search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நிர்மலா சீதாராமன் முயற்சியால்  சிறைபிடிக்கப்பட்ட சிலமணி நேரங்களில் விடுவிக்கப்பட்ட 22 பாம்பன் மீனவர்கள்
    X

    நிர்மலா சீதாராமன் முயற்சியால் சிறைபிடிக்கப்பட்ட சிலமணி நேரங்களில் விடுவிக்கப்பட்ட 22 பாம்பன் மீனவர்கள்

    • மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் சிங்கள கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
    • நிர்மலா சீதாராமன் இலங்கை அரசுடன் பேசி பாரம்பரிய மீனவர்கள் என்று எடுத்துக்கூறி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் மற்றும் ராஜூ ஆகியோருக்கு சொந்தமாக இரண்டு நாட்டுப்படகுகள் (பெரிய ரக வல்லம்) 22 மீனவர்கள் நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறை துறைமுகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் கடலுக்கு சென்றால் 3 முதல் 5 நாட்கள் வரை கடலில் தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு திரும்புவார்கள்.

    இந்நிலையில், வழக்கம் போல மீன்பிடிக்க சென்ற நிலையில் நேற்று (சனிக்கிழமை) நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளுடன் 22 மீனவர்களையும் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் சிங்கள கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

    இதனைதொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் சுதாகர், மேரிட்டேன், சிவா, பெவின்ராஜ், அந்தோணிராஜ், திப்பி ஜோன், ரோஜன், பாஸ்கர், ஜீனோ, ரோஜன் உள்ளிட்ட 22 பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், ராமேசுவரத்திற்கு வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் சந்தித்து கைது குறித்தும், அவர்களை உடனடியாக விடுவிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில், நிர்மலா சீதாராமன் இலங்கை அரசுடன் பேசி பாரம்பரிய மீனவர்கள் என்று எடுத்துக்கூறி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதனையடுத்து இலங்கை அரசு 22 மீனவர்கள் இனி மேல் எல்லை தாண்டி மீன் பிடிக்க வரக்கூடாது என எச்சரித்து அவர்களது படகுகளுடன் 22 மீனவர்களை விடுவித்தனர். இன்று அந்த 22 மீனவர்களும் பாம்பன் துறைமுகத்திற்கு வருகின்றனர்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாம்பன் மீனவர்கள் அவர்களது படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டது மீனவர்களிடையே பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோல் இலங்கை சிறையில், 2-வது முறையாக எல்லை தாண்டியதாக கூறி சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாம்பன் மீனவர் நம்பு முருகனை விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாயார் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அதனை பரிசீலிப்பதாக மந்திரி உறுதியளித்துள்ளார்.

    Next Story
    ×