

கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரான ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்து. அந்த அறிக்கையை கடந்த 2024 பிப்ரவரியில் முதலமைச்சர் சித்தராமையாவிடம் ஜெயபிரகாஷ் ஹெக்டே வழங்கினார்.
இந்த அறிக்கை நேற்று முன்தினம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மீது வரும் 17-ந்தேதி நடைபெறும் சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடைபெற உள்ளது
இந்நிலையில் ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க அந்த அறிக்கையில் சிபாரிசு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) மக்கள் தொகை 4.18 கோடியாகவும், பட்டியல் சாதியினரின் (SC) மக்கள் தொகை 1.09 கோடியாகவும், பட்டியல் பழங்குடியினரின் (ST) மக்கள் தொகை 42.81 லட்சமாகவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் ஓபிசி பிரிவில் வருகின்றனர். எனவே அவர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ஓபிசி-களுக்கான இடஒதுக்கீட்டை தற்போதைய 31 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாக உயர்த்த ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. இந்த பிற்படுத்தப்பட்ட ஓபிசி சமுதாயங்கள் ஒவ்வொரு வர்க்கமாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்க ஆணையம் பரிவித்துள்ளது.
இதன்மூலம் ஓபிசி பிரிவில் இருக்கும் 2 முக்கிய சமுதாயங்களான லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமுதாயங்களின் இடஒதுக்கீடும் தலா 3 சதவீதம் அதிகரிக்கும். இந்த இரண்டு சமூகங்களை சேர்த்தவர்களே கர்நாடக அரசியலில் கோலோச்சி வருவது குறிப்பிடத்தக்கது. லிங்காயத் சமூகம் மாநிலத்தில் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது.
மேலும் மாநிலத்தில் 75 லட்சத்து 27 ஆயிரம் பேர் (18.08 சதவீதம்) உள்ள முஸ்லிம் மக்களை பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும் ஆணையம் சிபாரிசு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் தற்போது முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களின் எண்ணிக்கையை பொறுத்து 4 சதவீதத்தில் இருந்து இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக அதிகரிக்கும்படி ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.
மேற்கூறிய இந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் கர்நாடகாவில் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீடுகளுடன் சேர்த்து மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீடு 85% ஆக உயரும்.