என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theft"

    • அவர் விழித்துக்கொண்டு சத்தம் போடக்கூடும் என்று திருடர்கள் அஞ்சினர்.
    • பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவரது கால்களை வெட்டி, வெள்ளி கால் கொலுசுகள் திருடப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ராஜஸ்தானில் 90 வயது மூதாட்டியைப் படுக்கையோடு தூக்கிச் சென்று மர்ம நபர்கள் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டின் வராந்தாவில் கட்டிலில் 90 வயதான அந்த மூதாட்டி நேற்று உறங்கிக் கொண்டிருந்தார்.

    கடந்த புதன்கிழமை நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், மூதாட்டி அணிந்திருந்த கனமான வெள்ளி நகைகளைக் கழற்ற முயன்றனர்.

    ஆனால், அவர் விழித்துக்கொண்டு சத்தம் போடக்கூடும் என்று அஞ்சிய திருடர்கள், அவரை அவர் படுத்திருந்த கட்டிலோடு அப்படியே தூக்கிக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு வயல்வெளிக்குச் சென்றனர்.

    ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்றதும், மூதாட்டி அணிந்திருந்த வெள்ளி மற்றும் பிற நகை நகைகளை திருடர்கள் பிடுங்கிச் சென்றனர்.

    மறுநாள் காலையில், மூதாட்டி கைகள் கட்டப்பட்ட நிலையில் வயல்வெளியில் கட்டிலுடன் மிகுந்த அச்சத்தில் இருந்த மூதாட்டியை கண்ட கிராம மக்கள் அவரை மீட்டனர்.

    இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    முன்னதாக ராஜஸ்தானின் சாவாய் மாதோபூர் நகரில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவரது கால்களை வெட்டி, வெள்ளி கால் கொலுசுகள் திருடப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.  

    • அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.
    • திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.

    அவரின் இறுதிச் சடங்கு கடந்த வியாழக்கிழமை பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

    அதிக கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.

    இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, சுமார் 15 பேர் தங்கள் தங்கச் சங்கிலிகள் மற்றும் பொருட்கள் திருடு போனதாகப் போலீசில் புகார் அளித்தனர்.

    திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 7 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

    அவர்களின் வாக்குமூலம் அடிப்படையில் திருடப்பட்ட பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  

    • அவரை தொடர்ந்து முகக்கவசம் அணிந்த மற்றொரு நபர் உள்ளே செல்கிறார்.
    • அந்த நபர் படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி ஓடிவிட்டார்.

    மத்திய பிரதேச போபால் எய்ம்ஸ் மருத்துவமனை லிப்ட்டில் பெண் ஊழியரின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோவில், மருத்துவமனையின் பெண் ஊழியர் ஒருவர் லிபிட்டிற்குள் செல்கிறார். அவரை தொடர்ந்து முகக்கவசம் அணிந்த மற்றொரு நபர் உள்ளே செல்கிறார். லிப்ட் மற்றொரு தளத்தை அடைந்ததும் கதவு திறந்தபோது அந்த நபர் அப்பெண்ணின் நகையை பறித்துச் சென்றார். 

    அந்தப் பெண் ஊழியர் அவரை துரத்திச் சென்றார். ஆனால் அதற்குள் அந்த நபர் படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி ஓடிவிட்டார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    எய்ம்ஸ் வளாகத்திற்குள்ளேயே இத்தகைய துணிகரமான திருட்டு நடந்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.  

    • மறுநாள் காலை மக்கள் பார்த்தபோது பாலம் இருந்த இடமே தெரியாமல் மறைந்திருந்தது.
    • 2022-ல் பீகாரில் இதே பாணியில் ஒரு பாலம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சத்தீஸ்கர் மாநிலம் கோர்வா நகரில், சுமார் 40 ஆண்டுகள் பழமையான 10 டன் எடையுள்ள இரும்புப் பாலம் ஒன்றை மர்ம நபர்கள் ஒரே இரவில் துண்டு துண்டாக வெட்டித் திருடிச் சென்றுள்ளனர்.

    40 ஆண்டு பழமையான பாலம் ஜனவரி 16 இரவு 11 மணி வரை அங்கு தான் இருந்தது. ஆனால் மறுநாள் காலை மக்கள் பார்த்தபோது பாலம் இருந்த இடமே தெரியாமல் மறைந்திருந்தது.

    இதுதொடர்பாக நடந்த விசாரணையில், சுமார் 15 பேர் கொண்ட திருட்டு கும்பல், Gas cutter- உபகரணங்களை பயன்படுத்திப் இரவோடு இரவாக பாலத்தை சிறு துண்டுகளாக வெட்டி, லாரிகளில் ஏற்றிச் சென்றது தெரியவந்துள்ளது.

    இந்த விவகாரத்தில் தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பாலின் சில இரும்புத் துண்டுகளையும் போலீசார் ர் மீட்டுள்ளனர்.

    முன்னதாக 2022-ல் பீகாரில் இதே பாணியில் ஒரு பாலம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள MMRDA மைதானத்தில் பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்த இசை நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான வித்யா பாலன், மலைக்கா அரோரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 80 மொபைல் போன்கள் திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் ஏழு முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்துள்ளனர்.

    சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து டிரான்ஸ்பார்மர் மாயமான மினகம்பத்தை பார்வையிட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரான்ஸ்பார்ரை திருடிய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த குன்னவளம் கிராமத்தில் உள்ள வயல்வெளி அருகே மின்கம்பத்தில் டிரான்ஸ் பார்மர் புதிதாக அமைக்கப்பட்டு இருந்தது.

    நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் மின் இணைப்பு துண்டித்து மின்கம்பத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரை தனியாக கழற்றி திருடி சென்றனர்.

    சிறிது தூரத்தில் டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதியை வீசிவிட்டு அதில் இருந்த செம்புகம்பிகள் அனைத்தையும் தூக்கி சென்று விட்டனர்.

    இன்று காலை அப்பகுதி மக்கள் வந்தபோது டிரான்ஸ்பார்மர் திருடு போய் இருந்ததும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து டிரான்ஸ்பார்மர் மாயமான மினகம்பத்தை பார்வையிட்டனர்.

    அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் டிரான்பார்மர் திருடு சம்பந்தபமாக மின்வாரிய அதிகாரிகள் திருவள்ளூர் தாலுக்காபோலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரான்ஸ்பார்ரை திருடிய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிளம்புவதற்கு முன் ரத்த கறைகளை நீக்க வீட்டின் கழிவறை ஷவரில் இருவரும் குளித்து விட்டு சென்றுள்ளனர்.
    • அவர்களில் ஒருவன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் அகர்வால் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளான்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த வியாழக்கிழமை அடுக்குமாடி வீட்டில் நடந்த கொலை கொள்ளை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    சைபராபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் 50 வயதான ரேணு அகர்வால் ஸ்டீல் பிஸ்னஸ் செய்யும் தனது கணவர் மற்றும் 26 வயது மகனுடன் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் ரேணு அகர்வால் தனியாக இருந்தபோது இருவர் அவரை பிரஷர் குக்கரால் தலையில் அடித்து பணம் வைக்கப்பட்டுள்ள லாக்கர் பாஸ்வேர்டை கேட்டு சித்ரவதை செய்தனர்.

    பின்னர் கத்தி மற்றும் கத்திரிக்கோலால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 40 கிராம் தங்கம், 1 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். கிளம்புவதற்கு முன் ரத்த கறைகளை நீக்க வீட்டின் கழிவறை ஷவரில் இருவரும் குளித்து விட்டு சென்றுள்ளனர்.

    வேலைக்கு சென்ற மகனும், கணவனும் வந்து பார்த்தபோது ரேணு அகர்வால் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். 

    சம்பவத்தன்று 13 வது மாடியில் இருந்து இருவரும் வெளியேறும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் அவர்களை அடையாளம் கண்டு தேடி வந்தது.

    இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் வைத்து குற்றவாளிகளை கைது செய்தனர். இருவரும் ஜார்கண்ட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

    அவர்களில் ஒருவன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் அகர்வால் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளான். அதே குடியிருப்பின் அடுத்த தலத்தில் மற்றொரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தவனுடன் சேர்ந்து இந்த கொலை கொள்ளை நிகழ்த்தப்பட்டுள்ளது.   

    • கொஞ்ச நேரத்தில் அவன் நன்றாக அசந்து தூங்கினான்.
    • காளி தேவியே அவனுக்கு தக்க தண்டனை கொடுத்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூமின் சந்தை பகுதியில் காளி கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு வழக்கமான பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

    நள்ளிரவு நேரம் மர்மநபர் ஒருவன் கோவிலின் பின்பக்க கதவை உடைத்து கொண்டு கோவிலுக்குள் புகுந்தான். பின்னர் அங்கிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கீரிடம் உள்ளிட்டவைகளை திருடினான்.

    அப்போது அவனுக்கு தூக்கம் கண்ணை கட்டியது. இதனால் சிறிது நேரம் தூங்கி விட்டு செல்லலாம் என நினைத்து அவன் கோவில் கருவறைக்குள் தரையில் படுத்தான். கொஞ்ச நேரத்தில் அவன் நன்றாக அசந்து தூங்கினான்.

    அதிகாலை கோவிலுக்கு வந்த பூசாரி கருவறையில் ஒருவன் தூங்கி கொண்டு இருந்ததையும், அவன் அருகே நகைகள் சிதறி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது பற்றி அவர் ஊருக்குள் ஓடோடி சென்று விஷயத்தை சொன்னார். இதையடுத்து ஊர் மக்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    அப்போதும் அந்த மர்மநபர் எழுந்திரிக்கவில்லை. போலீசாரும், பொதுமக்களும் அவனை தட்டி எழுப்பினார்கள், இதனால் திடுக்கிட்டு எழுந்த மர்மநபர் தன் முன் போலீசார் நிற்பதை பார்த்து அங்கிருந்து ஓட முயன்றான்.

    உடனே போலீசார் அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவனது பெயர் வீர் நாயக் என்பது தெரியவந்தது. கோவிலுக்குள் திருடுவதற்காக நுழைந்ததாக அவன் போலீசாரிடம் தெரிவித்தான். அவன் தூங்கியதால் திருடு போக இருந்த நகைகள் தப்பியது.

    காளி தேவியே அவனுக்கு தக்க தண்டனை கொடுத்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    • தூங்கிக் கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி அவரிடம் விசாரித்தனர்.
    • கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சின்னையன் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை அருகே உள்ள கோவைப்புதூரில் பாலவிநாயகர் மற்றும் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.

    நேற்றுமுன்தினம் இரவு பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டி விட்டுச்சென்றார். மறுநாள் காலையில் அவர் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது.

    அதேசமயம் உண்டியல் அருகே ஒரு வாலிபர் போதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். உடனே பூசாரி, கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர். தூங்கிக் கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி அவரிடம் விசாரித்தனர்.

    கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட வந்ததாகவும், பணத்தை திருடிவிட்டு போதையில் அங்கேயே தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் குனியமுத்தூர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சின்னையன் (வயது 42), புதுவை மாநிலம் காரைக்கால் நெடுங்காடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    அவர் மீது புதுவை மாநிலத்தில் திருட்டு வழக்குகள் உள்ளன. இதனால் அங்கிருந்து வெளியேறி கோவைப்புதூருக்கு வந்து வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    நேற்றுமுன்தினம் இரவு கோவில் அருகே வந்ததும் பழைய நினைவுகள் வந்து உண்டியலை உடைத்து பணம் திருட முடிவு செய்துள்ளார். உடனே இரும்பு கம்பியை கொண்டு கோவில் கதவை உடைத்துள்ளார். உள்ளே சென்றபின் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.8,250 பணத்தை திருடியிருக்கிறார். அப்போது மழை பெய்துள்ளது. இதனால் மழை நின்றதும் வெளியே செல்லலாம் என நினைத்து உண்டியல் அருகே படுத்துள்ளார். ஆனால் அங்கு அயர்ந்து தூங்கி விட்டதாக சின்னையன் தெரிவித்தார்.

    கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சின்னையன் கைது செய்யப்பட்டார். அவர் திருடிய உண்டியல் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னையன் ஜெயிலில் அடைக்கப்பட்டார். திருடவந்த இடத்தில் கொள்ளையன் தூங்கியதால் பிடிபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜேஷ் உரங் சம்பவ இடத்தில் இருந்து டீசல் லைன் வால்வை மூடிவிட்டு சுவர் மீது குதித்து தப்பிக்க முயன்றார்.
    • விரைவாக பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட, ஷ்ரவன் ஒரு கும்பலை உருவாக்கி, குழாய்களில் இருந்து டீசலைத் திருட தொடங்கி உள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாய் வழியை உடைத்து டீசல் திருடிய வழக்கில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    HPCL நிறுவனத்தின் இணைப்பில் கசிவு இருப்பதாக கடந்த ஒரு வாரமாக போலீசாருக்கு தொடர்ந்து தகவல் வந்துள்ளது. ரோந்துப் பணியின்போது மட்டுமே கசிவு ஏற்பட்ட இடத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதால் அஜ்மீர் மற்றும் ஜெய்ப்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

    பக்ரு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பூட்டிய வீட்டைக் கவனித்தனர். இரவில் வீட்டில் சிலர் நடமாட்டம் இருந்தது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது.

    சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் உரிமையாளரை அழைத்து, வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினர்.

    அப்போது, டீசல் கசிவு லைன் வால்வை இயக்கும் ராஜேஷ் உரங் சம்பவ இடத்தில் இருந்து டீசல் லைன் வால்வை மூடிவிட்டு சுவர் மீது குதித்து தப்பிக்க முயன்றார்.

    ராஜேஷை பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அசாம் மாநிலம் திப்ருகாரை சேர்ந்தவர் என்றும், ஷ்ரவன் கும்பலின் தொடர்பு குறித்த தகவல்கள் தெரியவந்தன.

    சம்பவ இடத்திலிருந்து ஒரு லாரி மீட்கப்பட்டதாக பக்ரு போலீசார் தெரிவித்தனர். அதில் ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி பொருத்தப்பட்டிருந்தது. 10,000 லிட்டர் தண்ணீர் தொட்டியில் டீசல் நிரப்பி இரவில் விற்பனை செய்ய செல்வார்கள். லாரியின் மேல் இரண்டு மேற்பரப்புகளிலும் தண்ணீர் பாட்டில்கள் கொண்ட அட்டைப்பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக டி.சி.பி அமித் குமார் தெரிவித்தார்.

    தலைமறைவான டீசல் திருட்டு கும்பலின் மூளையாக செயல்பட்ட ஷ்ரவன் சர்தார், 2005 முதல் 2007 வரை HPCL நிறுவனத்தின் டீசல் பாதையை பராமரிக்கும் தொழிலாளியாக பணியாற்றினார்.

    HPCL நிறுவனத்தின் குழாய்கள் கட்ச் (குஜராத்) முந்த்ராவிலிருந்து சிரோஹி, பாலி, அஜ்மீர், ஜெய்ப்பூர், ஆல்வார் மற்றும் பிற பகுதிகள் வழியாக இயக்கப்படுகின்றன. அந்த நேரத்தில், அஜ்மீர் மாவட்ட எல்லைக்குள் உள்ள குழாயில் கசிவு பிரச்சனை இருந்தது. பொறியாளர்களால் கூட இந்த பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. ஷ்ரவன் இந்த பிரச்சனையை தீர்த்துள்ளார். இதன் பிறகு, அவரது சக ஊழியர்கள் அவரை 'சர்தார்' என்று அழைக்கத் தொடங்கி உள்ளனர். அப்போது தனது வேலையின்போது, ஷ்ரவன் தனது சக ஊழியர்களிடமிருந்து குழாய் பழுதுபார்க்கும் வேலையைக் கற்றுக்கொண்டார். இதற்கு முன்பு, ஷ்ரவன் டெல்லியில் ஒரு பிளம்பராகப் பணியாற்றினார்.

    2005 முதல் 2007 வரை, ஷ்ரவன் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக பணியாற்றி உள்ளார். இதன் பிறகு, விரைவாக பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட, ஷ்ரவன் ஒரு கும்பலை உருவாக்கி, குழாய்களில் இருந்து டீசலைத் திருட தொடங்கி உள்ளார்.

    ராஜஸ்தான் மற்றும் அரியானாவில் உள்ள HPCL மற்றும் IOCL நிறுவன இணைப்புகளில் கசிவுகளை உருவாக்கி, ஷ்ரவனின் கும்பல் இதுவரை பல கோடி ரூபாய் மதிப்புள்ள டீசலைத் திருடி உள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்த வேலையில் ஷ்ரவன் தனது நண்பர்களை மட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்களையும் ஈடுபடுத்தி உள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த பக்ரு சம்பவத்தில் அவரது மைத்துனர் தர்மேந்திர வர்மா என்ற ரிங்கு சிங்கும் ஈடுபட்டுள்ளார்.

    • சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த சிறுவனின் தாயாரும் சிறுவனை திட்டி, அடித்தார்.
    • அம்மா, நான் திருடன் இல்லை. நான் எதையும் திருடவில்லை. நான் சென்றபோது மாமா (கடைக்காரர்) அங்கு இல்லை.

    மேற்கு வங்கத்தில், சிப்ஸ் பாக்கெட்டை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு தோப்புக்கரணம் போட வைக்கப்பட்ட சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மேற்கு வங்கத்தின் மேற்கு மெடினிபூர் மாவட்டத்தில் பன்சுரா பகுதியில் உள்ள கோசாய் பியர் பஜாரில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்த சம்பவம் நடந்தது.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, ஏழாம் வகுப்பு மாணவரான கிருஷ்நேந்து தாஸ், சிப்ஸ் பாக்கெட் வாங்க உள்ளூர் கடைக்குச் சென்றான். கடை உரிமையாளர் சுபாங்கர் தீட்சித் அந்த நேரத்தில் அங்கு இல்லை.

    இறந்தவரின் தாய் கண்ணீருடன் போலீசாரிடம் கூறுகையில், "மாமா, நீங்கள் சிப்ஸ் எடுத்து தருகிறீர்களா?" என்று கிருஷ்ணேந்து கடைக்காரரை பலமுறை கூப்பிட்டதாக கூறினார். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை, அதனால் சிறுவன் சிப்ஸ் பாக்கெட்டுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

    சிறிது நேரத்தில் கடைக்குத் திரும்பிய உரிமையாளர் தீட்சித், சிறுவனைத் துரத்திச் சென்று பிடித்தார். அவன் எல்லோர் முன்னிலையிலும் கிருஷ்நேந்துவை கன்னத்தில் அறைந்து காலால் உதைத்தார். பின் அவனை அனைவர் முன்னிலையிலும் தோப்புக்கரணம் போட வைத்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த சிறுவனின் தாயாரும் சிறுவனை திட்டி, அடித்தார்.

    கடையின் முன் கிடந்த சிப்ஸ் பாக்கெட்டை மட்டும் தான் எடுத்துக் கொண்டதாகவும், அதற்கு பணம் செலுத்த இருந்ததாகும் சிறுவன் கூறினான். ஆனால் கடைக்காரர் அவரை நம்பவில்லை, அவன் பொய் சொன்னதாக குற்றம் சாட்டினார்.

    இந்த சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்து அவமானப்படுத்தப்பட்ட கிருஷ்நேந்து தனது தாயுடன் வீட்டிற்குச் சென்றான். அவன் தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டான். நீண்ட நேரமாகியும் கிருஷ்நேந்து வெளியே வராததால், அவரது தாயார் சந்தேகமடைந்து, உள்ளூர்வாசிகளின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு கிருஷ்நேந்து மயக்கத்தில் வாயில் நுரை தள்ளியபடி கிடப்பதைக் தாய் கண்டார்.

    சிறுவனுக்கு அருகில் பாதி காலியான பூச்சிக்கொல்லி டப்பாவும், அவன் வங்காள மொழியில் எழுதிய ஒரு கடிதமும் இருந்தன.

    "அம்மா, நான் திருடன் இல்லை. நான் எதையும் திருடவில்லை. நான் சென்றபோது மாமா (கடைக்காரர்) அங்கு இல்லை. திரும்பி வரும் வழியில் சாலையில் ஒரு குர்குரே பாக்கெட் இருப்பதைக் கண்டு அதை எடுத்துக்கொண்டேன்.

    எனக்கு குர்குரே மிகவும் பிடிக்கும். இவைதான் என் கடைசி வார்த்தைகள். என்னை மன்னியுங்கள்" என்று அந்தக் கடிதத்தில் சிறுவன் கிருஷ்ணேந்து எழுதியிருந்தான். கிருஷ்ணேந்து தம்லுக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டான்.

    ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும் கடை உரிமையாளர் தப்பி ஓடிவிட்டார்.  

    • 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • கோவில் உண்டியல்களை உடைத்து நகைகள் கொள்ளை அடித்தது தொடர்பாக சுமார் 40 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் துறையூர், ஜம்புநாதபுரம், தா பேட்டை, உப்பிலியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் சுவாமிகளுக்கு அணிந்திருந்த நகை மற்றும் உண்டியல்கள் உடைத்து காசுகளை திருடும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் முசிறி டி.எஸ்.பி. சுரேஷ்குமார் மேற்பார்வையில் தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாபன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், ரவி, அறிவழகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கண்ணனூர் பாளையம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படி வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியை சேர்ந்த தமிழ்பாரதி(வயது 22), திருச்சியைச் சேர்ந்த சரவணன்(44) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முதலில் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். பின்னர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு கோவில்களில் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இவர்களில் தமிழ்பாரதி 7-ம் வகுப்பு வரையும், சரவணன் 8-ம் வகுப்பு வரையுமே படித்துள்ளனர். ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை கையாள்வதில் கில்லாடியாக திகழ்ந்த அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் பல்வேறு மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் கோவில்கள் உள்ளது என்றும், காட்டுக்கோவில்கள் எங்கெங்கு உள்ளது என்றும் கண்டறிந்து உள்ளனர்.

    பின்னர் கூகுள் மேப்பில் கோவில்களில் உள்ள சுவாமி சிலைகளின் படங்களை வைத்து, சிலைகளில் நகைகள் ஏதேனும் உள்ளதா என்று பதிவிட்ட புகைப்படங்களை கண்டறிந்து கொள்ளையடித்து வந்துள்ளனர்.

    இதை தொடர்ந்து தமிழ்பாரதி, சரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கோவில்களில் திருடிய சுமார் ரூ.9 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் தங்க நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து திருடப்பட்ட நாணயங்களையும், திருட்டுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதில் தமிழ் பாரதி மீது அரியலூர் மாவட்ட பகுதிகளில் கோவில் உண்டியல்களை உடைத்து நகைகள் கொள்ளை அடித்தது தொடர்பாக சுமார் 40 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    7-ம் வகுப்பு படித்துவிட்டு செல்போன் அனுபவத்தால் கூகுள் மேப் மூலம் கோவில்களில் நகைகள் மற்றும் உண்டியல்களை உடைத்து திருடிய சம்பவம் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×