search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amaravati river"

    • கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
    • முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீா் வசதி பெற்று வருகின்றன.

    குடிநீா் மற்றும் பாசன தேவைகளுக்காக அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் அமராவதி அணையில் இருந்து வெளியேறிய சில முதலைகள் கரையோரத்தில் நடமாடி வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். மேலும் உடுமலையை அடுத்துள்ள கொழுமம் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடி அருகே பெரிய முதலை சாலையில் ஊா்ந்து சென்றுள்ளது. இதனைப்பார்த்த இளைஞர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    அதனைப்பார்த்த கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:- அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. வழக்கமாக பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும்போது அணையில் உள்ள முதலை கள் பிரதான ஷட்டா் வழியாக அமராவதி ஆற்றில் சென்று விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம்.

    முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    • அமராவதி அணையில் துவங்கி கரூர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு இணைகிறது.
    • விவசாயத்திற்கு மட்டுமின்றி தென்னைநார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் நீர் எடுக்கப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை வாயிலாக திருப்பூர் ,கரூர் மாவட்டத்தில் 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழி ஓரத்தில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    அமராவதி அணையில் துவங்கி கரூர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு இணைகிறது. திருப்பூர் ,கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் வழியாக 148 கி.மீ தூரம் பயணிக்கும் அமராவதி ஆற்றின் இரு கரைகளிலும் நூற்றுக்கணக்கான மின் மற்றும் ஆயில் மோட்டார் வைத்து சட்ட விரோதமாக நீர் எடுக்கப்படுகிறது.விவசாயத்திற்கு மட்டுமின்றி தென்னைநார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் நீர் எடுக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் ஆற்றுக்குள்ளேயே குழி தோண்டி மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பாசனம் மற்றும் குடிநீருக்கு திறக்கப்படும் நீர் பெரும் அளவு திருடப்படுவதால் பாசன நிலங்களில் வறட்சியும், அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார்களை அகற்ற வேண்டும் என விவசாயிகளும் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து ஆற்றில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார்களை அகற்றவும் முறைகேடாக பெறப்பட்டுள்ள மின் இணைப்புகளை துண்டிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    உடுமலை ,மடத்துக்குளம் ,தாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட வழியோரத்தில் ஆற்றின் இரு புறமும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார்கள்,பைப் கட்டுமானங்களை அகற்றி பறிமுதல் செய்யப்படுவதோடு போலீசில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆற்றின் கரையில் கிணறுகள் அமைத்தும் மோட்டார்கள் அமைத்தும் நீர் ஊறிஞ்சபடுவது கண்டறியப்பட்டால் விவசாய மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு அந்தப் பணிகளும் நடந்து வருகிறது. ஆற்றில் சட்ட விரோதமாக நீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • ஆற்றின் மேடான பகுதிகளில், செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது.
    • கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர வேண்டிய நீர் சரிவர சேர்வதில்லை.

    காங்கேயம் :

    உடுமலை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அமராவதி ஆறு தாராபுரம் வழியாக வெள்ளக்கோவில், மூலனூர், காங்கேயத்தின் சில பகுதிகள் வரை பாய்ந்து கரூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கியது.

    இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குடிநீர் தேவையும் பூர்த்தி ஆகிறது. ஆற்றின் இருகரைகள் மற்றும் ஆற்றின் மேடான பகுதிகளில், செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. அதனால் நீரோட்டம் தடைப்படுகிறது. கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர வேண்டிய நீர் சரிவர சேர்வதில்லை. ஆகவே கடைமடை பகுதியில் இருந்து தூர் வாரும் பணியினை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி அளிக்கிறது.
    • தடுப்பணை அமைக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் கம்பிளியம்பட்டியில் நீர்வளத்துறையின் சார்பில் ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. அப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி எம்.பி., முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது:- அமராவதி ஆறு கேரள மாநிலம் மேற்குதொடர்ச்சி மலை, மூணாறு மலைப்பகுதி மற்றும் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த ஆனைமலைப் பகுதியிலிருந்து உற்பத்தி ஆகிறது. அமராவதி ஆற்றின் குறுக்கே அமராவதி நகரில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இது காவிரி ஆற்றின் முக்கிய உபநதிகளில் ஒன்று. அமராவதி ஆறு அமராவதி அணையிலிருந்து 227 கி.மீ., பாய்ந்தோடிய பின் கரூர் மாவட்டத்தை சார்ந்த குளித்தலை வட்டம் மாயனூருக்கு அருகே திருமுக்கூடலூர் கிராமத்தில் காவிரியோடு இணைகிறது.

    இந்த அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி அளிக்கிறது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தில் உள்ள கம்பிளியம்பட்டி கிராமம், குமாரசாமி கோட்டை, அணைப்பாளையம், சின்னம்மன் கோவில்பாளையம் ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீரை சேமித்து குடிநீர் ஆதாரத்தை பெருக்குவதற்காக அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் இத்தடுப்ப ணையானது அமராவதி ஆறு சரகம் 104.00 கி.மீ.,ல் கம்பிளியம்பட்டி கிராமம்அருகே அமைக்கப்படவுள்ளது.

    இத்தடுப்பணையானது 170 மீட்டர் நீளத்திலும், 1.50 மீட்டர் உயரத்திலும் சுமார் 3.18மி.கன.அடி கொள்ளளவு நீரை தேக்கி வைக்க வசதியாக அமையும். இத்தடுப்பணைஅமைக்கப்படுவதால் 65 கிணறுகள் 542 ஏக்கர் விளை நிலங்கள், மற்றும் 110 ஆழ்துளைக்கிணறுகள் மூலமாக பாசன வசதி மேம்படுவதுடன், கம்பிளியம்பட்டி, சின்னம்மன்கோவில்பாளையம் ஆகிய கிராமங்களில் கால்நடை மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தியடையும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன்,மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், பொதுப்பணித்துறைசெயற்பொறியாளர் (நீர்வளத்துறை) கோபி, உதவிப் செயற்பொறியாளர் .சினீவாசன் மற்றும் இலக்கம நாயக்கன்பட்டி கிராம ஊராட்சி தலைவர் சேடன் குட்டை பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன், வெள்ளகோவில் தி.மு.க. நகர செயலாளர் சபரி எஸ், முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கோடை காலத்தில் தாராபுரம் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் வழங்கும் அமராவதி ஆறு வறண்டுள்ளது.
    • பொதுமக்கள் சிரமத்தை பார்க்காமல் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் குறித்து நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    தற்போது கோடை காலத்தில் தாராபுரம் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் வழங்கும் அமராவதி ஆறு வறண்டுள்ளது. இதனால் ஆற்றில் உள்ள குடிநீர் கிணற்றில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. இதனால் நகராட்சி பகுதிக்கு தினசரி நகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டு வந்த தண்ணீர் 15 வார்டுகளுக்கு ஒரு நாளும், அடுத்த நாள் 15 வார்டுகளுக்கு என குடிநீர் வினியோகம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 15 வார்டுகளாக பிரித்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல குடியிருப்பு பகுதியில் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதேபோல அமராவதி ஆற்றில் இருந்து நகராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் தாராபுரம் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் பிரச்சினை தீர்க்க அமராவதி அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என நகராட்சி தலைவர் என்ற முறையில் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதனை ஏற்று கூடிய விரைவில் அமராவதி அணையில் இருந்து தாராபுரம் பகுதிக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பாக்கிறேன்.

    இந்த அறிவிப்பை பயன்படுத்தி 15 வார்டுகளுக்கு ஒரு நாளும், அடுத்த நாள் அடுத்த 15 வார்டுகளுக்கும் என மாறி மாறி தண்ணீர் வினியோகிக்க முடிவு செய்துள்ளோம். பொதுமக்கள் சிரமத்தை பார்க்காமல் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தண்ணீரின் அளவை குறைத்து முதலையை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
    • விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க அமராவதி ஆறு பெரும் பங்கு வகித்து வருகிறது.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து உடுமலை, தாராபுரம், சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி ஆகிய பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க அமராவதி ஆறு பெரும் பங்கு வகித்து வருகிறது. இந்த ஆறு கரூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் இணைகிறது.

    பழமை வாய்ந்த அமராவதி ஆற்றில் அலங்கியம் சாலையில் சீத்தக்காடு பகுதியில் உள்ள தடுப்பணையில் சுற்றுவட்டார பகுதி மக்கள் தினசரி குளிப்பதும், பெண்கள் துணி துவைப்பதும் அத்துடன் குழந்தைகள் விடுமுறை நாட்களில் ஆற்றில் இறங்கி தண்ணீரில் நீந்தி விளையாடி வருவதும் வழக்கம். இந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக அமராவதி ஆற்றில் தாராபுரம் அடுத்த சீத்தக்காடு பகுதியில் முதலைகள் நடமாட்டம் உள்ளதாக ஒரு சிலர் கூறி வந்தனர். அதன்படி திடீரென சுமார் 10 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று அடிக்கடி பாறை மீது ஏறி ஓய்வெடுத்து வந்ததை சிலர் படம்பிடித்து வாட்ஸ்-அப்பிலும், சமூக வலை தளத்திலும் பதிவிறக்கம் செய்து வந்தனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் செல்வதை தவிர்த்து உள்ளனர்.

    தாராபுரத்தை அடுத்த தாளக்கரை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆற்றில் துணி துவைக்க சென்றார்.அப்போது அமராவதி ஆற்றில் சுமார் 8 அடி நீளம் கொண்ட ராட்சத முதலை ஒன்று தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்தது. அந்த பெண் உடனே தனது கையில் வைத்திருந்த செல்போனில் வீடியோ எடுத்தார். பிறகு அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது விஸ்வரூமமாக பரவியது.

    மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் நீர் உந்தும் தடுப்பணை இடத்திலும் முதலை தென்பட்டதாக அப்பகுதிக்கு துணி துவைக்க சென்ற பெண் ஒருவர் ராட்சத முதலையை கண்ட காட்சியும் சமூக வலைதளத்தில் வைரலானது.

    இதைத்தொடர்ந்து தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் குறித்த எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி வனத்துறையினர் முதலைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியறுத்தினர். இந்தநிலையில் அமராவதி ஆற்றில் உலா வரும் முதலைகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைத்து முதலையை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  

    • உடுமலை அருகே அமராவதி ஆற்றங்கரையில், பழமையான கோவில்கள் ஏராளம் உள்ளது
    • வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வு பயணம் செய்தனர்

    உடுமலை :

    உடுமலை அருகே அமராவதி ஆற்றங்கரையில், பழமையான கோவில்கள் ஏராளம் உள்ளது. இங்குள்ள கோவில்கள், கல்வெட்டு குறித்து பழனியாண்டவர் பண்பாட்டு கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வு பயணம் செய்தனர்.பேராசிரியர்கள் சித்ரா, மேகலா தலைமையில் 30க்கும் மேற்பட்ட வரலாற்று ஆய்வு மாணவர்கள், ஐவர் மலை, மதகடிபுதூர் பாறை ஓவியங்கள், கொழுமம் வீரசோழீஸ்வரர் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், கணியூர் கோட்டை ஈஸ்வரன் கோவில், கடத்தூர் சித்திரமேழி பெரியநாட்டார் கல்வெட்டு, கொங்கு விடங்கீஸ்வரர் கோவில் மற்றும் மருதீசர் கோவில்களில் அனைத்து கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தனர்.

    உடுமலை வரலாற்று ஆய்வு நடுவ தலைவர் மதியழகன், ஐவர் மலையில் சமண வழிபாடு குறித்தும், 16 தீர்த்தங்கரர்கள் வாழ்விடம்,திரவுபதி வழிபாடு குறித்தும் விளக்கமாக பேசினார்.வக்கீல் சத்தியவாணி சமணம் சார்ந்து இருந்த அப்பாண்டையர் மலை தற்போது பாண்டவர் மலையாகவும், ஐவர் மலை என வழக்கில் மாறி இருப்பதையும் வீரநாராயணப் பெருவழி குறித்தும் மாணவர்களுக்கு விளக்கிப்பேசினார்.கொமரலிங்கம் கிருஷ்ணமூர்த்தி, சித்திரமேழி ஏர், பாறை ஓவியங்கள் குறித்து பேசினார். மதகடிபுதூர் பாறை ஓவியங்கள் குறித்து முனைவர் விஜயலட்சுமி விளக்கமளித்தார்.கடத்தூரில் உள்ள சித்திரமேழி பெரிய நாட்டார் கல்வெட்டு சிறப்புகளையும், அங்கு கோட்டைகள் இருந்தது, கரை வழி நாட்டு கடத்தூர் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.கடத்தூர் மருதீசர் கோவிலில் உள்ள 84 கல்வெட்டு மற்றும் அதன் செய்திகள் குறித்து விளக்கி வரலாற்று ஆய்வாளர்கள் பேசினர். உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு மண் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • அதிகாரிகள் வருவதை அறிந்த கும்பல் டிப்பர் லாரி, பொக்லைன் ஆகியவற்றை விட்டுவிட்டு தப்பியது.

    தாராபுரம் :

    தாராபுரம் பைபாஸ் ரோட்டில் வீரராகவபெருமாள் கோவில் அருகே அமராவதி ஆற்றையொட்டி உள்ள தனியார், அரசு புறம்போக்கு இடத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு மண் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஆர்.டி.ஓ., குமரேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்த, அவர்கள் மண்ணை கொட்டி விட்டு மண் எடுக்கப்பட்ட டிப்பர் லாரி, பொக்லைன் ஆகியவற்றை விட்டு விட்டு கும்பல் தப்பியது.சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 டிப்பர் லாரி, 2 பொக்லைனை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம், தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் இருந்து, மடத்துக்குளம், தாராபுரம், அரவக்குறிச்சி வழியாக காவிரியில் தண்ணீர் கலந்து வருகிறது. இந்த ஆற்றில், காங்கயம், கம்புலியாம்பட்டி, கோவில்பாளையம், மயில்ரங்கம், மணலூர், சங்கரண்டாம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக மணல் திருட்டு இல்லாமல் இருந்தது. கடந்த சில வாரங்களாக அமராவதி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் சென்றது. இதனால் , ஆற்றில் மணல் குவியலாக ஆங்காங்கு பரவியிருந்தது.தற்போது, குறைந்த அளவில் தண்ணீர் வரத்து உள்ளது. இதை மணல் திருடர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு கைவரிசை காட்ட துவங்கியுள்ளனர். வேலப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, மயில்ரங்கத்தில், ஈஸ்வரன் கோவில் அருகே அமராவதி ஆற்றில் இரவு நேரத்தில் மர்ம நபர்களால் மணல் திருட்டு நடந்துள்ளது. எனவே உடனடியாக, மாவட்ட நிர்வாகம், போலீசார் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    • அமராவதி ஆற்றுப்பாலத்தில் வேனை நிறுத்தினர்.
    • தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாராபுரம் :

    தாளவாடி பகுதிைய சேர்ந்த லிங்கராஜ் மகன் மணிகண்டன் (வயது 24). இவர் கோவையில் உள்ள லேத் பட்டறை ஒன்றில் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் ஒட்டன்சத்திரம் அப்பியம்பாளையம் சென்று விட்டு தாளவாடிக்கு வேனில் வந்து கொண்டிருந்தார். தாராபுரம் வந்ததும் அங்குள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தில் வேனை நிறுத்தினர்.

    பின்னர் மணிகண்டன் உள்பட 3 ேபர் ஆற்றில் இறங்கி குளித்தனர். இதில் தண்ணீரில் மூழ்கி மணிகண்டன் இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • நடப்பாண்டில் முதல் முறையாக கடந்த 15ந் தேதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
    • கணியூர், காரத்தொழுவு உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டினால் நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.மேலும் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் அமைந்துள்ள அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    நடப்பாண்டில் முதல் முறையாக கடந்த 15ந்தேதி காலை அணை நிரம்பியதையடுத்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. உச்ச அளவாகஆற்றில் வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடி வரை திறக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மீண்டும் கன மழை துவங்கியதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்தது.உடனடியாக, அணைக்குள் வரும் நீர் அனைத்தும் உபரியாக ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.

    அணை நீர்மட்டம் 88.65 அடியாகவும், நீர் இருப்பு, 3,924.72 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த, 15ந் தேதி, அணை நிரம்பிய நிலையில், பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் அனைத்தும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்படுவதால், ஆயக்கட்டு நிலங்களில், சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளது.இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது. வரும் நீர் அனைத்தும், வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றனர்.

    அமராவதி அணையிலிருந்து மழைக்காலத்தில், வெளியேற்றப்படும் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்த, ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக கணியூர், காரத்தொழுவு உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டினால், முப்போக நெல் சாகுபடிக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

    கோடை காலத்திலும் பற்றாக்குறை தவிர்க்கப்படும்.இது குறித்து பொதுப்பணித்துறை சார்பில் கருத்துரு தயாரித்து அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு மழை சீசனிலும், அணையிலிருந்து பல டி.எம்.சி., தண்ணீர் ஆற்றில் உபரியாக திறக்கப்படுகிறது. எனவே, இத்திட்டத்தை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.இதே போல் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு மண் கால்வாய் வழியாகவே பாசன நீர் செல்கிறது.

    இந்த கால்வாய்களை தூர்வாரி கரைகளை உயரப்படுத்தினால், அனைத்து பகுதிக்கும் தண்ணீர் சீராக செல்லும்.அனைத்து வகை சாகுபடியும் செழிக்கும். இது குறித்தும் அப்பகுதி விவசாயிகள் சார்பில் தொடர் கோரிக்கை மனுக்கள் அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.

    • அமராவதி அணை வாயிலாக 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • நீர் திருட்டு காரணமாக வழியோர கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கிறது.

    மடத்துக்குளம் :

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அமராவதி அணையில் துவங்கும் ஆறு 148 கி.மீ., தூரம் பயணம் செய்து காவிரி ஆற்றில் திருமுக்கூடலூர் பகுதியில் கலக்கிறது. அமராவதி ஆறு, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையாக உள்ளதோடு கரூர் மாவட்டத்திற்கும் பயன் அளிக்கிறது.

    பாசன பரப்பு மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள நிலையில் ஆற்றில் பாசன பகுதி இல்லாத நிலங்களுக்கும், வணிக ரீதியாகவும், தொழிற்சாலை பயன்பாடு என எந்த விதமான அனுமதியின்றி, முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது.வழியோரத்தில், ஆற்றின் இரு புறமும், நூற்றுக்கணக்கான மின் மோட்டார்கள் அமைத்து தண்ணீர் திருடப்படுகிறது. நீர் திருட்டு காரணமாக, கோடை காலங்களில் கடும் வறட்சியும், வழியோர கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கிறது.அணை துவங்கி, கரூர் வரை, பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களில் 3 போகம் நெல் சாகுபடி செய்து வந்த நிலையில், நீர் திருட்டு பிரதானமாக மாறியுள்ளதால் ஒரு போக சாகுபடியாக குறைந்ததோடு, கடை மடை பகுதிகளில், ஒரு போக சாகுபடி கூட எடுக்க முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

    நீர் திருட்டை தடுக்க, திருப்பூர், திண்டுக்கல், கரூர் மாவட்ட நிர்வாகங்கள் முன் வர வேண்டும் என அமராவதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • தென் மேற்கு பருவ மழை காலத்தில், அமராவதி அணை நிரம்பியுள்ளது.
    • மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    மடத்துக்குளம்:

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஆற்றின் வழியோர கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம், மூணாறு, தலையாறு, மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. கடந்த ஒரு வாரத்தில் அணை நீர்மட்டம் 15 அடி வரை உயர்ந்தது.கடந்த 14ந் தேதி, முழு கொள்ளளவை எட்டும் நிலையில் ஆற்றின் வழியோரத்திலுள்ள இரு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. 15-ந் தேதி, காலை 8 மணி முதல் உபரி நீர், பிரதான மதகு வழியாக ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் திறக்கப்பட்டு வருகிறது.

    ஜூன் முதல் மே வரையிலான நீர் ஆண்டில், முதல் முறையாக தென் மேற்கு பருவ மழை காலத்தில், அமராவதி அணை நிரம்பியுள்ளது. கடந்தாண்டு அணை நிரம்பிய போது உச்ச அளவாக வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்பட்டது.ஆனால், நடப்பாண்டு உச்ச அளவாக 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அணை பாதுகாப்பு கருதி உபரியாக வெளியேற்றப்படுகிறது.இவ்வாறு கடந்த 4 நாட்களாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில்நீர்வரத்தும், வெளியேற்றமும் குறைந்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 88 அடியாகவும், நீர்இருப்பு மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கனஅடியில், 3,903.98 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.

    அணையிலிருந்து வினாடிக்கு 6,500 கனஅடிக்கு குறைவாக 24 மணி நேரமும் நீர் திறக்கப்பட்டால், வெள்ள அபாய எச்சரிக்கையின் நிறம் நீலமாக இருக்கும். இதனால் ஆற்றின் வழியோரத்திலுள்ள பகுதிகள் பாதிக்காது.இதே சமயத்தில் வினாடிக்கு 6,500 கனஅடிக்கு மேல் திறக்க ஒரு மணி நேரம் திறக்கப்பட்டாலும், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. இதனால் மண்டலம் 'ஏ' வில் வழியோரத்திலுள்ள கல்லாபுரம், எலையமுத்தூர், கொழுமம் ஆகிய கிராமங்கள் பாதிக்கும் வாய்ப்புள்ளது.அதே போல் 13 ஆயிரம் கனஅடிக்கு மேல் அரை மணி நேரத்திற்கு கூட நீர் திறக்கப்பட்டாலும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. இதனால் மண்டலம், 'ஏ' மற்றும் 'பி' என இரு பகுதிகளும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

    ஆற்றின் வழியோர கிராமங்களான, கல்லாபுரம், எலையமுத்தூர், கொழுமம் மட்டுமின்றி, மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு ஆகிய கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவிக்கப்படுகிறது. அணையிலிருந்து 20 ஆயிரத்து 175 கன அடி மற்றும் அதற்கு மேல் திறக்கப்பட்டால் வழியோரத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், அரவக்குறிச்சி, கரூர் என அனைத்து வழியோர கிராமங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக எச்சரிக்கை விடப்படுகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் போது, வெளியேற்றப்படும் நீரின் அளவை பொறுத்து, பாதிப்புகள் அறியப்படுகிறது. இதற்காக வண்ண எச்சரிக்கை குறியீடுகள் உள்ளன.அதன் அடிப்படையில், வழியோர கிராமங்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் வாயிலாக எச்சரிக்கை வழங்கப்படுகிறது. பொதுவாக, வெள்ள காலங்களில் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ போகக்கூடாது. வழியோரத்தில், ஆற்றின் கரையில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர வேண்டும். கால்நடைகள், விவசாய பொருட்கள் இருந்தால், அவற்றையும் அகற்றிக்கொள்ள வேண்டும்.மழையின் தீவிரத்தை பொறுத்து வெள்ள நீர் வரும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×