என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்- தமிழக அரசு அறிவிப்பு
    X

    கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்- தமிழக அரசு அறிவிப்பு

    • இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், தேவாங்கு இனத்தை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டு உள்ளது.
    • கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11,806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகள், தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையானது, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11 ஆயிரத்து 806 ஹெக்டேர் நிலத்தை இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கை செய்துள்ளது.

    தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். அவை மரவகை இனத்தைச் சார்ந்தது. தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம் விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன. இந்த இனங்கள் சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.

    இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், தேவாங்கு இனத்தை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டு உள்ளது. இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் இவைகளுக்கான அச்சுறுத்தல்களை தணித்தல் ஆகியவற்றின் மூலமே இவைகளின் எண்ணிக்கையை பெருக்க இயலும். அழிந்து வரும் இந்த தேவாங்குகள் இனத்தை பாதுகாக்க தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11,806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகள், தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

    "இந்தியாவில் தேவாங்குகளுக்கான முதல் வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படும்" என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டதை செயல்படுத்தும் வகையில், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11 ஆயிரத்து 806.56 ஹெக்டேர் (ஏழு பிளாக்குகளில்) பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக "கடவூர் தேவாங்கு சரணாலயம்" அமைத்து தமிழ்நாடு அரசு அறிவிக்கை செய்துள்ளது.

    இதுதவிர பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, பாக் வளைகுடாவில் இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகத்தை அறிவிக்கை செய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் கழுவேலி பறவைகள் சரணாலயத்தை அறிவிக்கை செய்தது. அகத்தியர் மலை யானைகள் பாதுகாப்பகம் அறிவிக்கை செய்தது. திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தை அறிவிக்கை செய்தது.

    மிகக் குறுகிய 15 மாத காலத்தில் எடுக்கப்பட்ட இந்த புதுமையான முயற்சிகள் வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகளில், தமிழ்நாட்டுக்கு ஒரு உன்னத இடத்தை அளித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×