search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SriLanka"

    • ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் மர்ம பொருள் பண்டல்களுடன் கும்பலாக சிலர் நின்றுள்ளனர்.
    • போலீசார் அவர்களை விரட்டியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் பீடி இலை பண்டல்கள், மஞ்சள் உள்ளிட்ட சில பொருட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் காயல்பட்டினம் மற்றும் வீரபாண்டியன்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான கடற்கரை வழியாக போதைப்பொருட்களை படகு மூலம் இலங்கைக்கு கடத்தும் முயற்சியில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், காவலர்கள் இருதய ராஜகுமார், ராமர் உள்ளிட்ட குழுவினர் குறிப்பிட்ட கடற்கரை பகுதிக்கு சென்று கண்காணித்து வந்தனர்.

    இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் மர்ம பொருள் பண்டல்களுடன் கும்பலாக சிலர் நின்றுள்ளனர். படகு ஒன்றும் தனியாக நின்று கொண்டிருந்தது. உடனே விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைக்க முயன்றனர்.

    ஆனால் உஷாரான அந்த கும்பலை சேர்ந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

    விசாரணையில் அவர் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணி சாமி மகன் அந்தோணிதுரை (52) என்பது தெரியவந்தது. அவர், தன்னை தூத்துக்குடியை சேர்ந்த 3 பேர் ரூ.5 ஆயிரம் தந்து இங்கு அழைத்து வந்ததாகவும் வேறு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்த மர்ம பண்டல்களை ஆய்வு செய்தபோது, 50 மூட்டைகளில் சுமார் 2 டன் எடை கொண்ட பீடி இலை பண்டல்கள் இருப்பது தெரிந்தது.

    இவற்றை கைப்பற்றிய கியூ பிரிவு போலீசார், தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய 3 பேர், படகின் உரிமையாளர் குறித்த விவரங்களை கேட்டு பிடிபட்ட அந்தோணி துரையிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதால் பெரும் விபத்து.
    • சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.

    இலங்கையின் பதுளை மாவட்டத்தில் கார் பந்தய திடலில் இன்று கார் பந்தயப் போட்டி நடைபெற்றது.

    ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காயம் அடைந்தவர்கள் தியத்தலாவ, பண்டாரவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கார் பந்தயத்தின்போது, கார் செல்வதற்கான பாதையைவிட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியுள்ளது. விபத்துக்குள்ளான காரை சூழ்ந்த மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

    இதனால், உயிரிழப்புகளும், படுகாயங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடலில் ஆய்வு செய்வதாகக் கூறி சீன கப்பல்கள் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
    • சர்வதேச ஆய்வுக்கப்பல்கள் தங்கள் துறைமுகங்களில் நிறுத்த இலங்கை அரசு தடை விதித்தது.

    கொழும்பு:

    சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கடந்த நவம்பர் மாதம் நிலை நிறுத்தப்பட்டது.

    இதற்கு இந்தியா தனது கவலையை இலங்கை அரசிடம் தெரிவித்தது. இதையடுத்து சர்வதேச ஆய்வுக்கப்பல்கள் தங்களது துறைமுகங்களில் நிறுத்த இலங்கை அரசு ஒரு ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டது.

    சமீபத்தில் ஜெர்மனி ஆய்வுக்கப்பலுக்கு மட்டும் இலங்கை அரசு அனுமதி அளித்தது. அதேவேளையில், சீன கப்பலை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு இலங்கை அரசிடம் சீனா தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

    இந்நிலையில், இனி அனைத்து ஆய்வுக்கப்பல்களையும் தங்களது துறைமுகங்களில் நிறுத்த அனுமதிக்க போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் சீன ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளிக்க உள்ளது.

    கடலில் ஆய்வு செய்வதாகக்கூறி சீன கப்பல்கள் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு.
    • உரிய சான்றிதழ்களை பெற்று மத்திய அரசிடம் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும்.

    இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சாந்தன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்த நிலையில், அவரது உடல்நிலை மாரடைப்பால் மோசமானது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் சென்னை மருத்துவமனையில் மரணம் அடைந்தது வரை உள்ள தகவல்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.

    சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று, பயண ஆவணம், உடல் பதப்படுத்துதல் சான்று ஆகியவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    உரிய சான்றிதழ்களை பெற்று மத்திய அரசிடம் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, 4 ஆவணங்களும் வழங்கப்படும் பட்சத்தில் உடனடியாக உடலை அனுப்பி வைப்பதற்கான அனுமதி தாமதமின்றி வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியதை அடுத்து, வரும் மார்ச் 4ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.
    • கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ராமேஸ்வரம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4.36 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    குந்துகால் கடல் பகுதி வழியாக தங்க கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 250 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்.

    தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    சுமார் 250 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள்.
    • போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின்போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேர் கைது.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

    இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ராணுவ ஆதரவுடன் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேரை கைது செய்து பின்னர் மன்னிப்பு கிடைத்து சமீபத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காங்கேசன் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மீனவர்களிடம் இருந்து இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

    கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    காங்கேசன் கடல் பகுதி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இலங்கை கடற்படை மீனவர்களிடம் இருந்து இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

    • நிதியில் சுமார் 500 மில்லியன் டாலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காக ஒதுக்கப்படும்.
    • 200 மில்லியன் டாலர்கள் நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நலன்புரி ஆதரவிற்காக ஒதுக்கப்படும்.

    கொலராடோ:

    1948-ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாததைத் தொடர்ந்து, இலங்கை மிக மோசமான நிதி நெருக்கடியுடன் போராடி வருகிறது.

    உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய பலதரப்பு முகவர்களிடமிருந்து இலங்கை எதிர்பார்க்கும் 4 பில்லியன் டாலர்கள் வரை கூடுதல் நிதியை IMF கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் பிணை எடுப்பிற்கு மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது.

    மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) செய்த ஒப்பந்தத்திற்குப் பிறகு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான வரவு-செலவு மற்றும் நலன்புரி ஆதரவாக 700 மில்லியன் டாலர்களை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

    நிதியில் சுமார் 500 மில்லியன் டாலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காக ஒதுக்கப்படும் என்றும் மீதமுள்ள 200 மில்லியன் டாலர்கள் நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நலன்புரி ஆதரவிற்காக ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான இயக்குனர் பாரீஸ் ஹேடட்- செர்வோஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், " ஒரு கட்ட அணுகுமுறையின் மூலம், உலக வங்கி குழுவின் மூலோபாயம் ஆரம்பகால பொருளாதார ஸ்திரப்படுத்தல், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

    இந்த சீர்திருத்தங்கள் நாட்டை மீண்டும் பசுமையான, நெகிழ்ச்சியான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பாதையில் கொண்டு செல்ல முடியும்" என்றார்.

    • சீனாவுடன் இலங்கைக்கு ராணுவ ஒப்பந்தம் எதுவும் கிடையாது.
    • இலங்கையில் சீனர்கள் 1,500 ஆண்டுகளாக இருக்கிறார்கள்.

    கொழும்பு :

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தற்போது இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் பிரான்ஸ் அரசு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் நடுநிலை நாடு. அதே சமயத்தில், இந்தியாவுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுப்பதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற உண்மையை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இலங்கையில் சீனர்கள் 1,500 ஆண்டுகளாக இருக்கிறார்கள். ஆனால், சீன ராணுவ தளம் எதுவும் அங்கு இல்லை.

    சீனாவுடன் இலங்கைக்கு ராணுவ ஒப்பந்தம் எதுவும் கிடையாது. இனிமேலும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ராணுவ ஒப்பந்தத்தை சீனா விரும்புவதாக நாங்கள் கருதவில்லை.

    இலங்கையில் உள்ள அம்பந்தொட்டை துறைமுகம், சீன வர்த்தகர்களுக்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் பாதுகாப்பு, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

    அம்பந்தொட்டை துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தவில்லை. இலங்கை தென்பிராந்திய கடற்படை தலைமையகத்தை அம்பந்தொட்டைக்கு மாற்ற போகிறோம். அங்கு ஒரு படைப்பிரிவை நிறுத்தி வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு, சீனாவின் 'யுவான் வங்-5' என்ற அதிநவீன உளவு கப்பலை அம்பந்தொட்டை துறைமுகத்தில் நிறுத்திவைக்க இலங்கை அரசு அனுமதி அளித்தது.

    அந்த கப்பல், இந்தியாவில் உள்ள ராணுவ நிலையங்களை உளவு பார்க்கும் என்ற அச்சத்தால், இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழர் நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
    • தற்போதைய நிலவரம் குறித்து அவர் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

    கொழும்பு :

    இலங்கையில் பல ஆண்டுகளாக நீண்டு வரும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சிங்களர்களின் எதிர்ப்பையும் மீறி, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கும் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட தமிழர் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    இது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் உள்பட ஏற்கனவே பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்திய அவர், இது தொடர்பான செயல் திட்டங்களை வகுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

    இந்த பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அவர் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதில், தமிழர்களுடன் நல்லிணக்கத்துக்கான செயல்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தேவையான தேசிய கொள்கையை விரைவாக உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக தமிழர் நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். குறிப்பாக, சட்டம் வகுத்தல், நிறுவன செயல்பாடுகள், நிலப்பிரச்சினைகள், கைதிகள் விடுதலை, அதிகார பரவலாக்கம் ஆகிய 5 முக்கிய துறைகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தினார்.

    மேலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமல்படுத்துதல், தேசிய நிலச்சபை நிறுவுதல், தேசிய நிலக்கொள்கை உருவாக்குதல் போன்ற அம்சங்களும் ஆலோசிக்கப்பட்டன.

    இதைத்தவிர காணாமல்போனோர் அலுவலகத்தின் மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள், டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள் மற்றும் காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்டவற்றின் அவசியத்தையும் ரணில் விக்ரமசிங்கே கூட்டத்தில் வலியுறுத்தினார். நிவாரண அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் போன்றவற்றை நிறுவுவதற்கான தற்போதைய முயற்சிகளை அடுத்த 2 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறும் அதிபர் விக்ரமசிங்கே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    இறுதியாக இந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கையும் சமர்ப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி, தேசிய பாதுகாப்பு மூத்த ஆலோசகர் சகலா ரத்நாயகே உள்பட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இலங்கையில் முன்னணி கார்களின் விலையும் 60 முதல் 90 லட்சம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
    கொழும்பு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அந்த நாட்டின் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு,  விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஆட்டோமொபைல் விற்பனை விலையும் தற்போது உச்சம் தொட்டுள்ளது.

    இதன்படி இலங்கையில் புதிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு 3 லட்சத்திற்கு விற்கப்பட்ட சாதாரண ஸ்கூட்டர், மோட்டார்  சைக்கிளின் விலை தற்போது ரூ. 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    அதேபோல முன்னணி கார்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன்படி முன்னணி கார்களின் விலையும் 60 முதல் 90 லட்சம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது. 

    இதற்கு வாகன இறக்குமதி குறைவும், பண வீக்கமும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனம் மற்றும் கார்களின் விலை  மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ×