என் மலர்
இந்தியா
- இங்கே பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், இந்தியும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்
- தகவல்தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்
டெல்லியில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில், உள்ளூர் குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார். அவர் அதற்கு பதிலளிக்காததால், நான் சொல்வதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை? ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இங்கே பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், இந்தியும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்" எனப் பேசியுள்ளார். மேலும் மற்றொருவரிடம் (பூங்கா காவலாளியா என்பது சரியாக தெரியவில்லை) நான் உங்களுக்குச் சொல்கிறேன், பூங்கா இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும். இல்லையெனில் ஏதேனும் குற்றச் செயல் நடந்தால், நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்,.
இந்த வீடியோ வைரலாக ரேணு சவுத்ரிக்கு பெரும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து வீடியோ தொடர்பாக விளக்கமளித்த அவர், பூங்காவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் தொடர்பாக தனக்குப் பலமுறை புகார் வந்தது. அதனால்தான் தான் பூங்காவிற்கு வருகை தந்தேன். ஆனால், யாரையும் அச்சுறுத்தும் நோக்கம் தனக்கு இல்லை. தகவல்தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்" என தெரிவித்துள்ளார்.
- நிதி அறிக்கை கடந்த 8-ந்தேதி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
- கடந்த நிதி ஆண்டில் பா.ஜ.க ரூ.3967 கோடி நன்கொடையாக பெற்றது.
கடந்த 2017-18-ம் ஆண்டில் மத்திய அரசு தேர்தல் நிதி பத்திரங்கள் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அதிக நிதி வசூலிக்கும் கட்சியாக பா.ஜ.க திகழ்ந்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் முறை கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த பிறகு தேர்தல் அறக்கட்டளை மூலம் பா.ஜ.க ரூ.6654 கோடி நன்கொடையாக பெற்று உள்ளது.
அறக்கட்டளைகள், பெரு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் கடந்த ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 30-ந்தேதி வரை ரூ.6654 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது.
பா.ஜ.காவால் தயாரிக்கப்பட்ட இந்த நிதி அறிக்கை கடந்த 8-ந்தேதி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ரூ.6654 கோடி நன்கொடை பெற்ற இந்த காலகட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் அருணாசல பிரதேசம், சிக்கிம், ஆந்திரா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், அரியானா, ஜார்க்கண்ட், மராட்டியம், டெல்லி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
கடந்த நிதி ஆண்டில் பா.ஜ.க ரூ.3967 கோடி நன்கொடையாக பெற்றது. தற்போது அந்த கட்சியின் நன்கொடை 68 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
பா.ஜ.க-வுக்கு கிடைத்த நன்கொடைகளில் ரூ.3744 கோடி தேர்தல் அறக்கட்டளை மூலம் வந்துள்ளது. எஞ்சிய தொகை பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் கிடைத்து உள்ளது.
தேர்தல் அறக்கட்டளை நன்கொடையில் புரூடென்ட் அறக்கட்டளை ரூ.2180 கோடி அளித்துள்ளது.
தேர்தல் அறக்கட்டளையை தவிர்த்து நன்கொடை அதிகம் அளித்தவர்களில் முதல் 30 இடங்களில் பெருநிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியா சீரம் தனியார் நிறுவனம் (ரூ.100 கோடி), ரங்டாசன்ஸ் தனியார் நிறுவனம் (ரூ.95 கோடி), வேதாந்தா நிறுவனம் (ரூ.67 கோடி) உள்ளிட்டவை இதில் அடங்கும்.
பஜாஜ் குழுமத்தின் 3 வெவ்வேறு நிறுவனங்கள் இணைந்து ரூ.66 கோடியை அளித்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் ரூ.35 கோடியும், திலீப் பில்கான் குழுமம் ரூ.29 கோடியும், ஹீரோ குழுமம் ரூ.23.65 கோடியும் பங்களித்துள்ளன.
தனி நபர்கள் அனைவரும் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் நன்கொடை வழங்கி இருக்கிறார்கள். நிறுவனங்கள் காசோலை, வரை வோலை மற்றும் வங்கி பண பரிமாற்றம் வாயிலாக பணத்தை கொடுத்துள்ளன.பல்வேறு பா.ஜ.க தலைவர்களும் நன்கொடையை அளித்துள்ளனர்.
நன்கொடைபெற்றதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு காணப்பட்டது. அந்த கட்சிக்கு ரூ.522.13 கோடியே கிடைத்தது. கடந்த 2023-24-ம் ஆண்டில் அந்த கட்சிக்கு ரூ.1129 கோடி கிடைத்தது. இது 43 சதவீத சரிவாகும்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.184.08 கோடி மட்டுமே நன்கொடையாக கிடைத்தது. இது பெரும் சரிவாகும். கடந்த ஆண்டு ரூ.618.8 கோடி கிடைத்து இருந்தது. பாரத் ராஷ்டிரீய சமிதி (பி.ஆர்.எஸ்.) நன்கொடை ரூ.580 கோடியில் இருந்து ரூ.15.09 கோடியாக குறைந்தது. இது பெரும் வீழ்ச்சியாகும்.
அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் நன்கொடை அதிகரித்து உள்ளது. அந்த கட்சி ரூ.39.2 கோடி நன்கொடையாக பெற்றது. கடந்த முறை ரூ.22.1 கோடிதான் கிடைத்தது.
தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ.85.2 கோடியும் (முன்பு ரூ.274 கோடி), பிஜூ ஜனதா தளத்திற்கு ரூ.60 கோடியும் (ரூ.246 கோடி) கிடைத்தன.
காங்கிரஸ் பெற்ற நன்கொடையை விட பா.ஜனதா 12.5 மடங்கு அதிகமாக வசூலித்துள்ளது.
காங்கிரஸ் மட்டுமல்ல அதன் ஒட்டு மொத்த கூட்டணியிலும் உள்ள 12 கட்சிகளின் தேர்தல் நிதியே மொத்தம் வெறும் ரூ.1343 கோடிதான். இந்த தொகையுடன் ஒப்பிட்டால் கூட பா.ஜ.க 4½ மடங்கு அதிக நிதியை வசூலித்து இருக்கிறது.
- பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
- பள்ளிகளில் பிரிவினைவாத விதைகளை விதைக்கும் முயற்சியை ஏற்க முடியாது.
கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தொடர்பாக கேரள முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அனுமதிக்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாதி, மதம் கடந்து கல்வி கற்கும் இடம் பள்ளி, அங்கு பிரிவினைவாத விதைகளை விதைக்கும் முயற்சியை ஏற்க முடியாது என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயக உணர்வு மிக்க கேரளாவில் பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.
- ஆர்எஸ்எஸ் பற்றி புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது
- பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தங்களது 100-வது ஆண்டை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று கொல்கத்தாவில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் அவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது,
"சூரியன் கிழக்கில் உதிக்கிறது; இது எப்போதிலிருந்து நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. அதற்கு அரசியலமைப்பு ஒப்புதல் தேவையா? அதுபோல இந்தியா ஒரு இந்து நாடு. இந்தியாவைத் தங்கள் தாய்நாடாகக் கருதுபவர்கள் இந்திய கலாச்சாரத்தைப் பாராட்டுகிறார்கள்; இந்துஸ்தான் நிலத்தில் இந்திய மூதாதையர்களின் மகிமையை நம்பும் மற்றும் போற்றும் ஒருவர் உயிருடன் இருக்கும் வரை, இந்தியா ஒரு இந்து நாடு.
நாடாளுமன்றம் எப்போதாவது அரசியலமைப்பைத் திருத்தி அந்த வார்த்தையைச் சேர்க்க முடிவு செய்தால், அவர்கள் அதைச் செய்தாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை, ஏனென்றால் நாங்கள் இந்துக்கள், எங்கள் நாடு ஒரு இந்து நாடு. அதுதான் உண்மை. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல.
நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து இருந்தால், நான் சொல்கிறேன், ஆர்எஸ்எஸ் வெளிப்படையானது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், அப்படி ஏதாவது (முஸ்லிம்களுக்கு எதிராக) நடப்பதை நீங்கள் பார்த்தால், உங்கள் பார்வை அப்படியே இருக்கட்டும். அப்படி அதுபோன்ற செயல்கள் நடக்கவில்லை என்றால் உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுங்கள். (ஆர்எஸ்எஸ் பற்றி) புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது, ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள விரும்பவில்லை என்றால், உங்கள் மனதை யாராலும் மாற்ற முடியாது" என தெரிவித்தார்.
- இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்.
- நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95% வரை குறையும்
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும். இது முதலீடுகளை ஊக்குவிக்கும்.
நியூசிலாந்து அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தி, உள்கட்டமைப்பு, சேவைகள், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய துறைகளை இலக்காகக் கொண்டு, 20 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை எளிதாக்க உறுதியளித்துள்ளது
அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு 1.1 முதல் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயர்த்த இலக்கு என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்தியா நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், "நாங்கள் இந்தியாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளோம். இது நியூசிலாந்து விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு வாய்ப்புகளைத் திறந்து, ஏற்றுமதியை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வருமானத்தை உயர்த்தி, அனைத்து நியூசிலாந்து மக்களும் முன்னேற உதவும்" என்று கூறினார்.
- 2028 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது
- இது விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு.
கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் 'கர்நாடக ஒலிம்பிக் - 2025' விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் சித்தராமையா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அப்போது பேசிய சித்தராமையா, "காங்கிரஸ் அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வென்றால் 4 கோடி ரூபாயும், வெண்கல பதக்கம் வென்றால் 3 கோடி ரூபாயும் பரிசாக தரப்படும். இது, விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. கர்நாடக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வர் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், "அரசு வேலைகளில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. காவல்துறையில் 2 சதவீதமும் வனத்துறையில் 3 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, விளையாட்டு துறையில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
2028 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில் புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.
- தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க இது உதவும்.
பெங்களூரு:
அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமைய ஏவுதளத்தில் இருந்து நாளை மறுதினம் காலை 8:54 மணிக்கு LVM 3 ராக்கெட் வாயிலாக புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இம்மாதம் 15 மற்றும் 21-ம் தேதிகளில் புளூபேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, இஸ்ரோ நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்றைய கிட்டத்தட்ட ஆறு பில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் எதிர்கொள்ளும் டவர் பிரச்சினை நீக்குவதற்கும், பில்லியன் கணக்கானவர்களுக்கு பிராட்பேண்டைக் கொண்டுவருவதற்கும் நாங்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி அநேக இடங்களில் முன்னிலை பெற்றன.
- அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 246 நகராட்சி, 42 நகர பஞ்சாயத்து ஆகிய 288 உள்ளாட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றன.
இதேபோல, அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மகாராஷ்டிரா மக்கள் வளர்ச்சியுடன் உறுதியாக நிற்கின்றனர். நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துத் தேர்தல்களில் பா.ஜ.க. மற்றும் மகாயுதி கூட்டணியை ஆசிர்வதித்த மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி. வளர்ச்சிக்கான எங்களின் தொலைநோக்குப் பார்வை மீதான மக்களின் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. மகாராஷ்டிரா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உறுதி பூண்டுள்ளோம். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த பா.ஜ.க. மற்றும் மகாயுதி தொண்டர்களுக்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல, அருணாச்சல பிரதேச உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அவர் விடுத்த பதிவில், நல்லாட்சி வழங்கிய அரசுக்கு அருணாச்சலப் பிரதேச மக்கள் அசைக்க முடியாத ஆதரவைக் கொடுத்துள்ளனர். இது மாநிலத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றும் எங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
- சுமார் 17,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
- ஸ்லோகத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பொருள் மற்றும் அதன் அறிவியல் ரீதியான தொடர்பு குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பகவத் கீதையின் வாசகங்களை வாசிப்பதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களிடையே இந்திய கலாச்சாரம், தார்மீக விழுமியங்கள், சுய ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்ப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உத்தரகாண்ட் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், "சுமார் 17,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது செயல்படுத்தப்படும் வரை, பள்ளிகளில் தினசரி பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தின் வசனங்கள் சேர்க்கப்படும்" என்றார்.
உத்தரகாண்ட் அரசின் இந்த புதிய உத்தரவுபடி, பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது தினமும் ஒரு பகவத்கீதை ஸ்லோகம் வாசிக்கப்பட வேண்டும். ஸ்லோகத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பொருள் மற்றும் அதன் அறிவியல் ரீதியான தொடர்பு குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.
இதுமட்டுமின்றி ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட ஸ்லோகம் (Shloka of the Week) தேர்ந்தெடுக்கப்பட்டு, அது பள்ளி அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தப்படும். ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வசனம் வகுப்பறைகளில் விவாதிக்கப்படும், மேலும் மாணவர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்படும். இது மாணவர்களிடம் புரிதலையும், ஈடுபாட்டையும் ஆழப்படுத்த உதவும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு அம்மாநில கல்வித்துறைகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. உத்தரகண்ட் மதர்சா கல்வி வாரியத் தலைவர் முஃப்தி ஷாமூன் காஸ்மி இந்த முடிவை வரவேற்று, "ராமர் மற்றும் கிருஷ்ணர் இருவரும் நமது மூதாதையர்கள், ஒவ்வொரு இந்தியரும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம்" என்று கூறியுள்ளார்.
- குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது மத்திய அரசு
- மேற்குவங்க மாநில ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மகாத்மா காந்தி பேரை சூட்டினார் மம்தா
இந்தியாவில் 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டத்தை கொண்டு வரும் நோக்கில் மத்திய புதிய மசோதா ஒன்றை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்தது.
இதற்கு 'விபி-ஜி ஆர்ஏஎம் ஜி' (VB-G RAM G) என்றும் பெயர்மாற்றம் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது பாஜக தலைமையிலான மத்திய அரசு.
இருப்பினும் தொடர்ந்து இந்த முடிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து, இந்த முடிவை அரசு கைவிடவேண்டும் என தெரிவித்தனர். இருப்பினும் இந்த முடிவை மத்திய அரசு கைவிடவில்லை. இதனிடையே மேற்குவங்க மாநில ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மகாத்மா காந்தி பேரை சூட்டினார் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
இந்நிலையில் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
- மொத்தம் உள்ள 246 நகராட்சியில் பா.ஜனதா 98 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
- உத்தவ் தாக்கரே சிவசேனா-7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 246 நகராட்சி, 42 நகர பஞ்சாயத்து ஆகிய 288 உள்ளாட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது.
இதில் பல இடங்களில் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. சில இடங்களில் பா.ஜ.க.-சிவசேனா, காங்கிரஸ்- சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
பல்வேறு அரசியல் பரபரப்புக்கு இடையே மராட்டிய உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பா.ஜ.க கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னணி வகித்தன.
பா.ஜ.க கூட்டணி 192 இடங்களில் முன்னணியில் உள்ளார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களில் முன்னிலை யில் உள்ளன.
மொத்தம் உள்ள 246 நகராட்சியில் பா.ஜனதா 98 இடங்களில் முன்னிலையில் உள்ளன. சிவசேனா 44 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், தேசிய வாத காங்கிரஸ் 28 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா-7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. சுயேட்சைகள் 29-ல் முன்னிலையில் உள்ளன.
மொத்தம் உள்ள 42 நகர பஞ்சாயத்துகளில் பா.ஜனதா 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிவசேனா-8, காங்கிரஸ்-4, உத்தவ்தாக்கரே சிவசேனா-3, தேசியவாத காங்கிரஸ்-3, மற்றவை-2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
- 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் தொடர்ந்து கேலி செய்தும், ஆபாசமாகப் பேசியும் வந்துள்ளனர்.
- கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில், சிறுமி ஒருவரை கேலி செய்த சிறுவர்களின் தாயாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் தொடர்ந்து கேலி செய்தும், ஆபாசமாகப் பேசியும் வந்துள்ளனர். இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதால், அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவர்களுக்குச் நல்லொழுக்கம் கற்பிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவர்களது 4 தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.
காவல் ஆய்வாளர் அஜய்பால் சிங் பேசுகையில், "இந்தச் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர். சிறுவர்களை நல்வழிப்படுத்தத் தவறிய பெற்றோரைத் தண்டிப்பதன் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறோம். குழந்தைகளுக்குச் சிறந்த மதிப்புகளைப் போதிக்காத பெற்றோர்களே இதற்குப் பொறுப்பு," என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.






