என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்திரை முழுநிலவு மாநாடு"

    • இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன் என்று அன்புமணி பேசினார்.
    • அத்துமீறு என்ற சொல்லுக்குள் பல அரசியல் உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்தார்.

    பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். படித்து வேலைக்கு போ அதன் பிறகு கட்சிக்கு வா. முதலில் குடும்பத்தை பார், என்னுடைய தம்பிகள் ஒரு வழக்கு கூட வாங்க கூடாது. ஐயா உங்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்துள்ளார் அதை பயன்படுத்தி படித்து வேலைக்கு செல்லுங்கள்" என்று பேசினார்.

    விசிக தலைவர் திருமாவளவனின் முழக்கமான அத்துமீறு என்பதை குறிப்பிட்டு அன்புமணி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அத்துமீறு என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பது புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர் என்று அன்புமணிக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

    சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "அமைப்பாவதால் மட்டும் தான் அத்துமீற முடியும். அத்துமீறலால் மட்டுமே அடக்குமுறைகள் உடையும் என்று 1991-92 காலகட்டத்தில் நான் முழக்கம் எழுதினேன். தனியாளாக அத்துமீற முடியாது. அமைப்பாக இருந்தால் தான் அத்துமீற முடியும். தனியாளாக கோவிலுக்குள் நுழைய முற்பட்டால் விட மாட்டார்கள். ஆனால் அமைப்பாக திரண்டு சென்றால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.

    இந்த அத்துமீறலுக்கு என்ன பொருள் என்பது புரியாமல் அத்துமீறி என்று சொல்ல மாட்டேன் என்று சிலர் கலாய்க்கின்றனர். அத்துமீறு என்ற சொல்லுக்குள் பல அரசியல் உள்ளது. அது ஒரு தொலைநோக்கு பார்வை, 2000 ஆண்டுகால அடிமைத்தளையை உடைத்தெறியக்கூடியது அது. இந்த முழக்கம் ஒரு சாதிக்கு மட்டும் உரியது கிடையாது. 

    நடக்கக்கூடாது என்றால் நடப்போம். பேச கூடாது என்று பேசுவோம். இந்த இடத்தில நுழையக்கூடாது என்றால் நுழைவோம். எங்களுக்கும் அனைவருக்குமான உரிமைகள் உள்ளது என்பதற்கான குரலுக்கு பெயர் தான் அத்துமீறு" என்று தெரிவித்தார். 

    • தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் உருவாக்கப்பட்டுள்ளது.
    • வங்கக் கடலே சிறுத்துப் போனதைப் போன்று மாநாட்டுத் திடலில் பாட்டாளி சொந்தங்கள் குவிந்திருந்தனர்.

    பா.ம.க. சார்பில் நேற்று மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் உருவாக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வெற்றிகரமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் நடத்தி முடிக்கப்பட்டிருப்பது தான் புதிய மைல்கல் ஆகும். இதை சாத்தியமாக்கிய அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வானிலிருந்து பார்த்தால் கிழக்குக் கடற்கரைச் சாலையின் ஒருபுறத்தில் ததும்பி வழிந்து கொண்டிருந்த மனிதக்கடலுடன் ஒப்பிட்டால் வங்கக் கடலே சிறுத்துப் போனதைப் போன்று மாநாட்டுத் திடலில் பாட்டாளி சொந்தங்கள் குவிந்திருந்தனர்.

    15 லட்சத்துக்கும் கூடுதலான பாட்டாளி சொந்தங்கள் மாநாட்டுத் திடலில் திரண்டிருந்த நிலையில், நெரிசல் காரணமாக மாமல்லபுரத்தை நெருங்க முடியாமல் செங்கல்பட்டுக்கு அப்பாலும் பல்லாயிரக்கணக்கான ஊர்திகள் அணிவகுத்துக் காத்திருந்தன. லட்சக் கணக்கில் தொண்டர்கள் திரண்டிருந்தாலும் கூட எந்தவொரு இடத்திலும் சிறு ஒழுங்குமீறல்கள் கூட நடைபெறவில்லை.

    இராணுவத்தையே விஞ்சும் அளவுக்கு பாட்டாளி சொந்தங்கள் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் மாநாட்டிற்கு வந்து, பத்திரமாக சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றிருப்பது மாநாட்டுக்குழுத் தலைவர் என்ற முறையில் எனக்கு மிகுந்த பெருமையும், நிம்மதியும் அளிக்கிறது.

    மாமல்லபுரம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும், மாநாட்டுக் குழுத் தலைவராக என்னை நியமித்ததற்காகவும், மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்ததற்காகவும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாட்டாளி சொந்தங்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மிகக் கடுமையாக உழைத்த பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிராமம் என அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், குறிப்பாக மாவட்ட செயலாளர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    களத்தில் மாநாட்டுப் பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்து, கடந்த 20 நாள்களாக இரவு, பகல் பாராமல் உழைத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அவர்களுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    அவருக்குத் துணையாக களத்தில் நின்று பணியாற்றிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், சேலம் கார்த்தி மற்றும் வைத்தி, செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை உள்ளிட்ட அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆந்திர மாநிலத்திலிருந்து இந்த மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் கொல்லு ரவீந்திரா, வன்னியகுல ஷத்திரிய கார்ப்பரேசனின் தலைவர் சி.ஆர்.இராஜன், கர்நாடகத்திலிருந்து பங்கேற்ற முன்னாள், இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மராட்டியம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்தும், மலேஷியாவில் இருந்தும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து பங்கேற்ற அனைத்து சொந்தங்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அலை அலையாய் திரண்டு வந்து மாநாட்டைச் சிறப்பித்த பாட்டாளி சொந்தங்களுக்கும் எனது கோடானுகோடி நன்றிகள்.

    மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாட்டின் முதன்மை நோக்கம் சமூகநீதி தான். அதை வலியுறுத்தி தான் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்;

    அதனடிப்படையில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; அதேபோன்று அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 2% உயர்த்த வேண்டும்; இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்க வேண்டும்; கிரீமிலேயர் முறையை அகற்ற வேண்டும்;

    மேலும் தனியார் துறை மற்றும் உயர்நீதித் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அனைத்து சமூகங்களுக்கும் நிதி அதிகாரம் கொண்ட வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்; மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்க வேண்டும்;

    பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; வளர்ச்சிக் குறியீடுகளில் மிகவும் பின்தங்கியிருக்கும் வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

    தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் இந்த மாநாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கான முழக்கங்கள் இந்த மாநாட்டில் எழுப்பப்பட்டுள்ளன.

    ஏழரை கோடி மக்களின் இந்த உணர்வுகளை தமிழக அரசு புரிந்து கொண்டு அதனடிப்படையில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த ஆணையிட வேண்டும்.

    அதனடிப்படையில் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதுடன், வன்னியர்களுக்கும், மற்ற அனைத்து சமுதாயங்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

    பட்டியலின மக்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டின் அளவை மேலும் 2% உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    அதேபோல், கல்வி, வேலைவாய்ப்பில் 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு மற்றும் கிரீமிலேயரை அகற்றுதல், தனியார்துறை மற்றும் உயர்நீதித்துறையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயம் வன்னியர் சமுதாயம்.
    • இந்தியாவிலேயே நம் சமுதாயத்திற்கு மட்டும் தான் ஒரு புராணம் இருக்கிறது.

    பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "நம் இளைஞர்களுக்கு நம்முடைய வரலாறு தெரியவில்லை. நாம் நெருப்பில் இருந்து பிறந்தவர்கள். இந்தியாவிலேயே நம் சமுதாயத்திற்கு மட்டும் தான் ஒரு புராணம் இருக்கிறது. வேறு எந்த சமுதாயத்திற்கும் கிடையாது. நாம் வன்னிய குல சத்திரியர்கள்.

    நாகப்பன் படையாட்சி என்பவர் காந்தி தொடங்கிய சத்தியாகிரக போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி. இது எத்தனை பேருக்கு தெரியும். படையாட்சி என்பதால் அவரது வரலாறு மறைக்கப்பட்டது.

    இந்தியாவில் ஓபிசி இடஒதுக்கீடு பெற்றுக்கொடுத்தது 2 சத்திரியர்கள். ஒன்று ஐயா ஆனைமுத்து, மற்றொன்று சமூகநீதி போராளி மருத்துவர் அய்யா அவர்கள்.

    நம் சமுதாயத்தை வாக்குவங்கிகளாக பயன்படுத்துகிறார்கள். யார் யாரோ பின்னால் நீங்கள் செல்கிறீர்கள். அவர்கள் பின்னால் செல்லாதீர்கள். உங்களது அண்ணன் நான் இருக்கிறேன். என் பின்னால் வாருங்கள். உங்களுக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மாவீரன் குரு போல நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    உங்களுக்கு நல்ல படிப்பையும், வேலைவாய்ப்பினை நான் வாங்கித் தருகின்றேன். நாம் ஆள வேண்டும். நாம் ஆள வேண்டிய காலம் வந்து விட்டது. இந்த மண்ணை ஆண்டவர்கள் நாம். இந்த மண்ணின் பூர்வ குடிகள் நாம். வீராணம் ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெலிங்டன் ஏரி மதுராந்தகம் ஏரி வரை வெட்டியது நம்முடைய முன்னோர்கள்" என்று பேசினார்.

    வன்னியர்கள் நெருப்பில் இருந்து பிறந்தவர்கள் என்று அவரது சமுதாய மக்களிடம் சாதி உணர்வை ஊட்டும் வகையில் அன்புமணி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஒருபக்கம் பெரியாரை உயர்த்தி பேசும் அன்புமணி ராமதாஸ் மற்றொரு பக்கம் வர்ணாசிரமக் கொள்கையை உயர்த்திப் பிடித்து, நாங்கள் மார்பிலே பிறந்தவர்கள் என்று இல்லாத ஒன்றை மிடுக்காகப் பேசித் திரிவது சரியா?

    படையாட்சி என்பதால் நாகப்பன் படையாட்சியின் வரலாறு மறைக்கப்பட்டதாக பேசும் அன்புமணிக்கு அவரது வன்னியர் சாதியிலேயே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் இருப்பது தெரியுமா? படையாட்சி இன்னொரு படையாட்சியை விட்டுவிட்டு, வன்னியர் வீட்டில் பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள் என்பது குறித்து பேச முடியுமா?

    மாற்றம் முன்னேற்றம் என்று அரசியல் பேசி வந்த அன்புமணி தற்போது நாம் நெருப்பில் இருந்து வந்தவர்கள் என்று சாதி உணர்வை கூர் தீட்டும் அரசியல் பேச வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?

    தன சமுதாய மக்களிடம் பா.ம.க. கட்சியின் செல்வாக்கு மெல்ல மெல்ல சரிந்து வரும் நிலையில், அதை மறுபடியும் மீட்டெடுக்க தான் சாதிய உணர்வை கூர் தீட்டும் அரசியலுக்கு பா.ம.க. இறங்குகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

    • எம்எல்ஏ என்றும் பார்க்கமாட்டேன், தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன்.
    • நிறைய பேர் இங்கு உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பது எனக்கு தெரியும்.

    பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று மாலை தொடங்கியுள்ளது.

    இதில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராம்தாஸ் பேசியதாவது, "(வன்னியர்களுக்கு) 10.5% இடஒதுக்கீடு வழங்காததால், போராட்டத்தை அறிவிக்கிறோம். இதுவரை நடந்திராத வகையில் அந்தப் போராட்டம் இருக்கும். போராட்டத்திற்காக எவ்வளவு தியாகத்தை செய்யவும் தயாராக இருக்கிறோம். 45 வருடமாக உங்களுக்காகவும், அனைத்து சமூதாய மக்களுக்காகவும் போராடியும், போராடி சில வெற்றியும் பெற்றவன் இந்த ராமதாஸ்.

    ஒரு தொகுதியில் 2000 இளைஞர்கள், இளம்பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு தொகுதியில் 100 வாக்குகளை கொண்டுவந்தால், அந்தத் தொகுதியில் நம்மால் வெல்ல முடியும். 50 தொகுதிகளில் நாம்மால் எளிதாக வெல்ல முடியும். ஆனால், நிறைய பேர் இங்கு உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பது எனக்கு தெரியும்.

    இனி அப்படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் உங்கள் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. எம்எல்ஏ என்றும் பார்க்கமாட்டேன், தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன்.

    சிலர் எங்கே கூட்டணி, யாருடன் கூட்டணி என்று கேட்கிறார்கள். கூட்டணி பற்றி முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன், அதை நான் முடிவு செய்வேன். அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உனக்கு சீட்டு கிடைக்க வேண்டும், எம்எல்ஏ ஆக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும்.

    வெளிப்பேச்சு, வெளிக்கூட்டணி, கட்சிக்குள்ளே கூட்டணி என இது எதுவும் நடக்காது. எனவே உன்னை நீ திருத்திக்கொள். இல்லை என்றால் உன்னால் இந்தக் கட்சியில் பொறுப்பிலேயே இருக்க முடியாது.

    உன் பதவிக்கு இளம் சிங்கங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீயோ காலை வாறிக்கொண்டிருக்கிறாய். இனி அது நடக்காது. இந்தக் கட்சி தனிப்பட்டவரின் சொத்து அல்ல" என்று தெரிவித்தார்.  

    • காடுவெட்டி குரு இருந்திருந்தால் நானும் மற்றவர்களைப் போல் மேடைக்கு கீயே தம்பிகளோடு அமர்ந்திருப்பேன்.
    • தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த சொந்தங்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சித்திரை முழுநிலவு மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த மாநாட்டில் என் சகோதரன் காடுவெட்டியார் இல்லையே என்பது வருத்தம்.

    காடுவெட்டி குரு இருந்திருந்தால் நானும் மற்றவர்களைப் போல் மேடைக்கு கீயே தம்பிகளோடு அமர்ந்திருப்பேன்.

    தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த சொந்தங்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

    இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்துதான் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. நமது வன்னிய சமூகத்தினர் 140 நாடுகளிலே வாழ்கின்றனர்.

    வன்னியர்களின் வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை. நாகசாமி படையாட்சி, அஞ்சலை அம்மாள், ஐயா ஆனைமுத்து பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இடஒதுக்கீடு என்றாலே பாமக மற்றும் ராமதாஸ் பங்களிப்பபை மறக்க முடியாது.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க காதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.

    பலமுறை ஆட்சிக்கு வருவதற்கு உதவிய வன்னியர் சமுதாயத்திற்கு திமுக திரோகம் செய்கிறது. கருணாநிதி இருந்திருந்தால் நிச்சயம் சமூக நீதி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இருப்பார்.

    நல்ல கல்வியை கொடுத்தால் இளைஞர்கள் நல்ல வேலைக்கு போவார்கள். மதுவுக்கு ஏன் அடிமையாக போகிறார்கள்?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டது.
    • மாநாட்டுக் கொடியை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார்.

    பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று மாலை தொடங்கியது.

    இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடைக்கு வந்த நிலையில் பாராகிளைடரில் வன்னியர் சங்கக் கொடி பறக்கவிடப்பட்டது. கொடி பறந்ததை கண்டு, ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

    மேலும், மாநாட்டுக் கொடியை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார்.

    பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடிட்டில் ட்ரோன் ஷோ நிகழ்த்தப்பட்டது. பிறகு, பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:-

    1. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும்!

    இந்தியாவில் 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும், தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கும், மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தரவுகள் போதுமானவையாக இருக்காது என்பதே உண்மை.

    தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 13.07.2010ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சாதிவாரி மக்கள்தொகை, சமூகங்களின் பின்தங்கிய நிலை உள்ளிட்ட தரவுகளை ஓராண்டுக்குள் திரட்டி, அவற்றின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. அதேபோல், வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் சமூக, கல்வி பின்தங்கிய நிலை குறித்த பொருத்தமான, நிகழ்கால தரவுகளைத் திரட்டி அதன் அடிப்படையில் உள்இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. தேசிய அளவில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் இவ்விவரங்களைத் திரட்ட முடியாது.

    இந்தியாவில் வரலாற்று ரீதியாகப் பார்த்தால் மக்களின் சமூகப் பின்தங்கிய நிலை குறித்த தரவுகள் காகா கலேல்கர் ஆணையம், மண்டல் ஆணையம், தமிழ்நாட்டில் சட்டநாதன் ஆணையம், அம்பாசங்கர் ஆணையம் போன்ற பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களின் வாயிலாகவே திரட்டிப்பட்டிருக்கின்றன. மக்களின் சமூகப் பின்தங்கிய நிலையை அறிய பல்வேறு வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைபெற வேண்டும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்களின் சாதி குறித்த தகவல் மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். மீதமுள்ள தரவுகளை தனியாக கணக்கெடுப்பதன் வாயிலாக மட்டுமே திரட்ட முடியும் என்பதே எதார்த்தம்.

    அதனால்தான், பீகார், தெலுங்கானா, கர்நாடகம், ஒதிசா போன்ற மாநிலங்கள் 2008ஆம் ஆண்டின் புள்ளியியல் சட்டத்தைப் பயன்படுத்தி சாதிவாரியாக சமூக, பொருளாதார பின்தங்கிய நிலை குறித்த தரவுகளைத் திரட்டியுள்ளன. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக புதிதாக தொடரப்பட்டுள்ள வழக்கு எந்தநேரமும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரக்கூடும் என்பதால், அதைப் பாதுகாக்கவும் தனியான கணக்கெடுப்பு மிகவும் தேவையாகும்.

    எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையான சமூகநீதியை வென்றெடுக்கவும், 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், 2008ஆம் ஆண்டு புள்ளியியல் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் சமூக, பொருளாதார சாதிவாரி சர்வேயை தமிழக அரசு நடத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

    2. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: போராடி சாதித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றியும், பாராட்டுகளும்!

    இந்தியாவில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா விடுதலையடைந்த பின் முதன் முறையாக, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிட்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக மருத்துவர் அய்யா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், போராட்டங்களும் எண்ணில் அடங்காதவை. 20.07.1980ஆம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போது, அதில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்துச் சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அதன்பின் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான 3 வாய்ப்புகளை மருத்துவர் அய்யா அவர்கள் ஏற்படுத்தினார். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் அந்த வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன.

    அதேபோல், தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக ராஜீவ் காந்தி, வி.பி.சிங், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆகிய 5 பிரதமர்களிடம் மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தார். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசாணை பிறப்பிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், குஜராத் நிலநடுக்கம் காரணமாக அந்த வாய்ப்பு சாத்தியமாகவில்லை. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், பின்னாளில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பதிலாக, சமூகப் பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதால் மக்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

    அதன்பின், 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மருத்துவர் அய்யா அவர்கள் ஒருமுறை நேரில் சந்தித்தும், 3 முறை கடிதங்களை எழுதியும் வலியுறுத்தினார். அதன் காரணமாகவே இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கண்கெடுப்பு என்ற மருத்துவர் அய்யாவின் 45 ஆண்டுகால கனவு நனவாகியிருக்கிறது.

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம் இந்தியாவில் இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்படும். சில பத்தாண்டுகளுக்கு முன் இவையெல்லாம் சாத்தியமே இல்லை என்று கருதப்பட்ட நிலையில், தொடர் போராட்டங்கள், அரசியல் அழுத்தங்கள் ஆகியற்றின் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை சாத்தியம் ஆக்கிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு இந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு அதன் உளமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

    3. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உடனடியாக உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும்!

    வன்னியர்களின் சமூக பின்தங்கிய நிலை குறித்த தரவுகளைத் திரட்டி, அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 1,136 நாட்கள் ஆகும் நிலையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக அரசுக்கு வன்னிய இளைஞர் பெருவிழா கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மருத்துவர் அய்யா அவர்கள் ஒருமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியதுடன், 10க்கும் மேற்பட்ட முறை கடிதங்களை எழுதினார். சிலமுறை தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கை விடுத்தார். அதேபோல், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையிலான குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 3 முறை சந்தித்து வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இவர்கள் தவிர, பா.ம.க. நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் 50க்கும் மேற்பட்ட முறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால், தொடக்கத்தில் வன்னியர்களுக்கு கண்டிப்பாக உள்இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பின்னாளில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டுமே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். தமிழக அரசு நேரடியாகவோ அல்லது தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் வாயிலாகவோ சாதிவாரி சர்வே நடத்த முடியும் என்றாலும் கூட, அதைச் செய்து அதைச் செய்ய தமிழக அரசு மறுப்பது, வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் இன்றைய அரசுக்கு விருப்பமோ, அக்கறையோ இல்லை என்பதையே காட்டுகிறது.

    வன்னியர்களின் சமூகப் பிந்தங்கிய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பணி மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 12.01.2023ஆம் நாள் வழங்கப்பட்டது. ஆணையம் நினைத்திருந்தால் 3 மாதங்களில் இந்தப் பணியை நிறைவு செய்திருக்க முடியும். ஆனால், இரண்டரை ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இது குறித்த எந்தப் பணியையும் செய்யாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது. இது பெரும் துரோகம்.

    வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லாத நிலையில், சமூகநீதி சார்ந்த தனது கடமையை தமிழக அரசு இனியும் தட்டிக் கழிக்கக் கூடாது. உரிய தரவுகளை உடனடியாகத் திரட்டி, வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வலியுறுத்துகிறது.

    4. அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!

    முழுமையான சமூகநீதி என்பது அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை வழங்குவது தான். 1980&ஆம் ஆண்டில் வன்னியர் சங்கத்தைத் தொடங்கிய காலத்திலிருந்து இதைத் தான் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தி வருகிறார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக இழைக்கப்பட்டு வந்த சமூக அநீதிக்கு பரிகாரம் தேட இது தான் சிறந்த வழியாகும். கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், அடுத்த சில தலைமுறைகளில் ஏற்றத்தாழ்வுகள் மறைந்து அனைவரும் சமம் என்ற நிலை உருவாகும். அத்தகையதொரு சூழல் உருவாக வேண்டும் என்பது தான் சமூகநீதியாளர்களின் கனவாகும்.

    தமிழ்நாட்டில் அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்க பெரும் தடையாக இருந்தது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாதது தான். தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதன் மூலம் இதற்கான முதல் தடை விலகியுள்ளது. மாநில அளவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் பிற முட்டுக்கட்டைகளும் அகற்றப்பட்டு விடும். எனவே, தமிழகத்தில் உடனே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவாக மேற்கொண்டு அனைத்து சமூகங்களுக்கும், அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்திரை முழுநிலவு மாநாடு வலியுறுத்துகிறது.

    5. பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை, அவர்களின் மக்கள்தொகைக்கு மேலும் 2% உயர்த்த வேண்டும்!

    வன்னியர் சங்கம் 1980&ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட போது, அதற்கான நிகழ்வில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது தீர்மானம் பட்டிலின, பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக அதிகரிக்க வேண்டும் என்பது தான். ஆனாலும், இட ஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது சாத்தியம் ஆகவில்லை. சமூகநிலை மற்றும் கல்வியில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் பட்டியலினச் சகோதரர்கள். அவர்களின் மக்கள்தொகை மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இட ஒதுக்கீட்டை மட்டும் அதிகரிக்காமல் அதே நிலையில் வைத்திருப்பது நியாயம் அல்ல. அது பட்டியலின மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது.

    பட்டியலின மக்கள் முன்னேறாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேற முடியாது. அதைக் கருத்தில் கொண்டு பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் அளவை இப்போதிருக்கும் 18% என்ற அளவிலிருந்து, 2011&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 20 விழுக்காடாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்த மாநாடு கோருகிறது.

    6. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

    தேசிய அளவிலும், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களிலும் கல்வி & வேலைவாய்ப்பில் சாதி அடிப்படையில் 49.5% மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்குக் காரணம் 1962ஆம் ஆண்டு பாலாஜி வழக்கிலும், 1992ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிலும் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்று ஆணையிட்டதுதான். இடஒதுக்கீட்டிற்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. ஆனாலும், உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கு வரம்பு நிர்ணயித்ததற்குக் காரணம் இடஒதுக்கீடு பெறும் சமூகங்களின் உண்மையான மக்கள்தொகை கணக்கெடுக்கப்படாததுதான். இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மக்கள்தொகை 52 விழுக்காட்டுக்கும் அதிகம் என்றாலும்கூட, உரிய தரவுகள் இல்லாததாலும், உச்சநீதிமன்றத்தால் வரம்பு நிர்ணயிக்கப்பட்டதாலும் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27% மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது பெரும் சமூக அநீதி.

    இந்தியா விடுதலை அடைவதற்கு முன் தமிழ்நாட்டில் மாநில அளவிலான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமின்றி, மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்புகளிலும் 100% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாறு இருக்கிறது. இந்தியாவில் 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு அதற்கு இணையாக இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா கோருகிறது.

    7. மத்திய அரசின் ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும்!

    மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படும் போதிலும், அதை அந்தச் சமூகங்களால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் கிரிமிலேயர் முறைதான். ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிரிமிலேயர் எனப்படும் பொருளாதார அடிப்படையில் முன்னேறியவர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. கிரிமிலேயர்களுக்கு மறுக்கப்படும் இடங்கள் கிரிமிலேயர் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு நிரப்பப்படவில்லை என்பதும், சில ஆண்டுகளுக்குப் பின் அந்தப் பணியிடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, உயர் சாதியினரைக் கொண்டு நிரப்பப்படுகிறது என்பதும் தான் சமூக அநீதியாகும். இதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் கிரிமிலேயர் என்ற கோட்பாடே இல்லை. 1992ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தால் தான் கிரிமிலேயர் முறை புகுத்தப்பட்டது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூகநீதியை பறிப்பதற்கான கருவியாக கிரிமிலேயர் முறை பயன்படுத்தப்படுவதால், அதை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் என்று மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வலியுறுத்துகிறது.

    8. தனியார்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்!

    அரசுத் துறை வேலைவாய்ப்புகள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவரும் நிலையில், பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களின் சமூக முன்னேற்றத்தை உறுதி செய்ய தனியார் துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தவிர்க்க முடியாததாகிறது. மத்திய அரசுத் துறைகளில் ஆள்குறைப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் போன்ற காரணங்களால் அரசுத் துறை வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 2001ஆம் ஆண்டில் மத்திய அரசுத் துறைகளில் உள்ள 36.06 லட்சம் பணியிடங்களில் 1.84 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் காலியிடங்களில் எண்ணிக்கை 9.5 லட்சமாக உயர்ந்துவிட்டது. ஒருபுறம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கையும், அவறின் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பாமகவால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    தனியார்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை ஆட்சியாளர்களும், தனியார் நிறுவனங்களும் கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டிருக்கும் போதிலும், அதைச் சட்டமாக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இனியும் அதேநிலை தொடர்வது பெரும் சமூக அநீதி என்பதால், அதைத் தவிர்க்கும் வகையில் தனியார்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்படி இம்மாநாடு கோருகிறது.

    9. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும்!

    இந்தியாவில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் நிலையில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் மட்டும் இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத சமூக அநீதியாகும்.

    உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கான காரணம் கொலீஜியம் முறைதான். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் போட்டித் தேர்வுகள் மூலம் நியமிக்கப்பட்டால், அதில் இடஒதுக்கீடு கண்டிப்பாக கடைபிடிக்கப்படும். அதே முறையை கொலீஜியம் முறையில் பின்பற்றுவதில் எந்தச் சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை. உயர்நீதித் துறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால், மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களால் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உயர முடிவதில்லை. இந்தநிலை மாற்றப்பட வேண்டும்.

    மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில் 454 நீதிபதிகள், அதாவது 75 விழுக்காட்டினர் உயர்சாதியினர் ஆகும். 12 விழுக்காட்டினர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர். பட்டியலினத்தவருக்கு 3 விழுக்காடும், பழங்குடியினருக்கு ஒன்றரை விழுக்காடு மட்டுமே பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. இதேபோல், எந்த காலக்கட்டத்தை எடுத்துக் கொண்டாலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 90 விழுக்காட்டினர் உயர் சாதியினராகவே உள்ளனர். இந்த நிலையை மாற்றி அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் வகையில், உயர்நீதித்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இம்மாநாடு கோருகிறது.

    10. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்!

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை, கிராம ஊராட்சிகளில் 12.16%, ஊராட்சி ஒன்றியங்களில் 15.42%, மாவட்ட ஊராட்சிகளில் 17.25% பிரதிநிதித்துவம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைத்திருக்கிறது. கிராமப் பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தாலும், அங்குள்ள பொதுப் பிரிவு சமூகங்களைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் தான் செல்வாக்கு பெற்றவர்களாக உள்ளனர். அதனால், அவர்கள் மிகவும் எளிதாக தேர்வு செய்யப்படுகின்றனர். இது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் இடஒதுக்கீட்டை மறைமுகமாக பறிக்கும் செயலாகும். இந்த சமூக அநீதி அகற்றப்படவேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ, குறைந்தபட்சம் அதே அளவு விழுக்காடு இடஒதுக்கீட்டை உள்ளாட்சி அமைப்புகளிலும் வழங்க வேண்டும்; அதன் மூலம் தான் உள்ளாட்சி அமைப்புகளை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க முடியும். இதற்காக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு கேட்டுக்கொள்கிறது.

    11. தமிழ்நாட்டில் அனைத்துச் சமூக மக்களின் வளர்ச்சிக்காக நிதி அதிகாரத்துடன் கூடிய தனித்தனி கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட வேண்டும்!

    ஆந்திர மாநிலத்தைப் பின்பற்றி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமுதாயங்களில், 30 ஆயிரத்திற்கும் கூடுதலாக மக்கள் தொகை கொண்ட அனைத்துச் சாதிகளுக்கும், தனித்தனியாக கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார். அவ்வாறு கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு கார்ப்பரேஷனுக்கும் தலைவர்களாக அந்தந்தச் சாதிகளைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படுவார்கள்; ஒவ்வொரு சாதிக்குமான நலத்திட்ட உதவிகள், முதியோர் ஓய்வூதியம், கல்விக்கட்டணம், தொழில் தொடங்கக் கடனுதவி, மருத்துவ உதவிகள் ஆகியவை இந்த கார்ப்பரேஷன்கள் மூலமாக மட்டுமே வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பயன்கள் கிடைக்கும்.

    சமூகங்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் சிறந்த யோசனை என்பதால், அதை ஏற்றுக் கொண்டு, தமிழ்நாட்டில் 30 ஆயிரத்திற்கும் அதிக மக்கள்தொகை கொண்ட அனைத்துச் சமூகங்களுக்கும் தனித்தனி கார்ப்பரேஷன்களை அமைக்க வேண்டும்; 30 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சாதிகளை ஒருங்கிணைத்து கார்ப்பரேஷன்கள் உருவாக்கப்படவேண்டும் என்று சித்திரை முழுநிலவு மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

    12. தமிழ்நாட்டில் கல்வி, தனிநபர் வருமானம், மனிதவள குறியீட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!

    தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என்று ஆட்சியாளர்கள் பெருமைப்பட்டுக் கொண்டாலும்கூட, தமிழகத்தின் பல மாவட்டங்கள் உத்தரப்பிரதேசத்தையும், பீகாரையும்விட பின்தங்கிய நிலையில் தான் உள்ளன. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், கடைசி 15 இடங்களைப் பிடிக்கும் மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டில் தான் உள்ளன. தனிநபர் வருமானம், மனிதவளக் குறியீடு ஆகியவற்றிலும் வடமாவட்டங்கள் தான் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழகத்தின் வடமாவட்டங்களுக்கு மட்டும் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 371&கே என்ற புதிய பிரிவை சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு கோருகிறது.

    13. முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், போதைப் பொருட்களை ஒழிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

    தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை போன்ற கொடுங்குற்றங்களுக்கும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களுக்கும் முதன்மைக் காரணமாக இருப்பது மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் தான். தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டியதன் கட்டாயம் குறித்தும் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும்போதிலும் அதன்மீது எந்த நடவடிக்கையும் தமிழக அரசால் எடுக்கப்படவில்லை.

    தமிழகத்தின் பல பகுதிகளில் சமூகப் பதற்றங்கள் ஏற்படுவதற்கும், மதுப்பழக்கமும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடும் தான் காரணமாக உள்ளன. இதேநிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை உருவாகிவிடும். இதை உணர்ந்து, தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும். அதேபோல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் முற்றிலுமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்னியர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வலியுறுத்துகிறது.

    14. ஜம்மு &காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு வீர வணக்கம்: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்காலத்திலும் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு!

    ஜம்மு &காஷ்மீர் மாநிலத்தில் பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22&ஆம் நாள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 22 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது. பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அமைதியையும், இயல்புநிலையையும் ஏற்படுத்துவதற்கு உகந்தவையாக இல்லை; மாறாக, எல்லைப் பகுதியில் பதட்டத்தையும், பயங்கரவாதத்தையும் தூண்டுவதாகவே இருந்தன.

    பகல்காம் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பொதுமக்கள் 12 பேரும், இந்தியப் படை வீரர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்கள் எல்லை மீறிக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவைப் பாதுகாப்பதற்காக மே 6&ஆம் தேதி பாகிஸ்தானில் 9 இடங்களில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து கொடுத்த பதிலடி மற்றும் அதன்பின் நாட்டைக் காப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நிம்மதியளிக்கிறது.

    அதேநேரத்தில், சிந்து நதி ஒப்பந்தம் ரத்து தொடரும், இனிவரும் காலங்களிலும் பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு தொடரும் என்று மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் நிலைப்பாட்டை இந்த மாநாடு வரவேற்கிறது. நாட்டைக் காப்பதற்காக கடந்த 3 வாரங்களில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும், இனிவரும் காலங்களில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கும் சித்திரை முழுநிலவு மாநாடு முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு நிறைவேற்றப்பட்டது.

    • பாமக சார்பில் இன்று சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்று வருகிறது.
    • மாநாட்டில், 1.80 லட்சம் இருக்கைகளுடன் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று மாலை தொடங்கியுள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டது.

    தமிழ்நாடு முழுவதும் இருந்து பா.ம.க. தொண்டர்கள் மாநாட்டில் திரளாக பங்கேற்றுள்ளனர். இதற்காக 1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே அனைத்து பகுதிகளிலும் நிகழ்ச்சியை காண 3 இடங்களில் ராட்சத எல்.இ.டி. திரை வைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, 40-க்கு 20 உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

    மாநாட்டு திடலில் வன்னியர் சங்கம் உருவானது முதல் தற்போது வரையிலான வரலாற்று தொகுப்பு புகைப்பட காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

    இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கிய நிலையில், புஷ்பவனம் குப்புசாமியின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலைநிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது.

    அதைத்தொடர்ந்து, வன்னிய வள்ளல்கள் தியாகிகள் என்ற குறும்படமும் ஒளிபரப்பப்பட்டது.

    இதற்கிடையே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடைக்கு வந்த நிலையில், பாராகிளைடரில் வன்னியர் சங்கக் கொடி பறக்கவிடப்பட்டது. கொடி பறந்ததை கண்டு, ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். மேலும், மாநாட்டுக் கொடியை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். 

    • வரும் 11ம் தேதி பாமகவின் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளது.
    • பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    மகாபலிபுரம் அருகே திருவிடந்தையில் நாளை மறுநாள் பாமகவின் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில்," உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அமைதியான முறையில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், கட்டுப்பாடோடு, பாதுகாப்புடன் இங்கே நீங்கள் வந்து செல்ல வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

    • சித்திரை முழு நிலவு கூட்டத்தால் வடநெமிலி பஞ்சாயத்து பகுதியில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
    • பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகும் சூழல் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு தடை.

    மாமல்லபுரம் அருகே வருகிற 11ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு பெருவிழாவை நடத்துகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு தடைகேட்டு வடநெமிலி பஞ்சாயத்து தலைவர் பொன்னுரங்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அதில், சித்திரை முழு நிலவு கூட்டத்தால் வடநெமிலி பஞ்சாயத்து பகுதியில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகும் சூழல் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். அனுமதி வழங்க கூடாது என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி எல்.விக்டோரிய கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முகிலன், ''கடந்த 5-ந்தேதி நிகழ்ச்சிக்கு 42 நிபந்தனைகள் விதித்து, போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல'' என்று கூறினார்.

    இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, "ஏற்கனவே நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.

    • சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுகிறது.
    • மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பாமகவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது.

    சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அன்புமணி ராமதாசை முன்னிலைப்படுத்தும் வகையில் இருந்த பாடலும், அடுத்ததாக அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலையும் பா.ம.க வெளியிட்டது.

    பின்னர், சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினையை (LOGO) பாமக வெளியிட்டுள்ளது

    மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பாமகவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், வரும் 11ம் தேதி ஞாயிறு அன்று ECR, OMR சாலைகளை பொது மக்கள் பயன்படுத்த வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் சமய, சமுதாய நல்லிணக்கத்தை நிலை நிறுத்தவும், வெறுப்புக் குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
    • மாநாட்டில் பங்கேற்பது எப்படி உனது கடமையோ, அதேபோல், மாநாட்டுக்கு வரும்படி அழைக்க வேண்டியது எனது கடமை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு என்பது கூடிக் கலைவதற்கான மாநாடு அல்ல. வன்னியர் சங்கத்தின் சார்பில் தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்ற போதிலும், வன்னியர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் சமூகநீதியை வென்றெடுப்பது தான் நமது நோக்கம் ஆகும். அந்த வழக்கத்தில் இருந்து விலகாமல் இந்த மாநாடும் அதே நோக்கத்திற்காகத் தான் நடத்தப்படுகிறது. மாநாட்டில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; 69சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும், வன்னியர்களுக்கு மக்கள் தொகை, சமூக பின்தங்கிய நிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு, அனைத்து சமூகங்களுக்கும் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு; அதற்கு வசதியாக இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும். தேசிய, மாநில அளவில் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும்; கிரீமிலேயர் முறை கூடாது! அனைத்து சமூகங்களின் வளர்ச்சிக்காக நிதி அதிகாரத்துடன் தனித்தனி கார்ப்பரேஷன்கள் அமைக்க வேண்டும். தனியார் துறை, உயர்நீதித்துறையில் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்!

    உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும். அனைத்து சமூகங்களின் வீழ்ச்சிக்கும், குற்றங்கள் பெருகவும் காரணமாக இருக்கும் மது, கஞ்சாவை ஒழித்து போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!

    கல்வி, தனிநபர் வருமானம், மனிதவளக் குறியீடு போன்றவற்றில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வட மாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!

    தமிழ்நாட்டில் சமய, சமுதாய நல்லிணக்கத்தை நிலை நிறுத்தவும், வெறுப்புக் குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

    நான் விடுத்த அழைப்புகளை ஏற்று மாமல்லபுரத்தை நோக்கி அணிவகுக்க நீங்கள் அனைவரும் தயாராகி விட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனாலும், மாநாட்டில் பங்கேற்பது எப்படி உனது கடமையோ, அதேபோல், மாநாட்டுக்கு வரும்படி அழைக்க வேண்டியது எனது கடமை. ஆகவே, மீண்டும் ஒருமுறை அழைக்கிறேன். 'பாட்டாளிப் படைகளே' அணிவகுக்கத் தயாராகுங்கள் மாமல்லபுரம் நோக்கி.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×