search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அரசு"

    • இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
    • கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் சிறு குறு நிறுவன துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லையில் தொழில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் சுய தொழில் முனைவோருக்காக ரூ. 961 கோடியே 58 லட்சம் மானியத்துடன் சுமார் ரூ. 2,818 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் 30 ஆயிரத்து 324 இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக்கப் பட்டுள்ளனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சம் நபர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற கடந்த 10 ஆண்டுகளில் 55 ஆயிரத்து 230 நபர்கள் மட்டுமே தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவின் முன்னோடி திட்டமாக தமிழக அரசால் கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்காக தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மூலம் ரூ. 159.40 கோடி மானியத்துடன் ரூ.302.86 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 1369 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.

    பின்தங்கிய தென் மாவட்டங்களில் ரூ. 262.13 கோடி மானியத்துடன் ரூ. 769.27 கோடி வங்கி கடன் உதவியுடன் 9,594 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை போல் வரும் பிப்ரவரி மாதம் தமிழக முதலமைச்சர் தலைமையில் உலக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் சிறு குறு நிறுவன துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 170 ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டு ரூ.69 கோடியே 15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் 90 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் தொடங்கப்பட்டுள்ளது.

    தென் மாவட்டங்களில் ராக்கெட் தொழில்நுட்பம் சம்பந்தமான தொழிற் சாலைகளை தொடங்குவதற்கு முன் வருபவர்களுக்கு உடனடியாக தொழிற்சாலைகள் தொடங்க முன்னுரிமை கொடுக்கப்படும்.

    தமிழக அரசின் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 8 சிட்கோ தொழிற்பேட்டைகளில் 6 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 8 சிட்கோ தொழிற்பேட்டைகள் புதிதாக இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது.

    பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை நூற்பாலை மற்றும் வள்ளியூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை ஆகியவை முழுமையாக கையகப்படுத்தி அங்கும் புதிய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

    புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதில் அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. அதிகாரிகளை ஊக்குவித்து இளைஞர்களை புது தொழில் முனைவராக உருவாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
    • அடிக்கடி நடைபெறும் இதுபோன்ற அவலச் சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

    அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்புகளை, எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி தொழிலாளர்கள் சுத்தம் செய்வது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

    நாட்டு மக்கள் அனைவரும் நவீன விஞ்ஞான உலகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும் மனிதக் கழிவுகளையும், பாதாள சாக்கடைகளையும் மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனையளிக்கிறது.

    இந்திய அளவில் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் மரணத்தில் தமிழகம் முதலிடம் வகித்து வரும் அவல நிலையிலும், அதனை தடுக்கவோ, மாற்றுவழிகளை கண்டறியவோ எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    மாநில அரசின் மூலம் கொண்டுவரப்பட்ட மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதையும், அதனை அமல்படுத்த அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவும் வெறும் காகித அளவில் மட்டுமே இருப்பதையும் அடிக்கடி நடைபெறும் இதுபோன்ற அவலச் சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

    எனவே, இனியாவது மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைச்சட்டத்தை தீவிரப்படுத்துவதோடு, அப்பாவி தொழிலாளர்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • அரசியலை முன்வைத்து, ஒருபோதும் மக்கள் தேவைகளை புறக்கணிக்கக்கூடாது
    • கூட்டத்தில் பங்கெடுத்து உரிமைகளை பெற போராடியிருக்க வேண்டும்

    சமீபத்தில் பாஜகவில் இணைந்த சரத்குமார் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    ராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய ரயில்பாதை அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தும் கூட, சூழலியல் காரணங்களைக் காட்டி அத்திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருக்கிறது. ரயில்வே திட்டங்களுக்கு 2749 ஹெக்டேர் நிலம் தேவையாக இருக்கும் போது, 807 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    அடிப்படைப் பணிகளை தாமதம் செய்துவிட்டு உண்மைக்கு புறம்பாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்தும் போக்கை திமுக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

    அரசியலை முன்வைத்து, ஒருபோதும் மக்கள் தேவைகளை புறக்கணிக்கக்கூடாது.

    மேலும், நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. தமிழக மக்கள் நலன் கருதி, நமது உரிமையை பெற வேண்டும் என்றால், கூட்டத்தில் பங்கெடுத்து உரிமைகளை பெற போராடியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • அரண்மனையே தற்போது அம்மன்னரின் பெயரால் திருமலை நாயக்கர் அரண்மனை என்றழைக்கப்படுகிறது.
    • தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை மாறாமல் பேணிப் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    மதுரை மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. சங்க காலப் பாண்டியரின் தலைநகராக விளங்கியது. பல்வேறு இலக்கியங்களும் வெளிநாட்டார்க் குறிப்புகளும் மதுரையின் சிறப்பினை எடுத்துக்கூறுகின்றன.

    மதுரையைத் தலைமையிடமாக் கொண்டு கி. பி 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்தனர். நாயக்கர் மன்னர்களில் சிறப்பு வாய்ந்தவராக திருமலை நாயக்கர் கி.பி.1623- 1659 வரை ஆட்சிசெய்தார். திருமலை நாயக்க மன்னர் கி.பி.1636 ஆம் ஆண்டில் மதுரையில் அரண்மனை ஒன்றினைக் கட்டினார். இந்த அரண்மனையே தற்போது அம்மன்னரின் பெயரால் திருமலை நாயக்கர் அரண்மனை என்றழைக்கப்படுகிறது.

    தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்த அரண்மனைகளில் ஒன்றாக மதுரைத் திருமலை நாயக்கர் அரண்மனை திகழ்கிறது.

    திருமலை நாயக்கர் அரண்மனை சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என இரண்டு முக்கியப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இந்த அரண்மனை அரியணை மண்டபம், அந்தப்புரம், நாடகசாலை, பள்ளியறை, பூசை அறை, படைக்கலன், வசந்தவாவி, மலர்வனம் போன்ற பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.

    திருமலை மன்னரின் பேரன் சொக்கநாத நாயக்க மன்னர் தனது தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். எனவே இந்த அரண்மனையின் ஒரு பகுதியை இடித்து திருச்சிராப்பள்ளியில் புதிய அரண்மனையை உருவாக்கினார். தற்போது அரண்மனையின் நான்கு ஒரு பகுதி மட்டும் எஞ்சியுள்ளது.

    திருமலை நாயக்கர் அரண்மனை இந்தோ-சாரசனிக் கட்டக்கலைப் பாணியில் கட்டப்பட்டதாகும். இந்துக்கோயில்களின் கட்டக்கலையும் முகமதியக் கட்டக்கலையும் இணைந்து கட்டப்பட்டும் கலையை இந்தோசாரசனிக் கட்டக்கலை என்றழைப்பர்.

    இவ்வரண்மனையில் சென்னை மாகாண ஆளுநர் 1879-ஆம் ஆண்டு ரூ 5 இலட்சம் மதிப்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டார். திருமலை நாயக்கர் அரண்மனை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்டச் சின்னமாக 1972-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

    தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை மாறாமல் பேணிப் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதனடிப்படையில் திருமலை நாயக்கர் அரண்மனை, தஞ்சாவூர் மராட்டா அரண்மனை, தரங்கம்பாடி டேனீஷ்கோட்டை ஆகிய வரலாற்றுச் சின்னங்களில் பாதுகாப்பு, மறுசீரமைப்பு பணிகள் 16.92 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

    மேலும், திருமலை நாயக்க அரண்மனை நாடகசாலை, பள்ளியறை பகுதிகளில் புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மூன்று கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. திருமலை நாயக்கர் அரண்மனையில் மேற்குப்புறத்தில் கம்பிவேலி மற்றும் புல்வெளித்தளம் ரூ 61 இலட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் தொன்மையை பாதுகாக்கும் வண்ணம் அனைத்துத் தளப்பகுதிகளிலும் ஒரே மாதிரியான கற்கள் ரூ 3.73 கோடி மதிப்பில் பதிக்கப்பட்டு வருகின்றன.

    திருமலை நாயக்கர் அரண்மனையினை நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். மதுரைக்கு வட இந்தியாவில் இருந்து வருகை தரும் பார்வையாளர்களும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்த அரண்மனையைக் கண்டுகளிக்கின்றனர்.

    பகல் நேரம் தவிர்த்து இரவு நேரத்திலும் திருமலை நாயக்கர் அரண்மனையின் எழிலைக் காண்பதற்கு உள் மற்றும் வெளிப்பகுதிகளில் ஒளியூட்டி அழகூட்டுவதற்கு மரபு சார் ஒளிவிளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

    திருமலை நாயக்கர் அரண்மனையினை உலகத்தரம் வாய்ந்த வரலாற்றுச் சின்னமாக உயர்த்தும் வகையில் பல்வேறு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. வருங்கால தலைமுறையினருக்கு இத்தகைய மரபுச் சின்னங்களைத் தொன்மை மாறாமலும் காலம் கடந்து நிலைத்து நிற்கும் வகையில் பாதுகாத்து எடுத்துச் செல்வது நமது தலையாய கடமையாகும் என்ற உன்னத நோக்குடன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    "மரபு நம் உரிமை; அதை மீட்டெடுத்தல் தமிழர் தம் கடமை" என்ற உயரிய நோக்கோடு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.

    • ரூ.44.46 கோடியில் புதிய ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு வாகனங்கள்.
    • சிறைவாசிகள் பயன்பாட்டிற்கு 1 லட்சம் புத்தகங்கள்.

    தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஆட்சியில் சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதில் சீர்மிகு பணிகள் மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    அதன்படி, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "1.17 இலட்சம் காவல் பணியாளருக்கு ரூ.5,000 வீதம் ரூ.58.50 கோடி கொரோனா உதவித் தொகை.

    ரூ.44.46 கோடியில் புதிய ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு வாகனங்கள்.

    58 புதிய மகளிர் காவல் நிலையங்கள். 21 புதிய தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்கள்.

    சிறைவாசிகள் பயன்பாட்டிற்கு 1 லட்சம் புத்தகங்கள். தீவிபத்திலும் வெள்ளத்திலும் சிக்கிய 42,224 மனித உயிர்களும் ரூ.605 கோடி மதிப்புடைய உடைமைகளும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசின் காவல்துறை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பழைமையான துறை. 1964-68, 1971-76 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு காவல்துறை தலைவராக – ஐ.ஜி.யாகத் திகழ்ந்தவர் எப்.வி.அருள். அக்காலத்தில் டி.ஜி.பி என்னும் பதவி இல்லை. ஐ.ஜி பதவி மட்டுமே இருந்தது.

    ஐ.ஜி-யாக இருந்த எப்.வி.அருள் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கொண்ட; இண்டர்போல் என்னும் பன்னாட்டுக் காவல் நிருவாகத்தில் துணைத் தலைவராக விளங்கித் தமிழ்நாட்டிற்குப் புகழ் சேர்த்தவர். இந்திய காவல்துறை வரலாற்றில் முதன் முதல் நவீனமயமானது தமிழ்நாடு காவல்துறைதான்.

    தமிழ்நாடு காவல்துறை தலைவராகத் திகழ்ந்த எப்.வி.அருள் அவர்கள் எழுதிய போலீஸ் டைரி எனும் நூலில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1969இல் நியமித்த முதல் காவல் ஆணையம் வழங்கிய பரிந்துரைகள் மற்றும் நிதியுதவிகளால் இந்தியாவிலேயே முதன்முதலாக 1971இல் தமிழ்நாடு காவல்துறையை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கின என்று எழுதியுள்ளார். அதன் பிறகுதான் இந்தியாவில் ஒன்றிய அரசிலும், மாநிலங்களிலும் காவல்துறையை நவீனமயமாக்கும் பணிகளைத் தொடங்கினார்கள். அப்போது முதல் தமிழ்நாட்டுக் காவல்துறை இந்தியாவிற்கு வழிகாட்டும் துறையாகவே வளர்ந்து திகழ்ந்து வருகிறது.

    சட்டம் ஒழுங்கை காப்பதில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அரசுத் துறைகள் அனைத்தையும் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். தம்முடைய பொறுப்பிலேயே உள்ள காவல்துறையைச் சீராக வளர்த்துத் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை மிகவும் சிறப்பாகப் பராமரித்து இந்தியா அளவில் தமிழ்நாட்டிற்குப் புகழ் சேர்த்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல் குற்றங்களைத் தடுக்கும் துறையாகச் செயல்பபட வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்புகளின் மேம்பாட்டில், மனித வளர்ச்சிக் குறியீட்டில் என எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

    எனவே, சட்டம் ஒழுங்கை தொடர்ந்து காப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் அதிகமாகக் கூடும் அனைத்து விழாக்களையும் அமைதியான முறையில் நடத்திக்காட்டி வந்துள்ளது. 18 ஆண்டுகளாக நின்று போயிருந்த சிவங்கை கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டத்தை எந்தப் பிரச்சினையும் இன்றி, சுமுகமாக நடத்திக் காட்டியது. அதற்காக அந்தப் பகுதி மக்கள் முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறிப் பாராட்டினார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாக விளங்குவதால் மக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்துள்ளன. எடுத்துக்காட்டாக :

    • 40 இலட்சம் பேர் கூடிய திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா
    • 2 இலட்சம்பேர் பங்கெடுத்த மதுரை சித்திரைத் திருவிழா
    • 8 இலட்சம் பேர் திரண்ட திருச்செந்தூர் சூரசம்ஹாரம்
    • 5 இலட்சம் பேர் கூடிய பழனி தைப் பூசத் திருவிழா
    • 12 இலட்சம் பேர் பங்கேற்ற குலசேகரப்பட்டினம் தசரா
    • 3 இலட்சம் பேர் பங்கேற்ற வேளாங்கண்ணி தேவாலயக் கொடியேற்றத் திருவிழா
    • 20 ஆயிரம்பேர் பங்கேற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா

    உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது நமது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாகப் பராமரிக்கப்படுவதன் அடையாளமாகும். இன்றைக்குத் தமிழ்நாடு வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்றால் அமைதி மிகு மாநிலமாக அது இருப்பதால்தான்.

    முதலைமைச்சர் அவர்கள் காவல் பணியாளர்களின்கொரோனா கால சிறப்புப் பணிகளை பாராட்டி ரூ.58.50 கோடி ஊக்கத்தொகை

    கொரோனா தொற்றுத் தடுப்பில் களப்பணியாற்றிய 1.17 லட்சம் காவல் துறையினருக்கு ஊக்கத்தொகையாகத் தலா ரூ.5,000 வீதம் 58.50 கோடி ரூபாய் வழங்கினார்கள்.

    முதலமைச்சர் அவர்கள் அமைத்துள்ள ஐந்தாவது காவல்ஆணையம்

    காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்திடவும், காவல் பணியாளர்களின் நலன்களைக் காத்திடவும் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாவது காவல் ஆணையம் அமைத்துள்ளார்கள்.

    புதிதாக ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தை நிர்வாக ரீதியாக பிரித்து ஆவடி, தாம்பரம் என இரு புதிய ஆணையரகங்களை உருவாக்கி; அவற்றுக்கு ரூ.44.46 கோடியில் 352 நான்கு சக்கர வாகனங்களையும், 396 இரண்டு சக்கர வாகனங்களையும் வழங்கி அவை மக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை உறுதி செய்யவும், அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யவும், ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களில் புதிதாக சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு, ரூபாய் 1.91 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது.

    முதலமைச்சர் புதியதாக உருவாக்கியுள்ள 58 புதிய மகளிர் காவல் நிலையங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட அனைத்துக் காவல் உட்கோட்டங்களிலும் 39 புதிய மகளிர் காவல் நிலையங்களையும் கோயம்பேடு, கோட்டூர்புரம், புழல் உள்ளிட்ட 19 இடங்களில் புதிய மகளிர் காவல் நிலையங்களையும் ஏற்படுத்தியுள்ளார்.

    முதலமைச்சர் கொண்டாடிய காவல்துறை மகளிர் பொன்விழா

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல் துறையில் மகளிர் காவலர்கள் நியமிக்கப்பட்ட 50-ஆம் ஆண்டு நிறைவையொட்டி 17.3.2023 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்புத் தபால் உறையை வெளியிட்டார்கள். அத்துடன், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'அவள்' (AVAL – Avoid Violence Through Awareness and Learning) திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்கள்.

    முதலமைச்சர் அவர்கள் திறந்த காவலர் குடியிருப்புகள்

    தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படைகளுக்கு 2 ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடங்கள் ஆகியவற்றை 4.1.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். 481.92 கோடி ரூபாய்ச் செலவில் 2,882 காவல்துறை வாடகைக் குடியிருப்புகள் 42.88 கோடி ரூபாய்ச் செலவில் 42 காவல் நிலையங்கள், 84.53 கோடி ரூபாய்ச் செலவில் 14 இதர காவல் துறை கட்டடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

    முதலமைச்சர் காவல்துறைக்கு வழங்கிய புதிய வாகனங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 22.1.2024 அன்று சென்னை பெருநகர காவல் துறையின் பயன்பாட்டுக்காக 25 ஹூண்டாய் கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா, 20 பொலிரோ ஜீப் வாகனங்கள் வழங்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.

    சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை ரூ.2.80 கோடியில் சிறைவாசிகளுக்கான நூலகங்கள் மேம்பாடு

    அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் 14 மாவட்ட சிறைகள், 112 கிளை சிறைகள்/தனிச்சிறைகள்/ திறந்த வெளிச்சிறைகள் ஆகியவற்றில் உள்ள நூலகங்கள் ரூ.2.80 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறை புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக இத்துறை பங்கேற்று 1,00,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறைவாசிகளின் பயன்பாட்டிற்காக நன்கொடையாகச் சேகரிக்கப்பட்டன.

    முதலமைச்சர்கள் சிறைவாசிகளுக்காக வழங்கிய நூல்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் சிறை நூலகங்களுக்கு 1,500 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்படத்தக்கது.

    சிறைக் கட்டடங்களும் குடியிருப்புகளும்

    ரூ.45.26 கோடி செலவில் 94 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

    முதலமைச்சர் அவர்கள் ரூ.26 கோடியில் சிறைவாசிகளுக்கு ஏற்படுத்திய புதிய உணவுமுறை

    முதலமைச்சர் அவர்கள், நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூபாய் 26 கோடி கூடுதல் செலவில் சிறைவாசிகளுக்கான புதிய உணவு முறையை மாற்றியமைத்திட ஆணை பிறப்பித்தார்கள். அதன்படி புதிய உணவுமுறை 5.6.2023 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை

    2021 முதல் 2023 முடிய இத்துறைப் பணியாளர்கள் 61,288 தீ விபத்து அழைப்புகளிலும், 2,57,209 மீட்பு அழைப்புகளிலும் பணியாற்றி 42,224 மனித உயிர்களையும், ரூ.605.06 கோடி மதிப்புள்ள உடைமைகளையும் காப்பாற்றி அரும்பணி புரிந்துள்ளார்.

    ரூ.55.60 கோடியில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தீயணைப்புப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக ரூ.55.62 கோடி செலவில் தலைக்கவசம் மற்றும் காலணியுடன் கூடிய 1850 தீ பாதுகாப்பு உடைகள், 650 மூச்சுக் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய 3500 மீட்பு உடைகள் வாங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

    ரூ.86.83 கோடியில் நவீன வாகனங்கள் மற்றும் உபகரணங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.72.82 கோடி வழங்கி, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறைக்காக 75 புதிய நீர்தாங்கி வண்டிகள், 12 அவசரகால சிறிய மீட்பூர்திகள், 44 பெரும் தண்ணீர் லாரிகள், ஒரு வான்நோக்கி நகரும் ஏணி கொண்ட ஊர்தி, 7 அதி உயரழுத்த நீர்தாங்கி வண்டி, 1 சிறிய நுரைநகர்வு ஊர்தி, 50 ட்ரோன்கள், 4 புகைவெளியேற்றும் கருவி, 21 கோம்பி கருவிகள், ஆட்களை ஏற்றிச் செல்லும் ஊர்திகள் 4 முதலியன கொள்முதல் செய்யப்படுகின்றன.

    ரூ.92.40 கோடியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.45.82 கோடி செலவில் காஞ்சிபுரம், தேனாம்பேட்டை, திருவையாறு, கடமலைக்குண்டு, இராஜபாளையம், செங்குன்றம், மணலி, வண்ணாரப்பேட்டை, சேலம் திருவரங்கம் ஆகிய தீயணைப்பு – மீட்புப் பணி நிலையங்களுக்கும், காஞ்சிபுரத்திற்கும் மற்றும் அம்பத்தூரில் சென்னை புறநகர் மாவட்ட அலுவலகத்திற்கும் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு ஆணையிட்டுள்ளார்கள்.

    மேலும், ரூ. 40.63 கோடி செலவில் செங்குன்றம், போடிநாயக்கனூர், துறையூர், இராணிப்பேட்டை, சிவகாசி, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் அலுவலர்கள், பணியாளர்களுக்கு 173 குடியிருப்புகள் கட்டவும் ரூ.5.95 கோடி செலவினத்தில் திருவல்லிக்கேணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களுக்குப் புதிய கட்டடம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

    ரூ.69.43 கோடியில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள்

    பொதுமக்களின் சிறப்பான சேவைக்கென ரூ. 62.18 கோடி செலவில் திங்கள்நகர், கோவைபுதூர், சின்னமனூர், வாய்மேடு, தெள்ளார், அன்னியூர், திருப்பரங்குன்றம், ஏழாயிரம்பண்ணை, கொளத்தூர், காலவாக்கம், கண்ணமங்கலம், ஆட்டையாம்பட்டி, ஊத்துக்குளி, இளையாங்குடி, வையம்பட்டி, குமராட்சி, நயினார்பாளையம், ஒரகடம், திருவெறும்பூர், இராதாபுரம், ரிசிவந்தியம் ஆகிய 21 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள்ளும் சிவகாசி, ஓசூர், தாம்பரம், இராணிப்பேட்டை ஆகிய 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு நிலையங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. பூந்தமல்லி, கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்கள் ரூ.1.06 கோடி செலவில் மேம்படுத்தப்படுகின்றன.

    ரூ.39.30 கோடி செலவில் மாநில பயிற்சிக் கழகம்

    தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தீயணைப்பு மீட்புப் பணித்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை மேம்படுத்தும் விதமாக ரூ. 39.30 கோடி செலவில் மாநிலப் பயிற்சிக் கழகம் மற்றும் உலகத்தரத்திலான நிகழ்நேர மாதிரி கூடம் ஆகியவற்றை காலவாக்கத்தில் அமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்கள்.

    இவற்றின் வாயிலாக – தமிழ்நாட்டின் காவல்துறை – சிறைத்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் அனைத்தும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் சீர்மிகு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு பருவமழை நோய் பாதிப்பை கண்காணிக்க 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • ஒரு தெருவிலோ, சிற்றூரிலோ 3 நபர்களுக்கும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவக் குழுக்களை அனுப்பி, பரிசோதனை நடைபெறும்.

    சென்னை:

    தியாகராய நகரில் மழைக்கால நோய் தடுப்பு மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மழைக்கால நோய் பாதுகாப்புகள் கட்டுக்குள் இருக்கிறது. 2017-ல் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இருந்தது. 65 பேர் உயிரிழந்தனர்.

    தற்போது சென்னை, கோவை, திருப்பத்தூர், தேனி, தஞ்சை, நெல்லை, நாமக்கல், கிருஷ்ணகிரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் டெங்கு அதிகரிக்க தொடங்கி உள்ளன. அதே போல் உன்னி காய்ச்சல் கடலூர், சென்னை, தஞ்சை மாவட்டங்களிலும், எலி காய்ச்சல் சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும், மஞ்சள் காமாலை சென்னை, திருச்சி, தேனியிலும் கண்டறியப்பட்டுள்ளன.

    கடந்த ஜனவரி 1 முதல் நேற்று வரை தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் 6,566 பேர், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்-390 பேர், புளுயன்சா காய்ச்சல்-56 பேர், எலி காய்ச்சல்-1481 பேர், உன்னி காய்ச்சல்-2,639 பேர், வெறி நாய்கடி-22 பேர், மஞ்சள் காமாலை பாதிப்பு-17,500 பேர்.

    இதில் டெங்கு பாதித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் உரிய நேரத்தில் டாக்டர்களை அணுகாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகுங்கள்.

    வரும் மாதங்களில் வடகிழக்கு பருவமழை நோய் பாதிப்பை கண்காணிக்க 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஒரு தெருவிலோ, சிற்றூரிலோ 3 நபர்களுக்கும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவக் குழுக்களை அனுப்பி, பரிசோதனை நடைபெறும்.

    அப்போது வீடு தோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள 2992 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்து தினமும் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து வருபவர்கள் பற்றிய தகவலை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.

    கேரளாவில் பரவி வரும் நிபா வைரசை தடுக்க எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ., மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தமிழ்ப் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

    சென்னை:

    புதுமைப்பெண் திட்டம் போல உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இந்த திட்டத்தின் பயன்களை எப்படி பெற வேண்டும்? என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அரசுப் பள்ளி (ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம்), அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் மீடியம் மட்டும்) படித்துள்ள மாணவர்கள் தங்களின் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி, பட்டயக் கல்வி ஆகியவற்றை பெறும் காலம் வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

    இந்நிலையில் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    தமிழ் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

    • காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது.
    • மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது.

    இதற்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக இந்த ஆணையங்கள் அவ்வப்போது உத்தரவிட்டு வருகிறது.

    ஆனால் ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா கண்டுகொள்வதில்லை. உரிய நீர் திறந்து விடப்படாததால் இந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ,9 ஆயிரம் கோடியில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது. இதற்கு ஒப்புதல் தருமாறு மத்திய அரசுக்கு கர்நாடகா அனுமதி கேட்டுள்ளது. மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே மேகதாது அணை தொடர்பாக தேனி மாவட்டம் பெரியகுளம் அழகாபுரியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், மத்திய நீர்வள ஆணையத்திடம் சில தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு இருந்தார்.

    அதற்கு நீர்வள ஆணையம் பதில் அனுப்பியுள்ளது. அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பெங்களூருவில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடாவிடம் இருந்து 15-3-2024 அன்று கடிதம் பெறப்பட்டது. அந்த கடிதத்துக்கு 3-5-2024 அன்று பதில் வழங்கப்பட்டது.

    காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எழுதிய கடிதத்தையும் நீர்வள ஆணையம் பெற்றது.

    ஆனால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் இன்று வரை எந்த ஒப்புதலும் வழங்கவில்லை.

    இவ்வாறு நீர்வள ஆணையம் பதில் தெரிவித்து உள்ளது.

    • அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.
    • தமிழ் புதல்வன் திட்ட பணிகளை தீவிரப்படுத்திய தமிழக அரசு.

    6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம்.

    ஆகஸ்ட் மாதம் தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ள இத்திட்டத்திற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ் புதல்வன் திட்ட பணிகளை தீவிரப்படுத்திய தமிழக அரசு கூறியிருப்பதாவது:-

    தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்.

    தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இந்த தகவல் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.

    அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை எடுக்க வேணடும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    அந்த பகுதியில் ஆதார் மையம் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது.
    • தற்போது சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

    சென்னை:

    ரேஷன் கார்டுகள் மூலம் சலுகை விலையில் தமிழக மக்களுக்கு தேவையான அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் விலையில்லா அரிசி மற்றும் சர்க்கரை, பருப்புகள், பாமாயில் ஆகியவை கொடுக்கப்படுகின்றன.

    இதற்கிடையே தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் புதிய 'ஸ்மார்ட் கார்டு'கள் வழங்கும் முறையில் பெரும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. விண்ணப்பித்த 30 நாட்களில் புதிய 'ஸ்மார்ட் கார்டு'கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதே வேளையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, ஸ்மார்ட் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது.

    2021-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் 2 கோடியே 10 லட்சமாக இருந்தது. அதன்பின் 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்து 2 கோடியே 20 லட்சம் ஆனது. தற்போது தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் உள்ளன.

    தற்போது சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

    புதிய கார்டுகள் வழங்கும் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு தெரிவித்து இருந்த நிலையில் தற்போது ஆய்வு பணிகள் தொடங்கியது. இதையடுத்து புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    • வன்னியர் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் தீவிரம் புரியாமல், கால்பந்து போன்று அக்கோரிக்கையை அரசும், ஆணையமும் உதைத்து ஆடுவது கண்டிக்கத்தக்கது.
    • ஆணையத்தின் பதவிக்காலமே இன்னும் 15 மாதங்கள் மட்டும் தான் உள்ளன

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டா் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.50சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இதுவரை காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. இன்னொருபுறம், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க மேலும் ஓராண்டு காலம் தேவை என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வன்னியர் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் தீவிரம் புரியாமல், கால்பந்து போன்று அக்கோரிக்கையை அரசும், ஆணையமும் உதைத்து ஆடுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலமே இன்னும் 15 மாதங்கள் மட்டும் தான் உள்ளன. அதற்குள் வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 12 மாதங்கள் கூடுதல் காலக்கெடு கோருவது தமிழ்நாடு அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இணைந்து நடத்தும் காலம் தாழ்த்தும் நாடகமாகவே தோன்றுகிறது.

    தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக உச்சநீதிமன்றம் வகுத்துத் தந்த பாதை தெளிவாக கண்களுக்குத் தெரிகிறது. அந்தப் பாதையில் பயணிப்பதற்கு பதிலாக இடது புறத்தில் திரும்பலாம் என தமிழக அரசும், வலதுபுறத்தில் திரும்பலாம் என பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் மீண்டும், மீண்டும் தவறாக வழி நடத்திக் கொண்டிருக்கக் கூடாது.

    வன்னியர்களின் வரமான இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர்களும் தயாராகவே உள்ளனர். அதற்கு இடம் கொடுக்காமல், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் இருந்து விரைவாக பெற்று, சட்டமியற்றி வன்னியர்களுக்கான சமூகநீதியை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
    • கட்டணங்கள் அனைத்தும் சுய சான்று மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    சென்னை:

    தமிழகத்தில் 2500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி வரையில் தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் என கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயசான்று அடிப்படையில் இணைய வழி கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சதுர அடிக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சதுர அடிக்கு ரூ.15 முதல் ரூ.100 வரையில் உள்ளாட்சி அமைப்புகளின் தரநிலைக்கு ஏற்ப இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வளர்ச்சி கட்டணம், கட்டிட லைசென்சு கட்டணம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல நிதி, சாலை சேதம் சீரமைப்பு கட்டணம் என அனைத்து அடங்கிவிடும்.

    சென்னை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். சிறப்பு நிலை ஏ மாநகராட்சிகளான மதுரை, கோவை, திருப்பூரில் சதுர அடிக்கு ரூ.88 ம், சிறப்பு நிலை பி மாநகராட்சிகளான தாம்பரம், சேலம், திருச்சியில் சதுர அடிக்கு ரூ.84-ம், தேர்வு நிலை மாநகராட்சிகளான ஆவடி, நெல்லை, வேலூர், தூத்துக்குடி, ஈரோட்டில் சதுர அடிக்கு ரூ.79ம், தஞ்சை, நாகர்கோவில், ஓசூர், கடலூர், கரூர், கும்பகோணம், திண்டுக்கல், சிவகாசி, காஞ்சிபுரத்திற்கு சதுர அடிக்கு ரூ.74-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    நகராட்சிகளை பொறுத்தவரை, 45 சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.74 ம், நிலை-1, நிலை-2 என 93 நகராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.70-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். பேரூராட்சிகளை பொறுத்தவரை 62 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.70-ம், 179 தேர்வு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.65-ம், 190 நிலை -1 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.55-ம், நிலை-2 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.45-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளை பொறுத்தவரை, சி.எம்.டி.ஏ. எல்லைக்குள் உள்ள நகர் கிராம ஊராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.27-ம், இதர பகுதிகளில் நகர் கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.25-ம், சி.எம்.டி.ஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுர அடிக்கு ரூ.22-ம், இதர 11 ஆயிரத்து 791 கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.15-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் அனைத்தும் சுய சான்று மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.

    ×