search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PSYCHO ASAMI"

    • சைக்கோ ஆசாமி ஒருவர் உருட்டு கட்டையால் தாக்கும் சம்பவம் துரைப்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
    • மர்ம ஆசாமியை பிடிக்கும் வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் ஓ.எம்.ஆர். சாலையில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு பணிபுரிபவர்கள் துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்கள். பெண் ஊழியர்கள் பலர் விடுதிகளில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

    அவர்கள் தங்களின் அலுவலகங்களுக்கு, வீடுகள் மற்றும் விடுதிகளில் இருந்து நடந்து செல்வது வழக்கம். தூரத்தில் வசிப்பவர்கள் வாகனங்களில் வந்து பஸ் நிறுத்தத்தில் இறங்கி அலுவலகங்களுக்கு நடந்து செல்வார்கள். இப்படி நடந்து செல்பவர்களை 50 வயது மதிக்கத்தக்க சைக்கோ ஆசாமி ஒருவர் உருட்டு கட்டையால் தாக்கும் சம்பவம் துரைப்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த சைக்கோ ஆசாமி, துரைப்பாக்கம் 200 அடி சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தோழிகளுடன் நடந்து சென்ற சுவேதா (வயது 25) என்ற பெண்ணை அந்த சைக்கோ ஆசாமி உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பி ஓடினார். அவருடன் வந்த தோழிகளும் தப்பி ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்கள் துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சைக்கோ ஆசாமி நின்று கொண்டிருந்தார். அவரிடம் இருந்து உருட்டுக்கட்டையை பறித்துக்கொண்டு அவரை அங்கிருந்து விரட்டினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செம்மஞ்சேரியை சேர்ந்த குமரன் என்பவர் துரைப்பாக்கத்தில் இருந்து நீலாங்கரைக்கு செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே மர்ம ஆசாமி உருட்டுக்கட்டையால் குமரனை தாக்க முயற்சித்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். இந்த சைக்கோ ஆசாமி பற்றிய தகவல் தற்போது துரைப்பாக்கம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் துரைப்பாக்கம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகிறார்கள்.

    எனவே போலீசார் மற்றும் அதிகாரிகள், அந்த சைக்கோ ஆசாமியை பிடித்து மனநல காப்பகத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த மர்ம ஆசாமியை பிடிக்கும் வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொது மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

    ×