நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஆணவ கொலை- தந்தை தலைமறைவு

மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.மாணவியின் தந்தை செண்டாபாய் தற்போது வரை தலைமறைவாக உள்ளார்.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஆணவ கொலை- தந்தை தலைமறைவு
Published on

காந்திநகர்:

குஜராத் மாநிலம் பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது தராட் போலீஸ் நலையம். இங்கு கடந்த 6-ந்தேதி ஹரேஷ் சவுதாரி என்பவர் ஒரு புகார் அளித்தார். அதில், 'தன்னுடன் பழகி வந்த 18 வயதான பெண், அவரது தந்தை செண்டாபாய் படேல் மற்றும் அவர்களது உறவினர்கள் 2 பேரால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக" புகாரில் கூறி இருந்தார். கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார்.

இதையடுத்து மாணவியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தச் சென்றபோது, மாணவி கடந்த ஜூன்-24-ந்தேதி இறந்துவிட்ட தகவலும், அதை போலீசுக்கு தெரிவிக்காமல் இறுதிச் சடங்கு நடத்திய தகவலும் வெளிவந்தது. மேலும் மாணவியின் தந்தை தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் மாணவியின் மரணம் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன.

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அந்த மாணவி, கடந்த மே மாதத்தில் தேர்வை எழுதி இருந்தார். நீட் தேர்வு முடிவு வெளியானதில் கொலையான மாணவி நல்ல மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார். மருத்துவ படிப்பில் சேர தயாராகி வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே மாணவி, ஹரேசுடன் பழகி, சேர்ந்து வாழ்ந்து வந்தது அவரது பெற்றோருக்கு தெரியவந்ததால், அவர் ஆணவ படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

மாணவி பழகிய ஆண் நண்பரான ஹரேஷ் சவுதாரி ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மாணவி தராட் நகரில் இருந்து பலான்பூருக்கு படிக்க செல்லும்போது, மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி இறக்கிவிடும்போது ஹரேசுடன் பழக்கம் செய்யப்பட்டு உள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியது.

மாணவியிடம் ஹரேஷ் தனக்கு திருமணமான விவரத்தை கூறிவிட்டாரா? என்பது பற்றி இதுவரை தெரியவில்லை என்று போலீசார் கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் கடந்த மே மாதம் ஆமதாபாத் சென்று சேர்ந்து வாழ்வது பற்றி தங்களுக்குள் முடிவு செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் அடிக்கடி ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

ராஜஸ்தானில் அவர்களை ஒரு ஓட்டலில் பார்த்த போலீஸ் குழு, மாணவியை அவரது உறவினர் சிவராம்பாயிடம் ஒப்படைத்து உள்ளனர். மாணவியின் உறவினர்கள், அதன்பிறகு மாணவியை கண்டித்து உள்ளனர். ஹரேஷ் மற்றொரு வழக்கிற்காக கைது செய்து சிறைக்கு அனுப்பப்பட்டார்.

ஜூன் 21-ந்தேதி சிறையில் இருந்து வெளியே வந்த ஹரேஷ், மாணவிக்கு செல்போன் மற்றும் சமூக வலைத்தளத்தில் மெஸேஜ் அனுப்பி உள்ளார். ஆனால் பதில் வரவில்லை. இதையடுத்து மாணவியின் நிலை குறித்து அச்சம் அடைந்த ஹரேஷ், தனது வக்கீல் உதவியுடன் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே மாணவி ஆணவக் கொலை செய்யப்பட்டு, இறுதிச் சடங்கு நடக்கும் செய்தி ஜூன் 25-ந்தேதி அவருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார்.

கொலை நடப்பதற்கு முன்பு, தாண்டியா கிராமத்தில் சிவராம்பாய் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவி ஜூன் 24 அன்று பாலில் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டு பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, சிவராம்பாய் மற்றும் நரன்படேல் ஆகியோரை கைது செய்து உள்ளனர். நரேன் படேல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மாணவியின் தந்தை செண்டாபாய் தற்போது வரை தலைமறைவாக உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com