search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறைபிடிப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தாலும் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்து வருகின்றனர்.
    • கடந்த மாதம் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் பஞ்சாமிர்த பிரசாதம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் நவீன எந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு மலை மீது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தாலும் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை கோயிலுக்கு சொந்தமான லாரியில் 30 க்கும் மேற்பட்ட கேன்களில் அடைத்து பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதை அறிந்ததும் அடிவாரம் பகுதி மக்கள் லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாமிர்தம் கெட்டுப்போன நிலையில் எடுத்துச் செல்லப்படுகிறதா? அல்லது முறைகேடாக வேறு இடத்திற்கு பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டதா என கேள்வி எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு அடிவாரம் போலீசார் விரைந்து வந்தனர்.

    மேலும் பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்பட்ட லாரியை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். ஏற்கனவே தைப்பூச காலத்தில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள் தேக்கம் அடைந்து கோயிலுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் மீண்டும் பஞ்சாமிர்தம் விற்பனையாகாமல் தேக்கமடைந்து அதனை அழிப்பதற்காக கோவில் ஊழியர்கள் எடுத்துச் சென்றபோது பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பொதுவாகவே பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாது என்ற எண்ணம் பக்தர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொட்டி அழிக்கப்படுவதாக வரும் தகவல்களால் பக்தர்களும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். 

    • ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட படகு இலங்கை நாட்டுடமை ஆக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். 23-ந்தேதி அதிகாலை அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜசக் (வயது 47), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (43) ஆகியோருக்கு சொந்த மான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படலில் இருந்து ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான பாபு (38), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (34), நிஷாந்தன் (34), முருகேசன் ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

    அவர்கள் அங்குள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். எல்லை தாண்டியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் 6 பேரையும் விடுதலை செய்ய நீதிபதி கஜநிதி பாலன் உத்தரவிட்டார். மேலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு இலங்கை நாட்டுடமை ஆக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து விரைவில் விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவல் சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைப்பிடிப்பதும், விசைப்படகுகளை இலங்கைக்கு கொண்டு நாட்டுடமை ஆக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. ஒருசில சமயங்களில் மீனவர்களை விரட்டி அடிப்பதும், அவர்கள் காயங்களுடன் கரை திரும்புவதும் வாடிக்கையாகிவிட்டது.

    நேற்று முன்தினம் கூட ராமேசுவரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் துரத்தி அடித்தனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். அது பற்றிய விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 492 விசைப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கட லுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜேம்சன், சகாயராஜ் ஆகியவர்களின் இரண்டு விசைப் படகை சிறைபிடித்தனர்.

    இதில், ஜேம்சன் படகில் இருந்த மீனவர்கள் வெக்கர் (27), மார்டின் (27), மணி, சிதம்பரம் (47), ஆரோன், சதீஷ், சுபாஷ் சந்திரபோஷ், சுதாகர், ஜெரால்டு, சுமுல், ஆக்கு மற்றும் சகாயராஜ் படகில் இருந்த படகில் இருந்த ராபர்ட் (40), ஜாக் ஷஷன் (44), சாமுவேல் (24), மெல்சன் (24), லெனின் (45), கேவா (40), ரஞ்சித் (42), அசோந்த் (19), லவ்சன் (40), லிஸ்டன் (30), இளங்கோ (50) ஆகிய 23 மீனவர்களை கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

    கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு பின் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மீனவர்கள் 23 பேரையும் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இலங்கையில் இன்று 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கைதான மீனவர்கள் குறித்த விசாரணை தாமதமாகும் என்று கூறப்படுகிறது. இன்று ஒரே நாளில் 23 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை சிறைபிடித்து இலங்கை கடற்படைக்கு ராமேசுவரம் மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பேருந்தில் வரும் பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
    • போலீசார் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மிக முக்கிய பகுதியாகும். இங்கு நவ திருப்பதி தலங்களில் முதல் தலமாக விளங்கும் கள்ளபிரான் கோவில், நவகைலாயங்களில் 5-வது தலமாக விளங்கும் கைலாசநாதர் கோவில் என மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்கள் அதிக அளவில் உள்ளது.

    தினந்தோறும் ஸ்ரீவை குண்டம் பகுதிக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.நெல்லையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஏரல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பல்வேறு தனியார் பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள புதுக்குடி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

    இதனால் பேருந்தில் வரும் பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் பலமுறை காவல்துறையினர் மற்றும் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடமும் கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி இரவு வந்த தனியார் பஸ் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் மெயின் ரோட்டில் சென்றது. பஸ்சில் இருந்த ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் இறங்க வேண்டிய பயணிகளை மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்ல முயன்றது.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பஸ்சில் வந்த பயணிகள் தனியார் பஸ்சை சிறை பிடித்து நெல்லை- திருச்செந்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீவை குண்டம் போலீசார் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தனியார் பஸ்கள் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பயணிகள் கலைந்து சென்றனர்.

    • அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்கின்றனர். அவ்வப்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் வலை கள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப் படகு மீன்பிடித்துறை முகத்திலிருந்து 12-ந் தேதி புதன்கிழமை 79 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டி ருந்தபோது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சின்னையா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் அதில் சென்ற நரேஷ் (27), ஆனந்தபாபு (25), அஜய் (24), நந்தகுமார் (28), அஜித் (25), குமார் ஆகியோரை சிறைபிடித்து சென்றனர். மேலும் சிறை பிடிக்க ப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை முகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    நடவடிக்கை எடுக்காவிட்டால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

    • மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் சிங்கள கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
    • நிர்மலா சீதாராமன் இலங்கை அரசுடன் பேசி பாரம்பரிய மீனவர்கள் என்று எடுத்துக்கூறி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் மற்றும் ராஜூ ஆகியோருக்கு சொந்தமாக இரண்டு நாட்டுப்படகுகள் (பெரிய ரக வல்லம்) 22 மீனவர்கள் நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறை துறைமுகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் கடலுக்கு சென்றால் 3 முதல் 5 நாட்கள் வரை கடலில் தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு திரும்புவார்கள்.

    இந்நிலையில், வழக்கம் போல மீன்பிடிக்க சென்ற நிலையில் நேற்று (சனிக்கிழமை) நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளுடன் 22 மீனவர்களையும் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் சிங்கள கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

    இதனைதொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் சுதாகர், மேரிட்டேன், சிவா, பெவின்ராஜ், அந்தோணிராஜ், திப்பி ஜோன், ரோஜன், பாஸ்கர், ஜீனோ, ரோஜன் உள்ளிட்ட 22 பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், ராமேசுவரத்திற்கு வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் சந்தித்து கைது குறித்தும், அவர்களை உடனடியாக விடுவிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில், நிர்மலா சீதாராமன் இலங்கை அரசுடன் பேசி பாரம்பரிய மீனவர்கள் என்று எடுத்துக்கூறி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதனையடுத்து இலங்கை அரசு 22 மீனவர்கள் இனி மேல் எல்லை தாண்டி மீன் பிடிக்க வரக்கூடாது என எச்சரித்து அவர்களது படகுகளுடன் 22 மீனவர்களை விடுவித்தனர். இன்று அந்த 22 மீனவர்களும் பாம்பன் துறைமுகத்திற்கு வருகின்றனர்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாம்பன் மீனவர்கள் அவர்களது படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டது மீனவர்களிடையே பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோல் இலங்கை சிறையில், 2-வது முறையாக எல்லை தாண்டியதாக கூறி சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாம்பன் மீனவர் நம்பு முருகனை விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாயார் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அதனை பரிசீலிப்பதாக மந்திரி உறுதியளித்துள்ளார்.

    • கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறை.
    • எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி சிறைபிடிப்பு.

    தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2 படகுகளுடன், மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர்.

    கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

    எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி சிறைபிடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சங்கராபுரம் அருகே லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இதன் காரணமாக சாலையில் அதிகளவு புழுதி பறப்பதால், கடும் சிரமமடைந்து வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இருந்து பழையூருக்கு செல்லும் சாலையில் தினசரி ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன. இதன் காரணமாக சாலையில் அதிகளவு புழுதி பறப்பதால், கடும் சிரமமடைந்து வந்தனர். இந்த நிலையில் அவ்வழியாக வந்த லாரி டிரைவரிடம், அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் லாரியை இவ்வழியாக இயக்காமல் மாற்று வழியில் இயக்குமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து டிரைவர் லாரியை சாலையின் குறுக்கே நிறுத்தி, என்னை இந்த வழியில் செல்லக்கூடாது என்று கூறினால், நீங்கள் யாரும் இவ்வழியாக செல்லக்கூடாது என்றார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் லாரியை விடுவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பூசாரிப்பட்டி வழியாக 100-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
    • இந்த பகுதியில் விபத்துகளை குறைக்க உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி வழியாக 100-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பகுதியில் விபத்துகளை குறைக்க உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் அவதி

    இந்த நிலையில் சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தர்மபுரி செல்லும் பஸ்கள் சில நிறுத்தங்களில் நிற்காமல் பாலம் வழியாக செல்கின்றன. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    உயர்மட்ட பாலம் அமைக்கும் முன்பு அனைத்து பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று சென்றன. ஆனால் தற்போது சில நிறுத்தங்களை தவிர்த்து பாலம் வழியாக பஸ்கள் சென்று விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    சிறைபிடிப்பு

    இந்த நிலையில் நேற்று இரவு சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற 5 தனியார் பஸ்கள் வழக்கம் போல் பாலம் வழியாக இயக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பா.ம.க. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.கே.செல்வம் தலைமையில் பூசாரிப்பட்டி பகுதியில் அந்த 5 பஸ்களையும் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் பஸ்கள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இதனை மீறி சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தர்மபுரி செல்லும் பஸ்கள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக தெரிவித்தனர். பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். போலீ சார் அவர்களை சமாதா னப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

    • கிராமத்தில் இருந்து இயக்குவதால் குறிப்பிட்ட நேரத்துக்கு எங்கள் கிராமத்தில் இருந்து திட்டக்குடிக்கு செல்ல இயலாது.
    • பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி கிராமத்தில் இருந்து திட்டக்குடிக்கு தடம் எண்.1-ல் அரசுப் பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சினை சாத்தநத்தம் வரை நீட்டித்து அமைச்சர் சி .வெ.கணேசன் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் இன்று காலை சாலையில் திரண்டனர்.. அவ்வழியே வந்த 2 அரசு பஸ்களை சிறைபிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர். கோடங்குடியில் இருந்து பஸ் இயக்கப்படும் போது, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு வசதியாக இருந்தது.

    தற்போது இந்த வழித்தடத்தை நீட்டித்து சாத்தநத்தம் கிராமத்தில் இருந்து இயக்குவதால் குறிப்பிட்ட நேரத்துக்கு எங்கள் கிராமத்தில் இருந்து திட்டக்குடிக்கு செல்ல இயலாது. அதனால் தங்கள் கிராமத்தில் இருந்து இயக்கிய வழித்தடத்தை நீட்டிப்பு செய்யாமல் இயக்க வேண்டும் என்று கிராம மக்கள் கூறினர். இதனை அறிந்த திட்டக்குடி போலீசார் மற்றும் போக்குவரத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இது தொடர்பாக ஆலோசி த்து நடவடிக்கை எடுக்க ப்படுமென பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் வந்து மீன் பிடித்ததாக தெரிகிறது.
    • பாண்டிச்சேரி மீனவர்கள் 10 பேர் விசைப்படகில் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் வந்து மீன் பிடித்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் மீன்பிடிக்கும் கடல் பகுதியில் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் வந்து மீன் பிடித்ததாக தெரிகிறது.

    இதனை கண்ட மாமல்லபுரம் மீனவர்கள் 5 பைபர் படகுகளில் கடலுக்குள் சென்று காரைக்கால் மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்து அதில் இருந்த 14 மீனவர்களை சிறைபிடித்தனர். அவர்களை படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர். விசைப்படகை கடலிலேயே நிறுத்தி வைத்தனர்.

    இதே போல் இன்று காலையில் பாண்டிச்சேரி மீனவர்கள் 10 பேர் விசைப்படகில் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் வந்து மீன் பிடித்தனர். அவர்களையும் மாமல்லபுரம் மீனவர்கள் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடிக்கிறது. மாமல்லபுரம் மீனவர்கள் காரைக்கால், பாண்டிச்சேரி மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்தனர்.
    • ராமேசுவரம் பகுதியில் மட்டும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களின் படகுகளையும், மீனவர்களையும் சிறைப்பிடித்து செல்லும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

    அவ்வாறு சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் பேச்சுவார்த்தை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதிலும், மீனவர்களின் படகுகளை இலங்கை நாட்டுடமையாக்கி வருகிறது.

    இதனால் விடுதலையானபோதும், வெறும் கையுடன் தாயகம் திரும்பும் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து மாற்று தொழிலை தேடி வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கை பன்னெடுங்காலமாக நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 420 விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி பாலா, கிரீம்ஸ் ஆகியோருக்கு சொந்தமான படகுகளில் சென்ற 15 மீனவர்களை சிறைப்பிடித்தனர்.

    அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டதோடு, மீனவர்களை காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே மீன்பிடி தடை காலம் முடிந்து ஒரு மாதம் ஆவதற்குள் இரண்டு முறை மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலம் காலமாய் நடக்கும் இதுபோன்ற இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 820 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழந்து உள்ளனர்.

    அதேபோல் மீன்பிடி தொழிலை சார்ந்த ஐஸ் பேக்டரிகள், மீன்கூடை தூக்கும் தொழிலாளர்கள், டீசல் விநியோக நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியின்றி வீடுகளுக்குள் முடங்கினர்.

    இன்று ஒருநாள் மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமேசுவரம் பகுதியில் மட்டும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    ×