என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போகிப் பண்டிகை"

    • ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
    • மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.

    போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்களைப் பெற்று அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    போகிப் பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2020 முதல் 14.012026 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre) ரப்பர் ட்யூப் (Rubber Tube), நெகிழி (Plastic), காகிதக் கழிவுகள், அட்டைப் பெட்டிகள், மரக்கழிவுகள், உலோகக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.

    மேலும், இதுகுறித்து பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2026 முதல் 14.012026 வரை 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு பெறப்பட்ட பொருட்கள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் (RRC) பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மேலும் பயன்படுத்த இயலாத பொருட்கள் எரியூட்டி சாம்பலாக்கும் எரியூட்டும் ஆலைக்கு (Incinerator Plant அனுப்பப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டப்படும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
    • புகைகளை எழுப்பக்கூடிய கழிவு பொருட்கள் போன்றவைகளை, தெருக்களில் போட்டு எரிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக வரும் போகிப் பண்டிகையின்போது பெரும்பாலானோர் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தெருக்களில் போட்டு எரிப்பது வழக்கமாக உள்ளது.

    இதைப்போல் சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள மீனம்பாக்கம், கவுல் பஜார், பொழிச்சலூர், பம்மல் அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், போகிப் பண்டிகையையொட்டி பழைய பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் உள்ளிட்ட பழைய பொருட்களை தெருக்களில் போட்டு, அதிகாலையில் எரிப்பதால், கடுமையான புகைமூட்டங்கள் ஏற்பட்டு, சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியை சூழ்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் பனிமூட்டமும் அதிகாலை நேரத்தில் இருப்பதால், ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,

    பொதுமக்கள் போகிப் பண்டிகையின் போது அதிகாலை நேரத்தில், பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்கள், அதிக அளவு புகைகளை எழுப்பக்கூடிய கழிவு பொருட்கள் போன்றவைகளை, தெருக்களில் போட்டு எரிப்பதை தவிர்த்து விடுங்கள்.

    அவ்வாறு எரிப்பதால், அடர் மூடுபனியில், கரும் புகை கலந்து, விமான ஓடுபாதை தெரியாத அளவு, சூழ்ந்து கொள்கிறது. இதனால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்படுவதோடு, விமான பயணிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    எனவே குடியிருப்பு பகுதி மக்கள் விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    போகிப்பண்டிகையின் போது பழையபொருட்களை எரித்ததால் கடந்த 2018-ம் ஆண்டு அதிகபட்சமாக 73 புறப்பாடு விமானங்கள், 45 வருகை விமானங்கள் என மொத்தம் 118 விமான சேவைகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டது .

    இதன் பின்னர் விழிப்புணர்வுகளால் போகிப்பண் கையின் போது பழைய பொருட்களை எரிப்பது குறைந்து விமான சேவைகள் பாதிக்கப்படுவது, படிப்படியாக குறைந்து வருகிறது.

    கடந்த 2024-ம் ஆண்டு, போகிப் பண்டிகை புகை மூட்டம் பனிமூட்டம் காரணமாக 51 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின்போது இதைப்போன்ற பாதிப்பு ஏற்படலாம் என்று கருதி, இந்திய விமான நிலைய ஆணையம் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாலை 4 மணியில் இருந்து, காலை 8 மணி வரையில், சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் என சுமார் 30 வருகை, புறப்பாடு விமானங்கள் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்படுகிறது
    • மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

    புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:-

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.

    ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், தற்பொழுது போகிப்பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

    இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 21 ஆண்டுகளாக போகிப்பண்டிகைக்கு முன் பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.

    மேலும், போகிப்பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க, காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

    இந்த 2026 ஆம் ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, இவ்வருடம் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மழைத் தெய்வமாக உழவுத் தொழில் மரபினரால் அடையாளப்படுத்தப்படும் இந்திரனுக்குப் போகி என்னும் பெயருமுண்டு.
    • அறுவடைக்கான வேளாண்மை உற்பத்தியைப் போகம் என்னும் சொல்லால் குறிப்பதுண்டு.

    போகி பண்டிகை என்றால் பழையனவற்றை கழித்தல் என்று நினைத்து பலரும் தங்கள் வீடுகளில் உள்ள பழையப் பொருட்களை வீதியில் போட்டு தீயிட்டுக் கொளுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் போகியின் உண்மையான நோக்கம் வேறு. அதுபற்றி பார்ப்போம்...

    ஆடி மாதத்தில் தேடி விதைத்தும் நடவு செய்தும் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து, அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் பொங்கல் வைப்பதுதான் மரபாக இருந்திருக்கிறது.

    வேளாண்மை உற்பத்திக்கும் உழவருக்கும் உறுதுணையாய் இருந்தவை மழையும் மாடுகளும்தான். அவ்வகையில், உழவுத் தொழில் மரபினரின் பொங்கல் தளுகையானது மழைக்கும் மாடுகளுக்கும்தான் முதன்மையாகப் படைக்கப்படுகிறது.

    மழையைத் தெய்வமெனத் தொழுத பிறகே பொங்கலிட்டுத் தளுகை படைத்து மகிழ்ந்திருக்கின்றனர் உழவு மரபினர். அத்தகைய மழைத் தெய்வமே போகி என்பதாகும்.

    மழைத் தெய்வமாக உழவுத் தொழில் மரபினரால் அடையாளப்படுத்தப்படும் இந்திரனுக்குப் போகி என்னும் பெயருமுண்டு. அறுவடைக்கான வேளாண்மை உற்பத்தியைப் போகம் என்னும் சொல்லால் குறிப்பதுண்டு.

    போகம் விளைவதற்கான அடிப்படை வித்தாக இருப்பது மழைதான். அதனால்தான், போகம் விளைவிக்கும் மழைத் தெய்வத்தைப் போகி என்னும் சொல்லாலும் அடையாளப்படுத்தியுள்ளனர். அதாவது, போகத்தைத் தருவதால் போகி என மழையைக் குறித்துள்ளனர்.

    வேளாண்மை விளைச்சல் தரும் மழைத் தெய்வமான போகியை- இந்திரனை அறுவடைக் காலத்திலும் மறவாது நினைவு கூர்ந்து வழிபடும் சடங்கியல் மரபாகப் போகிக்குக் காப்புக் கட்டுகின்றனர். அவ்வகையில், காப்புக் கட்டுதல் எனும் வளமைச் சடங்கு, போகி என்னும் இந்திர மழைத் தெய்வத்தை வணங்கிடும் நோக்கத்தையே புலப்படுத்துகிறது.

    கன்னிப் பிள்ளை, கண்ணுப் பூளை, கூழைப்பூ, கூரைப்பூ எனப்படும் புல்செடியானது, பூக்கும்போது புல் தண்டில் வெண்ணிறத்திலான மழைத் துளிகள் கோத்தது போலவும் வழிவது போலவுமான தோற்றத்தைக் கொண்டதாகும். மழைக் காலத்தில் மட்டுமே தளைக்கும் இம்மழைப்பூவைத்தான் பொங்கல் காப்புக் கட்டுக்கான பூவாகக் கருதி இருக்கின்றனர் முன்னோர்.

    எத்தனையோ பூக்கள் இருக்கையில், இந்தப் பூவை மட்டும் காப்புக் கட்டுதலில் முதன்மைப் பூவாகக் கருதியதன் பின்புலமும் குறியீட்டுத் தன்மை வாய்ந்ததாகும். ஆயிரம் கண்ணுடையான் என்னும் இந்திரனைக் குறிக்கும் அடையாளத்துடன் இருக்கும் இந்தப் பூதான், கண் + பூ + இலை = கண்ணுப் பூவிலை - கண்ணுப் பூளை என்றாகியிருக்கிறது.

    ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனை - போகியைக் குறியீடாகக் குறிக்கும் நோக்கத்தில்தான் பொங்கல் காப்புக் கட்டுதலில் கண்ணுப் பூவிலை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பூவுடன் மாவிலை, ஆவாரம், வேப்பிலை, தும்பை போன்றவையும் சேர்த்து வீடுகளின் முகப்புகளிலும், காடு கழனிகளின் சனி மூலைகளிலும், கண்மாய், குளத்தங்கரை அய்யனார் கோவில்களிலும், குல சாமிகளாக வழிபடப்படும் முன்னோர் நடுகற்கள் அல்லது கோயில்களிலும் காப்புக் கட்டுவது வளமைச் சடங்கின் அங்கமாகவே இன்னும் இருந்து வருகிறது.

    பெரும்பாலும், போகி நாளின் மாலையிலும், தை நாள் பொழுது விடிவதற்கு முந்திய வைகறைப் பொழுதிலும் காப்புக் கட்டி விடுதல் மரபாகும். இத்தகைய மழைக் காப்புக் கட்டுதல் போகி என்னும் இந்திரனை - மழைத் தெய்வத்தை வணங்கியும் நினைவு கூர்ந்தும் நன்றிப் பெருக்கைக் காட்டியும் பொங்கல் சார்ந்த வளமைச் சடங்குகளை உழவு மரபினர் நிகழ்த்தி வந்திருக்கின்றனர்.

    மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...

    • இந்த ஆண்டு போகி மாசுவை கட்டுப்படுத்த பழைய துணிகளையும், டயர்களையும், பொருட்களையும் எரிக்க வேண்டாம். நாங்கள் நேரடியாக பெற்றுக்கொள்கிறோம் என்று மாநகராட்சி அறிவித்தது.
    • வீடு வீடாக சென்று தூய்மை பணியாளர்கள் பழையதை சேகரித்தனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் போகிப் பண்டிகையில் பழைய பொருட்கள், டயர்களை தெருக்களில் போட்டு எரிப்பார்கள். அப்போது சிறுவர்கள் மேளம் அடித்து ஆடுவார்கள்.

    அதில் இருந்து வெளியேறும் புகை மூட்டம் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு இருக்கும். விமானங்கள் தரையிறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டதும் உண்டு.

    ஆனால் இந்த ஆண்டு போகி மாசுவை கட்டுப்படுத்த பழைய துணிகளையும், டயர்களையும், பொருட்களையும் எரிக்க வேண்டாம். நாங்கள் நேரடியாக பெற்றுக்கொள்கிறோம் என்று மாநகராட்சி அறிவித்தது. வீடு வீடாக சென்று தூய்மை பணியாளர்கள் பழையதை சேகரித்தனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

    கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே பழையதை எரித்தார்கள்.

    தற்போது பனிக்காலம் என்பதால் அதிகாலையில் பனிப்புகை பெருமளவில் சூழ்கிறது.

    அத்துடன் போகிப் புகையும் இணைந்ததால் பல இடங்களில் புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டது. எதிரே வந்த வாகனங்கள் தெரியாதபடி புகை சூழ்ந்து இருந்தது.

    வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே சாலைகளில் பயணித்தன.

    சில தெருக்களில் எரித்த பிறகு சாம்பலில் தண்ணீர் ஊற்றி எடுத்து அப்புறப்படுத்தினார்கள். இந்த அளவுக்கு விழிப்புணர்வு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. எதிர்வரும் காலங்களில் இந்த பிரச்சினைகள் முடிந்து விடும் என்கிறார்கள் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள்.

    ×