என் மலர்
நீங்கள் தேடியது "Ramdoss"
- மறைமுகமாக பணம் கொடுக்கவும், செய்த ஊழலில் உங்களையும் உட்படுத்தவும் முயற்சிக்கின்றனர்.
- எனவே இதுவே சரியான தருணம். மயக்கத்திலிருந்து தெளிந்து வாருங்கள். நாம் ஒருங்கிணைந்து போராடுவோம்.
பா.ம.க. தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…?
நான் பொது வாழ்விற்கு வந்தபோது கிராமத்திற்கு 25 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன் என்று அன்றே சொன்னேன். ஆனால் மக்களின் வாழ்கைத் தரம் உயரவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவ சமூகம் உருவாக்க சமூக நீதி பற்றிய தெளிவில்லாத ஆட்சியாளர்கள் போதைக்கும், இலவசத்திற்கும் மக்களை அடிமைப்படுத்திவிட்டனர்.
தமிழகத்தில் தற்போது நாள்தோறும் பல்வேறு துறையினர் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அதனைக் காதுகொடுத்து கேட்கக்கூட நாதியில்லை. ஆனால் வாக்குக்கு இப்போதே மறைமுகமாக பணம் கொடுக்கவும், செய்த ஊழலில் உங்களையும் உட்படுத்தவும் முயற்சிக்கின்றனர். எனவே இதுவே சரியான தருணம். மயக்கத்திலிருந்து தெளிந்து வாருங்கள். நாம் ஒருங்கிணைந்து போராடுவோம். கடந்த காலங்களில் நாம் போராடித்தான் உரிமைகளைப் பெற்றோம். இங்கு போராடாமல் எதுவும் கிடைக்காது.
வரும் தேர்தலில் அரசியல் அதிகாரம் பெற்று சாதிவாரிக் கணக்கெடுத்து அனைத்து சாதியினருக்கும் விகிதாச்சார இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் கிடைக்க ஆவன செய்வோம். மனித வளத்தை மேம்படுத்த, சமூக ஒற்றுமையை வளர்க்க, ஊழலையும், துரோகத்தையும் துடைத்தெரிய சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்.
நம்மை நாமே தூற்றிக்கொள்வது நம்மை மயக்கம் தெளியாமல் பார்த்துக்கொள்வோருக்கு ஆதாயம் கிடைக்க வழிவகுக்கும். புரிந்துகொண்டு என்னுடன் தொடர்ந்து பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து உங்களோடு பேசுவேன்.
இவ்வாறு பா.ம.க. தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- பணியிடங்களை நிரப்பாமல் காலியாகவே வைத்திருப்பது சமூகநீதி பேசும் அரசுக்கு அழகல்ல.
- 10,400 பின்னடைவு பணியிடங்களையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசின் 34 துறைகளில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒடுக்கீடு செய்யப்பட்டு, தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னடைவுப் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இரு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், இன்று வரை அவற்றில் ஒரே ஒரு பணியிடம் கூட நிரப்பப்படாதது கண்டிக்கத்தக்கது.
ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்பாமல் காலியாகவே வைத்திருப்பது சமூகநீதி பேசும் அரசுக்கு அழகல்ல. தமிழக அரசு இனியாவது அதன் சமூகநீதிக் கடமைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையில், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான 10,400 பின்னடைவு பணியிடங்களையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில் தண்ணீரை ஏரிகளுக்கு அனுப்புவதுதான் பயனுள்ளதாக இருக்கும்.
- மொத்தமுள்ள 100 ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என்றால் கூட, 0.555 டி.எம்.சி தண்ணீர்தான் தேவைப்படும்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பாசன ஆதாரமாகத் திகழும் மேட்டூர் அணை இன்று இரவு நிரம்பும் என்று எதிர்பாக்கப்படுகிறது. மொத்தம் 120 அடி நீர்மட்டம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.97 அடியாக உள்ளது. மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டிய பிறகு, உபரி நீரை சேலம் மாவட்ட ஏரிகளுக்கு அனுப்பி அவற்றை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாதது கண்டிக்கத்தக்கது.
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2,875 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், அணை நிரம்பிய பிறகு கூடுதலாக கிடைக்கும் தண்ணீரை ஏரிகளுக்கு அனுப்புவதுதான் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தத் திட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இத்திட்டத்தின்படி மொத்தமுள்ள 100 ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என்றால் கூட, 0.555 டி.எம்.சி தண்ணீர்தான் தேவைப்படும். ஆனால், இந்தத் திட்டம் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்பதால் அவ்வளவு தண்ணீர் கூட தேவைப்படாது. அணைக்கு வினாடிக்கு 2,875 கன அடி தண்ணீர் வரும் நிலையில், அதில் 2,000 கன அடி நீரை 2 நாட்களுக்கு திறந்து விட்டாலே இப்போது இணைக்கப்பட்டுள்ள ஏரிகள் நிரம்பி விடும்.
மேட்டூர் அணையின் உபரி நீரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வகையில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 2008-ம் ஆண்டு சேலத்தில் எனது தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 50,000 பேருக்கும் கூடுதலானவர்கள் பங்கேற்றனர்.
பாமக-வின் வலியுறுத்தல் காரணமாகத்தான் இந்தத் திட்டம் ஓரளவாவது செயல்படுத்தப்பட்டது. அதன் பயன்கள் உழவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மேட்டூர் அணையின் உபரி நீர் ஏரிகளுக்கு திறக்கப்பட வேண்டும். எனவே, மேட்டூர் அணை நிரம்பிய உடன் உபரி நீரை ஏரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
உண்மையில் பா.ம.க. வலியுறுத்திய மேட்டூர் உபரி நீர் திட்டம் என்பது சேலம் மாவட்டத்திலுள்ள திருமணிமுத்தாறு, சரபங்கா ஆகிய ஆறுகளை இணைத்து, மேட்டூர் அணையின் உபரி நீரை நீரேற்று நிலையங்கள் மூலம் அந்த ஆறுகளுக்குக் கொண்டுசென்று, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் வரை கொண்டு செல்வது ஆகும்.
இத்திட்டத்தால் நேரடியாக 30 ஆயிரத்து 154 ஏக்கர் நிலங்களும், நிலத்தடி நீர்வளம் மேம்படுவதன் மூலம் 18 ஆயிரத்து 228 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். இத்திட்டத்தில் வசிஷ்ட நதி என அழைக்கப்படும் வட வெள்ளாற்றையும் இணைத்தால் விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகளும் பயனடைவர். இதைக் கருத்தில் கொண்டு மேட்டூர் உபரி நீர் திட்டத்தை விரிவுபடுத்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சர்க்கரை ஆலைகளை நடத்தி வரும் தனியார் நிறுவனம் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இருந்து விவசாயிகளின் பெயர்களில் ரூ.450 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்திருக்கிறது. விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையிலான இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து அவர்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சர்க்கரை ஆலைகள் இனியும் பழைய நிர்வாகத்தில் இயங்குவது சரியல்ல. அது மேலும் மேலும் ஊழல்களும், மோசடிகளும் நடப்பதற்கு மட்டும் தான் வழி வகுக்கும். எனவே அந்த தனியார் நிறுவனத்தின் அனைத்து சர்க்கரை ஆலைகளையும் அரசுடைமையாக்கி தமிழக அரசே நடத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி, விவசாயிகள் பெயரில் பெறப்பட்ட அனைத்து கடன்களையும் ஆலை உரிமையாளரின் பெயருக்கு மாற்றி, அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கடன் வசூல் என்ற பெயரில் விவசாயிகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும். இந்த மோசடியில் வங்கிகளின் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.









