என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ள அபாய எச்சரிக்கை"

    • நீர் இருப்பு 3,168 மில்லியன் கன அடியாக உள்ளது.
    • தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 750 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

    கனமழையால் நீர் வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புழல் ஏரிக்கான நீர்வரத்து 2,930 கன அடியில் இருந்து 4,460 ஆக அதிகரித்துள்ளது. இதனால், நீர் இருப்பு 3,168 மில்லியன் கன அடியாக உள்ளது.

    புழல் ஏரியில் இருந்து 1500 கனஅடி நீர் திறக்கப்படுவதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புழல் ஏரியில் இருந்து கால்வாய் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 29-ந் தேதி 141 அடியும், 30-ந் தேதிக்கு பிறகு 142 அடி வரையும் தண்ணீர் தேக்கலாம் என்பது விதி.
    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 62.01 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் எனவும் துணை அணையான பேபி அணையை பலப்படுத்திய பிறகு முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசும் சில தன்னார்வலர்கள் என்ற பெயரில் உலா வரும் நபர்கள் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்துக்கும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என ரூல் கர்வ் விதிமுறையை செயல்படுத்த கோரிக்கை விடுத்தது. அதன்படி மத்திய நீர் வள ஆணையம் ரூல் கர்வ் விதிப்படி நீர்மட்டத்தை நிர்ணயித்து வருகிறது.

    இதனால் கடந்த மாதம் கன மழை பெய்தபோது 138 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க முடியாமல் உபரி நீராக 13 மதகுகள் வழியாக கேரள மாநிலத்துக்கு 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வீணாக திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழைப்பொழிவு குறைந்ததால் 138 அடிக்கும் கீழ் சென்றது. தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 140.10 அடியாக உயர்ந்துள்ளது.

    வருகிற 29-ந் தேதி 141 அடியும், 30-ந் தேதிக்கு பிறகு 142 அடி வரையும் தண்ணீர் தேக்கலாம் என்பது விதி. இதனால் இந்த ஆண்டு மீண்டும் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    136 அடியை எட்டியதும் கேரளாவுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 138 அடியை கடந்ததும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 140 அடி உயர்ந்ததைத் தொடர்ந்து கேரள மாநிலத்துக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். அணைக்கு நீர்வரத்து 1927 கன அடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 7153 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 62.01 அடியாக உள்ளது. 1486 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3995 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.50 அடியாக உள்ளது. 36 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 66 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 52.51 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிறது. 14.47 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • சாத்தூர் அணை 113.60 அடியை எட்டியுள்ள நிலையில் நீர்வரத்து 12,000 கன அடியாக உள்ளது.
    • தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

    119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணை 113.60 அடியை எட்டியுள்ள நிலையில் நீர்வரத்து 12,000 கன அடியாக உள்ளது.

    முன்னதாக, சாத்தனூர் அணைக்கு 7,000 கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், 5,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இது மேலும் அதிகரித்து, உபரி நீர் விநாடிக்கு 9000 கன அடியாக திறக்கப்பட்டது.

    இந்நிலையில், சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

    திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையில் இருந்து 5,779 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் அதன் முழு கொள்ளளவான 32 அடியில் 31 அடியை எட்டியதால் நீர் திறக்கப்பட்டுள்ளது.

    • வெள்ளப் பெருக்கு ஏற்படும் என பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
    • இந்த எச்சரிக்கையால் 1.5 லட்சம் பாகிஸ்தானியர் உயிர் தப்பினர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கனமழை பெய்து வரும் சூழலில் சிந்து நதியின் கிளையான தவீ ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்தது.

    பாகிஸ்தான் ஊடக வட்டாரங்களின்படி, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு இது குறித்துத் தெரிவித்தது.

    இந்நிலையில், இந்திய அரசின் எச்சரிக்கையால், பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள ஆற்றங்கரையோர கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1.5 லட்சம் பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் உயிர் தப்பினர்.

    கடந்த ஏப்ரலில் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்த நிலையிலும், இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் விடுத்த வெள்ள அபாய எச்சரிக்கையால் 1.5 லட்சம் பேர் உயிர் தப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேனி மாவட்டத்துக்கு தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
    • அணைக்கு நீர் வரத்து 974.50 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு மேல் உயர்ந்ததால் கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன் 25-ந்தேதி முதல் 7 நாட்கள் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாகவும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த மாதம் 26-ந் தேதி 66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    தொடர்ந்து நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்ததால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 69.19 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1510 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசன தேவைக்காக 500 கன அடியும், குடிநீர் தேவைக்காக 69 கன அடி என மொத்தம் 569 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5622 மி.கன அடியாக உள்ளது.

    கடந்த 2023ம் ஆண்டுக்கு பிறகு வைகை அணை மீண்டும் தற்போதுதான் முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வைகை அணை வரலாற்றில் தற்போது 35-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    வழக்கமாக அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதும் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை 69 அடியை கடந்த பிறகும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் திறக்கப்படவில்லை.

    71 அடி வரை உயர்த்தப்பட்டு பின்னர் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இருந்தபோதும் அணை பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அணைக்கு வரும் நீர் வரத்து அளவை கணக்கிட்டு வருகின்றனர்.

    5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எந்த நேரமும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்துக்கு தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் எந்த நேரமும் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என்பதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 136 அடிக்கு மேல் உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 133.65 அடியாக சரிந்துள்ளது.

    அணைக்கு நீர் வரத்து 974.50 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5551 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, துங்கபத்ரா அணை உள்ளிட்டவை நிரம்பி வருகிறது.

    இதன் காரணமாக இந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்த நிலையில் காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.

    இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து கடந்த 2 நாட்களாக உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக கடந்த 25-ந் தேதி நிரம்பியது.

    இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முதலில் 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக நேற்று மதியம் 12 மணியளவில் வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மாலையில் அது 1 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    அதே போல் நேற்று இரவு கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 29 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீரும் இன்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 500 கனஅடியாக இருந்தது. இதையடுத்து நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியும், 16 கண்மதகு வழியாக வினாடிக்கு 82 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 1 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது போக கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து இன்று 2-வது நாளாகவும் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளதால் காவிரி ஆறு வெள்ளக்காடானது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    மேட்டூர் அணை 16 கண் மதகு எதிரே உள்ள தங்கமாபுரிபட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர், சேலம் கேம்ப் பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ, போட்டோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேட்டூர் அணை பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாயத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டப்படி ஆர்ப்பரித்து செல்கிறது. இதையடுத்து குமாரபாளையம்-ஈரோடு மாவட்டம் பவானி இடையே உள்ள பழைய காவிரி பாலம் அடைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் பள்ளிபாளையம் காவிரி ஆற்றிலும் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதை பள்ளிபாளையம் மேம்பாலத்தில் இருந்தபடி பொதுமக்கள் கண்டு ரசித்தனர். பள்ளிபாளையம் சந்தைப்பேட்டை பகுதியில் ஆற்றின் மையப்பகுதியில் உள்ள முனியப்பன் சாமி சிலையை தண்ணீர் சூழ்ந்து கொண்டு சென்றது. இந்த பகுதியிலும் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும் செல்பி எடுக்கவும் தடை விதித்து பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து உள்ளதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து 11 மாவட்ட கலெக்டர்களுக்கும் மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் தகவல் கொடுத்து உள்ளார். இதையடுத்து காவிரி கரையோர பகுதிகளை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 88,000 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
    • மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது.

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு உபரிநீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது.

    மேட்டூர் அணைக்கு நேற்று மாலை முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் மற்றும் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது .

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 88,000 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

    இந்நிலையில், சேலம் மேட்டூர் அணையில் இன்று மாலை 6 மணியில் இருந்து1 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.30 அடியாக உயர்ந்துள்ளது.
    • சுருளி அருவியில் இன்றும் நீர் வரத்து சீராகாததால் 3-வது நாளாக தடை தொடர்கிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

    பருவமழை குறைந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரள மாநில மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. கடந்த வாரம் 60 அடியில் இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 66.27 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 2046 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    அணையில் 4916 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்த நிலையில் தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்கவோ, ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ கால்நடைகளை குளிப்பட்டாவோ கூடாது என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டும்போது 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியவுடன் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் வைகை ஆற்றில் திறந்து விடப்படும்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.30 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்தும் 5516 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழக பகுதிக்கு 1867 கன அடி நீர் திறக்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் 137 அடி வரை ரூல் கர்வ் விதிமுறைப்படி தேக்கலாம் என்பதால் அணையின் நீர்மட்டம் விரைவில் அதனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அணையில் 5703 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு அணை 30.8, தேக்கடி 26.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளான மேகமலை, மகாராஜா மெட்டு, இரவங்கலாறு, தூவானம், அரிசிபாறை, காப்புக்காடு பகுதியில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆடி அமாவாசையன்று நீர்வரத்து சீரானதால் வனத்துறையினர் அனுமதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் அருவியில் நீராடினர். ஆனால் அன்று மதியத்துக்கு பிறகு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதித்து பொதுமக்களை வனத்துறையினர் வெளியேற்றினர்.

    இன்றும் நீர் வரத்து சீராகாததால் 3-வது நாளாக தடை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று மாலை முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு உபரிநீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது.

    மேட்டூர் அணைக்கு நேற்று மாலை முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் மற்றும் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியாக உள்ளதால் அணைக்கு நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரிநீராக திறந்து விடப்படும். அணையிலிருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் மதியம் 12 மணி முதல் 75 ஆயிரம் கனஅடி வரை திறந்து விடப்படும். திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக 1 லட்சம் கனஅடி வரை அதிகரிப்படலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்வதை இன்று ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பார்வையிட்டு சென்றனர். ஆற்றில் தண்ணீர் அதிகரித்து காணப்படுவதால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • தென்பெண்ணை ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணையில் பாய்ந்து வருகிறது.
    • தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    திருவண்ணாமலை:

    கர்நாடகா மாநிலம், மைசூரு மாண்டியா உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 2 நாட்களாக விடிய விடிய மழை பெய்தது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    மேலும் ஓசூர் பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 1275 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வெள்ளம் சீறிப் பாய்ந்து வருகிறது.

    அணையின் பாதுகாப்பு கருதி நேற்று வினாடிக்கு 1449 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அணையில் இருந்து ரசாயன நுரையுடன் தண்ணீர் வெளியேறியது. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. இந்த நுரை அந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் தெரியாத அளவுக்கு மூடியது. இதனால் அப்பகுதி வழியாக கிராம பகுதிக்கு செல்லும் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து மேலும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 51 அடியாக எட்டி உள்ளது.

    இன்று காலை அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அணையில் இருந்து சீறிப்பாய்ந்த வெள்ளம் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அணைக்கு செல்லும் பாதை தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.

    இதனால் பூங்கா, அணையை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தென்பெண்ணை ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணையில் பாய்ந்து வருகிறது.

    தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

    இதன் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுட்டஹள்ளி, தளிஹள்ளி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    119 கனஅடி கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 87 அடி தண்ணீர் உள்ளது. இதனால் இந்த அணையில் இருந்து நீர் திறக்கவில்லை.

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்கள் அச்சப்பட தேவை இல்லை என தெரிவித்துள்ளனர்.

    • அணைக்கு வரும் மழை நீரின்வரத்து வேகமாக அதிகரிப்பு.
    • வைகை ஆற்றில் இறங்க பொதுமக்கள் முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி விட்டன. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை இந்த ஆண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.

    பலத்த மழை காரணமாக நேற்று இரவு 7 மணியில் இருந்து அணைக்கு வரும் நீரின் வரத்து வேகமாக அதிகரித்தது. இதையடுத்து அணையில் இருந்து முதல்கட்டமாக 5,399 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இரவு 8,900 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 


    இதனால் தேனி, திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் வைகை ஆற்றில் இறங்கவோ அல்லது கடக்கவோ பொதுமக்கள் முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தங்கள் கால்நடைகளை ஆற்றங்கரையோரம் கொண்டு செல்ல வேண்டாம்.
    • தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த உயரம் 52 அடியாகும் (1666.26 மில்லியன் கன அடி). நேற்று (29ம் தேதி) நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 48.25 அடியாக (1262.11 மில்லியன் கனஅடி) உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 456 கன அடி தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், அணையின் பாதுகாப்பு கருதி மேற்கொண்டு வரும் உபரிநீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே, தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. எனவே பொதுமக்கள், ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம். அதே போல தங்கள் கால்நடைகளை ஆற்றங்கரையோரம் கொண்டு செல்ல வேண்டாம். குளிப்பதற்கோ, காலை கடன்களை கழிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ ஆற்றுக்கு செல்ல வேண்டுமா எனவும் எச்சரிக்கப்படுகிறது.

    மேலும், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

    இதனிடையே கிருஷ்ணகிரி அணை இடதுபுறம் நீட்டிப்பு பாளேகுளி - சந்தூர் ஏரி பாசன விவசாயிகள் சங்க பயனாளிகள் சங்கத்தின் தலைவர் சிவகுரு கூறியது, கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, பாலேகுளி ஏரி முதல் வேலம்பட்டி, வீரமலை வழியாக சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.

    தற்போது, அணையில் இருந்து இடது புறக்கால்வாய் வழியாக உபரிநீர் பாலேகுளி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். பின்னர், அங்கிருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் கால்வாய் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    ×