search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    • எல்லையை கடக்க முயலும் மக்கள் கைகளில் கொடிகளை ஏந்தியபடி முன்னேறினர்
    • 25 அடி உயர முட்கம்பியை சேதப்படுத்தி உள்ளே நுழைய முயற்சித்தனர்

    கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில் பாலஸ்தீன மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளின் கொடிகளை கைகளில் வைத்திருக்கும் ஒரு கும்பல், கொடிகளை ஏந்தியபடி இஸ்ரேல் எல்லை பகுதியை கடந்து உள்ளே செல்ல முயல்வது தெரிந்தது. அந்த வீடியோவுடன் இணைக்கப்பட்ட செய்தி குறிப்பில் பாலஸ்தீனத்தை காக்க இஸ்ரேலுக்கு எதிராக மக்கள் எழுச்சியுடன் இஸ்ரேலுக்குள் நுழைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், ஆய்வில் இந்த வீடியோ தவறானது என தெரிய வந்துள்ளது.

    உண்மை என்னவென்றால் இதில் காணப்படும் சம்பவம் தற்போது இஸ்ரேல்-காசா போர் நடைபெறும் காலகட்ட சம்பவமே அல்ல.

    2021 வருடம், லெபனான் நாட்டை சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், காசா பகுதி மக்களின் உரிமைகளுக்காக லெபனான்-இஸ்ரேல் எல்லையில் உள்ள 25 அடி உயர முட்கம்பி வேலியை பல உபகரணங்களால் அறுத்து, இஸ்ரேலி எல்லைப்படை வீரர்கள் மேல் கற்களை எறிந்து, கையெறி குண்டுகளை வீசி உள்ளே நுழைய முயற்சித்த போது எடுக்கப்பட்டது.

    2021ல் நடைபெற்ற சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, தவறாக 2023 அக்டோபர் மாத சம்பவமாக வெளியிடப்பட்டுள்ளது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • எனது தந்தை உயிரிழந்ததாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.
    • தந்தையுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

    பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் உயிரிழந்துவிட்டதாக இன்று மாலை முதலே தகவல்கள் வெளியாகி வந்தன. பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் உயிரிழந்ததாக எக்ஸ் தளத்தில் வெளியான தகவல் காட்டுத்தீ போன்று வேகமாக பரவியது.

    இந்த நிலையில், அமர்த்தியா சென் உயிரிழக்கவில்லை என்று அவரின் மகள் நந்தனா சென் தெரிவித்து உள்ளார். மேலும் தனது தந்தை உயிரிழந்ததாக வெளியான தகவல்களில் துளியும் உண்மையில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார். இத்துடன் தனது தந்தையுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

    இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில், " கவலை தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி ஆனால் அது ஒரு பொய்யான செய்தி. பாபா நலமுடன் இருக்கிறார். கேம்ப்ரிட்ஜ்-இல் கடந்த வாரம் தான் நாங்கள் அருமையான நாட்களை குடும்பத்தோடு கழித்தோம்."

    "அவரின் அரவணைப்பை போன்று அவர் உறுதியாகவே இருக்கிறார். அவர் ஹார்வார்டில் வாரத்திற்கு இரண்டு முறை பாடம் எடுத்து வருகிறார். அவர் எப்போதும் போன்று பிசியாகவே இருக்கிறார். அவர் தனது புத்தகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நியூயார்க் நகரில் 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டன
    • ஆக்லேண்டு பகுதியில் 249 மில்லிமீட்டர் மழைபொழிவு ஏற்பட்டது

    கடந்த செப்டம்பர் 29 அன்று அமெரிக்காவின் முக்கிய பெருநகரமான நியூயார்க் நகரில் திடீரென பெய்த பெருமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் ஆங்காங்கே வெள்ள பெருக்கு ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட பல விமான சேவைகள் நிறுத்தப்பட்டு நகரின் ஒரு சில பிராந்தியங்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.

    நகரில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அவ்வப்போது புகைப்படங்களும், வீடியோக்களும் பயனர்களால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வந்தது.

    அவ்வாறு வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் ஒரு பல்பொருள் அங்காடியில் முழங்கால் அளவு வரை நீர், நதி போல் ஓடுவதும், அதில் மிதக்கும் பொருட்களை தாண்டி அக்கடைக்கு வந்த பல வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துடன் தண்ணீர் நடுவே மெதுவாக நடந்து செல்வதையும் காண முடிந்தது.

    மேலும் அந்த வீடியோவில், "பிரளயத்தை போன்ற வெள்ளத்தில் நியூயார்க் மக்கள் ஒரு பெரிய மளிகை கடையில், ஓடி வரும் தண்ணீரில், மிதக்கும் மளிகை பொருட்கள், மிருகங்களுக்கு நடுவே பொருட்களை வாங்கி செல்கின்றனர்" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது.

    ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது. உண்மையில், இந்த வீடியோவில் காணப்படும் சம்பவம் பல மாதங்களுக்கு முன் 2023 ஜனவரி 28 தேதியிட்ட ஒரு வீடியோவில் உள்ளது.

    நியூசிலாந்து நாட்டின் ஆக்லேண்டு நகரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 24 மணி நேர இடைவெளியில் 249 மில்லிமீட்டர் மழைப்பொழிவு ஏற்பட்ட போது அங்குள்ள கிலென்ஃபீல்டு சூப்பர் மார்கெட் (Glenfield Super Market) எனும் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்க வந்தவர்கள் சிக்கி கொண்டு மெதுவாக வெளியேறியது வீடியோ பதிவாகி வெளியிடப்பட்டது.

    அந்த சம்பவம் குறித்த வீடியோவைத்தான் நியூயார்க் நகர வெள்ளத்துடன் தொடர்புபடுத்தி தவறுதலாக வலைதளங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர்.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.


    • இரு நாட்டு உறவுகளும் சீராகாத நிலையில் இந்த வீடியோ பரவியுள்ளது
    • 2023 மார்ச் மாதம் இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடைபெற்றது

    2020-ஆம் ஆண்டு, இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட ஹர்திப் சிங் நிஜ்ஜார் எனும் காலிஸ்தான் பயங்கரவாதி கடந்த 18 அன்று கனடாவில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவிற்கு பெரும்பங்கு உண்டு என கனடாவின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை ஆதாரமற்றது என இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இரு நாடுகளும் தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து கொள்ளும் அளவிற்கு இரு நாட்டு உறவு நலிவடைந்தது.

    இரு நாட்டு உறவுகளும் இன்னமும் சீராகாத நிலையில் கனடாவில் நடைபெற்ற சம்பவம் என குறிப்பிடப்பட்டு சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் ஒரு காலிஸ்தான் ஆதரவாளர் சாலையில் சென்று கொண்டிருக்கும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரை வழிமறித்து மிரட்டுகிறார்.

    இந்த வீடியோவுடன் ஒரு குறுஞ்செய்தியையும் ஒரு பயனர் வெளியிட்டுள்ளார். அதில் "அப்பாவி குஜராத்தி தொழிலதிபரை காலிஸ்தானி 'எலிகள்' வெளிப்படையாக மிரட்டுகிறது. ஆனால் இதே 'எலிகள்' இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்பை கண்டதும் எங்காவது பொந்துக்குள் ஒளிந்து கொள்கின்றன" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    இந்திய மாநிலமான பஞ்சாபில் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் எனும் பயங்கரவாதிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    2023 மார்ச் மாதம், இதனை எதிர்த்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு வெளியே புறநகரில் சவுத் ஆல் எனும் பகுதியில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தினார். அப்போது சாலையில் நடந்து சென்ற ஒரு குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரை காலிஸ்தான் ஆதரவாளர்களில் ஒருவர் மிரட்டினார். இது அப்போதே வீடியோவாக வலைதளங்களில் பரவியது. அதே காலகட்டத்தில்தான் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

    மார்ச் மாதம் இங்கிலாந்தில் அப்போது நடைபெற்ற சம்பவம் குறித்த வீடியோ கனடாவில் நடைபெற்றதாக தவறுதலாக பகிரப்பட்டுள்ளது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • 9 குழந்தைகள் அந்த பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் பிறந்தவை என பதிவாகியிருந்தது
    • 2018 வருடம் முதல் 2 வருடங்களாக வயிற்று பகுதி வீங்கி கொண்டே வந்தது

    சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது.

    அதில் வழக்கத்திற்கு மாறாக மிக பெரும் வயிற்றுடன் உள்ள ஒரு பெண் காணப்பட்டார். அவர் கர்ப்பிணி என்றும் அவர் 9 குழந்தைகளை சுமக்கிறார் என்றும் அந்த வீடியோவுடன் ஒரு குறுஞ்செய்தி பதிவாகியிருந்தது. அதே வீடியோவில் சிறிது நேரம் கழித்து வரும் காட்சியில் 9 பிறந்த குழந்தைகள் காணப்பட்டனர். அக்குழந்தைகள் அந்த பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் பிறந்தவை என கூறி, தாய்மையை போற்றிய ஒரு குறுஞ்செய்தியும் பதிவாகியிருந்தது.

    ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    சீனாவின் அன்ஷுன் (Anshun) பிராந்தியத்தில் உள்ள ஸாங்கி (Songqi) டவுனிற்கு அருகே உள்ளது டாசி (Dazhi) கிராமம். இங்கு வசித்து வந்தவர் ஹுவாங் குவோக்சியன் (Huang Guoxian). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு 2018 வருடம் முதல் 2 வருடங்களாக வயிற்று பகுதி வீங்கி கொண்டே வந்தது. தீவிர மருத்துவ பரிசோதனையில் இவருக்கு சினைப்பை புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது வயிற்றில் இருந்த நோய் கட்டிகள் அகற்றப்பட்டு, தேங்கிய திரவங்கள் வெளியேற்றப்பட்டன.

    2020ல் இவரது நோய்க்கான சிகிச்சைக்கு மக்களிடம் பண உதவி கேட்டு இவர் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோவை பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தைகள் உள்ள வேறு ஒரு வீடியோவுடன் இணைத்து தவறாக பரப்பியுள்ளனர்.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • டேனியல் புயல் காரணமாக அணை உடைந்து வெள்ளம் நகருக்குள் புகுந்தது
    • 2015ல் சவுதி அரேபியாவில் திஹாமா கஹ்டான் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது

    வட ஆப்பிரிக்காவில் மத்திய தரைகடல் பகுதியில் உள்ள நாடு லிபியா. இந்நாட்டில் செப்டம்பர் 10 அன்று டேனியல் எனும் புயல் தாக்கியதில் அங்குள்ள முக்கிய அணைகள் உடைந்தது. இதன் காரணமாக அந்நாட்டில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக பெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில் லிபியாவின் வெள்ளப்பெருக்கு குறித்தும் உயிர்சேதம் குறித்தும் ஒரு குறுஞ்செய்தியும் உடன் பதிவிடப்பட்டிருந்தது.

    ஆய்வில், இந்த வீடியோ தவறானது என தெரிய வந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ, 2015ல் சவுதி அரேபியாவில் திஹாமா கஹ்டான் பகுதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கின் போது எடுக்கப்பட்டது. இதனை லிபியா வெள்ள சேதத்துடன் இணைத்து செய்தியை திரித்து வெளியிட்டுள்ளனர்.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளதால் இடிபாடுகளுக்கிடையே தேடுதல் தொடர்கிறது
    • புலந்தர் கிராமத்தில் வயல்வெளியில் ஒரு குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது

    மொராக்கோவில் இம்மாதம் 8-ஆம் தேதியன்று ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவில் ஒரு கடும் நிலநடுக்கம் தாக்கியது. இதில் தற்போது வரை சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளதால், இடிபாடுகளுக்கிடையே இன்னும் தேடுதல் தொடர்கிறது.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது.

    அதில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு குழந்தை புதையுண்டிருப்பதையும், அதனை வெளியே ஒருவர் எடுப்பதும் தெரிகிறது. இக்குழந்தை மொராக்கோ நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்கிடையில் புதையுண்டு இறந்த குழந்தை என ஒரு தகவலும் அந்த வீடியோவில் இடம் பெறுகிறது.

    ஆனால், ஆய்வில் இந்த வீடியோ உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் தேஹட் மாவட்டத்தில் உள்ள மூசா நகர் பகுதியில் புலந்தர் கிராமத்தில் ஒரு குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட ராஜேஷ், ரேஷ்மா எனும் தம்பதியினர் பிறந்து சில மணி நேரமே ஆகியிருந்த ஒரு குழந்தை பூமியில் அரைகுறையாக புதைக்கப்பட்டிருப்பதை கண்டனர். உடனே அதனை வெளியே எடுத்து மருத்துவமனையில் சேர்த்து காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

    குழந்தையை புதைத்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    அப்போது குழந்தையை வெளியே எடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ, மொராக்கோ நிலநடுக்கத்துடன் தொடர்புபடுத்தபட்டு தவறாக சித்தரித்து இணையத்தில் பரவியிருக்கிறது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • "ஜவான்" திரைப்படத்தை தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார்
    • 2015-ல் சல்மான்கான் கதாநாயகனாக நடித்து வெளியானது "பஜ்ரங்கி பாய்ஜான்"

    தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த "ஜவான்" திரைப்படம் நாடு முழுவதும் வெளியானது. வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மற்றொரு பிரபல இந்தி நடிகரான அமிர்கான், "ஜவான்" திரைப்படத்தையும், அதன் கதாநாயகன் ஷாருக்கானின் நடிப்பையும் பாராட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலானது. அந்த வீடியோவில் நடிகர் அமிர்கான், "படத்தை பார்த்தீர்களா? மிக நல்ல திரைப்படம். அவரது நடிப்பில் இதுதான் மிக சிறப்பான படம். அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். மீண்டும் மீண்டும் பாருங்கள்" என கூறுவது தெரிகிறது.

    இதனை பகிர்ந்த பயனர்களில் ஒருவர் "அமிர்கானின் ஜவான் பட விமர்சனம்" என ஒரு குறுஞ்செய்தியையும் இத்துடன் இணைத்து பதிவிட்டுள்ளார். ஆனால், ஆய்வில் இது தவறான செய்தி என்றும் அந்த வீடியோ பொய் எனவும் தெரிய வந்துள்ளது.

    இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் சல்மான்கான் நடிப்பில் 2015-ல் வெளியான திரைப்படம் "பஜ்ரங்கி பாய்ஜான்." அந்த திரைப்படத்தை அப்போது கண்டு ரசித்த அமிர்கான், கதாநாயகன் சல்மான் கானையும், அத்திரைப்படத்தில் பணியாற்றிய இயக்குனரையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் வெகுவாக பாராட்டி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

    அந்த நீண்ட வீடியோவில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், மேலே சொன்ன வாசகங்கள் இடம்பெறுகிறது. ஆய்வில், "பஜ்ரங்கி பாய்ஜான்" திரைப்படத்தை அமிர்கான் பாராட்டும் நீண்ட வீடியோவை ஆங்காங்கே வெட்டி தொகுத்து "ஜவான்" திரைப்படத்தை பாராட்டுவதை போல் உருவாக்கி வெளியிட்டுள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தற்போது வரை "ஜவான்" திரைப்படம் குறித்து அமிர்கான் எத்தகைய விமர்சனமும் செய்ததாக உறுதியான தகவல் இல்லை. இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • இந்தியாவின் போக்குவரத்து விதிமீறல்கள் பலரால் விமர்சிக்கப்பட்ட ஒன்று
    • 2022ல் வெளியான இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்தார்

    கடந்த மாதம் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ஒரு கருப்பு நிற கார் வேகமாக ஒரு சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருக்கும் இரண்டு கார்களின் மேல் மோதுகிறது. அதில் அந்த இரு கார்களும் முற்றிலும் சேதமடைந்து கவிழ்கின்றன. அருகே உள்ள மக்கள் இதனை கண்டு அலறியடித்து கொண்டு ஓடுகின்றனர்.

    ஒரு சிலர், கார்களிலிருந்து சிதறி காற்றில் பறக்கும் கண்ணாடி துண்டுகள் மற்றும் உலோகங்கள் தங்களை தாக்குவதில் இருந்து தப்பிக்க கீழே குனிந்து கொள்கின்றனர். இந்த வீடியோவுடன், "இது எந்த கார்? நல்ல வேளையாக உள்ளே யாரும் இல்லை. இந்தியா" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது.

    இந்தியாவின் போக்குவரத்து விதி மீறல்களும், சாலைகளின் தரமும், இந்தியர்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதும் பல முறை பலரால் உலகளவில் விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வீடியோ அத்தகைய கருத்துக்களுக்கு வலுவூட்டுவதாக சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

    ஆனால், ஆய்வில் இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் உண்மையில்லை என்பதும், அந்த சம்பவம் நடைபெறுவது இந்தியாவிலேயே இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.

    தேடுதலில் இந்த வீடியோவின் முழுப்பகுதி கிடைத்தது. அதில் "ப்ரேக் நகரில் படப்பிடிப்பு" என குறிப்பிடப்பட்டுள்ளது. சாலையில் நிற்கும் இரு கார்களும், மக்கள் நடப்பதும், அதற்கு பிறகு கருப்பு கார் வந்து நின்று கொண்டிருக்கும் கார்களின் மேல் மோதுவதும், மக்கள் ஓடுவதும் மட்டுமல்லாமல் அதனுடன் சினிமா படப்பிடிப்பு கேமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்கள் ஆகியவை உள்ளதும் தெரிந்தது.

    மேலும் ஆய்வில், இவை 2022-ல் வெளியான "தி க்ரே மேன்" எனும் ஆங்கில திரைப்படத்தின் படப்பிடிப்பின் காட்சிகள் என்பதும் அந்த படப்பிடிப்பு செக் குடியரசின்தலைநகரான ப்ரேக் நகரில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதும் இந்த வீடியோ 2021 ஆண்டிலேயே வீடியோவாக வெளிவந்தது என்பதும் தெரிய வந்துள்ளது.

    இந்த ஆங்கில திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், மாசு வரி என்ற பெயரில் டீசல் வாகனங்களுக்கு கூடுதல் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.

    • கடன் தொல்லையால்பில் கலெக்டர் விஷம் குடித்து தற்கொலை
    • மாநகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி 

    திருச்சி அரியமங்கலம் கலைவாணர் தெரு சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் கணேஷ் (வயது 34) இவர் திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மணிமேகலை என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கணேஷ் பல இடங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது.

    இதனால் கடன் பணத்தை திருப்பி கட்ட முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மதியம் பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்ற கணேசன் திடீரென்று வாந்தி எடுத்து உள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி மணிமேகலை அதிர்ச்சி அடைந்து அவரிடம் விசாரித்த போது மன உளைச்சலில் எலி மருந்தை தின்று விட்டதாக கணேஷ் கூறினார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சிடைந்த மணிமேகலை கணேசனை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்ற கணேசன் சில மணி நேரத்தில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விஷம் குடித்து இறந்த சம்பவம் திருச்சி மாநகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • உலக தலைவர்களுக்கு பாதுகாப்பும், உபசரிப்பும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
    • டெல்லியில் ஒரு குஜராத் மாடல் எனும் செய்தியுடன் இவ்வீடியோ பரவியது

    இந்திய தலைநகர் புது டெல்லியில் 19 உலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலக தலைவர்கள் இந்தியா வரவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும், நகரை தூய்மைப்படுத்தும் பணிகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது.

    அதில், ஒரு சேரி முழுவதும் பச்சை நிற துணி படுகைகளாலும், ஜி20 எனும் விளம்பரங்களை கொண்ட தாள்களுடனும் போர்த்தப்பட்டு இருப்பது தெரிந்தது. ஜி20 தலைவர்களின் வருகைக்காக சேரிகளை (புது டெல்லியில்) அரசு மறைக்கிறது என குறிப்பிட்டு "டெல்லியில் குஜராத் மாடல்" எனும் செய்திப் பதிவும் இதனுடன் வெளியானது. ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாகவே கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பல மாநிலங்களில், ஜி20 உறுப்பு நாடுகளின் பல்வேறு பிரதிநிதிகளுடன் பல்வேறு துறையை சேர்ந்த இந்திய அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடினர். இதில் பல சந்திப்புகள் மும்பை நகரில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வீடியோவில் காணப்படும் இடம் மகாராஷ்டிராவில் உள்ள வடமேற்கு மும்பையின் மேற்கு விரைவு நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள ஜோகேஷ்வரி சேரிப்பகுதியாகும். போரிவலி பகுதியில் உள்ள பூங்காவை காண அந்த விரைவுச்சாலை வழியாக ஜி20 பிரமுகர்கள் டிசம்பர் 2022ல் சென்ற போது சாலையோர சேரிகள் மறைக்கப்பட்டது.

    அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது மும்பைக்கு பதிலாக டெல்லி என குறிப்பிடப்பட்டு வைரலாகியது.

    "ஏப்ரல் 1 முதல் ஜூலை 27 வரை 49 குடியிருப்புகள் பல்வேறு காரணங்களுக்காக அகற்றப்பட்டதாகவும் ஆனால் ஜி20 உச்சி மாநாட்டிற்காக டெல்லி நகரை அழகுபடுத்த எந்த குடியிருப்பு பகுதியிலும் அகற்றல் நடவடிக்கையோ, மறைத்தலோ நடக்கவில்லை" என வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×