search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கார் வேக வரம்பை விட வேகமாக பயணம் செய்துள்ளது.
    • விபத்தில் உயிர் பிழைத்த ஒரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

    அமெரிக்காவில் கார் ஒன்று மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் குஜராத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

    குஜராத்தின் அனந்த் மாவட்டத்தை சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள கிரீன்வில்லி மாகாணத்தில் உள்ள காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், " வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 20 அடி உயரத்தில் பறந்து பாலத்தின் எதிர்புறத்தில் உள்ள மரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    கார் வேக வரம்பை விட வேகமாக பயணம் செய்துள்ளது. மரத்தில் மோதிய வேகத்தில் கார் சுக்குநூறாக நொருங்கியது.

    3 இந்தியப் பெண்கள் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிர் பிழைத்த ஒரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.
    • 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடப்பு (2023-24) கல்வி ஆண் டில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் சுயநிதி பள்ளி, ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளி மற்றும் சிறப்பு பள்ளிகளில் 6, 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.

    அதன்படி, 6, 7-ம் வகுப்பு களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையின்படி ஒருங்கிணைந்த பதிவேட்டில் 3-ம் பருவ தேர்வுக்குரிய மதிப் பெண்கள், கிரேடுகளை பதிவு செய்ய வேண்டும். 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.

    மாணவர்களின் இடை நிற்றலை தவிர்க்கவும், கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாமலும் ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் 9-ம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும்.

    அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார்
    • இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.

    2016 ஆம் ஆண்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ஷிரிஷ், பாபி சிம்ஹா , சென்ராயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெட்ரோ. சென்னையில் நடக்கும் செயின் ஸ்னாட்சிங் பற்றியும், இளைஞர்கள் எப்படி இந்த தொழிலுக்கு வருகிறார்கள் எதற்காக இப்படி செய்கின்றனர் என்று பேசிய திரைப்படம், படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அதைத்தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். . படத்தை சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.

    'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

    இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர். இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.

    இந்த' ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படம் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.
    • தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் 54.7 மி.மீ மழை பதிவாக வேண்டும்.

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.

    வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இன்று முதல் 1ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்தாண்டு கோடைகால பருவமழை தற்போது வரை இயல்பைவிட 83 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.

    தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் 54.7 மி.மீ மழை பதிவாக வேண்டும்.

    தற்போது வரை 9.5 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

    இதுவரை 16 மாவட்டங்களில் ஒரு சொட்டு கோடை மழை கூட பதிவாகவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தமிழகம் முழுவதுமே வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சுமார் ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அடிக்கடி வெப்ப அலையும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதற்கு ஏற்பவே வெயிலின் உக்கிரமும் தினமும் அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதமே வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. ஈரோடு, திருப்பத்தூர், சேலம் உள்பட சுமார் 12 மாவட்டங்களில் கடந்த மாதமே வெயில் 100 டிகிரியை தாண்டியது. கடந்த 22-ந்தேதி ஈரோடு மாவட்டத்தில் இந்தியாவிலேயே 3-வது அதிக அளவில் வெயில் பதிவாகியுள்ளது. அன்று ஈரோட்டில் 109.4 டிகிரி வெயில் கொளுத்தியது.

    நேற்று ஈரோடு, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கரூர், திருத்தணி, வேலூர், திருச்சி, நாமக்கல், கோவை, மதுரை, தஞ்சாவூர், பாளையங்கோட்டை ஆகிய 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. ஈரோட்டில் அதிகபட்சமாக 107.6 டிகிரி வெயில் பதிவானது. திருப்பத்தூர், சேலத்தில் 106 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. ஈரோட்டை பொறுத்தவரை தொடர்ந்து 6-வது நாளாக 108 டிகிரியை நெருங்கி வெயில் பதிவாகி வருகிறது.

    சென்னையில் வெயில் 100 டிகிரியை நெருங்கி பதிவாகி வருகிறது. இதனால் சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகம் முழுவதுமே வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் வெளியே செல்ல முடிவதில்லை. இரவிலும் காற்று இல்லாததால் புழுக்கத்தின் காரணமாக பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் மின் விசிறியில் இருந்து வெளியே வரும் காற்று அனலை கக்குவதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். சென்னை உள்பட தமிழகம் முழுவதுமே வெப்பம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும். மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவிலும் கடுமையான வெப்ப அலை தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்காளத்தில் வெப்ப அலைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    வருகிற 30 மற்றும் 1-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி வரை படிப்படியாக உயரக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 102 டிகிரி முதல் 107 டிகிரி வரை பதிவாகும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 95 டிகிரி முதல் 102 டிகிரிவரை பதிவாகும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 முதல் 99 டிகிரியை ஒட்டி இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்கள் வெப்ப அலை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கடுமையான வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் வருகிற 30-ந்தேதி கடுமையான வெப்ப அலை வீசும். அன்று வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வெப்ப அலை வீசும் என்பதால் அன்று நண்பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வெப்ப அலை வீசும் நேரங்களில் அசவுகரியமான சூழல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • .இப்படம் வரும் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

    சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் பல வெற்றி படங்களை தயாரித்தும் வருகிறார்.

    சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைதொடர்ந்து 'குரங்கு பெடல்' படத்தை அடுத்து எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சைக்கிள் ஓட்ட தெரியாத அப்பாவுக்கும் எப்படியாவது சைக்கிள் ஓட்டியே ஆகவேண்டும் என்று துடிக்கும் மகனுக்கும் இடையே ஆன போராட்டத்தை மிகவும்  நகைச்சுவையான கதைக்களத்துடன் உருவாக்கியுள்ளனர்  . கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் வரும் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் படத்தின் பாடலான கொண்டாட்டம் பாடலின் வீடியோவை யுடியூபில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும்.
    • குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கோடை காலமானது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதிகரிப்பு.

     வெப்ப அலை பிரச்சனை குறித்து 2 நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். விரிவான அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டேன். அடுத்து குடிநீர் தேவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும், மாநிலத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்கக்கூடிய தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் குறைந்த அளவு மழை பெய்தது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறைச்சூழல் குறித்து, தலைமைச் செயலாளரும், பிற துறைச் செயலாளர்களும் விளக்கினார்கள்.

     இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

    இதனை கருத்தில் கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

    தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

    குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும்போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று ஆணையர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

    இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மின்வாரியத்தின் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.

    ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களை இப்பணிகளில் முழுமையாக ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும் இயக்குனரும் ஈடுபடுத்திட வேண்டும்.

    நமது மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிந்தும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்க கூடிய நிலையில், இந்தப் முக்கியப் பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்பட்டு விடாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் கண்காணித்து வருமாறு தலைமைச் செயலாளரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

     

    மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் தொடர்ந்து நேரில் சென்று குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு செய்து, பற்றாக்குறை உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை பற்றி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.

    நமது மாநிலம் இத்தகைய குடிநீர் பற்றாக்குறைச் சூழலை சந்திப்பதால், அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பற்றாக்குறையால் நமது மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ. பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி. வினய், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிருவாக இயக்குநர் எஸ். சிவராசு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளை கடத்தி சென்று பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.
    • குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் இல்லை.

    அயோத்தி:

    பீகாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர். குழந்தைகளை கடத்தி சென்று பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அயோத்தி குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி கூறியதாவது:

    அயோத்தியில் நாங்கள் குழந்தைகளை மீட்டோம். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகள் 4-12 வயதுக்குட்பட்டவர்கள்.

    குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் இல்லை. பெற்றோரை தொடர்பு கொண்டு குழந்தைகள் ஒப்படைக்கப்படும். பெற்றோரின் ஒப்புதலின்றி 95 குழந்தைகள் எதற்காக பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    உத்தரப்பிரதேச குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் சுசித்ரா சதுர்வேதியிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், குழந்தைகள் கொண்டு செல்லப்படுவதை அறிந்துகொண்டதாக கூறினார்.

    • சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் 2004 முதல் 2019 தேர்தல் வரை வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். இந்த முறை அவர் போட்டியிடவில்லை.
    • அமேதி, ரேபரேலி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரிஷிகேஷ்:

    பாராளுமன்றத்துக்கு நடைபெற உள்ள 7 கட்ட தேர்தலில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

    உத்தரபிதேச மாநிலம் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. இங்கு 5-வது கட்டமாக மே 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளும் காங்கிரஸ் மேலிடத்தின் பாரம்பரிய தொகுதியாகும்.

    கடந்த முறை ராகுல்காந்தி அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் அவர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.

    இந்த தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு உள்ளார். இதற்கான ஓட்டுப்பதிவு நேற்று முடிவடைந்து விட்டது. அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவாரா? என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. அவர் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் 2004 முதல் 2019 தேர்தல் வரை வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். இந்த முறை அவர் போட்டியிடவில்லை. மேல்சபை எம்.பி.யாக சோனியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ரேபரேலியில் பிரியங்கா போட்டியிடலாம் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அமேதி, ரேபரேலி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் நான் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என நாடே விரும்புகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் இருந்தும் எனக்காக குரல் எழுகிறது. நான் தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். நான் 1999 முதல் அமேதி தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறேன். அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் (பா.ஜனதா) மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். பா.ஜனதாவை அகற்ற மக்கள் நினைக்கிறார்கள். ராகுல் மற்றும் பிரியங்காவின் கடின உழைப்பை பார்த்து நாட்டு மக்கள் காந்தி குடும்பத்துடன் இருக்கிறார்கள்.

    இவ்வாறு ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.

    இந்த மாதம் தொடக்கத்திலும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதை மறைமுகமாக தெரிவித்து இருந்தார். தற்போதும் அவர் அதே மனநிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அமேதி தொகுதியில் ராபர்ட் வதேராவுக்கு 'சீட்' கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • சந்தேஷ்காலியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிபிஐ வேண்டுமென்றே சோதனை.

    தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சிபிஐ சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

    இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்களவைத் தேர்தலின் போது அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் (AITC) நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தேர்தல் நாளன்று, மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்காலியில் உள்ள வெற்று இடத்தில், சிபிஐ நேர்மையற்ற சோதனையை நடத்தியுள்ளது.

    பலமுறை பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட போதிலும், மத்திய புலனாய்வு அமைப்புகள் நாடு முழுவதும், குறிப்பாக தேர்தல் காலத்தில் சோதனை மேற்கொண்டு வருகிறது. அவற்தை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் உள்ளது.

    2ம் கட்ட வாக்குப்பதிவான நேற்று, குறிப்பாக மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங், ராய்கஞ்ச் ஆகிய மூன்று பாராளுமன்றத் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிக்கத் திரண்டிருந்தனர்.

    தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, சந்தேஷ்காலியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிபிஐ வேண்டுமென்றே கண்ணியமற்ற சோதனையை நடத்தியது.

    தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) வெடிகுண்டு படை உள்ளிட்ட கூடுதல் படைகளை சிபிஐ வரவழைத்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சோதனையின் போது வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது சம்பந்தமாக, "சட்டம் ஒழுங்கு" என்பது முற்றிலும் மாநில அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்றாலும், சிபிஐ அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன் மாநில அரசு மற்றும்/அல்லது காவல்துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆனால் வெளியிடவில்லை.

    மேலும், மாநில காவல்துறையில் முழுமையாக செயல்படும் வெடிகுண்டு செயலிழக்கும் குழு உள்ளது. இது போன்ற சோதனையின் போது வெடிகுண்டு படை தேவை என்று சிபிஐ கூறியிருந்தால், முழு நடவடிக்கைக்கும் உதவியிருக்க முடியும்.

    இருப்பினும், அத்தகைய உதவி எதுவும் கோரப்படவில்லை.

    அரசு நிர்வாகம் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே இதுபோன்ற சோதனையின்போது ஊடகவியலாளர்கள் உடனிருந்தனர் என்பது மேலும் ஆச்சரியமாக உள்ளது.

    இந்த நேரத்தில், சோதனையின் போது ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக ஏற்கனவே நாடு முழுவதும் செய்தியாக இருந்தது. இந்த ஆயுதங்கள் உண்மையில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையின் போது மீட்கப்பட்டதா அல்லது சிபிஐ/என்எஸ்ஜியால் ரகசியமாக புதைக்கப்பட்டதா என்பதை உறுதியாக அறிய வழி இல்லை.

    மேற்குறிப்பிட்ட சம்பவங்களின் முழு வரம்பும், சிபிஐ வேண்டுமென்றே ஊடகங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்ததைக் குறிக்கிறது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதன் வேட்பாளர்களுக்கு எதிராக நாடு முழுவதும் அவமதிப்பு உள்ளது.

    அதனால், தேர்தல் காலத்தில் சிபிஐ உட்பட எந்த ஒரு மத்திய புலனாய்வு நிறுவனத்தாலும் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் செயல்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத வகையில் உடனடி வழிகாட்டுதல்கள்/கட்டமைப்பை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • 2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.
    • ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும்.

    புதுடெல்லி :

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மோடி சர்கார் போய்விட்டது. சில நாட்களாக பிஜேபி சர்கார் தான். அதுவும் நேற்றிலிருந்து என்.டி.ஏ., சர்கார்.

    ஏப்ரல் 19 முதல் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றத்தை கவனித்தீர்களா?

    ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 19 வரை காங்கிரசின் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடியால் புறக்கணிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் அறிக்கை புதிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

    நன்றி, பிரதமரே! எனக்கூறியுள்ளார்.

    மற்றொரு பதிவில்,

    நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள் காங்கிரசுக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது.

    2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.

    கர்நாடகாவில் நேற்று தேர்தல் நடந்த 14 தொகுதிகளில், 2019ல் காங்கிரஸ் தனது 1 மதிப்பெண்ணில் இருந்து பெரும் முன்னேற்றம் அடையும்.

    ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும் என பதிவிட்டுள்ளார்.

    • படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது.
    • அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர்.

    நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த அப்டேட்டில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    சமீபத்தில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×