என உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.

    இந்த ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை எங்கள் மருத்துவமனையின் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர்கள் திருமலைச்சாமி, லெனின் பாபு, தென்னவன், பாஸ்கரன், பூபதி கிருஷ்ணன் ஆகியோர் செய்கின்றனர்.

    மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ரோபோடிக் கருவி சிகிச்சையை அறிமுகப்படுத்தியது போன்று இந்தியாவிலேயே முதல் முறையாக 3 டிசி ஆர்ம் என்ற இமேஜிங் கருவியையும் எங்கள் ஆஸ்பத்திரி அறிமுகம் செய்துள்ளது.

    எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளின் துல்லியத்தை இது அதிகரித்து சிறந்த பலனை கொடுக்கும். எலும்புகள் மறுகட்டமைப்பு முதலான சிக்கலான சிகிச்சைகளையும் மேம்பட்ட திறனுடன் செய்து முடித்திட இந்த தொழில்நுட்ப சிகிச்சை உதவுகிறது.

    முப்பரிமாண தொழில்நுட்பம் துணையுடன் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உதவுகிறது. மேலும் ஸ்குரூக்கள், இம்பிளாண்டுகள் போன்றவற்றை துல்லியமாக பொருத்தி சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற உதவியாக உள்ளது.

    இதர அறுவை சிகிச்சை துறைகளை போல எலும்பு மருத்துவ துறையில் நோயாளியின் சவுகரியத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பம் சிறப்புடன் செயல்படுகிறது.

    மூட்டு வலி ஏற்பட்டால் ஆரம்ப காலகட்டத்தில் எளிய முறை சிகிச்சைகளிலும், நாள்பட்ட மூட்டு வலிக்கு ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையாலும் நல்ல முறையில் மருத்துவம் அளிக்கலாம்.

    தொடர்புக்கு: 73393 33485

    • நமது மூச்சினுடைய எண்ணிக்கை உயர உயர ஆயுள் குறையும். அதே நேரம், நாம் இந்த நிலையை தவிர்த்தல் நலம்.
    • நாடி சுத்தி பிராணாயாமத்தை செய்யும் போது மனம் ஆழ்நிலைக்கு செல்கிறது.

    வாசகர்களே, கர்மாவில் இருந்து தப்பித்து கொள்ள இந்த நாடி சுத்தி பிராணாயாமம் நமக்கு எப்படி உதவி செய்கிறது என்பதை பற்றி சற்று சிந்தித்து பார்ப்போம். பொதுவாக மனிதர்கள் மூச்சை மூன்று வகைகளாக சொல்வார்கள். அவை, மேல் மூச்சு, நடு மூச்சு மற்றும் அடி மூச்சு என்பர். மேல் மூச்சு என்பது உணர்ச்சிவயப்பட்டநிலை, மனத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையாகும். மேல் மூச்சு என்பது நுரையீரலுடைய மேல் பகுதியை மட்டும் இயக்கும். இதனால் மூச்சின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்படி மூச்சின் எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு அதிகரிக்கும்போது நம்முடைய ஆயுள் குறைந்துவிடும். அடிப்படையாக, நம் மூச்சின் எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு என்ற அளவில் இருக்கும்போது, இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் நமக்கு கிட்டும். ஆனால், மேல் மூச்சில், உணர்ச்சிவயப்பட்ட நிலையில், நமது மூச்சினுடைய எண்ணிக்கை உயர உயர ஆயுள் குறையும். அதே நேரம், நாம் இந்த நிலையை தவிர்த்தல் நலம்.

    நடு மூச்சு என்பது, நாம் பல நேரங்களில் சிந்தித்து சில முடிவுகளை எடுக்கும் நிைல இது. அடி மூச்சு என்பது அமைதியான மனநிலையில் இருந்து கொண்டு, பக்தி மார்கத்தில் உருவ வழிபாட்டின் மூலமாகவோ அல்லது அகம் நோக்கிய பிரயாணத்திலோ, தன்னையே உணர்ந்து கொள்ள, தியான நிலையில் இருக்கின்ற நிலையாகும். ஆனால் இந்த மூன்று நிலைகளை கடந்து, நான்காவதாக ஒரு நிலை உள்ளது. அது ஞானிகள் அல்லது சித்தர்களின் மூச்சு எனப்படுகிறது.

    இந்த மூச்சு ஆனது அடி மனம் என்று சொல்லுகின்ற ஆழ் மனதோடு இணைந்துள்ளது. இங்கிருந்து தான் நமக்கு உள்ளே இருந்து தெய்வத்தின் குரல் கேட்கிறது என்று சித்தர்களால் சொல்லப்படுகிறது. எனவே, நமக்குள் உள்ள இறைவனை உணர வேண்டும் என்றல், அந்த மெல்லிய குரலை கேட்டு, உணர வேண்டும் என்றால், நாம் ஞானிகளின் மூச்சோடு நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு இந்த நாடி சுத்தி பிராணாயாமத்தை செய்யும் போது மனம் ஆழ்நிலைக்கு செல்கிறது. அப்படி செல்லும்போது நமது பேச்சு அடங்குகிறது.

    எனவே, நாம் பேசாது இருக்கும்போது, நமக்குள் உள்ள இறைவன் பேசுகிறார் என்கிறார்கள் மகான்கள். விஞ்ஞான வழியில் சொல்லும்போது, இந்த ஞானிகளின் மூச்சின் மூலமாக நமது உதிரவிதானத்தை இயக்குகிறோம். அப்போது மனம் அமைதி பெறுகிறது. மேலும் உள் உறுப்பு தசைகள் வலுப்பெறுகிறது. சித்தர்கள் வைத்து இருந்த பயற்சியை, உலகில் உள்ள பாமர மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்கின்ற நோக்கிலே இந்த மூச்சு பயிற்சியை ஏழு நிலைகளில் செய்யக்கூடிய நரம்பு தசைநார் மூச்சு பயிற்சியாக உலகிற்கு அளித்த மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்தான். நாடி சுத்தி பிராணாயாமமும், வேதாத்திரி மகரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்ட, நரம்பு தசைநார் மூச்சு பயிற்சியும் ஒரே பலனை கொடுக்கிறது என்றால் நமக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

    இந்த ஞானிகளின் மூச்சை இயக்குகின்ற இந்த பயிற்சியை தான் திருமூலர் இதை சர கலை என்று கூறுகிறார். சரம் என்றால் தொடர்ச்சி, வளர்தல், முடிவு, இல்லாதது என்று பொருள். இந்த உடலிலே பிராணன் நீண்ட நாட்கள் தங்குவதற்கு செய்ய கூடிய ஒரு மூச்சு பயிற்சியை தான், திருமூலர் சரகலை என்று குறிப்பிடுகிறார். திருமூலர் ஒரு பாடலிலே சொல்லும்போது சரம் தெரிந்தவரிடம் சரசம் ஆடாதே என்கிறார். அதாவது இந்த மூச்சு செய்பவர் இடத்தில் தேவையில்லாமல் யாரும் வாக்குவாதம் செய்யக்கூடாது என்கிறார். மேலும் சரம் தெரிந்தவர் பரம் பார்ப்பார் என்கிறார். அதாவது இந்த பயிற்சி செய்பவர்கள் எப்பொழுதும், பரம் என்கின்ற இறைவனோடு இணைந்து இருப்பார்கள். அவர்கள் ஏதாவது நினைத்தாலோ, சொன்னாலோ அது அப்படியே நடந்துவிடும் என்று சரகலையின் முக்கத்துவத்தை குறிப்படுகிறார். இந்த சரகலை தான் நாடி சுத்தி பிராணாயாமம் அல்லது மகரிஷி அவர்களின் நரம்பு தசை நார் மூச்சு பயிற்சியாகும்.

    அது போல இந்த சரீரத்தின் மேலே ஐந்து கோசங்கள் என்று சொல்லுகின்ற ஐவகையான போர்வைகள் (உறைகள்) நமக்கு மேலே உள்ளது. அதை முறையே அன்னமய கோசம், மனோமயசோசம், பிராணமய கோசம், விஞ்ஞான மய கோசம், ஆனந்தமய கோசம் என்கின்ற ஐந்து உறைகள் நமக்கு மேலே ஆடையாக உள்ளது. இந்த ஐந்து உறைகளை கடந்து உள் ெசன்றால் நம் ஆன்மாவை நம்மால் உணர முடியும். இந்த பிராணாயாமம் பயிற்சியின் மூலம் நமக்கு ஐந்து கோசத்தில் இருந்து முக்தி கிடைக்கிறது. ஏனென்றால் இந்த பிரபஞ்சமாகிய அண்டத்தில் உள்ளதுதான் பிண்டமாகிய இந்த சரீரத்திலும் இருக்கிறது. அவை முறையே, பஞ்ச பூதங்களாகிய நிலம் என்கிற பருவுடலும், நீர் என்கிற இரத்தமும், உமிழ்நீரும் விந்து நாதம் மற்றும் ஹார்மோன்களும் நெருப்பு என்கிற 98.4 வெப்ப நிலையும் ஆகாசம் என்று சொல்லுகின்ற உயிரும் உள்ளது.

    மேலும் அண்டத்தில், பரம்வெளி மண்டலம் என்கின்ற பால்வெளி மண்டலங்கள் 3 1/2 (மூன்றரை) அளவு வளைவு உள்ளதாக இயங்கிகொண்டு இருக்கிறது. அது போல தான் இந்த உடலின் இயக்கத்திற்கு காரணமான குண்டலினி சக்தியும் 3 1/2 சுற்று வளைந்து படுத்து இருக்கும் பாம்பாகவே உருவகம் படுத்தப்பட்டுள்ளது.

    அன்பர்களே, இந்த பிரபஞ்ச படைப்பிலே அனைத்து இயக்கத்திற்கும் காரணமான சக்தி, ஒன்றே ஒன்றுதான். அண்ட சராசரங்களின் இயக்கத்துக்கும், ஒவ்வொரு தனி மனிதனின் இயக்சுத்துக்கும், காரணமான சக்திக்குதான் குண்டலினி என்று பெயர். எனவே, இந்த குண்டலினி சக்தி என்னும் இறை சக்தியை நமக்குள்ளாக காத்து கொள்ள இந்த நாடி சுத்தி பிராணாயாமம் மிகவும் அவசியம். இந்த இறை சக்தியை நமக்குள் நாம் வாழும் காலத்திலேயே உணர்ந்தால் தான், நாம் கர்மவினை பதிவுகளில் இருந்து விடுபட முடியும். ஏனேன்றால் ஆயுள் என்பது நமது மூச்சோடு தொடர்பு உடையது. இதற்கு மூச்சு எப்படி உதவி செய்கிறது என்கிற சந்தேகம் நமக்கு எழும். இதை அட்டாங்க யோகத்தில் பதஞ்சலி முனிவர் நான்காம் அத்தியாயமாக (பிராணாயாமம்) அமைக்கிறார்.

    மனித உடல் ஆனது திடமாக இயங்க 108 இடங்களில் உயிர்காற்று நின்று இயங்குகிறது. இதையே நாம் உயிர்நிலை ஓட்டம் என்கிறோம். மனித உடலில் உள்ள 10 வாயுக்கள் மேற்சொன்ன 108 இடங்களில் உயிர்காற்றை இயக்குவதாக சித்தர்கள் அறிந்தனர். இந்த தச (10) வாயுக்கள் தான், 108 உயிர் இடங்களை, எப்படி இயக்குகிறது என்பதே பிராணாயாமம்.

    அதே போல் மனிதனின் கண்களுக்கு புலப்படாத பொருட்கள் நான்கு 1. இறை நிலை 2. மனிதனின் உயிர் 3. காற்று 4. நோய். இவை நான்கும் உணர முடியும். இந்த நான்கும் தான் இந்த சரீரத்தை சூட்சமமாக ஆட்சி செய்கிறது. எனவே சித்தர்கள் கண்ணால் காண முடியாத பிராணனை கொண்டு உடலின் நோய்களை போக்கும் வழியை கண்டுபிடித்த முறையே பிராணாயாமம்.

    நாடி சுத்தி என்பது உடலின் நோயை குணப்படுத்தும். மேலும் இந்த உடலை கல்பம் (அழியாதது) ஆக்கும். அறிவை அஜயா என்ற ஒடுக்க நிலைக்கு கொண்டு செல்லும்போது சிற்றறிவு ஆனது பேறறிவோடு இணையும். இதை உணர்ந்த சித்தர்கள், பொய் என்று சொல்லக்கூடிய இந்த தேகத்தை, மெய் என்று நிரூபித்து காட்டி காற்றை பிடித்து, மூலக்கனலை எழுப்பி, மெய்ஞான அமுது உண்டு நரை, திரை, மூப்பு, இன்றி இறவா வரம் பெற்று வாழ்ந்து காட்டியவர்கள் சித்தர்கள்.

    இப்போது இந்த நான்கு வகையான மூச்சை பற்றி சற்று விஞ்ஞான பார்வையாக பார்க்கும் போது இதன் முக்கியத்துவம் விளங்கும்.

    மேல்மூச்சு என்பது உயர் சுவாசித்தல் என்பர். இதை கழுத்தெலும்பு சுவாசம் என்பர். இவ்வாறு சுவாசித்தால், விலா எலும்புகளை மேல் பக்கமாக தூக்கி கழுத்து எலும்பும், தோள்பட்டைகளும் உயர தூக்கும்.அதே நேரம், அடிவயிறு அத்தனையும் உள்ளுக்கு இழுத்து உதிரவிதானத்துக்கு எதிராய் அழுத்தி ஏற்றுவர். இதனால் குறைந்த காற்றே நுரையீரலுக்கு கிடைக்கும். மேலும் உதிரவிதானம் மேல் நோக்கி வந்து விட்டதால் எந்த திசையிலும் விரிவு அடைய வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இது மிகக்குறைந்த அளவு பலனையே தரும். எனவே இந்த உயர் சுவாசித்தல் என்பது மிகவும் மோசமானது. பல பாகங்களை அழுத்தி உயர்த்தி அதிக வேலையை நம்மிடம் வாங்கி கொண்டு குறைந்த அளவே கை கூடும்.

    நடு மூச்சு என்பது இதை விலா சுவாசித்தல் என்பர். உயர் சுவாசித்தலை விட சற்று கூடுதல் பலன் தரும். இதில் உதிரவிதானம் மேலுக்கு தள்ளப்பட்டு அடிவயிறு அடங்கிய வயிற்றுப்பகுதி உள்நோக்கு இழுக்கப்படுகிறது. இதனால் உயர் சுவாசத்தை விட பலன்கள் சற்று அதிகமாக கிடைக்கும். காரணம் என்னவென்றால், விலா எலும்புகள் சற்ற அதிகமாக தூக்கப்படுவதால், நெஞ்சின் ஒரு பகுதி மட்டுமே விரிவடையும்.

    அடி மூச்சு என்பது, இதை அடி வயிறு சுவாசித்தல் என்பர். இந்த மூச்சு உதிரவிதானத்தின் மேல்பகுதி இயக்கப்படுவதால், மேல் மூச்சு, நடு மூச்சை விட நுரையீரல்கள் இயங்க அதிகமான சுதந்திரம் கிடைக்கும். இதனால் காற்று உள் இழுக்கும். இந்த நிலையில் உதிரவிதானம் இயக்கப்படும் போது குன்று போன்ற அமைப்பு கீழ் நோக்கி அழுத்தப்பட உதிரவிதானம், வயிற்றுப் பகுதி பாகங்களை அழுத்தி, அப்பகுதியை உந்தி வெளி தள்ளும். இதனால் கூடுதலான பிராண சக்தி கிடைக்கும்.

    ஞானிகள் மூச்சு என்பது, மூச்சை உள் இழுத்து, வெளிவிடும்போது உள்ளே இருக்கும், உடலுக்கு ஒவ்வாதவற்றை அகற்றி, அனைத்து சுவாச உறுப்புகளையும் முழு இயக்கத்திற்கு உட்படுத்தும். நுரையீரலின் ஒவ்வொரு செல்லையும், ஒவ்வொறு பகுதியையும் முழு மையான இயக்கத்திற்கு உட்படுத்தும். குறைந்த சக்தி செலவில் அதிகமான சுவாச பலனை எட்ட வைக்கும். மேலும் மார்பு கூடு அனைத்து திசைகளிலும், அதிகப்படியான விரிவுக்கு உட்படுத்தப்பட்டு சுவாசத்தில் ஈடுபடும் அனைத்து உறுப்புகளும் தானாக முழு உழைப்புக்கு தள்ளப்பட்டு விடுவதால் முழு பலனும் கை மேல் கிடைக்கும். இதனால் நெஞ்சு மற்றும் அதன் உதிரி பாகங்களை வயிறு மற்றும் அதன் உதிரி பாகங்களில் இருந்து பிரிக்கும். தசை சுவரான உதிரவிதானம் முழுவதும் வேலை செய்யும். இந்த ஞானிகள் மூச்சின் பலன் நமக்கு நாடி சுத்தி பிராணாயாமம் நரம்பு தசை நார் மூச்சு பயிற்சி மூலம் கிடைக்கிறது.

    யோகிகளின் இந்த சுவாசக் கலையை, அவர்கள் பவகார யோகம் என்கிறார்கள். அதாவது தொடர் நாடி சுத்தி பிராணாயாமம் பயிற்சியினால், யோகியானவர்கள் மரணத்தின் மீது முழு ஆதிக்கம் செலுத்தி, அதனோடு மூச்சின் மீதும் மனதின் மீதும் ஆதிக்கம் செலுத்தி, புவி ஈர்ப்பு விசை எல்லைகளை கடந்து செல்லும் நிலை கிடைக்கிறது. எனவே, ஜீவ பிரம்ம ஐக்கிய முக்தி நிலையை வாழும் காலத்திலேயே கொடுக்கக்கூடிய சர கலையை நாம் செய்யும்போது ஆயுள் நீடிக்கிறது.

    எப்போது நாம் ஆயுளை நீட்டித்து மரணத்தை வெல்கிறோமோ அப்போதே நமது கர்மவினை பதிவுகளில் மாற்றம் ஏற்பட்டு, நமது விதியை மதியால் வெல்லுகின்ற சூட்சமம் கிடைக்கிறது. அந்த சூட்சம ரகசியங்களை பற்றி மேலும் ஆராய்ச்சி செய்வோம்.

    ×