என் மலர்tooltip icon

    இந்தியா

    • ‘ஜன நாயகன்’ பட விவகாரத்தில் மத்திய அரசு விஜய்க்கு அரசியல் அழுத்தம் தருவதாக தி.மு.க.வும், தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    • ‘ஜன நாயகன்’ படத்தைத் தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும்.

    'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்காததால் அறிவித்த தேதியில் படம் வெளியாகாமல் போனது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்க உள்ளது.

    இதனிடையே, 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் மத்திய அரசு விஜய்க்கு அரசியல் அழுத்தம் தருவதாக தி.மு.க.வும், தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    'ஜன நாயகன்' படத்தைத் தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும்.

    தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள் Mr.மோடி என்று கூறியுள்ளார். 



    • மூன்று விதமாக கைதிகள் பிரிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது.
    • இறுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகளுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.

    தவறு செய்து தண்டனை அனுபவிக்கக்கூடியவர்களை அடைக்கக்கூடிய இடமாக இருக்கும் சிறைச் சாலை, தொடக்க காலத்தில் மிகவும் கடினமான இடமாக இருந்தது. காலப்போக்கில் பல வசதிகளை கொண்ட இடமாக சிறைச்சாலைகள் மாறிவிட்டன.

    அது மட்டுமின்றி தவறு செய்து தண்டனை அனுபவிப்பவர்கள், தண்டனை காலத்தில் திருந்துவதற்கான ஒரு இடமாகவும் மாறியிருக்கிறது. அதற்காக அந்தந்த மாநில அரசுகள், தங்களது மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு பல்வேறு தொழில்களை கற்றுக்கொடுப்பது மட்டுமின்றி, அந்த தொழிலில் ஈடுபடுவதற்கு ஊதியத்தையும் கொடுக்கிறது.

    இதனால் பல கைதிகள் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி வெளியே செல்லும் போது, ஒரு பெருந்தொகையை வாங்கிச் செல்கிறார்கள். அது மட்டுமின்றி ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே சென்றபிறகு, ஜெயிலில் பார்த்த தொழிலை தொடர்ந்து பார்த்து வாழ்க்கையை நடத்தும் வகையில் பல கைதிகள் வடிவமைக்கப்படுகிறார்கள்.

    இந்தநிலையில் கேரள மாநிலத்தில் ஜெயில்களில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கான ஊதியத்தை அம்மாநில அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளது. கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் இருக்கின்றன. கொல்லம் உள்ளிட்ட பல இடங்களில் மாவட்ட மற்றும் கிளை சிறைகளும் இருக்கின்றன.

    இங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பயன்படுத்தி துணி, தோல் மற்றும் அலுமினிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி பல்வேறு வேலைகளும் கைதிகளுக்கு வழங்கப்படுகின்றன. அவ்வாறு ஈடுபடும் கைதிகளுக்கு தகுதியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

    திறமையாக வேலை செய்பவர்கள், பாதியளவு திறமையாக வேலை செய்பவர்கள், திறமையற்ற முறையில் வேலை செய்பவர்கள் என மூன்று விதமாக கைதிகள் பிரிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. கைதிகளுக்கான ஊதியம் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகரிக்கப்படும். அதன்படி இறுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகளுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.

    இந்தநிலையில் தற்போது கைதிகளுக்கான சம்பளம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதுவும் ஊதியம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. திறமையான வேலையில் ஈடுபடுபவர்களின் ஊதியம் ரூ.152 ஆக இருந்தது. அது தற்போது 620 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேபோல் பாதியளவு திறமையான வேலை செய்பவர்களுக்கான ஊதியம் 127 ரூபாயில் இருந்து 560 ரூபாயாகவும், திறமையில்லாத வேலை பார்ப்பவர்களுக்கான ஊதியம் ரூ.63-ல் இருந்து ரூ.530 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் கைதிகளுக்கான சம்பளம் இவ்வளவு அதிகமாக உயர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த ஊதிய உயர்வு மூலமாக கேரள ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் பயன்பெறுவார்கள்.

    ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தாலும் கைதிகள் தங்களின் வாழ்வில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கத்திலே கைதிகளின் ஊதியம் உயர்த்தப்பட்டு இருப்பதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில், கேரளாவில் கைதிகளுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறைவாக இருந்ததால், தற்போது அதிகளவில் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    வழக்குகளில் தண்டனை பெற்று வந்தாலும் தங்குமிடம், அசைவ உணவு வகைகள் என்று பல வசதிகள் இலவசமாக கிடைத்து வந்தநிலையில், தற்போது சம்பளமும் பல மடங்கு உயர்த்தியிருப்பது கைதிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

    • படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
    • மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஜன.21-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாள் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

    ஏற்கனவே இந்த வழக்கில் மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை படத்தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதனை தொடர்ந்தே 'ஜன நாயகன்' படம் தொடர்பான வழக்கு வரும் திங்ககிழமை (19.01.2026) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  

    • சில கட்சிகள் தேர்தலுக்காக இலவசங்களை வாரி வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
    • மின்சாரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகிவிடும்.

    தற்காலிக இலவசங்களை வழங்குவதை விட மக்களைச் சுயமாக முன்னேற்றுவதற்கே பிரதமர் மோடி முன்னுரிமை அளிப்பதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

    அண்மையில் குஜராத்தில் நடந்த பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், சில கட்சிகள் தேர்தலுக்காக இலவசங்களை வாரி வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், அத்தகைய அரசியல் நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.

    பிரதமர் மோடி ஒருபோதும் தேர்தலுக்காகவோ அல்லது வாக்குகளுக்காகவோ தற்காலிகமான இலவச வாக்குறுதிகளை அளிப்பதில்லை.

    அதற்குப் பதிலாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதையே அவர் இலக்காகக் கொண்டுள்ளார்.

    உதாரணமாக சூர்யாகர் திட்டத்தின் கீழ், சூரிய சக்தி பேனல்களை நிறுவுவதற்கு நுகர்வோர் சில செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.

    அத்தகைய திட்டங்களில் மக்களின் தனிப்பட்ட பங்களிப்பு இருக்க வேண்டும். அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும் என்று மக்கள் எதிர்பார்க்கக்கூடாது, அரசாங்கத்தை முழுமையாக நம்பியிருக்கக்கூடாது.

    ஒரு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட, அரசாங்க ஆதரவுடன், குடிமக்களின் பங்களிப்பும் அவசியம். மின்சாரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகிவிடும் " என்று தெரிவித்தார். 

     

    • அவர்கள் பதவியில் இருக்கும்போதும் அல்லது பதவி விலகிய பின்னரும், எந்தவொரு நீதிமன்றமும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
    • இந்தப் புதிய சட்டம் தேர்தல் ஆணையத்தை சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாற்றுகிறது.

    2023 இல் மத்திய அரசு, தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமனம், பதவிக்காலம் மற்றும் அவர்களுக்கான சட்டபாதுகாப்பு குறித்த சட்டத்தை கொண்டு வந்தது.

    இந்த சட்டத்தின் பிரிவு 16, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களுக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது.

    அதாவது, தேர்தல் ஆணையர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்யும்போது செய்யும் செயல்கள், எடுக்கும் முடிவுகளுக்காக அவர்கள் பதவியில் இருக்கும்போதும் அல்லது பதவி விலகிய பின்னரும், எந்தவொரு நீதிமன்றமும் அவர்கள் மீது சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது.

    இதை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், "அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கூட குடியரசுத் தலைவருக்கோ அல்லது ஆளுநர்களுக்கோ இத்தகைய வாழ்நாள் கால பாதுகாப்பை வழங்கவில்லை.

    ஆனால், இந்தப் புதிய சட்டம் தேர்தல் ஆணையத்தை சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாற்றுகிறது" என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், நமது அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் இத்தகைய பாதுகாப்பை வழங்க முடியுமா, முடியாதா? என்று ஆராய வேண்டியுள்ளது என்று கூறி, இது தொடர்பாகப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

    அதேநேரம் மனுதாரர் கேட்டதற்கு இணங்க இப்போதைக்கு அந்தச் சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதிகள்மறுத்துள்ளனர். எனினும், வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விசாரணை தொடரும் என்றும் தெரிவித்தனர்.

    எஸ்ஐஆர் பணிகளில் பாஜகவுடன் சேர்ந்து ஞானேஷ் குமார் தலைமையிலான மத்திய தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.  

    • தேர்தல் நேரத்தில் மட்டுமே சில தலைவர்களின் குரல் உயர்கிறது.
    • பாஜக ஆட்சியில் மாநகராட்சியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாலம் திட்டத்தைச் செலவு கணக்கில் 7 கோடி ரூபாயாக உயர்த்தியது

    மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியில் உள்ள பாஜக - அஜித் பவார் தலைமையிலான என்சிபி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

     ஆளும் கூட்டணியில் ஒன்றாக இருந்தாலும், எதிர்வரும், மும்பை, புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சித் தேர்தலில் பாஜக ஓரணியாகவும் மற்றும் அஜித் பவார் என்சிபி, இந்தியா கூட்டணியில் உள்ள சரத் பாவர் என்சிபியுடன் கூட்டணி வைத்து எதிராணியாகவும் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பஜகவை சேர்ந்த மகாராஷ்டிர முதல்வர் பட்நாவிஸ், "தேர்தல் நேரத்தில் மட்டுமே சில தலைவர்களின் குரல் உயர்கிறது. அஜித் தாதா வெறும் பேச்சிலேயே நேரத்தை வீணடிக்கிறார், ஆனால் நான் களத்தில் வேலை செய்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

    பட்நாவிஸின் கருத்துக்குப் பதிலளித்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், "நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை, அரசின் தோல்விகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்.

    சின்ச்வாட் மாநகராட்சியில் பாஜக செய்த ஊழல்கள் மற்றும் தவறுகளைச் சொல்வது விமர்சனம் ஆகாது" என்று கூறினார்.

    மேலும், பாஜக ஆட்சியில் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாலம் திட்டத்தைச் செலவு கணக்கில் 7 கோடி ரூபாயாக உயர்த்தியது உட்படப் பல முறைகேடுகளை அஜித் பவார் கூறியுள்ளார். ஒரு மாநிலத்தின் துணை முதல்வர், முதல்வரின் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு வைப்பது பேசுபொருளாகி உள்ளது. 

    • நீதிபதி, பயணிகளைத் தாக்கியதுடன், டிக்கெட் பரிசோதகரிடமும், தான் நீதிபதி என கூறி தகராறு செய்தார்.
    • பிறழ் சாட்சியம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.

    மத்தியப் பிரதேசம் இந்தூர் முதல் ஜபல்பூர் வரை செல்லும் ரெயிலில் கடந்த 2018 பயணித்த சிவில் நீதிபதி ஒருவர் மது அருந்திவிட்டு சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.

    இதன்போது சகா பயணியின் இருக்கையில் நீதிபதி சிறுநீர் கழித்தார். அப்போது அந்த பெட்டியில் பெண்களும் அமர்ந்திருந்தனர்.

    மேலும் நீதிபதி, பயணிகளைத் தாக்கியதுடன், டிக்கெட் பரிசோதகரிடமும், தான் நீதிபதி என கூறி தகராறு செய்தார்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.

    இதைதொடர்ந்து துறை ரீதியான விசாரணையில் அவர் குற்றவாளி எனத் தெரிந்ததையடுத்து, 2019-ல் அவரைப் பணியிலிருந்து நீக்கி அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார்.

    அதேநேரம், அவர் மீதான குற்றவியல் வழக்கில் பிறழ் சாட்சியம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.

    இதை அடிப்படையாகக் கொண்டு, 2025-ல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அந்த நீதிபதியை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.

    உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய அவர்கள், "நீதிபதியின் இந்தச் செயல் மிகவும் அருவருப்பானது" என்று கூறி அவரை மீண்டும் பணியில் அமர்த்தியதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

    அவரை மீண்டும் பணியமர்த்தும் உயர்நீதிமன்றத்தின் முடிவை விமர்சித்த நீதிபதிகள், இது குறித்து மாநில அரசு பதிலளிக்கவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

    • பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கும்.
    • நாட்டின் பொருளாதார நிலை குறித்த பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    2017-ம் ஆண்டில் இருந்து மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 1 விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்று குழப்பம் ஏற்பட்டது.

    இந்நிலையில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வழக்கம் போல் பிப்ரவரி 1-ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

    பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணியளவில் மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.

    பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கும். முதல் நாளில் குடியரசுத் தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார்.

    பட்ஜெட்டிற்கு முந்தைய நாள், அதாவது ஜனவரி 31-ஆம் தேதி, நாட்டின் பொருளாதார நிலை குறித்த பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    பட்ஜெட் கூட்டத்தொடர் மிக முக்கியமானது என்பதால், அவையின் நடவடிக்கைகளைச் சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஓம் பிர்லா கேட்டுக் கொண்டுள்ளார். 

    • கார் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
    • மக்கள் காரை நெருங்குவதைக் கண்ட இளைஞர்கள், மாணவியை ஓடும் காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    12 ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு ஓடும் காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி காலை அந்த மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த இரு இளைஞர்கள் அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து கடத்திச் சென்றுள்ளனர்.

    கடத்தப்பட்ட மாணவியை ஓடும் காரிலேயே பல மணி நேரம் அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    கார் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் காரை வழிமறித்துச் சோதனையிட முயன்றனர்.

    மக்கள் காரை நெருங்குவதைக் கண்ட இளைஞர்கள், மாணவியை ஓடும் காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    கிராம மக்கள் அந்த மாணவியை மீட்டு அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர்.

    குடும்பத்தினர் கடந்த 11 ஆம் தேதி பிகானேர் போலீசில் புகார் அளித்ததன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இரு இளைஞர்களைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    • பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லறை காட்டினார்.
    • மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.

    தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் இந்திரய்யா (வயது 80). இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.

    தனது மரணத்திற்கு பிறகு தனது பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதற்காக தனக்குத்தானே கல்லறை கட்ட முடிவு செய்தார்.

    இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கொத்தனார் மூலம் தனது மனைவியின் கல்லறை அருகே பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லறை காட்டினார் .

    இந்திரய்யா தினமும் தனது கல்லறைக்கு சென்று சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு சிறிது நேரம் அங்கேயே தங்கி இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    இந்நிலையில் இந்திரய்யா உடல்நலக்குறைவால் நேற்று முன் தினம் (ஜனவரி 11) காலமானார். அவரது இறுதி விருப்பப்படியே, தான் பார்த்து பார்த்துச் செதுக்கிய கல்லறையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

    முன்னதாக தனக்குத் தானே கல்லறை கட்டியது குறித்து இந்திரய்யா ஊடகங்களிடம் பேசியவை அவர் இறந்த பின், மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

    அதில் அவர், எனக்கு நானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 5 வீடுகள், ஒரு பள்ளி மற்றும் ஒரு தேவாலயம் கட்டி இருக்கிறேன்." என்று பேசியிருந்தார்.

    மேலும் தனது கல்லறையில் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.  

    • அமெரிக்காவிற்கு இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி நாடு வேறு ஏதுமில்லை
    • அடுத்த ஓரிரு ஆண்டுகளில் டிரம்ப் மீண்டும் இந்தியாவிற்கு வருவார்.

    இந்தியாவிற்கான புதிய அமெரிக்கத் தூதராக செர்ஜியோ கோர் அண்மையில் நியமிக்கப்பட்டார். இன்று,  டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அவர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

    பதவியேற்புக்குப் பின் பேசிய கோர், "அதிபர் டிரம்ப் உடன் நான் உலகம் முழுவதும் பயணம் செய்திருக்கிறேன். பிரதமர் மோடி மீது அவர் வைத்திருக்கும் நட்பு மிகவும் உண்மையானது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.

    இரு நாடுகளுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,  இந்த நட்பு மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது" என்று தெரிவித்தார்.

    அமெரிக்காவிற்கு இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி நாடு வேறு ஏதுமில்லை என்று குறிப்பிட்ட அவர், வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

    மேலும், சமீபத்தில் டிரம்ப் உடன் உணவு அருந்தியபோது, அவர் தனது முந்தைய இந்தியப் பயணம் குறித்தும், பிரதமர் மோடியுடனான தனது சிறந்த உறவு குறித்தும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்ததாகக் கோர் கூறினார்.

    அடுத்த ஓரிரு ஆண்டுகளில் டிரம்ப் மீண்டும் இந்தியாவிற்கு வருவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்திய மீது 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய  மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. 

    • பாகிஸ்தானில் இந்திய உளவாளியாக இருந்துள்ளார்.
    • சாதாரண மக்களுக்குத் தெரியாத பல ரகசியத் தகவல் தொடர்பு முறைகள் எங்களிடம் உள்ளன.

    2014 முதல் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரா அஜித் தோவல் உள்ளார்.

    1968 கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியான தோவல் பாகிஸ்தானில் இந்திய உளவாளியாக இருந்துள்ளார். 2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக் உள்ளிட்ட பல பாதுகாப்பு நடைவடிக்கைகளில் பங்காற்றியுள்ளார்.

    அண்மையில் டெல்லியின் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய தோவல், " நான் இணையத்தை பயன்படுத்துவதில்லை.

    தனிப்பட்ட குடும்ப விஷயங்களுக்காகவோ அல்லது வெளிநாட்டுத் தலைவர்களுடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலோ தவிர, நான் போனைப் பயன்படுத்துவதில்லை.

    செல்போன் மற்றும் இணையம் இல்லாமலேயே எனது பணிகளை என்னால் திறம்படக் கையாள முடிகிறது. சாதாரண மக்களுக்குத் தெரியாத பல ரகசியத் தகவல் தொடர்பு முறைகள் எங்களிடம் உள்ளன" என்று தெரிவித்தார்.

    அஜித்தோவல் பெயரில் சமூக வலைதளங்களில் பல போலி கணக்குகள் உலா வருகின்றன. இது குறித்துப் பேசிய அவர், தனக்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்கும் இல்லை என்று தெரிவித்தார்.

    நாட்டின் மிக உயரிய பாதுகாப்புப் பொறுப்பில் இருப்பதால், சைபர் தாக்குதல்கள் மற்றும் ஒட்டுக் கேட்பு போன்ற அபாயங்களைத் தவிர்க்க அவர் இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறார் என்று கருதப்படுகிறது.  

    ×