என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி"

    • அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது.
    • காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள்வந்தபோது ​​வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.

    மாத வாடகை செலுத்த முடியாமல் வீட்டை விட்டு விரட்டப்படும் சூழலில் குடும்பம் ஒன்று தற்கொலை செய்த சோக சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறி உள்ளது.

    டெல்லியின் கல்காஜியில் ஒரு தாய் மற்றும் அவரது இஒரண்டு குழந்தைகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன.

    இந்தக் குடும்பம் இங்கு ஒரு வீட்டில் ரூ.40,000 மாத வாடகைக்கு அனுராதா கபூர் (52), அவரது மகன்கள் ஆஷிஷ் கபூர் (32) மற்றும் சைதன்யா கபூர் (27) வசித்து வந்தனர்.

    அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது. கட்டுமானத் துறையில் பணிபுரிந்த கணவர், குடும்பத்திற்கு மிகப்பெரிய கடன் சுமையை ஏற்படுத்தியிருந்தார்.

    இந்த வீட்டின் மூன்றாவது மாடியை டிசம்பர் 2023 இல் குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்தனர். ஆனால் அவர்கள் வாடகை செலுத்தவில்லை.

    கடந்த ஆண்டு கணவரும் இறந்த பிறகு, வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தை அணுகினார் .

    கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மகன்கள் கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வாடகை தொடர்பாக வீட்டு உரிமையாளருடன் அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து வந்தன.

    வீட்டு உரிமையாளரின் புகாரைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி வீட்டை காலி செய்ய காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வந்தபோது, வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.

    வீட்டு உரிமையாளர் அழைத்தபோது திறக்காததால், போலி சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்தபோது, தாயும் அவரது இரண்டு மகன்களும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.

    உடல்களுக்கு அருகில் ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் பண நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர் .

    இறந்தவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

    • பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

    தலைநகர் டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '450' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையில் எட்டியுள்ளதால் நான்காம் கட்ட 'கிராப்' கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

    அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்தே பணியாற்ற டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே, கட்டுமானப் பணிகளுக்கும், பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த தாக்குதலில் போலீசார், பாதுகாப்புப்படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
    • பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற கட்டிடம் மீது கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 5 பேர் நடத்திய இந்த தாக்குதலில் போலீசார், பாதுகாப்புப்படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்த நிகழ்வு வருடந்தோறும் பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தாக்குதலில் வீர மரணடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    தாக்குதல் நினைவாக பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர்.

    2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமீன் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில்,டெல்லி கலவர வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சமூக ஆர்வலர் உமர் காலித்துக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனைகளுடன் 2 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது

    2020 முதல் உமர் பலமுறை ஜாமின் கேட்டு போராடி வரும் நிலையில், டிசம்பர் 16 முதல் 29 வரை குடும்ப திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 

    • கழிவுகள் எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 80-90 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.
    • முதல் 10 பட்டியலில் உள்ள அனைத்து நகரங்களும் முந்தைய ஆண்டை விட அதிக PM2.5 அளவைப் பதிவு செய்துள்ளன.

    எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA) அறிக்கை வெளியாகி உள்ளது.

    அதில், நவம்பர் மாதத்தில் நாட்டின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

    அதன்படி மிகவும் மாசுபட்ட நகரங்களின் முதல் 10 பட்டியலில் உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து நொய்டா, பகதூர்கர், டெல்லி, ஹாபூர், கிரேட்டர் நொய்டா, பாக்பத், சோனிபட், மீரட் மற்றும் ரோஹ்தக் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

    டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவை முன்னர் குற்றம் சாட்டப்பட்டன. இருப்பினும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த மாநிலங்களில் கழிவுகள் எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 80-90 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.

    காற்று தர கண்காணிப்பு நிலையங்களிலிருந்து PM2.5 தொடர்பான தரவுகளின் அடிப்படையில் CREA தனது நவம்பர் 2025 அறிக்கையைத் தயாரித்துள்ளது.

    முதல் 10 பட்டியலில் உள்ள அனைத்து நகரங்களும் முந்தைய ஆண்டை விட அதிக PM2.5 அளவைப் பதிவு செய்துள்ளன.

    நாடு முழுவதும் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க சரிவை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 

    • மாசுபாட்டின் அளவு அதிகரிப்பது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் தொடர்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மேலும் ஏற்கனவே உள்ள நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது

    டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '400' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக, 2022 மற்றும் 2024 க்கு இடையில் டெல்லியில் உள்ள ஆறு மருத்துவமனைகளில் சுமார் 2 லட்சம் சுவாச நோய்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மாநிலங்களவையில் கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பதிலளித்தார்.

    அவரது பதிலில், அரசு தரவுகளின்படி, டெல்லியில் உள்ள ஆறு பெரிய மருத்துவமனைகள் 2022 ஆம் ஆண்டில் 67,054 சுவாசக் கோளாறுகளையும், 2023 இல் 69,293 மற்றும் 2024 இல் 68,411 சுவாசக் கோளாறுகளையும் பதிவு செய்துள்ளன.

    மாசுபாட்டின் அளவு அதிகரிப்பது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் தொடர்புடையது. மேலும் ஏற்கனவே உள்ள நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே நேற்று பாரளுமன்றத்தில் டெல்லி மாசுபாடு குறித்து நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.  

    • தீ கட்டிடத்தின் மேல் தளம் வரை பரவி கடும் பாதிப்பு ஏற்பட்டது.
    • காயமடைந்த பெண் மம்தா (40) 25 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தலைநகர் டெல்லியில் நடந்த தீவிபத்தில் ஒரு சகோதரி மற்றும் சகோதரர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

    தெற்கு டெல்லியில் உள்ள டைக்ரி பகுதியில் நேற்று மாலை நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள ஒரு ஷூ கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ கட்டிடத்தின் மேல் தளம் வரை பரவி கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இரண்டு பெண்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

    இறந்தவர்கள் கட்டிடத்தின் உரிமையாளர் சதேந்தர் என்ற ஜிம்மி (38) மற்றும் அவரது சகோதரி அனிதா (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற இருவரின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

    காயமடைந்த பெண் மம்தா (40) 25 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றன.   

    • 2025 காற்று தர வாழ்க்கை குறியீட்டு (AQLI) அறிக்கையின்படி, டெல்லி மக்கள் தங்கள் ஆயுட்காலத்தில் 8.2 ஆண்டுகளை இழந்துள்ளனர்.
    • டெல்லிக்கு வடக்கில் இமயமலையும், தென்மேற்கில் ஆரவல்லி மலைத் தொடரும் அரணாக அமைந்துள்ளன.

    நாட்டின் தலைநகரமான டெல்லி உலகின் மிகவும் காற்று மாசு கொண்ட நகரங்களில் பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக ஆண்டின் கடைசி மாதங்களில் குளிர்காலத்தில் டெல்லியின் காற்று மாசு மிகவும் மோசமடைகிறது.

    இதனால் சுவாசப் பிரச்சனைகள் உள்ளிட்ட மோசமான உடல்நலப் பிரச்சனைகளை டெல்லி மக்கள் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக டெல்லியில் உள்ள குழந்தைகளுக்கு காற்று விஷமாக மாறும் நிலையை எட்டும் தருவாயில் உள்ளது.

    2025 காற்று தர வாழ்க்கை குறியீட்டு (AQLI) அறிக்கையின்படி, டெல்லி மக்கள் தங்கள் ஆயுட்காலத்தில் 8.2 ஆண்டுகளை இழந்துள்ளனர்.

    மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி 130 ஆக இருந்த டெல்லியின் காற்றின் தரம் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் 428 என்ற அபாயகரமான நிலையை எட்டியது. 

    இன்றும் டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400க்கும் அதிகம் என்ற மோசமான நிலையிலேயே உள்ளது. அடுத்த வாரத்திலும் இந்த நிலையே நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் மாதத்தில் டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேச விவசாயிகள் பயிர்கழிவுகளை எரிப்பதில் இருந்து வரும் புகையே டெல்லி காற்று மாசுக்கு முக்கிய காரணமாக பொதுவான கருத்து நிலவுகிறது.

    ஆனால் சமீபத்திய ஆய்வுகள் இதை நிராகரிக்கிறது. அதாவது டெல்லி காற்று மாசுக்கு விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதும் ஒரு காரணமே தவிர அதுவே முக்கிய காரணம் கிடையாது.

    மத்திய புவி அறிவியல் துறை வெளியிட்டிருக்கும் முடிவுகளின்படி, அக்டோபர் மாதத்தில் பயிர்க் கழிவுகளுக்கு தீ வைப்பதால் டெல்லிக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. அக்டோபரில் பயிர்க் கழிவு தீ வைப்பால் டெல்லி காற்றுக்கு 2.62 சதவீத பாதிப்பு மட்டுமே ஏற்பட்டது.

    அந்த சமயம் டெல்லி காற்று தரக் குறியீடு 250 என்ற அளவிலேயே இருந்தது. இந்த நவம்பர் 12 டெல்லி காற்று தரக் குறியீடு 418 என்ற 'மிகவும் அபாய' நிலையை எட்டிய நிலையில் இதில் பயிர்க் கழிவுகள் எரிப்பின் பங்கு 22.47 சதவீதம் மட்டுமே ஆகும்.

    நவம்பர் 3 ஆம் வாரத்தில் பயிர்க் கழிவுகள் எரிப்பது குறைந்த போதும் டெல்லி காற்று மாசு குறையவில்லை.

    நவம்பர் 18 முதல் 20 வரை டெல்லி காற்று மாசில் பயிர்த் கழிவுகள் எரிப்பதன் பங்கு 5.4 சதவீதம் முதல் 2.8 சதவீதம் வரை குறைந்தபோதிலும் டெல்லி காற்று தரக் குறியீடு 325-க்கு மேலேயே நீடித்தது.

     இதிலிருந்து தெரிவது என்னவென்றால், பயிர்க் கழிவுகளை எரிப்பது டெல்லி காற்று மாசுக்கு ஒரு காரணிதான் என்றபோதிலும் முக்கிய காரணம் அல்ல என மத்திய புவி அறிவியல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

    மாறாக டெல்லிக்கு காற்று மாசுக்கு காரணமாக மத்திய புவி அறிவியல் துறை குறிப்பிடும் தரவுகளில், டெல்லி காற்று மாசுக்கு சுற்றுப்புற நகரங்களாக கவுதம் புத்தா நகர், குர்கான், கர்னால், மீரட் உள்ளிட்ட டெல்லியைச் சுற்றியுள்ள நகரங்களின் பங்களிப்பு 29.5 சதவீதம் ஆகும்.

    டெல்லி போக்குவரத்தில் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, காற்று மாசுக்கு 19.7 சதவீதம் பங்களிக்கிறது.

    காற்று மாசுக்கு குடியிருப்புகளின் பங்களிப்பு 4.8 சதவீதம் ஆகவும், புறத் தொழிற்சாலைகளின் பங்களிப்பு 3.7 சதவீதம் ஆகவும், மற்றும் கட்டுமானப் தூசு 2.9 சதவீதம் ஆகவும் உள்ளன.

    மாறாக அதிர்ச்சியூட்டும் வகையில் டெல்லி காற்று மாசுக்கு, காரணமே அறியப்படாத, அடையாளம் காணப்படாத காரணிகளின் பங்களிப்பு 34.8 சதவீதம் உள்ளது.

    இந்த மூலங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால், மாசைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால் அவை என்னவென்றே தெரியாமல் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமற்றது என மத்திய புவி அறிவியல் துறை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    இதன்மூலம் டெல்லி காற்று மாசுக்கு பல காரணிகள் கூட்டுப் பங்களிப்பை செய்கின்றன. மேலும் டெல்லியின் புவியியலும் காற்று மாசு அதிகளவில் காணப்பட முக்கிய காரணமாகவும்.

    டெல்லிக்கு வடக்கில் இமயமலையும், தென்மேற்கில் ஆரவல்லி மலைத் தொடரும் அரணாக அமைந்துள்ளன. இதனால் குளிர்காலத்தில் தூய காற்று நுழைவதை இந்த இரு அரண்கள் தடுக்கிறது.

    எனவே டெல்லியில் மாசுபாடு காற்றில் தேக்க நிலையை அடைந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டு தரம் குறைவதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    தூய காற்றை சுவாசிப்பது மக்களின் உரிமையாகும். இந்த பிரச்சனைக்கு டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒருமித்த கருத்துடன் தீர்வை நோக்கிய வியூகத்தை வகுத்து செயல்படுவதே முழுமுதற் தீர்வாகவும். மேலும் மக்களின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியமாகும்.    

    • சையத் முஷ்டாக் அலி தொடரின் லீக் போட்டியில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் இன்று மோதினர்.
    • இந்த ஆட்டத்தில் டெல்லி அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.

    18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 72 ரன்கள் விளாசினார். டெல்லி தரப்பில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.'

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 15 ஓவரில் 142 ரன்களுக்கு 2 விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது. இதனால் கடைசி 5 ஓவரில் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் டெல்லி அணி விளையாடியது.

    பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அதனை ஹிம்மாட் சிங் வேகமாக சுற்றினார். அந்த பந்து பவுண்டரி லைனில் நின்ற ஷாருக்கானிடம் சென்றது. அதனை பார்த்த அவர் உடனே முன்னாடி வந்தார். ஆனால் பந்து பின் நோக்கி செல்வதை அறிந்து மீண்டும் பின்னாடி போய் பந்தை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் பந்து அவரின் கையில் பட்டு சிக்சர் ஆனது.

    இதனால் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 2 போட்டியில் விளையாடும் தமிழக அணிக்கு மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

    • உங்கள் அரசு எந்த அவசரமும் கட்டமால், எந்த திட்டமும் இல்லாமல், எந்த பொறுப்பும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது
    • நமது குழந்தைகளுக்கு தூய்மையான காற்றை சுவாசிக்க உரிமை இருக்கிறது.

    டெல்லியின் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசடைந்து வருகிறது. காற்று மாசு குறித்து டெல்லி அரசின் பாரா முகம் குறித்து ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தீபாவளி அன்று பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்குமாறு டெல்லி பாஜக அரசு வழக்கு தொடர்ந்து சாதகமாக தீர்ப்பு பெற்றது. எனவே பல வருடம் கழித்து இந்த ஆண்டு தீபாவளிக்கு டெல்லியில் பசுமை பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

    இந்த நடவடிக்கையை ஆர்வலர்கள் விமர்சித்தனர். தீபாவளிக்கு பின் டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதற்கிடையே டெல்லியில் செயற்கை மழை பெய்ய செய்ய ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் டெல்லி ஐஐடி மேற்கொண்ட சோதனை தோல்வி அடைந்தது.

    கடந்த சில வாரங்களாகவும், இன்றும் டெல்லி காற்றின் தரம் AQI 400 ஐ தாண்டி 'மிகவும் மோசம்' என்ற வகையை அடைந்துள்ளது.

    இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி காற்று மாசினால் ஏற்பட்டுள்ள சுகாதார அவசரநிலை குறித்து மத்திய அரசின் குறிப்பாக பிரதமர் மோடியின் பாராமுகம் குறித்து விமர்சித்துள்ளார்.

    டெல்லியில், தாய்மார்கள் சிலருடன் தனது வீட்டில் ராகுல் காந்தி காற்று மாசு குறித்து கலந்துரையாடி அதன் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், நான் சந்திக்கும் ஒவ்வொரு தாய்மாரும் என்னிடம் ஒரு விஷயத்தை தான் கூறுகிறார்கள். அவர்களின் குழந்தை மாசுபட்ட காற்றை சுவாசித்து வளர்வது குறித்து அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள் பயத்துடனும், கோபத்துடன், ஏதும் செய்ய முடியாத நிலையிலும் இருக்கிறார்கள்.

    மோடி அவர்களே,"இந்தியாவின் குழந்தைகள் நமது கண் முன்னே மூச்சுத்திணறி கொண்டுள்ளனர். நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள். இந்த பிரச்சனையில் உங்கள் அரசு எந்த அவசரமும் கட்டமால், எந்த திட்டமும் இல்லாமல், எந்த பொறுப்பும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    மேலும், காற்று மாசு விவகாரம் குறித்த பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் செய்யப்பட வேண்டும். இதை சுகாதார அவசரநிலையை கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    நமது குழந்தைகளுக்கு தூய்மையான காற்றை சுவாசிக்க உரிமை இருக்கிறது, எனவே இந்த விஷயத்தில் இனியும் எந்த சாக்கு போக்குகளும், திசை திருப்புதலும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.

    வரும் வாரத்திலும் டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையிலேயே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மௌல்வி இர்பான் அகமது மூலம் முதன்முதலில் உமர் உடன் அமீருக்கு தொடர்பு கிடைத்துள்ளது.
    • அவர் தன்னைத் தானே எமிர் (மன்னர்) என்று அழைத்துக்கொண்டார்.

    டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே 15 பேர் உயிரிழந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன.

    அல் பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த ஜம்மு காஷ்மீரை டாக்டர் உமர்-உன்-நபி இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியதாக அறியப்படுகிறது. 

    உமர் உடன் தொடர்புடைய 3 மருத்துவர்கள், தாக்குதலுக்கு பயனப்டுத்தப்பட்ட காரை வாங்கி தந்த டீலர் உட்பட 6 பேரை கைது செய்து என்ஐஏ விசாரித்து வருகிறது.

    கைது செய்யப்பட்ட மருத்துவர்களில் ஒருவரான முசாமில் ஷகீல் விசாரணையின்போது அமீர் பற்றிய சில தகவல்களை என்ஐஏவிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

    ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மௌல்வி இர்பான் அகமது மூலம் முதன்முதலில் உமர் உடன் அமீருக்கு தொடர்பு கிடைத்துள்ளது.

    விசாரணை வட்டாரங்களின்படி, "உமர்-உன்-நபி ஒன்பது மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அணு விஞ்ஞானியாக எளிதில் மாறும் அளவுக்கு அவர் புத்திசாலி. அவர் தன்னைத் தானே எமிர் (மன்னர்) என்று அழைத்துக்கொண்டார். மதத்திற்காக இதையெல்லாம் செய்கிறேன் என்று இறுதிவரை என்னை நம்ப வைத்தார்" என்று முசாமில் வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    மேலும் விசாரணை வட்டாரங்களின்படி, 2016 ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானியின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் உமர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

    ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அரியானாவில் மேவாட்-நூ பகுதியில் வகுப்புவாத மோதல்கள் மற்றும் பசு பாதுகாவலர்களால் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் தன்னை மிகவும் பாதித்ததாக உமர் அடிக்கடி கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தற்கொலைத் தாக்குதலுக்கு, அசிட்டோன், சர்க்கரைப் பொடி மற்றும் யூரியாவைப் பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சூடேக்சில் வைத்து அந்த வெடிகுண்டை எடுத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும்,அல் பாலா பல்கலைக்கழகத்தில் உள்ள தனது அறையில் வெடிகுண்டு தயாரிக்கும் பரிசோதனைகளை உமர் செய்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.  

    • டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அபாய வரம்பை தொட்டுள்ளது.
    • மருத்துவமனைகள், தீயணைப்பு சேவைகள் உள்ளிட்டவற்றிற்கு இந்த 50 சதவீத வரம்பு கிடையாது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு கடந்த சில நாட்களாக ஆபத்தான அளவிற்கு உயர்ந்து வருகிறது.

    காற்று மாசுபாடு அபாய வரம்பை தொட்டுள்ளதால் பொது சுகாதாரத்தை பாதுகாக்க அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள டெல்லி அரசு கட்டாயப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களின் மொத்த பணியாளர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே நேரடியாக அலுவலகத்திற்கு வரவேண்டும். மீதமுள்ள ஊழியர்கள் கட்டாயம் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என டெல்லி அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

    அவசர பணிகள் அல்லது பொது பயன்பாடு சேவைகள் மேற்கொள்ள வேண்டிய சூழலில் மட்டுமே கூடுதல் பணியாளர்களை நேரடியாக அழைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிநேரங்களை கட்டம் கட்டமாக மாற்றி அமைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள், தீயணைப்பு சேவைகள், மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பொது போக்குவரத்து , தூய்மை பணிகள், பேரிடர் மேலாண்மை பிரிவு மற்றும் மாசு கட்டுப்பாடு தொடர்பான அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு இந்த 50 சதவீத வரம்பு அமலுக்கு வராது.

    டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கருத்தில் கொண்டு மக்கள் அத்தியாவசிய பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும், முக கவசம் பயன்படுத்தவும், வீட்டுக்குள் காற்று சுத்திகரிப்பு சாதனங்களைப் பயன்படுத்தவும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

    ×