

மத்திய பிரதேசத்தின் மைஹர் மாவட்டத்தில் பாத்திக்வான் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவானது நோட்டு, புத்தக பேப்பரில் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் காகிதங்களில் உணவை வைத்துச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தை குவித்து வருகிறது.
மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு திரிபாதி மற்றும் மதிய உணவுப் பிரிவு பொறுப்பாளருக்கு மெத்தனமாகச் செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மோகன் யாதவ் தலைமையில் ஆளும் பாஜக அரசை விமர்சித்த அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சங்கீதா சர்மா, "இதுதான் உங்கள் நல்லாட்சியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்த்தின் ஷீயோபுர் பகுதியிலும் இதேபோல பேப்பரில் மதிய உணவு வழங்கப்பட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.