என் மலர்
இந்தியா

IRIS Lavan: மற்றொரு ஈரான் போர் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் - கொச்சியில் தஞ்சம்
- ஈரான் கப்பலில் இருந்து 87 பேர் கொல்லப்பட்டனர்.
- 183 பேரும் கொச்சியில் தங்கியுள்ளனர்.
இந்தியாவின் கடற்படை அழைப்பை ஏற்று விசாகப்பட்டினத்தில் நடந்த 'மிலன்-2026' சர்வதேசக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ஈரான் போர் கப்பலான 'ஐரிஸ் டெனா' வந்திருந்தது.
பயிற்சி முடிந்து மார்ச் 4 அன்று இலங்கை அருகே இந்திய பெருங்கடலில்சென்றுகொண்டிருந்த ஐரிஸ் டெனாவை அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தாக்கி மூழ்கடித்தது. இதில் ஈரான் கப்பலில் இருந்து 87 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் விருந்தினராக சென்ற எங்கள் கப்பலை முன்னறிவிப்பின்றி தாக்கிய அமெரிக்கா விரைவில் வருத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு சில நாட்கள் முன்னர் மற்றொரு ஈரான் போர் கப்பலான ஐரிஸ் லாவன் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற சர்வதேசக் கடற்படை ஆய்வில் பங்கேற்பதற்காக இந்தக் கப்பல் வந்திருந்தது.
தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில், இந்தக் கப்பலில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதனை சரிசெய்வதற்காக கொச்சித் துறைமுகத்தில் கப்பலை நிறுத்த அனுமதிக்கக் கோரி பிப்ரவரி 28 அன்று ஈரான் அதிகாரிகள் விண்ணப்பித்தனர்.
மறுநாளே (மார்ச் 1) இந்திய அதிகாரிகள் இதற்கான அனுமதியை வழங்கியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது இந்தக் கப்பலும், அதில் உள்ள 183 பேரும் கொச்சியில் தங்கியுள்ளனர்.






