search icon
என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார்.
    • பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மாசிமக தீர்த்தவாரி தலங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் யானை ஒன்று உள்ளது. இந்த யானைக்கு மங்களம் என பெயர் சூட்டி உள்ளனர். இந்த யானை கடந்த 1982-ம் ஆண்டு காஞ்சி மகா பெரியவரால் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த யானைக்கு 58 வயதாகிறது.

    வயது அதிகமாவதை போல யானையின் சுட்டித்தனமும் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் யானை மங்களத்துக்கு சளி தொந்தரவு உள்ளது. இதனால் யானை தமிழக அரசின் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு செல்வதில்லை. சிறப்பு புத்துணர்வு முகாமில் வழங்கப்படும் உணவு, மூலிகை மருந்துகள், உடற்பயிற்சிகள் கோவில் வளாகத்திலேயே யானைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    வெயில் சுட்டெரித்து வருவதால், பாகன் அசோக்குமார் தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார். அதன்படி, வழக்கம்போல் யானை மங்களம் குளியல் தொட்டிக்கு அழைத்து வரப்பட்டது. தொட்டியில் இறங்கிய யானை மங்களம் சுமார் ஒரு மணிநேரம், துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சியும், இதனை வேடிக்கை பார்த்த பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது.

    கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    மேலும், சிலர் இதனை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தஞ்சாவூர் வருகிறார்.
    • தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தஞ்சாவூா்:

    நாட்டில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தில் 40 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

    அதன்படி, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20 நாட்களுக்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இன்று மாலை திருச்சி சிறுகனூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திருச்சி, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    பின்னர், பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தஞ்சாவூர் வருகிறார். தஞ்சையில் அவருக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்று இரவில் தஞ்சை சங்கம் ஓட்டலில் தங்குகிறார்.


    இதையடுத்து நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரியில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் முரசொலி, நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோரை அறிமுகம் செய்து ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    பின்னர், பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு இரவில் சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு போலீசார் உதவியுடன் தீவிர கண்காணிப்பு, சோதனை பணி நடந்து வருகிறது.

    அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த ஒரு சரக்கு லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து உர மூட்டைகளுக்கான ஆவணங்களை காண்பிக்குமாறு லாரியில் வந்தவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி அஜய்ராஜ் தலைமையிலான குழுவினர் உர மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து லாரியை எடுத்து செல்லுமாறு தாசில்தார் அருள்ராஜ் கூறினார். தொடர்ந்து, தஞ்சை நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    • சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார்.
    • வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார்

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் சடகோபன் (வயது 48). இவர் அதே பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா (42).

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஏலச்சீட்டு நடத்தினர். அதில் கும்பகோணம் பாரதி நகரை சேர்ந்த தொழிலதிபர் வித்யாபதி சேர்ந்து பணம் கட்டி வந்தார். இதேப்போல் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த மேலும் பலரும் சேர்ந்து பணம் கட்டினர். இந்நிலையில் ஏலச்சீட்டு முடிவடைந்த பின்னரும் பலருக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் சடகோபன், விஜயா காலதாமதம் செய்து வந்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார். பலமுறை முறையிட்டும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த சடகோபன், விஜயா தம்பதியினர் ஏலச்சீட்டு நடத்தி தன்னிடம் ரூ.29 லட்சத்து 29 ஆயிரம் மோசடி செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சுலோச்சனா வழக்குபதிவு செய்து சடகோபன், விஜயா ஆகிய 2 பேரையும் கைது செய்தார். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சடகோபனை புதுக்கோட்டை கிளை சிறையிலும், விஜயாவை திருச்சி மகளிர் சிறையிலும் அடைத்தார்.

    • வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
    • பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூா்:

    பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு சார்பில் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே பஸ்சில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையத்தை வந்தடையும் வகையில் நவக்கிரக சிறப்பு சுற்றுலா பஸ் இயக்கம் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து வயதானவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க குளிர்சாதன வசதியுடன் (ஏ.சி.வசதி) கூடிய மேலும் கூடுதலாக ஒரு சிறப்பு சுற்றுலா பஸ் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 25-ந் தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    இந்த பஸ்சில் நபர் ஒருவருக்கு ரூ.1350 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு நவகிரக தலங்களுக்கு சென்று இரவு 8 மணியளவில் மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையம் வந்தடையும்.

    எனவே, இந்த பஸ்சில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும். நேரடியாக பஸ்சில் பயணச் சீட்டு பெற்றுக்கொள்ள முடியாது. மேற்கண்ட தகவல் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டையில் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கப்பட்டது.
    • வந்தே பாரத் ரெயிலை திருச்சியிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னைக்கும் இயக்க கேட்டுள்ளோம்.

    தஞ்சாவூா்:

    பிரதமர் மோடி புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள், புதிய குட்ஷெட் யார்டுகள் போன்ற ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பிலான பல ரெயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை நாளை (செவ்வாய்க்கிழமை) காணொலி காட்சி வழியாக தொடங்கி வைக்கிறார்.

    இதில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள 44 ரெயில் நிலையங்களில் 60 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள், பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டியில் தலா ரூ.7 கோடி மதிப்பில் 2 குட்ஷெட் யார்டுகள் மற்றும் திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள மருந்தகமும் அடங்கும்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டையில் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கப்பட்டது. இதுவரை 28.5 ரேக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.

    திருத்துறைப்பூண்டி குட்ஷெட் யார்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கி இதுவரை 18 ரேக்குகள் ஏற்றப்பட்டு உள்ளன.

    வந்தே பாரத் ரெயிலை திருச்சியிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னைக்கும் இயக்க கேட்டுள்ளோம். மேலும் கூடுதலாக 33 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள் அமைக்க இடம் தேர்வு நடைபெற்று வருகிறது.

    இத்தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    • அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • விரைவில் வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

    தஞ்சாவூர்:

    நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளவர் செல்வராஜ்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகியான இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவில் சித்தமல்லி ஆகும்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் எம்.பி.க்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது திடீரென அவருக்கு நுரையீரல் தொற்று காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து செல்வராஜ் எம்.பி. தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்போது செல்வராஜ் எம்.பி. நல்ல நிலையில் உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • மத்திய அரசு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மின்சாரத்தை ரத்து செய்து விட்டனர்.
    • டெல்லிக்குள் நுழைந்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் அருகே திருவோணத்தில், காவிரி விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 10-ம் தேதி தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பாக, தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து 150க்கும் மேற்பட்ட இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.


    தொடர்ந்து அமைதியான முறையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மத்திய அரசு துணை ராணுவத்தை கொண்டு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து போராடிவரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து சுமூகமாக பேசி தீர்ப்போம் என்று கூறிவிட்டு இதுவரை முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மின்சாரத்தை ரத்து செய்து விட்டனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் டெல்லிக்குள் நுழைந்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூன்று குழுவாக பிரிந்து சென்று கணக்கெடுத்தனர்.
    • 50 வகை பறவை இனங்களை சேர்ந்த 483 பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு முழுவதும் தரைவாழ் பறவைகளின் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    முன்னாள் மாவட்ட வன அலுவலர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியில் பேராசிரியர்கள் அசோக், கீர்த்திவாசன், ஆசிரியர்கள் சுமதி, வசந்தி, வனத்துறை அலுவலர்கள் ரஞ்சித், இளஞ்செழியன் ஆகியோருடன் தன்னார்வலர்கள், மாணவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று குழுவாக பிரிந்து சென்று கணக்கெடுத்தனர்.

    இந்த கணக்கெடுப்பில் குமரிப்புறா, மாங்குயில், கதிர்குருவி, அரசவால் ஈப்பிடிப்பான் ஆகிய இப்பகுதிக்கான சிறப்பு அரிய வகை பறவைகள், மயில், மாடப்புறா, மணிப்புறா, செண்பகம், சுடலைகுயில், பொன்முதுகு மரங்கொத்தி உள்பட 50 வகை பறவை இனங்களை சேர்ந்த 483 பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது. 

    • தமிழ்நாட்டைப் பற்றி மக்கள் புண்படும் விதமாக தமிழக கவர்னர் தொடர்ந்து பேசி வருகிறார்.
    • தமிழ் தொன்மையான மொழி என்பது இவர்கள் பேசித்தான் தெரிய வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர தி.மு.க. சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, தமிழக அரசின் 3 ஆண்டுகால சாதனை, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது :-

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செய்த சாதனைகள் ஏராளம். அவைகள் அனைத்தும் காலம் கடந்தும் பேசும். அதுபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏராளமான சாதனைகளை செய்து வருகிறார். மகளிருக்கு இலவச பஸ் பயணம், உரிமை தொகை , விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என மக்கள், விவசாயிகளுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறார்.

    தமிழ்நாட்டைப் பற்றி மக்கள் புண்படும் விதமாக தமிழக கவர்னர் தொடர்ந்து பேசி வருகிறார். பிரதமர் பெயருக்கு அவ்வப்போது ஓரிரு திருக்குறளைப் பேசுகிறார். இதை வைத்து தமிழ் தொன்மையான மொழி என பிரதமரே பேசிவிட்டார் என விளம்பரம் செய்கின்றனர்.

    தமிழ் தொன்மையான மொழி என்பது இவர்கள் பேசித்தான் தெரிய வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. நம் மக்களுக்கு முன்பே தெரிந்த விஷயம் அது. ஆனால், தமிழுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை விட யாருக்கும் தெரியாத சம்ஸ்கிருத மொழிக்கு 22 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் நிதி கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிடமிருந்து ஜிஎஸ்டி உள்பட அனைத்து வரிகளையும் வாங்கிக் கொள்ளும் மத்திய அரசு, திரும்பக் கொடுப்பதற்கு மனசு இல்லை. நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது. ஆனால், நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாலும், புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, தென் மாவட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தமிழக முதல்வர்தான் உதவிக்கரம் நீட்டினார். தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பிரதமர் கவலைப்படுவதில்லை.

    தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால், செய்ததாகக் கணக்கு காட்டுவதற்காக ரூ. 7 ஆயிரம் கோடிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிச் சென்றார்.

    இந்த மண்ணின் பண்பாடு, கலாசாரம், மொழி உள்பட அனைத்தையும் காத்து நிற்கும் அரணாக தி.மு.க உள்ளது. திராவிட மண்ணில் மத அரசியலுக்கும், தமிழ் துரோகிகளுக்கும் இடமில்லை. நாடாளுமன்ற தேர்தல் வெறும் அரசியல் வெற்றிக்கானது மட்டுமல்ல; நம்முடைய எதிர்காலம், இந்த நாட்டின் அமைதியைப் பொருத்து இருப்பதால், அதைக் காக்கும் கடமை நமக்கு இருக்கிறது என மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
    • நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது என கனிமொழி எம்.பி. பேசினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 'எல்லோருக்கும் எல்லாம்' மற்றும் தமிழக அரசின் 2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    கருணாநிதி முதலமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது. ஏனெனில், அவர் இலவச மின்சாரத்தை கொண்டு வரவில்லை என்றால் எங்களால் தொடர்ந்து விவசாயம் செய்திருக்க முடியாது என விவசாயிகள் சொல்லும் அளவிற்கு விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

    அதுமட்டுமின்றி 7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை அவர் ரத்து செய்தார். இங்கே ஒடுக்கப்பட்டு நின்ற மக்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்காக தனது வாழ்நாள் முழுவதும் கலைஞர் கருணாநிதி பாடுபட்டார். கலைஞரின் ஆட்சியின் நீட்சியாக தற்போது ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயத்திற்காக தனி பட்ஜெட்டை கொண்டுவந்தார்.

    இந்த நாட்டில் விவசாயம்தான் மிகப்பெரிய தொழில். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு வந்தபோது கடைகள், தொழிற்சாலைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்ட நிலையில், விவசாயத்தை மட்டும்தான் யாராலும் நிறுத்தச் சொல்ல முடியவில்லை.

    தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் நிதி கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிடம் இருந்து ஜிஎஸ்டி உள்பட அனைத்து வரிகளையும் வாங்கிக் கொள்ளும் மத்திய அரசு, திரும்பக் கொடுப்பதற்கு மனசு இல்லை.

    நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது. ஆனால், நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாலும் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, தென்மாவட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தமிழக முதல்வர்தான் உதவிக்கரம் நீட்டினார். தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பிரதமர் கவலைப்படுவதில்லை என கடுமையாக சாடினார்.

    • பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.
    • கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.

    இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சிறுமி ருக்மணி (வயது 12), அவரது 6 வயது சகோதரர் தேவசேனாபதி ஆகிய இருவரும் தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து பின்னர் பெரிய கோவிலுக்கு சென்றனர். அங்கு பெருவுடையாரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த நேரத்தில் கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.

    பின்னர் பக்தர்களை கடந்து கருவறை முன்பு நின்று கொண்டு மனம் உருகி நமச்சிவாய வாழ்க.. நாதந்தாழ் வாழ்க... என மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை வெண்கல குரலில் சரியான ஏற்ற இறக்கத்துடன் ஒரு சேர தூய தமிழில் பாடினர். இதனை பெருவுடையார் தரிசனத்துக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிறு வயதில் பக்தியுடன் இப்படி ஒரு பாடலா என மெய்மறந்து ரசித்ததோடு குழந்தைகள் இருவரையும் மனதார பாராட்டினர்.

    குழந்தைகளின் இந்த பக்தி செயல் ஆன்மீக அன்பர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல. 

    ×