search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • தற்போதைய மக்களவை தேர்தலில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன.
    • காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் ஆனி ராஜா உள்ளிட்ட வேட்பாளர்களை கம்யூனிஸ்டு கட்சிகள் களமிறக்கி உள்ளன.

    திருவனந்தபுரம்:

    தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கின்ற நிலையில், கேரள மாநில மக்களவை தேர்தலில் அந்த கட்சிகள் தனித்தனியாக களம் காணுகின்றன. இதனால் அந்த கட்சிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணியே ஆட்சி செய்து வருகிறது. இதனால் அங்கு பலம் பொருந்திய கட்சியாகவே கம்யூனிஸ்டு கட்சிகள் இருந்து வருகின்றன.

    அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டு தான் மக்களவை தொகுதிகள். இங்குள்ள 20 மக்களவை தொகுதிகளில் 19 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்தவர்கள் தான் எம்.பி.க்களாக உள்ளனர். அதிலும் 16 தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் வசம் இருக்கிறது.

    இப்படிப்பட்ட சூழலில் தற்போதைய மக்களவை தேர்தலில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன. மக்களவை தொகுதிகளில் ஏற்கனவே செல்வாக்கு மிக்க காங்கிரஸ் கட்சியுடன் போட்டியிடும் அதே நேரத்தில், பாரதிய ஜனதாவையும் கம்யூனிஸ்டு கட்சிகள் சமாளிக்க வேண்டிய நிலைக்கு இந்த தேர்தலில் தள்ளப்பட்டுள்ளது.

    ஏனென்றால் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு பெருகி வருவது தான் அதற்கு காரணம். 2014 தேர்தலின் போது பாரதிய ஜனதாவுக்கு 10 சதவீத வாக்குகளும், அதன் தலைமையிலான கூட்டணிக்கு 11 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

    அந்த வாக்கு சதவீதம் 2019 தேர்தலில் அதிகரித்தது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 13 சதவீத வாக்குகளும், அதன் தலைமையிலான கூட்டணிக்கு 16 சதவீத வாக்குகளும் கிடைத்தன. 2014 தேர்தலை விட 2019 தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அதிக சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

    தற்போது அதன் செல்வாக்கு கேரளாவில் மேலும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.அதனை வைத்து கேரளாவில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி அங்கு கால்பதித்துவிட வேண்டும் என்ற இலக்குடன் செயல் பட்டது. அதற்கு தகுந்தாற் போல் வேட்பாளர்களை பாரதிய ஜனதா களமிறக்கி இருக்கிறது.

    இதன் காரணமாக தற்போதைய தேர்தலில் கேரளாவில் சில தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றும் என்று கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் கேரள மக்களவை தேர்தலில் களம் காணுகின்றன.

    மாநிலத்தில் தங்களின் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கை அதிகரித்து மக்களவை தேர்தலில் வெற்றிபெறும் முனைப்பில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் ஆனி ராஜா உள்ளிட்ட வேட்பாளர்களை கம்யூனிஸ்டு கட்சிகள் களமிறக்கி உள்ளன.

    மேலும் அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் செய்தன. சில மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துள்ள நிலையில் கம்யூனிஸ்டு கட்சிகள் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது.

    தேசிய அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு கேரள உதவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் முடிவு வந்தபிறகே அந்த கேள்விக்கான பதில் தெரியவரும்.

    • காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகே ஆக்கிரமிப்பு.
    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலை அமைந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா-சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

    2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதல் சம்பவத்துக்கு பிறகு சீனா எல்லை பகுதிகளில் புதிய சாலை, பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் படங்கள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா புதிதாக சாலை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக அந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் 'எக்ஸ்' தளத்தில் வெளியாகி உள்ளன.

    கடந்த ஆண்டு சியாச்சின் அருகே இதே இடத்தில் சாலை இல்லாத நிலையில் இப்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டிருப்பது படங்களில் காணப்படுகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலை அமைந்துள்ளது. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தை சீனாவின் சின்ஜியாங் உடன் இணைக்கவே இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    எனினும் இந்த சாலை இந்திய கட்டுப்பாட்டில் இருந்து 50 கிலோ மீட்டருக்கு வடக்கே சியாச்சின் பனிப்பாறையில் உள்ள இந்திரா கர்னல் அருகே அமைந்திருப்பதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த மார்ச் மாதம் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 முறை இந்த இடத்தை பார்வையிட்டிருந்தார். இந்நிலையில் சீனாவின் புதிய சாலை பணிகள் குறித்த படங்கள் வலைதளங்களில் வெளியாகி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சாலை முற்றிலும் சட்ட விரோதமானது என்றும், இந்தியா இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 

    • வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    • சின்னங்களை பதிவேற்றிய பிறகு அந்த யூனிட்டை சீல் வைக்க வேண்டும் என உத்தரவு.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த எந்திரங்களில் பொத்தானை அமுக்கி வாக்களித்ததும் அந்த வாக்கு யாருக்கு அளிக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்காக விவிபாட் எனப்படும் ஒப்புகை சீட்டுகளை உறுதி செய்யும் எந்திரம் கடந்த 2013-ம் ஆண்டு தேர்தல் முதல் பயன்படுத்தப்படுகிறது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாற்றப்படுவதாக பெரும்பாலான எதிர்க்கட்சிகள் சந்தேகப்படுவதே இதற்கு காரணமாகும்.

    குறிப்பாக எந்த பொத்தானை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்கு அளிக்கும் வகையில் மின்னணு எந்திரங்களை மாற்றி அமைக்க முடியும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் முக்கியமான குற்றச்சாட்டு ஆகும். ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடப்பதை தடுப்பதற்கு விவிபாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை எண்ணி மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இது தொடர்பான வழக்கில் முதலில் ஒரு சட்டசபை தொகுதியில் குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியின் விவிபாட் எந்திர ஒப்புகை சீட்டுகள் மட்டும் எண்ணப்பட்டன. 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பான வழக்கில் ஒரு சட்டசபை தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளின் விவிபாட் எந்திர ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட வேண்டும் என அறிவுறுத்தியது.

    அதன் பேரில் தற்போது ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 5 வாக்குச்சாடிகளின் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுகின்றன.

    இந்த நிலையில் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த புதன்கிழமை விசாரிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் 5 கேள்விகளை கேட்டு பதில் பெற்றனர். விவிபாட் எந்திரங்களின் செயல்பாடுகள் பற்றியும் கேட்டு அறிந்தனர்.

    அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "விவிபாட் எந்திரத்தில் மைக்ரோ கன்ட்ரோலர் சிஸ்டம் உள்ளது. அதில் உள்ள தகவல்கள் ஒரு முறை செயல்படுத்தக்கூடியவை. அவற்றை மாற்றி அமைக்க முடியாது. இந்திய மின்னணு கழக நிறுவனம் மற்றும் பாரத் மின்னணு நிறுவனம் ஆகியவை இவற்றை தயாரித்து கொடுக்கின்றன" என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து நீதிபதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் சரிபார்க்க வசதியாக விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு முதலில் உத்தரவிட்டது. பின்னர் மற்றொரு தீர்ப்பில் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி ஒப்பீடு செய்யும் நடைமுறையை 5 வாக்குச்சாவடிகளாக அதிகரித்து உத்தரவிட்டது. இவை அனைத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திர நடைமுறையை வலுப்படுத்தும் நோக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளாகும்.

    ஆனால், நீங்கள் மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இதை ஏற்க முடியாது.

    இந்த எந்திரங்களின் செயல்பாடுகளில் சில சந்தேகங்கள் இருந்ததாலேயே, அது குறித்து தெளிவுபடுத்துமாறு தேர்தல் ஆணைய அதிகாரிகளை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் திறன் குறித்து 2-வது முறையாக தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்க முடியாது.

    தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் கொண்ட அமைப்பு. அதற்கான தனி தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையம் ஓர் அரசியல் கட்சி கிடையாது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பை இன்று வழங்கினார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது நம்பகத்தன்மை இருப்பதாக கூறிய நீதிபதிகள் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் தொழில்நுட்பம், வழிமுறைகள் குறித்து விரிவான விசாரணையும், ஆலோசனையும் நடத்தினோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், விவிபாட் கருவியின் நம்பகத்தன்மையை பல்வேறு கட்டங்களில் உறுதி செய்தோம்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கட்சியின் சின்னத்துடன் பார்கோடு இணைப்பது குறித்து ஆராய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை, விவிபாட் ஒப்புகை சீட்டுகளுடன் 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

    ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 சதவீத ஒப்புகை சீட்டுகள் சரிபார்க்கும் நடைமுறை தொடர வேண்டும்.

    வாக்காளர்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க விவிபாட் ஒப்புகை சீட்டுகளை கூடுதலாக எண்ணுவதற்கான முடிவை தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

    வாக்குப்பதிவில் குளறுபடி என சொல்லி வேட்பாளர்கள் யாராவது அதை சரிபார்க்க விரும்பினால் கட்டணம் செலுத்த வேண்டும். வாக்குப்பதிவு எந்திரம் தவறாக செயல்பட்டது கண்டறியப்பட்டால் கட்டணம் திருப்பித் தரப்படும். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது. தேர்தல் நடைமுறையை சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறைந்தது 45 நாட்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட வேண்டும்.

    மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

    தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர் விரும்பினால் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் உள்ள மைக்ரோ கட்டுப்பாட்டு கருவியை ஆய்வு செய்யலாம்.

    எந்திரத்தில் சின்னத்தை பதிவேற்றி முடித்ததும் சின்னம் ஏற்றும் அலகு சீல் செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்கும் ஸ்டிராங் ரூமிலேயே சின்னங்களை பொருத்தும் எந்திரங்களை வைக்க வேண்டும்.

    மைக்ரோ கட்டுப்பாட்டு கருவியில் பயன்படுத்தும் சிப், பொறியாளர்கள் குழுவால் சரிபார்க்கப்பட வேண்டும்.

    மின்னணு எந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பகத்தன்மை உள்ளது. எனவே விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ண கோரிய மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    • சாலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் ராமுலம்மா தரிசனத்திற்காக வந்தார்.
    • சிறிது தூரத்திற்கு மேல் அவரால் மலை பாதையில் ஏறி செல்ல முடியவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், சாலேஸ்வரம் நல்ல மலையை சேர்ந்தவர் ராமுலம்மா (வயது 75).

    இவர் நேற்று சாலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் தரிசனத்திற்காக வந்தார். தரிசனம் முடிந்து வீட்டிற்கு செல்ல மலைப்பாதையில் நடந்து வந்தார். சிறிது தூரத்திற்கு மேல் அவரால் மலை பாதையில் ஏறி செல்ல முடியவில்லை.

    அந்த வழியாக வந்த சாலேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் வேலை செய்யும் ராமதாஸ் என்ற போலீஸ்காரர் மூதாட்டியின் பரிதாப நிலையை கண்டார்.

    இதையடுத்து மூதாட்டியை தனது தோளில் சுமந்து சென்று அவரது வீட்டில் விட்டார். போலீஸ்காரர் மூதாட்டியை தோளில் சுமந்து செல்வதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    போலீஸ்காரரின் மனிதாபிமானத்தை பார்த்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • காலை முதலே ஜனநாயக கடமையாற்ற வாக்குப்பதிவு மையங்களில் வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்
    • ராஜஸ்தான் - 11.77%, திரிபுரா-16.65%, உத்தரபிரதேசம் - 11.67%, மேற்கு வங்காளம் - 15.68% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    மணிப்பூர்:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை முதலே ஜனநாயக கடமையாற்ற வாக்குப்பதிவு மையங்களில் வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 9 மணி நிலவரப்படி அசாமில் 9.71%, பீகாரில் 9.84%, சத்தீஸ்கரில் 15.42%, ஜம்மு காஷ்மீர் - 10.39%, கர்நாடகா - 9.21%, கேரளா - 11.98%, மத்தியப்பிரதேசம்-13.82%, மகாராஷ்டிரா -7.4%, மணிப்பூர் - 15.49%, ராஜஸ்தான் - 11.77%, திரிபுரா-16.65%, உத்தரபிரதேசம் - 11.67%, மேற்கு வங்காளம் - 15.68% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானின் பாகிடோரா தொகுதியில் 13% வாக்குகள் பதிவாகி உள்ளது.


    • தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்றத் தொகுதிக்கு 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் மனுதாக்கல் செய்தார்.

    தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதி, 25 பாராளுமன்ற தொகு திகளுக்கு வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் கடந்த 18-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

    வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

    தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்றத் தொகுதிக்கு 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மல்காஜ்கிரி தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 114 பேர் மனுதாக்கல் செய்தனர்.

    அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்தால் இந்த தொகுதியில் 8 வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்

    குறைந்தபட்சமாக அடிலாபாத் தொகுதியில் 23 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    இதேபோல் ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிக ளுக்கு மொத்தம் 5460 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 25 பாராளுமன்ற தொகுதி களுக்கு 965 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் மனுதாக்கல் செய்தார்.

    இன்று மனுதாக்கல் பரிசீலனை செய்யப்பட்டு விதிமுறைகளை பின்பற்றாத வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட உள்ளன.

    வருகிற 29-ந் தேதிக்குள் வேட்பு மனு வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    • பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களுரு:

    ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர்கள் லோகேஷ் (23) கால்டாக்சி டிரைவர். பாலசுப்ரமணியம் (22), சசிகுமார் (20). நண்பர்களான இவர்கள் 3 பேரும் வேலை தேடி பெங்களூருக்கு வந்தனர்.

    இவர்கள் 3 பேரும் பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே உள்ள சின்னப்பனஹள்ளி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் இரவு இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் யஷ்வந்தப்பூரியில் இருந்து கண்ணூர் நோக்கி ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகத்தில் வந்து கொண்டு இருந்தது. ரெயில் வருவதை அவர்கள் கவனிக்கவில்லை. ரெயில் லோகா பைலட் அதிவேகமாக ரெயிலை இயக்கியதால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து அவர்கள் மீது ரெயில் மோதியது. இதில் 3 பேரும் அடுத்தடுத்து தூக்கி வீசப்பட்டனர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • இன்ஸ்டாகிராமில் தோனி பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி ஒரு நபர் பதிவு செய்திருந்தார்.
    • வணக்கம் நான் எம்.எஸ்.தோனி நான் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட கணக்கில் இருந்து செய்தி அனுப்புகிறேன்.

    இன்றைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ்அப், பேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் நூதன மோசடி அரங்கேற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கிரிக்கெட் வீரர் தோனி பெயரில் சமூகவலைத்தளம் மூலம் மோசடி செய்ய முயன்ற ஒருவரது பதிவு 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை ஈர்த்து வைரலாகி உள்ளது. இன்ஸ்டாகிராமில் தோனி பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி ஒரு நபர் பதிவு செய்திருந்தார். அதில், வணக்கம் நான் எம்.எஸ்.தோனி நான் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட கணக்கில் இருந்து செய்தி அனுப்புகிறேன். நான் ராஞ்சியில் புறநகரில் இருக்கிறேன். பணப்பையை மறந்து வைத்து விட்டேன். எனக்கு ரூ.600 அனுப்ப முடியுமா? நான் வீட்டிற்கு சென்றதும் திருப்பி அனுப்புகிறேன் என கூறப்பட்டிருந்தது.

    இந்த பதிவு சமூக ஊடகங்களில் சில மணி நேரங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் மோசடி நபரை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டனர்.

    • வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    • அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    கேரளா:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26 மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந் தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி கடந்த 19-ந்தேதி முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

    2-ம் கட்டத் தேர்தலுக்கு கடந்த 4-ந்தேதி மனுத்தாக்கல் தொடங்கியது. 8-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் 2-ம் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    * கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    * பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி திருச்சூரில் வாக்களித்தார்.

    * காங்கிரஸ் வேட்பாளர் கே.சி.வேணுகோபால் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    * திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பத்தனம்திட்டா பாஜக வேட்பாளர் அனில் ஆண்டனி தனது வாக்கினை செலுத்தினார்.

    * கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் வாக்குச்சாவடியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்களித்தார்.

    * பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்தார்.




    • மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-ம் கட்டமாக 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
    • திருமண விழா முக்கியமானது தான் ஆனால் வாக்களிப்பதும் முக்கியம்.

    மகாராஷ்டிரா:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-ம் கட்டமாக 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க திருமண கோலத்தில் மணமகன் ஆகாஷ், அமராவதியின் வதர்புரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது,

    திருமண விழா முக்கியமானது தான் ஆனால் வாக்களிப்பதும் முக்கியம். இன்று மதியம் 2 மணிக்கு திருமணம் நடைபெற உள்ளது என்று கூறினார். 


    • கர்நாடகா மாநிலத்தில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • முதல்முறையாக வாக்களிப்பவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

    பெங்களூரு:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்நிலையில் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான விஷயம். நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகிறவர்தான் உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள்.

    ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும் உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும்.

    முதல்முறையாக வாக்களிப்பவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இது ஒரு அற்புதமான அனுபவம். சந்தோஷம், எழுச்சியை கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
    • வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

    அந்தவகையில் கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

    2-ம் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய பிரதேசத்தின் பீட்டுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணமடைந்ததால், அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    எனவே மீதமுள்ள 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையிலேயே பிரசாரம் ஓய்ந்தது.

    இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

    2-ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15.88 கோடியாகும். இவர்கள் வாக்களிப்பதற்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.


    ×