என் மலர்
நீங்கள் தேடியது "perambalur"
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.
எனவே விவசாயிகள் அன்றைய தினம் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.
இத்தகவலை கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமை தாங்கி மின் நுகர்வோர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், விவசாயிகளின் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் ஒரு மனு கொடுத்தார். அதில், மின்நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாய மின் இணைப்பு கேட்டு கடந்த 2000-ம் ஆண்டு மனு செய்து 18 ஆண்டுகளாக காத்திருக்கும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதற்காக மின் இணைப்பு கிடைக்கவில்லை என்ற காரணங்களை அதிகாரிகள் தெரிவித்து, அவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தி கூறப்பட்டிருந்தது. இதேபோல் விவசாயிகள், மின்நுகர்வோர்கள் பலர் மேற்பார்வை பொறியாளரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாநில சார்பு அணி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் நல்லதம்பி, மாநில மகளிர் அணி செயலாளர் மாலதி, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பன்னீர்செல்வம், மாநில நெசவாளர் அணி செயலாளர் கோதை மாரியப்பன், மற்றும் அந்தந்த அணி நிர்வாகிகள் துணைச் செயலாளர்கள் கலந்து கொண்டு பெரம்பலூர், மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுகள் மேற் கொண்டனர்.
நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கண்ணுசாமி, பெரம்பலூர் நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தவசி அன்பழகன், சிவா அய்யப்பன், மலர்மன்னன், பொன் சாமிதுரை, மாவட்ட துணை செயலாளர் சங்கர், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நீர்நிலைகள் மற்றும் வளிமண்டல சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கவும் தமிழக அரசு பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை ஜனவரி 1-ந் தேதி முதல் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை செய்து உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அரசின் உத்தரவை அமல்படுத்துவதை உறுதி செய்யும் விதமாக ஓட்டல்களில் சாப்பாடு, கலவைசாதங்கள், டிபன் வகைகளை மடித்து தருவதற்கு பட்டர் பேப்பருக்கு பதிலாக வாழை இலைகள் மற்றும் காகிதங்கள் பயன்படுத்தப்பட்டன. சாம்பார் சட்னி ஆகியவற்றை வினியோகிக்க அலுமினியம் பாயில் தாள்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிறு, சிறு கவர்கள் பயன்படுத்தப்பட்டன. பிளாஸ்டிக் கேரி பைகளுக்கு பதிலாக ஓவன் கேரி பைகள் வினியோகிக்கப்பட்டது.பெரம்பலூரை பொறுத்தவரையில் முதல் நாளன்றே பெரும்பாலான ஓட்டல்கள் அரசின் கொள்கை முடிவை முழுமையாக கடைபிடித்தன. அதேபோல பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் கப் விற்பனைக்கு பதிலாக பேப்பர் கப் விற்பனை செய்யப்பட்டது. பிளாஸ்டிக் கேரி பைகள் விற்பனை தடை செய்யப்பட்டதால், பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடைகளில் வியாபாரம் வெகுவாக குறைந்திருந்தது.
இதனிடையே பெரம்பலூர் நகரில் அனைத்து வியாபாரிகள், பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகள் பயன்பாட்டை அதிகரிக்க செய்யவும், ஓட்டல்கள், உணவுப்பொருட்கள், இறைச்சி வாங்க செல்லும்போது பாத்திரங்களை கொண்டு செல்வதற்காக வணிகர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசார இயக்கம் நேற்று நடத்தப்பட்டது.பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கிய இந்த பிரசார இயக்கத்தை அதன் தலைவர் சத்யா நடராஜன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொது செயலாளர் நல்லதம்பி, மாவட்ட அவைத்தலைவர் தனபால், துணைதலைவர் முகமது ரபீக், பொருளாளர் விநாயகா ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பழைய பஸ் நிலையம், சூப்பர் பஜார்தெரு, பால் நிலையத்தெரு, பள்ளிவாசல் தெரு, கடைவீதி போன்ற பகுதிகளில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். #tamilnews
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தேவையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை. இவரது மனைவி கோவிந்தம்மாள்(வயது 30). இந்த தம்பதிக்கு ரஞ்சிதா (6) என்ற மகளும், பிரினித்தா என்ற 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பிச்சைபிள்ளை துபாயில் கூலி வேலைசெய்து வருகிறார். ரஞ்சிதா தேவையூர் பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று பிரினித்தாவுக்கு வெள்ளி கொலுசு வாங்குவதற்காக கோவிந்தம்மாள், குழந்தையை தூக்கிக்கொண்டு பெரம்பலூருக்கு புறப்பட்டார். பெரம்பலூர் சென்ற ஒரு அரசு பஸ்சில் கோவிந்தம்மாள் குழந்தையுடன் பயணம் செய்தார். பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தபோது, பஸ்சில் இருந்து கோவிந்தம்மாள் சுயநினைவின்றி கீழே இறக்கி விடப்பட்டார்.
பின்னர் அவர் தன்னை அறியாமல் நடந்து சென்றார். இதனை கண்ட அவருக்கு தெரிந்த நபர்கள் கோவிந்தம்மாளை நிறுத்தி, அவர் முகத்தில் தண்ணீரை தெளித்தனர். இதனால் சுயநினைவுக்கு வந்த அவர், பிரினித்தாவையும், வெள்ளி நகைகள் வாங்க வைத்திருந்த ரூ.5 ஆயிரம் இருந்த மணி பர்சு, விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றையும் திருடு போனதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து புகார் அளிக்க சென்ற கோவிந்தம்மாளிடம் போலீசார் புகாரினை பெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த அவரது உறவினர்கள் நேற்று இரவு பெரம்பலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவிந்தம்மாளிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் பஸ்சில் தனது அருகே அமர்ந்து பயணித்த பெண், தன் மீது மயக்க மருந்து தெளித்ததாகவும், பின்னர் தான் சுயநினைவை இழந்ததும் பணம், செல்போனை திருடிக் கொண்டு, எனது குழந்தையையும் கடத்திச்சென்று விட்டார் என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதற்கிடையே ஓடும் பஸ்சில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது கோவிந்தம்மாளின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் இருந்தே விசாரணையை தொடங்கினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்.
இதனால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கினர். அப்போது குழந்தை பிரினித்தாவை கொலை செய்து கிணற்றில் வீசியதாக கூறியுள்ளார். இதனால் அங்கு நின்ற அவரது உறவினர்கள் உட்பட அனைவரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
பின்னர் இது குறித்து கோவிந்தம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
தனது கணவர் பிச்சைபிள்ளை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதனால் தன்னையும், குடும்பத்தையும் கவனிக்காமல் விட்டுவிட்டார். இதனால் இரு குழந்தைகளையும் வளர்க்க சிரமமாக இருந்தது.
இதனால் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தேன். அப்போது தனது மூத்த மகள் ரஞ்சிதாவை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு, கைக் குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு பெரம்பலூர் அருகே உள்ள வாடிகண்டபுரம் பகுதிக்கு சென்றேன். அங்குள்ள ஒரு கிணத்தில் குழந்தையை வீச முடிவு செய்தேன். ஆள் நடமாட்டம் இல்லாததை பார்த்து குழந்தையை தண்ணீரில் வீசி எறிந்தேன்.
சிறிது நேரம் தண்ணீரில் தத்தளித்த குழந்தை நீரில் மூழ்கியது. அதன்பின்னர் அங்கிருந்து கிளம்பி பஸ்சில் பெரம்பலூருக்கு திரும்பினேன். பின்னர் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்படும் என்பதால் செய்வதறியாது திகைத்தேன். இதனால் குழந்தையை கடத்தியதாக நாடகமாட முடிவு செய்தேன். அதன்படி தன்மீது பேருந்தில் பயணித்த பெண் மயக்க மருந்து தெளித்து, குழந்தை மற்றும் உடமைகளை திருடி சென்றதாக புகார் அளித்தேன். தற்போது போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்டேன் என கூறினார்.
கோவிந்தம்மாள் குழந்தையை கொன்று வீசியதாக கூறிய வாடிகண்டபுரம் கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள கிணற்றில் பச்சிளம்குழந்தை பிரினித்தா பிணமாக தண்ணீரில் மிதந்தது. பின்னர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் குழந்தையை மீட்டனர்.
மேலும் கோவிந்தம்மாள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தையை கொலை செய்தாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி முன்னிலை வகித்தார். ஆலத்தூர் வட்டாட்சியர் ஷாஜகான் வரவேற்றார். முகாமில் மாவட்ட கலெக்டர் சாந்தா, அல்லிநகரம் பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து விபரங்களை கேட் டறிந்து பொது மக்களிடம் எடுத்துக்கூறினார். தொடர்ந்து இம்முகாமில் 286 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 74 லட்சத்து 52 ஆயிரத்து 995 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.
இந்த முகாமில் கோட்டாட்சியர் விஷ்வநாதன், வட்ட வழங்கல் அலுவலர் பழனி செல்வன், வருவாய் ஆய்வாளர் பெரியண்ணன், சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் கிருஷ்ணராஜ், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, தாட்கோ உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தனித்துணை கலெக்டர் மனோகரன் நன்றி கூறினார்.
வங்கக்கடலில் உருவான ‘கஜா‘ புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினம் அருகே கரையை தொட்டது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகப்பட்டினம்- வேதாரண்யம் இடையே நேற்று காலை கரையை கடந்தது. புயல் கரையைக்கடக்கும் போது நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கஜா புயலால் பெரம்பலூர் மாவட்டத்துக்கு பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும், அதன்பாதிப்பு பெரம்பலூர் பகுதியில் எதிரொலித்தது. புயலின் தாக்கத்திற்கான அறிகுறி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையே தெரிந்தது.
அப்போதே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவில் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. கஜா புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இந்த மழை விட்டு, விட்டு அதிகாலை வரை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கின. தொடர்ந்து காலையில் மழை தூறிக்கொண்டிருந்தது. அவ்வப்போது சடசடவென மழையுடன் ஆரம்பித்து, சில நிமிடங்களில் நின்று போவதும், பின் மழை பெய்வதுமாக இருந்தது.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மழைகோட்டு அணிந்து சென்றதை காண முடிந்தது. நேற்று மதியம் வரை வானில் மேகங்கள் சூழ்ந்ததால் பகல் பொழுது இரவு போலவே இருள் சூழ்ந்து காணப்பட்டதுடன் குளிர்ந்த காற்று வீசியது. பகலில் காற்றின் வேகம் குறைவாகவே இருந்தது. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர். மேலும் மழையில் பொதுமக்கள் குடைபிடித்தபடியே சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பெய்யும் போது, இடை, இடையே சூறாவளி காற்று சுழன்றடித்ததால் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் சாய்ந்து கீழே விழுந்தன.
இந்நிலையில் பெரம்பலூர் குரும்பலூர் பகுதியை சேர்ந்த விவசாயி பால்ராஜ்(வயது 48) என்பவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் சுமார் 1½ ஏக்கர் பரப்பளவில் பூவண் ரக வாழை சாகுபடி செய்து இருந்தார். தற்போது இந்த வாழைகள் குலை தள்ளிய நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடை செய்யும்நிலையில் இருந்தது. ஆனால் நேற்று அதிகாலை சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், ஏராளமான வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்தன. சூறாவளி காற்றால் சாய்ந்த வாழைகளுக்கு அரசு உரிய நிவாரண வழங்க வேண்டும் என விவசாயி பால்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இரவில் மழை பெய்யும் போது, இடையே மின்சாரம் தடைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வேப்பந்தட்டை அருகே அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவகுடி அணையில் நேற்று பெய்த மழையால் மழைநீர் தேங்கியுள்ளது.
வேப்பந்தட்டை மலையாளப்பட்டியில் காற்று வீசியதில் 6 மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதையடுத்து அந்தப்பகுதியில் மின்சார ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து, சாய்ந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
மங்களமேடு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி ஆய்வு செய்தார்.
தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு நேரம் நிர்ணயித்தது. இந்த உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோளும் விடுத்திருந்தது.
தீபாவளி அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. ஆயிரம் அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் போலீசார் சார்பில் இதுதொடர்பாக கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளி அன்று பெரம்பலூர் கணபதி நகரில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி மதியம் பட்டாசு வெடித்ததாக, அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 35), சங்கர்(22) ஆகிய 2 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறியும், தமிழக அரசு பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் பட்டாசு வெடித்ததாகவும் பாடாலூர், அரும்பாவூர், கை.களத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா 2 பேர் மீதும், மங்களமேடு, வி.கைகாட்டி, குன்னம் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காகவும், இனிப்பு வகைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ்தெரு, சூப்பர் பஜார், பள்ளிவாசல் தெரு, பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதியபடி இருக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியிலும், தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலான சாலையில் திடீரென பட்டாசு கடைகள், இனிப்பு கடைகள் ஏராளமாக ஆரம்பிக்கப்பட்டு விற்பனை தொடங்கியுள்ளது. மேலும் ஜவுளிக்கடைகளிலும் புது ஆடை வாங்குவதற்காக கூட்டம் அலைமோதுகிறது.
பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தரைக் கடைகளாக ஜவுளிக்கடைகள் ஏராளமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு வியாபாரிகள் ஆடைகளை கூவி, கூவி... விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் பொதுமக்கள் பேரம் பேசி ஆடைகளை வாங்கி சென்றதை காணமுடிந்தது. தீபாவளி பண்டிகைக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சிலர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு பொருட்களை வாங்கி செல்கின்றனர். வெளியூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்பவர்கள் தீபாவளிக்காக முன்னதாக விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு செல்வதால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பெரம்பலூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதே போல் அரியலூர் புதுமார்க்கெட் வீதி, எம்.பி.கோவில் தெரு, சின்னகடை தெரு, பெரியகடை தெரு உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் ஜவுளி எடுப்பதற்காகவும், தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதற்காகவும் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. மக்களின் கூட்டத்தை பயன்படுத்தி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கடைவீதிகளில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட்டு போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.