search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள்"

    • கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
    • போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 13-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அதியமான் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சட்ட விரோதமாக மது விற்பனையும், லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இத்தொடர்பாக அதிகாரிகளிடமும் மனுவும் அளித்து இருந்தனர். எனினும் அந்தப் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனையும், மது விற்பனையும் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை அதியமான் நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென ஈரோடு-பவானி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை நேரம் என்பதால் பள்ளிகளுக்கு, அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே 24 மணி நேரமும் மது விற்பனையும், சட்டவிரோத மாக லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது. மது குடித்து வரும் நபர்களால் எங்கள் பகுதியை சேர்ந்த பெண்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

    மேலும் கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. எனவே மது விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைப்போல் எங்கள் பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றனர்.

    இதனை அடுத்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு இருந்தது.

    • குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
    • உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் சாலையிலிருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் முன்பாகவே சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நேற்று இரவு பணிகள் மேற்கொண்ட போது சுமார் 2000 வீடுகளுக்கு செல்லக்கூடிய 8 மெயின் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டது. அந்த உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் 44 வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் கிடைத்ததும் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் கூறும்போது, நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்படுவதாகவும் இதனால் கடந்த ஒரு மாத காலமாக முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட நெடுஞ்சாலை துறையினர் கண்டும் காணாமல் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே நிலை தொடருமானால் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

    • கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
    • முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீா் வசதி பெற்று வருகின்றன.

    குடிநீா் மற்றும் பாசன தேவைகளுக்காக அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் அமராவதி அணையில் இருந்து வெளியேறிய சில முதலைகள் கரையோரத்தில் நடமாடி வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். மேலும் உடுமலையை அடுத்துள்ள கொழுமம் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடி அருகே பெரிய முதலை சாலையில் ஊா்ந்து சென்றுள்ளது. இதனைப்பார்த்த இளைஞர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    அதனைப்பார்த்த கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:- அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. வழக்கமாக பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும்போது அணையில் உள்ள முதலை கள் பிரதான ஷட்டா் வழியாக அமராவதி ஆற்றில் சென்று விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம்.

    முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    • இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட நடப்பாண்டில் 6 சதவீதம் அளவுக்கு குறைவாக பெய்திருந்தது. இதனால் தற்போதே மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் வழக்கமாக மார்ச் மாதம் 15-ந் தேதிக்கு மேல் கோடை வெயில் அதிக அளவில் இருக்கும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் உச்சத்தை அடையும், அப்போது மதிய நேரங்களில் அனல் பறக்கும், இதனால் பொது மக்கள் சாலைகளில் நடமாட்டம் குறைந்து வீட்டில் முடங்குவார்கள்.

    ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக சேலத்தில் 96.8 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. படிப்படியாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.

    இதனால் பொது மக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். நேற்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. மாலை 5.30 மணி வரை வெயில் வாட்டி வதைத்ததால் பொது மக்கள் வீடுகளில் முடங்கினர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கம்பங்கூழ், மோர், தர்பூசனி, இளநீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகி பொது மக்கள் வெப்பத்தை தணித்து வருகிறார்கள். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

    சேலம் சத்திரம் உள்பட பல பகுதிகளில் திண்டிவனம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் தர்பூசனி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

    இது குறித்து வானிலை அதிகாரிகளிடம் கேட்ட போது, வழக்கத்தை விட இந்தாண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது பனிப்பொழிவு இருப்பதால் சற்று வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் வெயிலின் உக்கிரம் மேலும் அதிகரிக்கும், மழை வந்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சைக்கோ ஆசாமி ஒருவர் உருட்டு கட்டையால் தாக்கும் சம்பவம் துரைப்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
    • மர்ம ஆசாமியை பிடிக்கும் வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் ஓ.எம்.ஆர். சாலையில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு பணிபுரிபவர்கள் துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்கள். பெண் ஊழியர்கள் பலர் விடுதிகளில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

    அவர்கள் தங்களின் அலுவலகங்களுக்கு, வீடுகள் மற்றும் விடுதிகளில் இருந்து நடந்து செல்வது வழக்கம். தூரத்தில் வசிப்பவர்கள் வாகனங்களில் வந்து பஸ் நிறுத்தத்தில் இறங்கி அலுவலகங்களுக்கு நடந்து செல்வார்கள். இப்படி நடந்து செல்பவர்களை 50 வயது மதிக்கத்தக்க சைக்கோ ஆசாமி ஒருவர் உருட்டு கட்டையால் தாக்கும் சம்பவம் துரைப்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த சைக்கோ ஆசாமி, துரைப்பாக்கம் 200 அடி சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தோழிகளுடன் நடந்து சென்ற சுவேதா (வயது 25) என்ற பெண்ணை அந்த சைக்கோ ஆசாமி உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பி ஓடினார். அவருடன் வந்த தோழிகளும் தப்பி ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்கள் துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சைக்கோ ஆசாமி நின்று கொண்டிருந்தார். அவரிடம் இருந்து உருட்டுக்கட்டையை பறித்துக்கொண்டு அவரை அங்கிருந்து விரட்டினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செம்மஞ்சேரியை சேர்ந்த குமரன் என்பவர் துரைப்பாக்கத்தில் இருந்து நீலாங்கரைக்கு செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே மர்ம ஆசாமி உருட்டுக்கட்டையால் குமரனை தாக்க முயற்சித்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். இந்த சைக்கோ ஆசாமி பற்றிய தகவல் தற்போது துரைப்பாக்கம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் துரைப்பாக்கம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகிறார்கள்.

    எனவே போலீசார் மற்றும் அதிகாரிகள், அந்த சைக்கோ ஆசாமியை பிடித்து மனநல காப்பகத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த மர்ம ஆசாமியை பிடிக்கும் வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொது மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

    • வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழகத்தில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • இன்னும் 15 நாட்களுக்கு பூண்டு விலை குறையாது.

    நாகர்கோவில்:

    தமிழ்நாட்டில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாலும், அளவில் சற்று பெரியது என்பதாலும் இல்லத்தரசிகள் அதிகம் விரும்புவார்கள்.

    இதுபோக, தமிழகத்தின் தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழகத்தில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. உற்பத்தி குறைந்த தால், அதன் விலையும் கிலோவுக்கு ரூ.150 அதிகரித்து, ரூ.350 வரை விற்பனை செய்யப் பட்டது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்தும் குறைந்துள்ளதால், அதன் விலை மேலும் அதிக ரித்துள்ளது. அந்த வகையில் நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ பூண்டு ரூ.420 வரை விற்பனை செய்யப்பட்டது. அதாவது சிறிய பூண்டு கிலோ ரூ.250-க்கும், நடுத்தர பூண்டு கிலோ ரூ.350-க்கும், பெரிய பூண்டு கிலோ ரூ.420-க்கும் விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதே சமயம் நாகர்கோவிலில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்னும் 15 நாட்களுக்கு பூண்டு விலை குறையாது என்றும், அதன்பிறகு புதுப்பூண்டு வெளி மாநிலங்களில் இருந்து வர தொடங்கியதும் அதன் விலை குறையதட தொடங்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல சீரகம் ரூ.480, மல்லி-ரூ.99, மிளகு ரூ.660, கடலை பருப்பு ரூ.72 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காய்கறி வரத்து சீராக இருப்பதால் காய்கறிகள் விலை கூடவோ குறையவோ இல்லை.

    • ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
    • உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம் பட்டினம், தாழங்குடா, அக்கரைகோரி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிரா மங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி பரபரப்பாக காணப்பட்டு வரும். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியா பாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும்.

    அதன்படி ஞாயிற்றுக் கிழமையான இன்று அதிகாலை முதலே துறைமுகத்தில் மீன் விற்பனை தொடங்கியது. வழக்கமாக 250 ரூபாய்க்கு விற்கப்படும் சங்கரா மீன் இன்று 450 ரூபாய்க்கும், சீலா மீன் 400 ரூபாய்க்கும், பாறை மீன் 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைக்கும், வஞ்சிரம் மீன் 800 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்படும் கானாங்கத்தை கிலோ 200 ரூபாய்க்கும், 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படும் நெத்திலி மீன் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீன் விலை அதிகரித்து காணப்பட்டாலும் விலை யை பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், பொது மக்களும் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

    • நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    விஜயகாந்த் மரணம் அடைந்து ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் அவரது நினைவிடத்தில் தினமும் பொதுமக்களும் தே.மு.தி.க. தொண்டர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விலை உயர்ந்த மாலைகளை வாங்கி வைத்து விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி அஞ்சலி செலுத்த வரும் பொது மக்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அதனை தங்களது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

    இதன் மூலம் விஜயகாந்த் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருவது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தொடர்ச்சியாக பொதுமக்கள் நேரில் வந்து விஜயாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இது எங்களுக்கு நெகழ்ச்சியாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.

    விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும் அதுதான் தற்போது வெளிப்பட்டு வருவதாகவும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    • எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 3 மாவட்டங்களிலும் இன்று காலை வரையிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை, பாளை ஆகிய இடங்களில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லையில் 13 மில்லி மீட்டர் பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பெய்தது .

    118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது 116 அடி நீர் இருப்பு உள்ளது. பிரதான பாபநாசம் அணையில் 135 அடி நீர் இருப்பு இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 148 அடியாக உள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு சில இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஆரம்ப கட்ட நிலையிலேயே விவசாயிகள் நல் நடவு செய்தனர். இதன் காரணமாக அவை கதிர் உண்டாகும் நிலையில் உள்ளது. அவை இன்னும் ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை நேற்று அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. மாலை முதல் இரவு வரையிலும் கயத்தாறு மற்றும் கழுகு மலை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழையும் பெய்தது. அதிகபட்சமாக கடம்பூரில் 44 மில்லி மீட்டரும், கழுகு மலையில் 42 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    இதேபோல் திருச்செந்தூர், சாத்தான் குளம் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்தது. கோவில்பட்டியில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை சிவகிரி பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    • குட்டி நடக்க முடியாததால் குட்டியை வாயில் கவ்வி கொண்டு குரங்கு செல்வதாக மக்கள் நினைத்திருந்தனர்.
    • குரங்கிடம் இருந்து இறந்த குரங்கு குட்டியை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது பேக்கோரை கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக இந்த கிராமத்தில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றன. இந்த குரங்குகள் அவ்வப்போது, வீடுகளுக்குள்ளும் நுழைந்து வந்தன.

    இந்நிலையில் இந்த குரங்கு கூட்டத்தில் ஒரு குரங்கு மட்டும் வாயில் குட்டியை கவ்வி கொண்டு சுற்றியது. குட்டி நடக்க முடியாததால் குட்டியை வாயில் கவ்வி கொண்டு குரங்கு செல்வதாக மக்கள் நினைத்திருந்தனர்.

    ஆனால் அருகே சற்று தூரத்தில் இருந்து பார்த்த போது, குரங்கு குட்டி இறந்த நிலையில் இருந்தது. இறந்த தன் குட்டியை என்ன செய்வது என்று தெரியாமல், வாயில் கவ்வியபடி குட்டியுடன் அந்த கிராமத்தையை சுற்றி சுற்றி பாசப்போராட்டம் நடத்தி வருகிறது.

    சக குரங்குகள் பொதுமக்கள் யாரையும், குரங்கின் அருகே விடாமல் காத்து வருகின்றனர். பொதுமக்கள் யாராவது மீட்க சென்றால் குரங்கள் ஒன்றாக சேர்ந்து மக்களை நோக்கி வருகிறது.

    இதையடுத்து மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை வனத்துறையினர் அந்த பகுதிக்கு வரவே இல்லை. குரங்கு இறந்த தனது குட்டியுடன் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்து வருகிறது.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, குரங்கு இறந்த தனது குட்டியுடன் சுற்றி வருகிறது. இறந்த குரங்கு குட்டியில் இருந்து மற்ற குரங்குகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குரங்கிடம் இருந்து இறந்த குரங்கு குட்டியை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • பேருந்தில் வரும் பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
    • போலீசார் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மிக முக்கிய பகுதியாகும். இங்கு நவ திருப்பதி தலங்களில் முதல் தலமாக விளங்கும் கள்ளபிரான் கோவில், நவகைலாயங்களில் 5-வது தலமாக விளங்கும் கைலாசநாதர் கோவில் என மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்கள் அதிக அளவில் உள்ளது.

    தினந்தோறும் ஸ்ரீவை குண்டம் பகுதிக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.நெல்லையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஏரல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பல்வேறு தனியார் பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள புதுக்குடி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

    இதனால் பேருந்தில் வரும் பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் பலமுறை காவல்துறையினர் மற்றும் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடமும் கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி இரவு வந்த தனியார் பஸ் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் மெயின் ரோட்டில் சென்றது. பஸ்சில் இருந்த ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் இறங்க வேண்டிய பயணிகளை மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்ல முயன்றது.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பஸ்சில் வந்த பயணிகள் தனியார் பஸ்சை சிறை பிடித்து நெல்லை- திருச்செந்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீவை குண்டம் போலீசார் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தனியார் பஸ்கள் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பயணிகள் கலைந்து சென்றனர்.

    • பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர்.
    • தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனசரகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குள் உள்ளன.

    அதே போல் வனப்பகுதியையொட்டிய கிராம பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் விவசாயிகள் பலர் விவசாயமும் செய்து வருகிறார்கள்.

    வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே உள்ள கிராம பகுதிகளில் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது. அதே போல் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி சிறத்தை கள் வெளியேறி பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    சத்தியமங்கலம் அடுத்த உதயமரத்திட்டு பகுதியில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சத்திய மங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை உதய மரத்திட்டு என்ற வனப்பகுதி யை ஒட்டிய பகுதியில் நேற்று மாலை ஒரு சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டை கடந்து ஊருக்குள் சென்று ஓடியது.

    அப்போது அந்த வழியாக ஒரு முதியவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு சிறுத்தை செல்வதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அலறி கொண்டு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தார். அப்போது அந்த வழியாக சிறுத்தை செல்வதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அந்த முதியவரை மக்கள் மீட்டனர். அதற்கள் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது.

    இது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து இரவு நேரம் என்பதால் அவர்கள் சென்று விட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதை தொடர்ந்து இன்று காலை மீண்டும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள உதயமரத்திட்டு பகுதிக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் இன்று காலையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை உள்ளது.

    ×