search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போன் பே"

    • ஜி-பே, போன் பே மூலம் கண்டக்டருக்கு கட்டணத்தை செலுத்தலாம்.
    • மே 1-ந் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    நீண்ட தூரம் செல்லக் கூடிய அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் (எஸ்.இ.டி.சி.) மூலம் தினமும் 1000 பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் பெங்களூர், மைசூர், புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.

    கோடைக்காலம் என்பதால் தற்போது அனைத்து பஸ்களிலும் முழு இடங்களும் நிரம்பி விடுகின்றன. குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏ.சி. வசதி உள்ள பஸ்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    இணையதளம் வழியாக எளிதாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பயணிகள் வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்கின்றனர்.

    இந்த நிலையில் பயணிகளுக்கு கூடுதலாக மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதி பரீட்சார்த்தமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து அரசு விரைவு பஸ்களிலும் இந்த வசதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    1000 வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு பஸ் களிலும் எலக்ட்ரானிக் டிக்கெட் மிஷின் வழங்கப்பட்டுள்ளது. இனி டிக்கெட் எடுக்க ரொக்கமாக பணம் கொடுக்க தேவையில்லை. வங்கி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜி-பே, போன் பே போன்றவற்றின் மூலம் கண்டக்டருக்கு கட்டணத்தை செலுத்தலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது:-

    மின்னணு பண பரிவர்த்தனை திட்டத்தை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மே 1-ந் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.

    முன்பதிவு செய்யாமல் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் பஸ்சிற்குள் டிக்கெட் எடுக்கும் போது சில்லரை பிரச்சினை ஏற்படுகிறது. குடும்பமாக பயணிக்கும் போது ஆயிரக்கணக்கில் ரொக்கமாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். அப்போது சில்லரை கொடுப்பதில் கண்டக்டருக்கும் பயணிக்கும் இடையே தகராறு ஏற்படுவது உண்டு.

    இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜி-பே, போன் பே போன்ற டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    டிக்கெட்டிற்காக பெரும் தொகையை கையில் எடுத்து செல்லத் தேவையில்லை. இந்த திட்ட செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் அனைத்து பஸ்களிலும் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×