search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajnath Singh"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக தெரிவித்தார்.
    • இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளங்கள் முதலில் சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக தெரிவித்தார்.

    பிரதமர் மோடியின் கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் மதத்தின் பேரில் அரசியல் செய்வதாக எதிர்கட்சிகள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், கௌதம புத்த நகர் தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளர் மகேஷ் ஷர்மாவுக்கு ஆதரவாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிரேட்டர் நொய்டாவில் நேற்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது, பொது மக்களிடையே பேசிய அவர் மதத்தின் பேரில் அரசியல் செய்வது, சமூகத்தை பிளவுப்படுத்த நினைப்பது போன்ற செயல்களில் பிரதமர் மோடி ஈடுபட்டதே இல்லை என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "சகோதர சகோதரிகளே பிரதமரை எனக்கு இப்போது தான் தெரியும் என்றே இல்லை. நீண்ட காலம் அவருடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்து வருகிறது. அவர் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என மதத்தின் பேரில் எப்போதும் அரசியல் செய்ததே இல்லை. நமது பிரதமர் சமூகத்தை பிளவுபடுத்த ஒருபோதும் நினைத்ததே இல்லை," என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "டாக்டர் மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். இன்றும் அவர் மீது எனக்கு மதிப்பு உள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 2006 டிசம்பர் 9 ஆம் தேதி பேசிய டாக்டர் மன்மோகன் சிங், யாருக்கேனும் நாட்டின் சொத்துக்கள் மீது உரிமை இருப்பின், அது நிச்சயம் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்காகவே இருக்க வேண்டும் குறிப்பாக இதை கூறும் போது சிறுபான்மை சமூகமாக அவர் முஸ்லீம்களையே குறிப்பிட்டார்."

    "நாட்டின் வளங்கள் மற்றும் சொத்துக்கள் மீது அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்று அவர் தெரிவித்தார், நாங்கள் அப்படி கூறவே இல்லை. இப்போது பிரதமர் இதை சொன்னதும், அதனை சர்ச்சையாக்க முயற்சிக்கின்றனர்," என்று தெரிவித்தார். 

    • கடந்த தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.
    • இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.

    பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாதுகாப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் இன்று கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர் அனில் கே அந்தோணியை ஆதரித்து பேசினார்.

    அப்போது "கடந்த முறை அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட அவருக்கு தைரியம் இல்லை. அங்கு தோல்வியடைந்ததால் உத்தர பிரதேசத்தில் இருந்து கேரளாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். எனினும், வயநாடு மக்கள் இந்த முறை அவரை எம்.பி. தேர்ந்தெடுக்கமாட்டோம் என முடிவு செய்துள்ளார். இதை என்னால் கேட்க முடிகிறது" என்றார்.

    நேற்று ராகுல் காந்தியிடம் மீண்டும் அமேதி தொகுதியில் போட்யிடுவீர்களா? என கேட்கப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-

    அமேதி தொகுதி குறித்து கட்சி முடிவு எடுக்கும். கட்சியின் எந்த உத்தரவை நான் பெற்றாலும் அதற்கு கட்டுப்படுவேன். எங்களுடைய கட்சியில் இதுபோன்ற முடிவுகள் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில்தான் எடுக்கப்படும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

    ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு வந்தார். தற்போது உடல்நலத்தை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதனால் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவின் கணவர் வதேரா போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் போட்டியிட வேண்டும் என உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளுக்கு காங்கிரஸ் இன்னும் வேட்பாளர் அறிவிக்காமல் உள்ளது.

    • கேரளாவில் முன்னேற்றத்திற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.
    • ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்த இடங்களில் தொடங்கும்போதும், முடிக்கும் போதும் மலையாளத்தில் பேசினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் முடிவடைவதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரளாவை பொறுத்தவரை காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் போட்டி போட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    மேலும் அவர்களை ஆதரித்து கட்சியின் தேசிய தலைவர்கள் கேரளாவிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மத்திய மந்திரிகள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    காசர்கோடு, கண்ணூர் மற்றும் வடகரா ஆகிய மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியாவை இணைக்க ராமர் பற்றிய கருத்து மட்டுமே முடியும். ஸ்ரீராமன் இறைவன் மட்டுமல்ல. அவர் ஒரு கலாச்சார நாயகன். காங்கிரஸ் ஆதரவாளர்களும், கம்யூனிஸ்டுகளும் இதை ஏற்றுக்கொள்வது கடினம்.

    ராமரை எதிர்ப்பவன் விரட்டியடிக்கப்படுவான் என்பது நாட்டின் வரலாறு. கூடாரத்தில் இருந்த ராமரை அயோத்தியில் உள்ள கோவிலுக்கு பா.ஜ.க. அழைத்து வந்தது. சி.ஏ.ஏ.-ன் கீழ் எந்த ஒரு இந்தியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் வரும்.

    கேரளாவில் முன்னேற்றத்திற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. அதற்காக காங்கிரசையும், சி.பி.எம்.-ஐயும் விரட்டியடிக்க வேண்டும். ஒருமுறை வெளியே சென்றால் அவர்கள் திரும்பி வர மாட்டார்கள். காங்கிரஸ் மற்றும் சி.பி.எம். இரட்டை ஆட்டம் ஆடுகிறார்கள். டெல்லியில் நட்புடன் இருக்கும் அவர்கள் கேரளாவில் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

    இவ்வாறு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.

    ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்த இடங்களில் தொடங்கும்போதும், முடிக்கும் போதும் மலையாளத்தில் பேசினார். இது கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    • கிருஷ்ணகிரி வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்தார்.
    • நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் பிரதமர் மோடி என்றார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் பேசியதாவது:

    ஆலயங்களின் மாநிலமான தமிழகம் வரும்போது மனம் அமைதி கொள்கிறது.

    பார்லிமென்டில் செங்கோல் வைத்ததன் மூலம் தமிழ் கலாசாரம் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் என்று பேசப்படும் போது நம் நினைவுக்கு வருவது செங்கோல் தான்.

    இன்டர்நெட்டில் ஏற்பட்ட புரட்சியால் யுபிஐ சேவை தற்போது அதிகரித்துள்ளது.

    2014-ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவ வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நாடுமுழுவதும் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.

    பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

    ஐக்கிய நாடுகள் அவையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக்கூறி தமிழின் பெருமையை மோடி உயர்த்தியுள்ளார்.

    நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் பிரதமர் மோடி.

    நாடு முழுவதும் தமிழ் மொழியைக் கொண்டு செல்ல பிரதமர் மோடி பாடுபடுகிறார் என தெரிவித்தார்.

    • பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளா் என்.நரசிம்மனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
    • வேட்பாளா் வி.என்.வேணுகோபாலுக்கு ஆதரவாக இரவு 7 மணி அளவில் சாலை வாகன பிரசார பேரணியில் கலந்து கொள்கிறார்.

    சென்னை:

    மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தமிழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

    கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வரும் அவா் அங்குள்ள புதிய பஸ் நிலையத்தில் நாளை காலை 10.30 மணி அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளா் என்.நரசிம்மனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

    மீண்டும் ஹெலிகாப்டரில் பெங்களூர் செல்லும் அவா் பின்னா் அங்கிருந்து சென்னை விமான நிலையம் வரவுள்ளாா். கிண்டியில் உள்ள லீமெரிடியன் ஓட்டலில் மாலை 3 மணி அளவில் பல்வேறு சமுதாய தலைவா்களுடன் கலந்துரையாடுகிறார்.

    தொடா்ந்து, ஹெலிகாப்டரில் திருவண்ணாமலைக்குச் செல்லும் அவா் பா.ஜ.க. வேட்பாளா் அஸ்வத்தாமனுக்கு ஆதரவாக மாலை 4 மணி அளவில் சாலை வாகன பிரசார பேரணியில் ஈடுபடுகிறார்.

    மீண்டும் சென்னைக்கு ஹெலிகாப்டரில் வரும் அவா், தாம்பரத்தில் த.மா.கா. வேட்பாளா் வி.என்.வேணுகோபாலுக்கு ஆதரவாக இரவு 7 மணி அளவில் சாலை வாகன பிரசார பேரணியில் கலந்து கொள்கிறார்.

    • பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன
    • அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

    அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.

    இந்நிலையில், இன்று அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

    இதனையடுத்து பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாகத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "2004 ஆம் ஆண்டு பா.ஜ.க வெளியிட்ட ஒளிரும் இந்தியா தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரித்ததுபோல் இம்முறையும் வளர்ந்த இந்தியா தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரிப்பார்கள்.

    பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை என்பது தோல்வியடைந்த வங்கியில் எடுக்கப்பட்ட செல்லா காசோலை. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மக்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவரும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும்
    • வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை

    பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

    இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க. 2024 தேர்தலுக்கு முதல்கட்ட தேர்தல் தொடங்கி அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு அவற்றை பார்த்து இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை சமூகநீதி, மதநல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    பல்வேறு மதம், மொழி, ஜாதி, இனங்களை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும்.

    தற்போது நடைபெறுகின்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 இல் ஆரம்பித்து ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிற நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும் என்பதை பிரதமர் மோடி தான் விளக்க வேண்டும்.

    புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களை அழைக்காமல் புறக்கணித்த பா.ஜ.க.வினர் 2025 ஆம் ஆண்டை பழங்குடியினர் ஆண்டாக கொண்டாடுவோம் என்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும்.

    ஏற்கனவே ஆயுஷ்மான் திட்டத்தில் ஊழல் புரையோடிப் போயிருக்கிற நேரத்தில் மீண்டும் அத்திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. நிதி ஒதுக்குவதில் தமிழ் மொழியை விட 18 மடங்கு அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டுகிற பா.ஜ.க., தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. இதன்மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

    தேர்தல் நன்கொடை பத்திரம் மூலமாக ரூபாய் 8,000 கோடி கார்ப்பரேட்டுகளிடம் நிதியை பெற்று குவித்த பா.ஜ.க., ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது மிகுந்த கேலிக்குரியதாக இருக்கிறது.

    வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை. தமிழகத்தில் மெட்ரோ ரயிலை புறக்கணித்த பா.ஜ.க.வை எவரும் மறந்திட இயலாது.

    மோடியின் உத்திரவாதம் நம்பகத் தன்மையை இழந்துள்ளது. ஏற்கனவே 2014 இல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டப்படும், கருப்பு பணத்தை ஒழித்து அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற உத்திரவாதத்தை நிறைவேற்றாத மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள்.

    தேர்தல் அறிக்கையை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஜாதிவாரியாக கணக்கெடுத்து இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்காத பா.ஜ.க., டாக்டர் அம்பேத்கர் பெயரை உச்சரிக்க தகுதியில்லை.

    எனவே, மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பா.ஜ.க. கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்.

    கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிகழ்த்திய ஜூம்லா நாடகத்தை மீண்டும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு அரங்கேற்றியிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்
    • பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வேலையின்மை என்ற வார்த்தையே இல்லை - ராகுல்காந்தி

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

    அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.

    இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்கான விழா டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.

    முதலில் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தேர்தல் அறிக்கை தொடர்பாக விளக்கி பேசினார். அப்போது அவர் சமுதாய மேம்பாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க. தன்னை அர்ப்பணித்து இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.

    இதையடுத்து பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

    பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் நரேந்திர மோடியின் உரையில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய இரண்டு வார்த்தைகள் இல்லை. மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்சனைகளை கூட விவாதிக்க பாஜக விரும்பவில்லை.

    இந்தியா கூட்டணியின் நோக்கம் மிகவும் தெளிவானது - அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் நிரந்தர வேலை உறுதி.

    இந்த முறை மோடியின் மாய வலையில் இளைஞர்கள் சிக்கப் போவதில்லை, இனி அவர்கள் காங்கிரசின் கரங்களை வலுப்படுத்தி நாட்டில் வேலைவாய்ப்பு புரட்சியை ஏற்படுத்துவர்" என்று பதிவிட்டுள்ளார்.

    • நாடு முழுவதும் அனைத்து துறை மக்களிடமும் பா.ஜ.க. சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் முறை விரைவில் அமல்படுத்தப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

    அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளராக பியூஸ்கோயலும் பொறுப்பேற்றனர். மேலும் 24 உறுப்பினர்களும் இந்த குழுவில் இடம் பெற்றனர். 27 பேர் கொண்ட அந்த குழு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தயாரித்தது.

    நாடு முழுவதும் அனைத்து துறை மக்களிடமும் பா.ஜ.க. சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டன. சுமார் 4 லட்சம் பேர் தங்களது கருத்துக்களை பரிந்துரையாக அளித்து இருந்தனர். அவற்றை எல்லாம் ஆய்வு செய்து பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்கான விழா டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.

    முதலில் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தேர்தல் அறிக்கை தொடர்பாக விளக்கி பேசினார். அப்போது அவர் சமுதாய மேம்பாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க. தன்னை அர்ப்பணித்து இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.

    இதையடுத்து பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளி யிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * ஒரே நாடு ஒரே தேர்தல் முறை விரைவில் அமல்படுத்தப்படும்.

    * நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.


    * மேலும் 5 ஆண்டுகளுக்கு ரேஷன் கடைகளில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

    * 2025-ம் ஆண்டு பழங்குடியின மக்களின் பெருமைமிகு ஆண்டாக கடைபிடிக்கப்படும்.

    * 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

    * கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

    * வேலை வாய்ப்பு முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    * வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முத்ரா கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

    * ஏழைகளுக்கு ஊட்டச் சத்து கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்.

    * நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வந்து அமல்படுத்தப்படும்.

    * ஏழைகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் சிலிண்டர் கொடுக்கும் திட்டம் மேலும் நீட்டிக்கப்படும்.

    * கிராம மக்களின் நலனுக்காக குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வினியோகம் செய்யும் திட்டம் தீவிரப்படுத்தப்படும்.

    * பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    * கிராமத்து பெண்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு ஒரு ரூபாயில் ஒரு நாப்கின் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்.

    * திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

    * பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பொருளாதார கொள்கை திட்டம் வகுக்கப்படும்.

    * உலகின் சக்தி மிக்க பொருளாதார நாடுகளில் 3-வது நாடு என்ற மிகப்பெரிய பொருளாதார அந்தஸ்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பெண்களுக்கு கருப்பை புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம் வகுக்கப்படும்.

    * சாலையோரம் வசிப்பவர்களுக்கு மிகவும் குறைந்த வாடகையில் தங்குவதற்கு அரசே கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கும்.

    * மக்கள் மருந்தகங்களில் மருந்து விலை 80 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படும்.

    * புல்லட் ரெயில் திட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்படும்.

    * நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

    * ஸ்டாட்அப் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் தனி திட்டம் வகுக்கப்படும்.

    * தமிழுக்கு சேவை செய்யும் வகையில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும்.

    இவ்வாறு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • 2024-க்கு பிறகு சில ஆண்டுகளில், நாம் காங்கிரஸ் பெயரை எடுத்தால், யார்? அது என்று குழந்தைகள் கேள்வி கேட்பார்கள்.
    • காங்கிரஸ் கட்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போன்றதாகிவிட்டது.

    மத்திய பாதுகாப்புத் மந்திரி ராஜ்நாத் சிங் இன்று உத்தரகாண்ட் மாநிலம் கவுசாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் தொடர்ந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். ஒருவர் பின் ஒருவராக கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைகின்றனர்.

    காங்கிரஸ் கட்சி தற்போதில் இருந்து இன்னும் சில வருடங்களில் டைனோசர் போன்று அழிந்துவிடும் என அச்சப்படுகிறேன். 2024-க்கு பிறகு சில ஆண்டுகளில், நாம் காங்கிரஸ் பெயரை எடுத்தால், யார்? அது என்று குழந்தைகள் கேள்வி கேட்பார்கள்.

    தினசரி காங்கிரஸ் கட்சிக்குள் அடிதடி நடக்கிறது. காங்கிரஸ் கட்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போன்றதாகிவிட்டது. ஒருவருக்கொருவர் சட்டையை கிழித்துக் கொள்கிறார்கள்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    • நாங்கள் இந்து- முஸ்லிம் என பாகுபாடு பார்ப்பதில்லை.
    • பாரத்தில் (இந்தியாவில்) பிறந்த அனைவரும் பாரத மாதாவின் குழந்தைகள் என நாங்கள் நம்புகிறோம்.

    மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆளும் பா.ஜனதா கட்சி தலைவர்கள் எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர்களும் ஆளும் பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்கின்றன.

    அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, காங்கிரஸ் துருப்பிடித்த இரும்பு என விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக ராஜ்நாத் சிங் கூறுகையில் "நாங்கள் இந்து- முஸ்லிம் என பாகுபாடு பார்ப்பதில்லை. பா.ஜனதா எப்போதும் இந்து மற்றும் முஸ்லிம்களை பற்றி பேசுகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். நாங்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என பாகுபாடு பார்ப்பதில்லை என சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    பாரத்தில் (இந்தியாவில்) பிறந்த அனைவரும் பாரத மாதாவின் குழந்தைகள் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. மக்களை ஏமாற்றி நாங்கள் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வரவில்லை. அது எங்களுடைய தீர்மானம் மற்றும் வார்த்தையாக இருந்தது.

    தேர்தல் அறிக்கையில் நாங்கள் தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். அதனால் நான் பா.ஜனதா 24 காரட் தங்கம் போன்றது எனச் சொல்கிறேன்.

    இந்தியாவில் மற்றும் உலகத்தில் உள்ள யாராலும் பா.ஜனதா கறை படிந்தது என விரலை தூக்கி காண்பிக்க முடியாது. காங்கிரஸ் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அவர்களால் நாட்டைய உச்ச நிலைக்கு கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதனால் அவர்களை துருப்பிடித்த இரும்பு எனச் சொல்கிறேன்" என்றார்.

    • காங்கிரஸ் கட்சி டெல்லியில் குடும்ப ஆட்சி நடத்துகிறது, தி.மு.க. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்துகிறது.
    • இரண்டு கட்சிகளும் சேர்ந்து இந்தியா கூட்டணியை ஆரம்பித்துள்ளது.

    ராஜபாளைம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    முன்னதாக அவர் ராஜபாளையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கினார். பின்னர் தென்காசி சாலையில் உள்ள சொக்கர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து தென்காசி சாலையில் காந்தி கலை மன்றம், பி.எஸ்.கே.பூங்கா, காந்தி சிலை ரவுண்டானா வரை ரோடு-ஷோ நடத்தினார். தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகே பிரசார வாகனத்தில் வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தின் முன்பு வந்து பொது மக்களிடையே பேசியதாவது:-

    தமிழகத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் ஜான்பாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்ய மோடி உத்தரவின் பேரில் இங்கு வந்துள்ளேன். பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் ஜான்பாண்டியன் இந்த பகுதியில் முக்கிய நபராக இருந்து வருகிறார். இவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.


    இந்த தொகுதியில் பிரச்சனைகள் அனைத்து சரி செய்யப்படும். காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க. கட்சிக்கும் ஒரே வித்தியாசம் தான். அது, காங்கிரஸ் கட்சி டெல்லியில் குடும்ப ஆட்சி நடத்துகிறது, தி.மு.க. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்துகிறது. இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து இந்தியா கூட்டணியை ஆரம்பித்துள்ளது.

    இதற்கு முன்னால் உலக நாடுகள் இந்திய நாட்டின் பேச்சை காது கொடுத்து கேட்டதில்லை. இப்போது மோடி ஆட்சியில் உலக நாடுகள் இந்தியா சொல்வதை கேட்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்தது, தற்போது மோடி ஆட்சியில் 5-ம் இடத்திற்கு வந்துள்ளது.

    மேலும் நீங்கள் தொடர்ந்து வாக்களித்து வெற்றி பெற செய்தால் இந்தியாவின் பொருளாதார நிலையை டாப் 3 இடத்திற்கு முன்னேற்றி கொண்டு வருவோம். மோடியின் ஆட்சியில் எல்லையில் தாக்கி வந்த எதிரி நாடுகளை ஒடுக்கி இந்தியா பலவீனமான நாடு அல்ல, பலமான நாடு என்று உலக நாடுகளுக்கு காட்டி வருகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையில் 2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும். பிரதமராக மோடி 3-வது முறையாக பதவி ஏற்பார். அப்போது உலகின் சூப்பர் பவராக இந்தியா மாறும். அதனால் மோடியின் ஆட்சி மீண்டும் மத்தியில் அமைய வேண்டும். எங்கள் கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×