search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நரபலி"

    • அது ஆண் உடலா? பெண் உடலா? என்பதை கண்டுபிடிப்பதிலும் போலீசாருக்கு குழப்பமாக உள்ளது.
    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவனாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தை நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வருகிறார். நேற்று தோட்டத்தில் வேலை பார்க்கும் ஒருவர் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது தோட்டத்தின் ஒரு பகுதியில், எலும்பு கூடுகள் துண்டு துண்டாக கிடந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சியான அந்த நபர், சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.பாலாஜி, காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.

    அப்போது தோட்டத்தில் சிதைந்த நிலையில் மனித சடலம் கிடந்தது. கை, கால், தலை மற்றும் உடல் பகுதிகள் அனைத்தும் துண்டு, துண்டாக அழுகிய நிலையில் கிடந்தது.

    இதையடுத்து போலீசார் மனித உடலை மீட்டு விசாரித்தனர். மேலும் கோவையில் இருந்து மோப்பநாய் வீராவும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீரா தோட்டத்தில் இருந்து சிறிது தூரம் விரட்டி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இது தொடர்பாக தடயவியல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து, சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

    இந்த சம்பவம் தொட ர்பாக காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தோட்டத்தில் மீட்கப்பட்ட உடல், மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுவதால், அது ஆண் உடலா? பெண் உடலா? என்பதை கண்டுபிடிப்பதிலும் போலீசாருக்கு குழப்பமாக உள்ளது.

    தொடர்ந்து போலீசார் தோட்டம் முழுவதும் அலசி ஆராய்ந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது உடல் கிடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு கல் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.

    அந்த கல்லை சுற்றிலும் விளக்குகளும் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த கல் முழுவதும் ரத்தக்கறையாகவும் இருந்தது. இதனால் மர்மநபர், யாரையாவது அழைத்து வந்து நரபலி கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    மேலும் அந்த கல்லில் இருந்த ரத்தம் மனித ரத்தமா? அல்லது கோழியின் ரத்தமா? என்பதை உறுதிபடுத்துவதற்காக, அதில் இருந்த ரத்த மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்காக கோவையில் உள்ள பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் வந்த பின்னரே நரபலி கொடுக்கப்பட்டதா என்பது தெரியவரும்.

    மனித உடல் கிடந்த இடத்தில் காலணி ஒன்றும் கிடந்தது. அதனையும் போலீசார் மீட்டுள்ளனர். அதனை வைத்து விசாரணையாது நடக்கிறது. இதுதவிர அண்மையில் யாராவது காணாமல் போய் உள்ளனரா? என்பதை அறிந்து கொள்வதற்காக கோவை மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ள காணாமல் போனவர்களின் தகவல்களை சேகரித்தும் விசாரித்து வருகின்றனர். கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நீலகிரி, திருப்பூர் பகுதி போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக தனிப்ப டையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தோட்டத்தில் மனித உடல் மீட்கப்பட்டதும், அங்கு நரபலி கொடுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதும் காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தனக்கு தெரிந்த மந்திரவாதியிடம் சென்று தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அங்கங்கே கடன் வாங்கி நிம்மதி இல்லாமல் இருப்பதாக கூறினார்.
    • வீட்டிற்கு வந்த வேணுகோபால் மகளை நரபலி கொடுப்பது சம்பந்தமாக மனைவியிடம் ஆலோசனை நடத்தினார். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருக்கு மனைவி மற்றும் இரட்டை பிறவியில் பிறந்த 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு பெண் குழந்தையின் பெயர் புணர்விகா (வயது 3). வேணுகோபால் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். கொரோனா காலத்தில் வேணுகோபாலுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் வேணுகோபால் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கினார். கடனை கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டு வற்புறுத்தினர். மேலும் தொடர்ந்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார்.

    இந்த நிலையில் தனக்கு தெரிந்த மந்திரவாதியிடம் சென்று தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அங்கங்கே கடன் வாங்கி நிம்மதி இல்லாமல் இருப்பதாக கூறினார். அதற்கு மந்திரவாதி குழந்தைகள் யாரையாவது நரபலி கொடுத்தால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் தொல்லை நீங்கிவிடும் என தெரிவித்தார். இதனை உண்மை என நம்பிய வேணுகோபால் தனது 2 மகள்களில் ஒருவரை நரபலி கொடுப்பது என முடிவு செய்தார்.

    வீட்டிற்கு வந்த வேணுகோபால் மகளை நரபலி கொடுப்பது சம்பந்தமாக மனைவியிடம் ஆலோசனை நடத்தினார். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து நேற்று மாலை மகளை நரபலி கொடுப்பதற்கான பூஜை ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. இரவு 11 மணி அளவில் புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சிறுமியின் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க முயன்றனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த புணர்விகா கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு ஓடிவந்தனர். அவர்கள் அங்கு கண்ட காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பெற்றோர்களிடம் இருந்து சிறுமியை மீட்டனர். வேணுகோபாலை அங்குள்ள கட்டிலில் கட்டி அறையில் போட்டு பூட்டினர்.

    இதுகுறித்து அத்மகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் ரேணுகோபாலை கைது செய்து விசாரணை நடத்தியதில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தனது மகளை நரபலி கொடுத்தால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என தனக்கு தெரிந்த மந்திரவாதி கூறியதால் மகளை நரபலி கொடுக்க முயன்றதாக தெரிவித்தார்.

    மேலும் சிறுமியின் தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×