search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென் மாவட்டங்கள்"

    • தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது
    • கனமழையால் பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகளுக்கு ₹201.67 கோடி நிவாரண நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை

    தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகளுக்கு ₹201.67 கோடி நிவாரண நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது

    அதில், "தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை விட கூடுதலாக ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்பட்டது. அதிகனமழையினை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும். பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை 21.12.2023 அன்று பார்வையிட்டு மிகக் கடுமையான வெள்ள பாதிப்பிற்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தார்.

    அதன் அடிப்படையில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி. கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம். சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 1.64.866 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கு, 1,98,174 விவசாயிகள் பயனடையும் வகையில் 160 கோடியே 42 இலட்சத்து 41 ஆயிரத்து 781 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும். 38.840 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 62,735 விவசாயிகள் பயனடையும் வகையில் 41 கோடியே 24 இலட்சத்து 74 ஆயிரத்து 680 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் சார்பில் போராட்டம் நடந்துள்ளன.
    • தி.மு.க. எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்.

    மத்திய அரசின் ஜி.எஸ்டி. வசூலில் மாநிலங்களுக்கு வழங்கும் வருவாய் பகிர்வில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்தநிலையில், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் சார்பில் போராட்டம் நடந்துள்ளன.

    கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகள் (இறக்குமதி வரி மீதான ஜிஎஸ்டியைத் தவிர்த்து)- ரூ.22,26,983.39 கோடி., அதே காலக்கட்டத்தில் உத்திரப் பிரதேசத்தில் வசூலிக்கப்பட்ட வரி - ரூ.3,41,817.60 கோடி. 

    கடந்த 5 ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கிய வரிப் பகிர்வுத் தொகை - ரூ.6,42,295.05 கோடி. கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் விடுவிக்கப்பட்ட வரிப் பகிர்வுத் தொகை - சுமார் ரூ.6,91,375.12 லட்சம் கோடி.

    இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு புள்ளி விவரங்களுடன் பதில் அளித்து உள்ளது.

    அதில் மாநிலங்கள் கொடுத்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு திருப்பி அனுப்பிய தொகை வருமாறு:-

    தமிழ்நாடு - 26 பைசா

    கர்நாடகா - 16 பைசா

    தெலுங்கானா - 40 பைசா

    கேரளா - 62 பைசா

    மத்தியபிரதேசம் - ரூ.1.70

    உத்தரப்பிரதேசம் -ரூ. 2.2

    ராஜஸ்தான் - ரூ.1.14

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 4 மாவட்டங்களிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட அமைச்சர் தலைமையில் மருத்துவ முகாம்.

    தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்புக்குள்ளானது.

    இந்த 4 மாவட்டங்களிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

    அவர்களும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். 

    அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர்.

    தலைமைச் செயலாளர் அவர்களும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

    தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 49,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
    • கன்னியாகுமரி, தென்காசியில் அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் அளித்தார்.

    அப்போத அவர் பேசியதாவது:-

    தென் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப்பணிகள் நிறைவடைந்துள்ளது. மீட்புப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களில் 3,400 பேர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

    வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 49,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் சமுதாய சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குகிறோம். இதுவரை 5 லட்சம் உணவு பொட்டலங்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

    மழை, வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 3,500 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.

    தென் மாவட்டங்களில் பால் விநியோகம் சீராகி உள்ளது. தென் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, தென்காசியில் அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கனமழை மற்றும் வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் கடும் பாதிப்பு.
    • கனமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் ஆலோசனை.

    வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டின் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் தற்போதைய நிலவரத்தை மறுஆய்வு செய்யவும், மீட்பு மற்றும் நிவாரணத்துக்கான அதிகபட்ச வளங்களைத் திரட்டும் சாத்தியம் குறித்தும் விவாதிக்க மத்திய அமைப்புகள் மற்றும் ஆயுதப் படைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராஜ் பவனில் நடைபெற இருக்கிறது. 

    • கனமழை மற்றும் வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் கடும் பாதிப்பு.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம்.

    வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தகவல்.

    • நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தொடர் மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதி கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து இரு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மாவட்டம் முழுவதும் சராசரியாக 30 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்திருக்கிறது.
    • தற்போது இலங்கைக்கு மேற்கு பகுதி மற்றும் குமரி கடலுக்கு தென்பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மிக கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பெய்யும் இந்த கனமழை 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதி கனமழையாக பெய்திருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    தென் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை இன்று மாலை வரையில் தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளது. சமவெளி பகுதிகளின் மீது பெய்துள்ள அதிகபட்ச மழையாகவும் இந்த மழை உள்ளது. அவலாஞ்சி பகுதியில் 92 செ.மீ. அளவுக்கு இதற்கு முன்பு பெய்ததைவிட அதிக மழை பெய்து இருக்கிறது. தற்போது காயல்பட்டினம் பகுதியில் அதே அளவு மழைப்பொழிவு காணப்படுகிறது. நெல்லை மாவட்டம் முழுவதுமே 112 செ.மீ. அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

    குறிப்பிட்ட பகுதிகள் என இல்லாமல் ஒரு மாவட்டம் முழுவதுமே இதுபோன்று இப்படி ஒரு மழைப்பொழிவு இருப்பது இதுதான் முதல்முறையாகும். மாவட்டம் முழுவதும் சராசரியாக 30 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்திருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளில் தென் மாவட்டங்களில் பெய்துள்ள அதிகபட்ச மழை அளவாகவும் இது இருக்கிறது. இந்த கனமழை தொடர்ச்சியாக பெய்வதற்கான சூழலே தற்போது வரை நீடிக்கிறது. காற்றழுத்த பகுதி தொடர்ந்து 24 மணி நேரமாக ஒரே பகுதியில் நீடிப்பதாலேயே மழை பொழிவும் அதிகமாக உள்ளது.

    தற்போது இலங்கைக்கு மேற்கு பகுதி மற்றும் குமரி கடலுக்கு தென்பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. அது மேற்கு நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அது போன்று மேற்கு பகுதி நோக்கி நகர்ந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றால் மட்டுமே தென் மாவட்டங்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால் அடுத்த 12 மணி நேரத்துக்கு நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    இவ்வாறு தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    • தென்மாவட்டங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி களை கட்டத் தொடங்கி உள்ளன.
    • தேர்தல் நெருங்க நெருங்க ஆலோசனை கூட்டங்கள், கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு கூட்டணியும் களம் காண ஆயத்தமாகி உள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி காய் நகர்த்தி வருகிறது. இதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவே தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த 28-ந்தேதி நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார். மத்திய மந்திரி அமித்ஷா இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    தி.மு.க. அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் போலவே தனது நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க. அமர்ந்துள்ள போதிலும் பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சியால் தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

    மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.வே வென்றது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலையை நிச்சயம் மாற்றி காட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டு உள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் சண்டை முடிவுக்கு வந்து கட்சியின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக மாறி இருக்கும் எடப்பாடி பழனிசாமி பாராளுமன்றத் தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    இதன் காரணமாக பா.ஜ.க. உள்ளிட்ட தங்களோடு ஒத்துப்போகும் கட்சிகளோடு கூட்டணி அமைத்து எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்று அவர் காய் நகர்த்தி வருகிறார். இதற்காக மதுரையில் வருகிற 20-ம் தேதி பிரம்மாண்ட மாநாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்திருக்கிறார். அதி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள பன்னீர் செல்வத்துக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்பட்டு வரும் மதுரையில் தனது செல்வாக்கு என்ன என்பதை நிரூபிக்கவும் பாராளுமன்ற தேர்தலுக்கு அச்சாரம் போடும் வகையிலும் இந்த மாநாட்டை நடத்த அ.தி.மு.க. தலைவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    அதே நேரத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை வெல்வதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறார். ஏற்கனவே உள்ள கூட்டணியை அப்படியே நீடித்து வருகிற தேர்தலிலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை தமிழகத்தில் வெல்ல வேண்டும் என்று அவர் முனைப்பு காட்டி வருகிறார்.

    இதற்காக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் அவர் நடத்தியுள்ளார். இந்த நிலையில் அ.தி.மு.க. மாநாட்டுக்கு ஒரு நாளைக்கு முன்னதாக வருகிற 19-ந்தேதி ராமேஸ்வரத்தில் மீனவர் மாநாடு ஒன்றில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    அதி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் தங்களது செல்வாக்கு என்ன என்பதை தெரிவிக்கும் வகையில் தேனியில் கொடநாடு விவகாரத்துக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது பலம் என்ன என்பதையும் காட்டி இருக்கிறார்கள்.

    இருவரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவார்களா? என்கிற கேள்வி பரவலாகவே எழுந்துள்ளது. ஆனால் அதி.மு.க.வினர் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி பாராளுமன்ற தேர்தலில் இருவரும் என்ன செய்யப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

    அதே நேரத்தில் தற்போது வரையில் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதை வெளிப்படையாக தெளிவுபடுத்தாமல் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும் தென் மாவட்டங்களில் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மற்றும் திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    மேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க. செல்வாக்கு மிகுந்த கட்சி என்றும் வடதமிழகம் மற்றும் மத்திய தமிழகத்தில் தி.மு.க. செல்வாக்குள்ள கட்சி என்றும் எப்போதும் ஒரு கருத்து உள்ளது. அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் இந்த இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தான் அரசியல் கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து தங்களது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்திற்கு தயாராகி மாநாட்டுக்கும் ஆயத்தமாகி வருகிறார்கள்.

    இதன் மூலம் தென்மாவட்டங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி களை கட்டத் தொடங்கி உள்ளன. கட்சித் தொண்டர்களும் உற்சாகத்தோடு பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற ஆலோசனை கூட்டங்கள் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் இப்போதே பரபரப்பாக தொடங்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    ×