

வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் நேர்காணல் என பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி என அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து தேர்தல் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் இத்தேர்தலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் என கருதப்பட்டதால் அக்கட்சி மீதே பலரது கவனமும் இருந்தது. தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டத்தில் இருந்தே பல்வேறு யூகங்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அக்கட்சி தலைவர் விஜய் மீதான ஈர்ப்பால் வாக்குகள் சிதறும் என்பதால் அவரை கூட்டணியில் சேர்க்க பல கட்ட முயற்சிகள் நடைபெற்றது.
விஜய் கட்சி தொடங்கி நடைபெற்ற முதல் மாநாட்டில் ஆட்சியில் பங்கு என தெரிவித்த பிறகு அவருடன் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்பட்டது. பிறகு அ.தி.மு.க. வுடன் கூட்டணி, ராமதாசுடன் கூட்டணி என பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்தன.
இதனிடையே விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது மற்றும் கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை என மத்திய அரசு அவருக்கு அழுத்தம் தந்து கூட்டணிக்கு வற்புறுத்துவதாகவும் சொல்லப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக டெல்லிக்கு சென்ற விஜய் பா.ஜ.க. தலைவர்கள் சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக தமிழக கட்சிகள் விஜய், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தால் அவருக்கு தான் பேராபத்து என்று கருத்து கூறி வந்தனர்.
மேலும், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்ட போது பலரும் கூட்டணி வைப்பதே சரியான முடிவு என்று தெரிவிக்கப்பட்டதாகவும், வேட்பாளர்கள் நேர்காணலிலும் இதையே வற்புறுத்தப்பட்டதாகவும் மேலும் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு மட்டுமே விஜய் நேர்காணல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் விஜய் அ.தி.மு.க.வுடான கூட்டணிக்கு தயாராகி விட்டாரோ என்ற எண்ணம் பலருக்குள்ளும் உருவானது. இதற்கிடையே த.வெ.க. கூட்டணி தொடர்பான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று நிர்வாகிகள் கூறினர்.
இந்த நிலையில், நேற்று மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், சட்டசபை தேர்தலில் நாம் தனித்தே போட்டியிடப் போகிறோம். தொகுதிகளுக்கு சென்று களப்பணியாற்றுங்கள். வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். தமிழகம் முழுவதும் நானும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். நம்பிக்கையோடு இருங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் தமிழக வெற்றிக்கழகம் தனித்தே போட்டியிடுவதாக கூறப்படுவதால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் களம் இறங்கி உள்ளனர். ஆகையால் பனையூரில் உள்ள தலைமை அலுவலகம் பரபரப்பாக காணப்படுகிறது.
த.வெ.க. தனித்தே போட்டியிடுவதால் பெரம்பூர் தொகுதியில் விஜய், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜூனா, தி.நகர் தொகுதியில் புஸ்சி ஆனந்த் போட்டியிடுவார்கள் என்றும் ஏனைய தொகுதிகளில் கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மொத்தத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி என்பது உறுதியாகியுள்ளதால் இனி தேர்தல் தொடர்பாக நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளுமே புதுமையாகவே இருக்கும். தேர்தல் முடிவுகளிலும் 50 ஆண்டுகாலம் ஆண்ட கட்சிகள் மற்றும் புதுவரவான கட்சிக்கும் இடையேயான வெற்றி, தோல்வி என்பது குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே இருக்கும் என்பதால் இத்தேர்தல் மறக்கமுடியாதவையாக அமையும் என்பது மறுப்பதற்கில்லை.
விஜய் சொல்வது போல் 1967, 1977 பிறகு 2026 தேர்தல் வரலாற்றை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...