என் மலர்
செய்திகள்
- வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டனர்.
- முகவரி மாறியவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் ஆவார்கள்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சீர் செய்ய சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பீகாரில் தொடங்கிய இந்த பணி, 2-ம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா, குஜராத், அசாம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில், இந்த தீவிர திருத்தப்பணி மிகவும் முக்கியத்துவம் பெற்று உள்ளது.
இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியின் முதல் கட்டமாக வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் கொடுத்து பூர்த்தி செய்து பெறப்பட்டன. கடந்த மாதம் 4-ந்தேதி தொடங்கிய இந்த பணி, கடந்த 14-ந்தேதி முடிவடைந்தது. இந்த பணியின் அடிப்படையில் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. அதன்படி அக்டோபர் மாதத்தில் இருந்த 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 என்ற வாக்காளர் எண்ணிக்கை, வரைவு பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 பேர் மட்டுமே இடம் பெற்றனர்.
அதாவது மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டனர். அதில் இறந்தவர்கள் 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர். முகவரி மாறியவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் ஆகும்.
இந்த வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயரை சேர்க்க படிவம் 6 மற்றும் உறுதிமொழி சான்றிதழ் கொடுத்து பெயர் சேர்த்து கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த பணி அடுத்த மாதம் (ஜனவரி) 18-ந்தேதி வரை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக பெறப்படும் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 அல்லது 19-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7,35,191 பேர் விண்ணப்பித்துள்ளனர். வேட்பாளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க 9505 பேர் விண்ணப்பத்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளனர்.
- அணிவகுப்பில் இரண்டு பாக்ட்ரியன் ஒட்டகங்கள், நான்கு ஜான்ஸ்கர் குதிரைகள், நான்கு வேட்டையாடும் பறவைகள், பத்து இந்திய இன ராணுவ நாய்கள் கலந்துகொள்ளும்
- மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடைபெறும்.
மத்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் சுதந்திர குடியரசு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, மத்திய ஆயுதப் படைகள், மாநில படைகள், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் உள்ளிட்ட அணிவகுப்புகள் நடைபெறும்.
இந்த நிலையில், வருகின்ற ஜன. 26 ஆம் தேதி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில், இந்திய ராணுவத்தின் மறுசீரமைப்பு மற்றும் கால்நடைப் படைப் பிரிவைச் சேர்ந்த குதிரைகள், ஒட்டகங்கள், பறவைகள், மோப்ப நாய்கள் கலந்துகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணிவகுப்பில் இரண்டு பாக்ட்ரியன் ஒட்டகங்கள், நான்கு ஜான்ஸ்கர் குதிரைகள், நான்கு வேட்டையாடும் பறவைகள், பத்து இந்திய இன ராணுவ நாய்கள், அத்துடன் ஏற்கனவே சேவையில் உள்ள ஆறு வழக்கமான ராணுவ நாய்களும் இடம்பெறும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
தற்போது தில்லி செங்கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரும் குடியரசு நாள் ஒத்திகை நிகழ்வில் இந்த விலங்குகளும், பறவைகளும் கலந்துகொண்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
- அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட கடந்த 15-ந்தேதி முதல் விருப்பமனு விநியோகம்.
- இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் சுமார் 9,500 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தேர்தல் கூட்டணி ஜனவரி மாதத்தில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அதிமுக விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று 31-ந்தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி விருப்ப மனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. மொத்தம் சுமார் 9,500 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்க்காணல் விரைவில் தொடங்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- எப்போது வெறுப்புணர்வு இயல்பான ஒன்றாக மாற்றப்படுகிறதோ, அரசியல் லாபத்திற்காக ஒருவரின் அடையாளம் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அப்போது வன்முறை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது
- தமிழ்நாட்டினால் இந்த ஒழுக்க மற்றும் நிர்வாக வீழ்ச்சியை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது
தமிழ்நாட்டில் வடமாநில இளைஞர்கள் மீது தொடரும் தாக்குதல் சம்பவங்களுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளியான சுராஜ், கோயம்புத்தூரில் வாகனம் மோதியதை தட்டிக் கேட்டதற்காக நேற்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பணியாற்றி வரும் ஒடிசாவைச் சேர்ந்த மோனிஷ் சேரன் மற்றும் சுஷாந்த கோஹோரி ஆகிய இரண்டு புலம் பெயர் தொழிலாளர்கள், நேற்று இரவு கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
சமீப நாட்களாக, தொடரும் இதுபோன்ற சம்பவங்கள் திமுக-வின் பிரித்தாளும் அரசியலால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளைத் திரும்பத் திரும்ப வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. எப்போது வெறுப்புணர்வு இயல்பான ஒன்றாக மாற்றப்படுகிறதோ, அரசியல் லாபத்திற்காக ஒருவரின் அடையாளம் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அப்போது வன்முறை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது."
தமிழ்நாட்டினால் இந்த ஒழுக்க மற்றும் நிர்வாக வீழ்ச்சியை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- நேற்றுவரை மூன்று பேர் உயிரிழந்தநிலையில், இன்று இறப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பகீரத்புராவில், கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 25 அன்று இந்தூர் நகராட்சி மூலம் விநியோகிக்கப்பட்ட தண்ணீரின் சுவை வித்தியாசமாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பகீரத்புரா குடியிருப்பாளர்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்றுவரை மூன்று பேர் உயிரிழந்தநிலையில், இன்று இறப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
மூன்றுபேர் உயிரிழந்ததை அடுத்து நேற்று நள்ளிரவில் முதலமைச்சர் மோகன் யாதவ் நகராட்சி மற்றும் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்தார். இதன்படி, மண்டல அதிகாரி சாலிகிராம் சித்தோலே மற்றும் உதவிப் பொறியாளர் யோகேஷ் ஜோஷி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பொதுச் சுகாதாரப் பொறியியல் துறை கண்காணிப்புப் பொறியாளர் சுபம் ஸ்ரீவஸ்தவாவும் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இது ஒரு சோகமான நிகழ்வு எனக்குறிப்பிட்டுள்ள அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார். சிகிச்சையில் இருப்பவர்களின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்கும் எனவும் தெரிவித்தார். இதனிடையே இச்சம்பவத்திற்கு அம்மாநில காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள், திரைப்படத் துறையினர், ஊடகங்கள், ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் இதன் மூலம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால்,
ஷியாம் ஜாக் (Shiyam Jack) என்பவருக்கு ரவி மோகன், ரவி மோகன் ஸ்டூடியோஸ், ரவி மோகன் ஃபவுண்டேஷன் அல்லது ரவி மோகன் ரசிகர் மன்றம் ஆகியவற்றுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவிதமான தொடர்பும் இல்லை.
ஷியாம் ஜாக் இத்தகைய தொடர்பு இருப்பதாக கூறுவது அல்லது தெரிவிப்பது முற்றிலும் தவறானதும் அனுமதியற்றதும் ஆகும்.
மேலே குறிப்பிடப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் அல்லது செயல்பாடுகள் தொடர்பாக ஷியாம் ஜாக்கை தொடர்பு கொள்ளுதல், அவருடன் எந்தவிதமான உடன்பாடு, ஒத்துழைப்பு அல்லது பரிவர்த்தனைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றை பொதுமக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வகையான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படின், அதற்கான முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட நபரையே சாரும். பெயர், புகழ் மற்றும் நற்பெயரை தவறாக பயன்படுத்துவதையும், தவறான புரிதல்களையும் தவிர்க்கும் பொருட்டு இவ்வறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு ரவி மோகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர்,
- திருவாரூர், நாகை, கோவை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. சூரியன் காலை 7 மணிக்குப் பிறகுதான் தெரிகிறது. இவ்வாறு இருக்கும் நேரத்தில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் மற்றும் சில மாவட்டங்களில் இன்று மழை பெய்வதற்கான அறிகுறியுடன் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கோவையின் காட் (ghat) பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இரவு 7 மணி வரை ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.
- திமுகவின் 55 மாத ஆட்சிக்காலத்தில் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை.
- இளைஞர்களை சீரழித்த வேதனையான சாதனையை திமுக அரசு செய்திருக்கிறது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் வடமாநில இளைஞரை 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதட்டமும் விலகுவதற்கு முன்பாகவே, அதே தொடர்வண்டி நிலையத்தில் ஜமால் என்ற புடவை வணிகர் போதையில் இருந்த 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். ஒரே தொடர்வண்டி நிலையத்தால் அடுத்தடுத்து போதைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதும், அத்தாக்குதல்களைத் தடுப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.
தொடர்வண்டி நிலையத்தில் தான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று கூறி திமுக அரசு பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. தாக்குதல் எங்கு நடத்தப்பட்டது என்பது இங்கு சிக்கல் அல்ல. தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது தான் இங்கு பிரச்சினையே. சில நாள்களுக்கு முன் கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட வடமாநில இளைஞரும், இப்போது தாக்கப்பட்டுள்ள புடவை வணிகர் ஜமாலும் அப்பாவிகள். அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்கள் எந்தத் தூண்டுதலிலும் ஈடுபடவில்லை. மாறாக கஞ்சா போதையில் இருந்தவர்கள் தான் அவர்களைத் தாக்கியுள்ளனர்.
திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் நடந்த இரு தாக்குதல்களுக்கும் காரணம் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் கட்டுப்படுத்தப்படாத புழக்கம் தான். அதனால் தான் இத்தகையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அடியோடு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக இமாலயப் பொய் ஒன்றை சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதற்கு அடுத்த நாளே இந்த நிகழ்வு நடந்திருப்பதன் மூலம் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் எங்கும் நிறைந்திருப்பது உறுதியாகியிருக்கிறது.
திமுகவின் 55 மாத ஆட்சிக்காலத்தில் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை; தரமான கல்வி வழங்கவில்லை; அரசு பள்ளிகளையும், கல்லூரிகளையும் வலுப்படுத்தவில்லை; தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றவில்லை. ஆனால், தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, மது உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களை வெள்ளமாக பாயவிட்டு இளைஞர்களை சீரழித்த வேதனையான சாதனையை மட்டுமே திமுக அரசு செய்திருக்கிறது.
தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திமுக அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதிலும், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதிலும் படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை. இளைஞர்களை சீரழித்த, தோல்வியடைந்த திமுக தமிழகத்தை தொடர்ந்து ஆளும் தகுதியை இழந்து விட்டது. இதை அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உறுதி செய்வார்கள்.
- தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 குறைந்தது.
- இன்று மாலை மேலும் 560 ரூபாய் சவரனுக்கு குறைந்தது.
தங்கம், வெள்ளி விலை கடந்த ஒரு மாதமாக 'கிடுகிடு'வென உயர்ந்து வந்தது. தினமும் புதிய உச்சத்தை கடந்த வண்ணமே விலை பயணம் ஆனது. தங்கத்தை பொறுத்தவரையில், கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கு விற்பனை ஆனது புதிய உச்சமாக பார்க்கப்பட்டது.
கொஞ்சமாவது விலை குறையாதா? என பார்த்து கொண்டிருந்த நேரத்தில் நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிந்து இல்லத்தரசிகள், மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.420-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 800-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று காலையும் குறைந்தது சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று மாலை மீண்டும் தங்கம் விலை குறைந்தது. ஒரு சவரனுக்கு ரூ. 560 குறைந்தது. இதனால் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 960 ரூபாய் குறைந்தது, தற்போது ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
30-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800
29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160
28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
27-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120
- 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது.
- இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் உதவியை இலங்கை கிரிக்கெட் வாரியம் நாடியுள்ளது. அவரை குறுகிய கால அடிப்படையில் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக நியமித்துள்ளது.
2014-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை இலங்கை அணி மலிங்கா தலைமையில் வென்றது நினைவு கூரத்தக்கது.
- காவல்துறை முற்றுகைக்கு நடுவில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி செவிலியர்கள் முழக்கமிட்டனர்.
- முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் கடந்த 24-ந்தேதி மீண்டும் செவிலியர்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியில் சேர்ந்த ஒப்பந்த செவிலியர்கள், நீண்ட காலமாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் எம்.ஆர்.பி., செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 18-ந்தேதி சென்னையில் போராட்டம் நடத்தினர்.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டம் ஆறு நாட்களை கடந்த நிலையிலும் தங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிமெடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் எண்ணிக்கையைவிட, அங்கிருக்கும் காவலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
இந்த காவல்துறை முற்றுகைக்கு நடுவில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி செவிலியர்கள் முழக்கமிட்டனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.கே. சுஜாதா கூறுகையில், மாநிலம் முழுவதும் தொகுப்பூதியத்தை பெற்றுக்கொண்டு தற்காலிகப் பணியில் இருக்கும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கை என்று கூறினார்.
இந்தப் பிரச்சனையின் பின்னணி சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தமிழ்நாட்டில் 2014-15 காலகட்டத்தில் மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தற்காலிக செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சுமார் இரண்டாண்டு காலம் பணியாற்றிய பிறகு அவர்கள் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனச் சொல்லப்பட்டது.
இதற்குப் பிறகு தொடர்ச்சியாக, தற்காலிக செவிலியர்கள் மருத்துவப் பணியார்கள் தேர்வாணையத்தின் மூலமாகத் தேர்வு செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக, சுமார் 15,300 பேர் இப்படி செவிலியர்களாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சுமார் 7,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்ட நிலையில், சுமார் 8,300 பேர் தற்காலிக செவிலியர்களாகவே பணியாற்றி வருகின்றனர். இவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்களது பிரதான கோரிக்கை.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டது.
தி.மு.க.வின் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 356-இல் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், "இப்போது ஆட்சியே முடிவடையும் தருவாய் நெருங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையிலேனும், 2021-ல் அவர்கள் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கூறினார்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அருகில் கடந்த 18-ந்தேதி பட்டினிப் போராட்டத்தை நடத்த செவிலியர் சங்கம் முடிவு செய்தது. அந்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 3,000 பேர் பங்கேற்றனர்.
அன்று பிற்பகலில் மருத்துவத் துறை செயலருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், போராட்டத்தைத் தொடர்வதாக செவிலியர் சங்கம் அறிவித்தது.
அன்று இரவில் சேப்பாக்கம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் அனைவரும் காவல் துறையால் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.
அடுத்த நாள் அமைச்சர் தரப்பிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடர்ந்தது.
முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் கடந்த 24-ந்தேதி மீண்டும் செவிலியர்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் செவிலியர்களை நிரந்தரப் பணியிடங்களில் நியமிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு, புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சுமார் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் விரைவில் நிரந்தரப் பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அரசின் இந்த முடிவை ஏற்று, ஒப்பந்த செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாகவும் அமைச்சர் அறிக்கையின் மூலம் அறிவித்தார்.
- இந்தியாவில் டிசம்பர் 31 மதியம் 3:30 மணியாக இருக்கும்போது, கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிடும்.
- கிரிபாட்டியின் மற்ற பகுதிகளும் அடுத்த சில மணிநேரங்களில் புத்தாண்டைக் கொண்டாட தொடங்கிவிடும்.
உலகில் முதல் நாடாக கிரிபாட்டி தீவு புத்தாண்டை கொண்டாட தொடங்கியது. இந்திய நேரப்படி, கிரிட்டிமாட்டியில் புத்தாண்டு சுமார் 8.5 மணிநேரம் முன்னதாகவே பிறக்கிறது. அதாவது இந்தியாவில் டிசம்பர் 31 மதியம் 3:30 மணியாக இருக்கும்போது, கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிடும்.
அந்தவகையில் தற்போது கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படும் கிரிபாட்டி 2026-ஆம் ஆண்டை வரவேற்று, உலகின் முதல் நாடாக புத்தாண்டு கொண்டாட தொடங்கியது. கிரிபாட்டி தீவைத் தொடர்ந்து நியூசிலாந்தின் சத்தாம் தீவில் (GMT +13:45) வசிக்கும் 600-க்கும் மேற்பட்ட மக்கள் 2026 ஐ வரவேற்று கொண்டாட தொடங்கிவிட்டனர்.
உலக நாடுகள் ஒவ்வொன்றும் சூரிய உதயத்தை அடிப்படையாக கொண்டும் இயங்குவதால் நாட்டுக்கு நாடு கொண்டாட்ட நேரம் வேறுபடுகிறது. பசிபிக் நாடான கிரிபாட்டியின் மற்ற பகுதிகளும் அடுத்த சில மணிநேரங்களில் புத்தாண்டைக் கொண்டாட தொடங்கிவிடும்.






