என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja seized"

    • கன்னியாகுமரியில் இருந்து திங்கள், புதன், வியாழன், சனி என வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படுகிறது.
    • கஞ்சாவை கடத்தி வந்த நபர்களை ரெயிலில் போலீசார் தேடிப்பார்த்தனர்.

    திருவனந்தபுரம்:

    அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர ரெயில் திப்ருகர் எக்ஸ்பிரஸ். இந்தியாவின் மிகவும் நீளமான ரெயில் பாதையை கொண்ட இந்த எக்ஸ்பிரஸ், 4,189 கிலோமீட்டர் தூரத்தை 74 மணி நேரத்தில் கடக்கிறது.

    விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 2013-ம் ஆண்டு இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து திங்கள், புதன், வியாழன், சனி என வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படுகிறது.

    அசாம், நாகாலாந்து, மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 9 மாநிலங்களின் வழியாக இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரசில், சமீபகாலமாக அதிகளவில் கஞ்சா கடத்தி கொண்டுவரப்படுகிறது.

    அவ்வாறு கடத்தி வரப்பட்ட கிலோ கணக்கிலான கஞ்சாவை, குமரி மாவட்ட ரெயில்வே போலீசார் பிடித்துள்ளனர். இந்தநிலையில் விவேக் எக்ஸ்பிரசில் கடத்தி கொண்டுவரப்பட்ட 33 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வந்த அந்த ரெயில், ஆலுவா ரெயில் நிலையத்திற்கு வந்தபோது கலால் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த ரெயிலின் பின்பகுதியில் இருந்த பொதுப்பெட்டியில் கழிவறைக்கு அருகே சந்தேகமளிக்கும் வகையில் சில பைகள் கிடந்தன. அவற்றை அவர்கள் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மொத்தம் 33 கிலோ கஞ்சா இருந்தது. அதனை போலீசாரும், கலால் துறையினரும் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்த நபர்களை ரெயிலில் போலீசார் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு பல லட்சம் ரூபாய் ஆகும்.

    ஆலுவா ரெயில் நிலையத்தில் கடந்த 13-ந்தேதி 10 கிலோ கஞ்சாவும், ஆலுவா சந்தையில் ரூ.17லட்சம் மதிப்புள்ள கஞ்சாவும், திருச்சூர் ரெயில் நிலையத்தில் நேற்று(17-ந்தேதி) 5 கிலோ கஞ்சாவும் பிடிபட்டது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தல் அதிகரித்திருப்பதாக குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜிபின் தெரிவித்துள்ளார்.

    • விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.
    • கேரளாவை சேர்ந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தனர்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள இயக்கப்பட்டு வருகின்றன.

    வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க, சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து ஹாங்காக் வழியாக கோவை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது.

    இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களது உடைமைகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    அப்போது கேரளாவை சேர்ந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் உயர் ரக கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

    இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் சிங்கப்பூரில் இருந்து ஹாங்காங் வழியாக அதை கடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யாரும் உரிமை கோராத நிலையில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியவில்லை.
    • பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தி செல்வதும் அதனை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ரெயில்வே போதை பொருள் தடுப்பு போலீசார் ரெயில்களில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரெயிலில் இன்று காலை போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது கேட்பாரற்று கிடந்த ஒரு கைப்பையை எடுத்து சோதனை செய்தபோது அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் அதற்கு யாரும் உரிமை கோராத நிலையில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியவில்லை.

    இதையடுத்து கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ரெயில்வே போலீசார் கஞ்சா கடத்தி கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • கடலூரில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் போலீசார் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திருப்பாதிரிப்புலியூர் புதுநகர் மாரியம்மன் கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரித்த போது கடலூர் எம்.புதூர் சேர்ந்த சூர்யா (வயது 20) என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.

    • நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தப்படுவதாக நாகப்பட்டினம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • தலைமறைவான படகின் உரிமையாளர் சந்திரனை தேடி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் படகு மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க சுங்கதுறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தப்படுவதாக நாகப்பட்டினம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வேளாங்கண்ணி வெள்ளாற்றின் பாலத்தில் இன்று அதிகாலை சுங்கதுறை அதிகாரிகள் படகில் சென்று திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அங்கு சந்தேகபடும்படி நின்ற பைபர் படகில் ஏறி சோதனை செய்தனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கஞ்சா மூட்டைகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மொத்த எடை 200 கிலோவாகும். மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக நாகை புஷ்பவனத்தை சேர்ந்த வாஞ்சிநாதன் மற்றும் அருளழகன், நாலுவேதபதியை சேர்ந்த வேணுகோபால் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனர்.

    அதில் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான படகின் உரிமையாளர் சந்திரனை தேடி வருகிறார்கள்.

    • தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
    • கண்காணிப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி மற்றும் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 11 ந்தேதி முதல் நேற்று வரை மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் 3/4 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் தீவிர சோதனையில் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதில் கஞ்சா விற்பனை செய்ததாக 20 நபர்களும், குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 19 நபர்களையும், லாட்டரி விற்பனை செய்ததாக 10 நபர்களையும் என 49 பேர் போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து உள்ளனர். மேலும் மாவட்ட முழுவதும் சோதனையும் மற்றும் கண்காணிப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • மதுரையில் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
    • இவர்களிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.



    மதுரை

    மதுரை கரிமேடு போலீசார் பெத்தானியாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சந்தானம் மனைவி லட்சுமி என்ற சித்ரா (வயது 32), சுந்தரபாண்டியன் மனைவி லதா (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு நின்றி ருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (23), சுபாஷ் சரவணன் (21), மணிகண்டன் (25), மகாராஜன் (23) ஆகியோர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து 245 கிராம் கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    மதுரை மாநகரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • மதுரை அருகே 2¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • கஞ்சா விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சமூக விரோதிகள் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து போதிய பலனில்லை. கஞ்சா விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் திருமங்கலம் மது விலக்கு தடுப்பு போலீசார் நேற்று உசிலம்பட்டி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அணைப்பட்டி அருகே உள்ள கல்யாணிபட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த மூர்த்தி(26), கல்லூத்தை சேர்ந்த பெருமாள்(52) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட் போது 1 கிலோ 150 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிதல் செய்த போலீசார் மூர்த்தி,பெருமாளை கைது செய்தனர்.

    இதேபோல் உசிலம்பட்டி அருகே உள்ள கீரிபட்டியை சேர்ந்த செல்லபாண்டி(45) என்பவர் வீட்டில் சோதனையிட்ட போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மதுவிலக்கு போலீசார் அதனை பறிமுதல் செய்து செல்லபாண்டியை கைது செய்தனர்.

    • வடமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் புதுவைக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து புதுவைக்கு வந்த ரெயிலில் சோதனை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. போலீசார் கஞ்சா விற்பவர்களை அடிக்கடி கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வடமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் புதுவைக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து நேற்று மதியம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து புதுவைக்கு வந்த ரெயிலில் சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு பையில் 4 பார்சல்கள் இருந்தன. அதனை போலீசார் பிரித்து பார்த்தபோது, அதில் 8 கிலோ 400 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை ரெயில் மூலம் புதுவைக்கு கடத்தி வந்தது யார் என்று விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • காரில் 79 பார்சல்களில் தலா 2 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.
    • கடத்தல்காரர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் பகுதியில் ஜே.ஜே.நகரில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் கேட்பாரற்று மர்ம கார் ஒன்று சில நாட்களாக நின்றிருந்தது.

    இதுகுறித்து மத்திய புலனாய் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை கடந்த 2 நாட்களாக தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று மாலை வரையிலும் அந்த காரை எடுக்க யாரும் வரவில்லை.

    இந்நிலையில் போலீசார் அந்த காரின் கண்ணாடியை உடைத்து அந்த காரை இயக்கி மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அந்த காரின் உள்பகுதி மற்றும் பின்பகுதியை உடைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த காரில் 79 பார்சல்களில் தலா 2 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அந்த பார்சல்களில் இருந்த மொத்தம் 158 கிலோ கஞ்சாவையும், அந்த காரையும் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த கார் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பதிவு எண் கொண்டதாகும். ரூ.1 கோடி மதிப்புடைய கார் என்றும் கூறப்படுகிறது.

    அந்த காரின் பதிவு எண்ணை வைத்து அது யாருடையது? காரில் கஞ்சா கடத்தி வந்த கடத்தல்காரர்கள் யார்-யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல்காரர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கோவிலுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் நீண்ட நேரம் நின்றிருந்த சொகுசு காரில் கஞ்சா பார்சல்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், காரில் இருந்த கஞ்சா பார்சல்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • முக்கிய ரெயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • 4 பெண்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    கஞ்சா வேட்டை 4.0 திட்டத்தின் கீழ், சென்னை சென்டிரல், எழும்பூர், காட்பாடி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் மே 21-ந்தேதி வரை சென்டிரல், எழும்பூர், சேலம், கோவை உட்பட பல்வேறு ரெயில் நிலையங்களில் நடத்திய சோதனையில் 670 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 4 பெண்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும், வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா மாநிலம் விஜயவாடா மற்றும் ரேணிகுண்டா வழியாக தமிழகம் வரும் அனைத்து விரைவு ரெயில்களிலும் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட இதர தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா என தனி படையினர் வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக ரெயில்வே போலீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை முத்துப்பேட்டை அருகே உள்ள அலையாத்தி காட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசை பார்த்ததும் தப்பியோட்டம் பிடித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அலையாத்தி காட்டில் 10 மூட்டை கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து 10 மூட்டை கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் விசாரணையில் அவர்கள் முத்துப்பேட்டை அருகே பேட்டையை சேர்ந்த முருகானந்தம் (வயது 43), அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (25) கோவிலூரை சேர்ந்த சசிகுமார் (20) என்பதும் அவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதன் மொத்த எடை 300 கிலோ ஆகும். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ×