என் மலர்
நீங்கள் தேடியது "slug 94898"
- புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ‘‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது” க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் ‘விருது விண்ணப்பம்‘ என்ற பகுதியில் விலையின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் 'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது' தோற்றுவிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
"கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு 'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது' ஆண்டுதோறும் வழங்கப்படும். விருதுத் தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும்"
புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ''கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது" க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் 'விருது விண்ணப்பம்' என்ற பகுதியில் விலையின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு வருகிற 24-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 044-28190412, 044-28190413, மின்னஞ்சல் முகவரி : tamilvalarchithurai@gmail.com ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக அரசு இன்னும் கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.
- ஆணையத்தில் அங்கம் வகிக்கும் பிற காவிரி பாசன மாநிலங்களான கேரளம், புதுச்சேரி ஆகியவற்றின் ஆதரவைத் திரட்டி மேகதாது அணை குறித்த விவாதத்தை தடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக அரசியலில் காவிரி விவகாரம் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று தான். கர்நாடகத்தில் அடுத்த 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட இருப்பது, மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தொடர்ந்து முழங்கி வருவது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கும்? என்பதை யூகிக்க முடியும்.
இதை உணர்ந்து இந்த விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். ஆணையத்தில் அங்கம் வகிக்கும் பிற காவிரி பாசன மாநிலங்களான கேரளம், புதுச்சேரி ஆகியவற்றின் ஆதரவைத் திரட்டி மேகதாது அணை குறித்த விவாதத்தை தடுக்க வேண்டும்.
மேகதாது அணைக்கு அனுமதியளிக்கும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு இல்லை என்பதை சான்றுகளுடன் எடுத்துக் கூறி புதிய அணைக்கு அனுமதி அளிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசு வகுக்க வேண்டும். தமிழகத்திற்கு சோறு படைக்கும் காவிரி பாசன மாவட்டங்கள் வறண்டு விடாமல் இருப்பதையும், அங்குள்ள விவசாயிகள் வாடி விடாமல் இருப்பதையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்க பெற்றோர், மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
- விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கப்படும்.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். மேலும் பல்வேறு ஊர்களில் உள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க் கிழமை அவர்கள் அனைவரும் சென்னை உள்பட பணி செய்யும் இடங்களுக்கு திரும்ப வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக நாளை இரவே அவர்கள் புறப்பட வேண்டும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோரும் மாணவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாளான 25-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்துக்கடைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்துசெய்யப்படும்.
- தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிமம் இல்லாத நபர்களுக்கு விற்பனை அல்லது வினியோகம் செய்யும் மொத்த மருந்து விற்பனையாளர்களின் மருந்து உரிமங்களும் ரத்து செய்யப்படும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காகவும் டாக்டரின் உரிய பரிந்துரைச்சீட்டு இல்லாமலும் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்வது மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறலாகும். அவ்வாறு விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்துக்கடைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்துசெய்யப்படும்.
மேலும், அடிமைப்பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிமம் இல்லாத நபர்களுக்கு விற்பனை அல்லது வினியோகம் செய்யும் மொத்த மருந்து விற்பனையாளர்களின் மருந்து உரிமங்களும் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தேனி வளர்ப்பு அலகுக்கான துணைக்கூறுகளை சரிவர செயல்படுத்தாததால் 169 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் ரூ.10.34 லட்சம் பயனற்றதாகிவிட்டது.
- வேலூர் மாவட்டத்தில் உழவர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப வழங்காமல், 590 டன் நெல் விதைகள் அதிக அளவில் வழங்கப்பட்டன.
சென்னை:
தமிழக சட்டசபையில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் 4 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த தணிக்கை அறிக்கைகள், 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையுள்ளவை ஆகும்.
இதுகுறித்து மாநில முதன்மை தணிக்கை தலைவர் பிரிவு-1 ஆர்.அம்பலவாணன், பிரிவு-2 கே.பி.ஆனந்த் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சரக்கு மற்றும் சேவை வரி, வணிக வரி, முத்திரை தீர்வை, பதிவுக்கட்டணம், நில வருவாய் ஆகியவற்றில் 1,403 இனங்களில் குறைவான வரி மதிப்பீடுகள் செய்யப்பட்டு, குறைவாக வரி விதிக்கப்பட்டு ரூ.236 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
விருதுநகர் வட்டத்தில் 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் 14 முகவர்கள் மதிப்பு கூட்டு வரி சட்டத்தின்படி கொள்முதல் வரி கட்டாமல் ரூ.235.14 கோடி மதிப்புள்ள பருப்பு வகைகளை கொள்முதல் செய்துள்ளனர். அதில் ரூ.176.83 கோடி மதிப்புள்ள சரக்குகளை வேறு மாநிலங்களில் இருப்பு வைத்தனர். அந்த வகையில் ரூ.5.48 கோடி வரி வராமல் போனது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020-21-ம் ஆண்டில் வருவாய் வரவில் 0.26 சதவீதம் என்ற மிகக்குறைந்த உயர்வுதான் காணப்பட்டது. வரியில்லாத வருவாயில் கணிசமான குறைவு இருந்தது.
திருமண உதவி, மகப்பேறு உதவி, இலவச மடிக்கணினி, சீருடை வழங்குதல் போன்ற மறைமுக மானியங்கள், முந்தைய ஆண்டைவிட ரூ.6,746 கோடி உயர்ந்தது. இந்த உயர்வுக்கு, கொரோனா ஊரடங்கை சமாளிக்க மக்களுக்கு கொடுக்கப்பட்ட பண உதவி முக்கிய காரணமாகும். இந்த செலவு, மானியத்திற்கு பதிலாக மானிய உதவி என்று தவறாக வகைப்படுத்தப்பட்டது.
மானாவாரி பகுதி மேம்பாடு என்பது, பயிர்கள், தோட்டக்கலை, கால்நடை, மீன்பிடி, வனவியல் போன்ற பல விவசாய அம்சங்களை உள்ளடக்கியதாகும். ஆனால் மானாவாரி பகுதிகளுக்கு பதிலாக நீர்ப்பாசன நிலங்களில் இந்த திட்டம் முறையற்ற வகையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் பயன்பெற்ற சில விவசாயிகளுக்கு மானாவாரி மற்றும் நன்செய் ஆகிய 2 நிலங்களும் இருந்தன. நன்செய் நிலம் இருந்தவர்களை, மானாவாரி விவசாயம் செய்து வருவதாகவும் அரசு கூறியிருக்கிறது.
தேனி வளர்ப்பு அலகுக்கான துணைக்கூறுகளை சரிவர செயல்படுத்தாததால் 169 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் ரூ.10.34 லட்சம் பயனற்றதாகிவிட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர்களால் கொள்முதல் நடைமுறை மீறப்பட்டதால் ரூ.3.22 கோடி தேவையில்லாத செலவு ஏற்பட்டது.
கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் எழிச்சூர் மற்றும் தையூரில் தலா ஆயிரம் தொழிலாளர்கள் தங்கும் வசதி கொண்ட 2 விடுதிகள் கட்டப்பட்டன. அதை கட்டிய இடம் சரியானதல்ல. இதனால் ரூ.31.66 கோடி வீண் செலவு ஏற்பட்டது.
72 மாதிரி பள்ளிகளின் 31 ஆயிரத்து 152 மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் ரூ.4.13 கோடி வீணாக செலவானது. மேலும் 49 மாதிரி பள்ளிகளில் 21 ஆயிரத்து 86 மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட ரூ.2.22 கோடி மதிப்பிலான சீருடைகளில் மிகக் குறைவான சீருடைகளே பயன்படுத்தப்பட்டன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மின் பாடத்தொகுப்புகள் மற்றும் மின் கற்றல் முகப்பை (போர்டெல்) உருவாக்குவதற்கான ஒப்பந்த ஆவணங்கள் தயாரிப்பதில் முறைகேடுகள் நடந்தன. ஒப்பந்த மதிப்பீட்டில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் ஒப்பந்ததாரரின் சேவைகளின் தரத்தை உறுதி செய்யாததால் ரூ.10.70 கோடி அளவுக்கு தேவையற்ற செலவும், ரூ.5.17 கோடியை செலுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டாயப்படுத்தப்பட்ட சில உள் கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதில் நேரிட்ட குறைபாடுகளினால் ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்படாத தொழில்நுட்ப சேவைகளுக்கு ரூ.11.41 கோடி முறைகேடாக வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உழவர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப வழங்காமல், 590 டன் நெல் விதைகள் அதிக அளவில் வழங்கப்பட்டன. இது ரூ.1.33 கோடி கூடுதல் செலவுக்கு வழி வகுத்தது. காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளின் தலைவர்களின் செயல்பாட்டினால் 'எம்.ஆர்.ஐ. ஸ்கேனரை' பொருத்துவதற்கான இடத்தை அடையாளம் காண்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ரூ.1.12 கோடி தவிர்க்கக்கூடிய செலவு நேரிட்டது. ஸ்கேன் வசதிகளை நோயாளிகள் பெற ஒரு ஆண்டு தாமதமாகி விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ஜெயலலிதா மரணம் அடைந்து 6 ஆண்டுகளாக ஆகிறது. இதில் 5 ஆண்டுகள் நடந்த விசாரணை கமிஷன் தற்போதுதான் முடிவடைந்து அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
- ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்துள்ளது என்பதை விசாரணை கமிஷன் அம்பலப்படுத்தி இருக்கிறது.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார்.
75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா உயிரிழந்து விட்டதை அறிந்ததும் அ.தி.மு.க. தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதுபற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இந்தஅறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை தீவிரப்படுத்தினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 159 பேரிடம் விசாரணை நடத்தி நீதிபதி ஆறுமுகசாமி அவர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றார். இது தவிர அரசு துறை அதிகாரிகளிடமும், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சசிகலாவின் உறவினர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இப்படி ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நீதிபதி ஆறுமுகசாமி 611 பக்க அறிக்கையை தயாரித்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை நீதிபதி ஆறுமுகசாமி 5 ஆண்டுகள் வரை விசாரித்து பல்வேறு தகவல்களை திரட்டினார். இதில் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான அனைத்து தகவல்களையும் நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில் இடம்பெற செய்துள்ளார்.
ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க தேவையில்லை என்றும் சென்னையிலேயே சிகிச்சை அளித்தால் போதும் என்றும் சசிகலா கூறியதாகவும், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து முடிவுகளையும் சசிகலா குடும்பத்தினரே எடுத்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுபோன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜெயலலிதா உயிரிழந்த மரண தேதியிலும் குழப்பம் உள்ளது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் ஒரு டாக்டராக இருந்தும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி, அப்பல்லோ டாக்டர்களையும் விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார். இது தொடர்பாக சசிகலா, டாக்டர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர்கள் எஸ்.வி.சி.ரெட்டி, பாபு ஆபிரகாம், முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ், அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் சுகாதார முதன்மை செயலாளருக்கு ஆணையத்தின் அறிக்கை அளிக்கப்பட்டு அதில் நடவடிக்கை எடுப்பது தொடர்பான முன்னெடுப்புகளை துறை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் பரிந்துரைப்படி குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பது பற்றி சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை விரைவில் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன்படி சசிகலா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த விரைவில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக சுகாதார துறையினர் விரைவில் காவல்துறையில் புகார் மனு அளிக்க உள்ளனர். இதனை பின்பற்றியே சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட உள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார். இவருக்கு கீழ் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் அந்தஸ்திலான அதிகாரிகளும் இடம்பெற உள்ளனர்.
இந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் சசிகலா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர உள்ளனர்.
ஜெயலலிதா மரணம் அடைந்து 6 ஆண்டுகளாக ஆகிறது. இதில் 5 ஆண்டுகள் நடந்த விசாரணை கமிஷன் தற்போதுதான் முடிவடைந்து அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்துள்ளது என்பதை விசாரணை கமிஷன் அம்பலப்படுத்தி இருக்கிறது.
இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதோ என்கிற சந்தேகமும் அச்சமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே புதிய குழு அமைக்கப்பட உள்ளதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் நீடித்து வரும் மர்மம் விலகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும் ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரது மரணம் இயற்கையானது இல்லை என்பது போன்ற தோற்றத்தையே ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளுக்கும் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் உரிய பதில் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மரணத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா உள்ளிட்டோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட இருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
- 58 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 பாலங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை:
தருமபுரி மாவட்டம், சிவாடி மற்றும் தருமபுரி ரெயில் நிலையங்களுக்கு இடையே அதியமான் கோட்டையில் 623.3 மீட்டர் நீளத்திற்கு, 12 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம்.
சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் மேச்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தொளசம்பட்டி சாலையில், 688.8 மீட்டர் நீளத்திற்கு 18 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம்.
விழுப்புரம் மாவட்டம் மேட்டுப்பாளையத்தையும் கடலூர் மாவட்டம், மேல் குமாரமங்கலத்தையும் இணைக்கும் வகையில் பெண்ணையாற்றின் குறுக்கே, 480 மீட்டர் நீளத்திற்கு 27 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர் மட்ட மேம்பாலம்.
என மொத்தம் 58 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 பாலங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சாதிச் சான்றிதழுக்காக தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
- அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
11-ந்தேதி அன்று வேல்முருகன் என்பவர் தனது மகனுக்கு சாதிச் சான்றிதழுக்காக விண்ணப்பித்து, அச்சான்றிதழ் அரசு அதிகாரிகளால் வழங்கப்படாததால், மனமுடைந்து உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டார்.
முன் ஏர் போகும் வழியில்தான் பின் ஏர் போகும் என்பதுபோல், அப்பாவி மக்களைப் பற்றி இன்றைய விடியா அரசின் ஆட்சியாளர்களைப் போலவே, அதிகார வர்க்கமும் அலட்சியமாக இருப்பது வேதனைக்குரியது.
"பேய்க்கு வாழ்க்கைப்பட்டால், முருங்கை மரத்தில் தான் குடித்தனம் நடத்த வேண்டும்'' என்ற நிலையில் தி.மு.க-விற்கு வாக்களித்த தமிழக மக்கள் இந்த விடியா திமுக ஆட்சியில் திணறிக் கொண்டிருக்கிறார்கள். உயிரை பணயம் வைத்து தான் எந்த ஒரு சான்றிதழும் பெற முடியும் என்ற நிலைக்கு மக்களை இந்த விடியா அரசு தள்ளி இருக்கிறது.
மகனின் சாதிச் சான்றிதழுக்காக தன் இன்னுயிரை தீந்தணலுக்கு பலியிட்ட அப்பாவி மலைக்குறவரின் செயலுக்கு இந்த விடியா அரசும், அதிகாரிகளும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு நன்மை செய்வதாக மார்தட்டிக்கொள்ளும் விடியா அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதிச் சான்றிதழ் பெற முடியாமல், விலைமதிக்க முடியாத உயிரை நீத்த மலைக்குறவர் குடும்பத்திற்கு என்ன சொல்லப்போகிறார்?
சாதிச் சான்றிதழுக்காக தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்; இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்; உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இந்த விடியா தி.மு.க. அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத அனைத்தும் மூட நம்பிக்கைகள் தான்.
- மூட நம்பிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களும், பெண்களும் தான்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரள மாநிலம் எலந்தூர் கிராமத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் உட்பட இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து விட்ட இந்த காலத்தில், இந்த கொடுமை அரங்கேற்றப்பட்டிருப்பதை பார்க்கும் போது மனித குலம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.
கேரளத்தை கடந்து நரபலி உள்ளிட்ட மூட நம்பிக்கைகள் அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சாவூர் மல்லிப்பட்டினத்தில் தாத்தாவின் உடல்நிலை சரியாக வேண்டும் என்பதற்காக 6 மாத பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து நரபலி கொடுத்த கொடுமை நடந்தது. நரபலி மட்டுமே மூட நம்பிக்கை அல்ல. பில்லி சூனியம் வைத்தல், பேய் ஓட்டுதல் போன்ற செயல்களும் அந்த வகையை சேர்ந்தவை தான்.
அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத அனைத்தும் மூட நம்பிக்கைகள் தான். மூட நம்பிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களும், பெண்களும் தான். சமூக வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயனளிக்காத, பிற்போக்குத்தனத்தை திணிப்பதற்கு மட்டுமே பயன்படும் மூட நம்பிக்கை தமிழ்நாட்டில் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும்.
அதற்காக தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை வரும் 17-ந் தேதி தொடங்கவுள்ள சட்டப் பேரவை கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்; அதற்கு கால அவகாசம் இல்லை என்றால், கூட்டத்தொடருக்கு பிறகு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். மூட நம்பிக்கையை நாடு தழுவிய அளவிலும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருப்பதால் மத்திய அரசும் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த செப்டம்பர் 10-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
- இந்த ஆண்டில் இருந்து வீடுகளுக்கு இலவச மானிய விலை மின்சாரத்துக்கான செலவு ரூ.5572 கோடியாக அதிகரித்துள்ளது.
சென்னை:
தமிழக மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும் 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது.
இதற்காக ஆண்டுக்கு 3,650 கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது.
இந்த தொகையை மின் வாரியத்துக்கு தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் இந்த ஆண்டில் இருந்து வீடுகளுக்கு இலவச மானிய விலை மின்சாரத்துக்கான செலவு ரூ.5572 கோடியாக அதிகரித்துள்ளது.
சொந்த வீடு வைத்திருக்கும் சிலர் வாடகைதாரர்களிடம் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். சிலர் ஒரே வீட்டிற்கு 3,4, மின் இணைப்பு பெற்றுள்ளனர்.
சில வீடுகளில் ஒட்டு மொத்தமாக அதிக மின்சாரம் பயன்படுத்தினாலும் தனித்தனி மீட்டர் இருப்பதால் ஒவ்வொன்றும் 100 யூனிட் இலவசம் என 500 யூனிட் வரை மானிய பிரிவில் வந்து விடுவதால் கட்டணம் குறைந்து விடுகிறது.
இதனால் தமிழக அரசுக்கு பலநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
இதனால் இலவச மின்சாரத்தில் முறைகேட்டை தவிர்க்க ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு என்ணை இணைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.
இப்போது இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது.
ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ் மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதில் முதல் 100 யூனிட் வரை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர், மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை. ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்பவர்கள் பிற மோசடிகளில் ஈடுபடுபவர்களை கண்டு பிடிக்கவே ஆதார் எண்ணை மின் நுகர்வோர் இணைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அரசிதழலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், தேவாங்கு இனத்தை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டு உள்ளது.
- கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11,806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகள், தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையானது, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11 ஆயிரத்து 806 ஹெக்டேர் நிலத்தை இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கை செய்துள்ளது.
தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். அவை மரவகை இனத்தைச் சார்ந்தது. தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம் விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன. இந்த இனங்கள் சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், தேவாங்கு இனத்தை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டு உள்ளது. இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் இவைகளுக்கான அச்சுறுத்தல்களை தணித்தல் ஆகியவற்றின் மூலமே இவைகளின் எண்ணிக்கையை பெருக்க இயலும். அழிந்து வரும் இந்த தேவாங்குகள் இனத்தை பாதுகாக்க தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11,806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகள், தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
"இந்தியாவில் தேவாங்குகளுக்கான முதல் வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படும்" என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டதை செயல்படுத்தும் வகையில், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11 ஆயிரத்து 806.56 ஹெக்டேர் (ஏழு பிளாக்குகளில்) பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக "கடவூர் தேவாங்கு சரணாலயம்" அமைத்து தமிழ்நாடு அரசு அறிவிக்கை செய்துள்ளது.
இதுதவிர பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, பாக் வளைகுடாவில் இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகத்தை அறிவிக்கை செய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் கழுவேலி பறவைகள் சரணாலயத்தை அறிவிக்கை செய்தது. அகத்தியர் மலை யானைகள் பாதுகாப்பகம் அறிவிக்கை செய்தது. திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தை அறிவிக்கை செய்தது.
மிகக் குறுகிய 15 மாத காலத்தில் எடுக்கப்பட்ட இந்த புதுமையான முயற்சிகள் வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகளில், தமிழ்நாட்டுக்கு ஒரு உன்னத இடத்தை அளித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பனையோலை பொருட்கள் தயாரிப்பது தொடர்பாக 100 பெண்களுக்கு பயிற்சி வழங்குவதற்கும் மாநில அரசு ரூ.2.02 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.
- பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரை தேர்ந்தெடுப்பதற்காக, அரசு தேர்வுக்குழு ஒன்றினை அமைத்துள்ளது.
சென்னை:
வேளாண்மை உற்பத்தி ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், நடப்பாண்டில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் மூலம் 10 லட்சம் பனை விதைகளை வினியோகம் செய்வதற்கும், பனையேறும் சிறந்த எந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கு விருதளிப்பதற்கும் 50 சதவிகித மானியத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்கும், 50 சதவீத மானியத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பனை ஏறும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் கருவிகள் வழங்குவதற்கும், தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் மூலம் தரமான பனை வெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பு தொடர்பாக 250 பனை விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும், இப்பயிற்சியினை பெற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உபகரணங்கள் வினியோகிப்பதற்கும், பனையோலை பொருட்கள் தயாரிப்பது தொடர்பாக 100 பெண்களுக்கு பயிற்சி வழங்குவதற்கும் மாநில அரசு ரூ.2.02 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, எளிதாக பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியினை கண்டுபிடிக்கும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் விருது வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியில், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொள்ளலாம். பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரை தேர்ந்தெடுப்பதற்காக, அரசு தேர்வுக்குழு ஒன்றினை அமைத்துள்ளது.
இக்குழுவில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து தோட்டக்கலைத்துறையின் பேராசிரியர், வேளாண் பொறியியல் துறையின் பேராசிரியர், தோட்டக்கலை கூடுதல் இயக்குனர் (மத்திய மற்றும் மாநில திட்டம்), தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் அலுவலர் மற்றும் பனை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயி ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
இத்தகைய கருவியினை கண்டுபிடிப்பதற்கு ஆகும் மொத்த செலவினம், கருவியின் செயல்திறன், இதற்கான விலையின் உண்மைத்தன்மை, எந்திரத்தின் ஒட்டுமொத்த பயன்பாட்டுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான நபர் தேர்வு செய்யப்படுவார். இந்த விருதுக்கான போட்டியில் கலந்துகொள்ளவிரும்பும் நிறுவனங்களும், தனிப்பட்ட நபர்களும் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.