search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bandh"

    • சிகிச்சைக்காக செல்பவர்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • சென்னைக்கு செல்லும் பஸ்கள் கடலூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க. சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.

    இதன் காரணமாக கடலூரில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் புதுச்சேரிக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    இந்தநிலையில் கடலூரில் வேலைக்கு செல்பவர்கள், சிகிச்சைக்காக செல்பவர்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பெரும்பாலான மக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் பல்வேறு வாகனங்களில் அவசர அவசரமாக சென்றதை காண முடிந்தது. சென்னைக்கு செல்லும் பஸ்கள் கடலூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    • அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.
    • போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் புதுவை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. நேற்றைய தினம் கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சாலைமறியல், சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என 10-க்கும் மேற்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனால் புதுச்சேரியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சம்பத், இந்தியகம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் சிறுமி படுகொலை, புதுச்சேரியில் போதை பொருளை கட்டுப்படுத்தாதது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் இன்று மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் கூறும்போது, மாணவர்களுக்கு தேர்வு நடப்பதால் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அத்தியாவசிய பொருட்கள் தடைபடாத வகையில் இந்த போராட்டம் இருக்கும் என தெரிவித்தார்.

    அ.தி.மு.க. சார்பிலும் நாளை பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. மாநில செயலளார் அன்பழகன் கூறும்போது, புதுச்சேரிக்கே தலை குனிவை ஏற்படுத்தியுள்ள சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து நாளை அ.தி.மு.க. சார்பில் பந்த் போராட்டம் நடத்தப்படும்.

    போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. பந்த் போராட்டத்தால் நாளை புதுச்சேரியில் பஸ்கள் ஓடாது.

    புதுச்சேரியை பொருத்தவரை தனியார் பஸ்களே அதிகம். பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்கமாட்டார்கள். இதோடு டெம்போ, ஆட்டோக்களும் ஓடாது. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்.

    சிறுமி கொலையை கண்டிக்கும் வகையில் வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவும் தெரி வித்துள்ளனர்.

    இதனால் பந்த் போராட்டம் முழுமையாக நடைபெறும் என தெரியவருகிறது.

    • புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.
    • கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்து அறிவிப்பு.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.இந்த சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.

    இந்நிலையில், புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக பந்த் அறிவித்துள்ளது.

    அதன்படி, வரும் 8ம் தேதி பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

    மேலும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்தும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பந்த் காரணமாக கர்நாடகா மற்றும் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் ஓடவில்லை.
    • வேலூர் வழியாக திருப்பதிக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா அரசின் பாசன நீர் மேலாண்மை திட்டப் பணிகளை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    சந்திரபாபு நாயுடு பயணத்தை தடுத்து நிறுத்துவோம் என்று ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

    அதன்படி புங்கனூர் பகுதிக்கு வந்த சந்திரபாபு நாயுடுவை குறபலக்கோட்டா பகுதியில் தடுத்து நிறுத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் காத்திருந்தனர்.

    அதே நேரத்தில் அந்தப் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினரும் குவிந்தனர். திடீரென அங்கு மோதல் ஏற்பட்டது.

    2 கட்சி தொண்டர்களும் ஒருவரை ஒருவர் கற்கள், செருப்பு சோடா பாட்டில், பீர் பாட்டில் ஆகியவற்றால் தாக்கிக் கொண்டனர். தொண்டர்களை விரட்டியடிக்க போலீசார் தடியடி நடத்தினர். தடியடியில் 2 கட்சிகளையும் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    ஆவேசம் அடைந்த கட்சித் தொண்டர்கள் போலீசாரின் 2 வாகனங்களை கவிழ்த்து தீ வைத்தனர். தொண்டர்கள் நடத்திய தாக்குதலில் 2 போலீசாருக்கு மண்டை உடைந்தது. 50 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தொண்டர்களை விரட்டியடித்தனர். 3 கிலோ மீட்டர் தூரம் போர்க்களமாக காட்சி அளித்தது.

    இந்நிலையில் அங்கு வந்த சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டிக்கு சவால் விடுக்கும் வகையில் தன்னுடைய பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு பேசினார்.

    அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி நேருக்கு நேர் வந்தால் மோதிப் பார்த்து கொள்ளலாம் என்று சந்திரபாபு நாயுடு சவால் விட்டார்.

    இதனால் பதற்றம் ஏற்பட்டது. சந்திரபாபு நாயுடுவை சுற்றி நின்று சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்தனர். பின்னர் சந்திரபாபு நாயுடுவை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

    வன்முறை மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் சித்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சித்தூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.

    இதன் காரணமாக சித்தூர் நகர பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பஸ் லாரி கார் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து திருப்பதிக்கு செல்லும் அனைத்து பஸ்கள் வாகனங்கள் சித்தூர் மாவட்டத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.

    பந்த் காரணமாக கர்நாடகா மற்றும் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் ஓடவில்லை. வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.

    ஆந்திர மாநில அரசு பஸ்கள் 56 மற்றும் தமிழக போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 12 அரசு பஸ்கள் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

    இதனால் வேலூர் வழியாக திருப்பதிக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் காட்பாடி சென்று அங்கிருந்து ரெயில் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதுபோல திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதி அடைந்தனர். அவர்கள் திருப்பதி ரெயில் நிலையத்தில் அதிகளவில் குவிந்துள்ளனர். ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இன்று மாலைக்கு பிறகு இயல்பு நிலை திரும்பிவிடும் அதன் பிறகு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.
    • வேலை நிறுத்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்தில் கடந்த வாரம் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தாள். இந்த சம்பவம் மாநில அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு, ஏராளமானோர் காலியாகஞ்ச் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர். அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை.

    வெளிநபர்களை கொண்டு வந்து காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், பழங்குடியினர் சமூகத்தின் மீது அராஜகம் நடப்பதாக கூறி, மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் நாளை 12 மணி நேர பந்த் நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் சுகந்த மஜூம்தார் கூறுகையில், 'மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் பயங்கர ஆட்சியை கட்டவிழ்த்து விட்டுள்ளது. வடக்கு வங்காள மாவட்டங்களில் பழங்குடியினர் சமூகத்தின் மீது மாநில நிர்வாகம் மற்றும் ஆளும் கட்சியினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 12 மணி நேர பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம். இது போன்ற அட்டூழியங்கள், முன்னெப்போதும் இருந்ததில்லை. வேலை நிறுத்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும். மாணவர்களின் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் அவசரகால சேவைகள் வழக்கம்போல் இயங்கும்' என்றார்.

    இந்த போராட்ட அழைப்பு தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேற்கு வங்காளத்தின் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளது. 

    • கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பா.ஜ.க.வினர் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
    • பா.ஜ.க. சார்பில் கோவையில் வரும் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.

    சென்னை:

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 2-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பா.ஜ.க.வினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க. சார்பில் கோவையில் வரும் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.

    இதற்கிடையே, பாரதிய ஜனதாவின் முழு அடைப்பு போராட்டத்தை தடை விதிக்க வேண்டும் எனவும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற முழு அடைப்பு போராட்டம் நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முழு அடைப்பு போராட்டம் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநில தலைமையால் அழைப்பு விடுக்கவில்லை. அதை ஆதரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி அக்.31-ல் பாஜக பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு, வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    • புதுவையிலிருந்து காலையில் அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்ட பணிக்கு செல்வோர் அரசு பஸ்களில் சென்றனர்.
    • சேதாரப்பட்டு, கரசூர், தட்டாஞ்சாவடி, திருபுவனை தொழிற்பேட்டைகளிலும் குறைவான தொழிற்சாலைகள் இயங்கின.

    புதுச்சேரி:

    இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து, இன்று புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது.

    இதன்படி காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தால் நகர பகுதியில் முக்கிய சாலைகளான மறைமலை அடிகள் சாலை, அண்ணாசாலை, நேருவீதி, காமராஜர் வீதி, படேல் சாலை, புஸ்சி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட சாலைகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. சிறிய கடைகள் கூட அடைக்கப்பட்டிருந்தது.

    புறநகர், கிராமப்புற பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. புதிய பஸ் நிலையத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. அதேநேரத்தில் தமிழகம், புதுவை அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கியது.

    புதுவையிலிருந்து காலையில் அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்ட பணிக்கு செல்வோர் அரசு பஸ்களில் சென்றனர். சென்னை செல்லும் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் இருந்தது. 2 அல்லது 3 பஸ்களில் பயணிகள் நிரம்பிய பிறகு போலீஸ் பாதுகாப்புடன் மாநில எல்லை வரை கொண்டு சென்று போலீசார் அனுப்பினர்.

    இருப்பினும் குறைவான அரசு பஸ்களே இயங்கியது. தமிழகத்திலிருந்து புதுவை வழியாக இயக்கப்பட்ட தமிழக அரசு பஸ்களும், புதுவையிலிருந்து இயக்கப்பட்ட அரசு பஸ்களும் குறைவாகவே இயக்கப்பட்டது. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் கல்லூரிகள் இயங்கியது. மாணவர்கள் கல்லூரி பஸ்களில் ஏறிச்சென்றனர்.

    அரசு பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடக்கிறது. இதனால் பெற்றோர்கள் மாணவர்களை இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். சேதாரப்பட்டு, கரசூர், தட்டாஞ்சாவடி, திருபுவனை தொழிற்பேட்டைகளிலும் குறைவான தொழிற்சாலைகள் இயங்கின. தியேட்டர்களில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கியது.

    பெரியமார்க்கெட், சின்ன மார்க்கெட், அரியாங்குப்பம், வில்லியனூர், முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் மார்க்கெட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    பந்த் போராட்டத்தையொட்டி நகரெங்கும் சாலை சந்திப்புகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்களில் நகர பகுதி முழுவதும் போலீசார் வலம் வந்தனர்.

    • குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • வேலைவாய்ப்பின்மையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

    அகமதாபாத்:

    கடந்த 27 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், பா.ஜ.க. ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்து வருவதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை முழு அடைப்புக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. வணிகர்கள், ஆட்டோ சங்கங்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி காங்கிரஸ் மாநில தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கண்டித்து நாளை புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்த பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது. #SabarimalaIssue #BJP #Bandh
    புதுச்சேரி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசு அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்கு கேரளாவில் பா.ஜனதா, காங்கிரஸ், இந்து அமைப்புகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சபரிமலையை சுற்றி உள்ள பகுதிகள் போராட்டக்களமாக மாறி உள்ளது.



    இந்த நிலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்ல கேரளா போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். இதனால் ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கத்தை விட குறைந்துள்ளது.

    சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும், பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை கண்டித்தும் 26-ந்தேதி புதுவையில் முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடத்தப்படும் என பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி, விசுவ இந்து பரி‌ஷத், ஐயப்ப சேவா சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ள பந்த் போராட்டம் உள்நோக்கம் கொண்டது, தேவையற்றது என்றும், புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பந்த் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். பந்த் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியும் புதுவையில் பந்த் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை. கேரளா மாநிலத்தில்தான் இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்.

    இந்த பந்த் போராட்டத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். மேலும் சட்ட ஒழுங்கில் பாதிப்பு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதனிடையே பா.ஜனதா கட்சியினர் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நேற்று மாலை பெரியார் சிலை அருகில் இருந்து பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஊர்வலம் சென்றனர்.

    அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் கொடுத்தபடி நகர பகுதி முழுவதும் சுற்றி வலம் வந்தனர்.

    முழு அடைப்பு குறித்து சாமிநாதன் கூறியதாவது:-

    இந்த போராட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும். போராட்டத்திற்காக வணிகர் சங்கங்கள், மார்க்கெட் வியாபாரிகள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர், மீனவர்கள், தொழிலாளர்கள், தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்தும், கடிதம் மூலமாகவும் ஆதரவு கேட்டுள்ளோம். பெரும்பாலானவர்கள் ஆதரவு தருவதாக உறுதியளித்தனர்.

    இதனால் பஸ்கள், டெம்போ, ஆட்டோக்கள் இயங்காது. தனியார் பள்ளி கல்லூரிகள் இயங்காது. இதற்கு முன் புதுவையில் ஆளும் கட்சி தரப்பிலும், பிற கட்சிகள் சார்பிலும் தேவையற்ற வி‌ஷயங்களுக்குக்கூட பந்த் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    இது, பெரும்பான்மை மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் போராட்டம். இதனால் பந்த் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaIssue #BJP #Bandh

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடுதழுவிய போராட்டம் இன்று நடைபெறும் நிலையில், தமிழகம் - கர்நாடகம் இடையேயான பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. #BharathBandh #PetrolDieselPriceHike
    சென்னை:

    வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. வணிகர் சங்கங்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

    தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் பெரும்பாலான ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. அதேநேரத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

    கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முழு அடைப்பு காரணமாக கர்நாடகாவிற்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் மற்றும் சத்தியமங்கலத்தில் நிறுத்தப்பட்டன. தமிழகத்திற்கு இயக்கப்படும் கர்நாடக அரசுப்பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. தமிழகம் - கேரளாவுக்கு இடையேயான பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.



    இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து ரூ. 83.91-க்கும், டீசல் 23 காசுகள் உயர்ந்து ரூ. 76.98-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. #BharathBandh #PetrolDieselPriceHike 

    இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 10-ந்தேதி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவெடுத்துள்ளது. #PetrolPriceHike #DMK #Congress
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. அதை கண்டித்தும் பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வலியுறுத்தியும், பெட்ரோல் மீதான வரியை மத்திய-மாநில அரசுகள் குறைக்க கோரியும் வருகிற 10-ந்தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த போராட்டத்துக்கு பா.ஜனதாவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.

    இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கிரிராஜன், ஹான்ஸ்டன் டைன் (தி.மு.க.), மல்லை சத்யா (ம.தி.மு.க.) வீரபாண்டியன் (இந்திய கம்யூ.), ஆறுமுக நயினார் (மார்க்சிஸ்ட் கம்யூ.), பாலாஜி, வன்னியரசு (விடுதலை சிறுத்தை), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), அன்புராஜ் (தி.க.), கண்ணன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி), கதிரவன் (பார்வர்டு பிளாக்), முகமது முபாரக் (எஸ்.டி.டி.பி.ஐ.) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை முழு அளவில் வெற்றி பெற செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த முழு அடைப்பின் நோக்கத்தையும், பெட்ரோல்- டீசல் விலை உயர்வையும் மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

    மக்கள் பிரச்சனைக்காக அனைத்து கட்சிகளும் முன் எடுத்துள்ள இப்போராட்டத்துக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து பொதுமக்கள் பல்வேறு அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிலாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    அனைத்து கட்சி கூட்டம் 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத்துக்கு வந்த தலைவர்களை முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகர், எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சொர்ணசேதுராமன், தாமோதரன், பவன்குமார், தமிழ்செல்வன், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாட்சா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    கூட்டம் முடிந்ததும் அனைத்து கட்சி தலைவர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது திருநாவுக்கரசர் கூறியதாவது:-


    இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முழு அடைப்பு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முழு அடைப்பை வெற்றிகரமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் முடிவெடுத்துள்ளன.

    அதன்படி அன்று அனைத்து கடைகளும் அடைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெறும். வணிகர் அமைப்புகள் அனைத்தும் கடைகளை அடைப்பதாக உறுதி அளித்துள்ளன. இன்றைய கூட்டத்தில் பங்கேற்காத கட்சிகளிடமும் ஆதரவு கேட்டுள்ளோம்.

    பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, கமல்ஹாசன் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினேன். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை சொல்வதாக தெரிவித்துள்ளார்கள். முழு அடைப்பு நாளன்று பால், மருந்து ஆகியவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படும். மற்ற அனைத்தும் மூடப்படும். பொதுமக்களின் சுமையை குறைக்க நடத்தப்படும். போராட்டத்துக்கு மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PetrolPriceHike #DMK #Congress

    மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பாக மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #MarathaProtest #MaharashtraBandh #MarathaKrantiMorcha #MarathaReservation
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஏற்கனவே முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

    அப்போது போலீஸ் பாதுகாப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வன்முறை வேகமாக பரவியது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.

    வன்முறை தீவிரமடைந்ததால், முழு அடைப்பு போராட்டத்தை திரும்ப பெறுவதாக மராத்தா தலைவர்கள் அறிவித்தனர்.
    தங்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

    இந்நிலையில், இடஒதுக்கீடு கேட்டு மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

    முழு அடைப்பை ஒட்டி மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சிஐஎஸ்எப் மற்றும் எஸ்ஆர்பிஎப் படைவீரர்கள் உள்பட பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களை சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #MarathaProtest #MaharashtraBandh #MarathaKrantiMorcha #MarathaReservation
    ×