search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sales"

    • மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர்.
    • ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் 350-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள் உள்ளன.

    புதுவையில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், ஜின், ஓட்கா, டக்கீலா என 1000-க்கும் மேற்பட்ட விதவிதமான பிராண்டு மதுவகைகள் விற்பனையாகிறது. புதுச்சேரியில் கிடைக்கும் மதுரகங்களை ருசி பார்க்க என நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இதேபோல் புதுச்சேரியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பிராண்டுகள் உள்பட 35 வகையான பீர்கள் முழு பாட்டில்களில் கிடைக்கிறது.

    டின் மற்றும் பின்ட் பாட்டில்களிலும் பீர் சிறிய அளவிலும் கிடைக்கிறது. புதுச்சேரியில் பீருக்கு என தனித்துவமான பார்கள் உள்ளது.

    கோடை காலம் வந்துவிட்டால் மது பிரியர்கள் வெப்பத்தின் தாக்கம், நாவறட்சியில் இருந்து தப்பிக்க பீருக்கு மாறுவது வழக்கம். இதனால் பீருக்கு கடும் கிராக்கி ஏற்படுகிறது.

    மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர். வழக்கமான காலத்தை விட கோடை காலத்தில் 3 முதல் 5 மடங்கு பீர்கள் விற்பனையாகிறது.

    வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த ஒவ்வொரு கோடையிலும் புதிய பீர்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் அதுபோல் புதிய ரக 2 பீர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது. வெயில் தாக்கம் அதிகரிப்பால் பீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


    பொதுவாகவே பீர்களை சில் கூலிங்காக குடிப்பது தனி ருசி தரும். இதனால் பீர் கேட்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சில் கூலிங் பீர் கேட்கின்றனர். கொஞ்சம் குறைவான சில் கூலிங் இருந்தாலும் வாடிக்கையாளர் பீரை மாற்றி புல் சில் தரும்படி கேட்கின்றனர்.

    இதனால் கூலர்களில் தொடர்ந்து பீர்களை போட்டு கடை விற்பனையாளர்கள் நிரப்பி வருகின்றனர். கடைகளில் உள்ள கூலர்களை விட வாடிக்கையாளர் கோரிக்கை அதிகம் என்பதால் விற்பனையாளர்கள் திணறுகின்றனர்.

    சில கடைகளில் பீரை கூலிங் செய்ய அதிக கூலர்கள் இல்லாதது சில் கூலிங் பீருக்கு தடுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில் கூல் பீர் கிடைப்பதில்லை என்ற புகார் வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.

    • ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.
    • இணைய தள பதிவுக்காக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் 2-வது ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. குஜராத் டைடன்சுடன் மோதுகிறது.

    இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 ஆகவும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரமாகவும் நிர்ண யிக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல ரூ.2,500, ரூ.3,500, ரூ.4000 விலைகளிலும் டிக்கெட்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    டிக்கெட் வாங்குவதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய காத்திருந்தனர். இதனால் டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

    விற்பனை தொடங்கிய 1 மணி நேரத்திலேயே ரூ.1,700, ரூ.6 ஆயிரம் விலையிலான டிக்கெட்டுகள் ஆன்லைன்னில் விற்றன. அதைத் தொடர்ந்து ரூ.2,500, ரூ.3,500 விலைகளில் உள்ள டிக்கெட்டுகள் முழுமையாக விற்றன. கடைசியாக ரூ.4000 விலையிலான டிக்கெட்டும் விற்றன.

    விற்பனை தொடங்கிய 1½ மணி நேரத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனால் இணைய தள பதிவுக்காக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    • தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
    • உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 45). இவரை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி, சென்னையை சேர்ந்த முத்து ஆகியோர் மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக கூறி அங்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சரியான வேலை கிடைக்காத நிலையில் வீட்டு வேலை செய்ய சொல்லி மகேஸ்வரியை அடித்து கொடுமைப்படுத்தினர். ரூ.1.26 லட்சத்திற்கு தன்னை விற்றுள்ளது மகேஸ்வரிக்கு தெரியவந்தது.

    இது பற்றி தனது உறவினர்களிடம் தெரிவித்து அவர் கதறினார். மேலும் தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து அவரை மீட்பதற்காக உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகினார்கள். மேலும் சேலம் சரக டி.ஐ.ஜி. உமாவிடம் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மகேஸ்வரியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் மகேஸ்வரி மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். காலையில் விமானம் சென்னை வந்தடைந்தது. பின்னர் மகேஸ்வரி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவரை உறவினர்கள் வரவேற்றனர். அப்போது மகேஸ்வரி உறவினர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    பின்னர் அவர் தனது உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    முன்னதாக மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், தனக்கு மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக அழைத்து சென்று கழிவறையை கழுவ சொன்னதுடன் அங்கு அடித்து கொடுமைப்படுத்தினர். இதனால் எனக்கு தற்போது வரை காது சரியாக கேட்காத நிலை உள்ளது. எனவே இதற்கு காரணமான முகமது அலி, முத்து, அருள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    • ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
    • உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம் பட்டினம், தாழங்குடா, அக்கரைகோரி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிரா மங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி பரபரப்பாக காணப்பட்டு வரும். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியா பாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும்.

    அதன்படி ஞாயிற்றுக் கிழமையான இன்று அதிகாலை முதலே துறைமுகத்தில் மீன் விற்பனை தொடங்கியது. வழக்கமாக 250 ரூபாய்க்கு விற்கப்படும் சங்கரா மீன் இன்று 450 ரூபாய்க்கும், சீலா மீன் 400 ரூபாய்க்கும், பாறை மீன் 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைக்கும், வஞ்சிரம் மீன் 800 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்படும் கானாங்கத்தை கிலோ 200 ரூபாய்க்கும், 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படும் நெத்திலி மீன் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீன் விலை அதிகரித்து காணப்பட்டாலும் விலை யை பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், பொது மக்களும் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

    • பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.
    • இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆானலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.

    தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபாஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.

    முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. இதனால் பொது மக்கள் குறைந்த அளவே வாங்கி செல்கிறார்கள். சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை இன்னும் 350 ருபாயாக நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார்.
    • மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.

    இவைகளை சாப்பிடுவதற்காக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான எறுமை மாடுகள் மார்க்கெட்டுக்கு படையெடுக்கின்றன. இப்படி வரும் நூற்றுக்கணக்கான மாடுகளால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. இப்படி பிடிக்கப்படும் மாடுகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, "கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது. அதுபோன்று அவிழ்த்து விடப்படும் மாடுகளுக்கு முதல்முறை அபராதம் விதிக்கப்படும்

    2-வது முறையாக பிடிபடும் மாடுகளை உரிமை யாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கமாட்டோம். அந்த மாடுகள் நிச்சயமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை இனி மார்க்கெட் பகுதிக்கு வர விடமாட்டோம் என்று அதிகாரிகளிடம் உறுதி அளித்து எழுதி கொடுத்துள்ளனர்.

    இருப்பினும் மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மார்க்கெட்டுக்குள் வரும் மாடுகளை பிடிக்க ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கயிறு மற்றும் தடியுடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றி வருகிறார்கள்.

    • கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.
    • விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    சுனாமி தாக்குதலுக்கு பிறகு இங்கு தயாரிக்கப்பட்ட சுனாமிகா பொம்மை உலக அளவில் புகழ் பெற்றது. இந்த நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.

    அண்மையில் இந்த நிறுவனம் துளசி, சந்தனம், கத்தாழை போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை கொண்டு துணிகளை உற்பத்தி செய்து அவற்றை கொண்டு ஆடைகளை தயாரித்து வருகின்றது.

    இவற்றை ஆன்லைன், உள்ளூர் கடைகள், வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் தனி விற்பனையகம் அமைத்து விற்பனை செய்து வருகிறது.

    ஆரோவில்லை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இந்த ஆயத்த ஆடை நிறுவனம் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் உடைகளை தயாரிக்கிறது.

    விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    வாடிக்கையாளர்கள் இந்த உடைகளை அணிந்து வலம் வந்த வித்தியாசமான பேஷன் ஷோ புதுவை நகர விற்பனை கூடத்தில் நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ரசாயன கலக்காத ஆயத்த ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து கைத்தட்டல் பெற்றனர்.

    பெண்கள் சுய தொழில் செய்து சம்பாதிக்க முடியும் என்பதை வெளிபடுத்தும் விதமாக இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 108 ரேசன் கடைகள் கே-ஸ்டோர்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கேரள நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தயாரிக்கும் ஹில்லி அக்வா என்ற பெயரில் தரமான தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சுமார் 2 ஆயிரம் ரேசன் கடைகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் உள்ள ரேசன் கடைகளில் மக்களுக்கு வங்கி மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    ரேசன் கடைகள் மூலம் கூடுதல் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக கே-ஸ்டோர்கள் என மறுபெயரிடவும் கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 108 ரேசன் கடைகள் கே-ஸ்டோர்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கே-ஸ்டோர்கள் தொடங்கப்பட்ட பிறகு அதன் மூலமாக ரூ10ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகள், பயன்பாட்டு பில் செலுத்துதல் (மின்சாரம் மற்றும் தண்ணீர் உள்பட), 5கிலோ எடையுள்ள சிறிய எல்.பி.ஜி. சிலிண்டர்கள், சபரி மற்றும் மில்மா தயாரிப்புகள் வழங்குதல் உள்ளிட்டவைகள் பொது மக்களுக்கு கிடைக்கும்.

    இந்நிலையில் ரேசன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு வழங்கப்படும். மாநில நீர்ப்பாசன துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான கேரள நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தயாரிக்கும் ஹில்லி அக்வா என்ற பெயரில் தரமான தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது.

    இந்த தண்ணீர் பாட்டில் வெளிச்சந்தையில் இது ரூ15 வரை விற்கப்படுகிறது. சபரிமலை சீசனை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக கோட்டயம், இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு அறிமுகப்படுததப்படுகிறது.

    அதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளிலும் தண்ணீர்பாட்டில் விற்பனையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மெடிக்கலுக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு அருகே இளையனார்குப்பம் உள்ளது. இங்கு செல்லக்கோட்டி (வயது 45) என்பவர் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். அங்குள்ள நோயாளிகளுக்கு, டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருத்து கொடுப்பது, ஊசி போடுவது என அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வந்துள்ளார்.

    மேலும், ஒரு சில நோயாளிகளுக்கு அவரே மாத்திரை தயாரித்தும் வழங்கி வந்துள்ளார். இது குறித்து சங்கராபுரம் தாசில்தார் குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு தாசில்தார் குமரன் விரைந்து சென்றார்.அங்கிருந்த மெடிக்கலுக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர். மேலும், மாத்திரை, மருந்து தயாரித்த மெடிக்கல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று (வியாழக்கிழமை) 7 விவசாயிகள் கலந்து கொண்டு 4 ஆயிரத்து 435 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.2 லட்சத்து 17ஆயிரத்து 911-க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் பருப்பும் வியாழக்கிழமை அன்று சூரியகாந்தி விதைகளும் ஏலம் நடைபெற்று வருவது வழக்கம்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) 7 விவசாயிகள் கலந்து கொண்டு 4 ஆயிரத்து 435 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், ஈரோடு பகுதிகளை சேர்ந்த 3 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதையை அதிகபட்சமாக ரூ.50.39-க்கும், குறைந்தபட்சமாக ரூ.40.70-க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.2 லட்சத்து 17ஆயிரத்து 911-க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு பகுதிக ளில் குண்டுமல்லி, முல்லை ப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
    • தற்போது அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதாலும் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளது. இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்புப்பா ளையம், திருக்கா டுதுறை, பேச்சிப்பா றை , வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் குண்டுமல்லி, முல்லை ப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டி ற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர் . இந்நிலையில் கடந்த வாரம் குண்டுமல்லி ரூ.900- க்கும், சம்பங்கி கிலோ ரூ.80- க்கும்,

    அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.800- க்கும், செவ்வந்திப்பூ ரூ.120- க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் விற்பனையானது. தற்போது நடைபெற்ற குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்க்குதுக்கும், சம்பங்கி கிலோ ரூ.160- க்கும், அரளி கிலோ ரூ.170- க்கும், ரோஜா கிலோ ரூ.280- முல்லைப் பூ கிலோ ரூ.1700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.290- க்கும், கனகாம்பரம் ரூ.1600-க்கும் விற்பனையானது.

    தற்போது அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதாலும் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளது. இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 3.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
    • திடீரென நிறுத்துவதன் மூலம் அதனை பருகிவந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வழிவகை செய்யும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    குறைந்து வரும் பால் கொள்முதல், ஊழல், முறைகேடு என பல புகார்களில் சிக்கித் தவிக்கும் ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை போக்க, 4.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

    ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பது போல குறைத்துவிட்டு, பால்பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருக்கும் தி.மு.க. அரசு, பொதுமக்களின் நீண்டகால பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளை திடீரென நிறுத்துவதன் மூலம் அதனை பருகிவந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வழிவகை செய்யும்.

    எனவே, நஷ்டத்தில் இயங்கும் ஆவின் நிர்வாகத்தின் வருவாயை பெருக்க மாற்று ஏற்பாடுகளை செய்வதோடு, பொது மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா ஆகிய நான்கு விதமான பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகம் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×