search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN fisherman"

    • கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறை.
    • எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி சிறைபிடிப்பு.

    தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2 படகுகளுடன், மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர்.

    கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

    எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி சிறைபிடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலையை பெற்று தந்து அதற்கான பணி ஆணையும் வழங்கினார்.
    • ராஜாவின் குழந்தைகள் வரும் கல்வி ஆண்டில் இருந்து இலவசமாக படிக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் கோவிந்தப்பாடியை சேர்ந்தவர் காரவடையான் என்கிற ராஜா (வயது 45). செட்டிப்பட்டியை சேர்ந்தவர்கள் ரவி (40), இளைய பெருமாள் (40). மீனவர்களான இவர்கள் உள்பட 4 பேர் கடந்த 14-ந்தேதி இரவு தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றனர்.

    அப்போது அவர்களை கர்நாடக மாநில வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடை யே மோதல் ஏற்பட்டு துப்பாக்கி ச்சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையில் ராஜா காயம் அடைந்து பலியானார். இதற்கிடையே கர்நாடக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி கலந்து கொண்டனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

    மீனவர் ராஜாவின் உடலை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கோகுலரமணன், அருண், மகேஷ் ஆகிய 3 பேர் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த நிகழ்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிந்ததை அடுத்து ராஜாவின் உடல் இன்று காலை உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. குடும்பத்தின் உறவினர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என ராஜாவின் மனைவி கோரிக்கை வைத்தார்.

    அதனை ஏற்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலையை பெற்று தந்து அதற்கான பணி ஆணையும் வழங்கினார்.

    ராஜாவின் குழந்தைகள் வரும் கல்வி ஆண்டில் இருந்து இலவசமாக படிக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். அதை தொடர்ந்து உறவினர்கள் மற்றும் ராஜாவின் மனைவி பவுனா, கணவரின் உடலை பெற சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டார். 

    • உள் காயம் ஏற்பட்டதாக கூறி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
    • விசாரணையின் முடிவில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும் என்று கடலோர காவல் குழும போலீசார் தெரிவித்தனர்.

    காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடந்த 15ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த வீரவேல் (வயது 30 ). நாகை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த செல்வத்துரை, செல்வகுமார், சதீஷ் உள்பட 10 மீனவர்கள் படகில் சென்று மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    நேற்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு கப்பலில் ரோந்து வந்த இந்திய கடற்படையினர் சந்தேகம் அடைந்து படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர். இந்த நேரத்தில் மழை பெய்ததாலும் இருள் சூழ்ந்து காணப்பட்டதாலும் இந்த எச்சரிக்கையை கவனிக்காமல் படகு சென்றது.

    இதனால் மேலும் சந்தேகமடைந்த இந்தியா கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மீனவர் வீரவேல் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து படகு அருகில் வந்த இந்திய கடற்படையினர் தாங்கள் சுட்டது தமிழக மீனவர்தான் என்பதை உணர்ந்து உடனடியாக வீரவேலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து வீரவேல் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இந்த நிலையில் மீனவர் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் , கொலை முயற்சி, மிக கடுமையான ஆயுதம் கொண்டு தாக்குதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் இந்திய கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தொடர்ந்து இந்திய கடற்படை வீரர்களிடம், எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினீர்கள்? முறைப்படி எச்சரிக்கை சமிக்ஞை செய்தீர்களா ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும் என்று கடலோர காவல் குழும போலீசார் தெரிவித்தனர்.

    தற்கிடையே துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த வீரவேலுடன் மீன் பிடித்த சக மீனவர்கள் 9 பேரும் கரைக்கு திரும்பினர். பின்னர் உள் காயம் ஏற்பட்டதாக கூறி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    சிகிச்சை முடிந்து வெளியே வந்தவர்களில் சிலர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது அதிர்ச்சி அளிக்கிறது. மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்காணிப்பது வழக்கமாக இருந்து வந்தது.

    ஆனால் தற்பொழுது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியது வேதனை அளிக்கிறது. துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்திற்கு பின்னர் இந்திய கடற்படையினர் சிலர் எங்களை கட்டி வைத்து இரும்பு கம்பியால் தாக்கினர். எதனை கடலில் தூக்கி போட்டீர்கள் என விசாரித்தனர். நாங்கள் ஒன்றுமே போடவில்லை என எவ்வளவு கூறியும் கேட்கவில்லை.

    மேலும் படகு முழுவதும் சோதனை இட்டனர். அதன் பின்னரே படகில் இருந்து அவர்கள் வெளியேறினர். எங்களுக்கு உள் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை பெற்றோம். இனி இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மீனவர் மீது துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதால் இந்த வழக்கு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றுள்ளது. விசாரணை முடிவில் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சந்தேகத்திற்கிடமான படகை நிறுத்துமாறு பல முறை எச்சரிக்கை விடுத்தனர்.
    • எச்சரிக்கை விடுக்கும் முறையில் படகு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

    தமிழக மீனவர் வீரவேல் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ள பால்க் விரிகுடா பகுதியில் இந்திய கடற்படை கப்பல் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. 21ந் தேதி அதிகாலையில், சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கண்ட இந்திய கடற்படையினர் அந்த படகை நிறுத்துமாறு பல முறை எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால் படகு நிற்காததால், அதை நிறுத்தும் வகையில் எச்சரிக்கை முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்திற்கிடமான வகையில் அந்த படகில் இருந்தவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த நபர், முதலுதவி சிகிச்சைக்கு பின், இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

    பின்னர் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். #TNFishermen #SriLanka
    சென்னை:

    ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை பகுதிகளை சேர்ந்த 600 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 17 பேரை கைது செய்தனர்.

    சிறைபிடிக்கப்பட்டவர்களில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 7 பேரும், புதுக்கோட்டை பகுதி மீனவர்கள் 6 பேரும், நாகை பகுதியை சேர்ந்த 4 மீனவர்களையும் காரைநகர் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து, நீரியல் துறை அதிகாரிகளிடம் தமிழக மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டு, வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுக்கு பின், சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிய வருகிறது.

    இலங்கை சிறையில் ஏற்கனவே 16 மீனவர்கள் உள்ளனர். இந்நிலையில் இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்ற இரண்டே நாட்களில் 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #TNFishermen #SriLanka
    கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
    இராமேஸ்வரம்:

    தமிழக - இலங்கை எல்லையான கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு விரட்டியடிப்பதும், கைது செய்யப்பட்டு வருவதும் தொடர்ந்து நடந்துவருகிறது.

    இந்நிலையில் கச்சத்தீவு அருகே ஒரு படகுடன் மீன்பிடித்து கொண்டிருந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை இலங்கை கடற்படை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
    ×