என் மலர்
இந்தியா

#Kerala-வை அதிரவைத்த 'ரூ.1 செருப்பு' அறிவிப்பு..!- தள்ளுமுள்ளு, போலீஸ் தடியடியால் ரணகளமான கடை திறப்பு விழா
- சிறப்பு கூப்பன், செருப்புகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.
இலவசம்.. மலிவு விலையில் பொருட்கள் என்ற அறிவிப்புகள் மக்களுக்கு மட்டுமின்றி பலருக்கும் சிரமத்தை தான் தருகின்றன. இதுபோன்று வெளியான ஒரு அறிவிப்பால் திரண்ட மக்கள் கூட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் கோழிக்கோடு வைக்கம் முகமது பஷீர் சாலையில் ஒரு செருப்பு கடை திறப்பு விழா நடந்தது. இதனை முன்னிட்டு ஒரு ரூபாய் நோட்டை கொண்டு வந்தால் சிறப்பு கூப்பன், செருப்புகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
காலை 10 மணிக்கு திறப்பு விழாவின்போது காலணிகள் வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் வெளியான இந்த அறிவிப்பை பார்த்து இன்று அதிகாலையிலேயே ஏராளமானோர் கடை முன்பு திரண்டனர்.
கடை திறந்தவுடன், சலுகையை பயன்படுத்திக் கொள்ள இளைஞர்கள் கடைக்குள் நுழைய போட்டியிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் அதிகமாகி நிலைமை மோசமடைவதை கண்ட கடை உரிமையாளரே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். அதன்பிறகே கூட்டம் கலைந்தது. இந்த சம்பவத்தின்போது ஓடிய பலரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் கூட்டத்தை உருவாக்கியதற்காகவும், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததற்காகவும் கடைக்காரர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.






