ஈரான்- இஸ்ரேல் போர் எதிரொலி: பெட்ரோல், டீசல் நிரப்ப வாகனங்கள், கேன்களுடன் குவிந்தவர்களால் பரபரப்பு

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடுத்ததால் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க ஏராளமானோர் அணிவகுத்து வந்தனர்.
ஈரான்- இஸ்ரேல் போர் எதிரொலி: பெட்ரோல், டீசல் நிரப்ப வாகனங்கள், கேன்களுடன் குவிந்தவர்களால் பரபரப்பு
Published on

வாணியம்பாடி:

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடுத்ததால் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என்றும் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

இதனைத்தொடர்ந்து வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க ஏராளமானோர் அணிவகுத்து வந்தனர். பலர் கேன்களுடனும் குவிந்தனர். அவர்கள் வாணியம்பாடி பஸ் நிலையம், நியூ டவுன், பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் நீண்டநேரம் வரிசையில் நின்று கொண்டு பெட்ரோல் மற்றும் டீசலை தங்கள் வாகனங்களிலும், கேன்களிலும் நிரப்ப அலைமோதினர்.

இதனால் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பதற்றமான சூழல் நிலவியது. பெட்ரோல் நிலைய ஊழியர்கள் இது வதந்தி என்று கூறி அவர்களை கட்டுப்படுத்த முயன்றபோது வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நகர போலீசார் பெட்ரோல் நிலையங்களுக்கு விரைந்து வந்தனர். பெட்ரோல்-டீசல் விலை உயரும் என்பது வதந்தி என்று கூறி கூடியிருந்த அனைவரையும் கலைந்து போக செய்தனர். தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்கள் காரணமாக வாணியம்பாடி முழுவதும் பரபரப்பாக இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com