search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டாலின்"

    • தொகுதி மக்களின் அனைத்து தேவைகளை நிறைவேற்றக் கூடிய நல்லவர்களை தேர்ந்தெடுத்து, டெல்லிக்கு அனுப்பி வைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
    • பொதுமக்கள் சிந்தித்து நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாமல் பொதுமக்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினரும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில், பெரம்பலூர் ராஜா தியேட்டர் மற்றும் சங்கு பகுதியில் பரப்புரை மேற்கொள்ள சென்ற டாக்டர் பாரிவேந்தருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய பாரிவேந்தர், தொகுதி மக்களின் அனைத்து தேவைகளை நிறைவேற்றக் கூடிய நல்லவர்களை தேர்ந்தெடுத்து, டெல்லிக்கு அனுப்பி வைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் நகரம் வெங்கடேசபுரம் பகுதிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்களிடையே உரையாற்றிய பாரிவேந்தர், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கிய 17 கோடி ரூபாயை, மக்களின் தேவைகளுக்காக முழுமையாக செலவு செய்திருப்பதாக தெரிவித்தார். தன்னை மீண்டும் வெற்றிபெறச் செய்தால், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு உயர் மருத்துவம் இலவசமாக வழங்கப்படும் என பாரிவேந்தர் உறுதி அளித்தார்.

    பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளிடம் டாக்டர் பாரிவேந்தர் ஆதரவு திரட்டினார். பெரம்பலூர் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதி மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் எம்.பி யாக செய்த மக்கள் நற்பணிகள் குறித்த புத்தகத்தை வழங்கி, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

    இதனைத்தொடர்ந்து, துறைமங்கலம் பகுதியில் டாக்டர் பாரிவேந்தர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தபோது, பெரம்பலூரில் ரயில்வே திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். ஆயிரத்து 200 ஏழை மாணவர்களை இலவசமாக படிக்க வைத்து, பட்டதாரிகளாக்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். மோடி நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து கொண்டிருக்கிறார் என தெரிவித்த டாக்டர் பாரிவேந்தர், ஆனால், தமிழகத்தில் முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள் என விமர்சித்தார். அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதால்தான், அரசு அலுவலர்களும் லஞ்சம் வாங்குகிறார்கள் என அவர் குற்றஞ்சாட்டினார். போதைப் பொருளால் தள்ளாடி கொண்டிருக்கும் தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், இந்தியாவை காக்க போகிறாரா? என கேள்வி எழுப்பிய பாரிவேந்தர், ஸ்டாலின் இந்தியாவை உடைக்கத்தான் உள்ளார் என சாடினார். தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பாதி பேருக்கு வரவில்லை என குற்றஞ்சாட்டிய பாரிவேந்தர், பொதுமக்கள் சிந்தித்து நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    • இன்றைக்கும் மக்களுக்கு இலவச சோறு போடுகிற நிலைமையில் தான் இருக்கிறோம்.
    • போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க.வினரின் போராட்டம் அரசியல்.

    வேலூர்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் இன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலூர் தாலுக்கா மற்றும் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொது செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கினார்.

    ஒருவனுக்கு தங்க நிழல் கூட இல்லாமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் விண்ணில் ஊர்திகளை செல்கிறோம், சந்திரனுக்கு அனுப்புகிறோம், சூரியனை நெருங்கிவிட்டோம் என்று பேசுவது மனிதாபிமானம் ஆகாது. அது அறிவுடைமைக்கு வேண்டுமானால் எடுத்துக்காட்டாக இருக்கலாம்.

    அதனால் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகளை வழங்கி வருகிறோம்.

    இன்றைக்கும் மக்களுக்கு இலவச சோறு போடுகிற நிலைமையில் தான் இருக்கிறோம். பிள்ளைகளுக்கு மூன்று வேளை சோறு கூட போட முடியாத சூழ்நிலையில் உள்ளது பஞ்சத்தில் உள்ளார்கள்.

    உடுக்கும் உடை கூட யாராவது கொடுக்க மாட்டார்களா என காத்துக்கொண்டி ருக்கிறார்கள். இதை மாற்றுவது தான் நமது அரசு. தேர்தல் முடிந்த உடன் 8 லட்சம் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்படும்.

    மக்களுக்கு தொண்டு செய்வது எங்கள் தலையாய கடமை என கருணாநிதி செய்தார் அதை அவரது மகன் மு க ஸ்டாலின் இப்போது செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும்.

    மதுரை எய்ம்ஸ் அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான், அவர்கள் தான் செயல்படுத்தவில்லை. எங்கள் மீது பழி சொல்வது நியாயம் இல்லை. நாங்கள் தடுத்திருக்கிறோம் என்று ஒரு திட்டத்தை சொல்ல சொல்லுங்கள். மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர், நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர் எந்த திட்டத்தை தடுத்தோமா? இல்லையா என்று சொல்ல வேண்டும்.

    பா.ஜ.க.வினர் அ.தி.மு.க. தலைவர்கள் படத்தை தவறாக பயன்படுத்து கிறார்கள் என்று அதிமுகவினருக்கு தான் ரோசம், கோபம் வர வேண்டும்.

    பிரதம மந்திரி பத்து முறை கூட வரலாம் யார் வேண்டாம் என்று சொன்னார்கள்.

    இவ்வளவு நாள் தி.மு.க.வை பற்றி பேசினாரா பிரதமர். தேர்தல் வரும்போதுதான் தி.மு.க.வை பற்றி பேசுகிறார். ஜல்லிக்கட்டு காலத்தில் வண்டி மாடு ஒரு மாறி தலையை ஆட்டும். அதுபோல தான் பிரதமரின் பேச்சு. இதெல்லாம் ஒரு அரசியல் சீசன்.

    போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க.வினரின் போராட்டம் அரசியல்.

    இதெல்லாம் பண்ணாமலா இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டைப் பற்றி மக்கள் புண்படும் விதமாக தமிழக கவர்னர் தொடர்ந்து பேசி வருகிறார்.
    • தமிழ் தொன்மையான மொழி என்பது இவர்கள் பேசித்தான் தெரிய வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர தி.மு.க. சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, தமிழக அரசின் 3 ஆண்டுகால சாதனை, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது :-

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செய்த சாதனைகள் ஏராளம். அவைகள் அனைத்தும் காலம் கடந்தும் பேசும். அதுபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏராளமான சாதனைகளை செய்து வருகிறார். மகளிருக்கு இலவச பஸ் பயணம், உரிமை தொகை , விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என மக்கள், விவசாயிகளுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறார்.

    தமிழ்நாட்டைப் பற்றி மக்கள் புண்படும் விதமாக தமிழக கவர்னர் தொடர்ந்து பேசி வருகிறார். பிரதமர் பெயருக்கு அவ்வப்போது ஓரிரு திருக்குறளைப் பேசுகிறார். இதை வைத்து தமிழ் தொன்மையான மொழி என பிரதமரே பேசிவிட்டார் என விளம்பரம் செய்கின்றனர்.

    தமிழ் தொன்மையான மொழி என்பது இவர்கள் பேசித்தான் தெரிய வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. நம் மக்களுக்கு முன்பே தெரிந்த விஷயம் அது. ஆனால், தமிழுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை விட யாருக்கும் தெரியாத சம்ஸ்கிருத மொழிக்கு 22 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் நிதி கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிடமிருந்து ஜிஎஸ்டி உள்பட அனைத்து வரிகளையும் வாங்கிக் கொள்ளும் மத்திய அரசு, திரும்பக் கொடுப்பதற்கு மனசு இல்லை. நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது. ஆனால், நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாலும், புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, தென் மாவட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தமிழக முதல்வர்தான் உதவிக்கரம் நீட்டினார். தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பிரதமர் கவலைப்படுவதில்லை.

    தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால், செய்ததாகக் கணக்கு காட்டுவதற்காக ரூ. 7 ஆயிரம் கோடிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிச் சென்றார்.

    இந்த மண்ணின் பண்பாடு, கலாசாரம், மொழி உள்பட அனைத்தையும் காத்து நிற்கும் அரணாக தி.மு.க உள்ளது. திராவிட மண்ணில் மத அரசியலுக்கும், தமிழ் துரோகிகளுக்கும் இடமில்லை. நாடாளுமன்ற தேர்தல் வெறும் அரசியல் வெற்றிக்கானது மட்டுமல்ல; நம்முடைய எதிர்காலம், இந்த நாட்டின் அமைதியைப் பொருத்து இருப்பதால், அதைக் காக்கும் கடமை நமக்கு இருக்கிறது என மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2019-ம் ஆண்டு முதல் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது.
    • எந்த தரப்பு சார்ந்த மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதுமில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதில் பா.ஜனதா தடுமாறி போய் இருக்கிறது. அவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகி இருக்கிறது என்பதை உணர முடிகிறது. தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்து டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த பேச்சுவார்த்தையில் விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்குபெறும். 10-க்கும் அதிகமான கட்சிகளை கொண்ட ஒரு கட்டுக்கோப்பான கூட்டணியாக இந்தியா கூட்டணி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது.

    பா.ஜனதா, அ.தி.மு.க கூட்டணி கொள்கையற்ற கூட்டணி என்பதால்தான் இடையிலேயே சிதறி போய்விட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் யார் யார் இருக்கின்றனர், பா.ஜனதா கூட்டணியில் யார் யார் இருக்கின்றனர் என உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. வழக்கம்போல பா.ம.க தன்னை தனித்து அடையாளப்படுத்தி கொண்டு எந்த கூட்டணியில் சேரப்போகிறோம் என்பதை ஒரு சூசகமாக வைத்துள்ளனர். தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளதுடன் தமிழக மக்களின் ஆதரவை பெற்று 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    குடியரசு தலைவர் உரையில் என்ன சொல்லப்பட்டிருந்ததோ, அதே கருத்துகள் அடங்கிய ஒன்றாகத்தான் மத்திய அரசின் பட்ஜெட் உரையும் அமைந்துள்ளது. எந்த தரப்பு சார்ந்த மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதுமில்லை. ஒரு வெற்று அறிக்கைபோல இந்த பட்ஜெட் அறிக்கை உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு பிறகு நேரடியாக தேர்தலை சந்திக்க இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் உள்ள இந்த பட்ஜெட் பா.ஜனதாவினருக்கே அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியை அழைத்து ஏன்?
    • முதலமைச்சர் ஆவதற்காக தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேனே தவிர முச்சந்தியில் நிற்க கிடையாது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், முத்துக்குமார் 15-வது ஆண்டு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று முத்துக்குமார், பழனிபாபா உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    கட்சி தொடங்கிய அன்று முதல் இன்று வரை கூட்டணி இல்லை என்றும் தனித்து தான் எங்கள் பயணம் தொடர்கிறது. மக்களை நம்புகிறோம். எங்களை மக்கள் கைவிடமாட்டார்கள். தோற்றாலும், வெற்றி பெற்றாலும் தனித்து தான் என்று வரலாறு பேசும். நாம் தமிழர் கட்சிக்கு கூடும் கூட்டத்தை கண்டு மற்ற கட்சிகள் கலக்கம் கொள்கின்றனர்.

    இது கொள்கைக்காக கூடும் கூட்டம். தி.மு.க. என்பது கட்சி கிடையாது. அது ஒரு கம்பெனி. கருணாநிதி குடும்பத்தின் சொத்து. ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் மற்ற கட்சிகளால் ஓட்டோ அல்லது கூட்டத்தையோ கூட்ட முடியாது. நாம் தமிழர் செய்வது தான் புரட்சி.

    தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் 2026-க்கு பிறகு ஒரு குச்சியாக கூட இருக்காது. ஒத்தையடி பாதையில் செல்லும் என்னை 8 வழிச்சாலையில் அழைத்துச் செல்வது தி.மு.க., பா.ஜ.க. தான். ஒரு தீவிரவாதியாகவோ, பயங்கரவாதியாக என்னை மாற்றி விடாதீர்கள், ஜனநாயகவாதியாகவே என்னை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.

    ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகளை (பனை-தென்னை பால்) திறப்போம். டாஸ்மாக் கடைகளை மூடுவோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னதை நிறைவேற்றி விட்டார்களா? கூட்டுறவு வங்கியில் வைத்த நகைக் கடன் தள்ளுபடி செய்து விட்டார்களா?.

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியை அழைத்து ஏன்? கேலோ என்பது இந்தியில் விளையாட்டு என்று அர்த்தம். இந்தி தெரியாது போடா என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்ததும் இந்தியை வாடா என்கின்றனர். முதல்-அமைச்சர் ஆவதற்காக தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேனே தவிர முச்சந்தியில் நிற்க கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான்.
    • இவர் பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இசைப்புயல் என மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

    கடந்த 1992-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த "ரோஜா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் தன் முதல் படத்திலேயே ரசிகர்களை தன் இசையால் வசியம் செய்துவிட்டார். இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இன்று வரை மக்கள் கொண்டாடும் விதமாக அமைந்தது.


    இப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை புயல் வேகத்தில் உலகெங்கும் பரவியது. மலையாளம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் தன் இசையால் மக்களை மகிழ்வித்து தன் எல்லையை விரித்தார். பல விருதுகள் வென்ற ஏ.ஆர்.ரகுமான் "ஸ்லம் டாக் மில்லியனர்" என்ற படத்தில் இசை அமைத்ததற்காக கோல்டன் குளோப் விருது, பாப்டா விருதுகளை பெற்றார். இதே படம் ஆஸ்கார் விருதையும் வென்றது.

    கிராமிய இசை முதல் மேற்கத்திய இசை வரை தனது இசையால் தனித்து தெரியும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பல புதுமைகளை செய்துள்ளார். இவ்வாறு "ரோஜா"-வில் தன் பயணத்தை தொடங்கி இரண்டு ஆஸ்கர்களை வென்று ஆஸ்கர் நாயகனாக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இன்றைய இளைஞர்கள் வேறு விதமான நபர்களை வீரர்கள் என நினைத்து கொண்டிருக்கின்றனர்.
    • அரை நூற்றாண்டாக தி.மு.க.வினர் கடிதம் மட்டும்தான் எழுதுகின்றனர்.

    சென்னை:

    வீரன் அழகுமுத்துக் கோன் சிலைக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அவர் நெஞ்சுக்கு நேராக பீரங்கிகள் வைத்து போரிட்ட போதும் தையரிமாக எதிர் கொண்டவர்.

    இன்றைக்கு விசாரணை என்று அணுகியவுடன் ஒருவருக்கு நெஞ்சுவலி வந்து விட்டது. அவரை போல் அழகு முத்துக்கோன் இல்லை.

    இன்றைய இளைஞர்கள் வேறு விதமான நபர்களை வீரர்கள் என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவரை போல் உள்ளவர்கள் தான் வீரர்கள்.

    புதுச்சேரியில் கியாஸ் சிலிண்டர் மானியமாக ரூ.300 கொடுக்க உள்ளதாக அரசாணை வெளியாகிவிட்டது. ஆனால் தமிழகத்தில் ரூ.100 கொடுக்க உள்ளதாக கூறினார்கள்.

    இன்னும் அதைபற்றி சத்தம் எதுவும் இல்லை. இத்தனை வருடம் ஆட்சிக்கு வந்த பிறகும் இவர்கள் திட்டங்கள் மட்டும்தான் அறிவித்திருக்கின்றனர்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து உதவி தொகை விடுப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும்.

    இங்குள்ள நிலைமையை எடுத்து சொல்ல கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. இதே போல 50 வருடங்களுக்கு முன்பாக கலைஞர் கருணாநிதி கவர்னர் வேண்டாம் என கடிதம் எழுதினார். அரை நூற்றாண்டாக தி.மு.க.வினர் கடிதம் மட்டும்தான் எழுதுகின்றனர்.

    கவர்னருக்கு அரசியல் சாசனத்தின் கீழ் கருத்து சொல்ல அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது நடவடிக்கை பிடிக்காவிட்டால் கருத்துக்கள் சொல்லலாம்.

    ஆனால் ஒவ்வொரு நிகழ்விலும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது சிறிதளவும் நியாயம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சீனுராமசாமி.
    • இவர் இயக்கிய ’மாமனிதன்’ திரைப்படம் பல விருதுகளை பெற்றது.

    கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'.


    இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விருதுகளை குவித்தது.

    இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், "தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள், சினிமா மற்றும் தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை தடை விதித்தல் செய்திட மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.



    • உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
    • அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விஷயம் கிசுகிசுவாக பேசப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

    சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வான 1½ வருடத்தில் கடந்த டிசம்பர் 14-ந் தேதி அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரானார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அவரை தலைவராக கட்சி நிர்வாகிகள் பார்க்கிறார்கள். 'சின்னவர்' என்று பவ்யமாக அழைக்கின்றனர்.

    அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மூத்த கட்சி நிர்வாகிகளின் துணையின்றி டெல்லி சென்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவிட்டு வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது அரசியலில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க தொடங்கியது.

    சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து சம்பவங்களை பார்வையிட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் சென்றிருந்தனர். இதிலும் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கு உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிக்கும் சென்று பிரசாரம் செய்ய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் அவரது உழைப்புக்காக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

    ஆனால் இப்போது திடீரென அவருக்கு முன்கூட்டியே துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுவிடும் என்று பேசப்படுகிறது.

    சில நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விஷயம் கிசுகிசுவாக பேசப்பட்டது.

    உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி இப்போதே கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • மத்திய அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியும் தெலுங்கானா வளர்ச்சி அடையாமல் இருக்க காரணம் முதல்வரின் செயல்பாடுதான் என்று விளாசினார்.
    • சந்திரசேகரராவுக்கு தி.மு.க. மீது லேசாகவாது சந்தேக கோடு விழ வைக்கலாம்.

    அரசியல்வாதிகள் என்றாலே அதிரடி, பல்டி, அந்தர்பல்டி... என்று களத்தில் எந்த பக்கம் நின்றாலும் எப்படியும் அடித்து ஆடக்கூடியவர்கள்.

    அப்படி இருக்கும் போது ஒட்டுமொத்தமாக இந்திய அரசியல் களத்தில் விளையாடும் மோடியின் அரசியல் கில்லாடித் தனத்தை சாதாரணமாக எடைபோட்டு விட முடியுமா...?

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தெலுங்கானா மற்றும் தமிழ் நாட்டில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பிரதமர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் அந்த அந்த மாநில முதலமைச்சர் கலந்துகொள்வது மரபு. ஆனால் தெலுங்கானாவில் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் அந்த மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை.

    இதை பிரதமர் மோடி தனக்கே உரிய பாணியில் வெளுத்து வாங்கினார். அதாவது அரசு வேறு அரசியல் வேறு. இப்படி ஒரு முதல்வர் அரசு திட்டங்களையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் எப்படி மாநிலம் வளரும்.

    மத்திய அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியும் தெலுங்கானா வளர்ச்சி அடையாமல் இருக்க காரணம் முதல்வரின் செயல்பாடுதான் என்று விளாசினார். அங்கிருந்து சென்னைக்கு வந்த மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார். வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்க செல்லும் இடத்துக்கு செல்ல 2 பேட்டரி கார்கள் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன.

    அதில் ஒரு காரில் முதல்வர், கவர்னர், அமைச்சர்கள் ஏறியிருந்தனர். ஒரு கார் மோடி ஏறுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் மோடியோ தனது காருக்கு வரும்படி மு.க.ஸ்டாலினையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். கொடி அசைத்தபோதும் மு.க.ஸ்டாலினை தன் அருகில் நிற்க வைத்து கொண்டார்.

    இதன்மூலம் அரசியலில் இருவரும் மோடியின் எதிரிகளாக இருந்தாலும் சந்திரசேகரராவை விட மு.க.ஸ்டாலின் மக்கள் நலனுக்காக பாடுபடுகிறார் என்று உணர வைத்து மக்கள் மத்தியில் சந்திரசேகரராவின் செல்வாக்கை சாய்ப்பதற்கான யுக்தி ஒன்று.

    இன்னொரு விதத்தில் பார்த்தால் சந்திரசேகர ராவ் அமைக்கும் கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினும் செல்வார் என்று எதிர் பார்க்கும் நிலையில் தன்னுடன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொண்டால் சந்திரசேகரராவுக்கு தி.மு.க. மீது லேசாகவாது சந்தேக கோடு விழ வைக்கலாம்.

    மூன்றாவதாக என்ன தான் தி.மு.க. மோடியை வசை பாடினாலும் அவரது பெருந்தன்மையை பார் என்று தமிழக மக்கள் யோசிப்பார்கள். அதன் மூலம் மோடியின் இமேஜ் வளரவும் வாய்ப்பு உண்டு.

    அதாவது ஒரே கல்லில் இரண்டுக்கும் மேற்பட்ட மாங்காய்களை மோடி வீழ்த்தி இருக்கிறார். அரசியலில் மோடி கில்லாடி தான்.

    • அரசு மனநலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
    • ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம்- சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினையும் வெளியிட்டார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ.22.84 கோடி மதிப்பீட்டில் 75 அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட புதிய அவசரகால ஊர்திகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்து, அவசரகால ஊர்திகளை பார்வையிட்டு, வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு 'மன நல நல்லாதரவு மன்றங்கள்' அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த மனநல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மனநலத் துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி, உடனடியாக மன நல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகை யில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    இன்று, 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பள்ளி மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் 'மனநல நல்லாதாரவு மன்றங்கள் (மனம்)" மற்றும் "நட்புடன் உங்களோடு மனநல சேவை (14416)" ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் முதல் கட்டமாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் விரி வுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை அரசு மனநலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    அனைத்து வகையான மனநல சேவைகளையும் ஓரிடத்தில் வழங்கும் வகையில், ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மனநலக் காப்பகம் தரம் உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு மனநலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனமாக தொடங்கப்பட உள்ளது. இங்கு மனநல சேவையுடன் கூடுதலாக நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளும் வழங்கப்பட உள்ளது.

    மாநிலத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் மனநல ஆலோசனை பெற, தொலை மருத்துவத்திற்கான மின்னணு மையம் உருவாக்கப்படும். இந்த ஒப்புயர்வு மையத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், மனநல உளவியல் மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் மனநலப் பயிற்சி பெறும் வசதிகள் ஏற்படுத்தப்படும். மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையத்திற்கு 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டிடத்தின் முப்பரிமாண வரைபடத்தை முதலமைச்சர் வெளியிட்டார். ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம் சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினையும் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் வெற்றியழகன், தாயகம் கவி, மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.
    • இவரின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


    செல்வராகவனை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், செல்வராகவன் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள இயக்குனர் செல்வராகவன் "மாண்புமிகு முதல்வர் எங்கள் குடும்பத்தை சந்தித்தபோது... என்ன ஒரு சிறப்பான சந்திப்பு" என குறிப்பிட்டுள்ளார்.


    ×