அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்த தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

நாடு முழுவதும் மொத்தம் 474 அரசியல் கட்சிகளின் பதிவுகளை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது.இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சமத்துவ மக்கள் கழகம் உள்பட பல அரசியல் கட்சிகள் வழக்குகள் தொடர்ந்தன.
அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்த தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
Published on

சென்னை:

கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட்டு செலவுக்கணக்கை தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்து இந்திய தேர்தல் கமிஷன் உத்தர விட்டது. அதாவது தமிழ்நாட்டில் 42 கட்சிகள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 474 அரசியல் கட்சிகளின் பதிவுகளை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி. மனித நேய மக்கள் கட்சி. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மனிதநேய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி. சமத்துவ மக்கள் கழகம் உள்பட பல அரசியல் கட்சிகள் வழக்குகள் தொடர்ந்தன.

அதில், கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்த தேர்தல் கமிஷன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. அப்போது. அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் கமிஷனின் இந்த முடிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. நடந்து முடிந்த தேர்தல்களில் மனுதாரர் கட்சிகள் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது. கட்சிகளின் அங்கீகாரத்தை வேண்டுமானால் தேர்தல் கமிஷன் ரத்து செய்ய முடியுமே தவிர பதிவை ரத்து செய்ய முடியாது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தேர்தல் கமிஷன் சார்பில், "தொடர்ந்து 6 ஆண்டுகள் போட்டியிடாத அரசியல் கட்சிகள், தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படி இவ்வாறு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது" என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "உள்ளாட்சி தேர்தல் அல்லது சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டதாகவும், கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோம் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், மனுதாரர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் கொடுத்து, விளக்கத்தை பெற்றுத்தான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில், அந்த உத்தரவுக்கு தடை விதித்தால், வருகிற சட்டசபை தேர்தலுக்கு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற அந்தஸ்தை இந்த கட்சிகளுக்கு வழங்கியது போல ஆகிவிடும். எனவே, தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. இடைக்கால தடை கேட்கும் மனுவை நிராகரிக்கிறோம். தேர்தல் கமிஷனின் உத்தரவை எதிர்க்கும் பிரதான வழக்கை, வருகிற மார்ச் 2-வது வாரத்துக்கு விசாரணைக்காக தள்ளிவைக்கிறோம்" என்று உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com