ஆளும்-ஆண்ட கட்சிக்கு மாற்றாக த.வெ.க உள்ளது: செங்கோட்டையன்

ஆயிரம் கோடி வருமானத்தை உதறித் தள்ளிவிட்டு மக்களுக்காக பணியாற்றுவதற்காக வந்துள்ளார். நான் அதிமுகவில் இருந்த பொழுது எம்ஜிஆர், ஜெயலலிதா படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது பிரதமர் படத்தை வைத்துள்ளனர் .
ஆளும்-ஆண்ட கட்சிக்கு மாற்றாக த.வெ.க உள்ளது: செங்கோட்டையன்
Published on

ஈரோடு மாவட்டம் கோபி மேற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழக அலுவலகத்தை தமிழக வெற்றி கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே .ஏ .செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதை தொடர்ந்து செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தைப்பூச நாளன்று இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது .இதற்காக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் .

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எந்த திசையை காண்பிக்கிறாரோ அதைநோக்கி செல்ல தயாராக இருக்கிறோம்.

தமிழகத்தில் புதிய மாற்றம் ஏற்பட உள்ளது. அவருடைய வெற்றி உறுதி என்ற நிலையில் உள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது ஆளும் கட்சி, ஆண்ட கட்சிக்கு மாற்றாக தமிழக வெற்றி கழகம் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராவது உறுதியாகிவிட்டது. அவர் செல்லும் இடமெல்லாம் அவர் முகத்தை காண வேண்டும் என்ற ஆவலோடு மக்கள் இருக்கின்றனர்.

ஆயிரம் கோடி வருமானத்தை உதறித் தள்ளிவிட்டு மக்களுக்காக பணியாற்றுவதற்காக வந்துள்ளார். கூட்டணியில் யார் வரவேண்டும் என்பதை தலைவர் விஜய் தான் முடிவு செய்வார். மேலும் அவர் எந்த தேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். விரைவில் மாற்றுக் கட்சியிலிருந்து இக்கட்சியில் ஏராளமானோர் சேர உள்ளனர். நான் அதிமுகவில் இருந்த பொழுது எம்ஜிஆர், ஜெயலலிதா படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது பிரதமர் படத்தை வைத்துள்ளனர் .

அந்த கட்சி தற்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை. ஈரோடு புறநகர் மாவட்டத்திற்கு இன்னும் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரே நியமிக்கப்படவில்லை. மேலும், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ தான் தற்பொழுது பொறுப்பு வகித்து வருகிறார். இதிலிருந்து அந்த கட்சியினுடைய நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வீடுகளிலும் மகன், மகள், மனைவி ஆகியோர் விஜய்க்கு தான் ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்து விட்டனர் என்றார்.

பேட்டியின் போது மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப் குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜம்பு கார்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழரசு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com