15வது முறையாக பரோல்.. 40 நாட்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பாலியல் குற்றவாளி சாமியார் ராம் ரஹீம்

குர்மீத் பரோலில் வெளிவரும் காலகட்டங்கள் சரியாக உள்ளுர் அல்லது மாநில தேர்தல் சமயங்களாகவே இருந்துள்ளது.கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 320 நாட்களுக்கும் மேலாக சிறைக்கு வெளியே பரோலில் இவர் கழித்துள்ளார்.
15வது முறையாக பரோல்.. 40 நாட்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பாலியல் குற்றவாளி சாமியார் ராம் ரஹீம்
Published on

அரியானாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு 40 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம், தனது ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மற்றும் பத்திரிகையாளர் கொலை வழக்கு ஆகியவற்றில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே இவர் பரோலில் வெளிவந்திருந்த நிலையில், நன்னடத்தை அடிப்படையில் தற்போது மீண்டும் பரோல் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பரோல் காலத்தில் அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் தங்க உள்ளார்.

அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் தனக்கென அதிக பக்தர்களை உருவாக்கி வைத்துள்ள குர்மீத் பரோலில் வெளிவரும் காலகட்டங்கள் சரியாக உள்ளுர் அல்லது மாநில தேர்தல் சமயங்களாகவே இருந்துள்ளது.

2017-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மொத்தம் 15 முறை பரோலில் வெளியே வந்துள்ளார்.

அதாவது கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 320 நாட்களுக்கும் மேலாக சிறைக்கு வெளியே பரோலில் இவர் கழித்துள்ளார்.

குறிப்பாக 2024 அக்டோபர் அரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன், 2025 ஜனவரி, டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன், 2025 ஆகஸ்ட்டில் இவரது பிறந்தநாளை ஒட்டியும் பரோல் வழங்கப்பட்டது.    

X

Maalai Malar
www.maalaimalar.com