search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை"

    • இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு வரை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.
    • கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் ஐதராபாத்தில் உள்ளது. தற்போது தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்காய்ஸ் எனப்படும் அந்த மையம் கடல் சீற்றம் குறித்த எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு வரை நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் மிக அதிகமாக இருக்கும்.

    இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு அலையும் 18 முதல் 22 நொடி நேரம் வரை இருக்கவும், 1.2 முதல் 2 மீட்டர் உயரம் வரை எழும்பவும் வாய்ப்புள்ளது. எனவே கடற்கரையோரம் வசிப்பவர்கள் போதிய முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திட வேண்டும். கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகலில் கனமழை பெய்தது.
    • ஓட்டப்பிடாரத்தில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலையில் ஓரளவு வெயில் அடித்து வந்த நிலையில் பிற்பகலில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. தொடர்ந்து மாவட்டங்கள் முழுவதும் கனமழை பெய்ய ஆரம்பித்தது.

    நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகலில் கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை காண முடிந்தது.

    சில பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. புறநகர் பகுதியை பொருத்தவரை கண்ணடியன் கால்வாய் பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 6.5 சென்டிமீட்டர் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அம்பாசமுத்திரம், களக்காடு சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் மாலையில் தொடங்கி இரவு வரையிலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    அணைகளை பொருத்த வரை சேர்வலாறு, பாபநாசம் அணையில் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 2 மில்லி மீட்டர் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. களக்காட்டில் 44 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. அங்கு அதிகபட்சமாக 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. நாங்குநேரியில் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்த வண்ணம் இருந்தது.

    மாநகர் பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பாளை மனக்காவலம் பிள்ளை ஆஸ்பத்திரியில் முட்டு அளவிற்கு மழை நீர் தேங்கியது. அவற்றை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பாளையில் 4 மில்லி மீட்டர் மலை பதிவாகியது. மாநகரில் இடி-மின்னல் காரணமாக சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.

    நெல்லை வண்ணார்பேட்டை பிரிவு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட தெற்கு புறவழிச்சாலையில் இன்சுலேட்டர் சேதமடைந்தது. அதை மாற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இன்று பகலில் வண்ணார்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு பைபாஸ் சாலை, நெல்லை சந்திப்பு பகுதிகளில் மின் விநியோகம் இல்லை. மின் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை ஆய்க்குடி, தென்காசி பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பரவலாக பெய்தது. ராமநதி அணை பகுதியில் கனமழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 12 மில்லி மீட்டர் மழை பெய்தது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சாரல் அடித்தது. கருப்பாநதி, குண்டாரில் 2 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணையில் 3 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது. சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சிவகிரியில் 20 மில்லி மீட்டரும், சங்கரன்கோவிலில் 17 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சில இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    • திடீரென கனமழை பெய்தது.
    • ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 1 மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென மழை பெய்தது.

    தொடர்ந்து நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் அடித்த நிலையில் நேற்று மாலையில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரை யிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏராளமான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

    நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் தொடங்கிய மழை நள்ளிரவு வரையிலும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.

    சேரன்மகாதேவியில் 29.60 மில்லிமீட்டர் மழை பெய்தது. அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் பகுதிகளிலும் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் இரவு முழுவதும் பயங்கர இடி-மின்னலும் காணப்பட்டது. அம்பையில் 40.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராதாபுரத்தில் 21 மில்லிமீட்டரும், நாங்கு நேரியில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 40 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 23.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 251 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 98 அடியாக உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.

    மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாக நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக நாலுமுக்கில் 26 மில்லி மீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 21 மில்லி மீட்டரும் மழை பெய்தது. காக்காச்சியில் 18 மில்லி மீட்டர், மாஞ்சோலையில் 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாநகரில் டவுன், பேட்டை, சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை சமாதானபுரம், மார்க்கெட் பகுதிகள், கே.டி.சி. நகர், என்.ஜி.ஓ. காலனி, டக்கம்மாள் புரம், மேலப்பாளையம் என மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் சென்ற வாகனங்கள் கடும் மழையால் சாலைகளில் ஊர்ந்தபடி சென்றதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    பாளை பகுதியில் விடிய விடிய பெய்த மழை காரணமாக இரவில் தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரையிலும் மின்சார வினியோகம் இல்லை. அதன்பின்னரும் மின்சாரம் வருவதும், போவதுமாக இருந்தது. மாநகரில் பல்வேறு இடங்களிலும் கடுமையான மின்வெட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பாளை பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 84 மில்லிமீட்டரும், நெல்லையில் 49 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியது.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

    தென்காசி, ஆய்க்குடியில் தலா 42 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது .மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 48.40 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சி நிலவியது.

    கருப்பாநதி அணை பகுதியில் 67 மில்லிமீட்டர் மழை பெய்தது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வரும் 55 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 43 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 46 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    காயல்பட்டினம் பகுதியில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. அங்கு அதிகபட்சமாக 93 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறு, மணியாச்சி பகுதிகளில் 65 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 55 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழையும் கொட்டியது. இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    விளாத்திகுளம், கீழஅரசடி, வேடநத்தம், குலசேகரப்பட்டினம், சாத்தான்குளம், கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. இரவில் விட்டு விட்டு சாரல் மழையாக மாறி பெய்தது. ஓட்டப்பிடாரம் பகுதியில் இரவில் பெய்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.

    • நண்பகல் 11.55 மணிக்கு பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது.
    • ஒருசில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டியுள்ள அம்பாசமுத்திரம், வி.கே.புரம், கொட்டாரம், அனவன் குடியிருப்பு, அகஸ்தியர் பட்டி, செட்டிமேடு, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, வைராவிகுளம், அயன் சிங்கம்பட்டி, தென்காசி மாவட்டம் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, சேர்வை காரன்பட்டி, பாப்பான் குளம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, கல்யாணிபுரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று நண்பகல் 11.55 மணிக்கு பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது.

    சுமார் 5 வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பாத்தி ரங்கள் உருண்டது. வீடுகளில் இருந்த ஜன்னல், கதவுகள் குலுங்கியது. ஒருசில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

    சில இடங்களில் பூமிக்குள் மோட்டார் ஓடுவது போல் ஒரு அதிர்வு தென்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து அவசரம், அவசரமாக வீட்டை விட்டு வெளியே தெருவுக்கு ஓடி வந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், கடந்த 2017-ம் ஆண்டு 29-ந்தேதி செங்கோட்டை, புளியரை, வடகரை, அச்சன்புதூர், தென்காசி, சுரண்டை, வி.கே.புரம் உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற நில அதிர்வு ஏற்பட்டது என்றனர்.

    தற்போது 2 மாவட்டங்க ளிலும் பெரும்பாலான கிராமங்களிலும் மக்கள் லேசான அதிர்வை உணர்ந்துள்ள நிலையில், அதிகாரிகள் அப்படி எதுவும் தேசிய நில நடுக்க மையத்தில் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறுகையில், அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான நில அதிர்வுகள் ஏதும் ஏற்பட வில்லை. ரிக்டர் அளவு கோலில் 1 முதல் 3 வரையிலான லேசான நில அதிர்வுகள் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் நடக்கும். அவை ரிக்டர் அளவுகோலில் பதிவாகாது.

    குறிப்பிட்ட ஆழத்தில் குறிப்பிட்ட வினாடிக்கு நில அதிர்வு நீடித்தால் மட்டுமே ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும். எனினும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறினர்.

    அதேநேரத்தில் 2 மாவட்டங்களிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு அண்டை மாநிலமான கேராளவுக்கு எடுத்துச்செல்லப்படுவது தான் இந்த அதிர்வுக்க காரணம் என்று இயற்கை பாதுகாப்பு வள சங்கத்தி னரும், சமூக ஆர்வலர்களும் புகார் கூறுகின்றனர்.

    நேற்றைய தினம் இயற்கை நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்கள் கணக்கில்லாத அளவுக்கு ஆழமாக குவாரிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.

    ஆலங்குளம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போர் எந்திரம் உபயோகித்து துளை இட்டு பாறைகளை தகர்த்து எடுக்கின்றனர்.

    அனுமதிக்கப்பட்ட அளவை விட குவாரிகளில் பாறைகளை எடுத்துவிட்டு, மீண்டும் ஆழம் தெரியாமல் இருக்க மண் நிரப்பி விடுகின்றனர்.

    எனவே குவாரிகளை எல்லாம் அரசு உடனடியாக ஆய்வு செய்து அதி திறன் கொண்ட வெடிபொருட்களை உபயோகப்படுத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    • சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
    • பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவி பகுதியில் எப்போதும் தண்ணீர் விழும். இதில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்வார்கள்.

    இந்நிலையில் இங்கு சூழல் சுற்றுலா வரும் பொதுமக்கள் வசதிக்காக அருவிப்பகுதியில் பெண்கள் உடைமாற்றும் அறை, பொது கழிப்பறைகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கியது.

    இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அருவிப்பகுதி யில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அந்த பணிகள் நேற்றுடன் முடி வடைந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று முதல் சூழல் சுற்றுலாவிற்காக பொதுமக்கள் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல வழக்கமான நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும் என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்ககம் இளையராஜா அறிவித்தார்.

    அதன்படி மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடைக்காலம் போல வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் திரண்ட வண்ணம் இருந்தனர்.

    இன்று விடுமுறை நாளாகவும் அமைந்ததால் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    • நில அதிர்வு பீதியால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
    • தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு கண்டறியப்படவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் பெரும்பாலான கிராமங்கள் மலை அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ளன.

    இதில் அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, அண்ணா நகர், வைராவி குளம், மணிமுத்தாறு, ஆலடியூர், ஏர்மாள்புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று நண்பகல் 11.55 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் பீதி அடைந்தனர்.

    ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்து தெருக்களில் கூட்டமாக நின்றனர். அப்போது அவர்கள் சில வினாடிகள் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், அதனை தாங்கள் உணர்ந்ததாகவும் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தனர். மேலும் வி.கே.புரம் அருகே உள்ள கீழ ஆம்பூர் கிராமத்தில் சில வீடுகளில் மேலே உள்ள சிலாப்புகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் கீழே விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியது.

    இதே போல் அம்பையை அடுத்த வி.கே.புரத்தில் பட்டாசு வெடித்தது போல் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். மன்னார்கோவில் பகுதிகளிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து முக்கூடல் மற்றும் சுத்தமல்லி வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தகவல்கள் பரவலாக வெளியாகி வருகிறது. சுத்தமல்லியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வீட்டுக்குள் ஓடிச் சென்று தங்களது பெற்றோரிடம் பயத்துடன் தெரிவித்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார் பட்டி, ஆழ்வார் குறிச்சி, வாகைக்குளம், கல்யாணிபுரம், கடையம் உள்ளிட்ட இடங்களிலும் நண்பகலில் திடீர் நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்ததாக தெரிவித்தனர். அங்கு வீடுகள் பயங்கர சத்தத்துடன் குலுங்கியதாக கூறப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பெரும்பாலான கிராம பகுதிகளில் திடீரென உணரப்பட்ட இந்த நில அதிர்வால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் அச்சத்துடன் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர்கள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து ஏராளமான குவாரிகளில் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே இது போன்ற நில அதிர்வுகள் ஏற்படுவதாக தங்களது பல்வேறு கருத்துக்களை கூறி விவாதித்தனர்.

    இதையடுத்து தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு கண்டறியப்படவில்லை என நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    • ரேசன் கடை குறித்த மனுவை எங்கெல்லாம் எந்தெந்த தேதியில் அனுப்பி உள்ளார் என்ற விவரத்துடன் பேனர் ஒன்று வைத்துள்ளார்.
    • ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த ரேசன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில் தடிவீரன் கோவில் கீழத்தெரு மற்றும் தடிவீரன் கோவில் மேல தெரு ஆகியவை உள்ளன. இந்த 2 தெருக்களிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இவர்கள் ரேசன் அரிசி வாங்குவதற்காக அந்த பகுதியில் உள்ள கால்வாய் அருகே ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருமழையில் இந்த ரேசன் கடைக்குள் வெள்ளம் புகுந்து முட்புதர்களும் அடித்து வரப்பட்டது. இதனால் அந்த கட்டிடம் சேதமடைந்ததோடு அங்கு பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் கோடீஸ்வரன் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த ரேசன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இங்கு சென்று வருவதற்கு ஆட்டோவில் தான் செல்ல வேண்டும் அல்லது பஸ்சில் பயணம் செய்தால் நீண்ட தூரம் நடக்க வேண்டி இருக்கிறது என்று அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.

    இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேசன் கடையை உடனடியாக புதுப்பித்து தர கோரி நாம் தமிழர் கட்சியின் நெல்லை சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் மாரி சங்கர் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 4 முறை கலெக்டர் அலுவலகத்திலும் மற்றும் ஒரு முறை முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் கூறப்படுகிறது.

    இதுவரை அதிகாரிகள் அந்த இடத்தை கூட வந்து நேரில் ஆய்வு செய்யவில்லை. வேறு இடம் தயாராக உள்ள நிலையில் அதிகாரிகள் ஒருவர் கூட அந்த பக்கம் வரவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் கோடீஸ்வரன் நகருக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர் என்று கூறியும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மாரி சங்கர் காட்சி மண்டபம் அருகே உள்ள தடிவீரன் கோவில் தெருவில் வினோதமான பேனர் ஒன்று வைத்துள்ளார்.

    அதில் இதுவரை ரேசன் கடை குறித்த மனுவை எங்கெல்லாம் எந்தெந்த தேதியில் அனுப்பி உள்ளார் என்ற விவரத்துடன் பேனர் ஒன்று வைத்துள்ளார். இதனை அந்த வழியாக செல்பவர்கள் நின்று பார்த்து செல்கின்றனர். இதனிடையே அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. செலவில் அந்த ரேசன் கடையில் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.18 அடியாக உள்ளது.
    • விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் நகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சேர்வலாறு, பாபநாசம் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் திடீர் மழையால் அணைகளுக்கு சற்று நீர்வரத்து ஏற்பட்டது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,102 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 1004 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேர்வலாறு அணை பகுதியில் 7 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. பாபநாசத்தில் 108.70 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறில் நேற்று 114 அடி நீர் இருந்த நிலையில், இன்று சுமார் 2 அடி வரை அதிகரித்து 116.89 அடி நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.18 அடியாக உள்ளது.

    50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 15.50 அடியாகவும், கொடுமுடியாறு அணையில் 28 அடியும், நம்பியாறு அணை நீர்மட்டம் 13 அடியாகவும் இருக்கிறது. அணை பகுதிகளில் இந்த ஆண்டு பரவலாக பெய்த மழை காரணமாக நீர் இருப்பு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இதனால் நெல் சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலையில் இருந்தே நகர் பகுதி மற்றும் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் வானில் கருமேகம் திரண்டு காணப்பட்டது. தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. குறிப்பாக செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. அங்கு 17 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    தென்காசி நகர் பகுதி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, கடையம், சிவகிரி, கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதோடு, இதமான காற்றும் வீசியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. குறிப்பாக குண்டாறு அணை பகுதியில் நேற்று அதிகாலையில் தொடங்கி மதியம் வரையிலும் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 41 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    குண்டாறு அணை ஏற்கனவே மாதக்கணக்கில் நிரம்பி வழிவதால், அணைக்கு வரும் 48 கனஅடி நீரும் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவானது. அந்த அணையில் 60 அடி நீர் இருப்பு உள்ளது. 84 அடி கொண்டராமநதி அணை நீர்மட்டம் 65 அடியாக உள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அடவிநயினாரில் 109.50 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 36 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    குற்றாலம் மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக மெயினருவி, ஐந்தருவியில் வெள்ளம் நீடிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகளுக்கு அவ்வப்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது தடை விதிக்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மெயினருவி, ஐந்தருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால், சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • ராதாபுரம் மாணவர்கள் தங்கும் விடுதியில் தற்காலிகமாக தேசிய பேரிடர் மீட்புக்குழு மையம் செயல்பட உள்ளது.
    • 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு பிராந்திய மையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    திருநெல்வேலியில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் பிராந்திய மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது.

    கூடங்குளம் ராதாபுரம் மாணவர்கள் தங்கும் விடுதியில் தற்காலிகமாக தேசிய பேரிடர் மீட்புக்குழு மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிநவீன மீட்பு உபரகரணங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களுடன் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு பிராந்திய மையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஏற்கனவே அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் மையம் செயல்பட்டு வருகிறது.

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள மாநில பேரிடர்களின் போது பணியில் ஈடுபட ஏதுவாக நெல்லை மாவட்டத்தில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், கதிரியக்கம், ரசாயனம், உயிரியல் உள்ளிட்டவை சார்ந்த பேரிடர்களையும் சமாளிக்கும் வகையில் மையத்தில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    • கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மாலை அணிவிக்கிறார்.
    • 16-ந்தேதி நாங்குநேரி தொகுதி, 17-ந்தேதி அம்பை தொகுதி, 18-ந்தேதி ராதாபுரம் தொகுதியிலும் சுற்றுப்பயணம் செல்கிறார்.

    நெல்லை:

    தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா, சமீப காலமாக மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

    மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. தொண்டர்களை சந்திக்கப்போவதாக அறிவித்த அவர், ஜெயலலிதா வழியில் மக்கள் பயணம் என்னும் பெயரில் கடந்த மாதம் 17-ந்தேதி தென்காசி மாவட்டத்தில் தனது பயணத்தை தொடங்கினார்.

    இந்நிலையில் 2-ம் கட்டமாக இன்று முதல் நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று சசிகலா தொண்டர்களை சந்திக்க உள்ளார். இதற்காக நேற்று இரவு நெல்லை வந்த சசிகலாவுக்கு மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் வைத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் தங்கினார்.

    அவர் இன்று மாலை 4 மணி அளவில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். முதலாவதாக கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் சசிகலா அதனை தொடர்ந்து சந்திப்பு அண்ணா சிலை, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.

    அதன் பின்னர் டவுன் எஸ்.என்.ஹைரோட்டில் வ.உ.சி. மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து விட்டு டவுன் காட்சி மண்டபத்தில் தொண்டர்கள் இடையே உரையாற்றுகிறார். பின்னர் சுத்தமல்லி விலக்கு, நடுக்கல்லூர் பகுதிகளில் தொண்டர்களை அவர் சந்திக்கிறார். அங்கிருந்து பழைய பேட்டை வழியாக ராமையன்பட்டி, மானூர், கங்கைகொண்டான், தாழையூத்து, தச்சநல்லூர் கரையிருப்பு பகுதிகளில் தொண்டர்கள் இடையே பேசுகிறார்.

    அப்போது கரையிருப்பு பகுதியில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அவர் இன்று இரவு ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். நாளை பாளை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் முருகன்குறிச்சி, நீதிமன்றம், பாளை பஸ் நிலையம், குல வணிகர்புரம், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா ஆகிய இடங்களில் நாளை தொண்டர்களை சந்திக்கிறார்.

    தொடர்ந்து நாளை மறுநாள்(வியாழக்கிழமை) சுதந்திர தினத்தையொட்டி அவர் எங்கும் செல்லவில்லை. பின்னர் 16-ந்தேதி நாங்குநேரி தொகுதி, 17-ந்தேதி அம்பை தொகுதி, 18-ந்தேதி ராதாபுரம் தொகுதியிலும் சுற்றுப்பயணம் செல்கிறார்.

    இதனையொட்டி அவரது ஆதரவாளர்கள் வண்ணார்பேட்டை பகுதியில் அ.தி.மு.க. கொடியை கட்டியிருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நேற்று இரவோடு, இரவாக அ.தி.மு.க. கொடிகம்பங்கள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டன.

    • 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
    • போலீசார் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    களக்காடு:

    மதுரையை சேர்ந்த கும்பல் ஒன்று நெல்லை மாவட்டம் வழியாக கன்னியாகுமரிக்கு ஒரு காரில் வருவதாகவும், அந்த கும்பல் கள்ள நோட்டுக்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் நேற்று இரவு மூன்றடைப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் தலைமையிலான போலீசார் மூன்றடைப்பை அடுத்த நெடுங்குளம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கருப்பு நிற காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த 3 பேரிடம் விசாரித்தபோது அந்த நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்திற்கான ஆவணங்களை சோதனை செய்தபோது அந்த வாகனத்தின் பதிவெண் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த காரை போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது காரின் பின்புற இருக்கைக்கு அடிப்பகுதியில் ஒரு பெட்டியில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. உடனே அந்த பணத்தை போலீசார் எடுத்து பார்த்தபோது அவை அனைத்தும் கள்ள நோட்டுக்கள் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து காரில் வந்த 3 பேரையும் பிடித்து மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அவர்கள் வந்த கார் மற்றும் பதுக்கி வைத்திருந்த கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த நபர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது 42), அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு சங்கர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டிய நகர் 5-வது தெருவை சேர்ந்த சீமை சாமி ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இந்த கும்பல் சமீப காலமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று சில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளது.

    அதாவது ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருவதாக கூறி நம்பவைத்து பணத்தை வாங்கி கொண்டு திரும்ப ரூ.2 லட்சம் வழங்கும்போது அதில் ஒரு கட்டு பணத்தில் மட்டும் நல்ல நோட்டுகளை வைத்துவிட்டு மற்ற கட்டுகளில் கள்ள நோட்டுகளை வைத்து வழங்கிவிட்டு ஏமாற்றி சென்றுவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    இந்த வகையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி பண மோசடியில் இந்த கும்பல் ஈடுபட்டதும், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று அங்கும் மோசடியில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அசல் நோட்டுகள் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் மற்றும் 8 செல்போன்கள், அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    அந்த கும்பலுக்கு கள்ள நோட்டுகள் சப்ளை செய்பவர்கள் யார்? அவர்களாகவே எந்திரம் மூலம் அச்சடிக்கிறார்களா? அப்படியானால் எங்கு வைத்து அதனை செய்கிறார்கள்? இந்த மோசடி கும்பலுக்கு உடந்தையாக முக்கிய பிரமுகர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்து 3 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக முடிந்தது.
    • இன்று முதல் முழுமையாக மின்வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

    நெல்லை,ஜூலை.28-

    ரெயில்வே நிர்வாகம் சார்பில் பெரும்பாலான இடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கும்போது ரெயிலில் பழுது பார்ப்பு, எரிபொருள் செலவு என்பது நிலக்கரி மற்றும் டீசல் என்ஜின் ரெயில்களை விட குறைவாக இருந்ததன் காரணமாக தமிழகத்திலும் பல வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டது.

    அந்த வகையில் கடந்த 1904-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையில் நிலக்கரி என்ஜின் மூலம் இயங்கிவந்த செங்கோட்டை-புனலூர் ரெயில் பாதையை மின்மயமாக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு கேரள மாநிலம் எடமன் மற்றும் தமிழகத்தில் பகவதிபுரம் இடையே மின்மயமாக்கும் பணி தொடங்கியது. மலை குகை பகுதிகளிலும், பாலங்களிலும் சுமார் 34 கிலோமீட்டர் தூரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, புனலூரிலும், செங்கோட்டையிலும் 110 கிலோ வோல்ட் ரெயில்வே துணை மின் நிலையங்கள் தலா ரூ.28 கோடியில் அமைக்கப்பட்டன. தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அவை வெற்றிகரமாக முடிந்ததால், இன்று முதல் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் மின்சார ரெயில்களாக இயக்கப்படும் என தென்னக ரெயில்வே சார்பில் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதன்படி வண்டி எண் 16101/16102 சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் இன்று முதல் முழுமையாக மின்சார என்ஜின் மூலமாக இயக்கப்படுகிறது. வண்டி எண்.16791/16792 நெல்லை-பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ், வண்டி எண் 16327/16328 மதுரை-குருவாயூர் இடையேயான எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை-செங்கோட்டை இடையேயான பயணிகள் ரெயில் உள்ளிட்டவை இன்று முதல் முழுமையாக மின்வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

    இந்த மின்வழித்தடத்தில் 25 ஆயிரம் கிலோவோல்ட் மின்சாரம் வரும் என்பதால் பொதுமக்கள் அந்த இடத்தை பாதுகாப்பாக கடக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்தம் காரணமாக 2 மீட்டர் தூரத்திற்கு மின்சார வேகம் இருக்கும் என்பதால் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக உயரம் கொண்ட பொருட்களுடன் வாகனங்களை ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்காக கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×