கேரள பெண் மந்திரி மீது தாக்குதல்- காங்கிரஸ் மாணவர் சங்க நிர்வாகிகள் 5 பேர் கைது

தாக்குதல் சம்பவம் குறித்து கண்ணூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்திற்கு பின்னால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
கேரள பெண் மந்திரி மீது தாக்குதல்- காங்கிரஸ் மாணவர் சங்க நிர்வாகிகள் 5 பேர் கைது
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் ஆட்சியில் உள்ள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மந்திரி சபையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் வீணா ஜார்ஜ். இவர் நேற்று கண்ணூரில் நடைபெற்ற பன்னாட்டு ஆயுர்வேத மருத்துவ ஆய்வு மாநாட்டை தொடங்கி வைத்து விட்டு திருவனந்தபுரம் செல்வதற்காக கண்ணூர் ரெயில் நிலையம் வந்தார்.

அப்போது அங்கு திரண்ட காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர், வீணா ஜார்ஜிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்புக் கொடியுடன் வந்து கோஷமிட்ட அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். இருப்பினும் அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மந்திரி வீணா ஜார்ஜ் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த அவர் கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாக்குதல் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் முதல்-மந்திரி பினராயி விஜயன், கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு வந்து வீணா ஜார்ஜிடம் நலம் விசாரித்தார். தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார். தாக்குதலுக்கு உள்ளான வீணா ஜார்ஜ், கழுத்தில் வலி இருப்பதாக கூறியதை தொடர்ந்து, பரியாரம் பகுதியில் உள்ள கண்ணூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தனர். இந்த சூழ்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து கண்ணூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கேரள மாணவர் காங்கிரசின் கண்ணூர் மாவட்டத் தலைவர் எம்.சி. அதுல், பொருளாளர் அக்ஷய் மட்டுல் மற்றும் நிர்வாகிகள் முபாஸ், பிதுல் பாலன் மற்றும் முகமது யாசின் ஆகியோர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதற்கிடையில் பெண் மந்திரி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் அழைப்பு விடுத்தார். இதனால் மாநிலத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மகளிர் மற்றும் மாணவர் பிரிவுகள் இணைந்து கண்ணூர் நகரில் தனித்தனி போராட்ட பேரணிகளை நடத்தியது. இந்த பேரணியின் போது காங்கிரஸ் தேர்தல் பணிக்காக வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அங்குள்ள காங்கிரஸ் அலுவலகம் மீது கல் வீசப்பட்டதில் மாநில நிர்வாகி பர்ஹான் முண்டேரி காயமடைந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் கண்ணூர் கோடியேரி பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com