என் மலர்tooltip icon

    இந்தியா

    மூட நம்பிக்கைக்கு அளவே இல்லையா?- மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு பேரனை நரபலி கொடுத்த தாத்தா
    X

    மூட நம்பிக்கைக்கு அளவே இல்லையா?- மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு பேரனை நரபலி கொடுத்த தாத்தா

    • பிரயாக்ராஜில் உள்ள கரேலியில் பதுங்கி இருந்த சரண்சிங்கை போலீசார் கைது செய்தனர்.
    • எனது குடும்பத்துக்கு யாரோ கெடுதல் செய்து இருப்பதால்தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று சிலர் கூறினர்.

    உலகம் நாகரிக வளர்ச்சி அடைந்தாலும், மூடநம்பிக்கையில் இருந்து இன்னமும் ஒரு சிலர் விடுபடவே இல்லை என்பதற்கு உதாரணமாக நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் காமினி, இவருடைய மகன் பியூஷ் (வயது 17), அங்குள்ள சரஸ்வதி வித்யா மந்திரி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற பியூஷ் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த காமினி, தனது மகனை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பியூஷை தேடிவந்தனர்.

    இந்தநிலையில் அங்குள்ள ஒரு ஓடையில் துண்டிக்கப்பட்ட தலை கிடப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று, அந்த தலையை மீட்டனர். பின்னர் அதே ஓடையின் வெவ்வேறு பகுதிகளில் மற்ற உடல் பாகங்கள் தனித்தனியாக கிடந்தன. அவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

    கைப்பற்றப்பட்ட உடல்பாகங்களையும், காமினி கூறிய அடையாளத்தையும் வைத்து போலீசார் ஒப்பிட்டு பார்த்தபோது, அது மாயமான மாணவர் பியூஷ் என்பதை உறுதி செய்தனர்.

    பின்னர் நடத்திய விசாரணையில், யாரோ ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் துணியால் சுற்றப்பட்ட எதையோ அந்த ஓடையில் வீசிச்சென்றதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறிய அடையாளத்தை வைத்து, அதே பகுதியை சேர்ந்த சரண்சிங் என்பவரை போலீசார் தேடினர். அவருடைய தம்பியின் பேரன்தான் பியூஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    பிரயாக்ராஜில் உள்ள கரேலியில் பதுங்கி இருந்த சரண்சிங்கை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் தனது தம்பியின் பேரனை கொன்றதை ஒத்துக்கொண்டார்.

    பின்னர் போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

    என்னுடைய மகன் கடந்த 2023-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டு என்னுடைய மகளும் தற்கொலை செய்து கொண்டனர்.

    எனது குடும்பத்துக்கு யாரோ கெடுதல் செய்து இருப்பதால்தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று சிலர் கூறினர். இதனால் அதனை சரிசெய்ய உள்ளூரில் இருக்கும் மந்திரவாதி ஒருவரை சந்தித்தேன். அவர் உனது தம்பியின் பேரனால்தான் உனக்கு இந்த துன்பம் நேர்ந்துள்ளது. அவனை கொன்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.

    அவரது ஆலோசனைப்படி பியூசை நரபலி கொடுக்க முடிவு செய்தேன். இதையடுத்து பியூசை கடத்தி, அவனது தலையை துண்டித்து கொன்றேன். பின்னர் உடல் பாகங்களையும் துண்டு, துண்டாக வெட்டி ஓடையில் வீசினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து சரண்சிங்கை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நரபலி சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×