என் மலர்
இந்தியா

Rescue: உடனே உதவிக்கு சென்றோம்.. ஈரான் போர் கப்பல் தாக்குதல் குறித்து இந்திய கடற்படை விளக்கம்
- போர் நமது கொல்லைப்புறம் வரை வந்துவிட்டது, மோடி மௌனம் கலைப்பது எப்போது?
- காணாமல் போன 61 வீரர்கள் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவின் கடற்படை அழைப்பை ஏற்று விசாகப்பட்டினத்தில் நடந்த 'மிலன்-2026' சர்வதேசக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ஈரான் போர் கப்பலான 'ஐரிஸ் டெனா' வந்திருந்தது.
பயிற்சி முடிந்து மார்ச் 4 அன்று இலங்கை அருகே இந்திய பெருங்கடலில்சென்றுகொண்டிருந்த ஐரிஸ் டெனாவை அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தாக்கி மூழ்கடித்தது. இதில் ஈரான் கப்பலில் இருந்து 87 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் விருந்தினராக சென்ற எங்கள் கப்பலை முன்னறிவிப்பின்றி தாக்கிய அமெரிக்கா விரைவில் வருத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
இதற்கிடையே இந்தியாவை நம்பி வந்த ஈரான் கப்பல் அழிக்கப்பட்டதற்கு மத்திய அரசு இதுவரை எந்த கருத்தும் கூறாமலே மௌனம் காத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
போர் நமது கொல்லைபப்புறம் வரை வந்துவிட்டது, மோடி மௌனம் கலைப்பது எப்போது என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சூழலில் ஈரான் கப்பல் தாக்கப்பட்டும் தங்களுக்கு விடுத்த அவசர அழைப்பை ஏற்று உடனே உதவ சென்றதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. அங்கு இலங்கை கடற்படடையுடன் இணைந்து இந்திய கடற்படை மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கையின் காலி கடற்கரையிலிருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் 'ஐரிஸ் டெனா' தாக்கப்பட்டது.
ஈரான் கப்பலில் இருந்து அவசரச் அழைப்பு வந்தவுடன், இந்தியா மனிதாபிமான அடிப்படையில் தனது உதவிகளை வழங்கியது.
அன்றைய தினம் காலை 10 மணிக்கே நீண்ட தூர ரோந்து விமானம் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
மீட்புப் படகுகளை வானிலிருந்து வீசக்கூடிய மற்றொரு விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
அருகில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஐஎன்எஸ் தரங்கிணி கப்பல் உடனடியாகத் திசைதிருப்பப்பட்டு, மாலை 4 மணிக்குச் சம்பவ இடத்தைச் சென்றடைந்தது.
காணாமல் போன ஈரான் வீரர்களை தேடுவதற்காக கொச்சியிலிருந்து ஐஎன்எஸ் இக்ஷக் கப்பல் விரைந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் சுமார் 180 வீரர்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 32 வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரை 87 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. காணாமல் போன 61 வீரர்கள் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர்.






