என் மலர்
இந்தியா

வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி பொய் தகவல்களை பரப்புகிறார்: அமித் ஷா குற்றச்சாட்டு
- வர்த்தக ஒப்பந்தத்தை விவசாயிகளுக்கு எதிரான துரோகமாக பார்க்கிறோம்- ராகுல் காந்தி
- பால்வளத் துறையை பலவீனப்படுத்தாமல், விரிவுபடுத்தியவர்கள் நாங்கள்தான்- அமித் ஷா
இந்தியா சமீபத்தில் ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலமாக இந்தியாவில் உள்ள விவசாயிகள், விவசாயம் பாதிக்கப்படும் என ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை விவசாயிகளுக்கு எதிரான துரோகமாக பார்க்கிறோம் என்று எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி பொய் பரப்புகிறார். விவசாயிகள் முழுமையாக பாதுகாக்கப்படுகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-
விவசாயிகள் பாதுகாப்பு பற்றி பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி எடுத்த நிலையை பார்க்கும்போது எனக்கு சிரிக்கத்தான் தோன்றுகிறது. நாட்டை தவறாக வழி நடத்தியதற்கான நீண்ட கால வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. தற்போது அவர்கள் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பொய் பரப்பி வருகிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் கையெழுத்தான ஒவ்வொரு வர்த்தக ஒப்பந்தத்திலும், பிரதமர் மோடி உங்கள் நலன்களை முழுமையாகப் பாதுகாத்துள்ளார் என்பதை இந்த நாட்டின் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீனவர்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். கவலைப்படத் தேவையில்லை.
பால்வளத் துறையை பலவீனப்படுத்தாமல், விரிவுபடுத்தியவர்கள் நாங்கள்தான். அனைத்து ஒப்பந்தங்களிலும், பால்வளத் துறைக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி ஜி, எந்த மேடையை வேண்டுமானாலும் முடிவு செய்யுங்கள். பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவர் கூட வந்து விவசாயிகளுக்கு யார் தீங்கு செய்தார்கள், அவர்களின் நலனுக்காக யார் பாடுபட்டார்கள் என்பது குறித்து உங்களுடன் விவாதிக்க முடியும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.






