என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சுகமான வாழ்வுடன் கோடி புண்ணியங்களை தேடித்தரும் பீஷ்ம தர்ப்பணம்
- சந்ததி இல்லாத பிதாமகன் பீஷ்மருக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்வது என்பது குருவுக்குச் செய்யும் தர்ப்பணம் ஆகும்.
- பீஷ்ம தர்ப்பணத்தை மறக்காமல் செய்தால் மகா புண்ணியத்தை பெறலாம்.
பஞ்சபூதத்தில் நீரின் தன்மையை கொண்டது அஷ்டமி. தை மாத அமாவாசைக்கு பின்னர் 8-ம் நாளில் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமானது. இதனை பீஷ்மருக்கு உகந்தது என்கின்றனர்.
மகாபாரத்தில் கங்கை மைந்தன் பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இல்லை. அவர் தன் தந்தைக்காக செய்த தியாகத்தின் பலனாக பெறர்க்கரிய பேறு பெற்றார். அதாவது அவரே விரும்பாமல் அவரது உடலில் இருந்து உயிர் பிரியாது.
யாரும் பெறா வரத்தை பெற்ற பீஷ்மர் இறுதியில் விதியின் சூழ்ச்சியால் கவுரவர்கள் பக்கம் போரிட நேர்ந்தது. அவரின் கர்ம வினைப்படி அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அனுபவிக்க வைத்தது விதி. இதன் பலனாக போரில் அம்புகளினால் வீழ்த்தப்பட்டார்.
போரில் யுத்தகளத்தில் அர்ஜூனன் தொடுத்த அம்புகளால் துளைக்கப்பட்ட நிலையில் பீஷ்மர் அம்பு படுக்கை மீது கிடந்தார். அவர் தன் தந்தையிடம் இருந்து தான் விரும்பியபடி இறக்கும் வரத்தை பெற்றிருந்தார். தான் பெற்ற வரத்தினால் மோட்ச காலமான உத்தராயண காலத்தில் உயிர் துறக்க விரும்பி அம்பு படுக்கையில் காத்திருந்தார். அவரை சுற்றி கவுரவர்களும், பாண்டவர்களும் வணங்கி நின்றனர்.
முள் படுக்கையில் அவருடைய உடல் வேதனையில் துடித்தது. அப்போது அங்கு வந்த வியாசரிடம் "நான் செய்த பாவம் என்ன? எதற்காக என் உடல் இவ்வளவு வேதனையில் இருக்கிறது? நான் விரும்பிய நேரத்தில் மரணிக்கலாம் என்ற என் தந்தையின் வரத்தின் படி நான் நினைத்தபோது என்னால் மரணிக்க முடியாதபடி இந்த வேதனை என்னை அச்சுறுத்துகிறதே" என்று பீஷ்மர் கேட்டார்.
அதற்கு வியாசர் "பீஷ்மா ஒருவர் தன் மனதாலும், உடலாலும் ஒருவருக்கு செய்வது மட்டுமே தீமை , அநீதி இல்லை. நம் முன்பாக ஒரு கெட்ட செயல் நடக்கும் போது அதனை தடுக்காமல் இருப்பதும் கூட பாவம் தான். அதற்கான தண்டனையையும் அந்த நபர் அனுபவித்தே ஆக வேண்டும். நீ அனுபவிக்கும் வேதனை அப்படிப்பட்ட ஒரு தண்டனைக்குரியதுதான்" என்றார்.
அப்போதுதான் பீஷ்மருக்கு புரிந்தது, துரியோதன சபையில் பாஞ்சாலிக்கு அநீதி நிகழ்ந்த போது அதனை கண்டும் காணாமல் இருந்ததன் விளைவு இது என்று. உடனே வியாசரிடம் இதற்கு என்ன பிராயச்சித்தம் என்று கேட்டார்.
"யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ, அப்போதே அந்த பாவம் அகன்று விடும் என்கிறது வேதம். நீ எப்போது வருந்தினாயோ அப்போதே அந்த பாவம் அகன்று விட்டது. ஆனாலும் துரியோதனன் அவையில் பாஞ்சாலி காப்பாற்றும் படி கதறியபோது கேட்கும் திறன் இருந்தும் அதைக் கேளாமல் இருந்த உன் செவிகள், கூர்மையான பார்வை இருந்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள், நீ சொன்னால் அனைவரும் கேட்பார்கள் என்ற நிலையிலும் தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் அளப்பரிய வீரம் இருந்தும் உபயோகமின்றி இருந்த உன் வலுவான தோள்கள், வாள் எடுத்து எச்சரிக்காத உன் கைகள், இருக்கையில் இருந்து எழாமல் இருந்த உன் கால்கள், நல்லது எது கெட்டது எது என்று சிந்திக்க தவறிய உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என்பது விதி. அதைத்தான் இப்போது அனுபவிக்கிறாய்" என்றார் வியாசர்.
பின்னர் "உன்னுடைய வேதனையை சுட்டெரிக்க சூரியனின் அனுகிரகம் தேவை என்று கூறிய வியாசர் தன்னிடம் இருந்த எருக்க இலைகளை கொண்டு பீஷ்மரை அலங்கரித்தார். இதனால் அவரது வேதனை குறைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதி அடைந்த பீஷ்மர், தியான நிலையிலே முக்தி அடைந்தார்.
அவர் மரணித்த தினம் ரதசப்தமி என்றும், அதற்கு அடுத்த நாளான அஷ்டமி திதி 'பீஷ்மாஷ்டமி' என்று அழைக்கப்படுகிறது. "பீஷ்மர் இறுதிவரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர். இதனால் அவருக்கு பித்ரு கடன் செய்வது யார்? "என்று தருமர் வருந்தினார்.
அப்போது வியாசர் "ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும், பித்ருக்கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர் சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த தேசமே பித்ரு கடன் செய்யும். அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர்" என்றார் .
அதனால் ரத சப்தமிக்கு மறுநாள் பீஷ்மருக்கு எல்லா மக்களும் தர்ப்பணம் செய்கிறார்கள். அதுவே பீஷ்மாஷ்டமி. பிதாமகன் என்று போற்றப்படும் பீஷ்மர் இறந்த திதி நாளே பீஷ்டாஷ்டமி. எனவே சந்ததி இல்லாத பிதாமகன் பீஷ்மருக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்வது என்பது குருவுக்குச் செய்யும் தர்ப்பணம் ஆகும்.
இது நம் பித்ருக்கள் அனைவருக்கும் செய்யப்படுகிற தர்ப்பணம். பீஷ்ம தர்ப்பணத்தை மறக்காமல் செய்தால் மகா புண்ணியத்தை பெறலாம். இதன் மூலம் ஒட்டுமொத்த குருமார்களின் ஆசியையும் பித்ருக்களின் ஆசியையும் பெறலாம்.
இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். காலையில் நீராடி விட்டு, பித்தளை அல்லது செம்பு குவளையில் பால் கலந்த நீரை இடது கையில் எடுத்து கொள்ளவும். வலது கையில் அட்சதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் முதலியவற்றை வைத்து கொள்ளவும்.
கீழே தாம்பாளம் வைத்து மூன்று முறை "பீஷ்மாய நமக" என பீஷ்மர் நாமம் உச்சரித்தபடி இடக்கையில் உள்ள நீரை வலக்கையில் இருந்து தம்பாளத்தில் விடவும். அவ்வளவு தான். பீஷ்மாஷ்டமி அன்று புனித நீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும், மற்றும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாக கிடைக்கும் என்கின்றனர் பெரியவர்கள்.






