search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோதுமை"

    • கடந்த சில நாட்களாக மீண்டும் கோதுமை விலை அதிகரித்து வருகிறது.
    • கோதுமை இருப்பு வைக்க மேலும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து இருக்கிறது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோதுமை விலை அதிகரித்ததை தொடர்ந்து விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

    இதன் ஒரு பகுதியாக கோதுமை பதுக்கலை தடுப்பதற்காக பெரும் வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    அதாவது கோதுமை மொத்த விற்பனையாளர்கள் மற்றும் பெரும் வணிகர்கள், அதிகபட்சமாக 3,000 டன் கோதுமையே இருப்பு வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கோதுமை விலை குறைந்தது.

    ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கோதுமை விலை அதிகரித்து வருகிறது. எனவே கோதுமை இருப்பு வைக்க மேலும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து இருக்கிறது. இது தொடர்பாக மத்திய உணவுத்துறை செயலளர் சஞ்சீவ் சோப்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கோதுமையை சிலர் தேவைக்கு அதிகமாக இருப்பு வைத்துக்கொண்டு, நாட்டில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தேவையில்லாமல் விலைவாசியை உயர்த்தி வருகின்றனர்.

    கோதுமையின் சமீபத்திய விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, இருப்பு வரையறைகளை ஆய்வு செய்தோம்.

    அதன்படி பெரும் வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நீண்ட சங்கிலித்தொடர் சில்லறை விற்பனையாளர்களுக்கான இருப்பு வரம்பு 2,000 டன்னாக குறைக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் உணவு பதப்படுத்துவோர் மற்றும் சிறிய சில்லறை விற்பனையாளர்களுக்கான இருப்பு வரம்புகளில் மாற்றம் இல்லை. மத்திய அரசின் முடிவுப்படி கோதுமை இருப்பு அளவை 2,000 டன்களாகக் குறைப்பதற்கு பெரும் வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டதை தொடர்ந்து கோதுமை விலை சீரான நிலைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. தற்போது, சில்லறை விற்பனையில் கோதுமை விலை சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ.30 என்ற அளவில் நிலையாக உள்ளது. நாட்டில் கோதுமை போதுமான அளவு இருப்பு உள்ளது. நேற்றைய நிலவரப்படி, அரசு கிடங்குகளில் 202 லட்சம் டன் இருக்க வேண்டும் என்ற நிலையில், 255 லட்சம் டன்னாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு சஞ்சீவ் சோப்ரா கூறினார்.

    • 42 வேகன்களில் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
    • கோதுமையை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை பொருட்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து இன்று 2600 டன் கோதுமை சரக்கு ரெயில் மூலமாக 42 வேகன்களில் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. சரக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட கோதுமையை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றி பள்ளிவிளையில் உள்ள கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிவிளையில் உள்ள கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோதுமையை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கோதுமை விலையில் கடந்த மாதத்தில் சற்று ஏற்றம் காணப்பட்டது.
    • கோதுமைக்கான இறக்குமதி வரியை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை.

    புதுடெல்லி:

    இந்தியாவில் அத்தியாவசிய உணவுப்பொருட்களில் ஒன்றாக கோதுமை உள்ளது. ஆனால் கோதுமையின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

    எனவே இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இதை மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கோதுமை விலையில் கடந்த மாதத்தில் சற்று ஏற்றம் காணப்பட்டது. குடோன் மட்டத்திலேயே சுமார் 8 சதவீத விலை உயர்வு உள்ளது.

    அதேநேரம் மொத்தம் மற்றும் சில்லறை விலை அந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்றாலும், கோதுமையை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்து உள்ளது.

    அதன்படி அடுத்த ஆண்டு (2024) மார்ச் 31-ந்தேதி வரை வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வர்த்தகர்கள் உள்ளிட்டோர் கோதுமையை இருப்பு வைக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. 15 ஆண்டுகளில் முதல் முறையாக எடுக்கப்பட்டு உள்ள இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

    கோதுமைக்கான இறக்குமதி வரியை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஏனெனில் நாட்டில் போதுமான அளவுக்கு கோதுமை வினியோகம் உள்ளது. கோதுமை ஏற்றுமதிக்கான தடை கூட தொடர்கிறது.

    நாட்டில் போதுமான அளவு கோதுமை கையிருப்பு உள்ளது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கையிருப்பு வைத்திருப்பதோடு, பதுக்கல்காரர்களும் இருப்பு வைத்திருக்கின்றனர். இவ்வாறு நாட்டில் போதுமான அளவு கோதுமை இருப்பு உள்ளதால் இறக்குமதியை நாங்கள் ஆதரிக்கவில்லை.

    மேலும் கோதுமை வினியோகம் தாராளமாக இருப்பதை உறுதி செய்வதற்காக வெளிச்சந்தை விற்பனை திட்டத்தில் மத்திய தொகுப்பில் இருந்து 15 லட்சம் டன் கோதுமையை பெரிய நுகர்வோர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதைப்போல அரிசியும் வெளிச்சந்தை விற்பனை திட்டத்தில் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார்.

    • வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
    • கோதுமை இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரஷியாவிற்கு பதிலாக இந்தியாவை நம்பி இருக்கிறது.

    துபாய்:

    இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இறக்குமதியாகும் கோதுமை மற்றும் கோதுமை மாவை மறு ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    ரஷியா-உக்ரைன் போர் தொடங்கியதை தொடர்ந்து, ஐக்கிய அமீரகத்துக்கு ரஷியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்வது தடைபட்டது. இந்த நிலையில், கோதுமை இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரஷியாவிற்கு பதிலாக இந்தியாவை நம்பி இருக்கிறது. இந்நிலையில் கடந்த மே 13-ஆம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் தூதரக வழிகளில் இந்திய அரசிடம் கோதுமையை ஏற்றுமதி செய்யுமாறு கோரிக்கையை முன்வைத்தன. இருப்பினும், அத்தகைய கோரிக்கைகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழு இன்னும் முடிவு செய்யவில்லை

    இந்நிலையில் மே 13-ஆம் தேதிக்கு முன்னர், இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்தியாவில் உற்பத்தியாகும் கோதுமையை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அந்நாடு தடை விதித்துள்ளது. அவ்வாறு ஏற்றுமதி செய்ய விரும்பும் அமீரக நாட்டு நிறுவனங்கள், அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு அமைச்சகத்திடம் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. 

    ×