search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private School"

    • பள்ளி அலுவலக இ-மெயிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி அலுவலக இ-மெயிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தனியார் பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கடந்த மாதம் சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • யுடெமி என்ற ஆன்லைன் வழியாக அயல்நாட்டு மொழிகளை கற்கத் தொடங்கினார்.
    • ஆங்கில துறை மாணவ-மாணவிகளுக்கு மொழிப்பயிற்சி பட்டறை வகுப்புகள் எடுத்து வருகிறார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.எம். காலனியைச் சேர்ந்த கண்ணன்-அனுப்பிரியா தம்பதியின் மகள் தன்மயா (வயது 13). இவர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தனது சிறு வயது முதலே தமிழ் ஆங்கிலத்தை தவிர்த்து பிற மொழிகளை கற்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.

    இதற்காக யுடெமி என்ற ஆன்லைன் வழியாக அயல்நாட்டு மொழிகளை கற்கத் தொடங்கினார். பிரான்ஸ், பிரட்டிஷ், ஆஸ்த்திரேலியா, அமெரிக்கன் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஆங்கில மொழிகளை இலக்கணப் பிழையின்றி எழுதி படிக்க கற்றுக் கொண்டார். உச்சரிப்பு, எழுத்து, வாக்கியம், இலக்கணம் ஆகியவற்றை வீடியோ வடிவிலும், பி.டி.எப்., டெக்ஸ்ட் வடிவிலும் புதிர் கேள்விகள், வினாடி வினா மூலம் கற்றுத் தேர்ந்தார்.

    இது குறித்து ஆன்லைன் மூலம் நடந்த தேர்விலும் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றார். இவரது திறமையை கண்டு திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இவர் மொழித் திறன் பயிற்றுவிக்கும் வாய்ப்பை பெற்றார்.

    ஆங்கில துறை மாணவ-மாணவிகளுக்கு மொழிப்பயிற்சி பட்டறை வகுப்புகள் எடுத்து வருகிறார். 5 வெளிநாட்டு ஆங்கில மொழியை அந்த நாட்டின் நளினத்தில் உரையாற்றி கல்லூரி மாணவிகளுக்கு பயிற்றுவித்து அவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

    பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் எந்தவித தயக்கம் மற்றும் கூச்சம் இருக்க கூடாது என்று கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். இவர் பேசும் ஆங்கில உச்சரிப்புக்கு கல்லூரி பேராசிரியர்கள் கூட பேசுவதற்கு திணறி வருகின்றனர் என்பது கூடுதல் விஷயமாகும்.

    தமிழகத்தில் பிற மொழிகளை கற்கக்கூடாது என்று ஒரு சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்திய மொழிகளைக் கடந்து அயல்நாட்டு மொழிகளையும் கற்று அதனை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்றுவித்து 8ம் வகுப்பு மாணவி அசத்தி வருவதோடு இந்த காலத்திலேயே வருவாயும் ஈட்டி வருகிறார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • பாதிக்கப்பட்ட 22 மாணவர்களையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது.
    • கிளினர் ராஜவேல் மீது வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ், விஜயபுரத்தில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை புறப்பட்டது. பஸ்சினை ஈரியூரை சேர்ந்த கோவிந்தன் (வயது 47) ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் பள்ளியின் பாத்ரூமை கழுவ 2 லிட்டர் ஆசிட் வாங்கி வைக்கப்பட்டிருந்தது.

    பஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஆசிட் பாட்டில் சாய்ந்து விழுந்து, ஆசிட் கொட்டியது. இதனால் பஸ் முழுவதும் கடும் நெடியுடன் துர்நாற்றம் வீசியது. இதில் மாணவர்களுக்கு மூச்சுதிணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பஸ்சினை நிறுத்திய டிரைவர், மாணவர்களை பஸ்சிலிருந்து கீழே இறக்கினார். தொடர்ந்து கிளினர் அம்ம களத்தூர் ராஜவேல் (36) உதவியுடன் ஆசிட் மீது நீரை ஊற்றி சுத்தம் செய்தார்.

    தொடர்ந்து பஸ்சினை இயக்கிய டிரைவர், மாணவர்களை பள்ளியில் இறக்கிவிட்டார். வகுப்பறைக்கு சென்ற ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர். சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட 22 மாணவர்களையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து நேற்று மாலை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பள்ளி பஸ்சின் டிரைவர் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் கிளினர் ராஜவேல் மீது வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சின்னசேலத்தில் உள்ள மற்றொரு தனியார் பள்ளி பஸ் கவிழந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கதாகும்.

    • 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
    • விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே தனியார் ப ள்ளி பேருந்தில் எடுத்து சென்ற ஆசிட் பாட்டில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

    இதில், 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கழிப்பறை சுத்தம் செய்வதற்காக ஆசிட் எடுத்து சென்றபோது வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    • பள்ளி விடுமுறையின் காரணமாக தனது சொந்த ஊருக்குசென்றார்
    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கடலூர்:

    கடலூர் சி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு மகன் ராஜ்குமார் (வயது 28) இவரது மனைவி ஜஸ்வர்யா (21) இருவரும் கள்ளக்குறிச்சியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் பள்ளி விடுமுறையின் காரணமாக தனது சொந்த ஊரான சி.என். பாளையத்திற்கு சென்றவர்கள் மீண்டும் கடந்த 3- ந் தேதி சி.என்.பாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி சென்று கொண்டிருந்தனர்.

    தியாகதுருகம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யா அணிந்திருந்த துப்பட்டா மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் ஜஸ்வர்யா கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இது குறித்து ஐஸ்வர்யாவின் அண்ணன் விஜய் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் ஜஸ்வர்யாவின் கணவர் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

    • பல இடங்களில் தேடி யும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வினோதினியின் தாய் தனம் புகார்கொடுத்தார்.
    • இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் வினோதினியை தேடி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த குடுமியான் குப்பம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து.இவரது மகள் வினோதினி (15). இவர் வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -1 படித்து வருகிறார் .நேற்று முன்தினம் வீட்டிலிருந்தவர் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடி யும் கிடைக்காததா ல்புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வினோதினியின் தாய் தனம் புகார்கொடுத்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் வினோதினியை தேடி வருகிறார்.

    • 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் பாதிப்பு.
    • குருசாமிபாளையம் அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குருசாமி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    இதில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்த குருசாமிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அங்கு மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    • இந்த பள்ளிக்கூடம் 1998-ம் ஆண்டு முதல் வாடகைக்கு இயங்கி வருகிறது.
    • பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது.

    ஈரோடு :

    ஈரோடு சம்பத் நகரில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடம் தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 1998-ம் ஆண்டு முதல் வாடகைக்கு இயங்கி வருகிறது.

    பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகள் மட்டுமே வாடகை செலுத்திய பள்ளிக்கூட நிர்வாகம் அதன் பின்னர் வாடகை செலுத்தவில்லை. இதனால் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் பலமுறை வாடகை கேட்டும் பள்ளிக்கூட நிர்வாகம் செலுத்தவில்லை.

    இதற்கிடையில் வீட்டு வசதி வாரியம் கூடுதல் தொகை நிர்ணயித்திருப்பதாக கூறி பள்ளிக்கூட நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்ததுடன் இதில் அரசே முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து, பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. மேலும் ரூ.3 கோடியே 90 லட்சம் வாடகை பாக்கி தொகையை செலுத்த வீட்டு வசதி வாரியம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது.

    எனினும் பள்ளிக்கூட நிர்வாகம் வாடகை பாக்கியை செலுத்தவில்லை. இதனால் இடத்தை கையகப்படுத்தும் நோக்கில் நேற்று பள்ளிக்கூடத்துக்கு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் சென்றனர். பின்னர் பள்ளியின் முன்பக்க கதவை பூட்டி 'சீல்' வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

    இதன் காரணமாக இந்த பள்ளிக்கூடத்தில் படித்து வரும் மாணவ -மாணவிகளின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.
    • விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொன்னேரி:

    தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய வருவாய்த் துறை, காவல்துறை, கல்வித் துறை மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு கோடை விடுமுறையில் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்காக அரசு அறிவித்துள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், படிக்கட்டு வசதி, அவசர கால கதவு, முதலுதவி பெட்டி, ஜன்னல் பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.

    மொத்தம் 208 வாகனங்களை சோதனை செய்ததில் தகுதியுடைய 178 வாகனங்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. விதிமுறைகளை கடைபிடிக்காமல் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 30 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டு அவை திருப்பி அனுப்பப்பட்டன. குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களில் அவற்றை சரி செய்து மீண்டும் தணிக்கை குழுவினரிடம் சான்று பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    முன்னதாகபள்ளி வாகனங்களில் திடீரென தீப்பிடித்தால் அதனை எவ்வாறு கையாள்வது? தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி? என்பது போன்ற தத்ரூப ஒத்திகையை தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.

    தொடர்ந்து தனியார் பள்ளி டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்க கூடாது எனவும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இள முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி, கல்வித் துறை அலுவலர் சுப்ரமணி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • ஒரு வாலிபர் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
    • இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் கொப்பு வாய்க்கால் பகுதியில் இன்று அதிகாலை ஒரு வாலிபர் தலை,உடல் முழுவதும் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    மேலும் அவரது உடல் அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதுப்பற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி.ஐமன் ஜமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது பிணமாக கிடப்பது சத்தியமங்கலம் செண்பகபுதூர் அருகே உள்ள சாணார் பதி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பது தெரியவந்தது.

    மேலும் இவருக்கு திருமணமாகி கல்யாணி (30) என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    மாரிமுத்து ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலைப்பார்த்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த அவரை அவரது நண்பர் ஒருவர் அழைத்து சென்றார்.

    அதன் பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தான் அவர் உடலில் வெட்டு காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார்.

    இது குறித்து போலீசார் மாரிமுத்துவின் நண்பரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா?அல்லது விபத்தில் இறந்தாரா? என்று பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளும் உள்ளன.
    • திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 139 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மூலம் மழலைய பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் மாநகராட்சி பள்ளியில் படித்து வருகிறார்கள்.

    பள்ளி கட்டிடங்கள், அடிப்படை வசதிகளுடன் மாநகராட்சி பள்ளிகள் தன் பங்களிப்பை வழங்கி வருவதால் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் அதிகளவில் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பறைகளும் உள்ளன.

    இந்நிலையில் சென்னை நகரின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் கடந்த சில வருடங்களாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

    மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த பள்ளிகள் இருந்தாலும் கூட அரசு பள்ளிகளாக செயல்பட்டு வந்தன. இதனால் நிர்வாக ரீதியான பிரச்சினை உருவானது.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கி இந்த பள்ளிகள் செயல்பட்ட வந்தன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இத்தகைய பள்ளிகளை மாநகராட்சி பள்ளிகளுடன் இணைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    அதன் அடிப்படையில் எத்தனை பள்ளிகள் இதுபோன்று உள்ளன என ஆய்வு செய்யப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 139 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

    அந்த பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டு என மன்ற கூட் டத்திலும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதன்படி 139 அரசு பள்ளிகள் சென்னை மாநகராட்சியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்டன.

    அந்த பள்ளிகள் "சென்னை பள்ளிகள்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு படித்த 35 ஆயிரம் மாணவ-மாணவிகள் தொடர்ந்து கல்வியை தொடர சென்னை மாநகராட்சி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

    மாநகராட்சி கல்வி துறை மூலம் இனி இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இப்பள்ளி களின் வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படும்.

    • மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்
    • இந்த ஆண்டில் 9,494 புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த உள்ளோம்.

    திருச்சி:

    திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.

    இதில் 322 பேருக்கு பட்டா, 20 பேருக்கு குடும்ப அட்டை, 6 மாற்று திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம், 64 பேருக்கு கல்மந்தை காலணியில் குடியிருப்பு ஒதுக்கீடு உள்ளிட்ட நல திட்டங்கள் ரூ.60 லட்சத்து 22 ஆயிரத்து 510 மதிப்பில் வழங்கப்பட்டது.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டும், சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த படியும் எந்த காலத்திலும் செல்போனுக்கு அனுமதி கிடையாது. அதையும் மீறி வகுப்பறைக்கு மாணவர்கள் யாராவது செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும். அது திருப்பி தரப்படமாட்டாது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

    கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பெரும் உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களின் கவன சிதறலை போக்கும் வகையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் முதல் ஐந்து நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்பு தான் வகுப்புகள் தொடங்கும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி தொடங்கிய உடன் தன்னார்வ அமைப்புகள் மற்றும் காவல் துறையை சேர்ந்தவர்களை கொண்டு புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்.

    இதில் காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் குறித்தும், மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.

    நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. நாம் கொடுத்த அழுத்தத்தினால் தான் ஆளுநர் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பினார். எந்த சட்டப்போராட்டமாக இருந்தாலும் முதலமைச்சர் அதில் வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்கும் படி நேரடியாக பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். அதன் காரணமாக ஜி.எஸ்.டி. நிலுவை தொகை மாநிலத்திற்கு வழங்கப்பட்டது.

    முதலமைச்சர் கொடுக்கும் குரல் நியாயமான குரல் என ஒட்டுமொத்த இந்தியாவே ஒத்துக்கொள்கிறது. அது போலத்தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற குரலும் நியாயமான குரல். அதில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

    தனியார் பள்ளிகள் அங்கு படிக்கும் மாணவர்களை சீறுடை, புத்தகம் உள்ளிட்டவற்றை பள்ளிகளிலேயே வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது. அதேபோல் அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அவர்களின் மாற்றுச்சான்றிதழை உடனடியாக தாமதமின்றி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    12 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அரசு பள்ளியில் சேரும் மாணவர்களை தக்க வைக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இந்த ஆண்டில் 9,494 புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த உள்ளோம்.

    பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் இல்லம்தேடி கல்வியின் தேவை இருக்கிறது. இல்லம் தேடி கல்வி திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளோம். இரண்டாண்டுகளுக்கு பின் இந்தாண்டு தான் வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் போது தான் இல்லம் தேடி கல்வி திட்டத்தை படிப்படியாக நாம் நிறுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×